Wednesday, June 20, 2007

உலக அகதிகளுக்காக - A New Home, A New Life.

இன்று உலக அகதிகள் தினம்! அவர்களைப் பற்றி நினைக்காமல் இருப்பது நியாயமில்லை.

ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியூர் சென்றாலே, எப்படா வீட்டுக்குத் திரும்பிப் போகலாம் என்று தோன்றும். திரும்பி வந்து வீட்டுக் கதவைத் திறந்ததும், "அப்பாடா! Home Sweet Home!" என்று மனம் புளகாங்கிதம் அடையும். உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், திரும்பி வர ஒரு இடம் இருக்கிறது என்பது எவ்வளவு நிம்மதியான, பாதுகாப்பான உணர்வு? ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீட்டையும், நாட்டையும் விட்டுச் செல்கிறார்கள். வேறு நாடுகளில் குடியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு ஒரு இடமும், அவர்கள் திரும்பி வரும்போது வரவேற்க சொந்த பந்தங்களும் காத்திருக்கும்.

ஆனால் அகதிகள்? தம் சொந்த வீட்டில், நாட்டில் இருக்கலாமா வேண்டாமா என்பதை தெரிவு செய்யும் உரிமையே இல்லாமல் பாதுகாப்பைத் தேடி சொந்த வீட்டை விட்டு வெளியேறுவது கொடுமை! திரும்பி வருவதற்கு இடம் இல்லாமல், திரும்பிப் பார்ப்பதற்கும் எதுவும் இல்லாமல், கடந்த காலம் சிதைக்கப்பட்டு, எதிர்காலம் பிடுங்கப்பட்டு....சொந்த பந்தங்களைப் பிரிந்து...எத்தனை துயரத்தை தாங்கிக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?! சொந்த மண்ணில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட இவர்கள், வேற்று மண்ணில் கால் ஊன்றி, தம் பழைய வாழ்க்கையை சற்றேனும் ஒத்திருக்கும் ஒரு புதிய வாழ்க்கையை படிப்படியாக அமைக்க முற்படுகிறார்கள். தமக்கும் தம் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்கிற நம்பிக்கையையும் வலுக்கட்டாயமாக வளர்த்துக்கொள்கிறார்கள். தம் சொந்த நாட்டிற்கே எப்படியேனும் திரும்பிப் போய்விடவேண்டும் என்று பிடிவாதமாக அகதிகள் முகாம்களிலேயே இன்னும் இருப்பவர்களும் உண்டு. தொலைத்த வீட்டையும் நாட்டையும் மீட்டெடுக்கமுடியாவிட்டாலும், தொலைந்து போன பாதுகாப்பு உணர்வை இவர்களுக்கு மீட்டுக் கொடுப்பது அரசாங்கங்களால் தான் முடியும்.

எனக்கு 12 வயதிருக்கும் போது என் சித்தப்பா குடும்பத்தினர் கொழும்புவிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள். சித்தி அப்போது 6 மாத கர்ப்பிணி. 10 வயதில் ஒரு பெண். சித்தப்பா இந்தியாவிலிருந்து பல வருடங்களுக்கு முன் இலங்கைச் சென்றவர். இலங்கையில் சித்தப்பாவின் வீடு தீ வைத்து எறிக்கப்பட்டது என்றும், குடும்பத்துடன் சுவர் ஏறிக் குதித்து தப்பி வந்தார்கள் என்றும் பின்னர் தெரியவந்தது. சில மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது என் சித்தி பெண் செய்யும் குறும்புகளுக்கும், தவறுகளுக்கும், அப்பா என்னைத்தான் கண்டிப்பார். "ஏன் என்னையே திட்டறீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்?" என்று அழும் என்னை, "அவங்க இலங்கைல எவ்வவளவோ கஷட்டத்தை அனுபவிச்சு, சொந்த வீடு, பணம் எல்லாத்தையும் இழந்துட்டு வந்திருக்காங்க. நாம தான் அவங்களுக்கு அனுசரனையா இருக்கனும். அவள் உன் தங்கைதானே? அவள் எது செய்தாலும், நீ பொறுத்துப் போகனும்" என்று விளக்கினார். சில மாதங்கள் எங்கள் சிதம்பரம் வீட்டில் தங்கியிருந்த சித்தப்பா, பின் திருச்சியில் ஒரு வியாபாரம் தொடங்கி படிப்படியாக காலூன்றி, இன்று ஓரளவு நல்ல நிலமையில் இருக்கிறார்.

என் அண்ணி(முதல் அண்ணனின் மனைவி) ஒரு இலங்கைத் தமிழர். சாகவச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். அண்ணியுடைய பெற்றோர்கள், தம் மகள்கள் மூன்று பேரையும் பாதுகாப்பு கருதி, 18 வயதிருக்கும் போது இந்தியாவிற்கு படிக்க அனுப்பிவிட்டார்கள். என் அண்ணி அந்த வயதிலிருந்தே ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். என் அண்ணன் அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். என்னதான் திருமணமாகி எங்கள் குடும்பத்துடன் அவர் பாதுகாப்பாக ஐக்கியமாகிவிட்டாலும், பெற்றோர்களைப் பார்க்கமுடியாமல், சொந்த ஊருக்குப் போகமுடியாமல் அவர் பல முறை தவித்ததை நான் உணர்ந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தினர் பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளின் போது குதூகலமாக இருக்கையில், அண்ணியின் முகத்தில் ஒரு சோகம் தெரியும். தன் அப்பா சாகவச்சேரியில் இறந்தபோதும், தன் செல்லத் தம்பி சாகவச்சேரியில் திடீரென்று காணாமல் போனபோதும் (இன்று வரை அவருக்கு என்ன ஆனது என்றுத் தெரியாது) அண்ணி கதறி அழுததும் எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் போர் கலகங்கள் சற்று அடங்கியிருந்த இடைவெளிகளில் இலங்கை போய் தன் அம்மாவைப் பார்த்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன் அண்ணிக்கு 'brain hemorrhage' ஏற்பட்டு அமெரிக்காவில் உயிர் துறந்தார். அவர் வாழும் போதும் சரி, சாவும் போதும் சரி, சொந்த மண்ணில் இருக்கும் பாக்கியம் கிட்டவில்லை!

இவை என் குடும்பத்தில் நடந்த இரு சம்பவங்கள் தான். இது போல் உலகம் பூராவும் சிதறிக்கிடக்கும் அகதிகளின் சோகங்களை என்னவென்றுச் சொல்வது? ஐ.நா சபை சொல்லும் செய்திப்படி உலக அகதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது உண்மையானால் மகிழ்ச்சியே. இந்த வருட உலக அகதிகள் தினத்திற்கு ஐ.நா வின் கருத்து "A New Home, A New Life". உலகத்தில் வாழும் அத்தனை அகதிகளுக்கும் ஒரு புதிய வாழ்வு கிடைக்கவேண்டுமென்பது என் பிரார்த்தனை.

Monday, June 18, 2007

நானும் 'சிவாஜி' பார்த்தேன்

போதும் போதுமென்கிற அளவு சிவாஜி திரைப்படத்தைப் பற்றி மக்கள் எழுதிவிட்டார்கள். நானும் என் பங்கை ஓரமாகத் தினித்துவிடுகிறேன்.

1. சனிக்கிழமை 7 மணி காட்சிக்கு காத்திருந்தபோது, 4 மணி காட்சி முடிந்து வெளியே வந்த நண்பர்கள் 10 பேரில் 7 பேர் "லாஜிக், கதை இதெல்லாம் மறந்துட்டு பார்த்தா படம் நன்றாக இருக்கிறது" என்றார்கள். 3 பேர் "ரொம்ப சுமாரா தான் இருக்கு" என்றார்கள்.

2. எதிர்பார்ப்பை மிகக் குறைத்துக்கொண்டே திரையரங்கில் சென்று அமர்ந்தேன்.

3. நான் தீவிர ரஜினி ரசிகை இல்லையென்றாலும், 'ரஜினி ஸ்டைல்' என்னைக் கவரத்தான் செய்தது.

4. ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் காட்சியில் பழைய இளமையான ரஜினியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஒப்பனைக் கலைஞரின் திறமை தெரிகிறது.

5. படத்தின் முதல் பாகத்தில் விவேக்கின் நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.
6. படம் முழுக்க வண்டி வண்டியாக நம் காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.

7. கதாநாயகி ஷ்ரேயா மற்றுமொரு நடிக்கத் தெரியாத அழகு பொம்மை. நடனத்தில் ஒளிர்கிறார்.

8. ரஜினி நடனமா ஆடுகிறார்? என்ன செய்கிறார் என்றே புரியவில்லை.

9. பாடல்களில் ஏ.ஆர்.ஆர் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்.

10. எல்லாரும் ரஜினி துதி பாடுவது ரொம்ப டூமச்சாக இருக்கு. சாலமன் பாப்பையா கூட "இவர் ஸ்டைலைப் பாருங்கய்யா...இவர் பேச்சை பாருங்கய்யா...இவரைப் பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் யாராவது இருக்க முடியுமா?" என்று ஒழுகுவதும், "எங்க வீட்டுக்கு வாங்க...எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க" என்று அடிக்கடி சொல்லுவதும், ரஜினியுடன் சேர்ந்து 'ரண்டக்க ரண்டக்க' பாட்டுக்கு ஆடுவதும் பார்க்க வேதனையாக இருந்தது. ஒரு தமிழ் அறிஞருக்கு இது தேவையா?

11. கடைசியில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் 'மொட்டை ரஜினி' கலக்கல்!. அங்கிலத் திரைப்பட நடிகர் Samuel.L.Jackson ஐ காப்பியடித்திருக்கிறார் என்று நினைகிறேன்.

12. க்ளைமாக்ஸ் காட்சிகளில் உட்காரவே முடியவில்லை. செமை அறுவை.

13. ரஜினி ஒரு திறமையான நடிகர். அவரை வைத்து பாலசந்தர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் நல்லத் தரமான திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். சங்கருக்கு அந்த ஆசை இல்லையோ?

14. திரையரங்கில் இடம் கிடைக்காததால் நானும் என் கணவரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தோம். இடைவெளையின் போது என்னிடம் வந்து "படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டார். "பரவாயில்லை. இதுவரை நல்லா போச்சு" என்றேன். "என்னது? நல்லா போச்சா?!" என்று அதிர்ச்சியடைந்தவர், "உன்னை புரிஞ்சிக்கவே முடியவில்லை" என்று முனகிக்கொண்டே தன் இருக்கைக்குச் சென்றார்.

15. திரையரங்கில் இருந்து வெளியே வந்ததும் கூட வந்த நண்பர், "படம் எப்படி?" என்று கேட்டார். நான் ஒரு நிமிடம் யோசித்தேன். 3 மணி நேரத்தில், 2 மணி நேரம் எனக்கு நன்றாகவே பொழுது போயிற்று. இதைச் சொன்னபோது நண்பர் என்னை நம்பமுடியாமல் பார்த்தார் "நீங்களா இப்படிச் சொல்றீங்க" என்கிற மாதிரி. அவருக்கு சுத்தமாக படம் புடிக்கலையாம்.

நான் குழம்பிப் போய் என் மேலேயே எனக்கு சந்தேகம் வந்தது...சரி! ஏதோ தெரியாத்தனமா இந்தப் படத்தைக் "கொஞ்சம்" ரசிச்சுத் தொலைத்துவிட்டேன்! விடுங்களேன்!

Tuesday, June 12, 2007

'நான் அவனில்லை' - அன்றும் இன்றும்

Image Hosting

'நான் அவனில்லை' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கி, ஜெமினி கனேசன் நடித்த பழைய 'நான் அவனில்லை' திரைப்படத்தையும் கிட்டத் தட்ட 15 வருடங்களுக்கு முன் பார்த்தேன். இன்னமும் அதில் ஜெமினியின் நடிப்பும், பல காட்சிகளும், சில பாடல்களும் நினைவில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அந்தப் படத்தின் தரம்! இந்த நவீன 'நான் அவனில்லை' க்கும் பாலசந்தரின் 'நான் அவனில்லை' க்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

புதிய படத்தின் கதாநாயகன் ஜீவன், "நான் ஜெமினி இல்லை" என்றும், இயக்குனர் செல்வா, "நான் பாலசந்தர் இல்லை" என்றும் படம் பூரா சொல்லியிருக்கிறார்கள்! ஒரிஜினல் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் புதுப் படம் கட்டாயம் பிடித்திருக்கும். படம் சலிப்புத் தட்டாமல் வேகமாகக் கதை நகர்கிறது. அதுமட்டிலும் பாராட்டலாம். பாடல்களில், 'ஏனெனக்கு மயக்கம்' மற்றும் 'ராதா காதல் வராதா' (பழைய பாடலின் re-mix) இரண்டும் மிகவும் இனிமை.

இந்த காலத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். நவீன தொழிற் நுட்பங்கள், காட்சி அமைப்புகள், ஒலி - ஒளிப் பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாவற்றிலும் புதுமையை கையாண்டவர்கள், பெண்களின் அறிவை மட்டும் 50 வருடங்கள் பின்னால் rewind செய்திருக்கிறார்கள். ரொம்பவும் கேவலமாகவும், சுலபமாகவும் பெண்களை கதாநாயகன் ஏமாற்றுகிறார். ஒரிஜினல் படத்திலும், ஐந்து பெண்கள் கதாநாயகன் ஜெமினியிடம் ஏமாந்து போகிறார்கள். ஆனால் அந்த ஏமாற்றங்கள் முட்டாள்தனமாக இல்லாமல், ஒவ்வொன்றிலும் ஒரு வலுவான காரணத்தை அமைத்திருப்பார் பாலசந்தர். ஒவ்வொரு பெண்ணையும் பேச்சிலும் செய்கையிலும் மடக்கி, மயக்கி ஏமாற்றும் ஜெமினியின் நடிப்பு அபாரமாக இருக்கும். பெண்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தைவிட, அவர் அதை செய்யும் புத்திசாலித்தனம் ரசிக்கும்படி இருக்கும். புதிய படத்தில் ஜீவன் அந்தப் பெண்களை ஏமாற்ற எடுக்கும் முயற்சிகள் அபத்தமாக இருக்கின்றது. ஒரே காட்சியில் அந்தப் பெண்கள் ஜீவனை திருமணம் செய்துகொள்ள சம்மதித்து விடுகிறார்கள். அதுவும், ஆசிரமத் தலைவியின் மகளை மடக்குவதற்கு கிருஷ்ண பகவான் பேசுவது போல், கிருஷ்ணர் சிலைக்குப் பின் ஒலிபெருக்கி வைப்பது நம்பும்படியாக இல்லை. மேலும், சினேகாவின் கதாபாத்திரத்தில் பழைய படத்தில் லட்சுமி நடித்திருப்பார் - ஜெமினியின் உருது கவிதைத் திறனால் ஈர்க்கப்பட்டு பின் ஏமாந்த பெண்ணாக. இருந்தாலும், ஜெமினியின் புத்திசாலித்தனத்தினால் ஈர்க்கப்பட்டு, நீதி மன்ற நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவாள். தீர்ப்பை பற்றி லஷ்மியும், நீதிபதியான அவருடைய தந்தையும் விவாதித்துக் கொள்வதெல்லாம் சற்று அறிவுபூர்வமாக இருக்கும். புதிய படத்தில் சினேகா ஏன் வருகிறார் என்றே தெரியவிலலை!

புதிய 'நான் இவனில்லை' நன்றாக இல்லை என்று சொல்லமுடியாது. இரண்டரை மணி நேரம் பொழுது போனது தெரியவில்லை, இருந்தாலும் கே.பி யின் 'நான் அவனில்லை' போல் இது இல்லை.

'ராதா காதல் வராதா' பாடலை உண்மையிலேயே நன்றாக re-mix செய்திருக்கிறார்கள். அனால், கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் தான் இசையின் இனிமையை உணரமுடியும்!...நவனீத காதல் போதை தராதா...ராஜ லீலை தொடராதா...ராதா ராதா காதல் வராதா என்று கடைசியா குரலை ஒரு தூக்கு தூக்குவாரே, சூப்பர்! பழைய பாடலை பாலமுரளிக் கிருஷ்ணா பாடினார் என்று சிலர் சொல்கிறார்கள், சிலர் எஸ்.பி.பி என்கிறார்கள். எது உண்மை? புதிய பாடலை பாடியவர் யார்?. தெரிந்தால் சொல்லுங்கள்.

Friday, June 08, 2007

நியூயார்க் தோசை வண்டி

நான் ஓய்வு நேரங்களில் Food Network தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதுண்டு. இதில், வெறும் சமையல் மட்டுமன்றி, உணவு சம்பந்தப்பட்ட போட்டிகள், நிகழ்வுகள், ஆராய்ச்சிகள் என்று பல வைகயான, வித்தியாசமான நிகழ்ச்சிகள் உண்டு. எல்லாவற்றையும் விட, எனக்குப் மிகவும் பிடித்தது 'Unwrapped' என்கிற நிகழ்ச்சி. உணவுக்குப் பின் ஒரு அறிவியலும் சரித்திரமும் இருக்கிறது என்று எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. ஏதாவது ஒரு பிரபலமான உணவு வகை, உதாரணத்திற்கு Hot Dogs, பெரிய தொழிற்சாலைகளில் எப்படி செய்யப்படுகிறது என்று காட்டுகிறார்கள். ராட்சத இயந்திரங்களினால் மாமிசம் வெட்டப்பட்டு, சீராகக் கலக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கன்வேயர் பெல்ட்டுகளில் வரிசையாக, ஒரே அளவில் காகிதங்களால் சுற்றப்பட்டு பின் பெட்டிகளில் அடைத்து கடைகளுக்கு அனுப்பப் படும் வரை ஒரு திரைப்படம் போல பார்க்க முடிகிறது. Hot Dogs என்கிற பெயர் எப்படி வந்தது, அதை யார் தொடங்கினார்கள் போன்ற வரலாற்று செய்திகளும் நமக்குத் தெரியவருகிறது.

சில நாட்களுக்கு முன் Unwrapped நிகழ்ச்சியில், நியூயார்க்கில் சாலையோர வண்டி உணவகங்களுக்கான(street vendors) விருது நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். முதலில் இவர்களுக்குக் கூட விருதா? என்று ஆச்சரியமாக இருந்தது. பிறகு அந்த விருதின் பின் உள்ள நல்லெண்ணம் மனதை நெகிழ வைத்தது. நியூயார்க் நகரின் பன்னாட்டு உணவு கலாசாரத்தில் இந்த சாலையோர வண்டி உணவகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட சாலையோர உணவகங்கள் நடத்தும் தொழிலாளிகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், தொழில் தொடங்க பண உதவி அளிப்பதற்கும் ஒரு அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பு வருடா வருடம் "Vendy Awards" என்கிற விருது நிகழ்ச்சியை நடத்துகிறது.

முதலில் நியூயார்க்கில் உள்ள அனைத்து சாலையோர வண்டி உணவகங்களில் இருந்து நான்கு சிறந்த உணவகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பிறகு, அந்த நான்கில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை நடத்துபவருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த கடைசி நான்கில் வருவதே பெரிய விசயம் தான். கடந்த 2006 ஆண்டு நடந்த தேர்வில், அந்த நான்கில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் "The Dosa Man" என்று அழைக்கப்படும் குமார் என்ற இலங்கைத் தமிழர்!!!
Image Hosting

மன்ஹாட்டனில் உள்ள வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் இவர் நடத்தும் இந்த சாலையோர வண்டி உணவகத்தில் இவர் தயாரிக்கும் சுவையான, சூடான, மொறு மொறுப்பான மசாலா தோசைகளுக்கும், சாம்பார், சட்னி வகைகளுக்கும் 45 நிமிடங்கள் கூட வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறார்கள் நியூயார்க் மக்கள்! இதில் பெரும்பாலானோர் அருகில் இருக்கும் நியூயார்க் பல்கலைக் கழக மாணவர்களாம்!
Image Hosting

12 வருடங்களுக்கு முன் யாழ்பாணத்திலிருந்து நியூயார்க் நகருக்கு வந்த குமார், முதலில் ஒரு தென்னிந்திய உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றினார். பின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பி, சாலையோரத்தில் தானே ஒரு சிறு வண்டியில் உணவகம் தொடங்கினார். தோசையின் பூர்வீக சுவையை தக்கவைப்பதற்கு தோசை மாவை கல் உரலிலேயே அரைக்கிறார்! ஒவ்வொருவருக்கும் வேண்டியபடி, கண்களுக்கு எதிரே சுடச் சுட தயாரிக்கப்பட்டு பறிமாறிக்கப்படும் இந்த தோசைகள், நியூயார்க் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தோசை மட்டுமன்றி, இட்லி, மெது வடை, சமோசா பொன்றவையும் குமாரின் கடையில் கிடைக்கிறது.

அடித்துக்கொள்ள முடியாதது சுவையா விலையா என்று பிரமிக்கும் அளவு, தோசைகளின் விலையும் இருக்கிறது! ஒரு சாதா தோசை $3, ரவா தோசை $4, பாண்டிச்சேரி தோசை $5! இதில் மிகவும் பிரபலம், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி போட்டு செய்த காரமான மசாலைவை உள்ளே வைத்துப் பறிமாறப்படும் பாண்டிச்சேரி தோசையாம்! இதோ அந்தத் தோசையின் புகைப்படம்...

Image Hosting

அடுத்த முறை நியூயார்க் செல்லும் போது, நெராக இந்தத் தோசை வண்டியைத் தேடித்தான் போவதென்று முடிவு செய்திருக்கிறேன்!

Monday, June 04, 2007

தூது செல்ல ஒரு தோழி இல்லை

Image Hosting

பொதுவாக சனிக்கிழமை காலை வேளைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வேலைக்குச் செல்லும் பதட்டமில்லாமல் தாமதமாக எழுந்து, தேநீர் கோப்பையுடன் உலாத்துவது வழக்கம். ஆனால் அப்படிப்பட்ட சனிக் கிழமையைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது வெளியூர் பயணம், ஏதாவது விழா, கூட்டம் என்று போனதில் என்னுடைய அபிமான சனிக் கிழமைகளைத் தொலைத்திருந்தேன். கடந்த சனிக்கிழமை காலை கண்விழித்தபோது அமைதியாக இருந்தது. எந்த பயணமும் இல்லை, எந்தத் திட்டமும் இல்லை. ஆஹா! இதற்குத் தானே ஆசைப்பட்டேன்!


என் தோழிகளிடம் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது...இன்று நிதானமாகப் பேசலாம் என்று தொலைபேசியை எடுத்தேன். சட்டென்று ஒரு உண்மை உரைத்தது! அவர்கள் தான் இந்தியா போய்விட்டார்களே?!!! விடுமுறைக்கு இல்லைங்க! நிரந்தரமாக!. ஆமாம்...கடந்த ஒரு வருடமாகவே என்னுடைய மூன்று நெருங்கியத் தோழிகள் குடும்பத்தோடு இந்தியா சென்று குடியேறப்போகிறோம் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். திடீரென்று நிஜமாக போய்விட்டார்கள். ஒரு தோழி சென்ற வருடமே போய்விட்டார். மற்ற இருவரும் சென்ற மாதம் தான் போனார்கள். எல்லாருக்கும் குதூகலமாக 'farewell party" எல்லாம் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தபோது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு அமைதியான சனிக்கிழமை காலையில் அவர்களின் பிரிவு என்னைத் தாக்கியது.


சரி, அவர்களுடன் பேசியே ஆகவேண்டும் என்று ஒவ்வொருவராக தொலைபேசியில் அழைத்தேன். ஒருவர் பெங்களூரில் குழந்தைகளுடன் "Spider Man" படத்திற்கு நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார். மற்றொருவர் சென்னையில் குடும்பத்துடன் "Pizza Corner" சென்றுகொண்டிருந்தார். என்ன வேடிக்கை?! நாம் இங்கே தமிழ்த் திரைப்படங்களையும், "சரவணபவா" உணவகங்களையும் நாடிச் செல்கிறோம். அங்கே அவர்கள் ஆங்கிலப் படங்கள், மேற்கத்திய உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது எவ்வளவு உண்மை!


திரும்பிச் சென்ற என் தோழிகள், ஒரு தவறைச் செய்துவிட்டார்கள்! தம் குழந்தைகளை மட்டும் தான் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கணவன்மார்களை இங்கேயே இருந்துச் சம்பாரித்து அனுப்புங்கள் என்று விட்டுச் சென்றுவிட்டார்கள்! விளைவு??? என் கணவரின் தொழர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை! எனக்குத்தான் தோழிகள் பஞ்சம் இப்போது. பச்சை விளக்கு(?) திரைப்படத்தில் வரும் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்ற பாடல் என் சூழ்நிலைக்கு பொறுத்தமாக இருக்கிறது :-)