Monday, December 20, 2004

ஞாநியின் சமூக இயல் பார்வை VS பெண் என்ற பார்வை - எம்.எஸ்

திண்ணையில் எம்.எஸ்: அஞ்சலி என்ற ஞாநியின் கட்டுரையைப் படித்தேன். படிக்காதவர்கள் இங்கே http://www.thinnai.com/ar12160412.html click செய்யுங்கள். முதல் முறை அந்தக் கட்டுரையைப் படித்தபோது அவர் எம்.எஸ்சை குற்றம் சாட்டியிருப்பது போல் தோன்றியது. ஆனால் இரண்டு, மூன்று முறை படித்துப் பார்த்த போது, அவர் எம்.எஸ் எப்படி 'சமஸ்கிருதமயமாகல்' என்ற கருத்தியலுக்கு உதாரணமாக விளங்கினார் என்று ஒரு சமூக இயல் பார்வையில் மட்டுமே விளக்கியிருக்கிறார். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு பெண்ணாக, அதுவும் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தில் வாழ்ந்தஎம்.எஸ்சின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, சில கருத்து வெறுபாடுகள் எனக்குத் தோன்றியது. அதன் விளைவே இந்தப் பதிவு. ஞாநி ஒரு சிறந்த எழுத்தாளர். நானோ எதோ அவ்வப்போது கிறுக்கும் ஒரு கத்துகுட்டி. பிறகு இந்தக் கடிதத்தை எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் பிரமணப் பெண் அல்ல. பிரமணீயத்தை ஏற்றுக் கொண்டவளும் அல்ல. சங்கீத ஞானமும் அவ்வளவாக கிடையாது. சமஸ்கிருதம் தெரியாது. எம்.எஸ்சின் பரம விசிறியும் அல்ல. ஆனால் பெண் என்ற தகுதி மட்டும் எனக்கு இருக்கிறது.
  • "இசைப் புலமை, இசை சார்ந்த கற்றல் என்பவை தவிர மீதி அணைத்திலும் தனக்கென்று சொந்தக் கருத்தோ பார்வையோ தேவையில்லை என்ற அடிப்படையில் வாழ்ந்தவர் எம்.எஸ். வாழ்க்கையின் மீதி அனைத்து விஷயங்களையும் சதாசிவத்திடம் ஒப்படைத்துவிட்ட அவரை வழி நடத்தியிருப்பது வைணவத்தின் சரணாகதிக் கோட்பாடுதான்."
1940 ஆம் ஆண்டு எம்.எஸ் சதாசிவத்தை திருமணம் செய்துகொண்டார். அந்த கால கட்டத்தில் எம்.எஸ் மட்டும் அல்ல, எந்தப் பெண் திருமணம் செய்து கொண்டாலும், கணவரிடம் சரணாகதி அடைந்துவிடுவது தானே நமது கலாசாரமாக இருந்து வந்தது? அதற்கு எம்.எஸ் எப்படிவிதிவிலக்காக முடியும்? வைணவத்தின் சரணாகதிக் கோட்பாட்டை பெரும்பாலான பெண்கள் மேல் சாதியாக இருக்கட்டும், கீழ் சாதியாக இருக்கட்டும், தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அதை ஏற்றுக் கொண்டார்கள். இன்று கூட அப்படிப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணை, அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்கிறேன். அவள் வெலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கிறாள். ஆனால் தன் சம்பளக் காசோலையை பிரித்துக் கூட பார்ப்பதில்லை. அப்படியே தன் கணவனிடம் கொடுத்து விடுகிறாள். அவன் எல்லவற்றையும் பார்த்துக் கொள்கிறான். அவள் குழந்தைகளை மட்டும் பார்த்துக் கொள்கிறாள். அவளுக்கு வைணவத்தின் சரணாகதி கோட்பாடு என்னவென்று தெரியாது, ஆனால் அதை கடைபிடிக்கிறாள். இன்றே இப்படிப் பட்ட பெண்கள் இருக்கும் போது, அன்று திருமணம் செய்து கொண்ட பல பெண்களுக்கு சரணாகதி அடைவதைத் தவிர வேறு option இருந்ததாகத் தெரியவில்லை. கணவனிடம் சரணாகதி அடைவது என்பது ஒரு இயல்பான வாழ்க்கை முறையாக இருந்தது.
  • "அப்படித் தன்னை சதாசிவத்திடம் சரணாகதி செய்ததில்தான் இசை வேளாளரான சுப்புலட்சுமி முழுமையான பிராமணப் பெண்ணாக மாற்றம் கண்டார்."
எம்.எஸ் சதாசிவத்தை திருமணம் செய்து கொண்டபின் பிரமணப் பெண்ணாக வாழ்ந்தார் என்பது உண்மை தான். மீண்டும் நான் 70 வருடங்களுக்கு பின் செல்ல விரும்புகிறேன். அன்று கலப்புத் திருமணமே மிக அறிது. அப்படி கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மையான பெண்கள் தன் கணவர் என்ன சாதியோ, அந்தச் சாதியைதானே தங்கள் சாதியாக ஏற்றுகொண்டு வாழ்ந்தார்கள்? கணவனின் சாதி மனைவியின் சாதியாகிறது, அவனுடைய குல தெய்வம் அவளுடைய குல தெய்வமாகிறது, அவனது குடும்பப் பழக்க வழக்கங்கள் அவளது பழக்க வழக்கங்களாகிறது. பல பெண்கள் கணவனின் சாதிக்கு மாற்றம் கண்டது போலதான் எம்.எஸ் சதாசிவத்தின் சாதிக்கு மாற்றம் கண்டார். அது அன்றிருந்த வாழ்க்கை முறையின் அடிப்படையில் இயல்பாக நடந்த ஒன்று. Sanskritisation என்றால் என்ன? It is a process by which the upward mobility was sought by the so called backward castes in the caste hierarchy. சமஸ்கிருதமயமாகல் என்பது பிரமணீயத்தை ஏற்றுக் கொள்வது மட்டும் அல்ல. ஒரு தாழ்ந்த சாதியில் இருந்து வேறு உயர்ந்த சாதியின்(பிரமணார் அல்லாத சாதி) பழக்க வழக்கங்களை கடை பிடிப்பதும் சமஸ்கிருதமயமாகல் தான். எம்.எஸ் பிரபலமானவர் என்பதால் அவர் விமர்சிக்கப்படுகிறார். மற்றபடி, அவர் ஒன்றும் வித்தியாசமாக, அவர் கால கட்டத்தில் வாழ்ந்த பெண்கள் செய்யாத ஒன்றை செய்து விடவில்லை.
  • "இசையுலக வாய்ப்புகள் சாதனைகள் எல்லாமே அவருக்கு இந்த சரணாகதியின் விளைவாகக் கிடைத்த லாபங்கள்"
எல்லாமே அவருக்கு இந்த சரணாகதியின் விளைவாக கிடைத்த லாபங்கள் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திருமணத்திற்கு முன்பே எம்.எஸ் புகழ் ஏணியில் பாதி உயரம் ஏறிவிட்டார். 10 வயதில் அவர் செய்த கச்சேரியிலேயே மதுரை மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார். 1932 ஆம் ஆண்டு சென்னைக்கு அவர் வந்த போது, சங்கீத உலகம் ஆண் ஆதிக்கம் மிக்கதாக இருந்தது. தேவ தாசிகள் மட்டுமே இசை, நடனக் கச்சேரிகளை செய்து கொண்டிருந்தார்கள். ஆண் பக்கவாத்திய கலைஞ்சர்கள் பெண்களுக்கு வாசிப்பதை கெளரவக் குறைவாக நினைத்தார்கள். இந்த நிலையில், சென்னையில் தன் முதல் கச்சேரியிலேயே அனைவரையும் நிமிர்ந்து உட்காரவைத்தார் எம்.எஸ். தனது 17 ஆவது வயதில் மியூசிக் அகாடமியில் பாடினார். அப்பொழுதே அவரை பத்திரிக்கைகள் 'இசைக் குயில்' என்று குறிப்பிட்டன. ஏற்கனவே பேரும் புகழும் அடைந்திருந்த ஒருவரைத் தான் சதாசிவம் திருமணம் செய்துகொண்டார். தன் இசைப் பயணத்தில் கடினமான பாதையை ஏற்கனவே தாண்டிவிட்ட எம்.எஸ்சை சதாசிவம் கைப் பற்றி புகழ் ஏணியின் உச்சிக்கு கொண்டுவந்தது அவருக்கு எளிதான காரியமாக இருந்திருக்கும். எம்.எஸ் சதாசிவத்தை திருமணம் செய்திருக்கவிட்டால் கூட இன்று அவர் இருக்கும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
  • "தன் மேதமையை ஒரு பார்ப்பன கருத்தியல் கலை வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் விரித்திருந்தால் அவர் இன்னும் என்னவெல்லாம்ஆகியிருக்கக் கூடும் என்பது இப்போதைக்கு ஒரு சுவையான கற்பனை மட்டும் தான்."

ஏற்கனவே புகழின் உச்சியில் அவர் இருந்தார். வாங்கவெண்டிய பட்டங்கள், விருதுகள் அத்தனையும் வாங்கி குவித்து விட்டார். இதற்கு மேல் என்ன ஆக வேண்டும்?

எம்.எஸ் பிரமணீயத்தையோ சமஸ்கிருதமயமாகலையோ ஏற்றுகொண்டிருக்கலாம். ஆனால் தான் உண்டு தன் இசை உண்டு என்று அமைதியான வாக்கையை வாழ்ந்தார். எனக்கு எம்.எஸ்சை நினைக்கும் போது அவருடைய இனிமையான குரல் என் காதில் கேட்கிறது, ஆயிரக்கணக்கான அனாதைகள் வயிறா¡ரச் சாப்பிடுவது என் கண்களில் தெரிகிறது. அவர் இசை வெளாளரா, பிராமணாரா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சுரிதார் போராட்டம்

உங்களுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத சந்தோஷமான காலம் எது என்று கேட்டால், பெரும்பான்மையானோர் கல்லூரி நாட்களைத்தான் சொல்வார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் படித்த அந்த 4 வருடங்கள் எனக்கும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். +2 படித்து முடிக்கும் வரை நான் புடவைக் கட்டியதே இல்லை. கல்லூரி தொடங்கிய முதல் நாள் என்னுடைய அண்ணிதான் எனக்கு புடவைக் கட்டிவிட்டார்கள்! பிறகு நான் பழகிக் கொண்டேன். அண்ணமலைப் பல்கலைக் கழகத்தில் பெண்களுக்கான dress code புடவைதான். சுரிதார் கூட அணியக் கூடாது. +2 வரை பள்ளிச் சீருடை மட்டுமே அனிந்து சலித்துப் போயிருந்த எங்களுக்கு கல்லூரிக்கு வண்ண வண்ண டிசைன்களில் புடவைகள் கட்டிக் கொண்டு போவது ஒரு புதுமையான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்து ஒரு 'பெரிய மனுஷி' ஸ்தானத்தை அடைந்துவிட்டது போல் பெருமையாகவும் இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சிஅதிக நாட்கள் நீடிக்கவில்லை.
முதல் ஆண்டில் எங்களுக்கு கடுமையான பட்டறைகள்(Workshops) இருந்தன. 'Carpentry Workshop' ல் மரப் பலகைகளை சீவி, செதுக்கி பல உருவங்களைச் செய்யவெண்டும். 'Smithy Workshop' ல் இரும்பை நெருப்பில் உருக்கி அதை பெரிய சுத்தியலால் அடித்து உருவங்கள் செய்யவெண்டும். 'Steam Engine lab' ல் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கும் உயரமான boiler களின் மேல் ஏறி, வெப்ப நிலையை பதிவு செய்யவெண்டும். இதையெல்லாம் ஆண்கள் பாண்ட், சட்டைப் போட்டுக் கொண்டு மிகச் சுலபமாக செய்துவிடுவார்கள். புடவையைக் கட்டிக் கொண்டு, முந்தானையை இழுத்துச் சொருவிக் கொண்டு, நாங்கள் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சம் இல்லை. முக்கியமாக பாய்லரின் மேல் ஏறுவது மிகவும் கடினமான வேலை. ஒரு கையில் நோட்டு புத்தகத்தையும் பேனாவையும் பிடிக்கவேண்டும். மற்றொரு கையில் புடவையை தடுக்காமல் இருக்க சற்று தூக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டும். பாய்லரின் மேல் ஏறுவதற்கு ஒரு ஏணி இருக்கும். அந்த ஏணியைப் பிடித்து ஏற மூன்றாவதாக ஒரு கை தேவைப் பட்டது! Smithy பட்டறையில் தரையெல்லாம் கரியாக இருக்கும். அதனால் புடவையின் கீழ்ப் பகுதி கரியாகிவிடும். வீட்டுக்கு வந்தால் அம்மா வேறு புடவையை பாழாக்கியதற்காக திட்டுவார்கள். இந்தப் பட்டறைகளில் 'Safety Precautions' என்று ஒரு பலகை இருந்தது. அதில் "Do not wear clothes with hanging ends" என்று எழுதியிருந்தது. புடவை என்னும் உடை "hanging ends" கொண்டது தானே? இதை ஒரு சாக்காக வைத்து பட்டறைகளுக்கு சுரிதார் அனிய அனுமதி கேட்க முடிவு செய்தோம்.
மாணவிகள் எல்லாம் ஒன்று கூடி ஒரு நாள் எங்கள் துறையின் தலைமைப் பேராசிரியரைச் சந்தித்து புடவைக் கட்டிக் கொண்டு பட்டறைகளில் வேலை செய்வது சிரமமாக இருக்கிறது என்றும், பட்டறைகள் இருக்கும் தினத்தன்று மட்டும் சுரிதார் அனிய அனுமதி வேண்டும் என்றும் கேட்டோம். "சுரிதாருக்கு துப்பட்டா போடுவீர்களே, அதுக்கும் "hanging ends" இருக்கிறதே" என்றார். உடனே ஒரு மாணவி "துப்பட்டா இல்லாமலும் decent ஆன சுரிதார்கள் இருக்கிறது சார்" என்றாள். அவர் மிகவும் யோசித்தார். இரண்டு நாட்கள் கழித்து சொல்கிறேன் என்று சொன்னார். எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறார் என்று புரியவில்லை. இரண்டு நாட்கள் சென்றபின் பேராசிரியரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.பிறகு அவர் மணவர்களுடன் நடத்திய ஒரு கூட்டத்தில் "உங்கள் வகுப்பு மாணவிகள் துப்பட்டா இல்லாமல் சுரிதார் அனிந்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அதில் உங்களுக்கு சந்தோஷம் தானே" என்று நக்கலாக பேசியதாகவும், மாணவர்கள் அதற்கு ஆர்ப்பரித்துக் கைத்தட்டியதாகவும் அறிந்தோம். என்கள் மனம் உடைந்து போனது. எவ்வளவு கேவலமாக பார்வை இவர்களுக்கு?
நாங்கள் விடுவதாக இல்லை. மீண்டும் துறைத் தலைவரை சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். மீண்டும் மழுப்பினார். இப்படி பலமாதங்கள் கழிந்தன. பட்டறைகளில் எங்கள் சிரமங்கள் தொடர்ந்தன. முதல் ஆண்டும் முடிந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் 'Open House' நடக்கும். மாணவர்களின் பிரச்சினைகளை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளும் நேரம் அது. ஒவ்வொரு முறையும் நாங்கள் சளைக்காமல் எங்கள் சுரிதார் கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் கேலியும் கிண்டலும் தான் எங்களுக்குப் பதிலாக கிடைத்தது. ஒரு முறை ஒரு ஆசிரியர் "நாங்க லுங்கி, பனியன் போட்டுகிட்டு காலேஜுக்கு வந்தால் நீங்க ஒத்துப்பீங்களா?" என்று கேட்டார். இந்தக் கேள்வி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுரிதாரும் லுங்கி பனியனும் ஒன்றா??? என்ன ஒரு பிற்போக்கான எண்ணம்?
இரண்டாம் ஆண்டும் முடியும் தருவாயில் எங்களுடைய போரட்டத்திற்கு தீர்வு கிடைத்தது ஒரு நாள். கேரளாவில் இருந்து வந்த ஒரு பெராசிரியர், Electrical and Electronics துறையின் தலைவர் பொறுப்பில் சேர்ந்தார். 'Open House' ல் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்தக் கூத்தை ஒரே ஒரு முறைப் பார்த்தார் அவர். மறு நாள் யாருமே எதிர் பாராத விதமாக அவர் பொறியியல் கல்லூரியில் உள்ள அத்தனை வகுப்புகளுக்கும் "மாணவிகள் நாளையிலிருந்து கல்லூரிக்கு சுரிதார் அனிந்து வரலாம்" என்று circular அனுப்பிவிட்டார். எங்களுக்கெல்லாம் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரை சந்தித்து எங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தபோது "உங்களுடைய கோரிக்கையில் எந்த தவறும் இல்லை. நீங்கள் யாருக்காகவும் பயப்படவேண்டியதில்லை" என்றார். எனக்கு என்ன வருத்தம் என்றால், கிட்டத் தட்ட அந்தக் கல்லூரியில் 50 ஆசிரியர்கள் இருந்தார்கள். அத்தனைப் பேரில் ஒரே ஒருவர் தான் எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தார். எந்தப் பெண் ஆசிரியரும் எங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை. முதல் நாள் சுரிதார் அனிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றபோது ஏதொ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் பார்வைகளால் அலசப்பட்டோம். வகுப்புக்குள் நுழைந்தபோது கரும்பலைகையில் "Fashion Show" என்று எழுதப்பட்டிருந்தது. சில நாட்கள் தொடர்ந்த கேலிகளும் கிண்டல்களும் போகப் போக குறைந்து பிறகு நின்று போய் விட்டன.
இதெல்லாம் நடந்தது 1990 களில்! இன்று அண்ணாமலைக் பல்கலைக் கழக வளாகத்தில் போய்ப் பார்த்தால், புடவையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பான்மையாக சுரிதார் தான் அனிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த சிறு சரித்திரத்தில், எனக்கும் ஒரு சிறு பங்கு இருந்ததில் எனக்கு என்றுமே பெருமை. சிலர் கேட்டார்கள், இப்படி எல்லாரும் பஞ்சாபி உடையான சுரிதாரையே விரும்பி அனிந்து கொண்டால், நம் தமிழ் நாட்டு கலாசாரமான புடவை கட்டும் வழக்கம் அழிந்தே போய்விடுமே என்று. கலாசாரத்தை பாதுகாப்பது முக்கியமா அல்லது உயிரை பாதுகாப்பது முக்கியமா? அந்தக் காலத்தில் பெண்கள் வயல்களில், பிற இடங்களில் வேலை செய்யும் போது புடவை தானே கட்டியிருந்தார்கள் என்றும் சிலர் கேட்டார்கள். உண்மைதான். அந்த மாதிரி வேலை செய்யும் கிரமத்துப் பெண்கள், புடவையை எப்போதும் சற்று தூக்கித் தான் கட்டியிருப்பார்கள். கல்லூரிக்கு அப்படி போனால் நன்றாக இருக்காது :-)

Thursday, December 16, 2004

காற்றினிலே கலந்துவிட்ட கீதம் - எம்.எஸ் சுப்புலட்சுமி


Image Hosted by ImageShack.us

எம்.எஸ் சுப்புலட்சுமி இறந்து போன செய்தியைப் படித்ததும் ரொம்ப வருத்தமாக இருந்தது. என்னோட அப்பா எம்.எஸ்ஸின் பரம விசிறி. சின்ன வயதிலிருந்தே எம்.எஸ்ஸின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் நான். அவர் பாடிய பிற மொழிப் பாடல்களின் அர்த்தம் புரியாவிட்டாலும், அவரது இனிமையான குரலையும், இசையையும் ரசிப்பதுண்டு. அவர் பாடிய தமிழ்ப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது - "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா" என்ற பாடல். இந்தப் பாடலை சன் டிவியில், சக்தி மசாலா விளம்பரத்திற்கு அழகாக பயன்படுத்தி இருக்கிறார்கள்(உடல் ஊனமுற்றோர், சக்தி மசாலா தொழிற்சாலையில் வேலை செய்வதை படமாக்கியிருக்கிறார்கள்). பார்க்க சந்தோஷமாக இருந்தது. இரண்டாவதாகப் பிடித்த பாடல் - "காற்றினிலே வரும் கீதம்". இந்த பாடலில்
"நீல நிறத்து பாலகன் ஒருவன்

குழல் ஊதி நின்றானே...
காலமெல்லாம்...காலமெல்லாம் அவன்
காதலை எண்ணி உருகுமோ
என் நெஞ்சம்..."
என்ற வரிகளைப் பாடும் போது இசையோடு சேர்ந்து எம்.எஸ்ஸின் குரலும் இழையுமே...அது இனிமை!
எம்.எஸின் பாரதியார் பாடல்கள் தொகுப்பு - எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. என் அப்பா அடிக்கடி சொல்வார் மஹாத்மா காந்திக்கு எம்.எஸ் பாடிய "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடல் மிகவும் பிடிக்குமாம். "எம்.எஸ் பேசினாலே போதும், அது பாடுவது போல் தான் இருக்கிறது" என்று காந்திஜி சொல்வதுண்டாம்! 'காந்தி' திரைப்படத்தின் முடிவில், காந்தியின் அஸ்தி கடலில் கரைக்கப்படும் காட்சியில், "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடல் பின்னணியில் மெல்லியதாக கேட்கும். ஆனால் அது எம்.எஸ் பாடியதா என்று எனக்குத் தெரியாது.
எம்.எஸ் நிறைய சமூக சேவைகள், தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்றும், ஒரு கால கட்டத்தில்பணத்திற்காக பாடுவதை நிறுத்தி விட்டு, நன்கொடை திரட்டுவதற்காக மட்டுமே கச்சேரிகள் செய்ததாகவும் படித்திருக்கிறேன்.
அந்த உயர்ந்த இசை மேதைக்கு எனது அஞ்சலிகள்.



Tuesday, December 14, 2004

நான் இன்று என் இனத்திற்கு என்ன செய்தேன்?

தெரிந்தவர் ஒருவரின் மின் அஞ்சல்களின் கீழ்ப் பகுதியில், "நான் இன்று என் இனத்திற்கு என்ன செய்தேன்?" என்ற வாசகம் இருக்கும். இந்தக் கேள்வியை முதல் முதலில் பார்த்தவுடனேயே, அது என் மனதில் ஒட்டிக்கொண்டுவிட்டது. இங்கே "இனம்" என்பதற்கு பல எல்லைகள் இருக்கிறது. அது உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களாக இருக்கலாம், மனித இனமாக இருக்கலாம், அல்லது அவர் அவர்களின் தேசத்தைச் சேர்ந்த மக்களினமாக இருக்கலாம். என்னுடையை எல்லை "தமிழ் இனம்". ஆனால் இந்த எல்லை மிகவும் flexible. தேவையானபோது பெரிதாக்கிக் கொள்வேன், தேவையான போது குறுக்கிக் கொள்வேன்.
இப்போது, தினம் இரவு படுக்கையில் விழுந்து கண்களை மூடியவுடன், "நான் இன்று என் இனத்திற்கு என்ன செய்தேன்?" என்ற கேள்வி சிந்தனையில் எட்டிப் பார்க்கிறது. நானும் அன்று காலையிலிருந்து நான் செய்ததில், ஏதாவது என் இனத்திற்கு செய்தமாதிரி இருக்கிறதா என்று யோசித்துப் பார்ப்பேன். ஏதாவது ஒன்று கிடைக்கும். பிறகு நிம்மதியாகத் தூங்குவேன். இந்த "ஏதாவது" என்பதில் நிறைய சில்லரை சமாசாரங்கள்(தமிழ் நண்பர் ஒருவருக்கு சாப்பாடு போடுவது, வலைப்பதிவில் எழுதுவது), தான் பெரும்பாலும் கிடைக்கும். இதெல்லாம் சேவை என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு வாசிங்டன், டிசியில் மிகச் சிறந்த உதாரணங்கள் இருக்கிறார்கள். பல உயர்ந்த சேவைகளை தங்கள் இனத்திற்காக செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடம் இங்கே திருக்குறள் மாநாடு நடத்தப் போகிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு உதவி செய்ய அயராமல் உழைக்கிறார்கள், தமிழ் மையம் ஒன்றை அமைப்பதற்காக முயற்சி செய்கிறார்கள், இலங்கைத் தமிழரான மருத்துவர் ஒருவர், இலங்கையில் மருத்துவமனைகள் கட்டுகிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் மத்தியில் வாழ்வதைப் பெருமையாக நான் நினைக்கிறேன்.
நெற்று இரவு படுத்தவுடன் அந்தக் கேள்விக்கு மீண்டும் விடை தேடத் தொடங்கியபோது, எதுவும் கிடைக்கவில்லை. நெற்றுக் காலை எழுந்து வேலைக்கு சென்றேன், மாலை வீட்டுக்கு வந்து சமைத்து, நானும் கணவரும் சாப்பிட்ட பின் களைப்பாக இருந்ததால் படுக்கச் சென்று விட்டேன். இதில் தமிழ் இனத்திற்காக என்ன செய்தேன்? வேகு நேரமாக தூக்கம் வராமல் தவித்தேன். பிறகு சடாரென்று ஒரு விடை மூளையில் உதித்தது. நான் வழக்கமாக பார்க்கும் 'மெட்டி ஒலி' தொடரை நேற்றைக்கு களைப்பு மிகுதியால் பார்க்கவில்லை. அந்தப் பாழாய்ப் போன தொடரை பார்க்காமல், நான் எனக்கு ஓய்வு கொடுத்தது எனக்கு நான் செய்துக் கொண்ட சேவை தானே? விடை கிடைத்து விட்ட நிம்மதியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிப் போனேன். மனதின் ஒரு மூலையில், இந்த சேவையை தினமும் எனக்கு நான் செய்துக் கொள்ள வெண்டும் என்ற தீர்மானமும் உதித்தது.

Monday, December 13, 2004

உணர்வுகளின் Power Point Presentation

ஒரு வாரமாக வலைப்பதிவில் எழுத விசயம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை(டிசம்பர் 11) நியூ ஜெர்சியில் நடந்த 'உலகத் தமிழ் அமைப்பு' (WTO - World Tamil Organization) கூட்டத்திற்கு கணவருடனும் நண்பர்களுடனும் சென்று வந்தேன். உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு இது. இந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டில் பெண்களின் இன்றைய நிலையைப் பற்றி என் தோழி கீதா power point presentation செய்தார். அந்த power point presentation தயார் செய்வதற்கு அவருக்கு நான் உதவினேன். ஒரு மாதமாக இணையதளத்தில் இருந்து புள்ளி விவரங்கள், படங்கள் திரட்டுவது, புத்தகங்களைப் படித்து அதில் இருந்து செய்திகளை சேகரிப்பது - இப்படிமிகவும் சுவாரஸ்யமாக நேரம் கழிந்தது. WTO கூட்டத்திலும், எங்கள் presentation க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்தக் கூட்டத்தில் நான் கவனிக்க நேரிட்ட என் தோழி கீதா சம்பந்தப்பட்ட சில காட்சிப் பதிவுகளை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
* கூட்டம் ஆரம்பித்த போது ஒரு பெண்மணி சொதப்பலாக M.C (நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்) செய்தார். 'இப்பொழுது மெளன அஞ்சலி' என்று சொல்லி நிறுத்திவிட்டார். அனைவரும் யாருக்கு மெளன அஞ்சலி செய்கிறோம் என்று தெரியாமலேயே ஒரு நிமிடம் மெளனமாக இருந்தோம். இப்படி பல பிழைகள் செய்தார். இடைவேளையின் போது அவரை அருகில் பார்க்க நேரிட்ட கீதா, 'நீங்க நல்லா பேசறீங்கம்மா' என்றார். எனக்கு மனதிற்குள் ஆச்சர்யக் கேள்விக் குறி எழுந்தது. தான் சரியாக M.C பண்ணவில்லை என்பதை உணர்ந்து சற்று கவலையாகக் காணப்பட்ட அந்தப் பெண்மணியின் முகம், கீதாவின் வார்த்தைகளைக் கேட்டு பிரகாசமடைந்தது.
* ஒரு இளம் பெண் - 14 அல்லது 15 வயதிருக்கும். பரதநாட்டியம் ஆடினார். நடுவில் அவருக்கு அடுத்த அடி மறந்து போய் பல முறை தடுமாறி பின் சுதாரித்துக் கொண்டு ஒரு வகையாக ஆடி முடித்தார். சரியான பயிற்சி இல்லாமல் ஆட வர வேண்டிய அவசியம் என்ன? என்று நான் மனதிற்குள் அலுத்துக் கொண்டிருந்த போது, கீதா எழுந்து நின்று அந்தப் பெண்ணுக்குக் கைத் தட்டினார்! மீண்டும் ஆச்சர்யத்துடன் நான் கீதாவைப் பார்த்த போது, "பாவம். பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து ஆடி முடித்தாளே, அதைப் பாராட்ட வேண்டும்" என்றார்.
* இரவு உணவு இடைவேளையின் போது, காலையிலிருந்து கூட்டம் நடந்த அரங்கின் வெளியே குழந்தையை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் "காலையில் இருந்து இப்படி குழந்தையை வைத்துக் கொண்டு சிரமப் படறீங்களே, உங்க வீட்டுக்காரர் கொஞ்ச நேரம் குழந்தையை பார்த்துக்கலாம் இல்லையா?" என்று கவலையுடன் கேட்டார் கீதா. "இல்லைங்க, அவர் சொல்லி தான் கூட்டிக்கிட்டு வந்தார். அவர் நிகழ்ச்சிகளை நிம்மதியா பார்க்க வேண்டுமே" என்று பதில் சொன்னார் அந்தப் பெண். "இருந்தாலும் கொஞ்ச நேரமாவது உங்களுக்கும் ஓய்வு வேனுமே, உங்களைப் பார்த்தால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது" என்று கீதா ஆதங்கப்பட்டார்.
* அவ்வப்போது கீதா பேசிய சகப் பெண்களிடமெல்லாம் "நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க", "உங்க புடவை நல்லா இருக்கு", என்று பாராட்டு வார்த்தைகளை அள்ளி வீசி, அவர்களின் முகத்தில் பல்ப் போட்ட மாதிரி சிரிப்பையும் பிரகாசத்தையும் வரவழைத்தார். அவருக்கு அறிமுகம் ஆனப் பலரையும் மனத்தாரப் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தார்.


எங்களுடைய power point presentation முடிவில், பெண்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம், சட்டம் சம்பந்தப்பட்ட சில தீர்வுகளை சொல்லியிருந்தோம். அதில் சொல்லாத தீர்வு ஒன்றை இங்கே சொல்கிறேன். பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக பல சூழ்நிலைகளில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில், பெண்களுக்குள்ளேயே பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல், பாராட்டிக்கொள்ளுதல், ஆறுதல் சொல்லுதல், ஊக்கப்படுத்துதல் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள் இருத்தல் மிகவும் அவசியம். பெண்கள் முன்னேற்றம், உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிப் பலர் பேசலாம், ஆனால் பேசுவதைப் போல் நடந்து கொள்பவர்கள் ஒரு சிலரே. நான் கீதாவுக்காக செய்து கொடுத்த power point presentation புள்ளி விவரங்களும், வண்ண வண்ணப் படங்களும் கொண்டு அனைவரது மனதையும் கவர்ந்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அன்று அவர் செய்த நல்ல presentation அவருடைய நடவடிக்கைகள் தான்.