Tuesday, December 12, 2006

கொஞ்சம் அமெரிக்கா, நிறைய இந்தியா

இந்த வருடம் Thanksgiving விடுமுறைக்கு அலபாமாவில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தேன். சில இனிய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன. அக்காவின் மூன்று பிள்ளைகளும் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தார்கள். மூன்று மாத கல்லூரி வாழ்க்கை அவர்களிடம் சில சுவாரசியமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்தியர்கள், இந்திய உடைகள் என்றாலே வெட்கப்பட்டு விலகிச் செல்லும் அக்கா மகன், தன் கல்லூரியில் 'பாங்ரா' நடனக் குழுவில் சேர்ந்து, பாங்ரா உடையனிந்து நடனம் ஆடியிருக்கிறான்!

காரில் தமிழ்ப் திரைப்படப் பாடல்கள் போட்டால் முகம் சுளித்து "Its boring! can you stop it?" என்று கேட்கும் அக்காவின் மகள்கள் raagaa.com இணையதளத்தில் தமிழ், இந்தி பாடல்களைக் கெட்கிறார்கள் இப்போது!!

என்ன ஆச்சரியம்?! வீட்டில் தலை தலையாக அடித்துக்கொண்டாலும் நம்ம ஊர் சமாசாரங்களில் ஆர்வம் காட்டாதவர்கள் எப்படி திடீரென்று மாறினார்கள்? எல்லாம் நண்பர்கள் தான் காரணம். அவர்களுடைய வகுப்பிலும் சரி, விடுதி அறையிலும் சரி, உடன் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். இரண்டாவது பெண் படிக்கும் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில், "Penn Masala" என்ற இசைக்குழுவினர் இருக்கிறார்களாம். கல்லூரி வளாகங்களில் மிகவும் பிரபலமானவர்களாம். அவர்களுடைய இசைக் குறுந்தட்டைக் கேட்டேன். அருமையான குரல்கள்...ஆங்கிலப் பாடல்கள் தான்...ஆனால் திடீரென்று நடுவில் "அலைபாயுதே கண்ணா..." என்ற வரிகள் இனிமையான நுழைக்கப்பட்டிருந்தன! அக்கா பிள்ளைகளுடன் பேசியதிலிருந்து நம் இந்திய இளைஞர்கள் படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டு, கலை ஆகியவற்றிலும் சக்கை போடு போடுகிறார்கள் என்று தெரியவந்தது. கல்லூரியில் நுழைந்தவுடனேயே எல்லாவற்றுக்கும் க்ளப்(club) ஆரம்பித்துவிடுகிறார்கள். வார இறுதிகளில் மெஹந்தி, கர்பா, பாங்ரா, கஜல் என்று ஒரே குஜால் தானாம்!

இந்தியக் கலாசாரம் அமெரிக்காவில் ஊடுருவி பரவிக்கொண்டிருப்பதை நன்றாக உணரமுடிகிறது. ஹாலிவுட்டிலிருந்து வால் ஸ்ட்ரீட் வரை இந்திய
வாசனை! அமெரிக்காவிற்கு வருடா வருடம் வந்து குமியும் இளம் இந்தியர்கள் தங்கள் திறமைகளை இங்கே டண் கனக்கில் இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் கலாசார கட்டமைப்பையே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தம் கலாசார அடையாளத்தை இழக்காமல் மற்றொரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பை ஊடுருவுவதில் யூதர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் என்று MSNBC குறிப்பு ஒன்று கூறுகிறது. சினிமாவுக்கு ஒரு மனோஜ் நைட் ஷ்யாமளன், அரசியலுக்கு லூசியானா மாநில கவர்னராகப் போட்டியிட்ட பாபி ஜிந்தால்! ப்ளாக் பஸ்டர் விடியோ கடைகளில் 'லகான்', 'மான்சூன் வெட்டிங்', 'Bend it Like Beckham' போன்ற திரைப்படங்கள்! 'Macys', 'JcPenny' போன்ற அங்காடிகளில் இந்திய குர்தா வகை உடைகள் கட்டாயம் பார்க்கலாம். Giant, Safeway, Shoppers, Shopright போன்ற அமெரிக்கா grocery கடைகளில் Madras masala க்களும் sag paneer ரையும் காணலாம். சென்ற வாரம் எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு விருந்தில், buffet மேஜையில் பல வகை உணவு வகைகளை எல்லாம் தாண்டி கடைசியில் வைக்கப்பட்டிருந்த இந்திய உணவு வகைகளுக்காக வரிசையில் காத்திருந்த அமெரிக்கர்கள் நிறைய! Starbucks காபி கடையில் 'Chai' கிடைக்கிறது. ஊரில் மூலை முடுக்களில் எல்லாம் யோகா பயிற்சி நிலையங்கள்! MTV நிறுவனம் இப்போது புதிதாக MTV Desi என்கிற சானலை இந்தியர்களுக்காகவே தொடங்கியிருக்கிறது...

இதெல்லாம் பத்தாதென்று அமெரிக்க இசை மற்றும் நடன இலக்கணத்தையே மாற்றியிருக்கிறது நம் நாட்டு பஞ்சாபி பாங்ரா இசையும் நடனமும்!!! பாங்ரா எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்று அறிந்தபோது வாயடைத்துப் போனேன்...

மன்ஹாட்டன், சியாட்டல், வாசிங்டன் டிசி போன்ற பெரிய நகரங்களில் உள்ள இரவு மையங்களில்(night club) 'Basement Bangra' என்றழைக்கப்படும் பாங்ரா நடன நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். Britney Spears, Rishi Rich, Juggy D, Jay Sean போன்ற பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்கள், Pop, Rap, hip-hop போன்ற இசைகளில் பாங்ரா இசையும் கலந்து கட்டி கலக்குகிறார்களாம். Sopranos என்கிற புகழ் பெற்ற அமெரிக்க தொலைக்கட்சித் தொடரில் 'Meadow' என்கிற கதாபாத்திரம் பாங்ரா இசைக்கு ஆடுவதைப் போல் காட்சிகள் இருந்ததாம். அமெரிக்க நகரங்களில் உள்ள பல உடற்பயிற்சி மையங்களில், "பலே பலே", "ஹரெப்பா" என்ற சத்தத்தினூடே பாங்ரா இசைக்குத் தகுந்தார்போல் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள்.

இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது - அதாவது மேலை நாட்டுக் கலாசாரம் அங்கே ஊடுருவிக்கொண்டிருக்கிறது. இந்த இரு திசை ஊடுருவல்கள் எது வரை போகும் என்று தெரியவில்லை. இந்தியா கலந்த அமெரிக்காவிற்கும், அமெரிக்கா கலந்த இந்தியாவிற்கும் கலாசார இடைவெளி குறைகிறதா? அல்லது தனித்துவம் வாய்ந்த இரு பெரும் கலாசாரங்கள் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கிறதா என்று புரியவில்லை. ஆனால் அலசிப்பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.

Tuesday, December 05, 2006

தீபா மேத்தாவின் Water - திரைப்பட கண்ணோட்டம்

Image Hosting By: ImageMozilla.com
விதவைக் கோலம்! அது அத்தனை கோடூரமானதாக இல்லை இன்றையப் பெண்களுக்கு. மொட்டையடிப்பது, வெள்ளைப் புடவை உடுத்துவது, பூவும் பொட்டும் இழப்பது இதெல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலும் நகரங்களிலும், படித்தவர்கள் வட்டத்திலும் குறைந்திருக்கிறது.

ஆனால் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் பெண்களைச் சிதைத்துச் சித்திரவதை செய்த கோலம் அது! இதை பல தமிழ்த் திரைப்படங்களில் நான் பார்த்திருந்தாலும், தீபா மேத்தாவின் "Water" என்கிற திரைப்படம் இந்தியாவில் விதவைகளின் அவலங்களை ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்கவைத்தது. இப்படியும் இருப்பார்களா? என்று என்னை மனம் பதைக்க வைத்தது. கசப்பான, ஆனால் சொல்லப்பட வேண்டிய கதை இது. "Water" என்கிற தலைப்பு திரைப்படத்திற்கு மிகவும் பொருத்தம். தண்ணீரும் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம்! எல்லா காட்சிகளிலும் கங்கை ஆற்று நீர் தான் நிரம்பியிருக்கிறது. துக்கம், பாவம், சந்தோஷம் எல்லாவற்றுக்குமே அங்கே தண்ணீர் தான் வடிகால். ஆற்றங்கரை, படிகட்டுகள், சடங்குகள், சன்னியாசிகள், உலரும் துணிகள், வேத ஓதல்கள் என்று வாரணாசியை (RSS, BJP எதிர்ப்புகளால், உண்மையில் படபிடிப்பு இலங்கையில் நடந்தது!)அப்படியே உயிருடன் கண் முன் நிறுத்திருப்பது ஒளிப்பதிவாளரின் திறமையைக் காட்டுகிறது. "விதவைகள் எல்லாவற்றையும் துறந்து புனிதத் தன்மையுடன் இருக்க வேண்டும். புனிதத் தன்மையுடன் இருக்கும் மனைவி சுவர்க்கத்திற்குச் செல்வாள், இல்லையேல் சாத்தானின் கருவில் மீண்டும் பிறப்பாள்" என்று 2000 ஆண்டுகளுக்கு முன் சொன்ன மனு நீதியை இன்னமும் பின்பற்றி, சமூகம், கலாசாரம், கல்வி என்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்ட விதவைகளின் நிலையைச் சாடும் ஒரு உணர்ச்சிபூர்வமான திரைப்படம் இது. அறிவு, அறியாமை இரண்டுமே உள்ள ஒரு சமுதாயத்தில், உலகத்திலேயே மிகவும் பழமையான மதமான இந்து மதத்தின் இருண்ட அதிர்ச்சியூட்டும் கோட்பாடுகள் ஏற்படுத்திய பாதிப்பு அருமையாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நேரும் தருவாயை தன் கதையின் பின் புலமாக வைத்து திரைப்படத்தை உருவாக்குவது தீபா மேத்தாவின் தனித்துவம். தன்னுடைய "Earth" படத்தில் இந்தியா - பாக்கிஸ்தான் பிரிவை கதையின் களமாக கையாண்டிருப்பார். "Water" படத்தில் இன்னும் சற்று பின்னோக்கி சென்றிருக்கிறார். 1938 ஆம் ஆண்டு. காந்தியக் கொள்கைகள் மக்கள் மத்தியில் மெல்லப் பரவத் தொடங்கிய காலம் அது.

வாரணாசி! இந்து மதத்தின் பிரதான புன்னிய பூமி! பாவங்களை கங்கையில் கழுவும் இடம்! ஆனால் அங்கே பாவங்களின் மொத்த உருவமாய் விதவைகளின் சரணாலையங்கள்!

Image Hosting By: ImageMozilla.com

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், "சுய்யா" என்கிற 8 வயது சிறுமியிடம் அவளது தந்தை "உன் கணவர் இறந்துவிட்டாரம்மா...இன்றிலிருந்து நீ ஒரு விதவை" என்கிறார். அந்தச் சிறுமி "எத்தனை நாட்களுக்கு அப்பா?" என்று விவரம் புரியாமல் அப்பாவியாகக் கேட்கிறாள். "வாழ் நாள் முழுவதும்" என்கிற பதிலை தன் மகளிடம் சொல்ல முடியாமல் மெளனமாகிறார் தந்தை! இந்தப் படத்தில் வரும் வசனங்கள் மிகக் குறைவு. எல்லாமே இரண்டு மூன்று வரிகள் தான், ஆனால் நெஞ்சில் ஈட்டியாக இறங்கும் வார்த்தைகள்.

சுய்யாவின் தலை மழிக்கப்படுகிறது, வெள்ளைச் சேலை அணிவிக்கப்படுகிறது. விதவைகள் ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாக ஒப்படைக்கப்படுகிறாள். அந்த ஆசிரமத்தின் மூடிய கதவுகளுக்குப் பின் ஒரு இருண்ட உலகம் விரிகிறது...அங்கே இருப்பவர்களெல்லாம் நடுத்தர வயது மற்றும் முதிய விதவைகள். மழிக்கப்பட்ட தலைகள், வெறித்த பார்வைகள், பசித்த வயிறுகள், வெள்ளைப் புடவை போர்த்திய இளைத்த உடல்கள் - கடவுளைத் தவிர வாழ்க்கையில் மற்ற அனைத்து நம்பிக்கைகளும் அற்றுப் போன ஜீவன்கள். ஒரு வேளைச் சாப்பாடு, விதியை நினைத்து ஆண்டவனிடம் புலம்பல், நிம்மதியற்ற உறக்கம் - இதுவே அவர்களது அன்றாட வாழ்க்கை. இவற்றிற்கு மத்தியில் ஒரு துறுதுறுப்பான 8 வயது சிறுமியை வாழ் நாள் முழுவதும் இருக்கவேண்டுமென்றால் அது எத்தனை பெரிய கொடுமை? . வீட்டுக்குப் போகவேண்டும் என்று அழும் சுய்யாவிடம் ஆசிரமத்தின் தலைவி சொல்கிறாள், "கணவன் இறக்கும் போதே மனைவி பாதி இறந்துவிடுகிறாள். பாதி உயிர் போன ஒரு பெண்ணுக்கு எப்படி வலியும், துயரமும் இருக்க முடியும்?" என்று. "அவளுக்கு மீதி பாதி உயிர் இருக்கிறதே?" என்கிறாள் சுய்யா. தன் வயதிற்கும், உணர்வுக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லாத இந்த வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொள்ளத் தெரியாமல் திண்டாடும் சிறுமிக்கு 'கல்யாணி' என்கிற அழகான இளம் விதவையின் நட்பு கிடைக்கிறது. சகுந்தலா என்ற மற்றொரு நடுத்தர வயது விதவையின் அன்பும் கிடைக்கிறது. அமைதியான, அழுத்தமான, ஆழ்ந்த நம்பிக்கைகளை உடைய விதவை சகுந்தலாவாக வரும் சீமா பிஸ்வாஸின் நடிப்பு அபாரம். கல்யாணி துரதிர்ஷ்டவசமாக அழகாக இருக்கிறாள். அவளுக்கு மட்டும் மழிக்கப்படாத நீண்ட கரிய கூந்தல் இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவரும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அவளது வாழ்க்கையில் சற்று கொடூரம் கூடுதல்! இரவில் அவள் கங்கை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்லப் படுகிறாள் தன் உடலை விற்று அந்த விதவை ஆசிரமத்திற்கு பணம் சம்பாதிக்க! ஆனால் தன் விதியை அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள், கீதையில் "தான் இருக்கும் அழுக்கு நீரில் படாமல் மலர்ந்திருக்கும் தாமரையைப் போல் வாழ வேண்டும்" என்று கிருஷ்ணர் சொல்லியிருப்பதைப் போல.

ஒரு முறை "ஆண்களுக்கான விதவை ஆசிரமம் எங்கே இருக்கிறது?" என்று சுய்யா அப்பாவியாக வினவ, மற்றப் பெண்களெல்லாம் பதைபதைத்து, "அபச்சாரம்! என்ன கேள்வி இது?", "வாயைக் கழுவு" என்று அவளைக் கண்டிக்கிறார்கள். பெண்களின் மூளை எப்படி மதத்தால் சலவை செய்யப்பட்டிருந்தது என்பதை இந்தக் காட்சி எடுத்துக்காட்டுகிறது.

Image Hosting By: ImageMozilla.com

கல்யாணியை சந்திக்க நேரிடும் நாராயண் என்ற இளைஞன், அவளைத் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறான். கல்யாணியைப் பற்றி தன் அம்மாவிடம் அவன் சொன்னதும், அந்தத் தாய் அதிர்ச்சியடைகிறாள். "உன் அப்பா இதை ஒத்துக்கொள்வாரா?" என்று கேட்கிறாள். "அப்பா காந்தியக் கொள்கைகளின் பற்றாளர். நான் ஒரு விதவையைத் திருமணம் செய்துகொள்வதை அப்பா கட்டாயம் வரவேற்பார்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறான்.

கல்யாணியின் திருமண திட்டத்தைக் கேள்விப்பட்டதும், அவள் விடுதியை விட்டு சென்றுவிட்டால், விடுதிக்கு சம்பாத்தியம் இல்லாமல் போய்விடும் என்று அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கிறாள் விடுதியின் தலைவி. சகுந்தலா, ஒரு சன்னியாசியிடம் "விதவைகள் துன்புற வேண்டுமென்று நம் வேதத்தில் சொல்லியிருக்கிறதா?" என்று கேட்கிறாள். அந்தச் சன்னியாசி, "விதவைகளுக்காக மூன்று தீர்வுகளை நம் வேதம் சொல்கிறது, ஒன்று - கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுதல், இரண்டு - கணவர் இறந்தவுடன் துறவியாக வாழ்வது, மூன்று - கணவரின் தம்பியை மணந்துகொள்வது" என்று சொல்கிறார்.

இவை தீர்வுகளா?! அல்ல! இன்னும், மேலும் இழிவான முட்டுக்கட்டைகள்!

தொடர்ந்து அந்தச் சன்னியாசி சகுந்தலாவிடம் "இப்போது புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் விதவைகளின் மறுவாழ்வுக்காக" என்கிறார். சகுந்தலாவின் கண்களின் நம்பிக்கையும் தீர்க்கமும் தெரிகிறது. ஒரு முடிவுடன் வேகமாக விடுதிக்குச் சென்று, கல்யாணியின் அறைக்கதவை திறந்துவிட்டு "இங்கிருந்து வெளியே செல்!" என்று உத்தரவிடுகிறாள். கல்யாணி தன் காதலனிடம் செல்கிறாள். அவன் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். படகில் சென்றுகொண்டிருக்கையில், "உன் அப்பாவின் பெயர் என்ன?" என்று கல்யாணி கேட்கிறாள். அவன் சொல்கிறான். சட்டென்று கல்யாணியின் முகம் மாறுகிறது. "படகைத் திருப்பு...நான் திரும்பிப் போகனும்" என்கிறாள். அவள் தன் அப்பாவிடமே படுத்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொள்கிறான். கல்யாணி விதவை ஆசிரமத்திற்கே திரும்பிச் செல்கிறாள்.


நாராயண் தன் தந்தையிடம் வாதிடுகிறான். "உங்களை எவ்வளவு உயர்வாக நான் எண்ணியிருந்தேன்? நீங்கள் வெளி வேஷக்காரர் தானா?" என்று கேட்கிறான். "அவள் தேவதை அல்ல என்று உனக்குத் தெரிந்துவிட்டது. அவளை உன் ஆசை நாயகியாக வைத்துக்கொள். பிராமணர்கள் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் படுத்துக் கொள்ளலாம். அந்தப் பெண் அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று அப்பா சொல்கிறார்.

அன்றிரவு கல்யாணி கங்கை ஆற்றில் மூழ்கி தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மறு நாள் காலை கல்யாணியை அழைத்துச் செல்ல விடுதிக்கு வரும் நாராயணுக்கு அவளுடைய சாவுச் செய்திதான் கிடைக்கிறது. கல்யாணியின் உடலை கங்கைக் கரையில் தகனம் செய்கையில், "நாங்களெல்லாம் ஏன் இங்கே வந்தோம்? என்ன காரணம்?" என்று சகுந்தலா வேதனையுடன் வினவுகிறாள். நாராயண் சொல்கிறான் "ஒரு வாய் உணவு மிச்சம், நான்கு புடவைகள் மிச்சம், ஒரு படுக்கை மிச்சம், வீட்டில் ஒரு மூலை காலி. மதம் என்கிற வேஷத்தில், பணம் தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்". எண்ணங்களைப் புரட்டிப்போட்டு சிந்திக்க வைக்கும் பதில் இது! உண்மையில் அந்த விதவைகளின் வாழ்க்கையில் விளையாடியது மதமா? பணமா? கல்யாணியோ சகுந்தலாவோ ஜமீந்தார் வீட்டுப் பெண்களாக இருந்திருந்தால் இப்படி ஒரு விதவை ஆசிரமத்தில் விட்டிருப்பார்களா? விதவைகள் புணிதமாக, துறவியாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறது இந்து மதம், அதற்கு முரண்பாடாக கல்யாணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறாள். அதற்கு காரணம் மதத்தையும் விஞ்சிய பணம் தானே?

இறுதியில் உச்சக்கட்ட கொடுமை ஒன்று நடக்கிறது அந்த ஆசிரமத்தில். கல்யாணியின் மறைவிற்குப் பின் ஆசிரமத்திற்கு சம்பாத்தியம் நின்றுவிட்டதே?! வேறு இளமையான விதவைகள் அங்கே இல்லை. அதனால் 8 வயது சுய்யா விபச்சாரத்திற்காக கங்கை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்லப்படுகிறாள். "எங்கே போகிறோம்?" என்று கேட்பவளுக்கு "நீ விளையாடுவதற்காக ஒரு இடத்திற்கு" என்று பதில் கிடைக்கிறது. ஒரு மங்கிய ஒளி உள்ள அறையில் சுய்யா விடப்படுகிறாள். படுக்கையில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்து சுய்யா "நான் விளையாட வந்திருக்கிறேன்" என்று வெகுளியாகச் சிரித்துக்கொண்டே சொல்லும் போது, மனம் உருகி கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்! அவள் வந்திருக்கும் வீடு நாராயணின் வீடு என்பதும், படுக்கையில் அமர்ந்திருக்கும் நபர் நாராயணின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

துவண்ட மலராக படகில் திரும்பி வரும் சுய்யாவைப் பார்த்து துடிதுடித்துப் போகிறாள் சகுந்தலா. சுய்யாவை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் செல்கிறாள். அங்கே சிறையிலிருந்து வெளியேறி அஹமதாபாதிலிருந்து ரயிலில் செல்லும் காந்திஜி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உரையாற்றுகிறார். அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் அப்படியே அவருடன் கூட்டம் கூட்டமாக ரயிலேறிச் செல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் சகுந்தலா, "சுய்யாவை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்! அவளை காந்திஜியிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்று கதறுகிறாள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் நாராயணிடம் சுய்யாவை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்புகிறாள் சகுந்தலா. கல்யாணி, சுய்யா ஆகியோருக்காக தடைகளை உடைக்கும் மனோபலம் இருந்தும், தன்னுடைய விதிக்குப் பின்னால் ஒரு வலுவான ஆன்மீகக் காரணம் இருக்கிறது என்று ஆழ்ந்து நம்புகிற சகுந்தலா கதாபாத்திரம் இங்கே ஒளிர்கிறது. இத்தோடு திரைப்படம் முடிகிறது. இந்த முடிவில் சோகத்துடன் சற்று நம்பிக்கையும் கலந்திருக்கிறது. இந்தக் கொடுமைகளெல்லாம் மதத்தினாலா அல்லது மதத்தைப் பற்றிய தவறான புரிதலினாலா? என்பது என் கேள்வி.

இந்தத் திரைப்பட இயக்கத்திற்கு ஏற்பட்ட அத்தனை அரசியல் ரீதியான, மத ரீதியான தடைகளை எல்லாம் தாண்டி, போராடி சமூக அவலங்களை படம் பிடித்துக்காட்டிய தீபா மேத்தா, மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.

Monday, October 23, 2006

என் புத்தக உலகம் - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி

சிறு வயதில் எனக்கு தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. கல்லூரி நாட்களில் குமுதம், ஆனந்த விகடனில் வரும் தொடர்களை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். அடுத்த வாரம் பத்திரிக்கை வருவதற்குள் மண்டை வெடித்துவிடும் போல் இருக்கும். சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" எனக்கு மிகவும் பிடித்த கதை!

Image hosted by LetMeHost.com
முன் பாதி கதை திருநல்வேலியில், இரண்டாம் பாதி நியூயார்க்கில்! Irving Wallace, John Grisham, Sydney Sheldon போன்ற ஆங்கில நாவலாசிரியர்கள், அவர்கள் கதையில் சம்பவங்கள் எந்த ஊரில் நிகழ்கிறதோ, அங்கேயே சென்று தங்கி சுற்றுச் சூழலை நன்றாக ஆராய்ந்து கதையை எழுதுவார்கள். அதேபோல் சுஜாதா அந்த காலத்திலேயே நியூயார்க் நகர வாழ்க்கையை அருமையாக விவரித்திருப்பார். முக்கியமாக அப்பாவி தமிழ்நாட்டு கதாநாயகன் திருநல்வேலியிலிருந்து நியூயார்க் வந்து இறங்கி JFK விமான நிலையத்தில் செய்வதறியாமல் தடுமாறும் காட்சி ரொம்ப தத்ரூபமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். அமெரிக்கா வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் யதார்த்தமாக சொல்லியிருப்பார். மற்றபடி வேறு தமிழ் புத்தகங்கள் நான் அப்போது படிக்கவில்லை.

கல்லூரி முடித்தபின் சென்னையில் பயிற்சி, அமெரிக்கா பயணம், வேலை தேடுதல், திருமணம், குடும்பப் பொறுப்பு என்று நான்கைந்து ஆண்டுகள் பறந்தன. என் கணவர் தமிழ்ப் புத்தகங்கள் நிறைய படிப்பார். அவ்வப்போது வெளியிடப்படும் புத்தகங்களை பட்டியல் போட்டு தன் தம்பிக்கு அனுப்பி, சென்னையில் அவற்றை வாங்கி அனுப்பச்சொல்வார். ஆனால் ஒரு முறை கூட நான் அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்த்ததில்லை. ஒரு நாள் சன் தொலைகாட்சியில் வைரமுத்து எழுதிய "கள்ளிக் காட்டு இதிகாசம்" புத்தக வெளியீட்டு விழாவை பார்க்க நேரிட்டது. அதில் கலைஞர், பாரதிராஜா போன்ற பலர் அந்தப் புத்தகத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிப் பேசினார்கள். பாரதிராஜா பேசும்போது, "இப்படி ஒரு கதையை இவனால் மட்டும் தான் எழுதமுடியும்! என்னால் மட்டும் தான் திரைப்படம் எடுக்கமுடியும்! அவனால்(இளையராஜா) மட்டும் தான் இசையமைக்க முடியும்! என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். அட! இந்தக் கதை பாரதிராஜா திரைப்படம் பார்ப்பது போல் இருக்கும் போலிருக்கு! படிக்க வேண்டுமே?! என்கிற ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது.

கணவரின் தம்பி மூலம் "கள்ளிக் காட்டு இதிகாசம்" என் வீட்டிற்கு வந்திறங்கியது. ஒரு விடுமுறை நாளில் மதிய நேரத்தில் புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். எத்தனைப் பக்கங்கள் இருந்தன என்று நினைவில்லை. தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து ஒரு வாரத்தில் முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டு படிக்கத் தொடங்கினேன். புத்தகத்தை கீழே வைக்கும் போது பின்னிரவு ஒரு மணி! முழு கதையையும் அன்றே படித்து முடித்துவிட்டேன்! அப்படி நான் ஒரே மூச்சாகப் படித்து முடிப்பதற்கு அது ஒரு விறுவிறுப்பான காதல் கதையோ, திகிலான மர்ம நாவலோ அல்ல! அது ஒரு ஏழைக் குடியானவனின் சோகக் கதை! கதாநாயகன் - அறுபது வயது கிழவன்... கதையில் களம் - வறண்ட கள்ளிக் காடு! இவற்றை வைத்து ஒரு இதிகாசத்தைப் படைக்கமுடியுமா? முடியுமென்று நிரூபித்திருக்கிறார் வைரமுத்து!

Image hosted by LetMeHost.com

பேயத் தேவர் என்கிற கிழவன் மண்ணையே மருந்தாகவும் கடவுளாகவும் நினைத்து வாழும் ஒரு ஏழை விவசாயி. வைகை நதிக் கரையின் ஓரம் இருக்கிறது அவன் வாழும் கிராமம். திடீரென்று ஒரு நாள் சர்க்காரிடம் இருந்து ஆணை வருகிறது - இன்னும் சில நாட்களில் வைகை அணைக்கட்டு திறந்துவிடப்படும் என்றும், அருகில் இருக்கும் கிராம மக்கள் எல்லாம் இடைத்தைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குச் சென்றுவிடவேண்டுமென்றும். துடிதுடித்துப் போகிறார் பேயத்தேவர். சர்க்காரிடம் சென்று பேசுகிறார். மேலிடத்தில் முறையிடுகிறார். போராட்டம் நடத்துகிறார். அவருடைய அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. ஊரைக் காலி செய்யும் நாளும் நெருங்குகிறது. ஒவ்வொரு குடும்பமாக ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள். கடைசி நாள் வரை தான் நம்பிய மண் தன்னைக் கைவிடாது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். கடைசி நாளன்று அணைகட்டிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு நிலப்பகுதிகளை விழுங்கிக்கொண்டே வருகிறது! வேறு வழியின்றி பேயத்தேவர் குடும்பத்தாருடன் தானும் தன் மனைவியும் ஆசை ஆசையாகக் கட்டிய மண் வீட்டைக் காலி செய்துவிட்டுச் செல்கிறார். சற்றுத் தொலைவு சென்றதும், தன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்ட சில பூர்வீகப் பொருட்களின் நினைவு வர, அவற்றை எடுத்து வருவதற்காக மீண்டும் வீட்டிற்குச் செல்கிறார். வெள்ள நீர் நிலை அதிகமாகிவிட, அவர் வீட்டின் உள்ளேயே நீரில் மூழ்கி இறந்துவிடுகிறார். அவர் நம்பிய மண்ணே அவரை உள்ளே இழுத்துக்கொள்கிறது!

கதையைப் படித்து முடித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது! சிட்னி ஷெல்டனின் கதாநாயகிக்காக கண்ணீர் விட்டது போலவே பேயத்தேவருக்காகவும் கண்ணீர் விட்டேன். தெய்வங்களை வைத்து இதிகாசம் எழுத அன்று எத்தனையோ பேர் இருந்தார்கள். மனிதர்களைப் பற்றிய இதிகாசம் எழுத எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? ஒரு விவசாய நாட்டில் ஒரு விவசாயியின் கதையை எத்தனைப் பள்ளிகளில் பாடமாகப் படிக்கிறார்கள்? இப்படி மனதில் பல கேள்விகள்!

இதுவரை நான் படித்த கதைப் புத்தகங்களெல்லாமே - புனைவு! யதார்த்த, நிஜ வாக்கையிலிருந்து மிகவும் விலகியிருந்த கதைகள் அவை. கற்பனை உலகிலேயே இருந்த என்னை, சுடும் நிஜத்திற்கு அருகில் கொண்டு சென்றது "கள்ளிக் காட்டு இதிகாசம்".

அடுத்து நான் படித்த மற்றொரு தமிழ்ப் புத்தகம் என்னை நிஜத்தையே தொட வைத்தது!

தொடரும்...

Monday, October 09, 2006

என் புத்தக உலகம் - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி

Mills & Boon படிக்கத் தொடங்குவதற்கு முன் மற்றொரு கதைபுத்தகத்தைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். "Phantom" கதைகள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

Photography Web Site Templates


"Phantom" என்கிற மர்ம மனிதன் காட்டில் வாழ்கிறான். நகரத்தினுள் நடக்கும் கொலை, கொள்ளை, அட்டூழியங்களைப் பற்றி தன் ஒற்றர்கள் மூலம் அறிகிறான். நகரத்தினுள் மாறுவேடத்தில் சென்று தவறு செய்பவர்களைப் பிடித்து தண்டிக்கிறான். அவனுடைய காட்டு வாழ்க்கை படிக்க சுவையாக இருக்கும். அப்பா கதை சொல்லுவதில் மிகவும் கெட்டிக்காரர். இந்த Phantom கதை புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு sound effects எல்லாம் கொடுத்து அவர் கதை சொல்லத் தொடங்கினார் என்றால், அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளெல்லாம் கதை கேட்க வந்துவிடுவார்கள். அப்பா சொல்லும் கதையை சுற்றி உட்கார்ந்து திகிலுடன் கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து தத்தம் பிள்ளைகளுக்கு அழைப்பு வரும் "வந்து சாப்பிட்டுவிட்டு போ" என்றும் "வந்து வீட்டுப்பாடத்தைச் செய்து முடி" என்றும். யாரும் அசைய மாட்டார்கள்!

சரி...இப்ப Mills & Boon காலக் கட்டத்திற்கு வருவோம். நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முதன் முதல் என் வகுப்புத் தோழி ஒரு M & B புத்தகத்தைக் கொடுத்தாள். அதை நான் படிப்பதைப் பார்த்த அப்பா, "அது நல்ல புத்தகம் இல்லை. நீ இனிமே அதை படிக்கவேண்டாம்" என்று கண்டித்தார். நான் அப்பாவுக்குத் தெரியாமல் மேலும் சில M & B கதைகளைப் படித்தேன்! எல்லாமே காதல் கதைகள்.

Photography Web Site Templates


ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டே முக்கியக் கதாபாத்திரங்களைச் சுற்றிதான் கதை. ஆண்கள் எப்போது உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களாக, உயரமான கம்பீரமாக, ஆளுமை மிக்கவர்களாக இருப்பார்கள். பெண் கதாபாத்திரங்கள் இத்தகைய ஆணுக்காக ஏங்கிப் பரிதவிப்பவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் ஒரு மோதலில் இவர்களின் சந்திப்பு நேரும். பிறகு காதலில் முடியும். அந்தக் காதலுக்கு சில சோதனைகள் வரும். அந்த ஆணுக்கு மற்றொரு காதலி இருப்பாள், அல்லது அந்தப் பெண்ணுக்கு ஒரு பழைய காதலன் இருப்பான். இறுதியில் மகிழ்ச்சியான முடிவாகத்தான் இருக்கும். எல்லா M & B கதைகளுமே இதே மாதிரிதான். 10 கதைகள் படித்த பிறகு சலித்துவிட்டது.

அதன் பிறகு அடுத்த கட்டமாக Sydney Sheldon, Irving Wallace போன்றவர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். மீண்டும் அப்பா எச்சரிக்கை விடுத்தார் "இவை உன் வயதிற்கு மீறிய புத்தகங்கள்" என்று! ஆனால் நானோ அப்பா இல்லாத நேரத்தில் அவருடைய புத்தக அலமாரியிலிருந்து நாவல்களை எடுத்துப் படித்தேன். இப்ப என்னுடைய இந்தப் பதிவை அப்பா படிக்கும்போது "அடப் பாவி மகளே! இப்படியெல்லாம் செய்தியா?!" என்று நினைத்துக்கொள்வார்! என் வயதிற்கு மீறிய புத்தகங்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அருமையான கதைகள் அவை. Sydney Sheldon னின் "The Rage of Angels" கதை படித்துவிட்டு கதாநாயகி ஜென்னிபருக்காக தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன்.

இதுவரை நான் படித்த கதைகளிலே என்னை பிரமிக்க வைத்தது Irving Wallace இன் "The Second Lady". அமெரிக்காவின் First Lady என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவியைப் போலவே தோற்றமுடைய ஒரு பெண் ரஷ்யாவில் இருக்கிறாள். அவளைக் கண்டெடுத்த ரஷ்ய KGB உளவாளிகள், அமெரிக்க அதிபரின் மனைவியைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு, இந்த ரஷ்யப் பெண்ணை தயார் செய்து வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறார்கள், அமெரிக்க ரகசியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள. யாருக்குமே இந்த ஆள் மாறாட்டம் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க அதிபர் மனைவி பற்றிய சுயசரிதை எழுதுவதற்காக அவருடனேயே பல மாதங்கள் பயனித்து வந்த ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கிறான். இறுதியில் அது போலி first lady என்று கண்டுபிடித்தும் விடுகிறான். அதை நிரூபிக்கும் முன், இரண்டு first ladyக்களில் ஒருவர் ஒரு விபத்தில் இறந்துவிட, எஞ்சி இருப்பவர் உண்மையான first ladyயா அல்லது போலியா என்று தெரியாமலேயே கதை முடிந்துவிடுகிறது. கதை படித்து முடித்து பல நாட்களாக எனக்கு மனம் ஆறவேயில்லை, கடைசி வரை எந்த first lady அது என்றுத் தெரியாமல் போய்விட்டதே என்று!
அப்பா மேல் ஒரு சின்ன வருத்தம். சிறு வயதில் எனக்கு நல்லத் தமிழ்ப் புத்தகங்களை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டார். நான் படித்தவை எல்லாமே ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் தான். ஆனால் அம்புலிமாமாவைத் தவிர அப்போதெல்லாம்சிறுவர்களுக்காக நல்லத் தமிழ்க் கதை புத்தகங்கள் இருந்ததா என்று தெரியவில்லை.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது புனைவுக்கதைகளில் உள்ள ஆர்வம் தேயத்தொடங்கி அறிவுத் தாகம் எடுத்தது. இந்தக் கதைப் புத்தகங்களினால் என் ஆங்கில அறிவு செம்மைப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் இந்தப் புத்தகங்களினால், நான் ஒரு அமைதியான சப்தமில்லாத உலகத்தில் மூழ்கி அடைபட்டுவிட்டேன்! என் வயதை ஒத்தசிறுமிகள் தெருவில் விளையாடுகையில் நான் ஓரமாக உட்கார்ந்து கதைப் படித்துக்கொண்டிருப்பேன். சுற்றி நடப்பது என்னவென்றே தெரியாமல் அந்த அமைதியான உலகத்தினுள் சென்றுவிடுவேன். சாப்பிடும் போதும் இடது கையில் கதைப் புத்தகம் இருக்கும். அம்மா அப்பாவுடன் வேறொருவர் வீட்டுக்குச் சென்றாலும், அங்கே ஏதாவது புத்தகங்கள்கிடைத்தால் அவ்வளவுதான். இதனால் நான் பேசும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. பின்னர் கல்லூரி நாட்களிலும், அமெரிக்கா வந்த புதிதிலும் இது எனக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. பிறகு பேசுவது ஒன்றையேவாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டேன்! ஒரு நண்பர் கூட சொன்னார், "நீங்கள் பேசுபவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை...பேச்சையே திருமணம் செய்கொண்டீர்கள்" என்று. என்னுடைய அமைதியான உலகம் உடைந்தது. சற்றே வெளியில் எட்டிப்பார்த்தேன்...

திருமணத்திற்குப் பிறகு என்னுடைய புத்தக வாசிப்பு வேறு திசையில் திரும்பியது.

தொடரும்...

Friday, October 06, 2006

என் புத்தக உலகம் - 1

பல மாதங்களுக்கு முன் வலைப்பதிவில் தொடர்ந்து பலர் தாம் படித்த புத்தகங்களைப் பற்றியும், தம் வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அப்பொழுது என்னால் எழுத முடியவில்லை, இப்ப எழுதப் போறேன்! நான் புத்தகங்களுடனேயே வளர்ந்தவள். புத்தகங்களின் மீது அதீத மதிப்பும் பாசமும் வைத்திருந்தவரால் வளர்க்கப்பட்டவள். அப்பா பல்கலைக் கழக நூலகராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் நல்ல கதை புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுவருவார். நானும் அதை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவேன். சில நாட்கள் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் நூலகத்திற்குச் செல்வேன். அங்கே வேலை செய்பவர்கள் என்னைப் பார்த்ததும் நான் அப்பாவைத்தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று நினைத்து, "அப்பா அவர் அறையில் தான் இருக்கிறார்" என்று சொல்லுவார்கள். நானோ, நேராக அப்பாவின் அறைக்கு பக்கத்து அறைக்குச் செல்வேன். அங்கே தான் சிறுவர் புத்தகங்களை குமிந்து கிடக்கும். அங்கேயே அமர்ந்து எனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து படித்துவிட்டு பின் வீட்டுக்கு வந்துவிடுவேன், அப்பாவைக்கூட பார்க்காமல்! நான் நூலகத்தில் தான் இருக்கிறேன் என்று தெரிந்தாலும், அப்பாவும் என்னை வந்து பார்க்கமாட்டார்! Like father, like daughter...

எழுத நிறைய விசயம் இருக்கிறது என்பதால் தொடர் பதிவாக எழுதுகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் முதன் முதலாக படிக்கத் தொடங்கியது 'Enid Blyton' கதைகளை. (புகழ் பெற்ற ப்ரிட்டிஷ் எழுத்தாளர், 700 கதை புத்தகங்கள், 40 மொழிகளில் வெளிவந்திருக்கின்றன)

image hosting by keepmyfile.com image hosting by keepmyfile.com

Enid Blyton கதைகள் என்றாலே சிறுவர்களைக் கவரும் வேடிக்கை, விறுவிறுப்பு, திகில் அம்சங்கள் நிறைந்தவை . இந்தக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது "Famous Five" என்கிற தொடர் கதைகள். 4 சிறுவர்கள், மற்றும் ஒரு நாய். இந்த ஐவரின் அனுபவங்களைப் பற்றிய கதைகள் இன்றும் என் நினைவில் அழியாமல் நிற்கின்றன! புத்தகம் படிப்பது, மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை ஆராய்ந்து கண்டறிதல் போன்ற மகிழ்ச்சியான அனுபவங்கள் குழந்தைகளுக்கு ஏற்படவேண்டும் என்கிற உந்துதலினாலேயே எனிட் ப்ளைட்டன் இந்த அற்புதமான கதைப் புத்தகங்களைப் படைத்தார். அவருடைய கதைகளைப் படிக்கும்போது குழந்தைகளின் கற்பனா சக்தி விழித்துக்கொள்ளும். கதையின் ஒரு அங்கமாகவே குழந்தைகள் மாறிவிடுவார்கள்.

கொஞ்சம் வளர்ந்து உயர்நிலைப்பள்ளி வந்ததும், மற்றுமொரு அருமையான கதைபுத்தகம் எனக்கு அறிமுகமாயிற்று. "TinTin" என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள்! இந்தக் கதைகளின் சிறப்பே அதன் சித்திரங்கள். கதையைப் படிக்கவே வேண்டாம். அந்தச் சித்திரங்களே பேசும்!

image hosting by keepmyfile.com image hosting by keepmyfile.com


அவ்வளவு நுணுக்கமான விவரங்களுடன் அந்தச் சித்திரங்களை தீட்டியவர் 'Herge' என்பவர். அவரே இந்தக் கதைகளின் கதாசிரியரும் கூட! பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். Tintin என்கிற இளைஞன் ஒரு பத்திரிக்கையாளன். அவனுடைய செல்ல நாய்க்குட்டி "Snowy". கதாசிரியர் Herge, தன் காலகட்டத்தில் நடந்த இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன் சென்றிறங்குதல், ரஷ்ய மறுமலர்ச்சி போன்ற நிகழ்வுகளை இந்தக் கதைகளில் புகுத்தியிருப்பார். அனைத்து Tintin கதைகளிலும் ஒரு மர்மம் இருக்கும். கதையின் முடிவில் அது கட்டவிழ்க்கப்படும். கதையினூடே நகைச்சுவை அங்கங்கே பொறுத்தமாகத் தூவப்பட்டிருக்கும். Tintin உடன் வரும் துணை கதாபாத்திரங்களும் சிறப்பும் தனித்துவமும் வாய்ந்தவை. மணிக்கணக்காக Tintin கதைகளைப் படித்துவிட்டு, பின்னர் அந்தக் கதைகளில் வரும் காட்சிகளை நினைத்து பைத்தியம் போல் சிரித்துக்கொண்டிருப்பேன். இந்தக் கதைகளைப் பற்றிய ஒரு குற்றச் சாட்டு உள்ளது. ஐரோப்பியர்களைத் தவிர மற்ற நாட்டவர்கள் வில்லன்களாகவோ, அப்பிராணிகளாகவோ தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் அந்த வயதில் எனக்குத் தெரியவில்லை. பின்னால் படித்துத் தெரிந்துகொண்டேன்.

Tintin கதைகளைப் படித்த நாட்களிலேயே, Asterix and Obelix என்ற கதைபுத்தகங்களையும் (33 கதைப்புத்தகங்கள், 100 மொழிகளில் வெளிவந்துள்ளன)நூலகத்தில் கண்டெடுத்தேன். Rene Goscinny இதன் கதாசிரியர். Albert Uderzo இதன் ஓவியர். இந்தக் கதைகளின் சித்திரங்களும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. Asterix என்கிற வீரனும் அவனது நன்பன் Obelix என்பவனும், ஒரு அமைதியான கிராமத்தில் வாழ்கிறார்கள்.
image hosting by keepmyfile.com

ஜூலியஸ் சீஸரால் கைப்பற்றமுடியாத ஒரே கிராமம் அதுதான்! காரணம், அந்த கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு மந்திரக் கூழை அருந்துகிறார்கள். அது அவர்களுக்கு பெரும் உடல் சக்தியை அளிக்கிறது. அந்தச் சக்தியை வைத்துக்கொண்டு அவ்வப்போது அவர்களின் கிராமத்தை கைப்பற்றுவதற்காக முயலும் ரோமானியர்களை பந்தாடுகிறார்கள். ரோமானியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை சச்சரவுகள் தான் கதையின் கரு. இந்தக் கதைகளில் சுவாரசியமான விசயம் என்னவென்றால், ஒவ்வொரு கதையின் முதல் காட்சியிலும், ஒரு ரம்மியமான காலைப்பொழுதில் அந்தக் கிராமம் விழித்தெழுவதைக் காணலாம். நடுவில் போர், சண்டை இதெல்லாம் வரும். கடைசி காட்சியில் எபோழுதும் அந்த கிராமத்தில் ஒரு பெரிய விருந்து நடக்கும். எல்லாரும் மாமிசத்தையும், மதுவையும் வெளுத்துவாங்கிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில் ஒரு மரத்தடியில் ஒருவனைக் கட்டிப்போட்டு, அவன் வாயில் துணியை அடைத்திருப்பார்கள். அவன் அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒரு இசைக் கலைஞன். எந்த ஒரு நிகழ்வின் போதும், "நான் இப்போது பாட்டு பாடுகிறேன்" என்று சத்தமாக அபஸ்வரமாகப் பாடத் தொடங்கிவிடுவான். அதைத் தடுப்பதற்கே அவனை அப்படி கட்டிப்போடுவார்கள் அந்த கடைசி விருந்து காட்சியில். எல்லா கதைகளிலும் இப்படித்தான்.

இந்தக் காமிக்ஸ் கதைகள் எல்லாம் படித்துச் சலித்தபோது எனக்கு 15 வயது. அடுத்து என்ன இருக்கிறது என்று நூலகத்தைக் குடைந்தபோது, Mills & Boon வெளியீடுகளான Romance கதைப் புத்தகங்கள் கண்ணில் பட்டன... பிடித்தது சனி!!!

தொடரும்...

Monday, October 02, 2006

எனக்குப் பிடித்த மாதிரி ஒரு அரங்கேற்றம்

அமெரிக்காவில் நடக்கும் பரதநாட்டிய அரங்கேற்றங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கத்தினை முன்பு அரங்கேற்ற அலம்பல் - 3 என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். சென்ற சனிக்கிழமை நான் பார்த்த ஒரு அரங்கேற்றம், என் ஆதங்கத்தினையும், மாற்றங்களும் புதுமைகளும் சீக்கிரம் நிகழவேண்டும் என்கிற என் அவசரத்தையும் ஆறுதல்படுத்தியது!

நடனமாடியப் பெண் ஒரு கிறிஸ்துவர் மற்றும் இலங்கைத் தமிழர்.

தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தின் போது சிவனையும் கிறிஸ்த்துவையும் வணங்கி நடனமாடினாள். சிலுவைக் குறியிட்டுக்கொண்டாள்! "Amen" என்றும் சொன்னாள்! இது எனக்குப் புதுமையாகப் பட்டது. பிற மதங்களுக்கும் பரதநாட்டியம் "customize" செய்யப்படலாம் என்பது ஒரு நல்ல முன்னேற்றம்!

பிறகு மணியான, ஆழமான கருத்துக்களைக்கொண்ட ஒன்பது திருக்குறள்களுக்கு அழகாக நடனமாடினாள்! பக்கவாட்டில் உள்ள ஒரு பெரிய திரையில் ஒவ்வொரு திருக்குறளும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடனும், அதன் பொருளை உணர்த்தும் சித்திரங்களுடனும் காட்டப்பட்டது!

அடுத்து வந்தது "சாற்றி வளர்த்திடுவாய் நம் சங்க இலக்கியப் பெருமையெல்லாம்" என்று சங்க இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நினைவுகூறும் ஒரு சிறப்பு நடனம். ஒளவையார், தொல்காப்பியர், பெரியாழ்வார், இளங்கோவடிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், கம்பர், திருவள்ளுவர் போன்ற சங்ககாலச் சான்றோர்களையெல்லாம் ஒரு விநாடி கண்முன் நிறுத்தினாள்.

அடுத்த நடனம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" என்ற பாரதிதாசனின் இனிமையான பாடலுக்கு. இது என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த பாடல்! சிறு வயதில் அவர் இந்தப் பாடலை அடிக்கடி பாடி நான் கேட்டிருப்பதால் எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அதிலும் "அன்பிலா நெஞ்சில் தமிழிற் பாடி நீ, அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே நீ, அல்லல் நீக்க மாட்டாயா?" என்கிற வரிகளில் இனிமைச் சொட்டும்!!! "ஓர் இரவு" என்கிற பழைய திரைப்படத்தில் பத்மினியின் சகோதரிகள் லலிதா, ராகினி இருவரில் யாரோ ஒருவர் இந்தப் பாடலுக்கு நடனமாடியிருப்பார். சரியாக ஞாபகம் இல்லை.

பாரதியாரையும் விட்டுவைக்கவில்லை இந்த அரங்கேற்றத்தில்! "என்று தனியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?" என்ற பாடலுக்கு இலங்கைத் தமிழர்களின் அடிமை வாழ்வையும் சுதந்திரத் தாகத்தையும் பிரதிபலிக்கும் நெஞ்சை உருக்கும் நடனம்!

அடுத்து சிலப்பதிகாரம் - கண்ணகியின் கதை! உணர்ச்சிப்புர்வமான நடனம். பாடலினூடே சிலப்பதிகாரத்தின் ஆங்கில சாராம்சம்!

பின்னர் "வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்" என்கிற குதூகலமானப் பாடலுக்குச் சுறுசுறுப்பான நடனம்!

இறுதியாக மங்களம் - "தமிழே வணக்கம்" என்கிற பாடல். தமிழுக்கு எவ்வளவு மரியாதை செய்யமுடியுமோ அவ்வளவு மரியாதையும் இந்த நிகழ்ச்சியில் செய்துவிட்டதாக எனக்குத் தோன்றியது!

தமிழை வணங்கினாள்! இறைவனைப் போற்றினாள்! திருக்குறளை ஆடினாள்!சங்க இலக்கியங்களை நினைவுக்கூர்ந்தாள்! பாரதியையும் பாரதிதாசனையும் மேடையேற்றினாள்! சுதந்திரத் தாகத்தை தன் அசைவுகளால் புரியவைத்தாள்!

தான் வாழும் சமுதாயத்தை, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தன்னுடைய உணர்வுகளை, தன் மதத்தை, தன் தாகங்களை பிரதிபலிக்க உதவாத ஒரு கலைவடிவம் ஒரு கலைஞனுக்கு எதற்கு? பரதநாட்டியம் என்கிற கலைவடிவத்தை அதன் அழகும் மரியாதையும் கொஞ்சமும் குறையாமல் அதன் கலாசார எல்லைக்குள் அதனை வளைத்து மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு சில கலைஞர்கள் உலகில் இருக்கிறார்கள், மேலும் இதுபோல் உருவாகி வருகிறார்கள் என்று நினைக்கையில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது!

பின்குறிப்பு: சில வருடங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி, "தமிழ் ஆர்வத்திலும் உணர்விலும், தமிழை வளர்க்கும் முயற்சியிலும் இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தான் முன்னனியில் இருக்கிறார்கள்" என்று சொன்னார். அப்போது சற்று கோபம் வந்தது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியைப் பார்த்தபிறகு, அவர் அன்று சொன்னது உண்மைதான் என்று அரை மனதுடன் ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது!

Monday, September 11, 2006

ஒன்பது பதினொன்று! (9/11)

இன்றோடு நியூயார்க்கில் உலக வர்த்தக மைய கோபுரங்களின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்து 5 வருடங்களாகிவிட்டன. இன்று காலை Washington Post Radio கேட்டுக்கொண்டே காரில் செல்கையில் "9/11 அன்று தீவிரவாத தாக்குதல் நடந்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்களின் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று அறிவித்து தொலைபேசி எண் கொடுத்தார்கள். பலரின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நடுவில் இந்தியர் ஒருவர் பேசினார். "உலகத்திலேயே அமெரிக்கா தான் பாதுகாப்பான நாடு என்று நினைத்திருந்தேன். நான் இங்கே நன்றாக கால் ஊன்றியவுடன் என் குடும்பத்தை இங்கே அழைத்து வந்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த தீவிரவாத தாக்குதலினால் என் நம்பிக்கை குலைந்துவிட்டது. என் எதிர்காலத்தை நினைத்து பயந்தேன்" என்றார்.

என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...அப்போது நான் எங்கே இருந்தேன்? எப்படி உணர்ந்தேன்?

2001 ஆண்டு பாதி கடந்தவுடன் நான் வேலையில் இருந்த நிறுவனத்தில் என்னுடைய ஒப்பந்தம் முடிந்தது. அதற்கு முன் நான் அமெரிக்காவில் வேலை பார்த்த நான்கு வருடங்களில், ஒவ்வொரு ஒப்பந்தமும் முடியும் முன்பே அடுத்த வேலை கிடைத்துவிடும். அந்த கர்வத்தினாலும் நான்கு வருடங்கள் உழைத்துவிட்ட சலிப்பினாலும், சற்று ஓய்வெடுக்கலாமென்று ஒரு மாதமாக எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கவே இல்லை. இரண்டாவது மாதத்திலிருந்த மெதுவாக விண்ணப்பிக்கத் தொடங்கினேன். எங்கிருந்தும் அழைப்பு வரவேயில்லை! சில நாட்கள் கழித்து என் கணவருக்கும் வேலை முடிந்துவிட்டது. லேசாக பதட்டமும் பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்சம் வெளியுலகைப் பார்த்தபோது தான் நிலைமை புரியத்தொடங்கியது. 2001 ஆண்டின் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி அப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. 'Tech bubble' உடைந்தது...Dot.com நிறுவனங்கள் சரிந்தன...Enron, Worldcom போன்ற நிறுவனங்களின் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன...

நானும் கணவரும் விடாமல் வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தோம். சேமிப்பில் இருந்த பணமும் கொஞ்ச கொஞ்சமாகக் கரையத் தொடங்கியிருந்தது. தூக்கமும் நிம்மதியும் எங்களை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது. இப்படியிருக்கும் போது தான் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வாசிங்டனில் ஒரு பெரிய 'job fair' நடக்கவிருந்தது. அதற்குச் செல்வதற்காக ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தேன். செப்டம்பர் 10 அன்று பின்னிரவில் வழக்கம் போல் இணையத்தில் வேலை வாய்ப்புகள் தேடி களைத்த பின் படுக்கைக்குச் சென்றேன். மறு நாள் காலை (செப்டம்பர் 11) 9:30 மணியளவில் தொலைபேசி மணி எங்களை எழுப்பியது. கணவரின் நண்பர் பதட்டத்துடன், "சீக்கிரம் தொலைகாட்ச்சியை போட்டுப் பார்! நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருக்கிறது" என்றார். தூக்கக் கலக்கத்தில் ஒன்று புரியாமல் எழுந்து சென்று தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தோம். விமானங்கள் உலக வர்த்தக மைய கோபுரங்களின் மேல் ஒன்றன் பின் ஒன்றாக மோதி வெடித்த காட்சியை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

நிலைமையின் தீவிரம் புரிகையில் அதிர்ச்சியாக இருந்தது. இரட்டை கோபுரங்கள் உடைந்து சரிந்த போது, கூடவே என்னுடைய எதிர்காலமும், வாழ்க்கையும் உடைந்து சிதறியது போல் உணர்ந்தேன். ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரம் நொடிந்து போயிருக்கையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இந்தத் தீவிரவாதத் தாக்குதல்! இதிலிருந்து எப்போது அமெரிக்கா வெளியே வருவது? எப்போது பொருளாதார நிலை சீராவது? எப்போது எனக்கு வேலை கிடைப்பது? கவலை தோய்ந்த முகத்துடன் அன்று முழுவதும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தோம் இருவரும். தன்னிரக்கத்திலேயே மூழ்கிப்போயிருந்த எங்களுக்கு, அந்தத் தீவிரவாத தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக அனுதாபப்படுவதற்கு கூட சில நாட்கள் ஆனது! தாக்குதல் நடந்த இடத்திலிருந்து அமெரிக்க அதிபர் புஷ் பேசுகையில் "We will rebuild New York City!" என்று முழங்கினார். பின் வந்த மாதங்களில் நாங்களும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கையை "rebuild" செய்தது ஒரு தனி கதை!

Friday, September 08, 2006

சென்ற வாரச் சிந்தனைகள் - 1

பர்தா பெண்

சென்ற வாரம் நான் வழக்கமாக புருவம் திருத்திக்கொள்ளச் செல்லும் அழகு நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருக்கும் பெரிய கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த போது, எனக்குப் பின்னால் ஒரு பெண் நின்றிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது. மிக அழகாக இருந்தாள். இந்தி நடிகை ப்ரீதி ஜிந்தாவின் சாயல் தெரிந்தது. பளபளப்பான கரிய கூந்தலில் லேசான சிவப்புச் சாயம். கூந்தல் சீராக அழகாக வெட்டப்பட்டிருந்தது. ஜீன்ஸ் மற்றும் டாங்க் டாப் அணிந்திருந்தாள். எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று பொறாமைப்பட்டுக் கொண்டே புருவங்களை திருத்திக்கொள்ள கண்களை மூடிக்கொண்டேன். சில நிமிடங்கள் சென்றபின் கண்களைத் திறந்து மீண்டும் கண்ணாடி வழியே பார்த்தபோது அந்த அழகான பெண் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். முதலில் ஒரு கருப்புத் துணியை எடுத்து தன் கூந்தலில் போர்த்தி, மூடி, கழுத்தின் கீழ் இழுத்து பொத்தான் அணிந்துகொண்டாள். பின் ஒரு நீளமான கருப்பு அங்கியை உடம்பின் மேல் அனிந்து கழுத்திலிருந்து உள்ளங்கால் வரை பொத்தானிட்டுக்கொண்டாள்! அவளுடைய பளபளப்பான கரிய கூந்தலும், அழகிய தேகமும் ஒரு நிமித்திற்குள் பர்தாவினுள் ஒளிந்து கொண்டன! பர்தா வழக்கத்தைப் பற்றி பலர் பேசியும், எழுதியும் ஆகிவிட்டது. புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் மனம் வருத்தப்பட்டது. பெண்கள் பர்தா அணிந்துகொள்வதன் உண்மையான காரணம், பெண்களை அடிமையாக்கவோ, இழிவுபடுத்தவோ அல்ல, மாறாக அவர்களின் புற அழகைத் தாண்டி அவர்களின் அறிவையும் மனதையும் ஆண்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே என்று பல விளக்கங்கள் கூறுகின்றன. அப்ப ஆண்களின் மேல் நம்பிக்கை இல்லையென்று ஆகாதா? ஒரு அழகானப் பெண் பர்தாவினுள் ஒளிந்திருக்கையில் அவளை கண்ணியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்க்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் அவள் பர்தா போடாவிட்டாலும் அவளை கண்ணியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்ப்பது தானே ஆண்களுக்கு உண்மையான பெருமை?

தமிழ்த் தொலைகாட்சித் தொடர்களில் ஆண்கள்

தமிழ் ஊடகங்களில், முக்கியமாக தொலைக்காட்சித் தொடர்களில் பெண்கள் எப்படி தவறாக, தரம் தாழ்ந்து சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி நிறைய படித்தும், எழுதியும், கேட்டும், விவாதித்தும் சலித்து விட்டது. அப்பாவிடம் சென்ற வாரம் ஒரு நாள் மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களின் சித்தரிப்பு பற்றி நான் மீண்டும் கோபப்படுகையில், அப்பா சொன்னது:

பெண்கள் மட்டும் தான் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்களா? ஆண்களும் தான் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு அப்பாவின் கோணத்திலிருந்து இந்தத் தொடர்களைப் அலசிப் பார். உதாரணமாக, 'செல்வி' தொடரில் எல்லா அப்பா கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற தெண்டமான அப்பாக்களாக இருக்கிறார்கள். செல்வியின் அப்பா - குடிகாரர், குடும்பத்தை காப்பாற்ற முடியாத கையாலாகாதவர். ஜி ஜேவின் அப்பா - சதா கோவில், குளம் என்று செல்லும், குடும்பத்தில் எந்த வித ஆளுமையும் இல்லாதவர். 'மலர்கள்' தொடரில் சண்முகத்தின் அப்பா - மனைவி செய்யும் அநியாயங்களை எதிர்த்துக் கேட்ட திராணியற்றவர். கற்பகத்தின் அப்பா - தன்மானம் இல்லாதவர், பணத்துக்காக எதையும் செய்பவர்.

அப்பாக்கள் மட்டுமா? கணவன்மார்களை எடுத்துக்கொள். ஒன்றிரண்டு கணவன் கதாபாத்திரங்களைத் தவிர, மற்றவரெல்லாம் இரண்டு கல்யாணம் செய்துகொள்வது, கள்ளக் காதல் வைத்துக்கொள்வது, குடிப்பது, மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்று சித்தரிக்கப்படுகிறார்கள்.

உண்மைதான்! நான் பெண்களின் பார்வையிலேயே பார்த்துக்கொண்டிருந்ததால் மற்ற கதாபாத்திரங்களை அவ்வளவாக கவனிக்கவில்லை! ஆனால் ஆனால் இப்படிப்பட்ட சித்தரிப்பிற்கு ஆண்கள் எந்த வகையிலாவது எப்போதாவது எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா?

Thursday, July 20, 2006

அத்திலக வாசனைப்போல்?

பெண்களின் கூந்தலில் இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என்று வரலாற்றில் கேள்வி எழுந்தது போல் எனக்கு இப்ப ஒரு கேள்வி எழுந்திருக்கிறது! பெண்கள் நெற்றியில் வைக்கும் திலகத்திற்கு மணம், வாசனை எதுவும் உண்டா? தமிழ்த் தாய் வாழ்த்தின் பொருளைப் படித்தபோது இந்தக் கேள்வி என் மனதில் எழுந்தது.

தமிழ்த் தாய் வாழ்த்து:

நீராடும் கடலுடுத்த நிலமடந்தை
கெழில் ஒழுகும்சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும்
அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

கடைசி மூன்று வரிகளுக்குப் பொருள்:

"அந்த நெற்றியில் இட்ட பொட்டு போன்றது திராவிட நாடு;அந்தப் பொட்டின் வாசனைபோல் எல்லாத் திசைகளிலும் உன் புகழ் பரவி உலகில் உள்ள எல்லோரும் இன்பமடைய வீற்றிருக்கும் தமிழ்த் தெய்வமே!"

நெற்றிப் பொட்டில் வாசனை வருமா? நான் கேள்விப்பட்டதில்லை. அப்படியே வாசனை வந்தாலும், எல்லாத் திசைகளிலும் பரவும் அளவுக்கு சக்திவாய்ந்த வாசனையாக இருக்குமா?

நான் தமிழ்த் தாய் வாழ்த்தை கிண்டல் செய்யவில்லை. முழு மரியாதையுடன், அதன் பொருளை சரியான முறையில் புரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்!

Wednesday, July 19, 2006

என் வீட்டுத் தோட்டத்தில்

Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

எனக்கு தோட்டம், செடி விசயங்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இருந்தாலும், எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய தோட்டத்தை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை எட்டிப்பார்ப்பதுண்டு. காரணம், அங்கிருக்கும் புல் தரையில் புற்கள் ஒரளவுக்கு மேல் வளர்ந்துவிட்டால், 'டாண்' என்று வீட்டுக்கு எச்சரிக்கை கடிதம் வந்துவிடும். அப்படி சில நாட்களுக்கு முன் எட்டிப்பார்த்தபோது, குடை மிளகாய் செடியிலும், தக்காளிச் செடியிலும் பிஞ்சு காய்கள்! புதினா, மற்றும் கருவேப்பிலை செடிகளில் புதிய இலைகள்! மல்லிகைச் செடியில் பூக்களும் மொட்டுக்களும்! பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜூன் மாதம் முழுவது அப்பாவும் அம்மாவும் என் வீட்டில் தங்கியிருந்தார்கள். அம்மாவிற்கு பொழுது போவதில் பிரச்சினையே இருக்கவில்லை. தினம் ஒரு குழம்பு, தினம் ஒரு டிபன் என்று 'அவள் விகடன்', பாணியில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். சமையலைத் தவிர வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்களேன், எம்ராய்டரி போடறிங்களா? நிட்டிங்(knitting) போடறிங்களா? என்று பல முறை கேட்டுப் பார்த்துவிட்டேன். ம்ஹ¥ம்! திரும்பத் திரும்ப சமையலறையில் தான் போய் நின்றார்கள். சரியென்று விட்டுவிட்டேன்.


அப்பா தோட்டம் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரை ஹோம் டிப்போ(Home Depot) அழைத்துச் சென்று பூந்தொட்டிகள், செடிகள், விதைகள், மற்றும் தோட்ட வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தேன். அடுத்த சில நாட்கள் அப்பாவுக்கு நன்றாகப் பொழுது போனது. அவர் அன்று நட்ட செடிகள் தான் இன்று காய்களையும் பூக்களையும் தாங்கி நிற்கின்றன!

20 வருடங்களுக்கு முன்...

சிதம்பரத்தில் இருந்த எங்க வீட்டைச் சுற்றி மிக அழகான தோட்டம் இருந்தது. அத்தனையும் அப்பாவின் கை வண்ணம்! பாரதியார் கூட பத்து பன்னிரண்டு தென்னை மரம் தான் வேண்டுமென்றார். எங்க வீட்டில் 13 தென்னை மரங்கள் இருந்தன. கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி மரங்களும் இருந்தன. அந்த நெல்லி மரத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும். அவற்றை எடுத்து, கழுவி, உப்புத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டால்....அப்பப்பா...இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது! ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, மல்லிகை என்று ஏகப்பட்ட பூச்செடிகளும் உண்டு! இதெல்லாம் பத்தாதென்று நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள்! மிகுந்த கலா ரசனையுடன் உருவாக்கப்பட்ட ஒரு அழகான நந்தவனமாக இருந்தது அப்பாவின் தோட்டம். எங்க வீடு இருந்த அந்தக் காலனியில், அப்பாவைப் போலவே தோட்ட வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, "Horticulture Society" ஒன்றைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் அந்தக் காலனியிலே சிறந்த தோட்டத்திற்கான போட்டி நடக்கும். அதில் எப்பொழுதுமே 'முருகைய்யன்' என்கிற அப்பாவின் நண்பர் தான் முதல் பரிசு பெறுவார். அப்பாவுக்கு இரண்டாம் பரிசு தான் கிடைக்கும். காரணம், முருகைய்யனின் விட்டில் மரங்களும், செடிகளும் எண்ணிக்கையில் மிக மிக அதிகம். ஆனால் தோட்ட அமைப்பு, தோற்றம் - இவற்றில் எங்க வீடு தான் மிக அழகாக இருக்கும். எங்க வீட்டுத் தோட்டத்தில் எடுத்தப் புகைப்படங்களைப் பார்த்து "எந்த பொட்டானிக்கல் கார்டெனில் எடுத்தீங்க?" என்று பலர் கேட்டதுண்டு. அதனால் இன்று வரை அந்த பரிசு விசயத்தில் எனக்கு வருத்தம் தான்.

10 வருடங்களுக்கு முன் சிதம்பரம் வீட்டை அப்பா நல்ல விலைக்குத் தான் விற்றார். ஆனால் அந்த விலை அந்த நிலத்திற்கும், கட்டிடத்திற்கும் தான். அவர் அந்த வீட்டுத் தோட்டத்தில் பொட்ட நெரத்திற்கும், உழைப்பிற்கும் விலை மதிப்பே கிடையாது! இன்று என் வீட்டுத் தோட்டத்தில் நான்கு செடிகளை வைத்துக்கொண்டு என் அவசர வேலைகளுக்கிடையே அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவதை கூட பெரிய விசயமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்பா அந்தப் பெரிய தோட்டத்தை உருவாக்கி, வளர்த்து, பின் அதை மொத்தமாக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு வரும் போது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்?

Saturday, July 15, 2006

ஜெயமாலாவும் மீரா ஜாஸ்மினும்

மீரா ஜாஸ்மின், ஜெயமாலா இருவரில், ஜெயமாலாவை சற்றுப் பாராட்டத் தோன்றுகிறது. "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட மீண்டும் ஐயப்பன் கோவிலுக்குப் போவேன்" என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார். மேலும் "முதலில் கோவிலில் பந்தோபஸ்த்தை அதிகப்படுத்துங்கள். பிரபலங்களையும் சாதாரண மக்களையும் சமமாக நடத்துங்கள். சட்டங்களை பலகைகளில் துல்லியமாக எழுதிப்போடுங்கள்" என்று கோவில் செயற்குழுவிற்கே அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

மாதவிடாய் வரும் பெண்கள் கோவிலுக்கு வந்தால் கோவிலின் புனிதம் கெட்டுப் போய்விடும் என்று சொல்வது உலக மகா முட்டாள்தனம். எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோ சிந்திப்பதோ கிடையாது. ஆனால் சில அற்புதமான நிகழ்வுகள் நேரும் போது, கடவுள் இருக்கிறாரோ? என்று மனம் தடுமாறும். அப்படி ஒரு அற்புதமான நிகழ்வு தான் ஒரு பெண் கருவுற்று குழந்தை பெறுதல். இந்த நிகழ்வில் ஒரு முக்கிய கட்டம் தான் 'மாதவிடாய்'. அது நடக்காமல் உலகத்தில் எந்த மனிதனும் பிறந்திருக்க முடியாது. மாதவிடாய் என்பதை தீட்டு என்றும் புனிதம் கெட்டுவிடும் என்றும் சொல்லும் சாஸ்த்திரிகளும் தந்திரிகளும், ஏன்? அந்த சபரிமலை ஐயப்பனே கூட அந்த நிகழ்வு இல்லாமல் ஜனித்திருக்க முடியாது. ஒரு உயிரை உருவாக்கி, தன் உடம்பில் தாங்கி, உலகத்திற்குக் கொண்டுவரும் பெண் குலம் கோவிலுக்குப் போவது அந்தக் கோவிலுக்குப் புனிதம் என்று நான் நினைக்கிறேன். இந்த விசயம் சட்டம் படித்தவர்களுக்குக் கூட ஏன் புரியவில்லை? 10 வயதிலிருந்து 55 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சில வருடங்களுக்கு முன் ஆணை பிறப்பித்திருந்ததாமே?!

மீரா ஜாஸ்மினுடையது ஒரு வித்தியாசமாக பிரச்சினை. எனக்கு ஒரு கேள்வி. மீரா ஜாஸ்மின் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தது குற்றம், தீட்டு!. அந்தத் தீட்டைக் கழிக்க தீட்டு ஏற்படுத்தியவரிடமே பணம் வாங்குவார்களா??? அந்தப் பணம் மட்டும் தீட்டு இல்லையா? மேலும் சில கேள்விகள்: "இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கோவிலில் நுழையக்கூடாது" என்கிற சட்டம் எந்த வடிவத்தில் இருக்கும்? கோவில் சட்ட திட்டங்கள் ஆவணங்களாக இருக்குமா? அல்லது கோவில் வாசலில் "இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை" என்று பலகை வைப்பதோடு சரியா? பிற மதத்தைச் சார்ந்தவர்கள் இந்து கோவிலுக்கு வருவது இந்து மதத்திற்கு நல்லது தானே? இந்து மதத்தை விரிவு படுத்த இது ஒரு நல்ல வழி தானே?

Wednesday, July 12, 2006

தோழா தோழா தோள் கொடு!

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட எதுவுமே சிக்கலான விசயம் தான். அந்த விசயம் "நட்பு" என்றால் அது மேலும் சிக்கலானது. அதிலும், அந்த இருவரில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண் என்றால் சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லை! Cross-gender friendship என்று சொல்லப்படும் "ஆண் - பெண் நட்பு" விவாதிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு சுவாரசியமான தலைப்பு என்பதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

ஆண்-பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி - ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான்.

நம்ம ஊர் தமிழ் சினிமாக்கள் எல்லாம் "சாத்தியம் இல்லை" என்று தான் இன்றுவரை நிரூபித்திருக்கின்றன. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். 'பாலைவனச் சோலை' படத்தில் சுகாசினிக்கும் நான்கு ஆண்களுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவும். கடைசியில் அதில் ஒருவர் மேல் காதல் ஏற்படும். 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் ஷாலினியும் பிரசாந்த்தும் இனை பிரியாத நண்பர்களாக இருப்பார்கள். ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படும் போதுதான் இருவருக்கும் மனதில் காதல் ஒளிந்திருப்பது தெரியவரும். இப்படி பலத் திரைப்படங்கள் உள்ளன. நட்பு என்பது பின்னால் தோன்றும் காதலுக்கான அஸ்திவாரமாகத் தான் திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமன்றி நம் வரலாற்றிலும், இதிகாசத்திலும், இலக்கியத்திலும், ஆண்-பெண் நட்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் நட்புக்கு எங்கேயும் எதிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை! ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற சமுதாய எதிர்ப்பார்ப்பு, சமுதாய ஆதரவின்மை மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடு ஆகியவை யதார்த்தமான நட்பு மலர்வதைத் தடுக்கிறது. நம்ம தமிழ்ச் சமுதாயத்தில் தான் இப்படியென்றால், அமெரிக்காவில் கூட ஒரு ஆண் ஒரு பெண்ணின் நெருங்கியத் தோழனாக இருந்தால், அந்த ஆண் ஒரு "gay" ஆக இருப்பானோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது! சில பெண்களும், gay ஆண்களை நண்பர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். ஏனென்றால் அது தொல்லை இல்லாத நட்பாம்!

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியை, வகுப்பறையில், மாணவன்-மாணவி-மணவன்-மாணவி என்று மாற்றி மாற்றி உட்கார வைத்திருப்பார். ஆஹா! ஆண்-பெண் நட்பை பள்ளிப் பருவத்திலிருந்தே வளர்த்தார்களோ என்று நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டாம். ஆசிரியை அப்படி எங்களை உட்கார வைத்ததற்கு காரணம், அப்பதான் நாங்கள் பக்கதிலிருப்பவர்களிடம் பேசாமல் இருப்போம், வகுப்பில் அமைதி நிலவும் என்பதற்காக! அந்த மாதிரியான பள்ளிச் சூழ்நிலையில் படித்துவிட்டு, நான் பொறி இயல் கல்லூரியில் சேரும்போது, சக மாணவர்களுடன் பேசிப் பழக மிகவும் சங்கோஜப்பட்டேன். அந்த சின்ன வயதில் இம்மாதிரி எண்ணங்களைப் பதித்தார்களென்றால், ஆண்-பெண் நட்புக்கு மாறாக விரிசல் தான் ஏற்படும்.

"Cross-gender" நட்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரு பக்க வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு ஆண்-பெண் நட்பு என்பது சுவாரசியமாகத் தோன்றினாலும், "அது வேறு ஏதோ ஒன்றில் சென்று முடிந்துவிடும்" என்கிற பயமும் இருக்கிறது. எந்தவிதமான சபலங்களும் இல்லாமல் புனிதமான நட்பு மட்டுமே கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒரு ஆண் தன் தோழியுடனோ, ஒரு பெண் தன் தோழனுடனோ காலார நடக்கையில், சேர்ந்து புத்தகம் படிக்கையில், மணிக்கணக்காக பேசுகையில், உணர்ச்சிகள் எப்படி குறுக்கிடாமல் இருக்க முடியும்? என்கின்றனர் சிலர். அப்படியே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவன் அந்த பெண்ணுக்கும், அதே போன்ற மனைவி அந்த ஆணுக்கும் அமைவதன் சாத்தியக்கூறு குறைவு. இதை எழுதும் போது அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கவிதை வரிகள் சரியாகத் தெரியவில்லை, ஆனால் கருத்து இதுதான்: ஒரு ஆணும், அவனுடைய தோழியும் வெகு நேரம் மனம் விட்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அந்தப் பெண், "நேரம் ஆகிவிட்டது என் கணவர் காத்திருப்பார்" என்று சொல்லி விடைபெற்றுச் சென்றுவிடுகிறாள். நண்பன் நினைக்கிறான், கணவனிடம் ஒரு பெண் "என் நண்பன் காத்திருக்கிறான், நான் அவனைக் காணச் செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு நண்பனைத் தேடி வரும் காலம் வருமா என்று!

ஆண்-பெண் நட்பைப் பற்றி நம்பிக்கையான கருத்துக்களும் இருக்கின்றன. ஆண்கள், பெண்களின் நட்பை அதிகமாக விரும்புகிறார்கள். "பெண்களிடத்தில் ஆண்களிடம் கிடைக்காத ஒரு மிருதுவான மனதை வருடும் அன்பு கிடைக்கிறது. பெண்களிடம் எங்களுடைய பலத்தையோ, செல்வாக்கையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பலவீனத்தைக் காட்டினாலும், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆண் - பெண் நட்பை பல விசயங்கள் நிர்ணயிக்கின்றன. வயது ஒரு முக்கிய காரணம். கல்லூரி வயதில் தான் அதிகபட்ச ஆண் - பெண் நட்புகள் மலர்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இந்த வகை நட்புக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கணவனின் நண்பர்கள் அவளுடைய நண்பர்களாக ஆகிறார்கள். அவளுடைய கல்லூரி கால நண்பர்களுடனான நட்பு அவ்வப்போது தொலைபேசுவதோடு நின்று போய்விடுகிறது. மற்றொரு காரணம் ஒருவர் எந்த அளவு முற்போக்குச் சிந்தனை உடையவராக இருக்கிறார் என்பது. ஆண் - பெண் நட்பு கலாசார எல்லைகளுக்குச் சவால் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

வயது, இனம், மதம், நாடு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றைக் கடந்த நட்பு, ஏன் உணர்ச்சிகளைக் கடக்க முடியாது? முடியும்! அது சாத்தியம்! அப்படி என்ன இந்த வகை நட்பினால் நன்மை? ஒரு ஆண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி பெண்ணிடமிருந்தும், ஒரு பெண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி ஒரு ஆணிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஆணின் சிந்தனைகளையும் ஒரு பெண்ணின் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சிந்தனை வட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பாராட்டக்கூடிய சமுதாயமாக நம் சமுதாயம் இருக்கவேண்டும்.




Monday, July 10, 2006

ஃபெட்னா 2006 தமிழர் விழா - ஒரு கண்ணோட்டம்

ஃபெட்னா(FeTNA) 2006 விழா முடிந்த கையோடு, சுந்தரவடிவேல் போல சுடச் சுட பதிவு எழுத ஆசைப்பட்டேன். நேரம் கிடைக்கவில்லை. 1999 ஆம் ஆண்டிலிருந்து என் கணவர் தொடர்ந்து அனைத்து ஃபெட்னா விழாக்களுக்கும் சென்று வருகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் கதை கேட்டுத் தெரிந்துகொள்வேனே தவிர, நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததில்லை. நான் முதன் முதல் சென்ற ஃபெட்னா விழா 2003 ஆம் ஆண்டில் நியூஜெர்சியில் நடந்த விழா. அப்போது தான், ஃபெட்னா என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒன்று கூட்டக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு என்று தெரியவந்தது. அங்கே நான் சந்தித்த பிரபலங்கள், அவர்கள் என்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகளினாலும், அதனால் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணத்தாலும், எங்கள் பேட்டையில் நடைபெறுவதாலும், 2004 ஆம் ஆண்டு பால்டிமோரில் நடைபெற்ற ஃபெட்னா விழாவில் முழு மூச்சாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த விழாவில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டன, மேலும் ஆர்வம் அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் முடிந்த வரை ஃபெட்னாவுக்குச் சென்று வர வேண்டும் என்று முடிவெடுத்தேன். சென்ற ஆண்டு சில காரணங்களால் டெக்ஸாஸ் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு நியூயார்க்கில் அதுவும் மன்ஹாட்டனில் விழா என்று தெரிந்ததும் குதூகலமாக முன் பதிவு செய்தோம். பிறகு ஃபெட்னா இணையதளத்தில் விழாவுக்கு வரும் பிரபலங்கள் பட்டியலைப் பார்த்ததும் சற்று ஏமாற்றமாக இருந்தது. ராதிகா, சரத்குமார், வைரமுத்து, பா.விஜய், அறிவொளி, வினோதினி, ஸ்வாதி, தேவிப்பிரியா, குட்டி, வாணி ஜெயராம், ஹாரிஸ் ராகவேந்திரா, மாதங்கி, விஜயலக்ஷ்மி நவநீதக்கிருஷ்ணன் குழுவினர் ... இதில் அறிவொளி, விஜயலக்ஷ்மி குழுவினர் தவிர மற்றவர்கள் எல்லாருமே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு முறையும் சினிமா துறையிலிருந்து கலைஞர்களை வரவழைப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த முறை இத்தனை பேர் தேவையா என்று தோன்றியது. விழாவுக்கு ஒரு மாதத்திற்கும் முன், விஜயலக்ஷ்மி குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டதால் அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. என்னுடைய ஆர்வம் காற்றிறங்கிய பலூன் போலானது. போவதா வேண்டாமா என்று யோசனையில் இருந்தபோது, நண்பர்களெல்லாம் சும்மா ஜாலியா போய் வரலாம் வாருங்கள் என்று ஊக்கப்படுத்தியதால், சரியென்று கிளம்பினோம்.

சனிக்கிழமை(ஜூலை 1) காலை சுமார் 10 மணிக்கு விழா நடக்கும் மன்ஹாட்டன் சென்ட்டருக்கு அருகில் இருந்த ஹோட்டல் நியூயார்க்கரில் பதிவுச் சீட்டுக்களையும், விழா மலர், மற்றும் சில இத்யாதிகள் அடங்கிய பையையும் பெற்றுக்கொண்டோம். விழா மலரை எடுத்துப் பார்த்தேன். அட்டை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்ஹாட்டன் வீதிகளில் தமிழன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு போவது போல் தீட்டப்பட்டப் படம் (தமிழனுக்கு அடையாளம் மாட்டு வண்டி தானா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், அது ஒரு பாரம்பரியச் சின்னம் என்பதற்காக அப்படி போட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது). அதைப் பார்த்ததும், அன்று காலை நானும் கணவரும் மன்ஹாட்டனில் வந்திறங்கிய காட்சி கண் முன் தெரிந்தது. அரங்கித்தில் இருந்து இரண்டு ப்ளாக்குகள் தள்ளி காரை நிறுத்தியிருந்தோம். நான் பட்டுப்புடவையை இழுத்துச் செருகிக்கொண்டு, என் கணவர் பட்டு வேஷ்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு, பெட்டி, பைகளுடன் சாலைகளைக் கடக்கையில், மன்ஹாட்டன் மக்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். மாட்டு வண்டி ஒன்று எங்களுக்குக் கிடைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் :-)

முதல் நாள் காலை நிகழ்ச்சிகள் சுறு சுறுப்பாக இருக்கவேண்டாமா? அதற்கு மாறாக, தூக்கத்தை வரவழைத்தன. சுமார் 45 நிமிடங்கள் மேடையை ஒரு நடன ஆசிரியையிடம் கொடுத்துவிட்டார்கள். அவர் ஒவ்வொரு மாணவியாக அறிமுகப்படுத்தி, நடனத்தைப் பற்றிய விளக்கத்தை விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்கத் தேசிய கீதத்துக்குப் பிறகு இந்திய தேசியக் கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் சொன்னார். பாடினால் என்ன? என்று நான் கேட்டபோது, ஃபெட்னா வட அமெரிக்கவில் நிறுவப்பட்ட ஒரு தமிழ் அமைப்பு. இதில் இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி, பிற நாட்டுத் தமிழர்களும் கலந்துகொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்திய தேசியக் கீதத்தை மட்டும் பாடுவது முறையில்லை என்று சொன்னார். சரியென்று பட்டது எனக்கு. வரிசையாக நடனங்களைப் பார்க்க ஆர்வமில்லாமல் மதிய உணவுக்காக உணவுக்கூடத்திற்குச் சென்றோம். சுந்தரவடிவேல் சொன்னது போல் சாப்பாட்டுக் கடை கூத்தை தனிப் பதிவாகத் தான் போடவேண்டும். இருந்தாலும், பல வருடங்களாக இங்கே நடக்கும் தமிழ்ச் சங்க விழாக்களில் உணவுக்காக நீண்ட வரிசையில் நின்று காத்திருத்தல், உணவுக் கிடைக்காமல் பின்னிரவில் வீடு செல்லும் போது மெக்டொனால்ட்ஸ், டாக்கொ பெல் போன்ற உணவகங்களில் சாப்பிடுதல் போன்றவையெல்லாம் பழகிவிட்டன. அதனால் உணவு விஷயம் பெரிதாகத் தெரியவில்லை. மதிய உணவுக்குப் பின் அன்றைய நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்தேன். அதில் நான் பார்க்க விரும்பிய நிகழ்ச்சிகள் இரண்டே இரண்டு தான். 4 மணிக்கு புலவர் அறிவொளி தலைமையில் பட்டிமன்றம். 7 மணிக்கு வைரமுத்து, அன்புமணி, சரத் குமார், ராதிகா ஆகியோரின் உரைகள். விடுதி அறையில் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு 4 மணிக்கு பட்டிமன்றத்திற்கு வந்து அமர்ந்தோம். பட்டிமன்றம் நன்றாகப் போனது, ஆனால் நான் எதிர்பார்த்தது போல் கலகலப்பாகவோ, விறுவிறுப்பாகவோ இல்லை. 7 மணி நிகழ்ச்சியில் வைரமுத்து மற்றும் அன்புமனியின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வைரமுத்து பேசும் போது "இந்தியத் தமிழர்கள் தமிழுக்கு முகம் கொடுத்தார்கள். இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கு முகவரி கொடுத்தார்கள்" என்றார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது!. மேலும், "இங்கே முன் வரிசையில் இந்தியத் தமிழர்கள் வெளிச்சத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். இங்கேயுமா இலங்கைத் தமிழர்கள் பின்னால் இருட்டில் அமர்ந்திருக்க வேண்டும்?" என்றார். கூட்டம் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது! அன்புமணி பேசும்போது, "வெளிநாடுகளில் நான் ஒரு தமிழன் என்று சொன்னாலே, உடனே Are you from Srilanka? என்று தான் கேட்கிறார்கள்" என்றார். அதற்கும் கரகோஷம். இலங்கைத் தமிழர்களுக்கு ஃபெட்னாவில் எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஆனால் வந்திருந்த அனைவருமே இப்படி அடுத்தடுத்துப் பேசியது என்னவோ ஃபெட்னாவின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்றார் போல் பேசியது போல் செயற்கையாக இருந்தது. சரத் குமார், தமிழ் நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்குதலின் அவசியத்தைப் பற்றிப் பேசுகையில், "தமிழ் படிக்கமாட்டேன் என்று சொல்பவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார். வைரமுத்து, அன்புமனி, சரத் எல்லாருமே தமிழை மையக்கருத்தாக வைத்துப் பேசினார்கள். ராதிகா தொடக்கத்தில் தமிழ் மொழி, கலாசாரம் என்று லேசாகத் தொட்டுவிட்டு, பின் தன்னைப் பற்றியப் பெருமையையே பேசினார். தான் சினிமாவில் முன்னுக்கு வந்தது, தனது கடின உழைப்பு, தான் சாதித்தது என்று ஒரே சுய புராணமாக இருந்தது. ராதிகா, சரத் இருவருமே ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல், கருணாநிதியை 'தமிழினத் தலைவர்' என்று குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசியது வியப்பாக இருந்தது. அடுத்து 'முத்தமிழ் முழக்கம்' என்கிற நடன நிகழ்ச்சிக்கு முன் கிடைத்த சிறு இடைவேளையில் நண்பர்களுடன் அரங்கத்தைவிட்டு வெளியேறினேன். இரவு 10 மணியிருக்கும். வெளியே அருமையாகத் தென்றல் காற்று! காலார நடந்து எதிரே இருந்த ஸ்டார் பக்ஸ் காப்பிக் கடைக்குப் போனால் அது மூடியிருந்தது! மன்ஹாட்டனில், அதுவும் இரவு 10 மணிக்கு, அதுவும் ஸ்டார் பக்ஸ் மூடியிருக்கிறதா?! வியப்பாக இருந்தது. வேறொரு கடையில் தேனீர் குடித்துவிட்டு மீண்டும் அரங்கத்திற்கு வந்தபோது 'முத்தமிழ் முழக்கம்' தொடங்கியிருந்தது. இயல், இசை, நாடகம் என்று 3 பகுதிகள் கொண்ட நடனம். அருமையாக இருந்தது. ஆனால் மிக நீண்டதாக இருந்தது. இயல், இசை பகுதியைப் பார்ப்பதற்குள் கண்கள் சொருகியதால், அன்றைய கூத்துக்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டு விடுதி அறைக்குச் சென்றுவிட்டோம்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமைக்(ஜூலை 2) காலை. நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். இரவு 7 மணி வரை அரங்கத்தினுள் நுழையவேண்டாம் என்று முடிவு செய்தேன். நண்பர்களுடன் சைனா டெளன், லிட்டில் இடாலி போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மாலை 8 மணிக்கு அரங்கத்திற்குத் திரும்பினேன். 'குட்டி' யின் நடனம் முடிவடைந்திருந்தது. பிரமாதமாக இருந்தது என்று எல்லாரும் சொன்னார்கள். அடுத்து நடிகை ஸ்வாதி குழுவினர் நடனம். ஸ்வாதியின் உடையைப் பார்த்ததும் 'பக்' கென்றிருந்தது. உடன் ஆடிய அமெரிக்கா வாழ் நடனக் கலைஞர்களின் உடையும் அப்படியே. வழக்கமாக மலேசியா, சிங்கப்பூரில் நடிக நடிகையர் நடத்தும் கலை நிகழ்ச்சி போல் ஃபெட்னாவையும் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. இது ஒரு கம்யூனிகேஷன் இடைவெளி தான். கலைஞர்களை ஏற்பாடு செய்யும் ஃபெட்னா நிர்வாகிகள், அவர்கள் என்ன மாதிரி நடனம் ஆடுகிறார்கள், என்ன உடை அனிகிறார்கள் என்பது போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்வாதி, வினோதினி, தேவிப்பிரியா போன்றவர்களுக்கு ஃபெட்னாவைப் பற்றி யாரும் விளக்கிச் சொல்லியிருக்கவும் மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இது மற்றுமொரு கலை நிகழ்ச்சி. அவ்வளவுதான்! பலர் இந்த நடன நிகழ்ச்சியை ரசித்தாலும், பலர் வருத்தப்படவும் செய்தார்கள். உடையை கலாசாரக் கட்டுப்பாட்டுகளுடன் சம்பந்தப் படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் உடை என்பது உடம்பு, வயது, சூழ்நிலை ஆகிய மூன்றிற்கும் கட்டாயம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஃபெட்னா விழா எற்பாட்டின் போது நிர்வாகிகள் திரைப் படக் கலைஞர்களின் உடை, எந்தவிதமான நடனம் ஆடுகிறார்கள் போன்ற விவரங்களையும் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி தொடங்கியது. வாணி ஜெயராம் எழுபது, எண்பதுகளில் வந்த இனிமையான திரைப்படப் பாடல்களைப் பாடினார். ஹாரிஸ் ராகவேந்திரா, மற்றும் மாதங்கியும் இனிமையான பாடல்களைப் பாடினார்களில்.

திங்கள் கிழமை(ஜூலை 3) முழுவதும் வீணாகப் போனது! திங்கள் இரவு 6 மணிக்கு மன்ஹாட்டன் க்ரூஸ்(Cruise)! அதுவரை என்ன செய்வது? 5 மணி வரை எப்படியோ கதை பன்னிவிட்டு, கப்பல் நிற்கும் இடத்திற்குச் சென்றோம். கப்பலில், மன்னிக்கவும்! படகில் ஏறிய உடனேயே எனக்கு முகம் சுருங்கியது! கடலில் பயணிக்கும் 'ராயல் கரீபியன்', 'கார்னிவெல்' போன்ற சொகுசுக் கப்பல்கள் போல் இதுவும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஓரளவாவது பெரிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் சென்றது ஒரு ஃபெர்ரி படகு(ferry boat)! மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மேலே டெக்கில்(deck) நல்ல வேளையாக காற்றோட்டமாக உட்கார இடம் கிடைத்தது. சுற்றிலும் நியூயார்க்கின் ரம்மியமானக் காட்சிகள். உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இல்லாத ந்யூயார்க்கைப் பார்க்கும் போது மனம் கரைந்தது!

ராதிகாவும் சரத் குமாரும் டெக்கில் வந்து சற்று நேரம் நின்றிருந்தார்கள். அங்கே இருந்த உறவினர் ஒருவர் அவர்களைப் பார்த்ததும் ஆர்வத்துடன் எழுந்து நிற்க, அவருடைய மனைவி "ஒரு நடிகைக்காக எழுந்து நிற்கனுமா?" என்று கோபப்பட்டார். யாருக்காக எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஒரு பெண் நடிகையாக இருந்தால் அவள் மரியாதைக்குரியவள் அல்ல என்ற அவருடைய கருத்து என்னை வருத்தப்பட வைத்தது. சில நிமிடங்களில் நடிகை ஸ்வாதி அங்கே வந்தார். அன்று அவர் அனிந்திருந்த உடையும் பார்க்கச் சகிக்கவில்லை. படகின் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு வெளிப்புறத்திலிருந்து ஒருவர் ஏற முயன்று ஒரு கம்பத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார். யாராக இருக்கும் என்று பார்த்தால், அவர் நடிகர் - நடனக் கலைஞர் குட்டி! அவருக்கு ஒரு கால் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். குடித்திருந்தார். அவருக்கு இது தேவைதானா? என்னவாயிற்று இந்த நடிகர்களுக்கு? பெயரும், புகழும், பணமும் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நல்லபடியாக இருக்கலாமே?

க்ரூஸ் முடிந்து, மீண்டும் விடுதிக்கு வந்து பெட்டிப் படுக்கைகளை எடுத்துக்கொண்டு காரில் ஏற்றி, ந்யூயார்க்கை விட்டு வெளியேறியபோது, அப்பாடா என்றிருந்தது. ஆனால் மனம் வருத்தப்பட்டது, இரண்டு நாட்களாக ஆர்வத்திற்கும் அறிவிற்கும் தீனி கிடைக்கவில்லையே என்று. முந்தைய விழாக்களில் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ், பிரபஞ்சன், சிவகாமி(I.A.S), நர்த்தகி நடராஜன், கவிஞர் சேரன் போன்றோரின் சந்திப்பும் அவர்கள் பரிமாறிய கருத்துக்களும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைப்போல் எடுத்துச் செல்வதற்கு இந்த விழாவில் எந்தக் நினைவும் கருத்தும் இல்லை! ஆனால் மீண்டும் அடுத்த ஆண்டும் ஃபெட்னா விழாவுக்குப் போவேன். இந்த விழாவில் பல பாடங்கள் கற்ற ஃபெட்னா நிர்வாகிகள் அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

நான் பார்க்காத சில நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நடன நிகழ்ச்சிகளின் மேல் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் போதும் போதுமென்கிற அளவு பல விழாக்களில் பார்த்தாகிவிட்டது. நான் பார்த்த நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. நான் அரங்கத்தினுள் இருந்த நேரத்தை விட விடுதி அறையிலும் மன்ஹாட்டன் தெருக்களிலும் இருந்த நேரம் தான் அதிகம். எனவே விழாவைப் பற்றிய என்னுடைய இந்தக் கண்ணோட்டம் என்னுடையது மட்டுமே.

Wednesday, March 29, 2006

22 முதல் 72 வரை பெண்கள்

சாகும் வரை காதல் குறையாமலும், வாழ்க்கைத் துணையின் கடைசி மூச்சு வரை கூடவேயிருந்து அன்புடன் கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தலைவணங்கிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். இது சும்மா கிண்டலுக்குத் தான்.

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண் வேண்டும் என்பது அவளுடைய வயதைப் பொருத்து வெகுவாக மாறும். எப்படி?

22 வயது: வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் வேண்டும்! அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், அப்படியொருவனை கற்பனையிலும் கனவிலும் சந்திக்க முயல்வதை அவளால் தடுக்க முடியாது. ஆணழகனாக, புத்திசாலியாக, வசதியானவனாக, நகைச்சுவை உணர்வுள்ளவனாக, அவளை பூக்களாலும் பரிசு பொருட்களாலும் திக்குமுக்காடச் செய்யும் காதலனாக இருக்கவேண்டும்.

32 வயது: அவன் நல்லவனாக இருந்தால் போதும். காதலும் கவர்ச்சியும் இல்லாவிட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள், நிரந்தரமான வேலை இவை அவசியம். இது இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும், தான் வீட்டில் சமைத்த உணவில் த்ருப்தியடைய வேண்டும், வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்யவேண்டும். ஒட்டுமொத்தத்தில் ஒரு குடும்பப்பாங்கான ஆண் தேவைப்படுகிறான்.

42 வயது: ஏதோ ஒருவன் இருந்தால் போதும். சற்று தொப்பை இருந்தாலும் பரவாயில்லை. தலையில் கொஞ்சம் முடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தால் போதும். வாரம் ஒரு முறை தன் முகத்தை சவரம் செய்தால் போதும். மாதம் ஒரு முறை அவளை வெளியில் அழைத்துச் சென்றால் போதும். அவள் பேசும் போது அவ்வப்போது புன்னகையும், அவ்வப்போது தலை அசைத்தலும் போதும்.

52 வயது: குறைந்தபட்சம் அவளுடன் அவன் ஒரே வீட்டில் இருந்தாலே போதும். அவள் பெயரை அவன் ஞாபகம் வைத்திருந்தால் மகிழ்ச்சியே. அவள் பேசும் போது தூங்கி விழாமல் இருந்தால் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும்.

62 வயது: அவளை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு ஒரு ஓரமாக இருந்தால் நன்றாக இருக்கும். தன் பேரக்குழந்தைகளை பயந்து அழவைக்காமல், பாத்ரூம் எங்கிருக்கிறது, அவனுடைய பல் செட் எங்கிருக்கிறது என்று நினைவிருந்தால் போதும். அவளுடைய உதவியில்லாமல் அவனே எழுந்து உடை மாற்றிக்கொண்டால் நலம். அவனுடைய கொரட்டைச் சத்தம் கேட்காத ஒரு இடமாவது அந்த வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்.

72 வயது: இத்தனை வயது வரை அவள் உயிருடன் இருந்தால் ஆச்சரியம். அப்படியே இருந்துவிட்டால், அவன் சுவாசித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலே போதும்.

Thursday, March 23, 2006

உதவியா உபத்திரவமா?

எங்க ஊரில் நடக்கவிருக்கும் ஒரு பட்டிமன்றத்திற்காக தலைப்பு தேடிக்கொண்டிருந்தபோது, இந்தத் தலைப்பு கிடைத்தது - "சமையலறையில் மனைவிக்குக் கணவன் உதவியா? உபத்திரவமா?"

என்னை நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேன். என் கணவர் சமையலறையில் எனக்கு உதவியா அல்லது உபத்திரவமா?

சமையலறையில் மனைவிக்கு முழுமூச்சாக உதவி செய்யும் கணவன்மார் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். காய்கறி வெட்டிக்கொடுப்பது, பூரி மாவு தேய்த்துத் தருவது போன்ற உதவிகளை செய்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக சேர்ந்து சமைப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கும் என் கணவருக்கும் சண்டையும் விவாதமும் வருவதே சமைலறையில் தான். We just don't synch in the kitchen!

ஒருவருக்கு ஒருவர் சமையலில் உதவி என்கிற பேச்சே எங்கள் வீட்டில் இல்லை. ஏனென்றால் நாங்கள் இருவருமே நன்றாகச் சமைப்போம். அதனால் சமையலறையில் 'ego clash' அடிக்கடி வரும்! தன் அம்மாவின் கைப்பக்குவம் என்கிற மூக்கனாங்கயிற்றைத் தாண்டி மற்ற வகை உணவுகளை சுவைக்கத் தயங்கும் கணவன்மார்களில் என் கணவர் எந்த விதிவிலக்கும் அல்ல. தனியாகச் சமைத்தால் பிரமாதமாகச் சமைப்பார்! குறிப்பாக அசைவ உணவு வகைகளை மிகவும் ரசித்துச் சுவையாகத் தயாரிப்பார். ஆனால் செய்முறையை(recipe) மட்டும் அவரிடம் கேட்டுவிடக்கூடாது. கேட்டீர்களென்றால் லேசாக வயிற்றைக் கலக்கும்! செய்வதை நேரில் பார்த்தால் லேசாகத் தலையே சுற்றும்! சப்பிட்டால்??? உங்கள் ஆயுளில் சில மாதங்கள் குறையலாம்!!! ஆனால் சுவை??? சூப்பரோ சூப்பர்!!! அவர் செய்யும் அனைத்து உணவு வகைகளிலும் இந்த மூன்று ஐட்டங்கள் தவறாமல் இருக்கும்.

1. MTR கரம் மலாசா (MTR ரின் பரம ரசிகர் என் கணவர்)2. MSG - Mono Sodium Glutamate (இது உடம்புக்குக் கெடுதல் என்று தெரிந்தும் அதன் சுவையில் ஒரு "kick" இருக்கிறது என்று விவாதிக்கிறார்)3. பாளம் பாளமாக வெண்ணை அல்லது வண்டி வண்டியாக எண்ணை(oil-bath ஆச்சா என்று நண்பர்கள் கிண்டலடிப்பது வழக்கம்)

மற்றபடி கையில் கிடைத்த பொடி, மசாலா எல்லாவற்றையும் போடுவார். உண்மையிலேயே அவர் செய்யும் உணவு வகையின் செய்முறையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் அவர் சமைக்கும் போது கூடவே இருந்தால் தான் முடியும்! எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கவேண்டும் அவருக்கு. அவர் சமைக்கும் அனைத்து ஐட்டங்களுக்கும் "spicy" என்கிற வார்த்தையை சேர்த்துக்கொள்வார். உதாரணத்திற்கு, "spicy சிக்கன் குழம்பு", "spicy கத்தரி வறுவல்", "spicy பிரியாணி". சமைத்து முடித்தவுடனும் அவர் செய்யும் அலம்பலும் அலட்டலும் தாங்கமுடியாது. சப்பிடுபவர்களைத் "சாப்பாடு எப்படி? உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சேன். எப்படி இருக்கு?" என்று கேட்டு துளைத்து எடுத்துவிடுவார். ஒரு வாரம் சென்ற பிறகு கூட "போன வாரம் நான் வைத்த குழம்பு அட்டகாசம் இல்ல?" என்று கேட்டுக்கொண்டிருப்பார். அவர் சமைத்ததன் பின் விளைவுகள் பாத்திரங்களைக் கழுவும் பொழுது தெரியும். நான் ஆசை ஆசையாக வாங்கி பார்த்துப் பார்த்து உபயோகித்துக்கொண்டிருந்த non-stick பாத்திரங்களில் கீறல் விழுந்திருக்கும். அவரைக் கூப்பிட்டுக் காட்டி, என்ன செய்தீர்கள் என்று கேட்டால், அதில் கொத்துப் பரோட்டா செய்தேன் என்பார். நம்ம ஊரில் ரோட்டோரக் கடைகளில் பரோட்டாவைக் கொத்தும் போது நம்ம ஊரில் 'டங் டங்' என்று ஒரு சத்தம் வருமில்லையா? அந்த மாதிரி sound effect வரவேண்டுமென்று இரண்டு கரண்டிகளை வைத்துக் கொத்தியதால் பாத்திரத்தில் கீறல் விழுந்துவிட்டது என்பார்!.

நான் சமைக்கும்போது அவர் கூட இருந்தாலும் சண்டை தான் வரும்! இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்தச் சொல்லுவர். நான் சற்று அசந்தால், எனக்குத் தெரியாமல் குழம்பில் மிளகாய்ப்பொடியை கூடுதலாகப் போடுவார்!
மனைவி ஊருக்குப் போய்விட்டால் கணவன்மார்கள் வெளியிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ சாப்பிடுவார்கள். ஆனல் எங்கள் வீட்டில் தலைகீழ்! நான் வீட்டில் இல்லையென்றால் என் கணவர் நண்பர்களை அழைத்து எங்கள் வீட்டில் சாப்பாடு போடுவார். ஆனால் நானும் அவரும் சேர்ந்து சமைப்பதோ, நான் அவருக்கு சமையலில் உதவி செய்வதோ, அவர் எனக்கு உதவி செய்வதோ எங்கள் வீட்டில் நடக்காத காரியம்.

அவர் நன்றாகச் சமைப்பதனால் அவர் செய்யும் உபத்திரவங்களை பொறுத்துக்கொள்வதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அதனால், அவர் எனக்கு சமையலறையில் "நிறைய உதவி, கொஞ்சம் உபத்திரவம்" என்று பட்டிமன்றத் தீர்ப்பு சொல்லலாம். உங்கள் வீட்டில் எப்படி?

Monday, March 06, 2006

ஈவ் டீசிங் - என் அனுபவங்கள்

Eve Teasing Blog-a-thon பற்றிய சுட்டியை மதி அனுப்பியிருந்தார். என்னுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

'Eve teasing' என்கிற வார்த்தை வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே அதன் அனுபவங்களால் பல முறை வேதனை அடைந்திருக்கிறேன் தமிழ் நாட்டில் இருந்தபோது. கல்லூரி நாட்களில் என் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இடையே உள்ள ஆண்கள் விடுதியைத் தாண்டித்தான் ஒவ்வொரு நாளும் செல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் நானும், என்னைப் போல் பல மாணவிகளும் ஆண்கள் விடுதியைத் தாண்டிப் போகும்போது மாணவர்கள் எங்கள் பெயர்களைச் சொல்லி கூக்குரலிடுவார்கள், விசில் அடிப்பார்கள். அந்த இடத்தைக் கடந்து செல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். மாணவிகளெல்லாம் செர்ந்து வார இறுதிகளில் எப்போதாவது சினிமாவுக்கோ, உணவகங்களுக்கு செல்வோம். அங்கேயும் இதே கூக்குரல்களும், கேலிப்பேச்சும், கோணல் பார்வைகளும் பின்தொடரும். பெண்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், சுதந்திரமாக கல்லூரி வளாகங்களில் வளையவரும் சூழ்நிலை அவ்வளவாக அப்போது இருக்கவில்லை.

பின்னர் நான் சென்னையில் கணிணிப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்தபோது நடந்த சில சம்பவங்கள் இன்னும் என் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. தினசரி மைலாப்பூரிலிருந்து டி நகருக்கு பல்லவன் பேருந்தில் பயணம் செய்யவேண்டும். கூட்டம் நிரம்பி வழியும் அந்தப் பேருந்துகளில் ஆண்களுக்கு மத்தியில் முட்டிக்கொண்டும் இடித்துக்கொண்டும் பயணம் செய்வதென்னவோ பழகிவிட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் ஒரு ஆள் வரம்பு மீறி என்னிடம் நடந்துகொண்டான். சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தும் அளவு அன்று எனக்குத் தைரியம் இல்லை. கோபமும் அழுகையும், அருவெறுப்பும், இயலாமையுமாக அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் உடனே இறங்கி அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதேன்.

மற்றுமொரு நாளில், அதே சென்னையில் ஒரு நாள் பயிற்சி முடிய இரவு 9 மணியாகிவிட்டது. டி நகரிலிருந்து மைலாப்பூர் செல்வதற்கு தவறானப் பேருந்தில் தெரியாமல் ஏறிவிட, அது எழும்பூருக்குச் சென்றுவிட்டது. தவறை உணர்ந்து எழும்பூரில் ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். அது எந்த இடம் என்று கூட சரியாகத் தெரியவில்லை. சற்றுத் தள்ளி இருந்த சில பெட்டிக்கடைகளைத் தவிர வேறு ஆள் நடமாட்டம் இல்லை. அடுத்து அங்கே வரும் பேருந்தில் ஏறிவிடலாம் என்று காத்திருந்தேன். அப்போது பைக்கில் ஒரு இளைஞன் வந்தான். பைக்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்து "ஹலோ, நீங்க எங்கே போகனும்?" என்றான். நான் "மைலப்பூர்" என்றேன். "நானும் அங்கதான் போறேன், வாங்க உங்களை அங்கே ட்ராப் பன்னிவிடுகிறேன்" என்றான். எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது. "பரவாயில்லை, நானே போய்க்கொள்கிறேன்" என்றேன். மறுபடியும் அவன் "நீங்க என்னைத் தவறாக நினைக்கறீங்கன்னு நினைக்கிறேன். நான் டீசன்டான ஆள்தான். உங்களுக்கு உதவனும்கிற எண்ணத்தோடதான் கேட்டேன், பயப்படாம வாங்க" என்றான். நான் பேச மறுத்து பயத்தில் உறைந்துபோய் நிற்க, அவனும் விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தான். நல்ல வெளையாக ஒரு பேருந்து வந்து நின்றது. அது எங்கே போகிறது என்று கூடப் பார்க்காமல், அந்த இடத்திலிருந்து அகன்றால் போது என்று ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன். வீட்டிற்குச் சென்று தோழிகளிடம் நடந்ததைச் சொல்லி வழக்கம்போல் அழுதேன்!

ஒரு முறை சினிமா கொட்டகையில் குடித்துவிட்டு என்னருகில் வந்தமர்ந்த ஒருவன், கேள்வி மேல் கேள்விகேட்டு என்னை வம்பில் இழுக்க, பாதி சினிமாவில் எழுந்து வெளியே சென்றுவிட்ட அனுபவமும் உண்டு.

சரிகா ஷா போன்ற உயிர் துறந்த பெண்களைப் பார்க்கும்போது என்னுடைய அனுபவங்கள் மிகச் சாதாரணமானவையே. ஆனால் அன்று என் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் குலைத்தவை. இந்த ஈவ் டீசிங் இந்தியாவில் மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது என்றாலும், மற்ற நாடுகளில் "sexual harrassment" என்று வேறு விதமாக அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றிய சில சுற்றுலா பதிப்புகளில் ஈவ் டீசிங் பற்றி எச்சரிக்கைக் கூட இருக்கிறதாம்! எவ்வளவு பெரிய மானக்கேடு!

சட்டம், மாறுவேட போலீஸ் போன்றவற்றால் ஈவ் டீசிங் தொல்லைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன, இருந்தாலும் சினிமாக்களில் ஈவ் டீசிங் காட்சிகளை படம் போட்டு வண்ணமயமாகக் காட்டாமல் இருந்தால் இன்னும் குறையும் என்று நம்புகிறேன்.

Monday, February 27, 2006

எங்கிருந்தாலும் வாழ்க!

நேற்று முன் தினம் 9 வருடங்களாக என் பாசத்திற்குரியதாக இருந்த ஒரு ஜீவனைப் பிரிய நேரிட்டது!
இந்த அந்நிய மன்னில் எனக்கே எனக்கென்று கிடைத்த முதல் சொத்து அவன்! பனியோ மழையோ வெயிலோ புயலோ, எனக்காக வெளியே எத்தனை நேரமானாலும் காத்துக்கிடப்பான்...
நான் எங்கு வெளியே போனாலும் என்னை பத்திரமாக அழைத்துக்கொண்டுச் செல்வான்...
அவன் எங்கே எந்தக் கூட்டத்தில் நின்றாலும், அவனுடைய உடைந்த மூக்கு அவனை எனக்கு அடையாளம் காட்டிவிடும்...
இரண்டு வருடங்களுக்கு முன் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது கூட சிறு முக்கல் முனகல்களோடு வீட்டில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்தான்...
அவனுக்கு எவ்வளவோ செலவு செய்தும், அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

அந்த ஜீவன் என்னுடைய பச்சை நிற மாஸ்டா 626 கார்! 9 வருடங்களுக்கு முன் வாங்கியது. அப்போதே 50,000 மைல்கள் ஓடியிருந்தது. அலபாமா வீதிகளில் பெருமையுடன் ஓட்டிக்கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகு நானும் என் கணவரும் அந்தக் காரில் டிவி, கம்யூட்டர், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் என்று எவ்வளவு திணிக்கமுடியுமோ திணித்து 730 மைல்கள் பயணித்து வாசிங்டன் டிசிக்கு வந்தோம். லேசாக ப்ரேக் அடித்தாலும், பின்னாலிருந்து பொருட்கள் முன்னால் வந்து விழும்! அதன் பிறகு, எத்தனையோ ஊர்களுக்கு அந்தக் காரில் பயணைத்திருக்கிறோம். பின் வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யத் தொடங்கியது. வேறு புதுக் கார் வாங்கினோம். ஆனாலும், அந்தப் பழைய காரும் அவ்வப்போது ஆத்திர அவசரத்திற்கு கைக்கொடுத்தது. பிறகு, அதன் அழகான பச்சை நிறம் மங்கி, துறுப்பிடித்து குஷ்டம் வந்ததுபோல் ஆகிவிட்டது. அதற்கப்புறமும் அதை வெளியே ஒட்டுவதற்கு எனக்கு வெக்கமாக இருந்தது. அதனால் கடந்த ஒரு வருடமாக கராஜில் முடங்கிக் கிடந்தது. கடைசி முயற்சியாக அதை ஓடவைக்கலாம் என்று சென்ற வாரம் மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்றேன். இனி அந்தக் காருக்கு பணம் செலவு செய்வது அர்த்தமற்றது என்று கைவிரித்துவிட்டார்கள்! எனவே, என் பாசத்துக்குரிய பச்சை நிற மாஸ்டா 626 காரை Salvation Army க்கு நன்கொடையாக அளித்துவிட்டேன்! கடைசியாக அதனை கார் நிறுத்தத் தளத்தில் அனாதையாக விட்டுவிட்டு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது! அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்றுவிடுவார்களாமே? நினக்கவே வேதனையாக இருக்கிறது. எங்கிருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும், என் பச்சை நிறக் கார் வாழ்க!

Sunday, February 26, 2006

உங்கள் ஆதரவு தேவை

பெண்கள் இன்று பல துறைகளில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளுக்கு, அந்தந்த துறைகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களாலோ அல்லது பெண் தலைவர்களாலோ தீர்வு காண முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பல பெண்கள் அவ்வாறு முயற்சிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சில உதாரணங்களைப் பார்க்கும் போது எனது நம்பிக்கை நலிவுற்றுப் போகிறது. இன்று மற்ற எல்லாத் துறைகளையும் விட பெண்களுக்கு பாதகமாக இருப்பது ஊடகங்களே. குறிப்பாக தொலைக்காட்சி. அதிலும் குறிப்பாக தொலைக்காட்சித் தொடர்கள். முகூர்த்தம், மலர்கள், மனைவி, செல்வி, கோலங்கள், கணவருக்காக, தீர்க்கசுமங்கலி போன்ற சன் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைப் பார்த்தாலே புரியும் பெண்களைக் குறிவைத்துத்தான் சன் தொலைகாட்சியின் பெரும்பான்மையான வியாபாரம் இருக்கிறது என்று. இந்தத் தொடர்களில் ஒன்றிரண்டை அவ்வபோது நான் பார்ப்பதுண்டு. இவை எல்லாவற்றிலும் 'செல்வி' என்றத் தொடர் தான் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்தத் தொடரின் தயாரிப்பாளர் ராதிகா. ராதிகா ஒரு புகழ் பெற்ற நடிகை என்பது தெரிந்த விசயமே. அவருடைய தந்தை எம்.ஆர். ராதா பெரியாரின் கொள்கைகளைத் தழுவியவர். அந்த வளர்ப்பில் வந்தவர் ராதிகா. மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி பொருளாதார ரீதியாக வெற்றிபெற்றவர். மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய இவர், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையில் ஒரு தொடரை தொலைக்காட்சியில் செய்வது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. 'செல்வி' தொடரில் செல்வியாக வரும் இவர், மருந்துக்குக் கூட புன்னகை செய்யமாட்டார். குடும்பப் பாரத்தை தாங்கும் சுமைதாங்கி! சதா சோகமயாமாக வலையவரும் இவர் தன் நெருங்கியத் தோழியின் கணவரையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்கிறார் மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி. உலகம் முழுவதும் இந்தத் திருமணம் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் ராதிகாவின் தோழிக்கு மட்டும் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதாம்! இப்படிக்கூட ஒரு பெண்ணை முட்டாளாக்க முடியுமா? மாயா என்ற மற்றொரு பெண் செல்வியின் கணவரை அபகரிக்கத் திட்டம் போடுகிறாள். ஆக இந்தத் தொடரில், படித்த நல்ல குடுமபத்திலிருந்து வந்த மூன்று பெண்களுக்கு ஒரு ஆணைச் சுற்றி வருவதே முழு நேர வேலை! பார்க்கவே சகிக்கவில்லை. நான் பார்த்து வேதனையடைந்த மற்றோரு காட்சி - ராதிகாவின் தங்கையின் கணவன் இறந்துவிடுகிறான். இரண்டு கைக்குழந்தைகளுக்கு தாயான அந்தத் தங்கைக்கு விலாவரியாக சடங்கு வைத்து அவள் பொட்டையும் பூவையும் அழிக்கிறார்கள் சுற்றியிருக்கும் பெண்கள்!

ஒன்று சுய மரியாதை அற்றவர்களாக பெண்கள் இந்தத் தொடர்களில் சித்தரிக்கப்படுகிறார்கள், அல்லது NASA Engineer ரீதிக்கு மூலையில் ஒளி வட்டம் உள்ள பெண்களாக - உதாரணத்திற்கு 'ஆனந்தம்' தொடர் கதாநாயகி சுகண்யா போல் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொடரில் சுகண்யா கடவுள் போல் கொண்டாடப்படுகிறார். குடும்பத்திலும் தொழிலிலும் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை காண்கிறார். இவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கிறது.

இந்தத் தொடர்களில் பெண்கள் பேசும் வசனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! உதாரணத்திற்கு சில;

"ஒரு சுமங்கலி விதவையாகலாம், ஆனால் ஒரு விதவை சுமங்கலியாவது பெரும் பாவம்"

"இந்தத் தாலியும் பூவும் பொட்டும் என் கணவர் போட்ட பிச்சை"

"இந்த வீட்டிலே ஒரு மூலையில் நான் வேலைக்காரி போல் இருந்துவிடுகிறேன்"

பெண்களைப் பெண்களாக எப்போது சித்தரிக்கப்போகிறார்கள்? அன்றாட யதார்த்த வாழ்க்கையில் வரும் பெண்களை ஏன் தொலைக்காட்சித் தொடர்களில் காணமுடியவில்லை? காரணம் தொலைகாட்சி நிறுவனங்களில் சுயநலம். பெண்களைப் பெண்களாக சித்தரித்தால் வியாபாரம் ஆகாது. ஒன்று அவள் பிழியப் பிழிய அழவேண்டும், அல்லது தீய சக்தியாக உருக்கொண்டு மற்றவர்களை அழிக்கவேண்டும் அல்லது உலகத்தில் உள்ள அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆபத்பாந்தவளாக இருக்கவேண்டும். அப்போதுதான் வியாபாரம் நடக்கும். தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக சேவை செய்வோம் என்று எந்த வாக்கும் அளிக்கவில்லை என்றாலும், ஒரு குறைந்தபட்ச சமூகப் பொறுப்பாவது அவர்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. நடிகை குஷ்பூ தமிழ்க் கலாசாரத்தைப் பற்றி ஒரு நாள் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டார் என்று தமிழ்நாடே கொந்தளித்ததே, தமிழ்த் தொலைகாட்சிகளில் நாள் தோறும் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழ்க் கலாசாரத்தைக் கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறார்களே, அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? எதிர்ப்புகளை நம்மால் முடிந்தபோது, முடிந்த வடிவத்தில் தெரிவித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வாசிங்டன் பகுதியில், WAR(Women's Alliance for Rationality) என்கிற அமைப்பினர், தமிழ்த் தொலைகாட்சியில் பெண்களை சித்தரிக்கும் முறையை எதிர்த்து ஒரு இணைய விண்ணப்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் சுட்டியை இங்கே இடுகிறேன் - http://www.petitiononline.com/TVWAR001/petition.html இதில் கையெழுத்திட்டு உங்களது ஆதரவைத் தெரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சுட்டியை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பிவையுங்கள். மதி கந்தசாமியும் தன் வலைபதிவில் இதைப்பற்றி எழுதியுருக்கிறார் - http://mathy.kandasamy.net/musings/2006/02/26/324

Thursday, February 23, 2006

பெண்களின் பார்வையில் தொழில்நுட்பம்(Technology Through Women's Eyes)

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவியான ராபின் ஆப்ராம்ஸ், ஐ.நா சபையில் சில வருடங்களுக்கு முன் நடந்த பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள் இங்கே...

பெண்கள் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பல முக்கிய சாதனைகளை பல வருடங்களாகச் செய்து வந்தாலும், அவையெல்லாம் இன்றும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ரகசியங்களாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, Charles Babbage என்பவர் யாரென்று சுலபமாக சொல்லிவிடலாம். கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada Byron King என்கிற பெண் தான் உலகின் முதல் கம்பூட்டர் ப்ரொக்ராமர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அதே போல் 19ஆம் நூற்றாண்டில் நவீன கம்பைலர்கள் மூலம் மென்பொருள் தயாரிப்பதற்கான மகத்தான முயற்சிகளுக்காக Grace Hopper என்கிற பெண்மணிக்கு பல விருதுகள் கிடைத்தன, "Man of the Year" விருது உட்பட!!!

அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் எப்படி வெவ்வேறு விதமாக தொழில் நுட்பத்தைப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கின்றன. ஆண்கள் எப்பொழுதும் தமது கணிணிகளின் ஹார்ட் டிஸ்க்கின்(hard disk) அளவு பற்றியும் மைக்ரோ ப்ராஸஸர்களின்(micro proccessor) வேகத்தையும் பற்றியே பெருமையயடித்துக்கொண்டிருப்பார்கள். பெண்கள், கணிணிப் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறதென்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. உபயோகிக்க எளிதாக இருக்கவேண்டும், வேலை முடியவேண்டும் - இதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. ஒர் ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் கணிணிகள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆண்களையும் பெண்களையும் கற்பனைச் செய்யச் சொன்னபோது, உலகம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் கருவிகளாக எதிர்கால கணிணிகளை ஆண்கள் கற்பனைச் செய்தார்கள். பெண்களோ, மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவிகளாக எதிர்கால கணிணிகளை கற்பனைச் செய்தார்கள். பெண்கள் ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகவும் முடிவாகவும் கணிணிகளைப் பார்க்கிறார்கள். ஆண்கள் தம் உடல் சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்யும் கருவியாக கணிணிகளைப் பார்க்கிறார்கள்.

இந்த தொழில் நுட்பப் பார்வை வித்தியாசம், அமெரிக்காவில் சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. 10 வயது முதல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கணிணிகளின் மேல் சம அளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். 10 வயதிற்கு மேல், பெண் குழந்தைகளின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மென்பொருள் விளையாட்டுக்கள் பெரும்பான்மையாக ஆண்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுக்களின் கரு பெரும்பான்மையாக போர், சண்டை, துப்பாக்கி சூடு, அழித்தல், க்ரைம், ஏதாவது ஒன்றை மீட்டெடுப்பது போன்றவையாகவே இருக்கின்றன. பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளை விரும்புவதில்லை. பெண்களுக்கு பொதுவாக தனியாக விளையாடாமல் இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து குழுவாக விளையாடுவது பிடிக்கும். மேலும் பெண்களுக்கு யாரையும் அழிப்பதோ, யாரும் இறந்துபோவதோ பிடிக்காது. இந்தக் காரணங்களினால், 10 வயதிற்குமேல் பெண் குழந்தைகளின் கணிணி ஈடுபாடு குறைகிறது. "Game Boy" என்று தானே அந்த விளையாட்டுக்களுக்கு பெயர் கூட வைக்கிறார்கள்?

சிறு வயதில் ஏற்படுத்தப்படும் இந்த பால்நிலை பாகுபாடுதான்(gender discrimination) பிற்காலத்தில் பெண்கள் தொழில்நுட்பத்துறைகளில் நுழைவதா வேண்டாமா என்கிற முடிவை பாதிக்கிறது. ஆனால் இந்தப் பாகுபாடு இப்போது வெகு வேகமாக மாறி வருகிறது. கணிணிகளின் சக்திக்கும் வேகத்திற்கும் இணையாக அதன் உபயோகத்தன்மையும் மதிப்பிடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் கையிலே கணிணிகளைத் தினிக்கவேண்டும் என்று ஆசைப்படும் நிறுவனங்கள், அந்த மக்கள் தொகையில் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்றார்போல் கணிணிகளையும் மென்பொருள்களையும் தயாரித்து வருகின்றன. பெண்களுக்கு ஏற்றது போல் என்றால் கணிணிகளை பிங்க் நிறத்தில் உருவாக்கவேண்டும் என்று அர்த்தமில்லை!

பெண்களுக்கு மற்றத் துறைகளில் முன்னேற என்னென்ன சிரமங்கள் இருக்கின்றனவோ, அதே சிரமங்கள் தொழில் நுட்பத் துறைகளிலும் இருக்கின்றன - உதாரணமாக பால்நிலை பாகுபாடு, சிறந்த உதாரணங்களோ, வழிகாட்டிகளோ இல்லாமை, குடும்பப் பொறுப்புகள். இவை இல்லாமல் தொழில்நுட்பத் துறைக்கென்று ஒரு தனித்துவம் மிக்க கலாசாரம் உண்டு. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், இரவு நேரங்களில் வேலை செய்வது, அளவுக்கு அதிகமாக caffeine உட்கொள்வது, கணிணிகளின் மேல் அதீத மோகம் கொண்டிருப்பதும் அதன் தொடர்பாகவே பேசிக்கொண்டிருப்பது, உடைகள் மற்றும் சுத்த பத்தத்தில் நாட்டம் இல்லாமை ஆகியவை. பெண்கள் இந்தக் கலாசாரத்தில் கலந்துகொள்ளத் தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பொறியியல் மற்றும் கணிணித்துறையில் கல்வி பயிலும் பெண்கள் பெரும்பான்மையானோர் இளநிலையிலேயே தம் படிப்பை நிறுத்துக்கொள்கிறார்கள். முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கு படிப்பைத் தொடரும் பெண்கள் மிகவும் குறைவு. கணிணித் துறையில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற பதவிகளில் பெண்கள் இருப்பதும் மிக அறிதே.

தொழில் நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, தொழில்நுட்பத் துறையில் பெண்கள் நுழைவதற்காக மறுக்கமுடியாத காரணங்களை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்? குறைந்தபட்சம் மூன்று வழிமுறைகளில் கவனம் செலுத்தலாம்;

1. பால்நிலை பாகுபாட்டிற்கு எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வழிகளிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டேயிருக்க வேண்டும். ஒரு சமூக அமைப்போ ஒரு நிறுவனமோ பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அந்த அமைப்பில் மற்றும் நிறுவனத்தில் செயல்படும் பெண்களின் எண்ணிக்கையைக்கொண்டு தீர்மானிக்கலாம். பெண் குழந்தைகளும் பயன்பெறும்படி கல்வி மற்றும் விளையாட்டு மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும்.

2. ஆசான்களாக, எடுத்துக்காட்டுகளாக விளங்கும் பெண் சாதனையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். உயர் பதவியில் இருக்கும் பெண்கள் பிற பெண்களின் பார்வையில் படவேண்டும். தொழிநுட்பத் துறையில் வெற்றிகரமான பாதை பெண்களுக்குச் சாத்தியம் என்பதை பெண் சாதனையாளர்களால்தான் நிரூபிக்க முடியும். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால், பெண்கள் தொழிநுட்பக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் தம் படிப்பை சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் தவறான காரணத்திற்காக.

3. பெண்கள் குடும்பப் பொறுப்பையும், அலுவலகப் பொறுப்பையும் சீராக, திறமையாகக் கையாளுவதில் உள்ள சிரமங்களுக்குத் தீர்வு காணவேண்டும். குழந்தைகள் காப்பகங்கள், குழந்தைப் பேற்றின் போது விடுமுறை, வீட்டில் இருந்தே அலுவலக வேலையைச் செய்வது போன்ற வசதிகளை மேம்படுத்தினால் அது பெண்களுக்கு உற்சாகத்தைத் தரும். பெண்களை வேலைக்கு நியமித்தால் வேலைகள் தடைபடும் என்ற தவறான பார்வை விலகவேண்டும். நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் திட்டங்களையும் செயல்முறைகளையும் சற்றே மாற்றியமைப்பதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கணிணிகளால் எந்தப் புரட்சியையும் செய்யமுடியாது. கணிணியைக் கொண்டு மக்களால் என்ன செய்யமுடியும் என்பது தான் மகத்தான புரட்சி!.

என்னுடைய கருத்து: அமெரிக்காவை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு, தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். அங்கே பெண்களின் பார்வையில் தொழிநுட்பம் எப்படியிருக்கிறது? அமெரிக்காவை விட நம் ஊரில் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக கணிணித்துறையில் இருக்கும் பெண்கள் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் துறையில் அவர்களுடைய முன்னேற்றம் ஒரு நிலையில் தேங்கிவிடுகிறது. நிறைய பெண்கள் கணிணிப் பொறியியல் துறையில் இளநிலைக் கல்வியில் நுழைகிறார்கள். படிப்பை முடித்துவிட்டு IT நிறுவனங்களில் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ வேலைக்கும் போகிறார்கள். ஆனால் அதில் எத்தனைப் பேர் தம் துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்றோ சாதனைப் படைக்கவேண்டுமென்றோ நினைக்கிறார்கள்? ஒரு சிலர் மட்டுமே. அப்படி நினைக்காதவர்களில் நானும் ஒருத்தி! இங்கே வாசிங்டனில் உள்ள எனது நண்பர்கள் வட்டாரத்தை ஒரு சர்வே(survey) க்கு எடுத்துக்கொண்டால், 20 குடும்பங்களில் உள்ள மனைவிமார்கள் அத்தனைப் பேருமே IT துறையில் வேலை செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து அதில் ஒன்றிரண்டு பெண்களைத் தவிர மற்றவர்கள் எல்லாமே (நான் உட்பட) கூடுதல் சம்பாத்தியம் இருந்தால் வசதியாக வாழலாம், எதிர்காலத் திட்டங்களுக்கு சேமிக்கலாம் என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் வேலைக்குச் செல்கிறார்கள். அதற்குக் காரணம், குடும்பப் பொறுப்பு பெண்களின் சுய ஆர்வத்தை விழுங்கிவிகிறது என்பது என் கருத்து. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ராபின் ஆப்ராம்ஸ் முன் வைத்த அந்த மூன்று வழிமுறைகளையும் நம் ஊரில் அமல்படுத்தினால் இந்த நிலை மாறுமா?

Thursday, February 16, 2006

மலர் அம்பும் சிவப்பு இதயமும்

நேற்றைய முன் தின 'காதலர் தினம்', ஒரு சில வாழ்த்துக்கள் தவிர வேறு எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி என்னைக் கடந்து சென்றது. 9 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ஹாஸ்டலில் தங்கியிருந்த போது, என்னுடைய அறைத் தோழிகள் எல்லோருக்கும் 'காதலர் தின' வாழ்த்து அட்டைகள் வந்தது. அப்போது சினேகிதனாக இருந்த என் கணவரை தொலைபேசியில் அழைத்து, "எனக்கு உடனே ஒர் valentines day வாழ்த்து அட்டை அனுப்பு" என்று உத்தரவு போட்டேன். மாயவரத்துப் பட்டிக்காடான அவர், "அப்படின்னா என்ன?" என்றார்! அவருக்கு காதலர் தினமென்றால் என்ன என்பதை விளக்கி எங்கே எப்படி வாழ்த்து அட்டை வாங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து, சிகப்பு ரோஜாக்கள் போட்ட வாழ்த்து அட்டை எனக்கு வந்து சேர்வதற்குள், காதலர் தின "த்ரில்l" எல்லாம் போய்விட்டது எனக்கு. அதற்குப் பிறகு காதலர் தினத்தைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. 'காதலர் தினம்' போன்ற luxury க்கள் நம் நாட்டுக்குத் தேவையில்லை என்பது என் கருத்து. இருந்தாலும், இது நம் நாட்டுக் கலாசாரத்திற்கு எதிரானது என்று போராட்டம் நடத்துபவர்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

மன்மதன் மலர் அம்பை எய்தினால் காதல் வயப்படுவார்கள் என்று சொன்னதும் நம் கலாசாரம் தானே? ரோமியோ ஜூலியட் ஜோடியைத் தோற்கடிக்கும் வகையில் லைலா-மஜ்னு, ஷாஹ்ஜஹான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல் ஜோடிகளை உயர்வாகக் கொண்டாடியதும் நம் கலாசாரம் தானே? இவ்வளவு ஏன்? 'காமசூத்திரா' வை உலகத்திற்கு கொடுத்ததே நம் நாடுதானே? இப்படிப்பட்ட கலாசாரத்தை சிகப்பு ரோஜாக்களும், சிகப்பு பலூன்களும், சிகப்பு வாழ்த்து அட்டைகளும் என்ன செய்துவிட முடியும்? இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டால் மட்டும் இளைஞர்கள் காதலிக்காமல் இருந்துவிடப்போவதில்லை. இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையிலேயே டேட்டிங், வாழ்த்து அட்டைகள், பார்ட்டி எல்லாமே ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. காதலர் தினத்தன்று சற்றுக் கூடுதல் ஆர்வத்துடனும், அதிகப்படியாகவும் நடக்கிறது. இதெல்லாம் சும்மா ஒரு நாள் கூத்துதான். இனி அடுத்த பிப்ரவரி வரை இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை. யோசித்துப் பார்த்தால், இது ஒரு மதச் சார்பற்ற கொண்டாட்டம்! காதலர் தினத்தை விட பல மடங்கு ஆபத்தான விசயங்கள் நம் கலாசாரத்தையும் சமுதாயத்தையும் சீரழித்து வருகின்றன. அவற்றில் கவனம் செலுத்தலாம் என்பது என் கருத்து.

ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் மேலை நாட்டுக் கலாசாரத்தை காப்பியடிப்பவர்கள், அதில் உள்ள நல்ல விசயங்களை விட்டுவிடுகிறார்கள். நம்ம ஊரில் கொண்டாடப்படும் 'காதலர் தின' மும் இங்கு அமெரிக்காவில் கொண்டாடப்படும் 'Valentine's Day' யும் அடிப்படை ஒன்று தான் என்றாலும், ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. நம்ம ஊரில் கொண்டாடுவது காதலர்கள் மட்டுமே. அமெரிக்காவில் காதலர்கள் மட்டும் இன்றி குடும்பத்தினர், நண்பர்கள், குழந்தைகள் எல்லோருமே கொண்டாடுகிறார்கள். தன் மனதிற்கு பிடித்தவர்களுக்கு வாழுத்து அட்டையோ, பரிசோ கொடுக்கிறார்கள். அது அப்பாவாகவோ, அத்தையாகவோ, ஆசிரியராகவோ கூட இருக்கலாம். பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு பள்ளியில் 'Valentines Day' பார்ட்டிகள் நடக்கிறது. 'காதல்' என்பது பொதுவாக 'அன்பு' என்ற கருத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே விதைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விசயம் என்று நான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் பூக்கள் அதிகப்படியாக விற்பனையாகும் நாள் Valentines Day, அதற்கு அடுத்து Mother's Day. இந்தியாவில் அன்னையர் தினம் காதலர் தினம் போல் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை. காதலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் இளைஞர்கள் தாய்மைக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

காதலர் தினத்தை வைத்து மும்பய், சென்னை பொன்ற இடங்களில் நடந்த மார்க்கெட்டிங் வித்தைகளைப் பற்றி BBC South Asia வில் படித்தபோது வியப்பாக இருந்தது. ஒரு ice cream கம்பனி, மும்பய் கடற்கரையில் மிகப் பெரிய காதலர் தின வாழ்த்து அட்டையை நிறுத்துயிருந்ததாம்! மற்றொரு நிறுவனம், டைட்டானிக் கப்பல் போன்ற ராட்சத கப்பல் பொம்மையை எல்லா கல்லூரி வாசல்களிலும் கொண்டுவந்து நிறுத்த, காதல் ஜோடிகளெல்லாம் அந்தக் கப்பலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம்! நம்ம ஊரில் கொண்டாட்டங்கள் எல்லாமே மிகைப்படுத்தப்படுகின்றன. கும்பகோணம் மகாமகத்திற்கும், வருடாந்திர வினாயகர் சதுர்த்திக்கும், ஹோலி பண்டிகைக்கும் நடக்காத ஆர்ப்பாட்டமா காதலர் தினத்திற்கு நடக்கிறது?

Wednesday, February 15, 2006

உயிர் வாழும் தந்திரமாம்!

விகடனின் 2005 ஆம் ஆண்டு தீபாவளி மலரில் கதை ஒன்றை நேற்றுப் படித்தேன்.

திருமணம் ஆகாத ஒரு இளைஞன் இருக்கிறான். திருமணம், பிள்ளைக்குட்டிகள், ஸ்கூல் அட்மிஷன் போன்ற தொல்லைகளில் ஈடுபட அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் தனிமையான இரவுகள் அவனுக்கு போர் அடிக்கின்றன. ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறான். அன்றிரவு அவனுடைய வீட்டில் தங்குகிறாள். இரவு மகிழ்ச்சியாகக் கழிகிறது. மறுநாள் காலை அவள் போய்விடுவாள் என்று நினைக்கிறான். அனால் மறுநாள் மாலை அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது அவள் இன்னும் அங்கேயே இருக்கிறாள். அன்றிரவும் மகிழ்ச்சியாகப் போகிறது. அடுத்த நாளாவது அவள் போய்விடுவாள் என்று நினக்கிறான். ஆனால் அவளோ போக மறுக்கிறாள். வீட்டைத் தலைகீழாக மாற்றுகிறாள். அவனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு, அவன் வீட்டில் இல்லை என்றும், அவனால் எங்கும் வரமுடியாது என்றும் பதிலளிக்கிறாள். செய்வதறியாது முழிக்கிறான் அவன். அவளிடம் நல்லவிதமாகப் பேசி வீட்டை விட்டு அனுப்ப முயல்கிறான். ஆனால் அவள் விடுவதாக இல்லை. போலீஸில் புகார் செய்கிறான், அவளுக்கு விஷம் கொடுக்க முயல்கிறான். அவள் எல்லாவற்றையும் திறமையாக சமாளிக்கிறாள். கடைசியில் மனம் வெறுத்துப் போய், வீட்டுச் சாவியை அவளிடம் தூக்கியெறிந்து, "இனி நீயே இந்த வீட்டில் இரு. நான் போகிறேன்" என்று வெளியேறிவிடுகிறான். உடனே அவள் தொலைபேசியில் ஒருவரை அழைத்து "வினோத், இன்னொரு வீடு கிடைத்துவிட்டது! நல்ல ஏரியா! உடனே விற்பதற்கு ஏற்பாடு செய்!" என்று சொல்லுகிறாள்.

இத்தோடு கதை முடிகிறது. பரவாயில்லை, இது ஒரு நல்ல knot உள்ள ஒரு கதை என்று தோன்றியது. இந்தக் கதைக்கான முடிவுரை இப்படியிருந்தது - "இந்த நவீன உலகத்தில் உயிர் வாழக் கற்றுக்கொள்ளும் பல தந்திரங்களில் ஒன்றைத்தான் இந்தக் கதாநாயகி கடைபிடிக்கிறாள். சிலருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி தரலாம். ஆனால் இதுதான் இன்றைய தினங்களின் யதார்த்தம்!"

முடிவுரை கொஞ்சம் இடித்தது! இந்தக் கதாநாயகி செய்தது உயிர் வாழ கற்றுக்கொள்ளும் தந்திரம் அல்ல. வசதியாக வாழக் கற்றுக்கொள்ளும் தந்திரம் இது! உயிர் வாழ்வதற்கு மூன்று வேளை சாப்பாடும் தங்க ஒரு இடமும் இருந்தால் போதுமே? இவள் செய்வதைப் பார்த்தால் பல வீடுகளை இந்த மாதிரி ஏமாற்றி வளைத்துப் போட்டிருப்பாள் போலிருக்கிறதே. சரி, இது ஒரு கதைதான் என்று விட்டுவிடலாமென்றால், "இதுதான் இன்றைய தினங்களின் யதார்த்தம்" என்று முடிவுரையில் இருக்கிறது. இந்த மாதிரிப் பெண்கள் சிலர் இருக்கலாம், ஆனால் அப்படி இருப்பது தான் இன்றைய யதார்த்தம் என்றெல்லாம் சொல்லுவது டூ மச்!!! யார் இப்படியெல்லாம் எழுதியிருப்பது என்று முன் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், எழுதியது சுஜாதா!!! என்னவாயிற்று இவருக்கு???

Tuesday, January 03, 2006

நியூஜெர்சியில் நியூ இயர்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நான் புத்தாண்டு வார இறுதியை நியூ ஜெர்சியில் வசிக்கும் என்னுடைய சினேகிதியின் குடும்பத்துடன் கழித்துவிட்டு நேற்று வீடு திரும்பினேன். சில சுவையான அனுபவங்கள்...

சென்ற சனிக்கிழமை மாலை நுவர்க் விமான நிலையத்தில் என்னை அழைத்துக்கொண்டார்கள் வினியும் (சினேகிதியின் பெயர் சுருக்கம்) அவள் கணவரும். வாசிங்டன் டிசியை விட்டு வெளியே வந்ததில் ஒரு புறம் மகிழ்ச்சி, வெகு நாட்களுக்குப் பிறகு வினியைப் பார்த்ததில் ஒருபுறம் மகிழ்ச்சி. குதூகலத்துடன் பேசியபடி கார் பயணம் தொடர்ந்தது. வீட்டை நெருங்குகையில், வினியின் கணவர்,
"அவன் வீட்டில் தனியா என்ன செய்யறானோ! பாவம்!" என்றார்.
"இன்னேரம் தூங்கியிருப்பான்" என்றாள் வினி.
"அவனுக்கு சாப்பாடு ரைட் எய்ட்(RiteAid) டில் வாங்கிட்டு போய்டலாம்"
"ஐயோ! இந்த சாப்பாடு அவனுக்கு பிடிக்காது. நாளைக்கு Costco லயே வாங்கிக்கலாம்"

எனக்குத் தெரிந்து வினிக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை தான். யாரை "அவன்" என்று குறிப்பிடுகிறார்கள் என்று நான் குழம்ப, அது "நீமோ" என்கிற அவர்களது செல்ல பூனைக்குட்டி என்று தெரிய வந்தது.
Image Hosted by ImageShack.us

"செல்ல" என்பது அவர்கள் அந்தப் பூணை மேல் வைத்திருக்கும் அன்பை குறைவாக மதிப்பிடும் வார்த்தை என்பது வினியின் வீட்டுக்குப் போன பின்பு புரிந்துகொண்டேன். வீட்டிற்குள் நுழைந்தவுடன் வினியும் அவள் கணவரும் நீமோவை விட்டு இரண்டு மணி நேரம் பிரிந்திருந்ததற்காக புலம்பி, நீமோவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சத்தொடங்கிவிட்டார்கள். பல நாட்கள் கழித்து அவர்களைப் பார்க்க வந்திருந்த நான் வாசலில் பெட்டியுடன் தனித்து விடப்பட்டவளாய் நின்றுகொண்டிருந்தேன்! நான் அங்கிருந்த இரண்டு நாட்களும் ஒரே நீமோ புராணம் தான்! வீட்டிற்குள் ஒரே ஜில்லென்று குளிராக இருந்தது. ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு, போர்வையைப் போர்த்திக்கொண்டு நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். என்னை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நீமோ தூங்கிக்கொண்டிருந்த போது, அதனருகில் ஒரு சின்ன ஹீட்டரைக் கொண்டுவந்து வைத்தாள் வினி! அடிப் பாவி, இந்த ஹீட்டரை என் கண்ணில் காட்டவேயில்லையே என்று நான் கோபத்துடன் சொல்ல, "பாவம்டி, வாயில்லா ஜீவன், குளிர் தாங்கமாட்டான்" என்றாள்.

நான் வினி வீட்டிற்கு வந்த அன்று சமையலைறையில் ஒரு பாத்திரத்தில் பாதாம் பருப்பை ஊற வைத்திருந்தாள். எனக்காக ஸ்பெஷலாக பாதாம் கீர் செய்வதற்கு என்று சொன்னாள். சரி, அன்று இரவு உணவின் போது பாதாம் கீர் குடிக்கலாம் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் பாதாம் ஊறிக்கொண்டேதான் இருந்தது. மறு நாள் காலையும் பாதாம் ஊறிக்கொண்டிருந்தது. மதியம், மாலை, இரவு...ஊறிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலையும் பாதாம் அப்படியே இருந்ததால், பொறுமையிழந்து, "இதை எப்பதான் அரைக்கப்போற?" என்று கேட்டேன். "நேற்றே அரைக்கலாமென்று நினைத்தேன். ஆனால் நான் மிக்ஸி போட்டால் அந்தச் சத்தத்தில் நீமோ ரொம்ப பயந்துவிடுவான். அதனால் தான் இன்னும் அரைக்காமல் வச்சிருக்கேன்" என்றாளே பார்க்கனும்! என் இதயத்தையே மிக்ஸியில் போட்டு அரைத்ததைப் போல் உணர்ந்தேன்.

நீமோவின் மேல் பொறாமையும், வினியின் மேல் வருத்தமுமாக இருந்த எனக்கு திங்களன்று ஒரு காலை நேர சந்திப்பு மனத் திருப்தியை அளித்தது. பத்மா அரவிந்தை அவருடைய வீட்டில் சந்தித்தேன். முன்பே அவரிடம் மின் அஞ்சல் மூலம் பேசி காலை 10 மணிக்கு சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். வினியும் உடன் வந்தாள். அழகான வீடு, எளிமையாக பத்மா. அன்புடன் வரவேற்றார். எங்களிருவரில் யார் தாரா என்று சற்று தயங்கி பின் நீங்கள் தான் தாராவாக இருக்கவேண்டும் என்று என்னைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டார். சூடான டீயுடன் சுவாரஸ்யமாக அலவலாவிக்கொண்டிருந்தோம். போத்தீஸ்வரியின் கேஸ் விவகாரத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். இந்தக் கேஸ¤க்குகாக முன்பே நான் எழுதி வைத்திருந்த காசொலையை பர்ஸில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கும் போதே, வினியும் தன் பர்ஸிலிருந்து காசோலையை எடுத்து எழுதி பத்மாவிடம் கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்டார் பத்மா. வினி ஒரு படி மேலே போய், போத்தீஸ்வரி கார் லைசன்ஸ் வாங்கிய பிறகு தன்னுடைய பழைய காரை தற்காலிக உபயோகத்திற்கு தருகிறேன் என்றும் பத்மாவிடம் சொல்ல, எனக்கு என் சினேகிதியை நினைத்துப் பெருமையாக இருந்தது. நீமோ என்கிற பூணையினால் எனக்குக் கிடைக்காத பாதாம் கீருக்காக வினியை மன்னிக்கவும் முடிந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் பத்மாவின் நேரத்தைப் போட்டுத்தள்ளிவிட்டு விடைபெற்றோம். பேசியதில் பல ஆக்கபூர்வமான தகவல்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் அடுத்தப் பதிவு எழுதுகிறேன்.