Wednesday, June 08, 2005

பெண்ணும் Khaithan மின் விசிறியும்!

விளம்பரங்களில் பெண்கள் எப்படியெல்லாம் சுய நலமாகவும், தரம் தாழ்ந்தும் உயயோகிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி முன்பே ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். நேற்றிரவு சன் தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம் மீண்டும் என்னை உசுப்பிவிட்டது!

ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. திடீரென்று கோபமாக எழுந்து நிற்கிறார் பிள்ளையின் அப்பா. "இந்த வீட்டில் பெண் எடுக்க வேண்டாம். வாங்க போகலாம்" என்று கத்துகிறார். பெண்ணின் அம்மா பயந்து போய் "என் பெண்ணிடம் ஏதாவது குறை இருக்கா?" என்று கேட்கிறார். அதற்கு பிள்ளையின் அப்பா, "பெண்ணிடம் எந்த குறையும் இல்லை, ஆனால் பெண்ணோட அப்பாவிடம் தான் குறை. இந்த வீட்டில் Khaithan விசிறி இல்லை. Khaithan இல்லாத வீட்டில் நாங்கள் பெண் எடுக்க மாட்டொம்" என்கிறார்.

இது வெறும் விளம்பரம் தான் என்றோ மற்றுமொரு அசட்டுத்தனமான marketing strategy என்றோ சொல்லி என்னால் இதை ஒதுக்கிவிட முடியவில்லை. ஏனோ இந்த விளம்பரம் என் மனதை பாதித்தது. 'பெண் பார்த்தல்' என்பது எந்த பெண்ணுக்கும் வேடிக்கையான அனுபவம் அல்ல.திருமணம் என்கிற சடங்கு தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும் ஒரு நீண்ட களைப்பு மிக்க பயணம் அது. அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் சில பெண்களுக்கு முதல் ஒன்றிரண்டு பெண் பார்த்தல்களிலேயே திருமணம் அமைந்துவிடும். ஆனால் பல பெண்களுக்கு அது ஒரு நீண்ட, தவிப்பான, தேடலாகவே இருக்கிறது. பெண் பார்க்க வருபவனைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்வது, மானசீகமாக அவனைத் திருமணம் செய்து குடும்பம் நடுத்துவது வரை போய்விடுவது, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடம் இருந்து கடிதம் வரும் என்று தினம் ஏங்கித் தவிப்பது, நிராகரிப்புக் கடிதம் வந்தபின் அவனை நினைவுகளிலிருந்து அழித்து, அடுத்து வருபவனை நினைப்பது - அழிப்பது - நினைப்பது - அழிப்பது - நினைப்பது என்கிற process இன்றும் பல பெண்களின் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நான் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் அக்காவை முதன் முதலாக பெண் பார்க்க வந்தார்கள். வீடே அல்லோகலப்பட்டது. பட்டுப் புடவையொடும் நகையோடும்போட்டி போட்டுக்கொண்டு சந்தோஷமும், வெட்கமும் என் அக்காவை அலங்கரித்திருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. பெண் பார்க்கும் படலம் முடிந்து ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள். ஒரு வாரம் சென்று அவர்களிடமிருந்து வந்த கடிதத்தில், நாசூக்காக ஜாதகத்தில் ஏதோ பொருந்தவில்லை அதனால் இந்த வரன் வேண்டாம் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் உண்மையான காரணம், அக்காவின் முகத்தில் அப்போது அதிகப்படியாக இருந்த பருக்கள் தான் என்று அந்த பெண் பார்த்தலை ஏற்பாடு செய்த தூரத்து உறவுக்காரர் சொன்னார். இதைக் கேட்டு என் அக்கா மனம் உடைந்து போனாள். அவளுடைய தன்னம்பிக்கை உருக்குலைந்து போனது. அதற்குப் பிறகு எவனும் தன்னை பெண் பார்க்க வரக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு 3 வருடங்கள் கழித்து ஒருவர் மறுபடியும் அக்காவைப் பெண் பார்க்க வந்தார். இன்று என்னுடைய மாமா அவர்.

அக்காவின் திருமணத்திற்கு பிறகு திருமண மார்கெட்டுக்கு வந்தார் என் அண்ணன். அவருக்கும் அக்காவின் முதல் பெண் பார்த்தல் மனதை பாதித்திருக்கவேண்டும். "எனக்கு வரிசையாக பெண்களைப் பார்த்துவிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லி அவர்களை நோகடிப்பதெல்லாம் பிடிக்கலை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன். அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பன்னிப்பேன்." என்று அண்ணன் என் பெற்றோரிடம் சொன்னார். அதே போலவே அவர் முதன் முதலாகப் பார்த்த பெண் தான் என்னுடைய அண்ணி.

நான் கல்லூரி படித்த நாட்களில் என்னையும் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். அப்படி ஒரு முறை என்னைப் பார்க்க வந்த பையனோட அப்பாவும் அக்காவும் கேட்ட சில கேள்விகள் இப்போது நினைவுக்கு வருகிறது..."படித்து முடித்து விட்டு என்ன செய்யப்பொகிறாய்?", "உன்னுடைய ambition என்ன?", "உன்னுடைய hobbies என்ன?". என்னுடைய அப்பா கூட இந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டதில்லை, இவங்க யார் கேட்கறது என்று எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் தான், ஆனால் ஒரு 10 பேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, எதிரே ஒரு பெண்ணை உட்காரவைத்துக் கேள்வி கேட்பது சரியா? அந்த மாதிரி சூழ் நிலையில் அந்தப் பெண் பயந்து, தயங்கி, தடுமாறி சொல்லும் பதில்களில் அவளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தார்களென்றால் அது அவர்களுடைய முட்டாள்தனம். பெண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்பதில் ஒரு Pshycology இருப்பதாக சமீபத்தில் எங்கோ படித்தேன். அதாவது, நன்றாகப் பாடத்தெரிந்த பெண் நல்ல மனப்பக்குவம் உள்ளவளாக இருப்பாளாம்! அது சரி, மாப்பிள்ளைக்கு மனப்பக்குவம் இருக்கிறதா என்று பெண் வீட்டார் எப்படி தெரிந்துகொள்வது?

பெண் பார்த்தலைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது பெண்ணின் வாழ்க்கையோட்டத்தைக் குலைத்து, அவள் மனதை பாதிக்கும் ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் எளிமையாக "Just like that" என்பது போல் casual ஆக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் பெண் பார்த்தல் அதி நவீனமாகி விட்டது என்று தெரிகிறது. வீட்டிற்கு வந்து சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் சாப்பிடாமல் வெளியே restaurant களில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சந்தித்துக்கொள்கிறார்கள். சிலர் கோவில்களில் சந்திக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், மாப்பிள்ளை மதிய உணவு இடைவேளையில் பெண் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குச் சென்று அவளைப் பார்க்கிறான். வீட்டில் வந்து பெண் பார்ப்பதும் எளிமையாக ஒருநண்பர் வீட்டுக்குப் போவதுபோல் இருக்கவேண்டும். இப்படி யாதார்த்தமான சந்திப்புகள் பெண் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன். பெண்களின் மீதும் தவறு இருக்கிறது. வாழ்நாள் முழுவது கூடவே இருக்கப்போகிற ஒருவனைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்ன? ஒரு நீண்ட தேடலுக்கும், அதில் சில நிராகரிப்புகளுக்கும் தங்களைப் பெண்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சொஜ்ஜி-பஜ்ஜி முறை பெண் பார்த்தலை பெண்கள் தான் எதிர்க்க வேண்டும்.

இப்படி பல உணர்ச்சிகளும் செண்டிமெண்டுகளும் இந்தப் 'பெண் பார்த்தல்' என்பதில் இருக்கும்போது, அந்த Khaithan மின் விசிறி விளம்பரத்தில் "Khaithan இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டோம்" என்று அந்தத் தந்தை சொன்னபோது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!!!