Friday, January 28, 2005

புதுக் கவிதை முயற்சி - I

சொந்த ஊருக்குக் கூடிய சீக்கிரம் திரும்பிப் போய்விட வேண்டும் என்ற என் கணவரின் அன்றாட புலம்பல்களைத் தொகுத்து ஒரு புதுக் கவிதை முயற்சி. இதே கருத்துள்ள நிறைய கவிதைகளைப் படித்து எல்லாருக்கும் சலித்து போயிருக்கும், இருந்தாலும், முதல் முறை கவிதை எழுதறேங்க. அதனால மன்னிச்சி விட்டுடுங்க!

ஏக்கம

Image Hosted by ImageShack.us

கம்பஞ் சோற்றுக்கும்
தென்றல் காற்றுக்கும்
ஓற்றையடி பாதைக்கும்
சைக்கிள் சவாரிக்கும்
குளிர்ந்த மோருக்கும்
பனைமர நுங்குக்கும்
அம்மா அன்பில் பங்குக்கும்
மனம் ஏங்குதடி...

அவசர சாண்ட்விச்சும்
பனி மழையும் குளிர் காற்றும
்நெரிசல் ஹைவேயில்
டொயோட்டோவிலும்
கப்புச்சீனோவும்
கோக் பாட்டிலுமாக
வாழ்க்கைத் தொடருதடி!

Thursday, January 27, 2005

விஜயேந்திரரின் ஜாமீன் மனுவும் சீதையின் தீக்குளிப்பும்


Image Hosted by ImageShack.us
இன்று காலை தினமணி செய்திகளில்,

விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பின், அவர் குற்றமற்றவர் என்று முறையாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி கூறியுள்ளதாகப் படித்தேன். நீதிபதி அதொடு நிறுத்தியிருக்கலாம். அவர் தொடர்ந்து "சீதையே தனது தூய்மையை நிரூபிக்க தீக்குளித்தார். சீதையால் மட்டுமே அவ்வாறு நிரூபிக்க இயலும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது" என்று சொல்லியிருக்கிறார். இதை நீதிமன்றம் நம்புகிறது என்றால், ஒரு உண்மையை நீரூபித்தப் பிறகும் அது ஏற்றுக்கொள்ளப் படாமல் பயனற்று போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நீதிமன்றம் நம்புகிறது என்று அர்த்தம். புரியவில்லையா?

சீதை தீக்குளித்து தன் தூய்மையை நீரூபித்தப் பிறகும் நாட்டு மக்களின் சந்தேகத்தைத் தீர்க்க ராமன் அவளை காட்டுக்கு அனுப்பிவிட்டான். சீதை
தீக்குளித்தும், அவளது தூய்மை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை அந்த நீதிபதி யோசிக்காமல் பேசிவிட்டார் என்று நினைக்கிறேன். நீதிமன்றத்தின் நம்பிக்கைக்கே இது முரண்பாடாக அமைகிறது.

ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு இதிகாசம். அதைப் படித்தோம், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தோம், படம் பிடித்தோம். அதோடு விட்டுவிட வேண்டும். அதிலிருந்து உதாரணங்களை அதுவும் இந்த நூற்றாண்டில் எடுத்துக்கொள்வது அர்த்தமற்றதாக இருக்கிறது.

Monday, January 24, 2005

சந்தித்ததில் சிந்திக்கவைத்தவர்கள் - I


Image Hosted by ImageShack.us
அரவாணிகளை நான் பெரும்பாலும் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒரு தலை ராகம் படத்தில் 'கூடையில கருவாடு' பாடலுக்கு கும்பலாக வருவார்களே அந்த அரவாணிகள், 'அப்பு' வில் அரவாணியாக நடித்த பிரகாஷ் ராஜ், சில பெயர் நினைவில்லாத படங்களில் வக்கிரமாகத் தோன்றிய அலிகள் - அரவாணிகள் என்றாலே, எனக்கு இந்தக் காட்சிப் பதிவுகள் தான் கண் முன் தோன்றும். தமிழ் நாட்டில் இருந்த போது நேரிலும் அவர்களை நான் பார்த்திருக்கலாம், ஆனால் அவர்களை எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறேன்? அவர்கள் ஏன் என்னை பாதிக்கவேயில்லை? அவர்களின் உலகம் எப்படி இருக்கும், என்னென்ன பிரச்சினைகளை அவர்கள் தினம் எதிர்கொள்கிறார்கள் என்றெல்லாம் ஏன் அப்போது நான் சிந்திக்கவேயில்லை? நம்ம ஊர் சினிமாவும் சமூகமும் அவர்களைப் பற்றி எனக்குள் ஒரு சிறு ஏளனத்தை ஏற்படுத்தியிருந்தது. என் அறியாமைக்கு மன்னியுங்கள், ஆனால் அதுதான் உண்மை. அந்த ஏளனத்தைக் கரிசனமாக புரட்டிப் போட்டது ஒரு சந்திப்பு.

கடந்த வருடம் பால்டிமோரில் FeTNA(வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை) 2004 விழாவை வாசிங்டன் பகுதித் தமிழ்ச் சங்கம் நடத்தியது. பல மாதங்கள் முன்பிருந்தே நடந்துகொண்டிருந்த விழா ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நர்த்தகி நடராஜன் என்கிற சென்னையைச் சேர்ந்த பரத
நாட்டியக் கலைஞரின் வருகை பெரிதாகப் பேசப்பட்டது. அழிந்து போய்க் கொண்டிருக்கும் நாட்டுப் புறக் கலைகளைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் நலிவுற்ற கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து வரவழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த FeTNA, பரத நாட்டியக் கலைஞர் ஒருவரை தமிழ் நாட்டில் இருந்து வரவழைப்பது பலருக்கு சற்று வியப்பாக இருந்தது. பிறகு தான் தெரிந்தது நர்த்தகி நடராஜன் ஒரு அரவாணி என்பது. ஒரு அரவாணி, அதுவும் பரத நாட்டிய கலைஞசர் வருகிறார் என்றதும், எல்லாரையும் போலவே எனக்கும் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து வரவழைக்கும் வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பவர் சாக்ரடீஸ் என்கிற தமிழ் உணர்வாளர். கனெக்டிகட்டில் வசிக்கிறார். இவரைப் பற்றி ஒரு தனி வலைப் பதிவை பிறகு எழுதுகிறேன்.

விழாவிற்கு முதல் நாள் மாலை அரங்கத்தில் நாங்களெல்லாம் வேலை செய்துகொண்டிருந்தோம். அப்போது நர்த்தகி நடராஜனின் குழு ஒரு அறையில் நடன ஒத்திகை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு குடிக்க காபி கொண்டு போய் கொடுக்கும் சாக்கில் அந்த ஒத்திகை அறையில் நானும், என் நண்பியும் நுழைந்தோம். ஒத்திகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த நர்த்தகி எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். புன்முறுவலுடன் வணக்கம் சொன்ன நர்த்தகியை வியப்புடன் பார்த்தேன். சற்றே ஆண்மையின் சாயல் படர்ந்த முகம். சற்றே ஆண்மை கலந்த குரல். "நீங்கள் இருந்து ஒத்திகையைப் பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு தான் போகனும்" என்று அன்புக் கட்டளையிட்டார். நாங்களும் முன் வரிசை இருக்கைகளில் அமர்ந்தோம். என்ன பாடலுக்கு ஆடினார் என்று மறந்துவிட்டது. ஒரு தாசிப் பெண் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை அழைத்து வந்து உறங்க வைப்பது தான் நடனத்தின் கரு. நட்டுவாங்கம் செய்த நர்த்தகியின் தோழி சக்தியும் ஒரு அரவாணி. பாரம்பரியம் மிக்க தஞ்சாவூர் பானியில் அமைந்த நடனம். அவர் ஆட ஆட அங்கே நர்த்தகி ஒரு அரவாணி என்கிற பிம்பம் மறைந்தது. ஒரு சிறந்த நாட்டியக் கலைஞர் தான் என் கண்களுக்குத் தெரிந்தார். அடுத்த நாள் விழா அன்று 'தமிழர் திருநாளாம்' என்ற பாடலுக்கு கம்பீரமாக ஆடினார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. நர்த்தகியை இரண்டு நாட்களாக கவனித்து வந்தேன். நிமிர்ந்த நடை. எந்த வித தயக்கமும் தாழ்வு
மனப்பான்மையும் இல்லாமல் சர்வ சாதாரணமாகவே எல்லாருடனும் பழகினார். அவரைத் துளைத்த பார்வைகளனைத்தையும் சட்டை செய்யாமல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விழா முடிந்த மறு நாள் காலை வந்திருந்த எல்லா கலைஞர்களுடனும் ஒரு சிறிய கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நர்த்தகியை பேச அழைத்தார்கள். தன்னை மதித்து விழாவுக்கு அழைத்ததற்கு மனதார நன்றி சொன்ன நர்த்தகி, தனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார். சற்றும் உணர்ச்சி வசப்படாமல் தெளிவான அழகான தமிழில் பேசினார். சிறு வயதில் தன் உடலில் வினோத மாற்றங்கள் உண்டாகத் தொடங்கியபோது தனக்கு எதுவும் புரியவில்லை என்றும், அவரை வெளியில் விட்டால் குடும்ப மானம் போய்விடுமே என்று அவரது அண்ணன் அவரை ஒரு அறையில் அடைத்து அடித்துச் சித்திரவதை செய்ததாகவும், தன்னைப் பெற்ற தாயாரே தன்னை வெறுத்து உதறித் தள்ளியதாகவும் சொன்னார். ஒரு தாயின் அரவணைப்பும், தாய்ப்பாசமும் எப்படி இருக்கும் என்றே தனக்குத் தெரியாது என்று அவர் சொன்னபோது. எனக்கு நெஞ்சில் ஏதோ அடைத்தது. உங்கள் அனுதாபம் எங்களுக்குத் தேவையில்லை, நீங்கள் எங்களைப் புரிந்து கொண்டு சக மனிதராகப் பழகினாலே போதும் என்றார். சுற்றியிருந்தவர்களின் கண்களில் கண்ணீர். தொடர்ந்து அவர், தனது பக்கத்து வீட்டுத் தோழியான சக்தியின் ஆதரவுடன், தனது ஊரில் இருந்த ஒரு கோவிலில் ரகசியமாக நடனமாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறி தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையிடம்
சீடராகச் சேர்ந்ததாகவும், அதன் பிறகே தன் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டு முன்னேறி வந்ததாகவும் சொன்னார். அவர் பேசப் பேச என் மனதில் முன்பிருந்த பொய்யான, தவறான அபிப்பிராயங்கள் எல்லாம் சட சடவென்று உடைந்து நொருங்கின. சட சட சத்தம் வெளியே கேட்கவில்லையே தவிர, அங்கே இருந்தவர்களின் மனதிற்குள்ளும் அபிப்பிராயங்கள் உடைந்து நொருங்கியதை என்னால் உணர முடிந்தது.

என் அறிவில் சினிமா உண்டாக்கிய இருட்டை நினைத்து வெட்கப்பட்டேன். நர்த்தகியின் சந்திப்பினால் இந்த இருட்டில் வெளிச்சம் விழுந்தது. ஆனால் நான் சந்தித்தது வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒரு அரவாணியைத்தான். நர்த்தகியிடம் ஒரு கலை இருந்தததால் அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால் மற்ற அரவாணிகளின் நிலைமை என்ன? பள்ளிகளிலும், வேலை வாய்ப்புகளிலும் அவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். பெரும்பான்மையான அரவாணிகள் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு அரவாணிகள் சங்கத்தில் சேர்கிறார்கள். பலர் வேறு வழியின்றி பாலியல் சேவைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு ஓட்டுரிமைக் கூட நான்கு வருடங்களுக்கு முன் தான் கிடைத்தது என்று அறிந்தேன். அரவாணிகளுக்கு பெரும்பாலும் தலித்துகள் தங்க இடம் கொடுத்து ஆதரவு காட்டுகிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இவர்களுக்கு என்ன விமோசனம்? தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டொருக்கும் சில சலுகைகளை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அரவாணிகளுக்கு அது போல் சலுகைகள் இருக்கிறதா? இவர்களின் நலனுக்காக ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா? உடல் ஊனமுற்ற குழந்தைகளையும், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் கூட எப்படியாவது போராடி வளர்த்துவரும் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் அரவாணிகளானால் மட்டும் புறக்கணிக்கிறார்கள்? அரவாணிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் மனதில் எழுகிறது. இனிமேல் அவர்களைப் பற்றி நான் நிறைய சிந்திப்பேன்.

Friday, January 21, 2005

மாமியாரைத் தோழியாக்க உத்திகள் தேவை!

மாமியாருடன் ஒரு நல்ல நட்பான உறவு முறையை உருவாக்கிக் கொள்வது எந்த ஒரு பெண்ணுக்குமே ஒரு பெரிய சவால் தான். பல பெண்கள் இந்த சவாலை சமாளிக்க பல உத்திகளைக் கையாண்டிருப்பார்கள். நான் கையாண்டு பயன் கிடைத்த ஒரு உத்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எனக்குத் திருமணம் ஆன புதிதில் மாமியார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது எங்களுக்கிடையில் உரையாடல்கள் இடர்பாடாகத் தான் இருந்தது. எங்களுடைய எண்ண அலைகள் முற்றிலும் வெவ்வேறு அளவில் இருந்தன. என்ன பேசி மாமியாரை என் பக்கம் திருப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை என் கணவரின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றைப் பார்த்த நான், என் மாமியாரிடம் "அவர் சின்ன வயசில் எப்படி இருப்பார், என்னென்ன குறும்புகளெல்லாம் செய்வார்?" என்று கேட்டேன். உடனே என் மாமியாரின் முகத்தில் பளிச்சென்று ஒரு பிரகாசம். என் அருகில் வந்து உட்கார்ந்துக் கொண்டார். "அதையேன் கேட்கிற? அவன் இருக்கானே..." என்று ஆரம்பித்தவர் ஆர்வத்துடன் என் கணவருடைய பல சுவாரஸ்யமான சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். எனாக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததது. ஒரு வாரமாக என்னிடம் பாராமுகமாக இருந்த மாமியார், ஒரே நாளில் சற்று நெருங்கி வந்துவிட்டார். ஒரு தாய் நினைத்து நினத்து பெருமையும் மகிழ்ச்சியும் அடையக் கூடிய ஒரு விஷயம் அவள் தன் குழந்தையை சீராட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்கிய அனுபவம் இல்லையா? இதை புரிந்து கொண்ட நான், அவ்வப்போது இதைப் பற்றி என் மாமியாரிடம் பேசினேன். இது எங்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வெகுவாக உதவியது.

ஆனால் எத்தனை நாள் அதையே பேசிக்கொண்டிருக்க முடியும்? வெவ்வேறு உத்திகளை அவ்வப்போது கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இரண்டான்டுகளுக்கு ஒரு முறை விடுமுறைக்குச் சென்று சில நாட்கள் மாமியாருடன் தங்கியிக்கும் போதே இப்படி யோசித்து, திட்டமிட்டு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறதே? மாமியாருடனேயே நிரந்தரமாக தங்கியிருக்கும் பெண்களை உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும். வேறு ஏதாவது உத்திகள் யாருக்காவது தெரிந்தால் எழுதவும், அடுத்த விடுமுறைக்குச் செல்லும் போது உபயோகமாக இருக்கும்

Tuesday, January 18, 2005

துணைத் தலைவர் VS குடும்பத் தலைவர்!

கடந்த சனிக்கிழமை எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தேர்தல் நடந்தது. என் கணவர் துணைத் தலைவராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
ஏகப்பட்ட வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வெற்றியைக் கொண்டாடிவிட்டு நேற்று தான் வீடு திரும்பினோம். ஒரு காபி போடலாம் என்று சமையலறைக்குச் சென்று விளக்கைப் போட்டேன். அந்த ட்யூப் லைட், டிஸ்கோ லைட் போல் அனைந்து அனைந்து எறிந்து கொண்டிருந்தது. ஹம்ம்...மூன்று மாதங்களாக என் கணவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அந்த விளக்கை சரி செய்து கொடுக்கச் சொல்லி. ஹோம் டிப்போ(Home Depot) சென்று விளக்கை வாங்கி வந்து மாட்ட வேண்டும், அவ்வளவு தான். ஒவ்வொரு வார இறுதியிலும், நான் அவருக்கு ஞாபகப்படுத்தும் போதெல்லாம், "அதைவிட வேறு என்ன வேலை எனக்கு? உடனடியாக செய்துவிடுகிறேன்" என்பார். அப்பறம் தொலைபேசி, இன்டர்னெட்,
நண்பர்கள் என்று அந்த வார இறுதியும் சென்றுவிடும். சரி, அவரிடம் மீண்டும் ஞாபகப் படுத்தலாம் என்று முன்னறைக்கு வந்த போது, அவர் தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

"வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி"
"..."
"ஆமாம் கொஞ்சம் சிரமமான தேர்தல் தான், ஆனால் மக்கள் நம்ம பக்கம் தான் இருந்தார்கள்"
"..."
"அதைவிட வேறு என்ன வேலை எனக்கு? உடனடியாக செய்துவிடுகிறேன்"

மறு முனையில் இருப்பவர் யாரென்று என்னால் யூகிக்க முடியவில்லை, ஆனால், அவர் காதில் பூ இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது.

Saturday, January 08, 2005

விவேக் ஒபராய்


Image Hosted by ImageShack.us
எனக்கு அபிமான சினிமா ஹீரோ என்று யாரும் இருந்ததில்லை. ஒவ்வொரு படத்தில் ஒவ்வொருவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்காது. நான் விவேக் ஒபராயின் படம் ஒன்று கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது நான் அவருடைய பரம விசிறி ஆகிவிட்டேன். தேவனாம்பட்டிணம் கிராமத்தில் அவர் செய்து கொண்டிருப்பது எவ்வளவு உயர்ந்த சேவை! பம்பாயிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து, தேவனாம்பட்டிணத்திலேயே தங்கி அங்கே வீடிழந்தவர்களுக்கு குடிசைகள் கட்டிக்கொடுத்து, சாப்பாடு, மருந்து, உடைகள் என்று சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அதோடு நிற்காமல் ஜனவரி 16 ஆம் தேதி சில மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறாராம். பணம் இருந்தால் இதெல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யவார்கள் என்று சொல்வது தவறு. மனசு வரனும் முதலில். விவேக் ஒபராய் செய்யும் சேவைகள் மக்களை நேரடியாக அதுவும் உடனடியாக சென்று அடைகிறது. அதுவும் அவர் அந்தக் கிராமத்திலே தங்கி, தமிழ் கற்றுக் கொண்டு, மக்களோடு மக்களாக கலந்து பழகுவது என்னை பிரமிக்க வைக்கிறது. தமிழ்நாட்டு கிராமத்து மக்கள் ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள். அவ்வப்போது ட்ரக்குகளில் வந்து தூக்கி எறியப்படும் உணவு, உடைகளை விட விவேக் ஒபராயைப் போல் அவர்களுக்கு வேண்டியதை கூடவே இருந்து பரிவன்போடு செய்யப்படும் உதவிகளை தான் அவர்கள் விரும்புவார்கள்.

எல்லாரும் அவரவர்களுக்கு இயன்ற வகையில் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். யாரையும் குறை சொல்லக் கூடாது. இருந்தாலும் எனக்கு ஒரு வருத்தம். பம்பாயிலிருந்து ஒரு இந்தி சினிமா நட்சத்திரம் வந்து இப்படி சேவை செய்து கொண்டிருக்கிறாரே, நம்ம தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் எங்கே போனார்கள்? எல்லாரும் பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஏழைகளுக்காகப் போராடுவதும், அவர்களுக்காக எழுச்சி மிக்க வசனம் பேசுவதும் சினிமாவில் மட்டும் தானா? அவர்கள் வெறும் நிழல் ஹீரோக்கள் தானா? விவேக் ஒபராய் நிஜ ஹீரோ. ஐஸ்வர்யா ராய் கொடுத்து வைத்தவர்!(?)

Friday, January 07, 2005

பிடிச்சிருக்கு...ரொம்ப பிடிச்சிருக்கு

நான் வலைப்பூ தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. இந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெளிப்படையாக எதையும் பேசுவதற்கு எப்போதுமே எனக்குத் தயக்கம் உண்டு. ஆனால் எழுதும்போது மட்டும் ஏனோ சுதந்திரமாக வார்த்தைகள் ஓடி வருகின்றன. மனதில் தேங்கியிருக்கும் எண்ணங்களை தயங்காமல் வலைப்பூவில் அவிழ்த்து விடுவதால் மனம் இப்போது லேசாக இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். யூனிகோட் எழுத்துருவம், HTML code editing போன்றவற்றை தெரிந்து கொண்டேன். பொது அறிவு நிச்சயமாக அதிகரித்திருக்கிறது. இப்போதெல்லாம் நான் செய்திகளைப் படிப்பதே இல்லை. நான்கைந்து வலைப் பதிவுகளை படித்தாலே உலக நடப்புகள் எல்லாமே தெரிய வருகிறது. மற்றவர்களின் அனுபவங்கள், எண்ண ஓட்டங்கள், பின்னூட்டங்கள் - இவைகளை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். என் வலைப் பதிவுகளில் யாராவது பின்னூட்டம் எழுதிவிட்டால் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போகிறேன், நான் எழுதியதையும் சிலர் படிக்கிறார்களே என்று. நினைப்பதை எழுதுவதாலும், எழுதுவதற்கு முன் சிந்திப்பதாலும், நல்ல பொழுதாக கழிகிறது. முன்பெல்லாம் என் கணவர் தொலைபேசியில் நண்பர்களுடன் பேச ஆரம்பித்துவிட்டால் நான் நொந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பேன். இப்போது இருக்கவே இருக்கிறது என் வலைப்பூ. அவர் எத்தனை நேரம் பேசினால் எனக்கென்ன?

திரு காசி அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். உலகெங்கும் வாழும் ஆர்வம் மிக்க தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து தமிழ்மணம் என்ற இணைய தளத்தில் ஒரு வலைப் பதிவாளர்கள் சமுதாயத்தையே உருவாக்கியிருப்பது அவர் செய்த மகத்தான சாதனை. தமிழ் மணத்தில் எனக்குமிகவும் பிடித்தது, 'வாசகர்' பகுதியில் இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அன்று புதிதாக எழுதப்பட்ட வலைப் பதிவுகளைத் திரட்டி வெளியிடப்படும் பட்டியல். இந்தப் பட்டியல் மட்டும் இல்லாவிட்டால் என் வலைப் பதிவு யார் கண்ணிலும் பட்டிருக்காது. யார் வருகையும் இல்லாமல் அழுது வடிந்து கொண்டிருக்கும் இன்னேரம். tamilblogs என்ற கூட்டுக் குழுமத்தின் மூலம் காசி, முத்து, பாரி, பத்ரி போன்றவர்கள் வலைப் பதிவாளர்களுக்கு பல நவீன யுத்திகளை கற்றுக் கொடுப்பதும் மிகவும் பாராட்டப் படவேண்டிய சேவை. திரு காசி உருவாக்கிவிட்ட இந்த வலைப் பதிவாளர் சமுதாயத்தின் முழு சக்தியை இந்த சுனாமி நிகழ்வுக்குப் பிறகு பார்க்க முடிகிறது. மின்னல் வேகத்தில் தகவல் பறிமாற்றம், நிவாரண நிதி திரட்டல், உதவிகளை ஒருங்கிணைத்தல் என்று அசத்திவிட்டார்கள். Last, but not the least ...சுனாமியினால் நடந்த கொடூர சேதத்தை செய்திகளில் மட்டுமே பார்த்தும், கேட்டும் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக அவர்களின் கைகளாகவும், கால்களாகவும் இருந்து நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவிகளைச் செய்த திரு.ரஜினி ராம்கியைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இந்த வலைப் பதிவு சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

Thursday, January 06, 2005

அமெரிக்கர்களின் மனித நேயம்

கடந்த வாரம் என் அலுவலகத்தில் சுனாமி நிவாரண நிதி திரட்டும் வேலை மும்முரமாக நடந்தது. அதை முன்னின்று நடத்தியவர்கள் அமெரிக்கர்கள் பலர் தங்களது க்யூபிக்கிள்களில் ஆசையாக வைத்திருந்த செடிகள், மீண் தொட்டி, அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு, வசூலான பணத்தை சுனாமி நிவாரண நிதிக்குக் கொடுத்தார்கள். என் க்யூபிக்கிளில் உருப்படியான எந்தப் பொருளும் இல்லை. அதானால் என்னால் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. ஒரு பெண்மணி, "நேற்று தான் $300 டாலர்கள் நிதியாக அனுப்பினேன். என்ன, இந்த மாதம் வெளியில் சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டும். எனக்கு இது மிகச் சிறிய இழப்பு. என் குழந்தைகளை உயிருடன் தினம் பார்க்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். சுனாமியினால் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்களின் இழப்பை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்றார். இன்னொருவர் என்னிடம் "நீ இன்னும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் இடத்தில் நான் இருந்திருந்தால் இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு இந்தியா சென்று என்னாலான உதவிகளை செய்திருப்பேன்" என்றார்!. ஏற்கனவே கில்டியாக இருந்த எனக்கு இன்னும் வருத்தமாகப் போய்விட்டது. மேலும், இலங்கையில் மிகப் பெரிய சேதம் நேர்ந்திருக்கும் போது இலங்கை அரசாங்கம் தமிழ் ஈழப் பகுதிகளுக்கு உதவி செய்வதில் பாராபட்சம் பார்ப்பது மிகவும் தவறு என்றும் சிலர் வருத்தப்பட்டர்கள். வேற்று நாட்டவர்களாக இருந்தாலும் அமெரிக்கர்கள் காட்டும் ஆதரவும், ஆறுதலும் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
பொது மக்கள் இப்படி இருக்க, நிவாரண நிதி விஷயத்தில் அதிபர் புஷ் கஞ்சத்தனம் காட்டியிருப்பதாக அமெரிக்கர்களே வருத்தப்படுகிறார்கள். முதலில் $15 மில்லியன் என்று அறிவித்திருந்தார். அது இந்த மாதம் அவருடைய பதவி ஏற்பு தினத்தன்று(Presidential Inauguration) ரிபப்ளிகன் கட்சியினர் திட்டமிட்டிருக்கும் கொண்டாட்டச் செலவில் பாதியை விட கம்மியாம்!. பிறகு நிதி $35 மில்லியனாக உயர்த்தப்பட்டபோது கூட என் மேலாளர் "Shame on him" என்று திட்டிக் கொண்டிருந்தார். இப்போது இன்னும் உயர்த்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

Wednesday, January 05, 2005

வெளிநாட்டு உதவி மறுப்பு

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு உதவியை இந்தியா மறுத்துவிட்டது சரியான முடிவா என்று யோசனையாக இருந்தது. ஆனால் பிரதமர் மன் மோகன் சிங் பழுத்த அனுபவசாலி, படித்தவர். அவர் தவறாக முடிவெடுக்க மாட்டார்தான். உதவிகள் கொடுக்கப்படுவதால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை...தேவைப்படுவதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் வெளிநாட்டு உதவிகளை மறுத்ததற்கான
காரணங்கள் வலுவானதாக உள்ளன. அதாவது, குஜராத் நில நடுக்கத்தின் போதும் ஒரிசா சூறாவளியின் போதும் வந்த வெளி நாட்டு உதவிகள் இந்தியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்துவிட்டன. உதவ வந்த வெளிநாட்டவர்கள், நிவாரணப் பணி செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஐம்பது வருடங்களாகியும்
இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்கிறதென்று தங்கள் பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி விட்டார்கள். மிகப் பெரிய இயற்கை சீற்றத்தால் ஒரு நாடு மோசமான முறையில் பாதிக்கப்படுவது ஒரு கொடூரமான அனுபவம், அந்த நிலைமையிலும் அந்த நாட்டின் இயலாமையையும், பற்றாக்குறையையும் சுட்டிக் காட்டி விமர்சிப்பது இன்னும் கொடுமை.

பல தன்னார்வ அமைப்புகள் நிதியாகவும், உடல் உழைப்பாகவும் தற்போது உதவிகளை அயராமல் வழங்கி வருகின்றன. இந்த அமைப்புகளை இந்திய அரசும் தமிழக அரசும் அடையாளம் கண்டு தொடர்ந்து ஊக்குவித்தாலே போதும். கூடிய சீக்கிரம் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் நிவாரணம் காணும் என்று நினைக்கிறேன். ஆனால் மனதிற்குள் ஒரு சின்ன ஆதங்கம். இவ்வளவு தான் நமக்குத் தேவைப்படும் என்று சொல்லும் நிலைமையிலா நாம் இருக்கிறோம்? ஒவ்வொரு டாலரும் எத்தனையோ பேரின் வாழ்க்கையை சீர்படுத்த பயன்படுமே? இப்போதைக்கு அளவுக்கு மேல் உதவிகள் வந்து குவிந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான எதிர்காலத் திட்டங்களுக்காக நிறைய உதவிகள் தேவைப்படுமே என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு உதவி மறுப்பு பற்றி மற்றவர்களின் அபிப்ராயத்தை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

Tuesday, January 04, 2005

The South-East Asia Earthquake and Tsunami Blog

இந்த வலைப்பதிவில் இருக்கும் செய்திகள் உதவ நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

The South-East Asia Earthquake and Tsunami Blog

அந்தக் கடல் அலைகளா?

Image Hosted by ImageShack.us

நண்பர்கள் சிலர் ஏன் ஒரு வாரமாக உங்கள் வலைப் பூ பூக்கவில்லை என்றும், ஏன் உங்கள் சிறகுகள் நீளவில்லை என்றும் கேட்டார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.

ஒரு வாரமாக எதிலும் மனம் லயிக்கவில்லை. சன் டிவியில் காட்டும் சுனாமி காட்சிகளும், அந்த மெல்லிய விசும்பல் கலந்த சோகமான இசையும் மனதைப் பிழிகின்றன. புது வருடம் பிறந்தபோது கூட யாரையும் கூப்பிட்டு வாழ்த்த தோன்றவில்லை. ஆர்வத்துடன் தொலைபேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கு உதட்டளவில் மட்டுமே பதில் வாழ்த்துக்கள் கூற முடிந்தது. சுனாமி நிவாரண நிதிக்காக பணம் அனுப்புவதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லையே என்று ஒரு கையாலாகாத்தனம் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்தால் மட்டும் என்னால் என்ன செய்ய முடியும்?. யார் எது செய்தாலும் ஈடுகட்ட முடியாத இழப்புகள்...

கடற் கரையின் மீதும், கடல் அலைகளின் மீதும் எனக்கு எப்போதுமே மிகுந்த அபிமானம் உண்டு.

என்னால் நம்பவே முடியவில்லை...

எனது சொந்த ஊரான சிதம்பரத்தின் அருகில் உள்ளது பூம்புகார். சிறு வயதில் குடும்பத்தாருடன் பூம்புகாருக்கு பிக்னிக் சென்று கடற்கரையில் விளையாடும்போதும், சாப்பிடும் போதும், அரட்டை அடிக்கும்போதும் கூடவே வந்து ஆர்ப்பரித்த அந்தக் கடல் அலைகளா தெற்கு ஆசியாவின் வரைபடத்தையே மாற்றி அமைத்திருப்பது?

கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் என் அண்னனின் வீடு இருந்தது. என் மனம் பாரமாக இருக்கும் நேரங்களில், அண்ணன் வீட்டுப் போர்டிகோவில் நின்று கடலைப் பார்க்கும்போது, என் மனதை வருடிக் கொடுக்குமே அந்த கடல் அலைகளா இலங்கையை இன்னும் பல வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றது?

நானும் என் கணவரும் காதலித்த நாட்களில் மெரீனா கடற்கரையில் உட்கார்ந்து எங்கள் திருமணத்தைப் பற்றியும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் பேசியபோதெல்லாம் எங்களுக்கு துணையாக இருந்தது தைரியம் கொடுத்த அந்தக் கடல் அலைகளா பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் எதிர்காலத்தையும், கனவுகளையும் அடித்துச் சென்றது?

என்னால் நம்பவே முடியவில்லை...

உயிரற்ற, சிந்தனையற்ற, நோக்கமற்ற அந்தக் கடல் அலைகளுக்கும் அதன் கோர வடிவமான சுனாமிக்கும் நன்றி சொல்வது எவ்வளவு அர்த்தமற்றதோ, அதே போல் அவைகளை கோபிப்பதும் அர்த்தமற்றது. ஆனால் மனித இயல்பு...ஆற்றாமையில் பலவிதமாக நினைக்கத்தோன்றும்.

மனித நேய உதவிகளும், நிவரணப் பணிகளும் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் உதவ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

தாரா.