Tuesday, December 27, 2005

விமானம் எந்தன் அபிமானம்



எனக்கு இன்றும் விமானங்கள் என்றால் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதுவும் தரை இறங்கும் விமானங்களைப் பார்த்து ரசிப்பது என்றால், எனக்கு மிகவும் பிடித்த விசயம்.

நான் பிறந்து வளர்ந்த சிதம்பரத்திற்கும் விமானங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. எப்போதாவது அந்த வழியாகப் பறந்து செல்லும் ஹெலிகாப்டர்களின் சப்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து அதை அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தது நினைவில் இருக்கிறது. காலப்போக்கில் எனக்கும் விமானங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்துகொண்டே வந்தது.

நான் பத்தாவது படிக்கும் போது அக்கா திருமணம் ஆகி அமெரிக்கா செல்லும்போது அவளை வழியனுப்ப குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையம் சென்றோம். அப்போது தான் நான் முதன்முதலில் ஒரு விமான நிலையத்தைப் பார்த்தேன். அக்கா நம்மை விட்டு பிரியப்போகிறாளே என்று அம்மா, அப்பா, அண்ணன்களெள்ளாம் பிழியப் பிழிய அழுதுகொண்டிருக்க, நான் மட்டும் கண்ணாடிச் சுவற்றிற்கு வெளியே தரை இறங்கும் விமானங்களை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கா ஒவ்வொரு முறை வரும்போதும் போகும்போது மீனம்பாக்கத்துக்கு குதூகலத்துடன் செல்வேன். "ஏண்டி, நீ நான் வரும்போது சந்தோஷமா இருக்க, போகும்போதும் சந்தோஷமா இருக்கியே, எப்படி?" என்று அக்கா பல முறை கேட்டிருக்கிறாள்.

பின்னர் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்கா செல்ல விசாவுக்குக் காத்திருந்த நாட்களில், மைலாப்பூரில் தங்கியிருந்த வீட்டிற்கு மேலே அடிக்கடிப் பறக்கும் விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம், "நானும் இதேமாதிரி ஒரு விமானத்தில் சீக்கிரம் பறக்கப் போகிறேன்" என்று சொல்லி என் தோழிகளை வெறியேற்றியிருக்கிறேன்.

அமெரிக்கா வந்த பிறகு விமானங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. உள்ளூர் விமானங்களில் போவதும் வருவதுமாக இருந்தாலும், அதன் மேலுள்ள ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவில்லை. வாசிங்டன் டிசிக்கு வந்தபிறகு, என்னுடைய இந்த ரசிப்புத்தன்மைக்காகவே வடிவமைத்தது போல் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன்! ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் மிக அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கே நின்று கொண்டு பார்த்தால் ரன்வேயிலிருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்களை மிக அருகில் பார்க்கலாம். நாம் நின்று கொண்டிருக்கையில், தலைக்கு மேலே உருமும் சப்தத்துடன் தரையிறங்கும் விமானங்களைப் பார்க்க ரொம்ப த்ரில்லிங்காக இருக்கும். குழந்தைகள் சற்று பயப்படுவார்கள். இதைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டமாக இங்கே வருவார்கள். நான் நிற்கும் போது, எனக்குப் பின்னால் விமானம் தாழ்வாக பறப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ முயன்றும் என் கணவரால் முடியவில்லை! காமிராவை க்ளிக்குவதற்குள் விமானம் விரைவாகக் கடந்து சென்றுவிடுகிறது!

இதெல்லாம் பத்தாதென்று, இப்போது வாசிங்டன் டிசி வட்டாரத்தில் உள்ள மற்றொரு சர்வதேச விமான நிலையத்தின் அருகில் குடி வந்தாகிவிட்டது! இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இப்போது விமானங்கள் என் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டன. தினம் அலுவலகத்திற்கு நானும் என் கணவரும் விமான நிலையத்தை ஒட்டிய சாலையில் காரில் செல்வோம். எங்கள் கூடவே விமானங்களும் பயணிக்கும். காருக்கு எதிரே மிகத் தாழ்வாகப் பறந்து தரையிறங்கும். பார்க்கவே ரம்மியமான காட்சியாக இருக்கும். இந்த விமானங்களினால் மற்றுமொரு நன்மையும் உண்டு எங்களுக்கு. முன்பெல்லாம் இந்தக் கார் பயணத்தின் போது குடும்ப விசயமாக எனக்கும் என் கணவருக்கும் காரசாரமாக விவாதம் நடக்கும். இப்பொழுதெல்லாம் "அதோ பார் US Airways போகிறது" என்று கணவர் சொல்ல, "உங்களுக்கென்ன கண் தெரியலையா? அது American Airlines" என்று நான் சொல்ல, விவாதம் சற்று வேறுவிதமாக நடக்கிறது!!! இது நன்மை. நன்மை இல்லாத ஒன்றும் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தனியாக நான் கார் ஓட்டிக்கொண்டு அலுவலகம் செல்கையில், காருக்கு மேலே தரையிறங்கிக்கொண்டிருந்த ஒரு விமானத்தை பாராக்கு பார்த்துக்கொண்டே, சாலையில் சிவப்பு விளக்கைக் கவனிக்காமல் விளக்குக் கம்பத்தைக் கடந்து சென்றுவிட்டேன்.நல்ல வேளையாக குறுக்கே யாரும் வரவில்லை!. ஆனால் சிவப்பு விளக்கைக் கடந்து சென்றதற்காக என் காரை படம் பிடித்து, புகைப்படத்துடன் அபராதம் கட்டச்சொல்லி வீட்டுக்கு நோட்டீஸ் வந்துவிட்டது!

ஹம்ம்ம்ம்...எது எப்படியிருந்தாலும் தரையிறங்கும் விமானங்களின் அழகே தனி தான்!

பி.கு: நான் இவ்வளவு ரசிக்கும் விமானங்களில், பயணிக்க எனக்கு அறவே பிடிக்காது. சரியான போர்!

Monday, December 12, 2005

தவமாய் தவமிருந்து

Image Hosted by ImageShack.us
ஒரு பாசமான தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மூன்றரை மனி நேரப் படச் சுருளில் அடைத்து நம் இதயத்தில் சொருகியிருக்கிறார் சேரன். இதுவரை வெளிவந்திருக்கும் சேரனின் படங்களிலேயே சினிமாத்தனம் மிகவும் குறைவாக உள்ள படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சேரனின் கிராமம், வீடு, ஹாஸ்டல், வாழ்க்கை எல்லாமே கிட்டே போய் தோட்டுவிடலாம் போல் நிஜத்துக்கு அவ்வளவு அருகில்!

நடிகர் சேரனை விட இயக்குனர் சேரன் தான் படம் முழுக்க மிளிர்கிறார். உணர்ச்சிபூர்வமான, துயரமான சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் வரச் செய்கிறாரே தவிர, அந்தக் காட்சியிலேயே வெகு நேரம் நம்மை உழலவிடாமல், சட்டென்று அடுத்தக் காட்சிக்கு சென்றுவிடுகிறார். அத்தனை கதாபாத்திரங்களையும் மிகையில்லாமல் ஆனால் மனதைத் தொடுகிற மாதிரி நடிக்க வைத்ததற்கே சேரனுக்கு ஒரு விருது கொடுக்கலாம்.

ராஜ் கிரண்!!! எப்படிச் சொல்வது? படத்தைப் பார்த்தால் தான் உங்களுக்குத் தெரியும். அவர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்!. தேசிய விருது சேரனுக்கு கிடைக்கிறதோ இல்லையோ ராஜ் கிரணுக்கு கட்டாயம் கிடைக்கும். இவருடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்...அது ஒரு தனி திரைப்படம் போல இருக்கும்.

ராஜ் கிரண் தன் இரு மகன்களையும் வைத்து அழைத்துப்போகும் அந்த சைக்கிள் பயணம் மிக அழகு! அந்தச் சைக்கிளும் அவர் வாழ்க்கையில் கூடவே வருகிறது. பள்ளிக்கூட சுற்றுலாவிற்கு போகவேண்டும் என்று மகன் அடம்பிடிக்க, பணம் இல்லாத காரணத்தால் சுற்றுலாவிற்கு அனுப்பமுடியாவிட்டாலும், மகன்களைச் சமாதானப்படுத்துவதற்காக அந்தே சைக்கிளில் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு சொந்தச் சுற்றுலா போவாரே, அதைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. அரிசி பருப்பெல்லாம் எடுத்துக்கொண்டு போய், வெட்ட வெளியில் அடுப்பு வைத்து சமைத்துச் சாப்பிட்டு, நுங்கு சீவி ஓலையில் வைத்துச் சாப்பிட்டு, பிறகு அதே நுங்கில் சக்கரம் செய்து ஓட்டி, ஆற்றில் குளித்து...ஆஹா! எத்தனை டாலர்கள் செலவு செய்து ப்ளோரிடாவும், லாஸ் வேகாஸ¤ம் போனாலும் அந்த மாதிரி வருமா? மகன்கள் டீன் ஏஜ் வயது வந்த பிறகும் அதே சைக்கிளில் பயணம் தொடர்கிறது. "அப்பா பாலிடெக்னிக் படிக்கனும்ப்பா" என்று மூத்தமகன் சொன்னவுடன், கவலையும் யோசனையும் படர்ந்த முகத்துடன் "பாலிடெக்னிக் சேர என்னப்பா செய்யனும்? யாரப் பார்க்கனும்?" என்று பொறுப்பான தந்தையாக ராஜ் கிரண் கேட்கும் போது பலருக்கு தம் அப்பாக்கள் கண்களில் வந்து நிற்பது உறுதி. சேரன் இன்ஜினீரிங் கல்லூரிக்குச் செல்லும் போதும் தொடர்கிற அந்தச் சைக்கிள் பயணத்தில் ஒரே ஒரு மாற்றம். சேரன் சைக்கிளை ஓட்ட, ராஜ் கிரண் பின்னால் அமர்ந்திருக்கிறார். பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களுடைய ஆசைகளும் கணவுகளுமே அவர்களுக்குப் பெரிதாகப் படும், பெற்றோர்களை விட்டு அவர்கள் விலகிச் செல்லத் தொடங்கிவிடுவார்கள் என்பதை உணர்த்தும்விதமாக ஒரு காட்சியில், சேரனுக்கு மற்ற மாணவர்களைப்போல் தானும் ஹாஸ்டலில் தங்கி படிக்கவேண்டும் என்கிற ஆசை மனதில் விழுந்துவிட, அன்று மாலை தந்தையை சைக்கிளில் உர்காரவைத்து ஓட்டும்போது, தந்தையின் சுமை அதிகமாகத் தெரிய, மூச்சிரைக்க சைக்கிளை ஓட்டுவார். மூத்த பிள்ளை வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, அந்தச் சைக்கிள் பயணம் நின்று போய்விடுகிறது. கடைசியில் ராஜ் கிரண் இறந்தபிறகு அவருடைய வீட்டிற்கு வரும் அவருடைய மூத்த மகன், ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தச் சைக்கிளை வாஞ்சையுடன் துடைத்துச் சுத்தம் செய்யும் காட்சி மனதைப் பிசைந்தது.

தன் கணவனும் மகன்களும் தான் உலகமே என்று நினைக்கும் ஒரு சராசரி அம்மாவாக ராஜ் கிரணுக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் சரண்யா. ஓடிப்போன சேரனும் அவர் மனைவியும் ஊருக்கு மீண்டும் வந்து தம் குடும்பத்துடன் இணைவது யதார்த்தமாக இருக்கிறது. ஊரே கூடி நின்று அவர்களைத் தூற்றி ஊரை விட்டு ஒதுக்கிவைக்கும் சினிமாத்தனம் தவிர்க்கப்பட்டு, கோபித்துக்கொண்டு கதவைச் சாத்திவிடும் சரண்யாவை ஊர்ப்பெண்கள் சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது.

சேரனைப் போலவே நானும் இன்ஜினீரிங் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஏங்கியது, கல்லூரித் தோழிகளுடன் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டது, என்னுடைய அண்ணனும் அண்ணியும் தனிக்குடித்தனம் போகிறோம் என்று எங்கள் வீட்டை விட்டுப் போனபோது நொறுங்கிப் போன என் பெற்றோர்கள், நானும் என் கணவரும் ஒரு முறை ஊரில் செகண்ட் ஷோ கிளம்பியபோது, "இந்த நேரத்துக்கு சினிமா போகலைன்னா என்ன?" என்று என் மாமியார் கேட்டது... இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடந்த பலவற்றை காட்சிகளாக இந்தத் திரைப்படத்தில் பார்த்ததால் என்னை இந்தப் படத்துடன் மிகச் சுலபமாகத் தொடர்புப் படுத்திக்கொள்ள முடிந்தது.

ராஜ் கிரணுடைய மிகை இல்லாத அபாரமான நடிப்புக்கு பல காட்சிகளை உதாரணமாகச் சொல்லலாம். கல்லூரிக்குக் கிளம்பும் சேரனுக்கு பணம் கொடுக்க சைக்கிளை அடமானம் வைக்கச் சொல்லி ராஜ் கிரண் சொல்ல, "இருக்கற ஒரு சைக்கிளையும் அடமானம் வச்சிட்டு ஆத்திர அவசரத்துக்கு என்ன செய்வீங்க? என்று அவரைக் கடிந்து கொள்ளும் சரண்யா, வெளியே சென்று சில நிமிடங்களில் பணத்துடன் திரும்பி வந்து, அந்தப் பணத்தை சேரனிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் பாத்திரம் கழுவும் தன் வேலையைத் தொடர்வார். 'இவளுக்கு திடீரென்று பணம் எப்படிக் கிடைத்தது' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு யோசையுடன் சரண்யாவைப் பார்க்கும் ராஜ் கிரணுக்கு, சரண்யாவின் வெறுமையான காதுகள் உண்மையை உணர்த்த, தன் மனைவியை பணித்த கண்களுடன் பெருமையாக ஒரு பார்வைப் பார்ப்பார். அவ்வளவுதான். அவள் கைகளைப் பிடித்துகொண்டு, "நீ எனக்கு மனைவியாக வருவதற்கு நான் என்ன தவம் செய்தேன்" என்று வசனம் பேசும் வேலையெல்லாம் இல்லை! இன்னொரு காட்சியில் தன் மகன் இரவு விபச்சார விடுதிக்குச் சென்று வந்திருக்கிறான் என்று தெரிந்தும், அவனை ஒன்றும் கேட்காமல், அவன் செண்ட் அடித்து, பெளடர் போட்டு அலங்கரித்துக் கொண்டு செல்வதை செய்வதறியாமல் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார். சம்பளப் பணத்தில் இரண்டாயிரம் ஏன் குறைகிறது என்று படுத்திருக்கும் தன் மகனிடம் கேட்க, அவன் தன் நண்பனுக்கு மருத்துவச் செலவுக்கு கொடுத்துவிட்டதாகத் சொல்ல, "என்னப்பா..." என்று மீண்டும் அவனை கெள்விக் கேட்கத் தொடங்கும் போது மகன் சட்டென்று போர்வையை இழுத்து மூடிக்கொள்ள, நீங்கள் எல்லையைத் தாண்டுகிறீர்கள் என்று தன் வளர்ந்த பிள்ளை உணர்த்துகிறான் என்று புரிந்துகொண்டு, நாகரீகம் கருதி வார்த்தைகளை விழுங்கி அமைதியாகிவிடுவார்.

இந்தப் படத்தில் ஒரு அரிய உத்தி ஒன்றை சேரன் கையாண்டிருக்கிறார். பெற்றோர்களைத் தியாகிகளாகவும், பிள்ளைகளைத் துரோகிகளாகவும் காட்டாமல், இரண்டு பக்கமும் நியாயம் இருப்பது போல் காட்சிகளை அமைத்திருப்பார். உதாரணமாக, சேரன் தன் பெற்றோர்களிடம், வேலை விஷயமாக கோயம்புத்தூர் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு கருவுற்றிருக்கும் தன் காதலியுடன் சென்னைக்கு 'எஸ்கேப்' ஆகும் காட்சி. ராஜ் கிரணும் சரண்யாவும் ஏமாற்றப்படுகிறார்களே என்று நம் மனம் பதைத்தாலும், சேரனின் சூழ்நிலையிலும் நியாயம் இருக்கிறது என்று தோன்றும். அதே போல் படுக்கை அறையில் கணவனுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் மூத்த மறுமகளை சரண்யா "ஏய் இங்க வாடி...வந்து இந்த வெங்காயத்தை உரிச்சிக்குடு. அப்படியென்ன தான் புருஷனோட குசுகுசுன்னு பேசிவியோ தெரியலை" என்று சொல்லும் போது, அந்த மறுமகளின் எரிச்சலிலும் ஒரு நியாயம் தெரியும்.

சரி! இப்ப குறைகளுக்கு வருவோம். குறைகள் மிகக் குறைவு தான் என்னைப் பொருத்தவரையில். இரண்டாம் பாதியில் தோய்வு தெரிகிறது. சேரனும், அவர் மனைவியும் சென்னையில் பிழைக்கச் சிரமப்படுவதை ஒரு பாடலில் நீண்ட நேரம் காட்டியிருக்கிறார். இன்ஜினீரிங் படித்த சேரன் வண்டியிழுப்பது கொஞ்சம் சினிமாத்தனம். பிற்பகுதியில் சேரன், மனைவி, குழந்தைகள், சேரனின் பெற்றோர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது "they lived happily ever after" என்று முடியும் fairy tale போல் இருக்கிறது. தன் குழந்தைகள் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வாழ வேண்டும் என்பதற்காக தன் மனைவியையும் குழந்தையையும் கிராமத்தில் தன் பெற்றோர்களிடம் விட்டுவிட்டு தான் மட்டும் மதுரைக்குச் சென்று தங்கி வேலைக்குப் போகச் சேரன் முடிவெடுப்பதும், அதில் தன் மனைவி வசந்திக்கும் முழு ஒப்புதல் உண்டு என்று அவர் சொல்வதும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண், தன் புருஷன் தன்னோடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தன் மாமனார் மாமியாரின் அன்பு தனக்கும் தன் குழந்தைகளுக்கும் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், அந்தப் பெண்ணைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுவேன். It's too good to believe. என்னால் அப்படி நினைக்கமுடியாது. படத்தின் பிற்பகுதியைப் பற்றி எனக்கும் என் கணவருக்கு இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு தனி பதிவாக எழுதுகிறேன்.

Thursday, October 27, 2005

முடிவில்லாத ஒரு விவாதம்

கடந்த வார இறுதியில் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்த இரு நண்பர்களுக்கிடையே நடந்த வாக்குவாதம்.

நண்பர் 1: "அமெரிக்கா சரியான stress country. சீக்கிரமா இந்தியா திரும்பிப் போய்டனும்"

நண்பர் 2: "இந்தியாவில் stress இல்லையா?"

நண்பர் 1: "இல்லைன்னு சொல்லலை. Stress இருந்தால் அதை பகிர்ந்துகொள்ள நண்பர்கள், உறவிணர்கள் இருக்கிறார்கள் அங்கே"

நண்பர் 2: அமெரிக்காவில் உங்களுக்கு நண்பர்கள், உறவிணர்கள் இல்லைன்னா அது உங்கள் சொந்தப் பிரச்சினை. அதற்கு அமெரிக்காவை stress country என்று ஏன் சொல்கிறீர்கள்? உங்களுக்கு அமெரிக்காவில் வாழ்வது stress ஆக உள்ளது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்.

நண்பர் 1: நீங்க என்ன வேனும்னா நினைத்துக்கொள்ளுங்கள். I hate this country. பணியிலும் மழையிலும் ஓடி ஓடி உழைக்க வேண்டியிருக்கு. காலங்கார்த்தால போக்குவரத்து நெரிசல்ல கார் ஓட்டிக்கிட்டு போகவேண்டியிருக்கு. குழந்தைகளை காலையில் பள்ளிக்கூடத்தில் விட்டு பிறகு சாயங்காலம் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கலைப்பா வந்தா, மனைவிக்கு சமையல்ல உதவ வேண்டியிருக்கு. பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. சே...சே என்ன வாழ்க்கை இது?

நண்பர் 2: இந்தியாவில் மழையில்லையா? சுட்டெரிக்கும் வெயில் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பஸ்ஸில் அடித்துப்பிடித்துக்கொண்டு வேலைக்குப் போவதில்லையா?

நண்பர் 1: நான் எதற்கு பஸ்ஸில் போகவேண்டும்? நல்ல கார் வாங்கிக்கொள்வேன்

நண்பர் 2: அப்போ அங்கேயும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டவேண்டியிருக்குமே?

நண்பர் 1: நான் எதற்கு கார் ஓட்டவேண்டும்? ட்ரைவர் அமர்த்திக்கொள்வேன்.

நண்பர் 2: சரி. இந்தியாவில் இருந்தால் மட்டும் வீட்டில் மனைவிக்கு உதவமாட்டீர்களா?

நண்பர் 1: எனக்கென்ன தலையெழுத்தா? நல்ல சமையல்காரரை நியமித்துக்கொள்வேன்.

நண்பார் 2: குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவது, அழைத்துக்கொள்வது?

நண்பர் 1: அது ட்ரைவரின் வேலை.

நண்பர் 2: அப்போ உங்களுக்கு எந்த stress உம் இருக்காது என்கிறீர்கள்.
நண்பர் 1: கட்டாயமா இருக்காது.

நண்பர் 2: சரி. போக்குவரத்து நெரிசலில் தினம் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் அலுவலகத்திலும் பள்ளியிலும் விட்டு, பின் சாயங்காலம் அழைத்துக்கொள்ளும் அந்த ட்ரைவருக்கும், மாங்கு மாங்கென்று மூன்று வேலையும் சமைத்து, பின் வீட்டு வேலைகளைச் செய்யும் வேலையாளுக்கு stress இருக்காதா?

நண்பர் 1: அது...வந்து...இருக்கலாம்...

நண்பர் 2: அப்ப, நீங்கள் இந்தியா போவது உங்கள் stress ஐ மற்றவர்கள் மேல் இறக்கிவைப்பதற்குத் தானா?

நண்பர் 1: என்ன நீங்க, இப்படி எடக்கு முடக்கா யோசிக்கறீங்க! என்னால ரெண்டு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுது. அதனால் எனக்கும் stress குறையுதுன்னா அதுல என்ன தவறு? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன். ஒரு அன்னிய நாட்டில் எத்தனை நாள் சார் இருப்பீங்க? நம்மைச் சுற்றி தமிழர்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

நண்பர் 2: எங்க இருந்தா என்ன? நம்மைச் சுற்றி நல்லவங்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

நண்பர் 1: என்ன இருந்தாலும் நம்ம சொந்த ஊர் மாதிரி ஆகுமா?

நண்பர் 2: நான் ஒத்துக்கொள்கிறேன். நம்ம ஊரில் இருப்பது தனி சுகம் தான். ஆனால் அமெரிக்காவில் பல வருடங்கள் இருந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் போவது அவ்வளவு சுலபம் கிடையாது. நீங்கள் முதல் முதலாக அமெரிக்கா வந்தபோது எப்படிப்பட்ட கலாசார அதிர்ச்சி(culture shock) உங்களுக்கு இருந்ததோ, அதே போல் தான் இங்கிருந்து உங்கள் சொந்த ஊருக்குப் போகும் போதும் இருக்கும். உங்கள் நண்பர்களும், உறவிணர்களும் 10 வருடங்களுக்கு முன் நீங்கள் விட்டுவிட்டு வந்த போது இருந்தமாதிரியே நீங்கள் போகும்போதும் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அவர்கள் மாறியிருப்பார்கள். நீங்களும் மாறியிருப்பீர்கள். அமெரிக்காவில் உங்களுடைய 10 வருட அனுபவம் உங்கள் சிந்தனைகளை மாற்றியிருக்கும். வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றியிருக்கும். இந்த மன நிலையில் நீங்கள் இந்தியா போனால் அங்கே இப்போதிருக்கும் கலாசாரத்தை மீண்டும் புதிதாகக்கற்றுக் கொள்ளவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது. என்னுடைய பாயிண்ட் என்னவென்றால், நீங்கள் நினைப்பது போல் அங்கே stress இல்லாமல் வாழ்ந்துவிட முடியது. Stress வேறு வகையாக அங்கே இருக்கிறது.

நண்பர் 1: சரி சார். நீங்க எதுக்காக அமெரிக்காவிலே செட்டில் ஆக முடிவு செய்தீங்க?

நண்பர் 2: என்னுடைய பெற்றோர்கள் என்னுடைய படிப்புக்காக கிராமத்தை விட்டு நகரத்திற்கு குடிபெயர்ந்தார்கள். எனக்காக அவர்களுக்குப் பிடித்த கலாசார அடையாளங்களை விட்டுக்கொடுத்தார்கள். நான் என்னுடைய மற்றும் என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேன். தூரம் தான் அதிகமே தவிர, என் பெற்றோர்களுக்கு அன்றிருந்த நோக்கம் தான் இன்று எனக்கு இருக்கிறது.

நண்பர் 1: என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் பள்ளியும் கல்லூரியும் நம்ம ஊரில் கவர்மெண்ட் செலவில் படித்தேன். இப்போ இங்க வந்து அமெரிக்க கவர்மெண்டுக்குத் தானே என் பணத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்? எல்லாரும் எதிர்காலத்தை முன்னிட்டு அமெரிக்கா வந்துவிட்டால் இந்தியாவுக்கு எப்படி நல்லது நடக்கும்?

நண்பர் 2: ஏன் நடக்காது? இப்ப நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்தியாவில் இருக்கும் பல உறவிணர்களுக்கு பண உதவி செய்ய முடிகிறது. சில சமூகத் தன்னார்வ நிறுவனங்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். மனம் நிறைவாக இருக்கிறது. நம்ம சுதந்திரப் போராட்ட வீரர்களில் 90% அன்னிய நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான். அன்னிய நாட்டில் சில வருடங்கள் இருந்துப் பார்த்தால் தான் சுதந்திரம், பேச்சுரிமை, சமூக விழிப்புணர்வு, தேசப்பற்று போன்ற உணர்வுகள் எழும். அப்படி நமக்கு உணர்வுகள் எழுவது இந்தியாவுக்கு நல்லது தானே?

நண்பர் 1: இப்ப என்ன தான் நீங்க சொல்ல வருகிறீர்கள்? யாரும் இந்தியா திரும்பப் போகக்கூடாதுன்னா?

நண்பர் 2: கட்டாயம் அப்படிச் சொல்லலை. தாராளமாக இந்தியா போங்கள்.
ஆனால் அமெரிக்காவில் இருப்பது stress என்று மட்டும் சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் இங்கே உங்களுக்கு வாழத் தெரியவில்லை என்று அர்த்தம்.

நண்பர் 1: அட! இங்கே எப்படி வாழ வேண்டும் என்றுதான் கொஞ்சம் சொல்லுங்களேன். தெரிந்துகொள்கிறேன்.

அதற்குள் நண்பர் 2 வுக்கு செல் போனில் அவசர அழைப்பு வந்ததனால், வாக்குவாதத்தை அடுத்த சந்திப்பின் போது தொடரலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அமெரிக்காவில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று தனக்குத்தான் தெரியவில்லையோ என்று யோசித்துக்கொண்டே நண்பர் 1 ன்னும் விடைபெற்றார். சாப்பாட்டையும் போட்டு, விவாதிக்கவும் இடம் கொடுத்தால் இப்படி முடிவைச் சொல்லாமல் பாதியிலேயே போய்விட்டார்களே? மறுபடியும் இந்த இருவரையும் சாப்பிடக்கூப்பிட்டால் தான் முடிவு தெரியும் போலிருக்கிறது!

Monday, October 24, 2005

பல குரல் பெண்கள்

கடந்த சனிக்கிழமை சன் தொலைக்காட்சியில் 'இளமை புதுமை' நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு ரொம்ப போர் அடித்ததால் பார்த்தேன். சொர்ணமால்யாவிற்குப் பதிலாக அர்ச்சனா! எப்போது மாறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அலட்டலும் அறுவையும் என்னவோ அதேதான். விசயத்திற்கு வருகிறேன். அந்த இளமை புதுமையில் நான்கு இளைஞர்கள் நம்பியார், பாக்கியராஜ், ரஜினி போல் மிமிக்ரி செய்தார்கள். இதைப் போல் பல மிமிக்ரி நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குத் தோன்றாத இந்தக் கேள்வி சனிக்கிழமை தொன்றியது.

நடிகைகளை ஏன் யாருமே மிமிக்ரி செய்வதில்லை?

இந்த காலத்து நடிகைகளை கணக்கிலேயே எடுக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழும் தெரியாது, சொந்தக் குரலும் கிடையாது. எல்லாருக்கும் டப்பிங் குரல் தான். பல நடிகைகளுக்கு ஒரே டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுக்கிறார். சில நடிகைகள் சொந்தக்குரலில், தமிழில் பேசினாலும், அவர்களுடைய குரலிலோ, வசன உச்சரிப்பிலோ எந்தவிதமான தனித்தன்மையும் இல்லை! எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, நம்பியார் போன்ற நடிகர்களே இன்றும் அதிகம் மிமிக்ரி செய்யப்படுகிறார்கள். அதற்கு வலுவான காரணங்கள் தெரிந்ததே. அவர்களுடைய நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும்(body language) தனித்தன்மை இருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு மாதிரி கோபப்பட்டால், சிவாஜி வேறு விதமாகக் கோபப்பட்டார். கமல் சிரிப்பதற்கும் ரஜினி சிரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் நடிகைகள் அப்படி இல்லை. ஒரே மாதிரி கோபம், ஒரே மாதிரி வெட்கம், ஒரே மாதிரி அழுகை, ஒரே மாதிரி இடையை அசைத்துக்கொண்டு ஒரு நடை! பெரும்பாலான நடிகைகளுக்கு வசன உச்சரிப்பிலோ, நடிப்பிலோ எந்தவிதமான தனித்தன்மையும் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விசயம். தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்வதில் ஏன் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை? வெறும் நடிகைகளாகவே இருக்கிறார்களே, எப்போது கலைஞர்களாக ஆவார்கள்?

அந்த காலத்து நடிகைகள் கொஞ்சம் தேவலாம். அழகாகத் தமிழ் பேசினார்கள். கே.ஆர் விஜயா, எம்.என் ராஜம் - இவர்களின் குரல்கள் கணீரென்று தனியாகத் தெரியும். கண்ணாம்பாவின் "மகனே மனோகரா! பொங்கி எழு!", கே.ஆர்.விஜயா அம்மனாக வந்து பேசும் பக்தி வசனங்கள், மனோரமாவின் ஆச்சி பாணி வசனங்கள் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை. ஸில்க் ஸ்மிதாவின் குரலில் கூட ஒரு தனி கவர்ச்சி தெரியும். இதையெல்லாம் யாராவது மிமிக்ரி செய்தால் நன்றாக இருக்குமே? பின்னனிப் பாடகி மாலதி லஷ்மண் கே.பி சுந்தராம்பாள் குரலில் அருமையாகப் பாடி ஒரு முறை கேட்டிருக்கிறேன். பெண்கள் நுழையாத சில துறைகளில் இந்த பல குரல் கலையும் ஒன்று என்று தெரிகிறது.

Friday, October 21, 2005

பரதநாட்டியம் - Redefined

புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பது, துணிந்து ஒரு முயற்சியில் இறங்குவது, செய்ய முடியாததைச் செய்வது, அதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்வது, தடைகளை உடைப்பது, இவை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி காண்பது - இப்படியெல்லாம் செய்பவர்கள் படைப்புத்திறன்(creativity) உள்ளவர்கள் என்று படித்தேன். பெரும்பாலும் கலைஞர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இருக்கவேண்டும்.

சமீபத்தில் நடிகை/நாட்டியக் கலைஞர் ஷோபனாவின் "Shyama, The Mystical Indian Woman" என்கிற நடன நிகழ்ச்சியில் ஷோபனாவின் படைப்புத் திறனைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. பொதுவாக எனக்கு பரதநாட்டியம் மிகவும் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பரதநாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துப்போய்விட்டது. அலுத்துப்போய்விட்ட என் ரசனையை புதுப்பித்தது இந்த நிகழ்ச்சி.

Image Hosted by ImageShack.us

சிக்கென்று மேடைக்கு வந்த ஷோபனா ஒரு நிமிடம் தில்லானா மோகனாம்பாள் பத்மினியைக் கண்ணில் நிறுத்தினார். வழக்கமாக பரதநாட்டிய மேடைகளில் இருக்கும் நடராஜர் சிலையை அங்கே காணவில்லை. வினாயகரை வணங்கி ஆடும் அந்த முதல் நடனமும் இல்லை. இங்கே தான் ஷோபனா தடைகளை உடைக்கிறார்! எடுத்த எடுப்பில் ஒரு காளி நடனம். காளி நடனத்தின் போது இசையில் special sound effects புகுத்தி ஒரு பயம் கலந்த சூழ்நிலையை உருவாக்கியிருந்தார். வழக்கமாக மிருதங்கமும் வயலினும் மட்டுமே பரதநாட்டிய இசைக்கு உபயோகப்படுத்துவார்கள். அடுத்து வந்த 'அஞ்சலி' என்கிற நடனத்திற்கு கம்பீரமான வீணை இசையை பிரத்யேகமாக உபயோகித்திருந்தது மிக அருமை! ஷோபனாவுடன் அவருடைய மூன்று மாணவிகளும் சேர்ந்து ஆடினார்கள்.

Image Hosted by www.MyImagesHost.net


அடுத்து ஒரு நாட்டிய நாடகம். நாடகத்தின் கரு இதுதான் - ஷ்யாமா என்கிற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளையின் தாய் அதிகப்படியாக வரதட்சினை கேட்கிறார். பெண்ணின் தாய், தன் அழகில்லாத பெண்ணுக்கு திருமணம் ஆனாலே போதும் என்று வரதட்சினை கொடுக்க ஒத்துக்கொள்கிறார். வரதட்சினை பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. திருமண நாளும் வருகிறது. அன்றும் சில பொருட்களை கேட்டு உடனே அவற்றைக் கொண்டுவந்தால் தான் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள் மாப்பிள்ளையும் அவன் தாயும். பொருட்களைக் கொண்டுவருகிறேன் என்று வெளியே செல்லும் ஷ்யாமா, போலீஸ¤டன் திரும்பி வருகிறாள். மாப்பிள்ளையும் அவன் தாயும் கைது செய்யப்படுகிறார்கள். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு புது முயற்சி! பணத்தாசை பிடித்த மாமியாராக நாட்டிய நாடகத்தில் அசத்தினார் ஷோபனா.

Image Hosted by www.MyImagesHost.net

அடுத்து வந்த நடனங்கள் மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த Johann Sebastian Bach என்கிற புகழ் பெற்ற இசைக்கலைஞரின் இசைக்கு அமைக்கப்பட்ட ஒரு நடனத்தில் கொஞ்சம் bale கொஞ்சம் tap dance என்று பரதநாட்டியத்துடன் அளவாகக் கலந்து அளித்தார் ஷோபனா. அடுத்து ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடலுக்கு ஆடிய நடனம், இந்தியாவின் பல முகங்களை அழகாகப் பிரதிபலிபலித்தது. குறிப்பாக க்ரிக்கெட் விளையாட்டு, அழகிப்போட்டியில் 'cat walk', எல்லையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் போரில் ஈடுபடுவது போன்றவற்றை மிகத் துல்லியமாகவும், லாவகமாகவும் பரதநாட்டியத்தில் ஷோபனாவும் அவருடைய மாணவிகளும் அளித்தது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இவை எதிலுமே பரதநாட்டியத்தின் அழகோ, கெளரவமோ சற்றும் குறைந்துவிடவில்லை. ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரால் மட்டுமே இப்படி ஒரு கலை வடிவத்தின் அழகு குறையாமல், அதன் கலாசார எல்லைகளைத் தாண்டாமல் ஒரு புதிய கோணத்தை நிறுவ முடியும்.

எனக்கு பல கேள்விகளை ஷோபனாவிடன் கேட்கவேண்டும் என்று ஆவல் இருந்தாலும், அதற்கு சாத்தியம் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய பெரும்பான்மையான கேள்விகளுக்கு நான் இனையத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த ஷோபனாவின் சில நேர்க்காணல்களின் மூலம் விடைகள் கிடைத்தன. மற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் - இசை! இங்கே இசைக்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஷோபனா சொன்னது - "என்னால் சாதாரண, அல்லது சராசரிக்குக் குறைவாக உள்ள இசைக்கு நாட்டியமாட முடியாது. அதனால் என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பிரபலமான இசைக்கலைஞர்களையே நான் நியமிக்கிறேன். அவர்களை முழுமையாக நிகழ்ச்சியில் ஈடுபடுத்துகிறேன். இசையின் உணர்வுகளை என் நாட்டிய அசைவுகளில் பிரதிபலிக்க முயற்சிக்கிறேன்".

மேலும் அவர் "எப்பொழுதுமே கடவுளைப் பற்றிய நாட்டியங்களை ஆடாமல், சாதாரண மனிதர்களைப் பற்றியும் ஆடி வருகிறேன். பலர் என்னை பரதநாட்டியத்தின் சம்பிரதாயத்தைக் குலைக்கிறேன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் அவர்களைக் கேட்கிறேன், யாருக்கு பரதநாட்டியத்தின் வேர்களைப் பற்றி தெரியும்? பல நூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களையும், சிற்பங்களையும் தானே நாம் பார்த்திருக்கிறோம்? அப்படித்தான் உடைகள் இருந்தன, அப்படித்தான் நடன அசைவுகள் இருந்தன என்று எப்படித் தெரியும்? அது அந்த ஓவியருடைய அல்லது சிற்பியினுடைய கற்பனையாக இருந்திருக்கலாம் இல்லையா? இப்படித்தான் ஒரு கலையை வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சரியல்ல. சில எல்லைகள் இருக்கவேண்டும். அந்த எல்லைக்குள் ஏற்படும் தேடலும், அந்தத் தேடலின் வெளிப்பாடும் அந்தக் கலை வடிவத்தை மேலும் அழகுபடுத்தும்." என்று கூறியிருக்கிறார்.

ஷோபனா, உங்கள் தேடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்!

Monday, October 17, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - IV

மூன்றாம் நாள் காலை St.Agnes church சென்ற எனக்கு ஒரே ஆச்சரியம். அது ஒரு கிருஸ்த்துவ தேவாலயம் போலவே இல்லை. படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
Image Hosted by www.MyImagesHost.net

Image Hosted by www.MyImagesHost.net Image Hosted by www.MyImagesHost.net


Astrodome போல அவ்வளவு பெரிய இடம் இல்லையென்றாலும், கிட்டத்தட்ட 200 அடி டையமீட்டர் உள்ள 4000 பேர் உட்காரக் கூடிய ஒரு வட்டமான கூடம் அது. Astrodome போல் இங்கே பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்கவில்லை, ஆனால் இங்கே அவர்களுக்கு ரெட் க்ராஸ் பண உதவி அளித்துக்கொண்டிருந்தது. தினம் 8000 பேர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரெட் க்ராஸ் தரும் காசோலை அல்லது டெபிட் கார்டை(debit card) வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து உதவித் தொகை அமைந்தது. அதிகபட்ச உதவித்தொகை $1565.

தேவாலயக் கூடத்தின் ஒரு பகுதியில் கணிணிகள்...மீண்டும் பயிற்சி வேலை. மற்றொரு பகுதியில் தேவாலயத்தின் வெளியில் இருந்துத் தொடங்கும் மிக நீண்ட வரிசையில் நிற்கும் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு குடும்பமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு, இன்ட்டர்வியூ செய்யப்பட்டு பிறகு பணம் அளிக்கப்பட்டனர். அதிகாலை ஐந்து மனியிலிருந்து வரிசையில் நிற்கும் அந்த மக்களைப் பார்த்தால் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. 11 மணியளவில் வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும்போது நிற்க முடியாமல் மயங்கி பலர் விழுந்துவிடுவார்கள். அவர்களுக்கு உடனே மருத்துவ உதவி செய்யப்படும். கூடத்தினுள் எப்பொழுது அழுக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இன்டர்வியூ செய்யப்படும் போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டைப் பற்றியும், தொலைந்து போய்விட்ட குடும்பத்தாரைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்படும் போது துக்கம் தாளாமல் பலர் அழுதுவிடுவார்கள்.

தினம் காலை பாதிரியார் ஒலிபெருக்கியில் பேசுவார். அவருடைய பேச்சு அங்கே வேலை செய்பவர்கள் எல்லாருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும். ஒரு நாள் ஒரு பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், தனக்கு பண உதவி அளிக்கமுடியாது என்று சொன்ன ஒரு ரெட் க்ராஸ் பெண்ணை முகத்தில் பலமாக ஓங்கிக் குத்தினான். அவளோ, ரத்தம் வழியும் உதடுகளைத் துடைத்துவிட்டு, "மன்னிக்கனும், உங்களுடைய டாக்குமென்ட்ஸ் சந்தேகப்படும்படியாக இருப்பதால், பணம் கொடுக்க முடியாது" என்று பொறுமையாகக் கூற, எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் அந்தப் பெண் சொன்னார் "காலையில் பாதிரியார் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால், நீங்கள் அமைதிகாத்து அவர்களை அரவணைக்கவேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் கோபம் இல்லை. அவர்களுடைய சூழ்நிலையின் மேல் தான் கோபம் என்று சொன்னார். அதை நினைத்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன்" என்று!

வேலைசெய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தனி சாப்பாட்டு வரிசை. சுட்டெரிக்கும் வெயிலில் சற்று நேரம் நாங்கள் வெளியே காத்திருந்தபின் தான் உணவுக்கூடத்திற்குச் செல்லமுடியும். பிறகு hotdog அல்லது ஏதாவது burger கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்து சாப்பிடுவதற்காகப் போடப்பட்டிருக்கும் ஒரு கொட்டகையில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். பெரும்பாலும் அங்கே உட்கார இடம் கிடைக்காது. அதனால் வெயிலில் மண் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவோம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, மரத்தடியில் மண் தரையில் தோழிகளுடன் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

இங்கேயும் இரண்டு நாட்களில் கணிணி பயிற்சி வேலை முடிந்துவிட, எங்களை ஒரு பிரத்யேக குழுவில் உதவி செய்யச் சொன்னார்கள். பணம் வாங்குவதில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் அங்கே நடந்துகொண்டிருப்பது அப்போது தான் எனக்குத் தெரிய வந்தது. ஒருவரே நான்கைந்து முறை வந்து பணம் வாங்குவது, டெபிட் கார்ட் முழுவதும் செலவு செய்துவிட்டு மீண்டும் வந்து அந்தக் கார்ட்டை தொலைத்துவிட்டேன் என்று சொல்வது - இது போல் நாளுக்கு நாள் நடந்துகொண்டிருந்தது. அப்படி சந்தேகப்படும்படியான நபர்களைப் பற்றிய தகவல்களை மென்பொருளில் தேடிக்கண்டுபிடித்துச், சொல்வது என் வேலை! டெபிட் கார்ட் எண்னை மென்பொருளில் உள்ளிட்டு என்னென்ன அந்த கார்ட்டில் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அவசியத் தேவைக்காக அளிக்கப்படும் இந்த கார்டில் அலங்காரப் பொருட்கள், விலை உயர்ந்த காலணிகள், இசைத் தட்டுகள், விலை உயர்ந்த உணவகங்களில் உணவு போன்றவை வாங்கப்பட்டிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இப்படி கணிணியில் எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்று கூட அந்த மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் இரண்டு நபர்கள் என்னருகில் வந்து அமர்ந்து, சில டெபிட் கார்டுகளைக் கொடுத்து, இவற்றின் செலவு கணக்கை கணிணியில் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவர்களிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அங்கிருப்பவர்கள் எல்லாம் ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற சாதாரண உடைகளையே அனிந்திருக்க, இந்த இருவர் மட்டும் சலவை செய்யப்பட்ட முழுக்கை சட்டையும் பாண்ட்டும் அனிந்திருந்தார்கள். ஆஜானுபாகுவாக இருந்தார்கள். பின்னர் தெரியவந்தது அவர்கள் FBI அதிகாரிகள் என்று. உதவித் தொகையை ஏமாற்றிப் பெருபவர்களை அங்கேயே அவ்வப்போது கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அடுத்து வந்த நாட்களில் FBI அதிகாரிகளுடன் அமர்ந்து வேலை செய்ததில் பெருமையாக இருந்தாலும், சற்று உதறலாகவும் இருந்தது. FBI மட்டும் அன்றி, DMV அதிகாரிகளும் அங்கே இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் லைசன்ஸ்களை உடனடியாக அவர்களுடைய மென்பொருளில் சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள். கோடிக்கணக்கான மக்களின் நன்கொடை பணம் தவறான நபருக்குப் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் ரெட் க்ராஸ் குறியாக இருந்தது.

நான் ஹ¥ஸ்டனில் இருந்து செப்டம்பர் 23 ஆம் தேதி கிளம்புவதாக இருந்தேன். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ரீட்டா என்கிற மற்றொரு சூறாவளி உருவாகி, டெக்ஸாஸில் உள்ள கால்வெஸ்டன் எங்கிற கடலோரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹ¥ஸ்டன் கால்வெஸ்டனில் இருந்து 30 மைல்கள் தான். எனவே ஹ¥ஸ்டனில் இருப்பவர்களையெல்லாம் சற்று உள்ளடங்கிய சான் அந்தானியோ, ஆஸ்டின் போன்ற இடங்களுக்குச் செல்லச் சொல்லி உத்தரவு வந்தது. வெளியூரில் இருந்து வந்திருக்கும் ரெட் க்ராஸ் தொண்டர்களையெல்லாம் தத்தம் ஊர்களுக்கு உடனடியாகக் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.

மறு நாள் விமானத்தில் வாசிங்டனுக்குப் பறந்துகொண்டிருந்த எனக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டதில் சற்று ஏமாற்றமாகவும், ஏதோ ரீட்டாவுக்காகப் பயந்து புறமுதுகு காட்டி ஓடுவதைப் போலவும் ஒரு உணர்வு இருந்தது. ஆனால் இந்தப் பயணம் எனக்கு ஒரு விலைமதிக்க முடியாத அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பயணத்திற்குப் பிறகு, என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் சிரமங்களெல்லாம் மிக அற்பமாக எனக்குத் தெரிகின்றன. இந்தப் பயணத்திற்குப் பிறகு என்னுடைய சில சிந்தனைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். ஒரு நண்பர் கூட கிண்டல் செய்தார் "நீங்கள் மாறுவதற்கு ஒரு சூறாவளி தேவைப்பட்டிருக்கிறது" என்று. உண்மை தான்! காத்ரீனா என்கிற சூறாவளி கொடுத்த அனுபவங்களை என்னால் என்றுமே மறக்கமுடியாது.

ரெட் க்ராஸைப் பற்றி மிக அதிகமாக மீடியா சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால், மிக அதிகமான அளவில் நன்கொடைகளைத் திரட்டும் ரெட் க்ராஸ், செய்வதென்னவோ குறைவு தான்! அதாவது, $1565 என்பது ஒரு குடும்பத்திற்கு எத்தனை நாட்கள் வரும் என்று மீடியா கவலைப்பட்டது. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொகை குறைவாக இருக்கலாம், ஆனால் அந்தத் தொகை எத்தனை குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டது என்பதை கணக்கிலெடுத்தால் அது மிகப் பெரிய தொகை. நான் St.Agnes இல் இருந்த அந்த 10 நாட்களில் மட்டும் 45 மில்லியன் டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரெட் க்ராஸின் குறிக்கோள் உடனடி நிவாரணம் (emergency relief) அளிப்பது மட்டுமே. நீண்ட கால பண உதவியோ, கட்டிடம் கட்டுவதோ, இடிபாடுகளிடையே சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதோ ரெட் க்ராஸின் வேலை இல்லை. பேரிடர் நடக்கும் இடங்களில் உடனடி தேவகளான உணவு, உடை, பாதுகாப்பான இடம், மருத்துவம், உடனடித் தேவைக்கான பணம் இவற்றை அளிப்பதுதான் ரெட் க்ராஸின் வேலை. இதை நிறைய பேர் புரிந்துகொள்வதில்லை. "Redcross can do a little more than a doughnut" என்று மற்றோரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அதிபர் கேலி செய்தார் என்று பத்திரிக்கையில் படித்தேன். பசித்த வயிற்றுக்கு அந்த ஒரு doughnut எவ்வளவு முக்கியம்?

முற்றும்!

Monday, October 10, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - III

மைதானத்தை நோக்கிச் செல்லச் செல்ல காட்சிகள் க்ளோஸ் அப்பில் தெரிந்தன. மைதானத்தின் பார்வையாளர் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆரஞ்சு நிற நாற்காலிகள். மைதானத்தைச் சுற்றி வேலிபோல் அமைத்திருந்தனர். வேலிக்கு உள்ளே வரிசையாக படுக்கைகள். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் படுக்கையில் படுத்திருந்தனர். சிலர் செய்வதறியாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். மருத்துவர்கள் ஒரு சிலரை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் சிலர் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அனைவர் கண்களிலும் ஒரு வெறுமை தெரிந்தது - தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது, இனி சான் போனால் என்ன முழம் போனால் என்ன என்பது போல்! அங்கிருந்த பெண்கள் மிகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தார்கள். காரணம் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கவேண்டியிருந்தது. சில குழந்தைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை போலும் அவர்களுக்கு! ஆனால் அம்மாவும் அப்பாவுமே நொந்து நூலாகிப்போய் அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அங்கே கண்ணுக்கு எட்டிய வரை எல்லாருமே கருப்பர்கள் தான். எண்ணி ஒரு 20 அல்லது 25 பேர் வெள்ளைகாரர்கள் இருந்திருப்பார்கள்.

மதிய உணவுக்கு மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. வரிசையில் நிற்காமல் ஓரமாக ஒரு நடுத்தரவயதுக்காரர் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தார். அவரின் ஒரு ரெட் க்ராஸ் பெண் "நீங்கள் சாப்பிடப்போவதில்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர் "எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது, மேலும் சக்கரை நோயாளி நான். என்னால் அந்த வரிசையில் வெகு நேரம் நிற்க முடியாது" என்றார். உடனே விரைந்து சென்று அவருக்காக இரண்டு பீஸா துண்டுகளை எடுத்து வந்துக் கொடுத்தார் அந்தப் பெண். அதை வாங்கி பசியுடன் அவசர அவசரமாக சாப்பிடத்தொடங்கினார் அந்த நபர். வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞன், "நான் நீயூ ஆர்லியன்ஸில் இருந்து வெறுத்து ஓடி வந்ததைப் போலவே இங்கிருந்து ஒரு நாள் ஓடப்போகிறேன். I hate Texas" என்று கத்திக்கொண்டிருந்தான்.

அங்கே காத்ரீனாவின் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், சூப்பர் டோமின் (Superdome, New Orleans) பாதிப்பிலிருந்தும் அந்த கெட்ட நினைவுகளிலிருந்தும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அப்படி மன நிலை பாதிக்கப்பட்டோ, மன அழுத்தமோ உள்ளவர்களிடம் "Mental Health Service" என்ற அடையாள அட்டை அனிந்த ரெட் க்ராஸ் வாலண்டியர்கள் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு பெண்ணின் புலம்பலைக் கேட்க நேர்ந்தது. "கைக்குழந்தையுடன் சூப்பர் டோமில் நான் மூன்று நாட்கள் கஷ்டப்பட்டேன். கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கையில் நான் வைத்திருந்த கொஞ்சம் பணமும் திருட்டு போய் விட்டது. ஒரு நாள் கண்ணுக்கெதிரே துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு முறை நான் கழிவறைக்குச் சென்ற போது அங்கே இறந்து கிடந்த ஒரு குழந்தையைப் பார்தேன். அந்தக் காட்சி இப்பொழுதும் நினைவுக்கு வந்து என்னை வாட்டியெடுக்கிறது. சூறாவெளியிலேயே என் உயிர் போயிருக்கக் கூடாதா? இன்னும் எத்தனை நாள், எத்தனை இடத்தில் நான் இருந்து கஷ்டப்பட போகிறேனோ தெரியவில்லையே!" என்று கண்ணீர் வழிய அந்தப் பெண் சொல்ல, எனக்குத் தொண்டையை அடைக்க, அங்கிருந்து நகர்ந்தேன். மற்றொரு இடத்தில் ஒரு தாய் தன் 10 வயது மகனை கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டிருந்தாள். தரையில் பீஸா துண்டுகள் இறைந்து கிடந்தன. "இன்னும் உனக்கு உன் அப்பன் சாப்பாடு போடுவான் என்ற நினைப்பா?" என்று கத்திக்கொண்டிருந்தாள்.

கனத்த மனதுடன், மைதானத்தைச் சுற்றி மெதுவாக நடந்தேன். அங்கிருந்த ஒரு மிகப் பெரிய பலகையில் நிறைய நோடிஸ்களும் புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தன. அருகில் சென்று பார்த்தபோது, அவையெல்லாம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள். ஒரு வீட்டின் படம் போட்டிருந்த ஒரு நோட்டிஸ் என்னைக் கவர்ந்தது. ஹ¥ஸ்டனில் வசிக்கும் ஓரு குடும்பம், தங்கள் வீட்டில் இரண்டு அறைகள் காலியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடுமபங்களில் இரண்டு குடும்பங்களுக்கு தம் வீட்டில் தங்க இடம் கொடுப்பதாகவும் அதில் அறிவித்திருந்தனர். படிக்கவே ரொம்பப் பெருமையாக இருந்தது. தொடர்ந்து நடக்கையில், ஒரு வயதானவர், "தயவு செய்து என்னை பஸ்ஸில் அனுப்புங்கள். விமானத்தில் வேண்டாமே" என்று ஒரு ரெட் க்ராஸ் வாலண்டியரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். 65 வருடங்களில் ஒரு முறைக் கூட விமானத்தில் பறந்ததில்லையாம் அவர். அதற்கு அந்த வாலண்டியர், "நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக் கூரையிலிருந்து தண்ணீரில் குதித்து நிந்தி தப்பித்து வந்தவர் நீங்கள். அதை விட விமானப் பயணம் ஒன்றும் கடினம் இல்லை" என்று அவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.

திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வர, எல்லோரும் அமைதியானார்கள். "நியூ ஆர்லியன்ஸிலிருந்து இப்பொழுது வந்த ஒரு பேருந்தில் இங்கே வந்திருக்கும் டேனியல் கார்ட்டர் தன் மனைவி க்ளாராவைத் தேடிக்கொண்டிருக்கிறார்" என்று அறிவிக்க, மூன்று நாட்களுக்கு முன்பே அங்கு வந்துவிட்ட க்ளாரா என்கிற அந்தப் பெண்மணி "நான் இங்கேதான் இருக்கிறேன்" என்று பெருங்குரலில் அலற, அந்தக் கணவன் ஓடி வந்து அவளைக் கட்டிக்கொள்ள, சுற்றி இருப்பவர்களெல்லாம் கைத்தட்டினார்கள். இதைப்போல் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காட்சிகள் தினமும் அங்கே நடந்துகொண்டிருந்தது.

மைதானத்தைச் சுற்றி வந்தது உலகத்தையே சுற்றி வந்தது போல் இருந்தது. அடுத்து வந்த இரண்டு நாட்களில், கணிணி அறையிலேயே பெரும்பாலும் வெலை செய்தாலும், ஓய்வு நேரங்களில் மைதானத்திற்குச் சென்று அங்கிருக்கும் ரெட் க்ராஸ் வாலண்டியர்களுக்கு முடிந்த சில உதவிகளைச் செய்து வந்தோம். அதற்குள் கணிணியில் வேலைச் செய்யும் வாலண்டியர்கள் அனைவரும் அந்த மென்பொருளில் நிபுனர்களாகிவிட, எங்களை ஹ¥ஸ்டனில் உள்ள மற்றொரு ஷெல்டருக்கு பயிற்சி அளிக்க அனுப்பினார்கள். அது St.Agnes என்கிற மிகப் பெரிய Baptist Church.

அங்கே காட்சிகள் மாறியிருந்தாலும், சோகங்கள் மாறவில்லை!

தொடரும்...

Thursday, October 06, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - II

மறு நாள் காலை விடுதி அறையில் கண்விழித்தபோது அங்கே சூழ்ந்திருந்த அமைதி 'நீ வாசிங்டனில் இல்லை' என்று உணர்த்தியது. வாசிங்டன் டிசியில் காலையில் ஆம்புலன்ஸ்களின் அலறல்களைக் கேட்டுக்கொண்டே எழுந்திருப்பதுதான் வழக்கம். ஹ¥ஸ்டனின் அமைதியான, அலட்டிக்கொள்ளாத சூழல் வித்தியாசமாகத் தெரிந்தது. 9 மணியளவில் ஒரு ரெட் க்ராஸ் வாகனம் எங்களை Reliance City என்கிற இடத்திற்கு அழைத்துச் சென்றது. Reliance City என்பது, Astrodome, Reliance Center, Reliance Arena என்கிற மூன்று கட்டிடங்களைக் கொண்ட ஒரு சிறிய நகரம் போல் காட்சியளித்தது. அப்படியொரு மிகப் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பை நான் அதுவரைப் பார்த்ததே இல்லை! உள்ளே கிட்டத்தட்ட 25,000 பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்த Reliance City, இதுவரை அமெரிக்க வரலாறு கண்ட மிகப் பெரிய evacuation center.

அங்கே சென்று இறங்கியதுமே, அந்தச் சூழ்நிலையின் தீவிரம் என்னைத் தாக்கியது. வாசலிலும், கட்டிடத்தின் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான ஆயுதம் தாங்கிய போலீஸார்! பக்கவாட்டில் இரண்டு பெரிய Walmart ட்ரக்குகள் உடைகள், காலணிகள், கம்பளிகள் போன்றவற்றை இறக்கிக்கொண்டிருந்தது. Salvation Army வண்டிகள், உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் வண்டிகள் அவ்வப்போது வந்து உணவு பொருட்கள், தண்ணீர் என்று வரிசையாக இறக்கிக்கொண்டிருந்தன. Shell, Exon-Mobile போன்ற நிறுவனங்களில் இருந்து நிறைய தன்னார்வத் தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஹ¥ஸ்டனின் சுட்டெரிக்கும் வெயிலை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எங்களுடைய ரெட் க்ராஸ் அடையாள அட்டையைப் பார்த்ததும் மறு பேச்சு பேசாமல் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

நானும், மரியாவும் (உடன் வந்தப் பெண்) Astrodome க்கு வழி கேட்டு அங்கே சென்றோம். அங்கே Head of Operations யார் என்று கேட்டுக் அவரைத் தேடுக்கண்டுபிடிப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. ஒரு வழியாக அவரைப் பார்த்து நாங்கள் யார், எங்கிருந்து எதற்காக வந்திருக்கிறோம் என்ற விபரங்களை விளக்கிய பிறகு, எங்களை இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட கணிணிகள் இருந்தன. அதில் எங்களுடைய மென்பொருள் ஓடிக்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பூர்த்தி செய்த 'Hurricane Katrina Intake Sheet' என்கிற தாள்களை அடுக்கடுக்காக ஒருவர் அந்த அறையில் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருக்க, அந்த தாளில் உள்ள விபரங்களை கணிணியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் ரெட் க்ராஸ் ஒரு temp agency மூலம் வேலைக்கு நியமித்திருந்தது. அவர்களுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20! நாங்கள் அவர்களுக்கு 'Trainers from Washington DC" என்று அறிமுகப்படுத்தப்பட்டோம். 'நீங்கள் யார் எங்களுக்கு பயிற்சி அளிக்க' என்பது போல் ஒரு பார்வை முதலில் பார்த்தார்கள். அன்று முழுவதும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து மென்பொருளைப் பற்றி அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தோம். வந்த வேலையை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாலும், மனதின் ஓரத்தில் பாதிக்கப்படவர்களை இங்கே எந்த இடத்தில் இருக்கிறார்கள்? அவர்களைப் போய் பார்க்கவேண்டுமே என்கிற ஆவல் இருந்துகொண்டிருந்தது. மரியாவுக்கும் அந்தே ஆவல் எழ, மதிய உணவு இடைவேளையில், கணிணி அறையிலிருந்து கழற்றிக்கொண்டு கால் போன போக்கில் நடந்து கண்ணில் கண்ட கதவுகளையெல்லாம் திறந்து பார்த்தோம். அப்படியொரு கதவைத் திறந்தபோது, ஒரு மிகப் பெரிய indoor மைதானம் தெரிந்தது. அங்கே நான் பார்த்த காட்சி...

Image Hosted by www.MyImagesHost.net Image Hosted by www.MyImagesHost.net

"என்ன இது ஒரு refugee camp போல் இருக்கிறதே!" என்று நான் மரியாவிடம் சொன்னேன். அப்போது எங்களைக் கடந்து சென்ற ஒருவர் சட்டென்று நின்று, "உஷ்ஷ்ஷ்... இங்கே refugee camp என்கிற வார்த்தையை உபயோகிக்காதீர்கள். அந்த மக்கள் கேட்டார்களென்றால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. மேலும், அவர்களை மிகச் சாக்கிரதையாக அனுக வேண்டும். குடி, போதை மற்றும் சிகரெட் பழக்கம் உடையவர்களை வெளியே போகவிடாமல் ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தால், அந்த இடம் எப்படியிருக்குமோ, அது போல் தான் அந்த மைதானம் இருக்கிறது. அதனால் சாக்கிரதை!" என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். நானும் மரியாவும் கதவுக்கருகில் நின்று, உள்ளே போவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மனதில் திகிலுடன், விரிந்த கண்களுடன் படிகளில் இறங்கி மைதானத்தை நோக்கிச் சென்றோம்.

தொடரும்...

Tuesday, October 04, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - I

இந்தப் பதிவை நேற்று தமிழ்மணத்தில் சேர்த்தேன். சில பிழைகளும், குழப்பங்களும் இருந்ததால், அவற்றைத் திருத்தி மீண்டும் சேர்க்கிறேன்.

Image Hosted by ImageShack.us

காத்ரீனா வந்து அமெரிக்காவின் அடிவயிற்றைக் கலக்கி, சுழற்றி அடித்து பின் மறைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. அமெரிக்கா எத்தனையோ இயற்கை சீற்றங்களை கடந்து வந்திருந்தாலும், காத்ரீனா என்கிற சூறாவளி வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பது உண்மை. காரணம் காத்ரீனா ஏற்படுத்திய இயற்கை சேதம் மட்டுமல்ல. நீயூ ஆர்லியன்ஸில் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக மனிதன் ஏற்படுத்தியிருந்த சேதத்தை காத்ரீனா வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுதான் ஒரு முக்கிய காரணம். ஒரு இயற்கைச் சேதத்திற்கான அரசின் உடனடி நடவடிக்கைகள் வழக்கமாக உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது. அதே போல், மீடியாவின் நடவடிக்கையும் வழக்கமானது தான் - பாதிக்கப்பட்ட மக்களின் வீரத்தைப் பற்றியும், விவேகத்தைப் பற்றியும், எப்படி அவர்கள் ஒற்றுமையாக இருந்து போராடி அந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தார்கள் என்பது பற்றியும், மீட்பு நடவடிக்கைகள் எப்படி நடந்தன என்பதைப் பற்றியும் எழுதுவது தான். ஆனால் காத்ரீனாவைப் பொறுத்தவரை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக நடந்திருக்கிறது. நிவாரணப் பொருட்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்புவதற்கு முன்பே, ஆயுதம் தாங்கிய படைகளை நியூ ஆர்லியன்ஸ¤க்கு அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அதே போல் மீடியாவும், மீட்புப் பணிகளைப் பற்றிய கதைகளை எழுதுவதற்கு முன்பே கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை போன்ற கொடூரங்களை எழுதவேண்டிய நிலைமை வந்துவிட்டது. இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விசயம் தான். அதைப் பற்றி நான் எழுதப் போவதில்லை. காத்ரீனா தொடர்பாக என்னுடைய சில அனுபவங்களைப் பற்றி மட்டும் எழுதப் போகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன் வரை காத்ரீனாவின் பாதிப்புடன் எனக்கு நேரடித் தொடர்பு ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்தத் தொடர்பு ரெட் க்ராஸ் (The American Red Cross) மூலம் எனக்குக் கிடைத்தது. காத்ரீனா போன்ற சூறா¡வளிகள், வெள்ளங்கள், நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைச் சேகரித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு செஞ்சிலுவைச் சங்கம் உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருளை தயாரித்த IT குழுவில் நானும் இருந்தேன். காத்ரீனாவினால் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே முகாம்கள்(shelter) அமைத்து ரெட் க்ராஸ் தங்கவைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். அதில் பெரும்பான்மையான மக்கள் ஹ¥ஸ்டனில்(Houston) உள்ள ஆஸ்ட்ரோடோம் (Astrodome) என்கிற விளையாட்டு மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இடங்களில் வேலை செய்யும் ரெட் க்ராஸின் வாலண்டியர்களுக்கு அந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு அவசர பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் வந்து அலைமோதும் அந்த முகாம்களில் புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு மென்பொருளுடன் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். கணிணியைச் சரியாக உபயோகிக்கக்கூடத் தெரியாதவர்ளை ஷெல்டர்களில் ரெட் க்ராஸ் நியமித்திருக்கிறது என்று மீடியா குற்றம் சாட்டத் தொடங்கியதைக் கேட்டு ரெட் க்ராஸ் உஷாரானது!

September 9 ஆம் தேதி நான் பாட்டுக்கு அலுவலகத்தில் என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் மானேஜர் என்னிடம் வந்து "நீ ஹ¥ஸ்டனுக்கு உடனடியாகக் கிளம்ப முடியுமா?" என்று கேட்டார். தீடீரென்று அவர் அப்படிக் கேட்டதால் சற்றுத் திகைத்து, "எதற்கு?" என்று கேட்டேன். "ஹ¥ஸ்டனில்(Houston) ரெட் க்ராஸ் ஷெல்டர்களில் வேலை செய்யும் வாலண்டியர்களுக்கு நம்முடைய மென்பொருளை உபயோகிக்க பயிற்சி அளிக்க வேண்டும். மிகவும் அவசரமாக அவர்களுக்கு உதவி தேவை" என்றார். ஒரு வினாடி யோசித்து "சரி போகிறேன்" என்று சொன்னது தான் தெரியும். மறு நாள் காலையில் விமானத்தில் இருந்தேன். எங்கள் குழுவில் வேலை செய்யும் மற்றோரு அமெரிக்கப் பெண்ணும் என்னுடன் வந்தாள். விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து ஹ¥ஸ்டனில் இருக்கும் ரெட் க்ராஸ் அலுவலகத்திற்குச் சென்றோம். நிமிடத்திற்கு ஒரு டாக்ஸியில் அமெரிக்காவின் எல்லாப் பகுதியிலிருந்தும் ரெட் க்ராஸ் வாலண்டியர்கள் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். பிரமிப்பாக இருந்தது ரெட் க்ராஸின் சரித்திரத்தில் கத்ரீனா உண்டாக்கிய பெருஞ் சேதத்தைப் போல் அதுவரை பார்த்ததில்லை என்பதால் எல்லாரும் அங்கே ஆடிப்போய்த்தான் இருந்தார்கள். அடையாள அட்டைகள், ரெட் க்ராஸ் மேலங்கி போன்ற இத்யாதிகளை வாங்கிக்கொண்ட பிறகு நாங்கள் தங்க வேண்டிய விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

ஹ¥ஸ்டன் டெளன் டவுன் பகுதியில் உள்ள Hyatt Regency...மிகச் சொகுசான விடுதி! எனக்கு மனதிற்குள் குற்ற உணர்ச்சி எட்டிப் பார்த்தது. எத்தனைப் பேர் நியூ ஆர்லியன்ஸில் வீடிழந்து படுக்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்! நமக்கென்ன Hyatt Regency வேண்டியிருக்கிறது? என் மனதில் உள்ளதைப் படித்தது போல் இன்னொரு ரெட் கிராஸ் பெண்மனி சொன்னார் "அடுத்த முறையும் வாலண்டியர் செய்யவேண்டும் என்று நம்மை ஊக்கப்படுத்தவே இந்த மாதிரி வசகிகளெல்லாம் ரெட் கிராஸ் நமக்கு செய்கிறது" என்று. மேலும், அங்கே போன பிறகு தான் தெரிந்தது Hyatt கிட்டத்தட்ட 200 அறைகளை ரெட் க்ராஸ¤க்கும், மீதம் 200 அறைகளை FEMA மற்றும் 'Search and Rescue Operation Squad' போன்ற அமைப்புகளுக்கும் அற்பணித்திருக்கிறது என்று. அறைச் சாவியை வாங்கிக்கொண்டு எலிவேட்டருள் நுழைந்தபோது, கூடவே ஒரு பருமனான பெண்மனி ஒரு பெரிய மூட்டைத் துணிகளுடன் உள்ளே நுழைந்தார். என்னுடைய அலுவலகத் தோழி "இத்தனைத் துணிகளையும் இன்றே ஷாப்பிங்கில் வாங்கினீர்களா?" என்று கேட்க, அந்தப் பெண்மனி "இல்லையம்மா, நாங்கள் homeless people. நியூ ஆர்லியன்ஸிலிருந்து போன வாரம் தான் டெக்ஸாஸ் வந்தோம். இந்தப் பழைய துணிகளெல்லாம் என் பிள்ளைகளுக்கு ரெட் க்ராஸ் ஷெல்டரில் இருந்து எடுத்து வந்தேன். கடவுள் புண்ணியத்தில் சில நாட்களுக்கு எங்களை Hyatt இல் தங்க வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு எங்கே இருக்கப்போகிறோமோ தெரியவில்லை" என்று பெருமூச்சு விட்டார். இதற்கே எனக்கு மனதை யாரோ பிசைந்தது போல் இருந்தது! ஆனால் மறு நாள் நாங்கள் நேரில் பார்த்த காட்சிகள் மனதை உறுக்கிப் பிழிந்துவிட்டன.

தொடரும்...

Friday, September 02, 2005

சாரு நிவேதிதாவின் 'கோணல் வாக்கியம்'

சாரு நிவேதிதா வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய புத்தக முயற்சிக்கு பொருளுதவி கேட்டு 'யாசிக்கிறேன்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்ந்தார். பிறகு அந்தக் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு 'தரித்திரமும் ஏளனமும்' என்கிறக் கட்டுரையில் பதில் சொல்லியிருக்கிறார். அதில் உள்ள ஒரு கோணல் வாக்கியம் என்னை வருத்தப்படவைத்தது. அந்த வாக்கியம் இதுதான்.

"'யாசிக்கிறேன்' என்ற என் கட்டுரையைப் படித்துவிட்டு பலரும் 'சாரு பிச்சையெடுக்கிறார்' என்று ஏளனம் செய்வதாக அறிந்தேன். இலக்கியத்துக்காக பிச்சை என்ன, திருடக் கூட செய்வேன். பெண்ணாக இருந்திருந்தால் விபச்சாரமும் செய்திருப்பேன் "

ஏதோ அவர் உணர்ச்சிவசப்பட்டு இதை எழுதியிருக்கிறார் என்று தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், அதென்ன 'பெண்ணாக இருந்திருந்தால்' ??? விபச்சாரம் என்பது பெண்களின் சொத்தா? அல்லது அதை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?

விபச்சாரம் செய்கிற அளவு துணிந்துவிட்ட சாரு, பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஆதங்கப்பட தேவையில்லை! With due respects, ஆணாக இருந்தாலும் அதற்கு வழி இருக்கிறது. Gigolo, Male sex worker என்றெல்லாம் சாரு கேள்விபட்டதில்லையோ? அந்த மாதிரி தொழில் செய்து இலக்கியத்திற்கு பணம் சம்பாதிக்கலாமே? அதனால் அவருக்கென்ன அவலம்? அப்போதும் தமிழுக்குத் தான் அவலம் என்று சொல்லி சுலபமாகத் தப்பித்துவிடலாம் பாருங்கள்!

மன்னித்துவிடுங்கள்...பெண்கள் விசயம் என்பதால் நானும் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்!

Wednesday, August 24, 2005

K-mart! நல்ல K-mart!

Image Hosted by Your Image Link
கல்லூரிப் படிபெல்லாம் முடிந்து பச்சை அட்டை கிடைத்து, ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தபோது(அப்போது எனக்குத் திருமணம் ஆகவில்லை), மேலே படிப்பதா வேலைக்குப் போவதா என்று குழப்பமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வரும் வரை அக்கா வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்க வேண்டாமென்று பகுதி நேர வேலைக்கு, McDonalds, Pizza Hut, Walmart, K-mart போன்ற இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஒரே வாரத்தில் K-mart இல் வேலை கிடைத்தது. எனக்கு ஒரே சந்தோஷம். எனக்குக் கிடைத்த முதல் வேலை அது! சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $5.25!!! அக்காவும் மாமாவும் "இந்த வேலை உனக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கினால் தான் பிற்காலத்தில் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும்" என்றுச் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

முதல் நாள் சாமி கும்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினேன். அப்போது என்னிடம் கார் இல்லாததால், அக்கா தான் என்னை K-mart அழைத்துச் சென்றாள். நான் அமெரிக்கா வந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்ததால், இன்னும் அமெரிக்கர்களின் பேச்சு வழக்கு சரிவர புரியாத நிலையில் தான் அப்போது இருந்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் மானேஜர், ஒரு சிகப்பு நிற மேலங்கியை எனக்குக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார். அந்தச் சட்டையில் இருந்த ஒரு அடையாள அட்டையில் என்னுடைய பெயரும், "Dedicated to Customer Service" என்ற வாக்கியமும் இருந்தது. 'Sporting Goods' என்ற பகுதியில் எனக்கு வேலை என்று சொல்லி அங்கே கூட்டிக் கொண்டு போனார் மானேஜர். "இந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத் தேவையான உதவியை நீ செய்ய வேண்டும்" என்றார். அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களைப் பார்த்தேன். மீன் பிடிப்பதற்காக உபயோகப் படுத்தும் பொருட்கள், camping பொருட்கள், உடற் பயிற்சி சாதனங்கள் - இவற்றில் பெரும்பான்மையானவற்றை நான் முன்பு பார்த்தது கூட இல்லை! குழம்பிப்போய் நின்ற என்னைப் பார்த்துப் ஆறுதலாகப் புன்னகைத்த மானேஜர், "கவலைப்படாதே, உனக்குப் பயிற்சி அளிப்பது எங்கள் கடமை" என்று சொல்லிவிட்டு, அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களின் பட்டியலை என்னிடம் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகே எனக்கு உயிர் வந்தது. பல அமெரிக்க வழக்கவார்த்தைகள் எனக்கு முதலில் புரியவே இல்லை. உதாரணத்திற்கு ஒரு முறை மானேஜர், "Can you bring a buggy?" என்றார். "buggy" என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அங்கே வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டபோதுதான் தெரிய வந்தது அது தள்ளு வண்டி(shopping cart) என்று! இப்படி தட்டுத் தடுமாறி வேலைகளையும் பேச்சு வழக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். K-mart மூடும் நேரம் இரவு 10 மணி. 9:45 மணிக்கு கடை மூட இன்னும் 15 நிமிடங்களே இருக்கிறதென்று ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும். ஒரு முறை என்னை அறிவிக்கச் சொன்னார்கள். நான் ஒலிபெருக்கியிலெல்லாம் பேசியதே இல்லை! எனக்கு பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது!! அறிவிப்பை ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு, பல முறை பேசிப்பார்த்துகொண்டு ஒரு வழியாக ஒலிபெருக்கியில் அறிவிப்பைச் செய்தேன்! "Your Attention K-mart shoppers! K-mart will be closed in about 15 minutes. Please bring your final purchases to the cash register. Thankyou for shopping at K-mart" - இதுதான் நான் முதல் முதலில் ஒலிபெருக்கியில் பெசியது. நான் பேசி முடித்த அடுத்த நிமிடம் மானேஜர் அங்கு வந்து என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

எனக்குப் பிடிக்காத வேலை காஷ் ரெஜிஸ்டர்(Cash Register). நீண்ட வரிசையாக நிற்கும் கஸ்டமர்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். எல்லாரும் அவசரத்தில் இருப்பார்கள். அப்போது விலை போடுவதில் ஏதாவது பிழை செய்துவிட்டால் அவ்வளவுதான்...தோலைந்தேன்! பிலு பிலு என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். கிருஸ்துமஸ், தாங்ஸ் கிவிங் போன்ற விடுமுறை காலங்களில் அலைமோதும் கூட்டங்களைப் பார்த்தாலே எனக்கு மூச்சு முட்டும். நல்ல வேலையாக என் பயத்தை புரிந்துகொண்ட மானேஜர், பெரும்பாலும் என்னை காஷ் ரெஜிஸ்டருக்கு அழைப்பதில்லை. ஷெல்பில் இருக்கும் பொருட்களை ஒழுங்குப் படுத்துவது, கஸ்டமர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக்கொடுப்பது, தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்பவர்களுக்கு விளக்கம் தருவது போன்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். ஒரே ஒரு சிரமம் என்னவென்றால், எப்பொழுதும் நின்று கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும்.நடுவில் 10 நிமிடங்கள் இடைவேளை இருக்கும். அப்போதுதான் சிறிது நேரம் உட்காரமுடியும். இரவு 10 மணிக்கு K-mart மூடியவுடன் களைப்பாக வெளியே வரும்போது அக்காவும் அம்மாவும் காரில் காத்துக்கொண்டிருப்பார்கள். நான் பசியுடன் இருப்பேனென்று சாப்பாடும் கொண்டுவந்திருப்பார்கள்! நானாவது பரவாயில்லை பகுதி நேரமாக 5 மணி நேரங்கள் தான் வேலை செய்தேன். சிலர் முழு நேரமாக 10 மணி நேரங்கள் வேலை செய்தார்கள். ஒரு பெண்மனி காலை 5 மணி நேரம் K-mart இல் வேலை செய்துவிட்டு, அடுத்து 5 மணி நேரங்கள் ஒரு உணவகத்தில் வேலை செய்தார். ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டபோது, "என்னுடைய குழந்தைகளும் அவர்களுடைய பள்ளித் தோழர்களைப் போல நூறு டாலர் ஷ¥க்கள் அணிய வேண்டும். அதனால்தான் இந்த சிரமமெல்லாம்" என்று சொன்னார். இப்படி நலிவுற்றவர்கள், பொழுது போவதற்காக வேலைக்கு வரும் வசதியானவர்கள், பள்ளி, கல்லூரி விடுமுறைகளின் போது அடுத்த செமெஸ்டருக்கு பணம் சேமிக்கும் இளைஞர்கள் - இப்படி பலதரப்பட்டவர்கள் அங்கே வேலை செய்தார்கள். எந்தவித வேலையையும் தரம் தாழ்த்திப் பார்க்காத அமெரிக்கர்களின் நோக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம்ம ஊரில் தான் எத்தனை பாகுபாடு! ஒரு முறை கடையில் ஒரு குழந்தை ஏதோ ஒரு கண்ணாடிப் பொருளை உடைத்துவிட, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளைக் நான் கூட்டி அள்ளிக்கொண்டிருந்ததை என் அம்மா பார்த்துவிட்டார். அவ்வளவுதான்! 'நான் என் பொண்ணை எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்படி தரையைக் கூட்டி அள்ளுவதைப் பார்க்கவா?' என்று புலம்பித் தள்ளிவிட்டார்கள்! மற்றோரு உறவினர், 'இன்ஜினீரிங்கெல்லாம் படிச்சிட்டு இங்க போய் எதுக்கு வெலை செய்யற?' என்று இளக்காரமாகக் கேட்டார். உண்மையிலேயே அங்கே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வேலை செய்துகொண்டிருந்தேன் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பிருக்கவில்லை.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சம்பள நாள்! என்னுடைய முதல் வாரச் சம்பளம் $115.00!!! அந்தக் காசோலையைக் கையில் வாங்கியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அந்தக் காசொலையின் நகலை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு ஆசை ஆசையாக அடைகாத்து வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியப் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்தபோது ரொமபப் பெருமையாக இருந்தது. இரண்டு மாதங்கள் K-mart இல் வேலை செய்தேன். பிறகு ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலைக்கிடைத்ததால் K-mart வேலையை விட்டுவிட்டேன். அந்த மென்பொருள் கம்பெனியின் நேர்முகத்தேர்வின் போது, ஒரு மானேஜர் என்னை "கஸ்டமர் சர்வீசில் உங்களின் அனுபவத்தை எப்படி மதிப்பிடுவீர்கள் 1 to 10 என்ற அளவு கோளில்?" என்று கேட்டார். நான் சற்று யோசித்து "7" என்றேன். "எப்படிப்பட்ட அனுபவம் அது?" என்று மறுபடியும் அவர் கேட்டபோது, "நான் K-mart இல் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். பல கஸ்டமர்களுடன் பழகும் வாய்ப்பும் அனுபவமும் கிடைத்தது. கஸ்டமர்களின் எதிர்பார்ப்புகள், நாம் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவைகளை நன்றாகக் கற்றுக்கொண்டேன். நான் அணிந்திருந்த மேலங்கியில் உள்ள பாட்ஜில் 'Dedicated to Customer Service' என்று எழுதியிருந்தது. அதற்கு உண்மையாக நடந்துகொண்டேன்" என்று சொல்ல, அந்த மானேஜர் "K-mart இல் வேலை செய்தீர்களா? அப்படியென்றால் பத்துக்கு பத்து மதிப்பெண்களே கொடுக்கலாமே!" என்று சொன்னார். தினமும் கஸ்டமர்களிடம் பேசி அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதன்படி மென்பொருள் உருவாக்கும் அந்தக் கம்பெனியில் எனக்கு வேலைக் கிடைத்ததற்கு என்னுடைய K-mart அனுபவம் ஒரு முக்கிய காரணம் என்று நான் வலுவாக நம்புகிறேன். அதன் பிறகு மென்பொருள் பொறியியல் என் career ஆனது.

2001, 2002 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் தடாலடியாக கீழிறங்கியபோது, ஆறு மாதங்கள் நானும் என் கணவரும் வேலையில்லாமல் இருந்தோம். முதல் மூன்று மாதங்கள் நம்பிக்கையுடன் வேலைத்தேடினேன். கிடைக்கவேயில்லை. பிறகு சேமிப்பில் இருந்த பணமெல்லாம் வெகு விரைவாகக் கரையத் தொடங்கியதும், மறுபடியும் K-mart, Walmart, McDonalds போன்றவற்றில் விண்ணப்பிக்கலாம் என்றால் ஏனோ அப்போது மனம் கேட்கவில்லை. நம்ம ஊர் ரத்தம் நண்பர்களெல்லாம் இளக்காரமாக நினைப்பார்களோ என்று யோசிக்க வைத்தது. அப்போது என்னுடைய மாமா "உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை உலுக்கி நிமிர்ந்து உட்காரவைத்தன. இனி எதற்கும் கவலைப்படக்கூடாதென்று விண்ணப்பங்களை தயார் செய்துகொண்டிருக்கையில் மீண்டும் ஒரு மென்பொருள் கம்பெனியிலேயே வேலைக்கிடைத்தது.

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த K-mart அலபாமாவில் உள்ளது. சென்ற மாதம் அலபாமா சென்றிருந்தபோது, வலைப்பதிவில் போட புகைப்படம் எடுக்கலாம் என்று K-mart பக்கம் கிளம்பியபோதுதான் அக்கா சொன்னாள், அந்த K-mart மூடப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று! வருத்தமாக இருந்தது.

Tuesday, August 09, 2005

அரங்கேற்ற அலம்பல் - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி...

பொருளாதாரத் தேவைக்காக நாட்டியம் கற்றுக்கொண்ட காலங்களெல்லாம் எப்போதோ போய்விட்டது. இப்போது சமூகத்தில் நாட்டியக் கலைஞர்களின் இடமும் வெகுவாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்காவில் அரங்கேற்றம் என்பது ஒரு நாட்டிய career இன் தொடக்கமாகக் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, ஒரு நீண்ட நாட்டியப் பயிற்சியின் முடிவாகவே கருதப்படுகிறது. அரங்கேற்றத்தை இலகாக வைத்துத்தான் பயிற்சியே மேற்கொள்ளப்படுகிறது. 'அப்பாடா! அரங்கேற்றம் முடிந்தாகிவிட்டது! இனிமே படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்' என்றுதான் இங்கே பல பெற்றோர்களும் பிள்ளைகளும் நினைக்கிறார்கள். அரங்கேற்றத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாட்டியம் ஆடும் பெண்கள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. Ann Marie Gaston என்பவர், தன்னுடைய "Temple to Theater" என்கிற புத்தகத்தில் இப்படி சொல்லுகிறார். "...to many of the families, whose childern attend Bharata Natyam classes in this country, the purpose of the ritual, and even the meaning of the word 'Arangetram' is a mystery. This has unfortunately led to the redefinition of the Arangetram as being 'the termination of the learning phase,' a phase that was part time to begin with."

தொடர்ந்து பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்வதும், ஆடுவதும் அவரவர்கள் விருப்பம். எனக்கு புரியாத சிலவற்றை கேள்விகளாக இங்கே முன் வைக்கிறேன். பரதநாட்டியத்தை கலாசாரத்தோடு போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் அதை ஒரு நாட்டியக் கலை வடிவமாக மட்டுமே பார்ப்பதுசாத்தியமா? பரதநாட்டியத்தின் முலம் இந்தியக் கலாசாரத்தின் வேர்களுடன் தொடர்பில் இருக்கமுடியுமென்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இதுவே பரத நாட்டியம் கற்றுக்கொள்வதற்கான ஒரே காரணமாக இருப்பது சரியா? எல்லாக் கலைவடிவங்களும், அதன் பூர்வீகத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாகத் தான் இருக்கும். அதனால் தான் கலையையும் கலாசாரத்தையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. பரதநாட்டியம் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக மட்டும் இருக்கக் கூடாது. அந்தக் கலாசாரத்தையே சவால்விடும் தன்மை மிக்கதாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒரு பிரச்சாரம் போல் இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் தான் கிருஷ்ணலீலைகளையும், தசாவதாரங்களையும், வள்ளித் திருமணத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது? இவையெல்லாம் முடிந்து போன கலாசார வரலாறுகள். பரதநாட்டியம்நம் நாட்டுக் கலாசாரச் சின்னம் என்றால், ஏன் நிகழ் கால கலாசாரத்தை பரதநாட்டியங்கள் பிரதிபலிப்பதில்லை? சமீபத்தில் நான் பார்த்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஒரு திருக்குறளுக்கு உதாரணமாக அன்னைத் தெரேஸாவைப் பிரதிபலித்திருந்தார்கள். இது போல் புதிய முயற்சிகளைப் பார்பது மிக அபூர்வமாக இருக்கிறதே, ஏன்? ஒரு அரங்கேற்றத்தில் 10 நடனங்கள் இருக்கிறதென்றால், 5 நடனங்களில் கிருஷ்ணரைப்பற்றியும் முருகரைப்பற்றியும் சொல்லிவிட்டு மீதி 5 நடனங்களிலாவது சமூக அக்கறையுடைய செய்திகளைச் சொல்லலாம் இல்லையா?

முடிவாக நான் சொல்ல விரும்புவது, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், அரங்கெற்றத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம், நம் குழந்தைகளை நம் கலாசாரத்துடன் தொடர்பில் வைத்துக்கொள்ள அரும்பாடுபடுகிறோம். அரங்கேற்றத்துடன் முடிந்துபோய்விடும் பரதநாட்டிய வகுப்புகள் இந்தப் பாடுபடலின் ஒரு பகுதி என்றால், அப்படியே இருக்கட்டும். ஆனால் அரங்கேற்றம் செய்துவிட்டால் மட்டும் சாதித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. நம் மூதாதையர்களால் நமக்குக் கிடைத்த அந்த அரிய கலையை சமூகத்திற்கும், அடுத்த சந்ததியினருக்கும் ஒரு நல்ல வடிவில் எடுத்துச் செல்லுதல் தான் உண்மையான சாதனை. அதற்கான சிந்தனையைத் தூண்டிவிடும் நிகழ்ச்சியாக அரங்கேற்றங்கள் இருக்கவேண்டும்.

Friday, August 05, 2005

அரங்கேற்ற அலம்பல் - 2

சிலப்பதிகாரத்தில் மாதவியின் வரலாற்றுப் புகழ் பெற்ற அரங்கேற்றத்தில் தொடங்கி, இன்று graduation party போல் கொண்டாடப்படும் நவீன அரங்கேற்றங்கள் வரை கொஞ்சம் அலசிப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை!

சிலப்பதிகாரத்தில் 12 வயது மாதவியின் அரங்கேற்றத்தைப் பற்றி 'அரங்கேறு கதை' என்கிற தனி அத்தியாயத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார். நான் படித்ததில்லை, கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதைய மேடை அலங்காரங்கள், உடை அலங்காரங்கள், நாட்டியம் தொடங்கும் முன் செய்யப்படும் சம்பிரதாயங்கள் பற்றியெல்லாம் அந்த அத்தியாயத்தில் விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறதாம். அதிலிருந்து புராண காலத்தில் ஒரு புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட நாட்டிய கலைஞரை முதன் முதலாக மன்னரின் முன் நாட்டியமாட வைத்து அவரது ஆசியைப் பெறுவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்தது என்பது தெரிய வருகிறது. இப்போது பரத நாட்டியம் என்று அழக்கப்படுகிற இந்த நாட்டியக் கலை அன்று 'தாசி ஆட்டம்' அல்லது 'சதிர்' என்று அழைக்கப்ப்ட்டது. அன்றைய தேவதாசி கலாசாரத்தில், ஒரு புதிய நாட்டியப் பெண்னின் முறையான அறிமுகத்திற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று, அவளது நாட்டியத் திறமையை மற்றவர்களுக்கு முன் நிரூபிப்பது, இரண்டாவது, நாட்டியத்தையே தொழிலாகக் கொண்டிருக்கும் வம்சம் என்பதால், மன்னர் மட்டும் அன்றி, பிற ஆதரவாளர்களையும் திரட்டும் பொருளாதார ரீதியான முயற்சியாகவும் அரங்கேற்றங்கள் இருந்தன.

பின் வந்த காலங்களில் 'தாசி ஆட்டம்' ஒடுக்கப்பட்டு பரதநாட்டியமாக உருப்பெற்று சமுதாய ரீதியாக பெரும் மாற்றத்தைக் கண்டது. அரங்கேற்றங்கள் கோவில்களில் இருந்து சபாக்களுக்கு இடம் மாறின. தாழ்ந்த சாதியைச் சார்ந்த தேவதாசிகள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த நாட்டியத்தை, நடுத்தர வர்க்கத்தினர் - பெரும்பான்மையாக பிராமணர்கள் ஆடத் தொடங்கியிருந்தனர். அவர்கள் நாட்டியத் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல என்பதால், நாட்டியக் கலையின் மீதுள்ள பொருளாதார நோக்கம் நீங்கி, கலையார்வத்தின் அடிப்படையில் அரங்கேற்றங்கள் நடைபெற்றன. அரங்கேற்றங்கள் நாட்டியப் பெண், மற்றும் நாட்டிய ஆசிரியரின் தரத்தையும், திறமையயும் அளவிடும் ஒரு சந்தர்ப்பமாக இருந்தன. அரங்கேற்றதிற்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்கள், நாட்டிய ஆசிரியர்கள், நாட்டிய ரசிகர்கள், விமர்சகர்கள் பார்வையாளர்களாக இருந்ததால், அவர்களுடைய கருத்துக்களும், விமர்சனங்களும் நாட்டியக் கலைஞர்களின் திறமையை சீரமைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக கருதப்பட்டது. கலையார்வம் மிக்க ஒரு சமூகத்தின் ஒருங்கிணைப்பாக அரங்கேற்றங்கள் இருந்தன.

காலங்கள் மாற மாற, பார்வையாளர்களும் மாறினார்கள். சமீப காலங்களாக அரங்கேற்றங்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சியாக மாறிவிட்டன. நண்பர்களும், உறவிணர்களும் மட்டுமே பார்வையாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் இந்தியக் கலாசாரத்தின் முக்கிய அம்சமாக பரதநாட்டியம் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பெற்றோர்கள், அதிவேகமாக தமது குழந்தைகளை அடித்துக்கொண்டு போகும் மேலை நாட்டுக் கலாசாரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றும் கருவியாக பரதநாட்டியத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேநடத்தப்படும் அரங்கேற்றங்களில் 'எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் பெண்ணை நமது கலாசாரத்தின்படிதான் வளர்த்திருக்கிறோம்' என்று மற்றவர்களிடம் பறைசாற்றிக்கொள்ளும் தோனியே தெரிகிறது. அரங்கேற்றங்கள் திருமணத்திற்கு இணையான ஆடம்பரத்துடன் நடத்தப்படுகின்றன. பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு இது ஒரு நல்ல வியாபாரம். சாதாரணமான இசை நிகழ்ச்சிகளை விட அரங்கேற்றங்களுக்கு அதிகமான ஊதியம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அது மட்டிமில்லாமல் பளபளக்கும் அழைப்பு அட்டைகள், இசைக் கலைஞர்களுக்கும், நாட்டியக் குருவுக்கும் பரிசுகள், வந்திருப்பவர்களுக்கெல்லாம் பரிசுகள் அடங்கிய பை (gift bag or doggy bag), மாலை சிற்றுண்டி, இரவு உணவு - இப்படி செலவுப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நடனங்களுக்கு நடுவே ஆன்மீக சொற்பொழிவு, முக்கிய பிரமுகர்களின் பேச்சு, மனதை உருக்கும் நன்றி உரை எல்லாம் உண்டு! நான் சென்றிருந்த ஒரு அரங்கேற்றத்தில் அரங்கத்தின் வாசலில் ஒரு மிகப் பெரிய ரங்கோலி கோலம் போட்டு அதை ரோஜாப்பூ இதழ்களால் நிரப்பியிருந்தார்கள். மற்றொரு அரங்கேற்றத்தில் நாட்டியப் பெண்ணின் ஆளுயரப் புகைப்படங்கள் வைத்திருந்தார்கள். சுலபமாக ஒரு அரங்கேற்றத்தின் செலவு $20000 இருக்கும்.

இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். பணம் இருப்பவர்கள் தாம் நினைத்ததை செய்கிறார்கள். அதைப் பார்த்து புருவம் உயர்த்தமுடியுமே தவிர, அப்படி செய்வது தவறு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. என்னுடைய கவலை என்னவென்றால், இத்தனை கலாட்டாவிற்கும் ஆடம்பரத்திற்கும் நடுவில் அந்த நாட்டியத்தின் கலையுணர்வு (artistic value) தொலைந்து போய்விடுகிறது. நாட்டியம் ஆடும் பெண்ணின் முக பாவத்தையும், அவள் பாதங்களின் லாவகத்தையும் கவனிக்காமல், நிகழ்ச்சிக்கு யார் வந்திருக்கிறார்கள், யார் வரவில்லை, ஏன் வரவில்லை, 5 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சித்தி பெண், சென்ற வருடம் மாமா இறந்தபோது நேரில் சென்று விசாரிக்க முடியாத துக்கத்தை அத்தையிடம் அன்று விசாரிக்கும் உறவினர்கள். ஒரு நண்பர் சொன்னார், " நான் என் பெண்ணிடம் சொல்லிவிட்டேன், இந்த வருடம் அரங்கேற்றம் வேண்டுமா, கார் வேண்டுமா, graduation party வேண்டுமா என்று நீயே முடிவுசெய்துகொள் என்று" அப்படியென்று. - இப்படியாக தனது வரலாற்று புகழ் மிக்க பாரம்பரியத்தை இழந்து இன்று பரிதாபமான நிலையில் அரங்கேற்றங்கள் இருக்கின்றன.

அடுத்தப்பதிவில் இன்னும் தொடரும்...

Wednesday, August 03, 2005

அரங்கேற்ற அலம்பல் - 1

சென்ற மாதம் தான் என் அக்கா மகள்களின்(இரட்டையர்கள்) பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து முடிந்தது. அக்காவுக்கு உதவியாக இருப்போமே என்று நான் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு அக்கா வீட்டில் போய் இறங்கிவிட்டேன். நான் அங்கே சென்ற சில நிமிடங்களிலேயே என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர், "உங்க அக்கா எல்லா வேலைகளையும் அவளே தான் செய்வேன்னு எல்லாத்தையும் அவ தலை மேல போட்டுக்கிட்டா. யார் மேலயும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. யாருக்கும் எந்த வேலையும் கொடுக்க மாட்டேங்கறா. நீதான் அவகிட்ட பேசி சில வேலைகளை பொறுப்பெடுத்துக்கனும்" என்று கவலையோடு கேட்டுக்கொண்டார். எனக்கு முக்கியத்துவம் கிடைத்த மகிழ்ச்சியிலும், இங்கே வாசிங்டனில் பல விழாக்களில் கிடைத்த அனுபவமும் கொடுத்த மமதையில் நான் அவரிடம், "கவலைப்படாதீங்க, மேடை அலங்காரத்தை என் பொறுப்பில் விட்டுடுங்க....கலைக்கிபுடறேன்!" என்றேன். அன்றிரவே பேனா பேப்பர் சகிதம் அக்காவுடன் உட்கார்ந்து மேடை அலங்கார ஐடியாக்களை அள்ளி விட்டேன். ஒவ்வொரு ஐடியாவையும் பொறுமையாக கேட்ட அக்கா, ஒவ்வொன்றையும் அது சரியா வராது...இது சரியா வராது என்று சொல்லிக் கொண்டு வர, என்னுடைய உற்சாகம் காற்று இறங்கிய பலூன் போல் ஆனது. மேடை அலங்காரத்தை மறுபடியும் அக்காவிடமே விட்டுவிட்டு, வெளியே கடைகளுக்குப் போய் வாங்க வேண்டிய பொருட்களையாவது வாங்கலாம், அதில் ஒன்றும் குழப்பம் இருக்காது என்று நினைத்தேன். அக்காவிடன் ஷாப்பிங் லிஸ்ட்டை நான் கேட்க, அரை மனதுடன் என்னிடம் கொடுத்தாள். பெரும்பாலான பொருட்கள் Walmart இல் கிடைக்கும் என்பதால் முதலில் அங்கே சென்றேன். லிஸ்ட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுக்கும் போதும், ஒவ்வொரு சந்தேகம் என் மனதில் உதித்தது. இந்த அளவு சரியா? இந்த நிறம் சரியா? இவ்வளவு விலை போட்டிருக்கே? அக்காவுக்கு இரண்டு முறை போன் செய்து என் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டேன். மூன்றாவது முறை போன் போட்டபோது, "இதுக்குதான் நானே எல்லாத்தையும் வாங்கிக்கறேன்னு சொன்னேன், கேட்டியா? இப்ப பார் நூறு தடவை போன் பன்னி என் வேலையை கெடுத்துகிட்டு இருக்க! நீ ஷாப்பிங் பன்னினது போதும், முதல்ல கிளம்பி வா. நான் அப்பறமா போய் வாங்கிக்கறேன்." என்று சத்தம் போட்டாள்! தொங்கிய முகத்துடன் வீட்டுக்கு வந்த என்னிடமிருந்து ஷாப்பிங் லிஸ்ட்டை அக்கா பிடுங்கி வைத்துக்கொண்டாள். அடுத்து என்ன பொறுப்பை எடுத்துகொள்வது என்று யோசித்தேன். ஒரு வாரத்துக்கு முன்பே பக்கவாத்திய இசைக்கலைஞர்கள் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். அவர்களை கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அன்று மாலை ஒத்திகை முடிந்து கலைப்புடன் வீட்டுக்கு வந்த இசைக்கலைஞர்களை அமரச்சொல்லிவிட்டு, சூடாக ஏலக்காய் டீ போட்டுக் கொண்டுபோய் அவர்களிடம் நீட்ட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள். அதில் ஒருவர் "உங்களுக்குத் தெரியாதா? நாங்க டீ குடிக்கமாட்டோம்" என்றார். மற்றொருவர் "எனக்கு சக்கரைப் போடாமல் காபி வேனும்" என்றார். மற்றொருவர் "எனக்கு ஏதாவது ஜூஸ் கொடுங்கோ. ஐஸ் வேண்டாம்"...மற்றொருவர் "நேத்து உங்க சிஸ்டர் அருமையா பாயாஸம் பன்னியிருந்தா. அது ஒரு கப் கொடுங்களேன்"....எனக்குத் தலை சுற்றியது. ஆபத் பாந்தவர் போல் அங்கே வந்த என் அக்கா, "தள்ளுடி" என்று என்னை ஒதுக்கிவிட்டு, சர சரவென அவர்கள் கேட்டதைத் தயாரித்துக் கொடுத்தாள். அரங்கேற்ற நாள் வரை இதே போல் தான் - நானோ, மற்றவர்களோ எந்த வேலையையும் அக்காவின் தலையீடு இல்லாமல் செய்து முடிக்க முடியாமல் செயலிழந்து நிற்பதும், பின் அக்கா தலையிலேயே அந்த வேலை மீண்டும் விழுவதுமாக இருந்தது.

அரங்கேற்ற நாளும் வந்தது. நான் அமெரிக்கா வந்தபோது அக்காவின் மகள்களுக்கு 8 வயது. அப்போதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் ஊரில் நடக்கும் விழாக்களில் அவர்களுடைய பரதநாட்டிய நிகழ்ச்சி இருக்கிறதென்று சொல்லி அக்கா ஆசையாக கூட்டிக்கொண்டு போவாள். அக்கா மகள்கள் இருவரும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒரே ஒரு நிமிடம் வந்து நடராஜர் சிலைக்கு பூ போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த ஒரு நிமிடத்திற்குள் அக்கா பன்னும் அலம்பல் இருக்கே! அவள் முகத்தில் பெருமிதம் வழியும். போட்டோ எடுக்கவும் வீடியோ எடுக்கவும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பாள். பிறகு சில வருடங்கள் கழித்து அந்த ஒரு நிமிடம் ஐந்து நிமிடங்களாகி ஒரு சிறு பகுதிக்கு மட்டும் நடனமாட வருவார்கள். அப்போதெல்லாம், அக்கா பெண்கள் அரங்கேற்றம் வரை வருவார்கள் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அவர்கள் பல வார இறுதிகளைத் தொலைத்து, பொறுமை இழக்காமல் 10 வருடங்களாக சிரமப்பட்டு பரதநாட்டியம் கற்றுக்கொண்டதின் பலனை அரங்கேற்றதின் போது பார்க்கமுடிந்தது. ரொம்ப அழகாக ஆடினார்கள். முதல் நாட்டியத்தின் போதே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அக்காவின் முகத்தைப் பார்த்தேன். 8 வயதில் தன் மகள்களின் அந்த ஒரு நிமிட மேடைத் தோற்றத்தின் போது இருந்த அதே பெருமிதம் அன்றும் அவள் முகத்தில்.

ஊருக்குக் கிளம்பும் நாளன்று மீண்டும் என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர், "உங்கக்கா இந்த முறை நம்ம எல்லாரையும் டம்மி பன்னிட்டா. கவலைப்படாதே, அடுத்த வருஷம் பசங்களோட graduation party இருக்கு. அதுல அவளை டம்மி பன்னிட்டு நம்ம எல்லா ஏற்பாட்டையும் செய்து ஜமாய்ச்சிடலாம்" என்றார். நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். அக்கா இல்லாமல் அந்த வீட்டில் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது என்று நான் தான் பார்த்துவிட்டேனே.

அமெரிக்காவில் நடக்கும் அரங்கேற்றங்கள் பற்றி எனக்கு நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. அடுத்தப் பதிவில் அவற்றை எழுதுகிறேன்.

Wednesday, July 13, 2005

திருவாசகம் கற்றுகொடுத்த இளையராஜாவுக்கு நன்றி!

ஒரு நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு திருவாசகத்தை மீண்டும் கேட்டேன்...symphony இசை வடிவத்தில்!

இதற்கு முன் பள்ளியில் தமிழாசிரியை திருவாசகப் பாடல்களை பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு 'திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில் சிவாஜி மாணிக்கவாசகராக நடித்து, திருவாசகத்தை உருக உருக பாடியதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய திருவாசக அறிவு இவ்வளவுதான்! கடந்த இரண்டு வருடங்களாக இளையராஜாவின் symphony முயற்சிப் பற்றி நிறைய காதில் விழுந்துகொண்டிருந்தது. சென்ற வார இறுதியில் எங்க ஊரில் நடந்த திருக்குறள் மாநாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த திருவாசகம் இசைத்தட்டை வாங்கி வந்து கேட்டுத்தான் பார்க்கலாமே என்று அதை ஓடவிட்டேன்.

வழக்கமான பானியில் பக்திப் பாடல்களை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு புதிய பயணமாக இருக்கும். முதல் முறை கேட்கும் போது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. திருவாசகத்தை முன்பே படித்திராததால் வார்த்தைகள் புரியவில்லை. பின்னனி இசையும் என்னவோ ரொம்ப ஓங்கி இருந்ததாகப் பட்டது. தபலா, வயலின், புல்லாங்குழல் இல்லாத பக்திப் பாடல்களை உள் வாங்கிக் கொள்ளச் சற்று சிரமமாக இருந்தது. இவ்வளவு முயற்சி எடுத்து பெருஞ்செலவில் பதிவாக்கப்பட்ட இசையாச்சே, இதில் கட்டாயம் ஏதாவது விசயம் இருக்கவேண்டும். எனக்குப் புரியவில்லை என்பதற்காக இப்படியே விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது. அதனால் மறுவேலையாக அந்த இசைத்தட்டில் இருந்த ஆறு திருவாசகப் பாடல்களையும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டு மீண்டும் இசைத்தட்டை ஓடவிட்டேன். இப்போது கொஞ்சம் பொருளும் விளங்கியது, இசையையும் சற்று பாராட்ட முடிந்தது. நல்ல வேளை இளையராஜா அவரே பாடியிருக்கிறார். அவருடைய தடித்த, கணீரென்ற குரல் திருவாசகத்திற்கு பொருத்தமாக இருந்தது. இரண்டு நாட்களாக என்னுடைய அலுவலகத்திலும் head phone வைத்துக்கொண்டு திருவாசகம் சிம்பனியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது.

என் மனதைத் தொட்டது இரண்டு பாடல்கள் மட்டுமே என்றாலும், 6 பாடல்களைப் பற்றியும் என் கருத்தை எழுதுகிறேன்.

1. பூவார் சென்னிமன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை
இந்தப் பாடல் மந்திரம் ஓதுவதைப் போலதான் இருந்தது. பின்னனி ஆர்கெஸ்ட்ராவும், கோரஸ¤ம் கூட அதே பானியில் தான் இருந்தது. இடை இடையே மேற்கத்திய இசை. அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை.

2. பொல்லா வினையேன்! நின் பெருஞ்சீர் புகழுமாறு ஒன்றறியேன்! (என் மனதைத் தொட்ட பாடல் - 1)
Symphony orchestra வின் பிரம்மாண்டம் இந்தப் பாடலில் தான் தெரிகிறது. மாணிக்கவாசகர் இந்தப் பாடலை எழுதும் போது எந்த மன நிலையில் இருந்தார் என்பதை இளையராஜா புரிந்துகொண்டவர் போல உருகி உருகி பாடியிருக்கிறார். லேசாகக் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. திருவாசகத்தில் இவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகளா? தெரியாமல் போய்விட்டதே. ஒரு கட்டத்தில் மாணிக்கவாசகர் தன்னை இந்தப் பிறவியிலிருந்து விடுவிக்குமாறு கடவுளைக் கெஞ்சுகிறார். ஒரு கட்டத்தில் தன் மீது கடவுள் காட்டும் கருணைக்கு நன்றி கூறுகிறார். ஒரே பாடலில் பல மன நிலைகள் அருமையாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இன்னொரு சிறப்பு ஒவ்வொரு முக்கியமான வரியையும் இளையராஜா பாடிய பிறகு, அதையே ஆங்கிலத்தில் Roy Harcourt பாடி ஒரு broadway musical effect ஐத் தருகிறார்! "எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்ற வரிகளுக்கு "so many forms I must wear, so many lives I must bear" என்று Roy உச்சஸ்தாயில் பாடுவது அருமை!

இந்தப் பாடலின் நடுவில் சிவபுராணத்தையும் புகுத்தியிருக்கிறார் இளையராஜா.
"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" என்கிற வரிகளைக் கேட்க்கும் போது கொஞ்சம் பரவசமாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடல் ஒரு Roller Coaster of emotions!

3 ஆவது பாடல் - ஏதோ ஒரு சினிமாப் பாடல் மெட்டு இது. எந்தப் பாடல் என்று எவ்வளவோ முயன்றும் நினைவுக்கு வரவில்லை. ஒன்றும் பிரமாதமாக இல்லை.

4 ஆவது பாடல் - ஒன்றும் விசேஷமாக இல்லை

5 ஆவது பாடல் - கும்மி பாட்டு மெட்டு போல் இருந்தது. பொருத்தமாகவே இல்லை.

6. புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்! (என் மனதைத் தொட்ட பாடல் - 2)
இந்தப் பாடல் எனக்குப் பிடித்து போய்விட்டதற்கு friendly ஆன மெட்டு ஒரு காரணம். இளையராஜாவின் 'தானனா தானா நானா"...super!!!ஆனால் பாடல் தொடங்குவதற்கு முன் "இதுதான் symphony ஆர்கெஸ்ட்ராவா? ரொம்ப நல்லா இருக்கே" என்று அவர் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். அதே சமயம் பாடல்களை எப்படி தேர்ந்தெடுத்து மெட்டுக்குள் பொருத்தினார் என்பது அவருடைய அந்த சில வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இந்தப் பாடலின் வரிகளும் கருத்தும் மிகவும் அழகு. எனக்கு அரைகுறையாகப் புரிந்ததை சொல்கிறேன்.

புற்றில் வாழ்கிற பாம்பைக் கண்டு அஞ்சமாட்டேன், பொய் பேசுபவர்களைக் கண்டு அஞ்சமாட்டேன். உன்னைத் தவிர மற்றுமொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டு அஞ்சுகிறேன்!

வன்புலால் வேலும் அஞ்சேன்(புரியலை..) வளையல் அணிந்தவர்களின் கடைக்கண் பார்வைக்கு அஞ்சமாட்டேன். உன் இனிய அருளைப் பருகாத அன்பில்லாதவர்களைக் கண்டு அஞ்சுகிறேன்!

நோய் வந்தாலும் அஞ்சமாட்டேன், பிறப்பு இறப்புக்கும் அஞ்சமாட்டேன். உன் அடி பணிந்து திருநீற்றை அணியாதவர்களைக்கண்டு அஞ்சுகிறேன்! இப்படி போகிறது பாட்டு.

இந்த இசைப் பயணத்தில் எனக்குப் புலப்பட்ட சில தாழ்மையான கருத்துக்கள்;

1. சினிமாப் பாடல்களின் சாயலோ அல்லது கிறிஸ்துவ ஸ்தோத்திரப் பாடல்களின் சாயலோ பெரும்பான்மையான பாடல்களில் தெரிகிறது. தவறில்லை. இருந்தாலும், மெட்டுக்களை இன்னும் கவனமாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

2. இந்தப் பாடல்களை இளையராஜா நம்ம ஊரிலேயே உள்ள ஒரு recording theater இல் பதிவு செய்திருக்கலாமோ? Symphony இசையப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால், அந்த வித்தியாசத்தை என்னால் பாராட்ட முடியவில்லை. நம்ம ஊரு orchestra ஏன் சரிவராது? ஆனால் இளையராஜா ஹங்கேரி சென்று திருவாசகத்திற்கு symphony இசையமைத்ததால் தான் திருவாசகத்தின் மேல் சர்வதேச அளவில் வெளிச்சம் விழுந்திருக்கிறது என்பது புரிகிறது.

3. இரண்டாவது பாடலில் ஆங்கிலத்திலும் பாடியது போல மற்ற பாடல்களிலும் செய்திருக்கலாம்.

இது ஒரு விமர்சனம் என்பதை விட, ஒரு புதுமையான அனுபவம் என்று சொல்லலாம். என்னைப் போல் எத்தனை ஞான சூனியங்கள் இந்த இசை முயற்சியைப் புரிந்துகொள்வதற்காக திருவாசகத்தைப் படித்திருப்பார்கள்! அந்த மட்டில் இளையராஜாவுக்கு இது பெரும் வெற்றியே. திருவாசகத்தை உலகெங்கும் பரப்பவேண்டும் என்கிற அவரது உயர்ந்த நோக்கத்திற்கு தலை வணங்குகின்றேன். உ.வே சுவாமிநாத ஐயர் 200 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயிருந்த தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றிற்கு புத்தக வடிவத்தைத் தந்தார். அது போலவே இன்று சீண்டப்படாமல் இருக்கும் திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களுக்கு இசை வடிவங்கள் கொடுத்து அவற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல நமக்கு இளையராஜாக்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள்.

Wednesday, June 08, 2005

பெண்ணும் Khaithan மின் விசிறியும்!

விளம்பரங்களில் பெண்கள் எப்படியெல்லாம் சுய நலமாகவும், தரம் தாழ்ந்தும் உயயோகிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி முன்பே ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். நேற்றிரவு சன் தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம் மீண்டும் என்னை உசுப்பிவிட்டது!

ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. திடீரென்று கோபமாக எழுந்து நிற்கிறார் பிள்ளையின் அப்பா. "இந்த வீட்டில் பெண் எடுக்க வேண்டாம். வாங்க போகலாம்" என்று கத்துகிறார். பெண்ணின் அம்மா பயந்து போய் "என் பெண்ணிடம் ஏதாவது குறை இருக்கா?" என்று கேட்கிறார். அதற்கு பிள்ளையின் அப்பா, "பெண்ணிடம் எந்த குறையும் இல்லை, ஆனால் பெண்ணோட அப்பாவிடம் தான் குறை. இந்த வீட்டில் Khaithan விசிறி இல்லை. Khaithan இல்லாத வீட்டில் நாங்கள் பெண் எடுக்க மாட்டொம்" என்கிறார்.

இது வெறும் விளம்பரம் தான் என்றோ மற்றுமொரு அசட்டுத்தனமான marketing strategy என்றோ சொல்லி என்னால் இதை ஒதுக்கிவிட முடியவில்லை. ஏனோ இந்த விளம்பரம் என் மனதை பாதித்தது. 'பெண் பார்த்தல்' என்பது எந்த பெண்ணுக்கும் வேடிக்கையான அனுபவம் அல்ல.திருமணம் என்கிற சடங்கு தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும் ஒரு நீண்ட களைப்பு மிக்க பயணம் அது. அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் சில பெண்களுக்கு முதல் ஒன்றிரண்டு பெண் பார்த்தல்களிலேயே திருமணம் அமைந்துவிடும். ஆனால் பல பெண்களுக்கு அது ஒரு நீண்ட, தவிப்பான, தேடலாகவே இருக்கிறது. பெண் பார்க்க வருபவனைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்வது, மானசீகமாக அவனைத் திருமணம் செய்து குடும்பம் நடுத்துவது வரை போய்விடுவது, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடம் இருந்து கடிதம் வரும் என்று தினம் ஏங்கித் தவிப்பது, நிராகரிப்புக் கடிதம் வந்தபின் அவனை நினைவுகளிலிருந்து அழித்து, அடுத்து வருபவனை நினைப்பது - அழிப்பது - நினைப்பது - அழிப்பது - நினைப்பது என்கிற process இன்றும் பல பெண்களின் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நான் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் அக்காவை முதன் முதலாக பெண் பார்க்க வந்தார்கள். வீடே அல்லோகலப்பட்டது. பட்டுப் புடவையொடும் நகையோடும்போட்டி போட்டுக்கொண்டு சந்தோஷமும், வெட்கமும் என் அக்காவை அலங்கரித்திருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. பெண் பார்க்கும் படலம் முடிந்து ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள். ஒரு வாரம் சென்று அவர்களிடமிருந்து வந்த கடிதத்தில், நாசூக்காக ஜாதகத்தில் ஏதோ பொருந்தவில்லை அதனால் இந்த வரன் வேண்டாம் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் உண்மையான காரணம், அக்காவின் முகத்தில் அப்போது அதிகப்படியாக இருந்த பருக்கள் தான் என்று அந்த பெண் பார்த்தலை ஏற்பாடு செய்த தூரத்து உறவுக்காரர் சொன்னார். இதைக் கேட்டு என் அக்கா மனம் உடைந்து போனாள். அவளுடைய தன்னம்பிக்கை உருக்குலைந்து போனது. அதற்குப் பிறகு எவனும் தன்னை பெண் பார்க்க வரக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு 3 வருடங்கள் கழித்து ஒருவர் மறுபடியும் அக்காவைப் பெண் பார்க்க வந்தார். இன்று என்னுடைய மாமா அவர்.

அக்காவின் திருமணத்திற்கு பிறகு திருமண மார்கெட்டுக்கு வந்தார் என் அண்ணன். அவருக்கும் அக்காவின் முதல் பெண் பார்த்தல் மனதை பாதித்திருக்கவேண்டும். "எனக்கு வரிசையாக பெண்களைப் பார்த்துவிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி அவர்களை நோகடிப்பதெல்லாம் பிடிக்கலை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன். அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பன்னிப்பேன்." என்று அண்ணன் என் பெற்றோரிடம் சொன்னார். அதே போலவே அவர் முதன் முதலாகப் பார்த்த பெண் தான் என்னுடைய அண்ணி.

நான் கல்லூரி படித்த நாட்களில் என்னையும் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். அப்படி ஒரு முறை என்னைப் பார்க்க வந்த பையனோட அப்பாவும் அக்காவும் கேட்ட சில கேள்விகள் இப்போது நினைவுக்கு வருகிறது..."படித்து முடித்து விட்டு என்ன செய்யப்பொகிறாய்?", "உன்னுடைய ambition என்ன?", "உன்னுடைய hobbies என்ன?". என்னுடைய அப்பா கூட இந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டதில்லை, இவங்க யார் கேட்கறது என்று எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் தான், ஆனால் ஒரு 10 பேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, எதிரே ஒரு பெண்ணை உட்காரவைத்துக் கேள்வி கேட்பது சரியா? அந்த மாதிரி சூழ் நிலையில் அந்தப் பெண் பயந்து, தயங்கி, தடுமாறி சொல்லும் பதில்களில் அவளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தார்களென்றால் அது அவர்களுடைய முட்டாள்தனம். பெண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்பதில் ஒரு Pshycology இருப்பதாக சமீபத்தில் எங்கோ படித்தேன். அதாவது, நன்றாகப் பாடத்தெரிந்த பெண் நல்ல மனப்பக்குவம் உள்ளவளாக இருப்பாளாம்! அது சரி, மாப்பிள்ளைக்கு மனப்பக்குவம் இருக்கிறதா என்று பெண் வீட்டார் எப்படி தெரிந்துகொள்வது?

பெண் பார்த்தலைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது பெண்ணின் வாழ்க்கையோட்டத்தைக் குலைத்து, அவள் மனதை பாதிக்கும் ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் எளிமையாக "Just like that" என்பது போல் casual ஆக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் பெண் பார்த்தல் அதி நவீனமாகி விட்டது என்று தெரிகிறது. வீட்டிற்கு வந்து சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் சாப்பிடாமல் வெளியே restaurant களில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சந்தித்துக்கொள்கிறார்கள். சிலர் கோவில்களில் சந்திக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், மாப்பிள்ளை மதிய உணவு இடைவேளையில் பெண் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குச் சென்று அவளைப் பார்க்கிறான். வீட்டில் வந்து பெண் பார்ப்பதும் எளிமையாக ஒருநண்பர் வீட்டுக்குப் போவதுபோல் இருக்கவேண்டும். இப்படி யாதார்த்தமான சந்திப்புகள் பெண் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன். பெண்களின் மீதும் தவறு இருக்கிறது. வாழ்நாள் முழுவது கூடவே இருக்கப்போகிற ஒருவனைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்ன? ஒரு நீண்ட தேடலுக்கும், அதில் சில நிராகரிப்புகளுக்கும் தங்களைப் பெண்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சொஜ்ஜி-பஜ்ஜி முறை பெண் பார்த்தலை பெண்கள் தான் எதிர்க்க வேண்டும்.

இப்படி பல உணர்ச்சிகளும் செண்டிமெண்டுகளும் இந்தப் 'பெண் பார்த்தல்' என்பதில் இருக்கும்போது, அந்த Khaithan மின் விசிறி விளம்பரத்தில் "Khaithan இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டோம்" என்று அந்தத் தந்தை சொன்னபோது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!!!

Tuesday, May 17, 2005

வீணாகப் போன ஒரு மாலைப் பொழுது

ரொம்ப நாட்களுக்கு அப்பறம் எனக்கே எனக்குன்னு ஒரு சனிக்கிழமை மாலை நேரம் கிடைத்தது. போன சனிக்கிழமை மாலை என் கணவர் அவருடைய நண்பர் வீட்டில் நடந்த ஒரு முக்கியமான சந்திப்புக்குச் சென்றுவிட்டார். இரவு உணவும் அங்கேயே முடித்துவிடுவதாக சொல்லியிருந்தார். எனக்கு சமையல் வேலையும் இல்லை. வெளியே ஷாப்பிங் போகலாம் என்றுதான் முதலில்நினைத்தேன். ஆனால் மழை பெய்துகொண்டிருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு சன் டிவியைப் போட்டேன். அப்போதுதான் ஒரு தமிழ் படம் தொடங்கியிருந்தது. மாலை நேரம்...வெளியே மழை...சூடான தேனீர்...பார்க்க ஒரு படம்...இதெல்லாம் எனக்கு மிகப் பிடித்த காம்பினேஷன்! போர்வை, தலையனை எல்லாத்தையும் முன்னறைக்குக் கொண்டுவந்து சோபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு படம் பார்க்கத் தொடங்கினேன். என்னுடைய சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை!


அந்தப் படம் 'ராஜ்ஜியம்' என்கிற விஜயகாந்த் படம். எனக்கு விஜயகாந்த் படங்கள் அறவே பிடிக்காது. அதுவும் இந்தப் படம் ரொம்பவே டார்ச்சராக இருந்தது. விஜயகாந்துக்கு கொடுக்கப்படும் build-up ரொம்பவே ஜாஸ்தி. கண்ணியாகுமரியில் தொடங்கி சென்னை வரை முக்கிய நகரங்களில் விஜயகாந்த் நடந்து வர, அவருக்குப் பின் மிகப் பெரிய மக்கள் திரள், அவர் வரும் பாதையில் பூக்கள், தோள்களில் ஆளுயர மாலை. இரண்டு பக்கமும் பெண்கள் நடனமாடுகிறார்கள். "தமிழன் தமிழன் இவன் தான் தமிழன்...தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்" என்று பாடல் வேறு. விஜயகாந்தின் பின் வரும் தொண்டர்கள் கூட்டம் குத்தியிருக்கும் சிவப்பு-மஞ்சள்-கருப்பு வண்ணக் கொடி அவருடைய கட்சிக் கொடி! ஆரம்பக் காட்சிகளில் இப்படியென்றால், பின் வரும் காட்சிகளில், போலீஸாரால் பிடிக்கமுடியாத நான்கு தீவிரவாதிகளை அவர் ஒரு ஆளாக பிடிக்கிறார்! தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் சாதாரணம் தான் என்றாலும், தாயாரிப்பாளரின் காசில் மக்களின் நாடித் துடிப்பை தெரிந்து கொள்ள விஜயகாந்த் முயன்றிருப்பதாகத் தோன்றியது. சென்னைக்கு வந்திறங்கும் ஒரு இளம்பெண்ணிடம், "உன் கற்புக்கு எந்தவித களங்கமும் வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்கிறார்! "கற்பு அப்படின்னா என்ன?" என்று கேட்குக் அந்தப் பெண்ணிடம், "கற்பு என்பது கண்ணகி சம்பந்தப்பட்ட விசயம், கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயம்" என்கிறார்! இதெல்லாம் மிகவும் பழமைவாய்ந்த பிற்போக்கான வசனங்கள். இப்போது 'கற்பு' என்கிற சொல்லே வழக்கத்தில் அவ்வளவாக இல்லை! மக்கள் செல்வாக்கு வேண்டும், கட்சி ஆரம்பித்து அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் சுனாமி வந்தபோது எங்கே போனார்? நன்கொடை கொடுத்தால் மட்டும் போதுமா? களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்து உதவி செய்திருக்கவேண்டாமா? அப்படி உதவி செய்த விவேக் ஓபராயைப் பற்றி "ஒரு கிராமத்தை தத்தெடுத்துக்கொள்வதில் என்ன பிரயோசனம்?" என்று விஜயகாந்த் விமர்சித்ததாகக் கேள்விப்பட்டேன். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் - இவர்களுக்கு மக்களிடையே இருந்த reach விஜயகாந்துக்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதற்குமேல் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை. டிவியை அனைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சில மணி நேரங்கள் தொலைபேசி, வீட்டு வேலை என்று நேரத்தைத் தள்ளிவிட்டு, இரவு 10 மணிக்கு மீண்டும் சன் டிவி போட்டேன். 'கலைஞரின் கண்ணம்மா' தொடங்கியது. அட! இந்தப் படமாவது வித்தியாசமா இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் போர்வை, தலையனை செட்டப்புடன் படம் பார்க்க அமர்ந்த எனக்கு, மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது!


கலைஞர் வசனம் எழுதிய படம் என்று சொல்லும் அளவுக்கு 'கண்ணம்மா' ஒரு சராசரி தமிழ்ப் படத்தைவிட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை. மாறாக, இயக்குனர் இப்பொழுதுதான் படம் எடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு அமெச்சூர் தனமான காட்சிகள். மீணா வாயிலிருந்து கலைஞரின் வசனங்கள்! பொறுத்தமாகவே இல்லை. படம் எடுக்கப்பட்ட கால கட்டத்தைப் பற்றி இயக்குனர் குழம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு காட்சியில் கலைஞர் வாஜ்பாயிடம் பணம் கொடுக்கிறார். மற்றொரு காட்சியில் மன்மோகன் சிங்கின் புகைப்படம் சுவற்றில் தெரிகிறது! கார்கில் போருக்காக கலஞர் உதவித்தொகை கொடுக்கும் காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது அலுப்பாக இருந்தது. கவர்ச்சி நடனம், டூயட் பாடல்கள் என்ற சராசரி மசாலா அயிட்டங்களுக்கு இந்தப் படத்திலும் பஞ்சம் இல்லை. கலைஞர் 1950 களில் பராசக்தி போன்ற படங்களுக்கு எழுதிய சூடு பறக்கும் வசனங்கள் எந்த காலத்திலும் அழியாதவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த காலத்து மக்களின் நாடித் துடிப்பிற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வசனங்களை எழுதி அவரது நேரத்தை வீணாக செலவழித்திருக்கிறார். இந்தப் படத்தையும் சிறிது நேரத்திற்கு மேல் பார்க்கமுடியாமல் நிறுத்திவிட்டேன்.

இப்படியாகத்தானே என்னுடைய சனிக்கிழமை மாலை சொதப்பலாகக் கழிந்தது!!! இரவு 12 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் என் கணவர். தன் நண்பர் வீட்டுச் சந்திப்பு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் கழிந்தது என்று சொன்னவர், "சரி, உனக்கு எப்படி பொழுது போனது?" என்று கேட்டார். "அந்தச் சோகத்தை கேட்காதீங்க. ரெண்டு நாள் கழித்து வலைப்பதிவில் போடறேன் படிச்சிக்கோங்க" என்று சொல்லிவிட்டேன்!

Friday, May 13, 2005

படிக்க, ரசிக்க சில புதுக் கவிதைகள்

இன்று என் தோழி இந்தப் புதுக்கவிதைகளை மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாள். அவளுக்கு வேறு யாரோ அனுப்பியிருந்தார்களாம். இவற்றை யார் எழுதியது என்று சரியாகத் தெரியவில்லை. சில கவிதைகள் பார்த்திபனின் கிறுக்கல்கள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்றாள். யார் எழுதினார்களோ, எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நீங்களும் படித்து ரசியுங்கள். எழுதியவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. தாடி, மீசையிடம் சொல்கிறது.
இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்...
ஆனால் நீ வீரத்திற்கு, நான் மட்டும் சோகத்திற்கா?

2. லேடீஸ் பஸ்

ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!

3. அரசியல்

பிறர் சொத்தை சூரையாடினான்...திருடா என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரா என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!

4. லஞ்சம்

வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!

5. இந்தியா ஒளிர்கிறது

ஏற்றுமதி ரக வாகனத்தில் ஏறி
ஆயிரத்திற்குப் பெற்ற இங்கிலாந்து உடையணிந்து
எளிதாய் கைக்குள் அடங்கும் கொரிய தொலைபேசியில்
ஏளனமாய் நகைத்து நண்பனிடம் கூறினேன்
ஏழ்மை ஒழியும் வரை இந்தியா ஒளிராது என்று!

6. சந்தன மரம் என்றார்கள் பல்லாண்டுகளாக...
பின்னர் சங்கர மடம் என்றார்கள்...
இப்போது சங்கட மனதுடன் நான்...
சந்ததம் இப்படியொரு சங்கதி கேட்டு!

7. ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது...
மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!

Thursday, May 12, 2005

ஒரு பெண், ஒரு கண்காட்சி!

நேற்று முன் தினம் காலை அலுவலகத்தில் வெலையில் ஆழ்ந்திருந்த போது, என்னுடைய மேலாளரிடம் இருந்து "ஒரு சுவையான செய்தியை சொல்லப்போகிறேன். என் அறைக்கு வாருங்கள்" என்று என் அணியினர் அனைவருக்கும் மின் அஞ்சல் வந்தது. அலுப்புடனும், எரிச்சலுடனும் நாங்கள் மேலாளரைப் பார்க்கச் சென்றோம். ஏன் இந்த அலுப்பும் எரிச்சலும் என்கிறீர்களா? என்னுடைய இந்த முந்தையப் பதிவைப் படித்தால் ஏனென்று புரியும். முகமெல்லாம் சிரிப்புடன் எங்களை வரவேற்ற மேலாளர், "சொன்னால் நம்ப மாட்டீர்கள், Corcoran ம்யூசியம் அருகில் ஒரு பெண் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறாள்" என்றார். வாசிங்டன் டிசி நகரம் முழுக்க நிறைய ம்யூசியம்கள் உள்ளன. Corcoran ம்யூசியம் என்பது அமெரிக்க கலை மற்றும் வரலாறு சம்பந்தப்பட்டது. எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கிறது. அங்கு ஒரு பெண் அரை நிர்வாணமாக நிற்கிறாள் என்று கேட்டவுடன் எங்களுக்கு வியப்பும், குழப்பமும் ஏற்பட்டது. மேலாளர் மேலும் கிண்டலுடன், "மதிய உணவு இடைவேளையில் போய் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று சொன்னார். 'கிழவனுக்கு இந்த லொள்ளு தேவையா' என்று நினைத்துக்கொண்டு என் இடத்திற்கு வந்த எனக்கு சற்று மண்டை குடைச்சலாக இருந்தது. நேற்று முன் தினம் வாசிங்டன் டிசியில் 80 டிகிரி வெப்ப நிலை. இந்த உச்சி வெயிலில் ஒரு பெண் எதற்காக அரை நிர்வாணமாக ஒரு பொது இடத்தில் நிற்கவேண்டும்? அமெரிக்கர்கள் மன அழுத்தம் அதிகமானால் சில சமையம் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வார்கள். ஒரு வேளை இது அப்படிப்பட்ட செயலாக இருக்ககுமோ? என்றெல்லாம் நினைத்துக்கொண்டு மீண்டும் வேலையில் மூழ்கினேன்.

மதிய உணவு இடைவேளையில், என் அலுவலக நண்பிகள், "அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நிற்கிறாளாம், என்ன தான் நடக்கிறதென்று பார்த்துவிட்டு வரலாம் வா" என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். ஒரு நிமிட நடைக்குப் பிறகு Corcoran ம்யூசியம் பார்வையில் தென்பட்டது. ம்யூசியத்தின் பக்கவாட்டில் உள்ள ஒரு மேடைக்கு முன் சிறு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. சற்று தூரத்தில் இருந்துபார்க்கும் போது மேடையின் மேல் ஒரு சிற்பம் இருப்பது தெரிந்தது. சற்று நெருங்குகையில், அந்த சிற்பம் அசைந்தது! அது சிற்பம் அல்ல! ஒரு பெண்! மேலாளர் சொன்ன அந்த அரை நிர்வாணப் பெண்!.



மெல்லிய தேகம், நல்ல உயரம், வெயிலில் தகதகத்த தங்க நிற சுருட்டைக் கூந்தல், மார்பைச் சுற்றி கட்டிய வெள்ளை நிற கச்சை, மெல்லிய வெள்ளை நிற காலுறை (Pant). ஒரு மாடல் போல் இருந்தாள். அவளுக்கருகில் சில ஜுஸ் பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. அவள் அவ்வப்போது ஒரு தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் குடித்துவிட்டு, மீதி உள்ள தண்ணீரைத் தன் முகத்தின் மீது ஊற்றிக்கொண்டிருந்தாள். எதற்காக இவள் இப்படி உட்கார்ந்திருக்கிறாள் என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அவள் அமர்ந்திருந்த மேடையின் கீழ் பகுதியில் ஒரு புத்தகம் தெரிந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக அந்தப் புத்தகத்தை போய் படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் என்னுடைய முறைக்காக காத்திருந்து அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சென்றேன். அது ஒரு புகைப்பட ஆல்பம் மற்றும் டையரி. அந்தப் பெண்ணினுடையது. அதைப் படிக்கப் படிக்க என் குழப்பங்களுக்கு விடைகள் கிடைத்தது.



இது ஒரு வித்தியாசமான கண்காட்சி! அந்தப் பெண்ணின் பெயர் மெல்லிசா. அவள் Corcoran கலைக் கல்லூரி மாணவி. இவளுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தன்னிடம் இருப்பவற்றைப் பாராட்டுவதற்கு, எதையெல்லாம் இழக்க வேண்டும் ? என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள். அதாவது "How much would you have to loose, to appreciate what you have?" என்பதே இவளது இந்த முயற்சியின் கரு. இந்த முயற்சியை 'Performance Exhibition' என்கிறார்கள். இந்தக் கண்காட்சி ஜனவரி 1, 2005 இல் இருந்தே தொடங்கிவிட்டது. ஜனவரி மாதத்தில் இருந்து மெல்லிசா தான் உபயோகிக்கும் பொருட்கள், பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ளத் தொடங்கினாள். ஜனவரியில் மருந்துகள், காபி, தொலைக்காட்சி, சோடா இவற்றை விட்டொழித்தாள். பின் வந்த மாதங்களில் ஒப்பனைப் பொருட்கள்,சாக்லேட்டுகள், சினிமா, பத்திரிக்கைகள், இசை, செல் போன், மின் அஞ்சல், கார் ஓட்டுவது, உடல் உறவு, பேச்சு, புத்தகங்கள், குடுமபத்தினர்,நண்பர்கள், தயாரித்த உணவுகள் போன்றவற்றை துறந்தாள். தான் தங்கியிருந்த வீட்டைக் கூட விட்டுவிட்டு வெளியில் வந்து ஒரு டெண்ட்டில்(tent) தங்கியிருந்தாள்.

'Stripped' என்ற அர்த்தமுள்ள ஒரு தலைப்பைக்கொண்ட இந்தக் கண்காட்சியின் இறுதிக் கட்டமாக, மெல்லிசா Corcoran ம்யூசியத்தின் முன் 36 மணி நேரம் வெட்ட வெளியில் தண்ணீரும், பழரசமும் மட்டும் உண்டு காட்சிப் பொருளாக வீற்றிருந்தாள். இதைப் படித்தவுடன் மெல்லிசாவின் மன வலிமையையும், தன்னுடைய ஐந்து மாத வாழ்க்கையையே கண்காட்சியாக மக்களுக்குப் படைத்த அவளது வித்தியாசமான சிந்தனையும் என்னை வியக்க வைத்தது. இது ஒரு சாதனை என்று தோன்றினாலும், இதனால் என்ன பயன்? இந்த ஐந்து மாதங்களும் எல்லாவற்றையும் துறந்து மெல்லிசா வாழ்ந்தது போல் இன்று யாராவது வாழ்வது
நடைமுறைக்கு ஒத்துவருமா? நம் நாட்டில் புராண காலத்து துறவிகள் தான் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். புராண காலத்து துறவிகள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன், ஏனென்றால் இன்றைய துறவிகள் எதையும் விட்டுவைக்காமல் அனுபவித்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்திலேயே வாழ்கிறார்கள். இந்தக் கண்காட்சியின் முக்கிய செய்தி என்னவோ உண்மைதான். நம்மிடம் இருப்பவற்றைப் பாராட்ட அவற்றையெல்லாம் இழந்து பார்த்தால் தான் முடியும்!!!

விசயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் 'அரை நிர்வாணம்' என்று சொல்லி கொச்சைப் படுத்திய என் மேலாளரை நினைத்து வருத்தப்பட்டேன்.
மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பி நடக்கும் போதே நினைத்துக்கொண்டேன் இதை வலைப்பதிவில் போடவேண்டும் என்று. நான் பார்த்ததிலேயே ஒரு வித்தியாசமான கண்காட்சி இது!

Wednesday, May 04, 2005

சினிமா அம்மாக்கள்



மே 8 அன்று அன்னையர் தினம். அன்று அன்னையரைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதவேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதலுக்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எழுதலாமென்று தோன்றியது. எனவே இந்தப் பதிவு. மே 8 வரை காத்திருக்க முடியவில்லை :-)

அம்மாக்கள் கடந்த 70 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்து வருகிறார்கள். தாய்ச் சொல்லையும் அவளுடைய சபதங்களையும் நிறைவேற்றுவதே மகனான ஹீரோவின் ஒரே வேலையாக இருந்து வந்தது. மகன் தன் தாயைக் கொலை செய்தவர்களையோ, அவள் வாழ்க்கையை நாசம் செய்தவர்களையோ தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவதே பெரும்பாலான தமிழ்ச் சினிமாவின் கதையோட்டமாக இருந்து வந்தது. சற்று வேறுபட்டு அந்த மகன் தன் அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குவதாக இருந்தால் கூட அது அவனுடைய விதவைத் தாயின் வேண்டுகொளாகத் தான் இருக்கும். பெருமபாலான எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் அம்மாவை மையமாக கொண்டவை. படத்தின் பெயரிலேயே அம்மா செண்டிமெண்ட் தெரியும்(தாய் சொல்லை தட்டாதே, தாய்க்குப்பின் தாரம்). எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெரும்பாலான ரஜினி படங்களும் அப்படியே இருந்தன(தாய் வீடு, அன்னை ஓர் ஆலையம்). இந்த மாதிரி அம்மா பார்முலாக்கள் திரளாக தாய்க்குலங்களை கைக்குட்டையுடன் தியேட்டருக்கு கவர்ந்திழுத்தன.

அம்மாக்களை தியாகத்தின் சிகரங்களாக பிரதிபலித்த படங்களனைத்தும் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றன. கண்ணாம்பா, பண்டரிபாய், கே.ஆர். விஜயா, மனோரமா இவர்களெல்லாம் அம்மா கதாபாத்திரங்காளுக்காகவே பிறந்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர்களுக்குப் பிறகு சுஜாதா, ஸ்ரீ வித்யா, சுமித்ரா போன்றவர்கள் சற்று இளமையான அம்மா வேடங்களில் நடித்தார்கள். இப்பொழுது அம்பிகா,ராதிகா...இவர்கள் வரிசையில் 'மஜ்னு' என்ற படத்தில் ரத்தி அக்னிஹோத்ரியை அம்மா வேடத்தில் பார்த்தேன். ஜீரணித்துக்கொள்ளவேமுடியவில்லை. அதே போல் பாரதி ராஜாவின் 'ஈர நிலம்' படத்தில் சுஹாசினி அம்மாவாக! கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை.

அம்மாக்களில் ஒரு வித்தியாசமான அம்மாவை எந்த திரைப்படத்திலும் பார்க்கவே முடியாது. எப்பொழுதும் அவர்கள் தியாகத்தின், பாசத்தின்சின்னமாக, நேர்மையாக, கன்னியமாக இருப்பார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதெல்லாம் ஹீரோவின் அம்மாவுக்குத்தான் பொருந்தும். ஒரு படத்தில் பல அம்மாக்கள் இருந்தாலும், ஹீரோவின் அம்மாவுக்குத்தான் மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்! இன்னொரு கொடுமை என்னவென்றால், ஹீரோக்களுக்கு ஜோடியாக ஹீரோயின்களாக நடித்த நடிகைகளெல்லாம் சில வருடங்களில் அதே ஹீரோவுக்கு அம்மாவாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடிக்கிறார்கள்! அப்படியொரு மகிமை அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு!

பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரங்களுக்கான நெஞ்சை உருக்கும் காட்சிகளை அமைக்க போட்டிபோடுவார்கள். உதாரணமாக, இயக்குனர் P.வாசு, ஹீரோவின் அம்மாவை வில்லன்களின் கையில் கொடுத்து அவளை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவார். 'சின்னத் தம்பி' படத்தில்மனோரமாவை ஒரு தூணில் கட்டிவைத்து ஒரு பைத்தியக்காரனிடம் தாலியைக் கொடுத்து மனோரமாவுக்கு கட்டச்சொல்லுவார்கள். 'செந்தமிழ்ப்'பாட்டு படத்தில், சுஜாதாவின் கூந்தலை வில்லன் வெட்டிவிடுவார். கொஞ்சம் ஹைடெக் இயக்குனரான சங்கர் கூட இந்த அம்மா செண்டிமெண்ட்டை விட்டுவைக்கவில்லை. 'ஜென்டில்மேன்' படத்தில் மனோரமா தன் மகனுக்கு கல்லூரிப் படிப்பிற்காக பணம் கிடைப்பதற்காக, தன்னைத் தானே கெரோசின் ஊற்றி கொளுத்திக்கொள்வார்! இந்த அபத்தமான காட்சிகளெல்லாம் ஹீரோவுக்கு கோபம் வந்து பொங்கி எழுவதற்காக அமைக்கப்பட்டவை! இப்படி பலி ஆடுகள் போலத்தான் பல இயக்குனர்களால் அம்மாக்கள் கையாளப்பட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் பாலச்சந்தர் பெண்ணியம் என்கிற பெயரில் சில அபத்தங்களை அவருடைய படங்களில் செய்தாலும், சில பாராட்டக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். அவருடைய படங்களில் வந்த அம்மாக்களில், எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், 'அவர்கள்' படத்தில் ரஜினியின் அம்மா பாத்திரம். தன் மகன் கெட்டவன், ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டான் என்று தெரிந்ததும், அந்த பெண்ணின்(சுஜாதா) வீட்டிற்கே போய் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவாக வேலைக்குச் சேர்ந்து பாவத்தை கழுவிக்கொள்வது மட்டுமின்றி, சுஜாதாவை மறுமணம் செய்துகொள்ளவும் ஊக்குவிப்பார். எவ்வளவு அற்புதமான பாத்திரப் படைப்பு! அவரது மற்றொரு படமான 'அவள் ஒரு தொடர் கதை' யில் சுஜாதாவின் அலுவலகத் தோழி ஒருத்தியின் தாயாக ஒரு விதவை இருப்பார். அவர் தன் மகள் காதலிக்கும் ஒரு நபருடனேயே உறவு வைத்துக்கொள்வார். பின்பு மகளுக்கு விசயம் தெரிந்தவுடன் தற்கொலை செய்துகொள்வார். இதெல்லாம் கசப்பான உண்மைகளாகவே தாய்குலங்களால் கருதப்படுகிறதென்று நினைக்கிறேன்.

பாரதிராஜாவின் படங்களில் ரவிக்கை போடாமல் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு, கரையேறிய பற்களுடனும், ஓட்டை பெரிதாகி தொங்கும் காதுகளுடனும் பாக்கு இடித்துக்கொண்டு பேச்சுக்கு பேச்சு பழமொழிகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் கிராமத்து 'ஆத்தா' கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறார்கள். (வேதம் புதிது சரிதா, மண்வாசனை காந்திமதி)

மணிரத்ணம் படங்களில் வரும் அம்மாக்கள் ஓரளவு 'casual type' ஆக இருப்பார்கள். 'தளபதி' படத்தில் ரஜினியின் அம்மா ஸ்ரீ வித்யா சிறு வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தவர். பிறகு ஜெயசங்கரைத் திருமணம் செய்துகொண்டு இன்னொரு மகனுடன் வாழ்கிறார், ஆனால் தனது மூத்த மகனின் நினைவு அவருடைய மனதில் அழியாத வடுவாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு ஜெய்சங்கரும் அவருக்கு ஆறுதலாக இருப்பார். 'ரோஜா' படத்தில் மகனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஒரு நகரத்து அம்மா(அவருடைய பெயர் தெரியவில்லை). இந்த கதாபாத்திரங்கள் சற்று நம்புவதற்கு சுலபமாக இருக்கின்றன.

இதெல்லாம் ஒரு 10 வருடங்களுக்கு முன் வந்த படங்கள். சமீகாலத்தில் வரும் படங்களில் அம்மா செண்டிமெண்டுகள் வெகுவாக குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இழுத்திப் போர்த்திய புடவையும், பெரிய குங்குமப் பொட்டுமாக வீட்டில் பூஜை செய்துகொண்டிருக்கும் அம்மாக்களை இப்பொழுது வரும் படங்களில் பார்க்கமுடிவதில்லை. இப்பொழுது ஹீரோக்களின் கவனம் சமூக சீர்திருத்தங்களில் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது - அதாவது, சென்னையிலுள்ள அத்தனை ரெளடிகளையும் தூக்குவது, அரசியல் ஊழல்களைத் தட்டிக்கேட்பது, ஹீரோக்களே தாதாக்களாக இருந்து பொது மக்களுக்கு உதவுவது - இப்படி! எப்படியோ அம்மாக்கள் தப்பித்தார்கள். இது நல்ல முன்னெற்றம் தான்! இனிவரும் திரைப்படங்களில் இயல்பு வாழ்க்கை அம்மாக்கள் - அதாவது வேலைக்குப் போகும் அம்மா, correspondence course ல் படிக்கும் அம்மா - இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களைக் காட்டினால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த அன்னையார் தினத்தன்று நாம் நினைத்து சந்தோசப்பட வேண்டிய விசயம், தமிழ் சினிமாக்களில் அம்மா கதாபாத்திரங்கள் நல்ல மாற்றம் அடைந்திருப்பது!

Sunday, May 01, 2005

எழுதும் நேரம்


ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய சவால் - எழுதுவதற்கு ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது. முழு நேர எழுத்தாளர்களுக்கு இந்தக் கவலை இல்லை. இருக்கும் நேரம் அனைத்தும் அவர்கள் எழுதுவதற்கே. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுபவர்கள். நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு பிறகு குழந்தைகள், கார் பூல், வீட்டு வேலைகள், நண்பர்களுடன் சந்திப்பு இப்படி பறக்கும் வாழ்க்கையில் எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்குவது என்பது கடினமான விசயம் தான்.

ஒவ்வொரு எழுத்தாளரும் வித்தியாசமானவர். ஒருவருக்கு பொருந்தும் நேரம் மற்றவருக்குப் பொருந்தாது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான செயல் நிரலை(schedule) பின்பற்றுவார்கள். இதில் எழுதும்(டைப் அடிக்கும்!) நேரத்தை எப்படி பொறுத்திக் கொள்வது?

பெண்களுக்கு, முக்கியமாக தாய்மார்களுக்கு குழந்தைகள் உறங்கும் நேரம் தான் எழுதுவதற்கு மிக உகந்த நேரமாக இருக்குமென்று நினைக்கிறேன். இது குழந்தைகளின் வயதைப் பொறுத்தது. சற்று வளர்ந்த பிள்ளைகள் அம்மா ஏதோ எழுதுகிறார்கள், தொந்தரவு செய்யக்கூடாது என்று புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன?

அமைதியான சூழலில் நன்றாக சிந்தித்து, மனதை ஒருநிலைப்படுத்தி பொறுமையாக எழுத நினைப்பவர்களுக்கு பின்னிரவு நேரங்கள் உகந்ததாக இருக்கும். ஆனால் தூக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? நல்ல ஏலக்காய் டீ குடித்துவிட்டு எழுத வேண்டியதுதான். ஏலக்காய் தூக்கத்தை விரட்டிவிடும் என்று சொல்வார்கள்.

சில நாட்களில் அதிகாலை அலாரம் அடிப்பதற்கு முன்பே விழிப்பு வந்துவிடும். அப்போது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்காமல் அந்த சில கூடுதல் நிமிடங்களை எழுதுவதற்கு பயன்படுத்தலாம்.

சிறு இடைவெளிகளில் எழுதமுடியுமென்றால் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பழக்கம் உடையவர்கள் விளம்பர இடைவெளிகளில் கிடைக்கும் சில நிமிடங்களில் எழுதலாம். எந்தக் குறுக்கீடும் இல்லாமல் எழுதுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவர்களுக்கு இது சரிப்பட்டுவராது.

எழுதுவதற்கு என்று ஒரு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நல்லது என்றாலும், அந்த நேரத்தில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடாக இருப்பது பல நேரங்களில் சாத்தியமாக இருக்காது.

நான் எழுதுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன், அதனால் பெரும்பாலும் பின்னிரவு(11 மணியளவில்) நேரங்களிலேயே எழுதுகிறேன். சில(பல???) சமயம் அலுவலகத்தில் வேலைபளு குறைவாக இருக்கும் நாட்களில் பகலில் கொஞ்சம் எழுதமுடிகிறது.

நீங்கள் எப்பொழுது எழுதுகிறீர்கள்?