Friday, March 12, 2010

மற்றொரு பயணம், வேறொரு திருப்புமுனை 4 (பெயர் வைப்பதில் கலகம்)

நண்பர் 3 யிடம் கருத்து கேட்டபோது, "ஏன் நவீனமாகப் பெயர் வைக்கவேண்டும்? “முனியம்மா” அல்லது “முனி” என்று பெயர் வைத்தால் என்னவாம்?” என்று கேட்டார்.

இது சற்று இடக்காக இருந்தது எனக்கு.


நான்: ”முனியம்மா என்று பெயர் வைப்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் நவீனத்தை நோக்கி, தமிழை விட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் எப்படி இதனை எதிர்பார்ப்பது? அதற்காகத்தான் நவீனம் என்கிற பெயரில் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல் சில புதிய தமிழ்ப் பெயர்களை எடுத்துக் காட்டி அவர்களை திசை திருப்ப வேண்டும் என்கிறேன் நான். தமிழிலும் நவீனம் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். குறைந்தபட்சம் வடமொழிப் பெயர்களின் ஊடுருவலையாவது தடுக்கலாம்.”


நண்பர் 3:
முனியம்மா என்று நான் சொன்னது ஒரு கருத்துதான்.
1. நான் கண்டிப்பாக இதுமாதிரியான பெயர்களைத்தான் வைக்க வேண்டுமென்று வரையறுக்கப் பட்ட கொள்கையைக் கொண்டிருக்கவில்லை.
பெயரிடுவதில் என்னுடைய கொள்கையே வெறுமனே ஒருவகையான கலகம் அல்லது எதிர்ப்புரட்சியே. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய சொந்தப் பெயரை நான் விரும்பியபடி வைத்துப் புரட்சி செய்தால் பெருமை கொள்வேனே தவிர, என்னுடைய குழந்தையின் பெயரை வைத்தல்ல. குழந்தை பெரியவளா(னா)னதும் நம் அப்பன்/அம்மை நமக்கு இப்படியொரு பெயரை வைத்தார்கள் என்றெண்ணினால் எல்லாப் புரட்சியும் நில்லாது விழும்.
தமிழ்ப் பெயர் வைப்பதில் திருமாவளவன் ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டார். அதாவது, தலித்துகள் எத்தனையோ பேர், காந்தி, அண்ணா, கருணாநிதி, ஜீவா, காமராஜ், இந்திரா, அம்பேத்கார் என்று தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தலித்தல்லாத சாதியினர் அம்பேத்கார் மற்றும் தலித் தலைவர்கள் பெயர்களைத் தவிர்க்கிறார்கள் என்று அவர் சொன்ன உண்மை என்னை உரைத்தது. முனியம்மா என்ற பெயரை வைக்க வேண்டுமென்று நினைத்ததும் அந்த அடிப்படையில்தான். சமஸ்கிருதப் பெயரிலோ அல்லது ஆங்கிலப் பெயரிலோ கூட எனக்கு வெறுப்பெல்லாமில்லை. ஆனால் தமிழ்ப் பெயர்களை இழிவு படுத்துவது போல் சிறிதும் பகுத்தறிவின்றி சமஸ்கிருதப் பெயர்கள் அளவுக்கு அதிகமாகச் சூட்டப் படுவதையே விமர்சிக்கிறேன். பெரியார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றிக் கலகம் செய்திருக்கிறார். அக்கால கட்டத்தில் காசி, பழனி, வேளாங்கண்ணி என்று திருத்தலங்களைப் பெயர்களாக வைக்கும் மூடநம்பிக்கை இருந்தது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொல்வதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நீங்கள் பெற்றெடுக்கிற பிள்ளைக்குப் பெயர் வைக்க என்னை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டார். தொண்டர் ஒருவர் வற்புறுத்தவே இலண்டன் என்று பெயர் வைத்தாராம். தொண்டர் தயங்கியபோது பெரியார் சொன்னாராம் - காசி, வேளாங்கண்ணி என உள்ளூர்ப் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது செல்வம் கொழிக்கும் உலக மாநகராமான இலண்டன் என்ற பெயரை வைத்தால் இன்னும் மேன்மையல்லவா என்றாராம். பிடிக்க வில்லையென்றால் நீங்கள் பேரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றாராம். கருணாநிதி நல்ல தமிழை முன்னெடுக்கும் பொழுது அவர் மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயரை வைத்தபொழுது விமர்சித்தார்களாம். நான் அவரை பலமுறை மனதாரப் பாராட்டியிருக்கிறேன். கருணாநிதி தமிழை முன்வைத்தது தமிழ் வெறியினால் அல்ல. சமற்கிருதம் பெரிதும் உயர்வாகக் கருதப் பட்டு தமிழ் இழிவுபடுத்தப் பட்டதால்தான். அதற்காக ஸ்டாலின் என்ற ஒரு பெரும் தலைவனைப் பெருமையாகக் கருதுவதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாதென அவர் நினைத்ததால் ஸ்டாலின் என்றே வைத்தார். எனவே ஒரு பெயர் உண்மையிலேயே நாம் உயர்வாக மதிக்கும் ஒன்றைக் குறிப்பதானால் அந்தப் பெயர் சமஸ்கிருதமே என்றாலும் வைப்பதில் தடையில்லை. வரலாறும், சிந்தனையும் மழுங்கடிக்கப் பட்ட வணிகமய சமுதாயத்தில் இளைஞரைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால் அவர்கள் வழிக்குச் செல்ல வேண்டும்தான். அதனால் எளிமையாக்கப் பட்ட எழில் போன்ற *பழமையான* பெயர்களை விட சமஸ்கிருதம் போலவே பொருள் புரியாத தமிழ்ப் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதும் காலத்தின் அவசியமே, எனவே நான் எதிர்க்கவில்லை. ஆனால் சிந்திக்கத் தெரிந்த இளைஞர்களுக்கு அது தேவையில்லை, கலகம் செய்து பகுத்தறிவைத் தூண்டக் கூடிய பெயர்களை வைக்க வேண்டும்.
நான் திருமணமாகாமல், குடும்பமில்லாமல் இருந்து அமெரிக்கக் குடியுரிமை வாங்கக் கூடிய சந்தர்ப்பமிருந்திருப்பின் என்னுடைய கடைசிப் பெயரைப் 'பறையன்' என்றே வைக்கலாமென்று பலமுறை தோன்றியது. (எனக்கு வேண்டுமானால் கடைசிப் பெயரை பறையன் என்று இட்டுக் கொள்வது சரியெனப்படும், என் மனைவியும், குழந்தையும் பயன்படுத்தும் எங்கள் குடும்பப் பெயரை நானொருவன் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ள முடியாதுதானே.) ஆனால் பலபேர் இப்படிச் செய்யும் பொழுது அதன் பின்னாலுள்ள சமூக அரசியல் நொறுங்கிப் போய் விடும். எண்ணிப் பாருங்கள் தி.க./திமுக தோன்றும் முன்பெல்லாம் அன்பழகன், மதியழகன், கனிமொழி என்ற பெயர்களெல்லாம் வைக்கப் பட்டிருக்குமா? அன்று தலைவர்களே அவற்றை வைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அதனால் அப்பெயர்கள் பிரபலப்பட்டன. மற்றவர்களும் வைக்க ஆரம்பித்தனர். நூறு பேர் அமெரிக்காவில் பறையன் என்று கடைசிப் பெயரை வைத்துக் கொண்டால் பறையன் உயர்மரியாதைப் பெயராகி விடும்.
எனவே சிந்திக்கத் தெரியாத இளைஞர்களுக்காக மட்டுமே ஒரு புதிய பெயர்ப்பட்டியல் தேவை. ஆனால் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குத் தேவை கலகம் செய்யும் மனத்திடமே.


எல்லாருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டோம் நானும் கணவரும். ரொம்ப நவீனமாகவும் இல்லாமல், ரொம்ப முனியம்மா மாதிரியும் இல்லாமல் நடுத்தரமாக “புகழ்மதி” என்று குழைந்தைக்கு பெயர்சூட்டினோம். மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கர்களுக்கு “ழ்” உச்சரிக்க வராதே என்றார்கள் பலர். ஏன் நம்ம தமிழ் மக்களுக்கே பல பேருக்கு “ழ்” உச்சரிக்க வராதே! குழந்தையின் பெயருக்கான அர்த்தத்தை சில அமெரிக்கர்களுக்கு விளக்கியபோது, அவர்கள் “ஓ! இப்படிப்பட்ட அழகிய அர்த்தமுள்ள பெயர்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லையே” என்று சொன்னார்கள்.

ஒருவேளை எங்கள் மகள் பிற்காலத்தில் இந்தப் பெயர் பழமையாக இருக்கிறது என்று நினைத்தால் அவள் வேறு பெயர் மாற்றிக்கொள்ளட்டும். எங்களுக்குத் தடையேதும் இல்லை.

Wednesday, March 10, 2010

மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 3 (நவீனத் தமிழ்ப் பெயர்கள்)

இந்தப் பதிவினை நான் எழுதும்போது, எனக்குக் குழந்தைப் பிறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நல்லத் தமிழ்ப் பெயரும் வைத்தாகிவிட்டது. தொடர்ச்சியை விடவேண்டாமென்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.

பிறக்கப் போகும் எங்கள் மகளுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயரை தேர்வு செய்ய நானும் கணவரும் முயன்று வந்தோம். அந்தத் தேடல் சற்றுக் கடினமாக இருந்தது வியப்பாக இருக்கிறது.

தமிழில் இல்லாத பெயர்களா? ஏன் எளிதாக ஒரு நல்ல பெயர் கிடைக்கவில்லை?

இணையத்தில் தேடுகிறோம். ‘இனிய தமிழ்ப் பெயர்கள்’ போன்ற புத்தகங்களில் தேடுகிறோம். இவற்றில் நிறைய அருமையான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பழைய பெயர்கள். நிறைய அவற்றைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இணையத்தில் ’தமிழ்ப் பெயர்கள்’ என்று தேடினாலே, வடமொழிப்பெயர்கள் தான் கிடைக்கின்றன. ‘தூய தமிழ்ப் பெயர்கள்’ என்கிற புத்தகங்களைப் பார்த்தால், ஒரே மாதிரியான பழைய பெயர்கள் தான் இருக்கின்றன. ‘அறிவுச் செல்வி’, ’நிறைமதி’ போன்ற பெயர்கள் அருமையான தமிழ்ப் பெயர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் நம் தமிழ் நண்பர்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்காமல் வடமொழிப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நான் உட்பட பலர் இன்று நவீனமான, சுருக்கமான தமிழ்ப் பெயர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அமெரிக்காவில் வளர்க்கப்படுவதால், உச்சரிப்பதற்கு எளிதான பெயர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அப்படிப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இணையத்திலோ புத்தகங்களிலோ கிடைப்பதில்லை.

இதைப்பற்றி நண்பர்களிடம் பேசியபோது சில சுவாரசியமான கருத்துப் பறிமாற்றங்கள் நடந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

நண்பர் 1: பழமையான தமிழ்ப் பெயர்களை வைத்துத்தான் நம் தமிழ் உணர்வை நிரூபிக்கவேண்டுமென்று அவசியமில்லை. நல்ல அர்த்தமுள்ள தமிழ்ச் சொற்களை சற்று நவீனப்படுத்தி, தூய தமிழ்ப் பெயர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். என்றார். சில உதாரணங்களையும் சொன்னார்.

மெல்லினா (மெல்லினம் என்கிற சொல்லில் இருந்து)
அன்றில் (அன்றில் பறவை)
தென்னகி (தென் தமிழ் நாட்டைச் செர்ந்தவள் என்று நினைக்கிறேன்!)


இவருடைய நண்பர் ஒருவர் ஒரு பட்டியல் தயார் செய்திருக்கிறார். அவற்றில் இருந்து சில உதாரணங்கள்...

ஆழியா (கடல்)
தளிர்
மாட்சி

இவை அல்லாமல் எங்கள் நண்பர்களிடையே சிலர் அருமையான புதுமையான தமிழ்ப் பெயர்களை தம் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.

சால்பன்
மெய்
அனிச்சம்
கணியன்

இவையெல்லாம் பெருமபலும் எந்த புத்தகங்களிலும் இணையதளத்திலும் இல்லாதவை. சம்மந்தப்பட்டவர்களின் கற்பனா சக்தியின் மூலம் உருவானவை இப்பெயர்கள். இவையெல்லாம் பழைய தமிழ் வார்த்தைகள் தான், ஆனால் அவற்றை சுருக்கி, சற்று திரித்து வைக்கும்போது அவை புதுமையாகத் தோன்றுகின்றன.

இதைக்கேட்ட நண்பர் 2 என்ன சொன்னார் தெரியுமா? “இந்த மாதிரி அழகிய தமிழ்ப் பெயர்கள் ஒரு பொதுவான தளத்தில் இல்லாததனால் தான் நம் தமிழர்களெல்லாம் வட மொழிப் பெயர்களை நாடிச் செல்கிறார்கள். நாம் இப்படி புதுமையான எளிய தமிழ்ப் பெயர்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டால் தமிழ்ப் பெற்றோர்களுக்கு உபயோகமாக இருக்கும், வட மொழிப் பெயர்களும் குறையும்” என்றார்.

புதிய தமிழ்ப் பெயர்களை பட்டியலிட்டு பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும் என்கிற திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு சிறந்த தமிழ்ச் சேவையும் கூட. இதனால் தமிழ்ப் பெயர்களுக்கு சரியான வெளிச்சமும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நண்பர் 1 மீண்டும் இதைப் பற்றி விரிவாகச் சொன்னார் - “நவீன தமிழனுக்கு நவீன தமிழ் வாழ்க்கைமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது பெயர் வைப்பதிலும் சரி சினிமா பார்ப்பதிலும் சரி. வேட்டி கட்டி உழவு செய்தால் மட்டுமே தமிழன் என்ற அடையாளம் மாறி Levi Strauss pant and Aeropostale Shirt உடுத்தியிருக்கும் இன்றைய நவநாகரீக தமிழருக்கும் தமிழை கொண்டு சேர்க்கவெண்டும். இல்லயேன்றால் Levi Strauss pantஉம் தமிழ் வாழ்க்கை முறையும் வேறுபட்டு நின்றுவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!. அதே சமயத்தில் தமிழின் தரம் மாராமல், தூய்மை கெடாமல் கவனமாக செயல்படவேண்டும். ஆகையால் அது ஒரு கடினமான கூட்டு முயற்சியாய்தான் இருக்க வேண்டும். ஆனால் பலனோ பன்மடங்கு!

இந்த நவீன தமிழ் எல்லாருக்கும் அல்லவே! விரும்புவர்களுக்கு மட்டுமே. தமிழ் அப்படியே இருக்கும். காலம் மாறினாலும் தோற்றம் மாறாது என்கின்ற நிலைபாட்டைக் கடைபிடிப்பவர்க்கு என்றென்றும் classic tamil இருக்கின்றத்து! இப்படியாக நிரைய versions of Tamil (culture) நாம் ஏற்படுத்தினால் (நாம் முந்திக்கொள்ளவேண்டும், ஏனென்றால், அது எப்படியிருந்தாலும் ஏற்பட போகிறது, நாம் இப்பொழுதே நுழைந்தால் அதனை திட்டமிட்டு முறைபடுத்தலாம்) யாரையும் உள்வாங்கி ஒரு Inclusive Tamil Culture உருவாகி தமிழ் வெவ்வேறு வடிவங்களில் பரிமானங்களில் நிலைக்கும். பைபிள் எப்படி எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மூலைகளில் இன்று கிறுத்துவத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றதோ அது போல!

நண்பர் 2:
இன்றைய பெற்றோர்கள் வடமொழி பெயர் வேண்டும், இந்தி பெயர் வேண்டும் என அதனை நாடிச் செல்வதில்லை. ஆனால் பெயர் கொஞ்சம் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைக்கும் பொழுது ஒரு அந்நிய மொழி பெயர் தான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உதாரணமாக என்னுடைய ஒரு நண்பரின் மகன் பெயர் தர்ஷன். தரிசனம் என்று தமிழில் இந்தப் பெயர் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டார். தர்ஷன் என்றால் ஸ்டைலாக உள்ளது.

அதுவும் தற்பொழுது சோதிடம் பார்த்து இந்த தமிழ் எழுத்தில் தொடங்கும் பெயரை தான் வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். தமிழ் முதல் எழுத்தாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு வடமொழி பெயரை பிடிக்கிறார்கள். என்னுடைய உறவினர் ஒருவருக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு
வி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் என சோதிடம் பார்த்திருக்கிறார்கள். வி என்ற எழுத்தில் பெயர் கிடைக்கவே இல்லை என அலுத்துக் கொண்டார். கடைசியில் அவர் வைத்த பெயர் விபுஷா. "ஷா", "ஷ" போட்டு பெயர் வைப்பது இப்பொழுது அதிகரித்து விட்டது.

நான் என்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைக்கும் பொழுது நானும் மற்ற பெற்றோர்களின் மனநிலையில் தான் இருந்தேன். பெயர் கொஞ்சம் ஸ்டைலாக தற்போதைய தலைமுறைக்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கூடுதலாக தமிழ்ப் பெயராகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது தான் பிரச்சனையாகி விட்டது. தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல, சுருக்கமான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கவே இல்லை.

தமிழிப் பெயர்கள் என்றால் இணையத்தில் மணிமேகலை, மங்கையற்கரசி என்ற ரீதியில் தான் பெயர்கள் உள்ளன. என்னுடைய காலத்திற்கு ஏற்ற பெயர்கள் இணையத்தில் கிடைப்பதே இல்லை. மாறாக வடமொழிப் பெயர்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. தவிரவும் நம்மைப் போன்று சமுதாயத்தில் இருந்து விலகி இருப்போர் தான் தமிழ்ப் பெயரை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய பெற்றோர்கள் இணையத்தில் தேடுவது - Indian Baby names. அதில் கிடைக்கும் நல்ல பெயர்களை வைத்து கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் நண்பர் 3 உரையாடலில் நுழைந்தார். அவரது கருத்துக்களின் உண்மை உரைத்தாலும், எளிதில் ஒத்துக்கொள்ள சற்றுக் கடினமானதாக இருந்தன. அவை அடுத்தப் பதிவில்...