Thursday, October 27, 2005

முடிவில்லாத ஒரு விவாதம்

கடந்த வார இறுதியில் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்த இரு நண்பர்களுக்கிடையே நடந்த வாக்குவாதம்.

நண்பர் 1: "அமெரிக்கா சரியான stress country. சீக்கிரமா இந்தியா திரும்பிப் போய்டனும்"

நண்பர் 2: "இந்தியாவில் stress இல்லையா?"

நண்பர் 1: "இல்லைன்னு சொல்லலை. Stress இருந்தால் அதை பகிர்ந்துகொள்ள நண்பர்கள், உறவிணர்கள் இருக்கிறார்கள் அங்கே"

நண்பர் 2: அமெரிக்காவில் உங்களுக்கு நண்பர்கள், உறவிணர்கள் இல்லைன்னா அது உங்கள் சொந்தப் பிரச்சினை. அதற்கு அமெரிக்காவை stress country என்று ஏன் சொல்கிறீர்கள்? உங்களுக்கு அமெரிக்காவில் வாழ்வது stress ஆக உள்ளது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்.

நண்பர் 1: நீங்க என்ன வேனும்னா நினைத்துக்கொள்ளுங்கள். I hate this country. பணியிலும் மழையிலும் ஓடி ஓடி உழைக்க வேண்டியிருக்கு. காலங்கார்த்தால போக்குவரத்து நெரிசல்ல கார் ஓட்டிக்கிட்டு போகவேண்டியிருக்கு. குழந்தைகளை காலையில் பள்ளிக்கூடத்தில் விட்டு பிறகு சாயங்காலம் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கலைப்பா வந்தா, மனைவிக்கு சமையல்ல உதவ வேண்டியிருக்கு. பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. சே...சே என்ன வாழ்க்கை இது?

நண்பர் 2: இந்தியாவில் மழையில்லையா? சுட்டெரிக்கும் வெயில் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பஸ்ஸில் அடித்துப்பிடித்துக்கொண்டு வேலைக்குப் போவதில்லையா?

நண்பர் 1: நான் எதற்கு பஸ்ஸில் போகவேண்டும்? நல்ல கார் வாங்கிக்கொள்வேன்

நண்பர் 2: அப்போ அங்கேயும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டவேண்டியிருக்குமே?

நண்பர் 1: நான் எதற்கு கார் ஓட்டவேண்டும்? ட்ரைவர் அமர்த்திக்கொள்வேன்.

நண்பர் 2: சரி. இந்தியாவில் இருந்தால் மட்டும் வீட்டில் மனைவிக்கு உதவமாட்டீர்களா?

நண்பர் 1: எனக்கென்ன தலையெழுத்தா? நல்ல சமையல்காரரை நியமித்துக்கொள்வேன்.

நண்பார் 2: குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவது, அழைத்துக்கொள்வது?

நண்பர் 1: அது ட்ரைவரின் வேலை.

நண்பர் 2: அப்போ உங்களுக்கு எந்த stress உம் இருக்காது என்கிறீர்கள்.
நண்பர் 1: கட்டாயமா இருக்காது.

நண்பர் 2: சரி. போக்குவரத்து நெரிசலில் தினம் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் அலுவலகத்திலும் பள்ளியிலும் விட்டு, பின் சாயங்காலம் அழைத்துக்கொள்ளும் அந்த ட்ரைவருக்கும், மாங்கு மாங்கென்று மூன்று வேலையும் சமைத்து, பின் வீட்டு வேலைகளைச் செய்யும் வேலையாளுக்கு stress இருக்காதா?

நண்பர் 1: அது...வந்து...இருக்கலாம்...

நண்பர் 2: அப்ப, நீங்கள் இந்தியா போவது உங்கள் stress ஐ மற்றவர்கள் மேல் இறக்கிவைப்பதற்குத் தானா?

நண்பர் 1: என்ன நீங்க, இப்படி எடக்கு முடக்கா யோசிக்கறீங்க! என்னால ரெண்டு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுது. அதனால் எனக்கும் stress குறையுதுன்னா அதுல என்ன தவறு? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன். ஒரு அன்னிய நாட்டில் எத்தனை நாள் சார் இருப்பீங்க? நம்மைச் சுற்றி தமிழர்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

நண்பர் 2: எங்க இருந்தா என்ன? நம்மைச் சுற்றி நல்லவங்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

நண்பர் 1: என்ன இருந்தாலும் நம்ம சொந்த ஊர் மாதிரி ஆகுமா?

நண்பர் 2: நான் ஒத்துக்கொள்கிறேன். நம்ம ஊரில் இருப்பது தனி சுகம் தான். ஆனால் அமெரிக்காவில் பல வருடங்கள் இருந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் போவது அவ்வளவு சுலபம் கிடையாது. நீங்கள் முதல் முதலாக அமெரிக்கா வந்தபோது எப்படிப்பட்ட கலாசார அதிர்ச்சி(culture shock) உங்களுக்கு இருந்ததோ, அதே போல் தான் இங்கிருந்து உங்கள் சொந்த ஊருக்குப் போகும் போதும் இருக்கும். உங்கள் நண்பர்களும், உறவிணர்களும் 10 வருடங்களுக்கு முன் நீங்கள் விட்டுவிட்டு வந்த போது இருந்தமாதிரியே நீங்கள் போகும்போதும் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அவர்கள் மாறியிருப்பார்கள். நீங்களும் மாறியிருப்பீர்கள். அமெரிக்காவில் உங்களுடைய 10 வருட அனுபவம் உங்கள் சிந்தனைகளை மாற்றியிருக்கும். வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றியிருக்கும். இந்த மன நிலையில் நீங்கள் இந்தியா போனால் அங்கே இப்போதிருக்கும் கலாசாரத்தை மீண்டும் புதிதாகக்கற்றுக் கொள்ளவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது. என்னுடைய பாயிண்ட் என்னவென்றால், நீங்கள் நினைப்பது போல் அங்கே stress இல்லாமல் வாழ்ந்துவிட முடியது. Stress வேறு வகையாக அங்கே இருக்கிறது.

நண்பர் 1: சரி சார். நீங்க எதுக்காக அமெரிக்காவிலே செட்டில் ஆக முடிவு செய்தீங்க?

நண்பர் 2: என்னுடைய பெற்றோர்கள் என்னுடைய படிப்புக்காக கிராமத்தை விட்டு நகரத்திற்கு குடிபெயர்ந்தார்கள். எனக்காக அவர்களுக்குப் பிடித்த கலாசார அடையாளங்களை விட்டுக்கொடுத்தார்கள். நான் என்னுடைய மற்றும் என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேன். தூரம் தான் அதிகமே தவிர, என் பெற்றோர்களுக்கு அன்றிருந்த நோக்கம் தான் இன்று எனக்கு இருக்கிறது.

நண்பர் 1: என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் பள்ளியும் கல்லூரியும் நம்ம ஊரில் கவர்மெண்ட் செலவில் படித்தேன். இப்போ இங்க வந்து அமெரிக்க கவர்மெண்டுக்குத் தானே என் பணத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்? எல்லாரும் எதிர்காலத்தை முன்னிட்டு அமெரிக்கா வந்துவிட்டால் இந்தியாவுக்கு எப்படி நல்லது நடக்கும்?

நண்பர் 2: ஏன் நடக்காது? இப்ப நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்தியாவில் இருக்கும் பல உறவிணர்களுக்கு பண உதவி செய்ய முடிகிறது. சில சமூகத் தன்னார்வ நிறுவனங்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். மனம் நிறைவாக இருக்கிறது. நம்ம சுதந்திரப் போராட்ட வீரர்களில் 90% அன்னிய நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான். அன்னிய நாட்டில் சில வருடங்கள் இருந்துப் பார்த்தால் தான் சுதந்திரம், பேச்சுரிமை, சமூக விழிப்புணர்வு, தேசப்பற்று போன்ற உணர்வுகள் எழும். அப்படி நமக்கு உணர்வுகள் எழுவது இந்தியாவுக்கு நல்லது தானே?

நண்பர் 1: இப்ப என்ன தான் நீங்க சொல்ல வருகிறீர்கள்? யாரும் இந்தியா திரும்பப் போகக்கூடாதுன்னா?

நண்பர் 2: கட்டாயம் அப்படிச் சொல்லலை. தாராளமாக இந்தியா போங்கள்.
ஆனால் அமெரிக்காவில் இருப்பது stress என்று மட்டும் சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் இங்கே உங்களுக்கு வாழத் தெரியவில்லை என்று அர்த்தம்.

நண்பர் 1: அட! இங்கே எப்படி வாழ வேண்டும் என்றுதான் கொஞ்சம் சொல்லுங்களேன். தெரிந்துகொள்கிறேன்.

அதற்குள் நண்பர் 2 வுக்கு செல் போனில் அவசர அழைப்பு வந்ததனால், வாக்குவாதத்தை அடுத்த சந்திப்பின் போது தொடரலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அமெரிக்காவில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று தனக்குத்தான் தெரியவில்லையோ என்று யோசித்துக்கொண்டே நண்பர் 1 ன்னும் விடைபெற்றார். சாப்பாட்டையும் போட்டு, விவாதிக்கவும் இடம் கொடுத்தால் இப்படி முடிவைச் சொல்லாமல் பாதியிலேயே போய்விட்டார்களே? மறுபடியும் இந்த இருவரையும் சாப்பிடக்கூப்பிட்டால் தான் முடிவு தெரியும் போலிருக்கிறது!

Monday, October 24, 2005

பல குரல் பெண்கள்

கடந்த சனிக்கிழமை சன் தொலைக்காட்சியில் 'இளமை புதுமை' நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு ரொம்ப போர் அடித்ததால் பார்த்தேன். சொர்ணமால்யாவிற்குப் பதிலாக அர்ச்சனா! எப்போது மாறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அலட்டலும் அறுவையும் என்னவோ அதேதான். விசயத்திற்கு வருகிறேன். அந்த இளமை புதுமையில் நான்கு இளைஞர்கள் நம்பியார், பாக்கியராஜ், ரஜினி போல் மிமிக்ரி செய்தார்கள். இதைப் போல் பல மிமிக்ரி நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குத் தோன்றாத இந்தக் கேள்வி சனிக்கிழமை தொன்றியது.

நடிகைகளை ஏன் யாருமே மிமிக்ரி செய்வதில்லை?

இந்த காலத்து நடிகைகளை கணக்கிலேயே எடுக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழும் தெரியாது, சொந்தக் குரலும் கிடையாது. எல்லாருக்கும் டப்பிங் குரல் தான். பல நடிகைகளுக்கு ஒரே டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுக்கிறார். சில நடிகைகள் சொந்தக்குரலில், தமிழில் பேசினாலும், அவர்களுடைய குரலிலோ, வசன உச்சரிப்பிலோ எந்தவிதமான தனித்தன்மையும் இல்லை! எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, நம்பியார் போன்ற நடிகர்களே இன்றும் அதிகம் மிமிக்ரி செய்யப்படுகிறார்கள். அதற்கு வலுவான காரணங்கள் தெரிந்ததே. அவர்களுடைய நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும்(body language) தனித்தன்மை இருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு மாதிரி கோபப்பட்டால், சிவாஜி வேறு விதமாகக் கோபப்பட்டார். கமல் சிரிப்பதற்கும் ரஜினி சிரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் நடிகைகள் அப்படி இல்லை. ஒரே மாதிரி கோபம், ஒரே மாதிரி வெட்கம், ஒரே மாதிரி அழுகை, ஒரே மாதிரி இடையை அசைத்துக்கொண்டு ஒரு நடை! பெரும்பாலான நடிகைகளுக்கு வசன உச்சரிப்பிலோ, நடிப்பிலோ எந்தவிதமான தனித்தன்மையும் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விசயம். தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்வதில் ஏன் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை? வெறும் நடிகைகளாகவே இருக்கிறார்களே, எப்போது கலைஞர்களாக ஆவார்கள்?

அந்த காலத்து நடிகைகள் கொஞ்சம் தேவலாம். அழகாகத் தமிழ் பேசினார்கள். கே.ஆர் விஜயா, எம்.என் ராஜம் - இவர்களின் குரல்கள் கணீரென்று தனியாகத் தெரியும். கண்ணாம்பாவின் "மகனே மனோகரா! பொங்கி எழு!", கே.ஆர்.விஜயா அம்மனாக வந்து பேசும் பக்தி வசனங்கள், மனோரமாவின் ஆச்சி பாணி வசனங்கள் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை. ஸில்க் ஸ்மிதாவின் குரலில் கூட ஒரு தனி கவர்ச்சி தெரியும். இதையெல்லாம் யாராவது மிமிக்ரி செய்தால் நன்றாக இருக்குமே? பின்னனிப் பாடகி மாலதி லஷ்மண் கே.பி சுந்தராம்பாள் குரலில் அருமையாகப் பாடி ஒரு முறை கேட்டிருக்கிறேன். பெண்கள் நுழையாத சில துறைகளில் இந்த பல குரல் கலையும் ஒன்று என்று தெரிகிறது.

Friday, October 21, 2005

பரதநாட்டியம் - Redefined

புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பது, துணிந்து ஒரு முயற்சியில் இறங்குவது, செய்ய முடியாததைச் செய்வது, அதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்வது, தடைகளை உடைப்பது, இவை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி காண்பது - இப்படியெல்லாம் செய்பவர்கள் படைப்புத்திறன்(creativity) உள்ளவர்கள் என்று படித்தேன். பெரும்பாலும் கலைஞர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இருக்கவேண்டும்.

சமீபத்தில் நடிகை/நாட்டியக் கலைஞர் ஷோபனாவின் "Shyama, The Mystical Indian Woman" என்கிற நடன நிகழ்ச்சியில் ஷோபனாவின் படைப்புத் திறனைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. பொதுவாக எனக்கு பரதநாட்டியம் மிகவும் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பரதநாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துப்போய்விட்டது. அலுத்துப்போய்விட்ட என் ரசனையை புதுப்பித்தது இந்த நிகழ்ச்சி.

Image Hosted by ImageShack.us

சிக்கென்று மேடைக்கு வந்த ஷோபனா ஒரு நிமிடம் தில்லானா மோகனாம்பாள் பத்மினியைக் கண்ணில் நிறுத்தினார். வழக்கமாக பரதநாட்டிய மேடைகளில் இருக்கும் நடராஜர் சிலையை அங்கே காணவில்லை. வினாயகரை வணங்கி ஆடும் அந்த முதல் நடனமும் இல்லை. இங்கே தான் ஷோபனா தடைகளை உடைக்கிறார்! எடுத்த எடுப்பில் ஒரு காளி நடனம். காளி நடனத்தின் போது இசையில் special sound effects புகுத்தி ஒரு பயம் கலந்த சூழ்நிலையை உருவாக்கியிருந்தார். வழக்கமாக மிருதங்கமும் வயலினும் மட்டுமே பரதநாட்டிய இசைக்கு உபயோகப்படுத்துவார்கள். அடுத்து வந்த 'அஞ்சலி' என்கிற நடனத்திற்கு கம்பீரமான வீணை இசையை பிரத்யேகமாக உபயோகித்திருந்தது மிக அருமை! ஷோபனாவுடன் அவருடைய மூன்று மாணவிகளும் சேர்ந்து ஆடினார்கள்.

Image Hosted by www.MyImagesHost.net


அடுத்து ஒரு நாட்டிய நாடகம். நாடகத்தின் கரு இதுதான் - ஷ்யாமா என்கிற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளையின் தாய் அதிகப்படியாக வரதட்சினை கேட்கிறார். பெண்ணின் தாய், தன் அழகில்லாத பெண்ணுக்கு திருமணம் ஆனாலே போதும் என்று வரதட்சினை கொடுக்க ஒத்துக்கொள்கிறார். வரதட்சினை பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. திருமண நாளும் வருகிறது. அன்றும் சில பொருட்களை கேட்டு உடனே அவற்றைக் கொண்டுவந்தால் தான் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள் மாப்பிள்ளையும் அவன் தாயும். பொருட்களைக் கொண்டுவருகிறேன் என்று வெளியே செல்லும் ஷ்யாமா, போலீஸ¤டன் திரும்பி வருகிறாள். மாப்பிள்ளையும் அவன் தாயும் கைது செய்யப்படுகிறார்கள். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு புது முயற்சி! பணத்தாசை பிடித்த மாமியாராக நாட்டிய நாடகத்தில் அசத்தினார் ஷோபனா.

Image Hosted by www.MyImagesHost.net

அடுத்து வந்த நடனங்கள் மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த Johann Sebastian Bach என்கிற புகழ் பெற்ற இசைக்கலைஞரின் இசைக்கு அமைக்கப்பட்ட ஒரு நடனத்தில் கொஞ்சம் bale கொஞ்சம் tap dance என்று பரதநாட்டியத்துடன் அளவாகக் கலந்து அளித்தார் ஷோபனா. அடுத்து ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடலுக்கு ஆடிய நடனம், இந்தியாவின் பல முகங்களை அழகாகப் பிரதிபலிபலித்தது. குறிப்பாக க்ரிக்கெட் விளையாட்டு, அழகிப்போட்டியில் 'cat walk', எல்லையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் போரில் ஈடுபடுவது போன்றவற்றை மிகத் துல்லியமாகவும், லாவகமாகவும் பரதநாட்டியத்தில் ஷோபனாவும் அவருடைய மாணவிகளும் அளித்தது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இவை எதிலுமே பரதநாட்டியத்தின் அழகோ, கெளரவமோ சற்றும் குறைந்துவிடவில்லை. ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரால் மட்டுமே இப்படி ஒரு கலை வடிவத்தின் அழகு குறையாமல், அதன் கலாசார எல்லைகளைத் தாண்டாமல் ஒரு புதிய கோணத்தை நிறுவ முடியும்.

எனக்கு பல கேள்விகளை ஷோபனாவிடன் கேட்கவேண்டும் என்று ஆவல் இருந்தாலும், அதற்கு சாத்தியம் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய பெரும்பான்மையான கேள்விகளுக்கு நான் இனையத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த ஷோபனாவின் சில நேர்க்காணல்களின் மூலம் விடைகள் கிடைத்தன. மற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் - இசை! இங்கே இசைக்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஷோபனா சொன்னது - "என்னால் சாதாரண, அல்லது சராசரிக்குக் குறைவாக உள்ள இசைக்கு நாட்டியமாட முடியாது. அதனால் என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பிரபலமான இசைக்கலைஞர்களையே நான் நியமிக்கிறேன். அவர்களை முழுமையாக நிகழ்ச்சியில் ஈடுபடுத்துகிறேன். இசையின் உணர்வுகளை என் நாட்டிய அசைவுகளில் பிரதிபலிக்க முயற்சிக்கிறேன்".

மேலும் அவர் "எப்பொழுதுமே கடவுளைப் பற்றிய நாட்டியங்களை ஆடாமல், சாதாரண மனிதர்களைப் பற்றியும் ஆடி வருகிறேன். பலர் என்னை பரதநாட்டியத்தின் சம்பிரதாயத்தைக் குலைக்கிறேன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் அவர்களைக் கேட்கிறேன், யாருக்கு பரதநாட்டியத்தின் வேர்களைப் பற்றி தெரியும்? பல நூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களையும், சிற்பங்களையும் தானே நாம் பார்த்திருக்கிறோம்? அப்படித்தான் உடைகள் இருந்தன, அப்படித்தான் நடன அசைவுகள் இருந்தன என்று எப்படித் தெரியும்? அது அந்த ஓவியருடைய அல்லது சிற்பியினுடைய கற்பனையாக இருந்திருக்கலாம் இல்லையா? இப்படித்தான் ஒரு கலையை வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சரியல்ல. சில எல்லைகள் இருக்கவேண்டும். அந்த எல்லைக்குள் ஏற்படும் தேடலும், அந்தத் தேடலின் வெளிப்பாடும் அந்தக் கலை வடிவத்தை மேலும் அழகுபடுத்தும்." என்று கூறியிருக்கிறார்.

ஷோபனா, உங்கள் தேடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்!

Monday, October 17, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - IV

மூன்றாம் நாள் காலை St.Agnes church சென்ற எனக்கு ஒரே ஆச்சரியம். அது ஒரு கிருஸ்த்துவ தேவாலயம் போலவே இல்லை. படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
Image Hosted by www.MyImagesHost.net

Image Hosted by www.MyImagesHost.net Image Hosted by www.MyImagesHost.net


Astrodome போல அவ்வளவு பெரிய இடம் இல்லையென்றாலும், கிட்டத்தட்ட 200 அடி டையமீட்டர் உள்ள 4000 பேர் உட்காரக் கூடிய ஒரு வட்டமான கூடம் அது. Astrodome போல் இங்கே பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்கவில்லை, ஆனால் இங்கே அவர்களுக்கு ரெட் க்ராஸ் பண உதவி அளித்துக்கொண்டிருந்தது. தினம் 8000 பேர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரெட் க்ராஸ் தரும் காசோலை அல்லது டெபிட் கார்டை(debit card) வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து உதவித் தொகை அமைந்தது. அதிகபட்ச உதவித்தொகை $1565.

தேவாலயக் கூடத்தின் ஒரு பகுதியில் கணிணிகள்...மீண்டும் பயிற்சி வேலை. மற்றொரு பகுதியில் தேவாலயத்தின் வெளியில் இருந்துத் தொடங்கும் மிக நீண்ட வரிசையில் நிற்கும் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு குடும்பமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு, இன்ட்டர்வியூ செய்யப்பட்டு பிறகு பணம் அளிக்கப்பட்டனர். அதிகாலை ஐந்து மனியிலிருந்து வரிசையில் நிற்கும் அந்த மக்களைப் பார்த்தால் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. 11 மணியளவில் வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும்போது நிற்க முடியாமல் மயங்கி பலர் விழுந்துவிடுவார்கள். அவர்களுக்கு உடனே மருத்துவ உதவி செய்யப்படும். கூடத்தினுள் எப்பொழுது அழுக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இன்டர்வியூ செய்யப்படும் போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டைப் பற்றியும், தொலைந்து போய்விட்ட குடும்பத்தாரைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்படும் போது துக்கம் தாளாமல் பலர் அழுதுவிடுவார்கள்.

தினம் காலை பாதிரியார் ஒலிபெருக்கியில் பேசுவார். அவருடைய பேச்சு அங்கே வேலை செய்பவர்கள் எல்லாருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும். ஒரு நாள் ஒரு பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், தனக்கு பண உதவி அளிக்கமுடியாது என்று சொன்ன ஒரு ரெட் க்ராஸ் பெண்ணை முகத்தில் பலமாக ஓங்கிக் குத்தினான். அவளோ, ரத்தம் வழியும் உதடுகளைத் துடைத்துவிட்டு, "மன்னிக்கனும், உங்களுடைய டாக்குமென்ட்ஸ் சந்தேகப்படும்படியாக இருப்பதால், பணம் கொடுக்க முடியாது" என்று பொறுமையாகக் கூற, எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் அந்தப் பெண் சொன்னார் "காலையில் பாதிரியார் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால், நீங்கள் அமைதிகாத்து அவர்களை அரவணைக்கவேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் கோபம் இல்லை. அவர்களுடைய சூழ்நிலையின் மேல் தான் கோபம் என்று சொன்னார். அதை நினைத்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன்" என்று!

வேலைசெய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தனி சாப்பாட்டு வரிசை. சுட்டெரிக்கும் வெயிலில் சற்று நேரம் நாங்கள் வெளியே காத்திருந்தபின் தான் உணவுக்கூடத்திற்குச் செல்லமுடியும். பிறகு hotdog அல்லது ஏதாவது burger கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்து சாப்பிடுவதற்காகப் போடப்பட்டிருக்கும் ஒரு கொட்டகையில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். பெரும்பாலும் அங்கே உட்கார இடம் கிடைக்காது. அதனால் வெயிலில் மண் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவோம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, மரத்தடியில் மண் தரையில் தோழிகளுடன் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

இங்கேயும் இரண்டு நாட்களில் கணிணி பயிற்சி வேலை முடிந்துவிட, எங்களை ஒரு பிரத்யேக குழுவில் உதவி செய்யச் சொன்னார்கள். பணம் வாங்குவதில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் அங்கே நடந்துகொண்டிருப்பது அப்போது தான் எனக்குத் தெரிய வந்தது. ஒருவரே நான்கைந்து முறை வந்து பணம் வாங்குவது, டெபிட் கார்ட் முழுவதும் செலவு செய்துவிட்டு மீண்டும் வந்து அந்தக் கார்ட்டை தொலைத்துவிட்டேன் என்று சொல்வது - இது போல் நாளுக்கு நாள் நடந்துகொண்டிருந்தது. அப்படி சந்தேகப்படும்படியான நபர்களைப் பற்றிய தகவல்களை மென்பொருளில் தேடிக்கண்டுபிடித்துச், சொல்வது என் வேலை! டெபிட் கார்ட் எண்னை மென்பொருளில் உள்ளிட்டு என்னென்ன அந்த கார்ட்டில் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அவசியத் தேவைக்காக அளிக்கப்படும் இந்த கார்டில் அலங்காரப் பொருட்கள், விலை உயர்ந்த காலணிகள், இசைத் தட்டுகள், விலை உயர்ந்த உணவகங்களில் உணவு போன்றவை வாங்கப்பட்டிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இப்படி கணிணியில் எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்று கூட அந்த மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் இரண்டு நபர்கள் என்னருகில் வந்து அமர்ந்து, சில டெபிட் கார்டுகளைக் கொடுத்து, இவற்றின் செலவு கணக்கை கணிணியில் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவர்களிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அங்கிருப்பவர்கள் எல்லாம் ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற சாதாரண உடைகளையே அனிந்திருக்க, இந்த இருவர் மட்டும் சலவை செய்யப்பட்ட முழுக்கை சட்டையும் பாண்ட்டும் அனிந்திருந்தார்கள். ஆஜானுபாகுவாக இருந்தார்கள். பின்னர் தெரியவந்தது அவர்கள் FBI அதிகாரிகள் என்று. உதவித் தொகையை ஏமாற்றிப் பெருபவர்களை அங்கேயே அவ்வப்போது கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அடுத்து வந்த நாட்களில் FBI அதிகாரிகளுடன் அமர்ந்து வேலை செய்ததில் பெருமையாக இருந்தாலும், சற்று உதறலாகவும் இருந்தது. FBI மட்டும் அன்றி, DMV அதிகாரிகளும் அங்கே இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் லைசன்ஸ்களை உடனடியாக அவர்களுடைய மென்பொருளில் சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள். கோடிக்கணக்கான மக்களின் நன்கொடை பணம் தவறான நபருக்குப் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் ரெட் க்ராஸ் குறியாக இருந்தது.

நான் ஹ¥ஸ்டனில் இருந்து செப்டம்பர் 23 ஆம் தேதி கிளம்புவதாக இருந்தேன். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ரீட்டா என்கிற மற்றொரு சூறாவளி உருவாகி, டெக்ஸாஸில் உள்ள கால்வெஸ்டன் எங்கிற கடலோரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹ¥ஸ்டன் கால்வெஸ்டனில் இருந்து 30 மைல்கள் தான். எனவே ஹ¥ஸ்டனில் இருப்பவர்களையெல்லாம் சற்று உள்ளடங்கிய சான் அந்தானியோ, ஆஸ்டின் போன்ற இடங்களுக்குச் செல்லச் சொல்லி உத்தரவு வந்தது. வெளியூரில் இருந்து வந்திருக்கும் ரெட் க்ராஸ் தொண்டர்களையெல்லாம் தத்தம் ஊர்களுக்கு உடனடியாகக் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.

மறு நாள் விமானத்தில் வாசிங்டனுக்குப் பறந்துகொண்டிருந்த எனக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டதில் சற்று ஏமாற்றமாகவும், ஏதோ ரீட்டாவுக்காகப் பயந்து புறமுதுகு காட்டி ஓடுவதைப் போலவும் ஒரு உணர்வு இருந்தது. ஆனால் இந்தப் பயணம் எனக்கு ஒரு விலைமதிக்க முடியாத அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பயணத்திற்குப் பிறகு, என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் சிரமங்களெல்லாம் மிக அற்பமாக எனக்குத் தெரிகின்றன. இந்தப் பயணத்திற்குப் பிறகு என்னுடைய சில சிந்தனைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். ஒரு நண்பர் கூட கிண்டல் செய்தார் "நீங்கள் மாறுவதற்கு ஒரு சூறாவளி தேவைப்பட்டிருக்கிறது" என்று. உண்மை தான்! காத்ரீனா என்கிற சூறாவளி கொடுத்த அனுபவங்களை என்னால் என்றுமே மறக்கமுடியாது.

ரெட் க்ராஸைப் பற்றி மிக அதிகமாக மீடியா சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால், மிக அதிகமான அளவில் நன்கொடைகளைத் திரட்டும் ரெட் க்ராஸ், செய்வதென்னவோ குறைவு தான்! அதாவது, $1565 என்பது ஒரு குடும்பத்திற்கு எத்தனை நாட்கள் வரும் என்று மீடியா கவலைப்பட்டது. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொகை குறைவாக இருக்கலாம், ஆனால் அந்தத் தொகை எத்தனை குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டது என்பதை கணக்கிலெடுத்தால் அது மிகப் பெரிய தொகை. நான் St.Agnes இல் இருந்த அந்த 10 நாட்களில் மட்டும் 45 மில்லியன் டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரெட் க்ராஸின் குறிக்கோள் உடனடி நிவாரணம் (emergency relief) அளிப்பது மட்டுமே. நீண்ட கால பண உதவியோ, கட்டிடம் கட்டுவதோ, இடிபாடுகளிடையே சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதோ ரெட் க்ராஸின் வேலை இல்லை. பேரிடர் நடக்கும் இடங்களில் உடனடி தேவகளான உணவு, உடை, பாதுகாப்பான இடம், மருத்துவம், உடனடித் தேவைக்கான பணம் இவற்றை அளிப்பதுதான் ரெட் க்ராஸின் வேலை. இதை நிறைய பேர் புரிந்துகொள்வதில்லை. "Redcross can do a little more than a doughnut" என்று மற்றோரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அதிபர் கேலி செய்தார் என்று பத்திரிக்கையில் படித்தேன். பசித்த வயிற்றுக்கு அந்த ஒரு doughnut எவ்வளவு முக்கியம்?

முற்றும்!

Monday, October 10, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - III

மைதானத்தை நோக்கிச் செல்லச் செல்ல காட்சிகள் க்ளோஸ் அப்பில் தெரிந்தன. மைதானத்தின் பார்வையாளர் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆரஞ்சு நிற நாற்காலிகள். மைதானத்தைச் சுற்றி வேலிபோல் அமைத்திருந்தனர். வேலிக்கு உள்ளே வரிசையாக படுக்கைகள். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் படுக்கையில் படுத்திருந்தனர். சிலர் செய்வதறியாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். மருத்துவர்கள் ஒரு சிலரை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் சிலர் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அனைவர் கண்களிலும் ஒரு வெறுமை தெரிந்தது - தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது, இனி சான் போனால் என்ன முழம் போனால் என்ன என்பது போல்! அங்கிருந்த பெண்கள் மிகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தார்கள். காரணம் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கவேண்டியிருந்தது. சில குழந்தைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை போலும் அவர்களுக்கு! ஆனால் அம்மாவும் அப்பாவுமே நொந்து நூலாகிப்போய் அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அங்கே கண்ணுக்கு எட்டிய வரை எல்லாருமே கருப்பர்கள் தான். எண்ணி ஒரு 20 அல்லது 25 பேர் வெள்ளைகாரர்கள் இருந்திருப்பார்கள்.

மதிய உணவுக்கு மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. வரிசையில் நிற்காமல் ஓரமாக ஒரு நடுத்தரவயதுக்காரர் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தார். அவரின் ஒரு ரெட் க்ராஸ் பெண் "நீங்கள் சாப்பிடப்போவதில்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர் "எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது, மேலும் சக்கரை நோயாளி நான். என்னால் அந்த வரிசையில் வெகு நேரம் நிற்க முடியாது" என்றார். உடனே விரைந்து சென்று அவருக்காக இரண்டு பீஸா துண்டுகளை எடுத்து வந்துக் கொடுத்தார் அந்தப் பெண். அதை வாங்கி பசியுடன் அவசர அவசரமாக சாப்பிடத்தொடங்கினார் அந்த நபர். வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞன், "நான் நீயூ ஆர்லியன்ஸில் இருந்து வெறுத்து ஓடி வந்ததைப் போலவே இங்கிருந்து ஒரு நாள் ஓடப்போகிறேன். I hate Texas" என்று கத்திக்கொண்டிருந்தான்.

அங்கே காத்ரீனாவின் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், சூப்பர் டோமின் (Superdome, New Orleans) பாதிப்பிலிருந்தும் அந்த கெட்ட நினைவுகளிலிருந்தும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அப்படி மன நிலை பாதிக்கப்பட்டோ, மன அழுத்தமோ உள்ளவர்களிடம் "Mental Health Service" என்ற அடையாள அட்டை அனிந்த ரெட் க்ராஸ் வாலண்டியர்கள் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு பெண்ணின் புலம்பலைக் கேட்க நேர்ந்தது. "கைக்குழந்தையுடன் சூப்பர் டோமில் நான் மூன்று நாட்கள் கஷ்டப்பட்டேன். கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கையில் நான் வைத்திருந்த கொஞ்சம் பணமும் திருட்டு போய் விட்டது. ஒரு நாள் கண்ணுக்கெதிரே துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு முறை நான் கழிவறைக்குச் சென்ற போது அங்கே இறந்து கிடந்த ஒரு குழந்தையைப் பார்தேன். அந்தக் காட்சி இப்பொழுதும் நினைவுக்கு வந்து என்னை வாட்டியெடுக்கிறது. சூறாவெளியிலேயே என் உயிர் போயிருக்கக் கூடாதா? இன்னும் எத்தனை நாள், எத்தனை இடத்தில் நான் இருந்து கஷ்டப்பட போகிறேனோ தெரியவில்லையே!" என்று கண்ணீர் வழிய அந்தப் பெண் சொல்ல, எனக்குத் தொண்டையை அடைக்க, அங்கிருந்து நகர்ந்தேன். மற்றொரு இடத்தில் ஒரு தாய் தன் 10 வயது மகனை கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டிருந்தாள். தரையில் பீஸா துண்டுகள் இறைந்து கிடந்தன. "இன்னும் உனக்கு உன் அப்பன் சாப்பாடு போடுவான் என்ற நினைப்பா?" என்று கத்திக்கொண்டிருந்தாள்.

கனத்த மனதுடன், மைதானத்தைச் சுற்றி மெதுவாக நடந்தேன். அங்கிருந்த ஒரு மிகப் பெரிய பலகையில் நிறைய நோடிஸ்களும் புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தன. அருகில் சென்று பார்த்தபோது, அவையெல்லாம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள். ஒரு வீட்டின் படம் போட்டிருந்த ஒரு நோட்டிஸ் என்னைக் கவர்ந்தது. ஹ¥ஸ்டனில் வசிக்கும் ஓரு குடும்பம், தங்கள் வீட்டில் இரண்டு அறைகள் காலியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடுமபங்களில் இரண்டு குடும்பங்களுக்கு தம் வீட்டில் தங்க இடம் கொடுப்பதாகவும் அதில் அறிவித்திருந்தனர். படிக்கவே ரொம்பப் பெருமையாக இருந்தது. தொடர்ந்து நடக்கையில், ஒரு வயதானவர், "தயவு செய்து என்னை பஸ்ஸில் அனுப்புங்கள். விமானத்தில் வேண்டாமே" என்று ஒரு ரெட் க்ராஸ் வாலண்டியரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். 65 வருடங்களில் ஒரு முறைக் கூட விமானத்தில் பறந்ததில்லையாம் அவர். அதற்கு அந்த வாலண்டியர், "நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக் கூரையிலிருந்து தண்ணீரில் குதித்து நிந்தி தப்பித்து வந்தவர் நீங்கள். அதை விட விமானப் பயணம் ஒன்றும் கடினம் இல்லை" என்று அவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.

திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வர, எல்லோரும் அமைதியானார்கள். "நியூ ஆர்லியன்ஸிலிருந்து இப்பொழுது வந்த ஒரு பேருந்தில் இங்கே வந்திருக்கும் டேனியல் கார்ட்டர் தன் மனைவி க்ளாராவைத் தேடிக்கொண்டிருக்கிறார்" என்று அறிவிக்க, மூன்று நாட்களுக்கு முன்பே அங்கு வந்துவிட்ட க்ளாரா என்கிற அந்தப் பெண்மணி "நான் இங்கேதான் இருக்கிறேன்" என்று பெருங்குரலில் அலற, அந்தக் கணவன் ஓடி வந்து அவளைக் கட்டிக்கொள்ள, சுற்றி இருப்பவர்களெல்லாம் கைத்தட்டினார்கள். இதைப்போல் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காட்சிகள் தினமும் அங்கே நடந்துகொண்டிருந்தது.

மைதானத்தைச் சுற்றி வந்தது உலகத்தையே சுற்றி வந்தது போல் இருந்தது. அடுத்து வந்த இரண்டு நாட்களில், கணிணி அறையிலேயே பெரும்பாலும் வெலை செய்தாலும், ஓய்வு நேரங்களில் மைதானத்திற்குச் சென்று அங்கிருக்கும் ரெட் க்ராஸ் வாலண்டியர்களுக்கு முடிந்த சில உதவிகளைச் செய்து வந்தோம். அதற்குள் கணிணியில் வேலைச் செய்யும் வாலண்டியர்கள் அனைவரும் அந்த மென்பொருளில் நிபுனர்களாகிவிட, எங்களை ஹ¥ஸ்டனில் உள்ள மற்றொரு ஷெல்டருக்கு பயிற்சி அளிக்க அனுப்பினார்கள். அது St.Agnes என்கிற மிகப் பெரிய Baptist Church.

அங்கே காட்சிகள் மாறியிருந்தாலும், சோகங்கள் மாறவில்லை!

தொடரும்...

Thursday, October 06, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - II

மறு நாள் காலை விடுதி அறையில் கண்விழித்தபோது அங்கே சூழ்ந்திருந்த அமைதி 'நீ வாசிங்டனில் இல்லை' என்று உணர்த்தியது. வாசிங்டன் டிசியில் காலையில் ஆம்புலன்ஸ்களின் அலறல்களைக் கேட்டுக்கொண்டே எழுந்திருப்பதுதான் வழக்கம். ஹ¥ஸ்டனின் அமைதியான, அலட்டிக்கொள்ளாத சூழல் வித்தியாசமாகத் தெரிந்தது. 9 மணியளவில் ஒரு ரெட் க்ராஸ் வாகனம் எங்களை Reliance City என்கிற இடத்திற்கு அழைத்துச் சென்றது. Reliance City என்பது, Astrodome, Reliance Center, Reliance Arena என்கிற மூன்று கட்டிடங்களைக் கொண்ட ஒரு சிறிய நகரம் போல் காட்சியளித்தது. அப்படியொரு மிகப் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பை நான் அதுவரைப் பார்த்ததே இல்லை! உள்ளே கிட்டத்தட்ட 25,000 பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்த Reliance City, இதுவரை அமெரிக்க வரலாறு கண்ட மிகப் பெரிய evacuation center.

அங்கே சென்று இறங்கியதுமே, அந்தச் சூழ்நிலையின் தீவிரம் என்னைத் தாக்கியது. வாசலிலும், கட்டிடத்தின் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான ஆயுதம் தாங்கிய போலீஸார்! பக்கவாட்டில் இரண்டு பெரிய Walmart ட்ரக்குகள் உடைகள், காலணிகள், கம்பளிகள் போன்றவற்றை இறக்கிக்கொண்டிருந்தது. Salvation Army வண்டிகள், உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் வண்டிகள் அவ்வப்போது வந்து உணவு பொருட்கள், தண்ணீர் என்று வரிசையாக இறக்கிக்கொண்டிருந்தன. Shell, Exon-Mobile போன்ற நிறுவனங்களில் இருந்து நிறைய தன்னார்வத் தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஹ¥ஸ்டனின் சுட்டெரிக்கும் வெயிலை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எங்களுடைய ரெட் க்ராஸ் அடையாள அட்டையைப் பார்த்ததும் மறு பேச்சு பேசாமல் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

நானும், மரியாவும் (உடன் வந்தப் பெண்) Astrodome க்கு வழி கேட்டு அங்கே சென்றோம். அங்கே Head of Operations யார் என்று கேட்டுக் அவரைத் தேடுக்கண்டுபிடிப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. ஒரு வழியாக அவரைப் பார்த்து நாங்கள் யார், எங்கிருந்து எதற்காக வந்திருக்கிறோம் என்ற விபரங்களை விளக்கிய பிறகு, எங்களை இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட கணிணிகள் இருந்தன. அதில் எங்களுடைய மென்பொருள் ஓடிக்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பூர்த்தி செய்த 'Hurricane Katrina Intake Sheet' என்கிற தாள்களை அடுக்கடுக்காக ஒருவர் அந்த அறையில் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருக்க, அந்த தாளில் உள்ள விபரங்களை கணிணியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் ரெட் க்ராஸ் ஒரு temp agency மூலம் வேலைக்கு நியமித்திருந்தது. அவர்களுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20! நாங்கள் அவர்களுக்கு 'Trainers from Washington DC" என்று அறிமுகப்படுத்தப்பட்டோம். 'நீங்கள் யார் எங்களுக்கு பயிற்சி அளிக்க' என்பது போல் ஒரு பார்வை முதலில் பார்த்தார்கள். அன்று முழுவதும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து மென்பொருளைப் பற்றி அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தோம். வந்த வேலையை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாலும், மனதின் ஓரத்தில் பாதிக்கப்படவர்களை இங்கே எந்த இடத்தில் இருக்கிறார்கள்? அவர்களைப் போய் பார்க்கவேண்டுமே என்கிற ஆவல் இருந்துகொண்டிருந்தது. மரியாவுக்கும் அந்தே ஆவல் எழ, மதிய உணவு இடைவேளையில், கணிணி அறையிலிருந்து கழற்றிக்கொண்டு கால் போன போக்கில் நடந்து கண்ணில் கண்ட கதவுகளையெல்லாம் திறந்து பார்த்தோம். அப்படியொரு கதவைத் திறந்தபோது, ஒரு மிகப் பெரிய indoor மைதானம் தெரிந்தது. அங்கே நான் பார்த்த காட்சி...

Image Hosted by www.MyImagesHost.net Image Hosted by www.MyImagesHost.net

"என்ன இது ஒரு refugee camp போல் இருக்கிறதே!" என்று நான் மரியாவிடம் சொன்னேன். அப்போது எங்களைக் கடந்து சென்ற ஒருவர் சட்டென்று நின்று, "உஷ்ஷ்ஷ்... இங்கே refugee camp என்கிற வார்த்தையை உபயோகிக்காதீர்கள். அந்த மக்கள் கேட்டார்களென்றால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. மேலும், அவர்களை மிகச் சாக்கிரதையாக அனுக வேண்டும். குடி, போதை மற்றும் சிகரெட் பழக்கம் உடையவர்களை வெளியே போகவிடாமல் ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தால், அந்த இடம் எப்படியிருக்குமோ, அது போல் தான் அந்த மைதானம் இருக்கிறது. அதனால் சாக்கிரதை!" என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். நானும் மரியாவும் கதவுக்கருகில் நின்று, உள்ளே போவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மனதில் திகிலுடன், விரிந்த கண்களுடன் படிகளில் இறங்கி மைதானத்தை நோக்கிச் சென்றோம்.

தொடரும்...

Tuesday, October 04, 2005

காத்ரீனா, ரீட்டா, நான் - I

இந்தப் பதிவை நேற்று தமிழ்மணத்தில் சேர்த்தேன். சில பிழைகளும், குழப்பங்களும் இருந்ததால், அவற்றைத் திருத்தி மீண்டும் சேர்க்கிறேன்.

Image Hosted by ImageShack.us

காத்ரீனா வந்து அமெரிக்காவின் அடிவயிற்றைக் கலக்கி, சுழற்றி அடித்து பின் மறைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. அமெரிக்கா எத்தனையோ இயற்கை சீற்றங்களை கடந்து வந்திருந்தாலும், காத்ரீனா என்கிற சூறாவளி வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பது உண்மை. காரணம் காத்ரீனா ஏற்படுத்திய இயற்கை சேதம் மட்டுமல்ல. நீயூ ஆர்லியன்ஸில் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக மனிதன் ஏற்படுத்தியிருந்த சேதத்தை காத்ரீனா வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுதான் ஒரு முக்கிய காரணம். ஒரு இயற்கைச் சேதத்திற்கான அரசின் உடனடி நடவடிக்கைகள் வழக்கமாக உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது. அதே போல், மீடியாவின் நடவடிக்கையும் வழக்கமானது தான் - பாதிக்கப்பட்ட மக்களின் வீரத்தைப் பற்றியும், விவேகத்தைப் பற்றியும், எப்படி அவர்கள் ஒற்றுமையாக இருந்து போராடி அந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தார்கள் என்பது பற்றியும், மீட்பு நடவடிக்கைகள் எப்படி நடந்தன என்பதைப் பற்றியும் எழுதுவது தான். ஆனால் காத்ரீனாவைப் பொறுத்தவரை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக நடந்திருக்கிறது. நிவாரணப் பொருட்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்புவதற்கு முன்பே, ஆயுதம் தாங்கிய படைகளை நியூ ஆர்லியன்ஸ¤க்கு அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அதே போல் மீடியாவும், மீட்புப் பணிகளைப் பற்றிய கதைகளை எழுதுவதற்கு முன்பே கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை போன்ற கொடூரங்களை எழுதவேண்டிய நிலைமை வந்துவிட்டது. இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விசயம் தான். அதைப் பற்றி நான் எழுதப் போவதில்லை. காத்ரீனா தொடர்பாக என்னுடைய சில அனுபவங்களைப் பற்றி மட்டும் எழுதப் போகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன் வரை காத்ரீனாவின் பாதிப்புடன் எனக்கு நேரடித் தொடர்பு ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்தத் தொடர்பு ரெட் க்ராஸ் (The American Red Cross) மூலம் எனக்குக் கிடைத்தது. காத்ரீனா போன்ற சூறா¡வளிகள், வெள்ளங்கள், நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைச் சேகரித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு செஞ்சிலுவைச் சங்கம் உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருளை தயாரித்த IT குழுவில் நானும் இருந்தேன். காத்ரீனாவினால் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே முகாம்கள்(shelter) அமைத்து ரெட் க்ராஸ் தங்கவைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். அதில் பெரும்பான்மையான மக்கள் ஹ¥ஸ்டனில்(Houston) உள்ள ஆஸ்ட்ரோடோம் (Astrodome) என்கிற விளையாட்டு மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இடங்களில் வேலை செய்யும் ரெட் க்ராஸின் வாலண்டியர்களுக்கு அந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு அவசர பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் வந்து அலைமோதும் அந்த முகாம்களில் புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு மென்பொருளுடன் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். கணிணியைச் சரியாக உபயோகிக்கக்கூடத் தெரியாதவர்ளை ஷெல்டர்களில் ரெட் க்ராஸ் நியமித்திருக்கிறது என்று மீடியா குற்றம் சாட்டத் தொடங்கியதைக் கேட்டு ரெட் க்ராஸ் உஷாரானது!

September 9 ஆம் தேதி நான் பாட்டுக்கு அலுவலகத்தில் என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் மானேஜர் என்னிடம் வந்து "நீ ஹ¥ஸ்டனுக்கு உடனடியாகக் கிளம்ப முடியுமா?" என்று கேட்டார். தீடீரென்று அவர் அப்படிக் கேட்டதால் சற்றுத் திகைத்து, "எதற்கு?" என்று கேட்டேன். "ஹ¥ஸ்டனில்(Houston) ரெட் க்ராஸ் ஷெல்டர்களில் வேலை செய்யும் வாலண்டியர்களுக்கு நம்முடைய மென்பொருளை உபயோகிக்க பயிற்சி அளிக்க வேண்டும். மிகவும் அவசரமாக அவர்களுக்கு உதவி தேவை" என்றார். ஒரு வினாடி யோசித்து "சரி போகிறேன்" என்று சொன்னது தான் தெரியும். மறு நாள் காலையில் விமானத்தில் இருந்தேன். எங்கள் குழுவில் வேலை செய்யும் மற்றோரு அமெரிக்கப் பெண்ணும் என்னுடன் வந்தாள். விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து ஹ¥ஸ்டனில் இருக்கும் ரெட் க்ராஸ் அலுவலகத்திற்குச் சென்றோம். நிமிடத்திற்கு ஒரு டாக்ஸியில் அமெரிக்காவின் எல்லாப் பகுதியிலிருந்தும் ரெட் க்ராஸ் வாலண்டியர்கள் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். பிரமிப்பாக இருந்தது ரெட் க்ராஸின் சரித்திரத்தில் கத்ரீனா உண்டாக்கிய பெருஞ் சேதத்தைப் போல் அதுவரை பார்த்ததில்லை என்பதால் எல்லாரும் அங்கே ஆடிப்போய்த்தான் இருந்தார்கள். அடையாள அட்டைகள், ரெட் க்ராஸ் மேலங்கி போன்ற இத்யாதிகளை வாங்கிக்கொண்ட பிறகு நாங்கள் தங்க வேண்டிய விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

ஹ¥ஸ்டன் டெளன் டவுன் பகுதியில் உள்ள Hyatt Regency...மிகச் சொகுசான விடுதி! எனக்கு மனதிற்குள் குற்ற உணர்ச்சி எட்டிப் பார்த்தது. எத்தனைப் பேர் நியூ ஆர்லியன்ஸில் வீடிழந்து படுக்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்! நமக்கென்ன Hyatt Regency வேண்டியிருக்கிறது? என் மனதில் உள்ளதைப் படித்தது போல் இன்னொரு ரெட் கிராஸ் பெண்மனி சொன்னார் "அடுத்த முறையும் வாலண்டியர் செய்யவேண்டும் என்று நம்மை ஊக்கப்படுத்தவே இந்த மாதிரி வசகிகளெல்லாம் ரெட் கிராஸ் நமக்கு செய்கிறது" என்று. மேலும், அங்கே போன பிறகு தான் தெரிந்தது Hyatt கிட்டத்தட்ட 200 அறைகளை ரெட் க்ராஸ¤க்கும், மீதம் 200 அறைகளை FEMA மற்றும் 'Search and Rescue Operation Squad' போன்ற அமைப்புகளுக்கும் அற்பணித்திருக்கிறது என்று. அறைச் சாவியை வாங்கிக்கொண்டு எலிவேட்டருள் நுழைந்தபோது, கூடவே ஒரு பருமனான பெண்மனி ஒரு பெரிய மூட்டைத் துணிகளுடன் உள்ளே நுழைந்தார். என்னுடைய அலுவலகத் தோழி "இத்தனைத் துணிகளையும் இன்றே ஷாப்பிங்கில் வாங்கினீர்களா?" என்று கேட்க, அந்தப் பெண்மனி "இல்லையம்மா, நாங்கள் homeless people. நியூ ஆர்லியன்ஸிலிருந்து போன வாரம் தான் டெக்ஸாஸ் வந்தோம். இந்தப் பழைய துணிகளெல்லாம் என் பிள்ளைகளுக்கு ரெட் க்ராஸ் ஷெல்டரில் இருந்து எடுத்து வந்தேன். கடவுள் புண்ணியத்தில் சில நாட்களுக்கு எங்களை Hyatt இல் தங்க வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு எங்கே இருக்கப்போகிறோமோ தெரியவில்லை" என்று பெருமூச்சு விட்டார். இதற்கே எனக்கு மனதை யாரோ பிசைந்தது போல் இருந்தது! ஆனால் மறு நாள் நாங்கள் நேரில் பார்த்த காட்சிகள் மனதை உறுக்கிப் பிழிந்துவிட்டன.

தொடரும்...