Tuesday, November 08, 2011

வாசிங்டனில் செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 3

செய்தி ஊடகத் துறையில் எப்படி பெண்கள் நுழந்தார்கள், பின் எப்படியெல்லாம் முன்னேறி வந்தார்கள் என்பதைப் பற்றி சுவையான செய்திகளை தெரிந்துகொண்டேன்.

Anna Cox Marie என்கிற பெண் எழுத்தாளர், தனது வலைப்பதிவில் அமெரிக்க அரசியல் கிசுகிசுக்களை எழுதி மிகப் பிரபலமானாராம்!  தனது பதிவை வைத்து பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாராம்!  ஹம்ம்ம்ம்...நானும் தான் பல வருடங்களாக பதிவு எழுதுகிறேன்.  தினம் ஒரு 10 பேர் படித்தாலே அதிசயமாக இருக்கிறது.  இந்தச் செய்தியை பார்த்தது முதல் எனது பதிவை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வதென்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 

பல வருடங்களுக்கு முன், ஆண் நிருபர்கள் மட்டுமே செய்தித் துறையில் இருந்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் நுழையத் தொடங்கிய போது அது சமூகத்தால் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.  ஆனால் பெண்கள் விடவில்லை!  

Melissa ludtke என்கிற பெண், விளையாட்டுச் செய்திகள் பிரிவில் (sports) நிருபராக பணிபுரிந்தார். ஒரு முறை ஆண் விளையாட்டு வீரர்களின் லாக்கர் அறைக்குச் சென்று பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால் அதற்காக அவர் வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்று ஆண் நிருபர்களுடனான சம உரிமையைப் பெற்றார்!   பெருமைக்குரிய சாதனை! 

நிருபர்கள் பல சூழ்நிலையில் காவல் துறை தடையினைத் தாண்டிச் செல்லவேண்டியிருப்பது தெரிந்ததே. அதற்கான அனுமதிச் சீட்டில், "Please pass him in the police line" என்கிற வரிகளே பல வருடங்களாக இருந்ததாம்.  முதல் முறையாக Rita Good என்கிற பெண் நிருபருக்காக "him" என்பதை "her" என்று கையால் அடித்து மாற்றினார்களாம்!

இப்படி இந்த அருங்காட்சியகத்தில் கொட்டிக் கிடக்கும் செய்திகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.  ஆனால் நேரில் சென்று ஒரு மூழு தினத்தை அங்கே செலவிட்டால் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.  வாசிங்டன் டிசி பகுதியில் இருப்பவர்களும், வாசிங்டன் டிசிக்கு வருபவர்களும் இந்த அருங்காட்சியகத்தைக் காணத் தவறாதீர்கள். 

Sunday, November 06, 2011

செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 2

புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களுக்கான பகுதிக்குச் சென்றபோது, அங்கே ஒரு திரையில் அந்த விருது பெற்ற சில புகைப்பட நிபுணர்களின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது.  அதில் ஒரு நிபுணர் கூறுகிறார் "It's a honor to be a journalist, because if you care about something, you can make half a million people care about it" என்று.  எவ்வளவு உண்மை!  கொசோவாவில் நடந்த இனப் போராட்டத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது அங்கே இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் வரை.


கொசோவாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில், இரும்புக் கம்பிகளின் இருபுறம் உள்ள உறவிணர்கள் இந்தக் இரண்டு வயது குழந்தையை முத்தம் கொடுப்பதற்காக கம்பிகளின் வழியாக கைமாற்றம் செய்துகொள்கிறார்கள்.   


தன் உடலில் போதை மருந்தை செலுத்துக்கொள்ளும் ஒரு தாய்!  பின்னால் துவண்டு தூங்கிக்கொண்டிருக்கும் அவளது குழந்தை!  


கொடிய தீ விபத்தில் சிக்கி எரிந்த தன் குழந்தையை அள்ளிக்கொள்ளும் தந்தை! 

இப்படி வாழ்க்கையின் கொடூரங்களை அந்த தருணங்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் இந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களைப் பார்க்கும் போது இதயம் கனத்தது.  

அதே சமையம்.  இதைவிட பல மடங்கு கொடூர நிகழ்வுகள் ஈழத்தில் நடந்திருந்தும், அவற்றைப் பற்றின எந்தப் பதிவுகளும் புகைப்படங்களும் அந்த அருங்காட்சியகத்தில் இல்லாதது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.  ஈழத்தமிழர்கள் இலங்கை முகாம்களில் கிடந்து அவதிப்படும் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன்.  அவற்றில் ஒன்றாவது இந்த அருங்காட்சியகத்தில் இருந்திருந்தால், அது தினம் நூற்றுக்கணக்கான இதயங்களை பாதித்திருக்குமே?!  

அடுத்தப் பதிவில் ஊடங்களில் பெண்களைப் பற்றி சில சுவையான தகவல்கள்...

Monday, October 17, 2011

வாசிங்டன் நகரில் செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகம் - பாகம் ஒன்று

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதற்கு ஒரு உருப்படியான விசயம் கிடைத்தது.

வாசிங்டன் மாநகரம் என்பது  அருங்காட்சியகங்களின் குவியல் என்று அனைவரும் அறிந்ததே.   பல வருடங்களாக வாசிங்டன் டிசி பகுதியில் நான் வசித்தாலும்,  ஒரு அருங்காட்சியகத்தைக்கூட முழுமையாகப் பார்க்கவில்லை.  ஒரு மணி நேரத்திற்குப் பின் சலிப்புத் தட்டி விடுகிறது.  ஆனால் ஒரு நாள் முழுவதும் இருந்தும் நேரமே பற்றவில்லை ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும்.  2007 ஆம் ஆண்டு "Newseum" என்றொரு அருங்காட்சியகம் தொட ங்ககப்பட்டது.  அதாவது ஊடகச் செய்திகளுக்கான பிரத்தியேகமான ஒரு அருங்காட்சியகம்.  இத்தனை ஆண்டுகளாக அதனைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், போய் பார்க்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் தான் கிடைத்தது.  கட்டிட அமைப்பு, காட்சிப் பொருட்களின் வடிவமைப்பு, விவரங்கள், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சித் திரைகளில் சிறப்புப் பேட்டிகள், குறும்படங்கள், என்று பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது இந்த அருங்காட்சியக அனுபவம்.

குறைந்தது 5 மணி நேரங்கள் ஆகும் சாவகாசமாக 6 தளங்களையும் பார்த்து முடிக்க.  பத்திரிக்கை/ஊடகம் போன்ற துறை களில் ஈடுபாடு உடையவர்கள் அங்கேயே இரவு ஓரமாகத் தூங்கிவிடலாம். அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள.  அதில் சிலவற்றை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.

நேரில் காணக் கிடைக்காத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அரிய காட்சிப் பொருட்களை அங்கே கண்டேன்.

1. பெர்லின் சுவற்றின்(Berlin Wall) சில பகுதிகள்:

ஆம்! உண்மையான இடிக்கப்பட்ட பெர்லின் சுவற்றிலிருந்து  சில பகுதிகளைக் கொண்டு வந்து இங்கே காட்சியாக வைத்திருக்கிறார்கள்.  காரணம், செய்தி ஊடகங்களுக்கு பெர்லின் சுவர் கட்டப்பட்ட காலகட்டம் மிக முக்கியமான ஒன்று.  கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் ஊடகங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.  அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நிருபர்கள் பத்திரிகைகளில் எழுத முடிந்தது.  ஜனநாயக மேற்கு ஜெர்மனியில் ஊடகங்களுக்குக் சுதந்திரம் இருந்தது.  யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாத இந்த கொடிய சுவற்றைத் தாண்டி தகவல்கள் கடந்து சென்றதில் செய்தி ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது.  பெர்லினுக்குச் சென்று இந்தச் சுவற்றைப் பார்க்கவா முடியும்?  ஒரு நாட்டை இரண்டு கருத்தியல்கள் கொண்ட இரு பகுதிகளாக 28 வருடங்களாகப் பிரித்து வைத்திருந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவற்றை இப்படி  தொட்டு விடும் தூரத்தில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

2. நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தின் உச்சியில் இருந்த "antena" வின் உடைந்த பகுதி: 


செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் உலக வர்த்தக கோபுரங்களின் மீதான பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதலின் போது உடைந்து விழுந்த இந்த antenna வினால் பல தொலைகாட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புகள் தடைபட்டன.  செய்தித் துறையைச் சேர்ந்த பல நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பயங்கரவாத நிகழ்வைப் பதிவு செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.  மேலும் கோபுரங்களிம் மீது மோதிய ஒரு விமானத்தில் உள்ள சில கருவிகள், பயணிகளின் செல் தொலைபேசிகள் போன்றவற்றையும் காட்சிப் பொருளாகப் பார்த்தபோது மனதிற்குச் சங்கடமாக இருந்தது.  9-11 நிகழ்வைப் பற்றிய ஒரு குறும்படம் ஒரு சின்ன அறையில் ஓடிக்கொண்டிருந்தது.  கோபுரங்கள் இடிந்து விழுவது, பொது மக்கள் பயந்து ஓடுவது, இறந்தவர்களின் உறவிணர் பேட்டி போன்றவை திரையில் ஓடிக்கொண்டிருன்தது.  பார்வையாளர்கள் பக்கமிருந்து ஒன்றிரண்டு விசும்பல் சத்தம் காதில் கேட்டது.

3.  ஒரு குற்றவாளியின் மிரட்டல் கடிதம்:

FBI க்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கிறது.  FBI நிறுவனம் கொடுத்து வைத்த ஒன்று.  அமெரிக்கச் செய்தி ஊடகங்களின் மொத்த ஆதரவும் அதற்கு இருந்தது.  தேசத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க வந்த காவல் தெய்வங்களாக FBI அதிகாரிகளை ஊடகங்கள் கொண்டாடின.  ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பு கோட் சூட், கறுப்புக் கண்ணாடி சகிதம் கம்பீரமாக வந்து, மிகச் சாதுர்யமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் இந்த FBI  அதிகாரிகளின் மீது எனக்கும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  FBI  கையாண்ட பல முக்கியமான வழக்குகளின் செய்திக் குறிப்புகள் இங்கே உள்ளன.  என்னை மிகவும் கவர்ந்த ஒரு காட்சிப்பொருள், ஒரு குற்றவாளி பணம் கேட்டு மிரட்டி எழுதிய ஒரு கடிதம்!!!  கதைகளிலும் திரைப்படங்களிலுமே இதுவரை நான் இப்படிப்பட்ட கடிதங்களை பார்த்திருக்கிறேன்.  ஒரு குற்றவாளி பெண்ணைக் கடத்தி வைத்துக்கொண்டு, தன் சகாக்களை சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லையேன்றால் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவேன் என்று தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு உடல் சில்லிட்டது!!!

அடுத்து நான் பார்த்தது புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்கள் பகுதி.  Eddie Adams என்ற புலிட்சர் விருது பெற்ற ஒரு பத்திரிக்கையாளர், "If it makes you laugh, if it makes you cry, if it rips out your heart , that's a good picture" என்று சொல்லியிருக்கிறார்.  உண்மைதான்!  அங்கிருக்கும் சில புகைப்படங்கள் என் மனதைக் குத்திக் கிழித்தன.  அந்தப் புகப்படங்கள் பற்றி அடுத்தப் பதிவில்.

தொடரும்...







Wednesday, August 24, 2011

முப்பது வினாடி திகில்! - நேற்று நடந்தது...

திகிலான ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அதிலும், இயற்கை பேரழிவு பற்றிய "Volcano", "Earthquake", "Airport", "Day After Tomorrow" போன்ற படங்கள் ரொம்பவே பிடிக்கும்.  இதுவரை திரையில் பார்த்து அனுபவித்த அந்த "திகில்" உணர்வை நேற்று நேரிலேயே அனுபவித்து விட்டேன்!!!

என்ன நடந்தது?

நீண்ட நாட்களாக எதுவும் வலைப்பதிவில் எழுதவில்லை.  ஏதாவது எழுதலாம் என்று தினமும் நினைப்பேன், ஆனால் எழுதுவதற்கான  உந்துதலோ ஊக்கமோ ஏற்பட்டல்தானே?!.  என்னுடைய ஒன்றரை வயது மகளைத் தாண்டி எதுவுமே என்னால் யோசிக்க முடியவில்லை.

இயற்கைக்கே எனது இந்த தேக்க நிலை பொறுக்கவில்லை போலும்!  ஒரு நில நடுக்கத்தின் மூலம் என்னை அசைத்துப் பார்த்துவிட்டது!  அதனால் தான் இந்தப் பதிவை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று மதியம் இரண்டு மணியளவில் மதிய உணவு முடிந்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன்.  லேசாக தரை அதிர்வது போல் இருந்தது.  ஏதோ ஒரு பெரிய வாகனம் வேகமாக வீட்டை தாண்டிப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த போதே, வீட்டின் கூரை மேலே திடு திடு என்று யாரோ ஓடுவது போல் ஓசை கேட்டது.  அதே சமையத்தில் வீடு பலமாக அதிர்ந்தது!  அப்போது  தான் அது நில நடுக்கம் என்று எனக்கு உரைத்தது.  அடுத்து என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை.  என் மகள் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவளை முதலில் தூக்கிக்கொண்டேன்.  பிறகு மாடிக்குச் சென்று பணம், லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவிடலாம் என்று தோன்றியது.  வீடு இடிந்துவிட்டால் என்ன செய்வது?  ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் பூமி பிளந்து பாதாளத்தில் விழுந்துவிடுவோமோ? என்று மனதில் பல காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.  ஆனால் எதுவுமே செய்யாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்.  முப்பதே வினாடிகள் தான் இந்தக் கூத்து.  நில நடுக்கம் நின்று விட்டது!!!  அதற்குபின் நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சில நிமிடங்கள் பிடித்தது!  என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நில நடுக்கத்தை என் வாழ்நாளில் சந்தித்தேன் என்பதை!

தொலைகாட்சியிலும், இணையத்திலும் "5.8 magnitude earth quake rocks Virginia, Washington DC area" என்று உடனே போடுவிட்டார்கள்.  அதைப் பார்த்துவிட்டு உறவிணர்கள், நண்பர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.  ஒவ்வொருவரிடமும் என் அனுபவத்தைச் சொல்லி சொல்லி நான் சோர்ந்துவிட்டேன்.

5.8 என்பது மிகப் பெரிய நில நடுக்கம் இல்லை என்றாலும் கூட, முதல் அனுபவம் என்பதால் எங்களை மிகவும் பயமுறுத்திவிட்டது.  மேலும் இதன் "after shock" வேறு எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்கிறார்கள்.  இப்போதும் மனம் திக் திக் என்று திகிலாகவே இருக்கிறது.

இனிமேல் வாழ்க்கையில் இந்த இயற்கை பேரழிவு படங்களைப் பார்க்கவே கூடாது!

Friday, March 25, 2011

அப்பாவின் கனவுக் கன்னி


நேற்று முன் தினம், பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் மறைவுச் செய்தி படித்தேன்.  அப்பா இருந்திருந்தால் மிகவும் வருந்தப்பட்டிருப்பார்.  ஏனென்றால் எலிசபெத் டெய்லர் அப்பாவின் கனவுக் கன்னி!

இவரின் திரைப்படங்களை அப்பா அந்த காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பார்.  அந்தத் திரைப்படங்களை எங்களிடம் அப்படியே சுவையாக விவரிப்பார்.  நேரில் பார்த்தது போலவே இருக்கும்.  முக்கியமாக, 60 களில் எலிசபெத் நடித்துக் கலக்கிய 'க்ளியோபாட்ரா' என்ற திரைப்படத்தைப் பற்றி அப்பா மிகவும் சிலாகித்துப் பேசியது நினைவில் இருக்கிறது.  அப்போதே ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கேட்டாராம் எலிசபெத் டெய்லர்!!!  நான் சமீபத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்பா மட்டுமல்ல, எலிசபெத் அந்தக் காலக் கட்டங்களில் பல ஆண்களின் கனவுக் கன்னியாக இருதிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அப்பா இறந்துபோவதற்கு முன் அமெரிக்கா வந்திருந்த போது அவரை 'லாஸ் வேகாஸ்' அழைத்துச் சென்றிருந்தோம்.  அங்கிருந்த 'wax museum' சென்ற போது, அங்கே எலிசபெத் டெய்லரின் மெழுகுச் சிலை இருந்தது.  அப்பா ஆர்வத்துடன் அந்தச் சிலையின் அருகே நின்றுகொண்டு தன்னை புகைப்படம் எடுக்கச் சொன்னார்.  "உங்கள் கனவுக் கன்னி அல்லவா அவர்?  சும்மா தோளில் கைப்போட்டு போஸ் கொடுங்கள்" என்று நான் சொன்னேன்.  "சே சே அதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி கூச்சத்துடன் எலிசபெத் டெய்லரின் சிலைக்கருகே நின்று போஸ் கொடுத்தார் அப்பா.

எலிசபெத் டெய்லரின் மறைவு, அப்பாவைப் பற்றிய இனிய நினைவுகளை கிளறிவிட்டது...



Wednesday, February 02, 2011

ஒரு சாலை வழிப் பயணம்(நந்தலாலா), ஒரு காட்டு வழிப் பயணம்(மைனா)



சமீபத்தில் என் மனதை பாதித்த இரண்டு திரைப்படங்கள் - நந்தலாலா மற்றும் மைனா.   இந்த இரு திரைப்படங்களின் கதை களமும் ஒன்றுதான்  -  நெடுந்தூரப் பயணம்.

ஒரு பயணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.  கதாநாயகனும் கதாநாயகியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக சேர்ந்து பயணிக்க நேரிடுவது,  பின் அது காதலில் முடிவது போன்ற திரைப்படங்களை பார்த்து அலுத்துவிட்டது.  'டைடானிக்' (கப்பல் பயணம்), மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (பேருந்து பயணம்), An Affair to Remember (கப்பல் பயணம்) - இது போன்ற திரைப் பயணங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தன.

ஆனால்  ஒரு சிறுவன், ஒரு மனநோயாளி மற்றும் ஒரு விலைமாது (நந்தலாலா) சேர்ந்து செல்லும் ஒரு பயணத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?  அந்த மூவரையும் எப்படி இணைக்க முடியும்?     அதேபோல் மைனாவில் ஒரு குற்றவாளி, அவனது காதலி, இரண்டு காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து மலையடிப் பாதைகளில் நடந்து செல்கிறார்கள்.  இந்தப் பயணம் எப்படி சுவையானதாக இருக்கமுடியும்?

இருந்தது!  அந்தப் பயணங்கள் சுவையானதாக மட்டுமல்லாமல்,  என் மனதை நெருடி கண்களில் கண்ணீரையும் வரவழைத்தன.



நந்தலாலா: அகிலேஷ் என்கிற சிறுவனும் பாஸ்கர் மணி என்கிற மனநோயாளியும் எதிர்பாராத விதமாக சேர்ந்து பயணம் செல்ல நேர்கிறது.  பயணிக்கும் திசை ஒன்றாக இருக்கிறது...நோக்கம் கூட ஒன்றுதான்...இருவருமே தத்தம் தாயைச் சந்திக்கச் செல்கிறார்கள்.  ஆனால் சந்தித்த பின் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள்.  அகிலேஷ் தன் தாயின் கண்ணத்தில் முத்தமிட விரும்புகிறான்.  பாஸ்கர் மணி தன் தாயின் கண்ணத்தில் அறைய விரும்புகிறான்.  ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் நடந்ததோ வேறு.  பாஸ்கர் அகிலேஷின் தாயின் கண்ணத்தில் அறைகிறான்.   அகிலேஷோ ஒரு விலைமாதுவை தாயாக ஏற்று அவள் கண்ணத்தில் முத்தமிடுகிறான்.  ஏன் என்று குழப்பமாக இருக்கிறது இல்லையா? விடையை வெள்ளித் திரையில் காண்க!

நாம எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம்.  நாம் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பு கிடைக்கவில்லையென்றால், அது கிடைக்கும் இடத்தில் இருந்து ஏன் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது?  அல்லது அன்புக்காக ஏங்கும் மற்றொருவரின் மேல் நாம் ஏன் அன்பு செலுத்தக்கூடாது? இது சிறுவன் அகிலேஷ் கற்றுக்கொண்டு, நமக்கும் கற்றுக்கொடுக்கும் பாடம்.  தன் தாய் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தபின், போக்கிடம் இல்லாமல், வேறு பிழைப்பு இல்லாமல் தன் பயணத்தில் தன்னுடன் இணைந்த விலை மாதுவை தன் தாயாக ஏற்கிறான்.  கொஞ்சம் இது 'ஓவர் டிராமா' போல் இருந்தாலும், ஒரு சிறுவனுக்குள்ள உயர்ந்த எண்ணத்தை,  பரந்த மனப்பாண்மையை படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மிஷ்கின்னை பாராட்டியே ஆகவேண்டும்.

"ஒன்னுக் கொன்னு துணையிருக்கும் உலகத்தில...
அன்பு ஒன்னு தான் அனாதையா...
யாரு இத கண்டுகொள்வார்...
கைகளிலே ஏந்திக்கொள்வார்...
சொந்தம் சொல்ல யார் வருவார்...
அன்புக்கு யார் அன்பு செய்வார்..."

என்னமாய் பாடிவிட்டர் ஜேசுதாஸ்?

 பாடல் வரிகள் மனதைத் தொடுகின்றன.  அன்பு கிடைக்காமல் இருப்பவர்களைத் தான் அனாதை என்கிறோம்.  ஆனால் அன்பே அனாதையா இருக்கிறதென்று சொல்லும் போது, அதன் பின்னணயில் இருக்கும் வலியும் கொடூரமும் புலப்படுகிறது.

எனக்குத் தோன்றிய சில குறைகள்: 1. மிஷ்கின் அதிவேகமாகப் பேசுவதால், அவரது வசனங்கள் சரியாகப் புரியவில்லை 2. அடிக்கடி மிஷ்கின்னும், அகிலேஷும் தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு சாலையில் நிற்பது பார்க்க அலுப்பாக இருக்கிறது.  3 விலைமாதுவாக வருபவர் ஏன் மற்ற இருவருடன் இணைந்து பயணிக்கிறார் என்பதற்கு வலுவான ஒரு காரணம் எனக்குப் புலப்படவில்லை.


மைனா:  நந்தலாலா கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறதென்றால்  மைனா தேணி, முன்னார் அருகில் உள்ள மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பயணிக்கிறது.

தீபாவளியன்று நடக்கும் கதை என்பதால், பின்னணியில் வெடிச் சத்தம்,  குழந்தைகள் இனிப்பு எடுத்துச் செல்வது போன்றவை யதார்த்தமாக இருந்தது.  மசாலா படங்களில் மிடுக்காக சைரன் வைத்த ஜீப்புகளில் செல்லும் காவல் அதிகார்களையே பார்த்துப் பழகிவிட்டோம் நாம்.  இயல்பாக சைக்கிளிலும் ஆட்டோவிலும் செல்லும் சிறைக் காவல் அதிகார்களைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  அதிகாரி ராமய்யா நடிப்பில் அசத்திவிட்டார்.  அவருடை மனைவி செல் பேசியில் அழைக்கும் போது, "மாமோய்...நீ எங்க இருக்க?" என்று அலறும் அவருடைய  ரிங் டோன் சூப்பர்!  வடிவேலும், விவேக்கும் ரூம் போட்டு யோசித்துச் செய்யும் காமெடியை ராமய்யா மிக இயல்பாக இரசிக்கும்படியாகச் செய்துவிட்டார்.

படத்தின் தொடக்கத்தில் தங்கையின் மேல் அன்பைப் பொழிந்து, பாஸ்கர் என்கிற சிறைக் காவல் அதிகாரியான மச்சானின் மேல் சற்று காண்டாக இருக்கும் அந்த மூன்று முரட்டு அண்ணன்களைப் பார்த்தாலே வயிற்றில் புலியைக் கரைத்தது.  ஏன் தொடக்கத்தில் அந்த அண்ணன் தங்கை தொசைபேசி உரையாடலை அவ்வளவு விலாவரியாகக்  காட்டுகிறார்கள் என்று நான் யோசித்தேன்.  ஆனால் படத்தின் முடிவில் நம் நெஞ்சை பதைக்க வைக்கும் ஒரு பாதகச் செயலுடன் அந்த ஆரம்ப நிகழ்ச்சிகளை அருமையாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு பக்கம் அந்த அமைதியான சிறைக்காவல் அதிகாரி பாஸ்கர்,  அவருடைய திமிர் பிடித்த மனைவி, அவளுடைய முரட்டு அண்ணன்மார்.  இவர்களுக்குத் தொடர்பே  இல்லாமல் சற்றுத் தள்ளி ஒரு மலை கிராமத்தில்  உயிருக்குயிராக நேசிக்கும் சுருளியும் மைனாவும்.  சிறு வயதிலிருந்தே தன் காதலி மைனாவுக்கு வீடு கொடுத்து, வசதி கொடுத்து, படிக்க வைத்து, அவளை வளர்க்க அவளது தாய்க்குச் சமமாக எல்லாவற்றையும் செய்கிறான் சுருளி.  அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதே அவனது கனவு.  அப்படி அவன் கண்ணும் கருத்துமாக பல ஆபத்துகளில் இருந்து காத்து வளர்த்த மைனாவை யாரோ அவர்களுக்குச் சம்மந்தமே இல்லாத மூன்று நபர்கள் (அந்த முரட்டு அண்ணன்கள்) அனியாயமாகக் கொன்று விடுகிறார்கள்.  அதைத் தாங்கமுடியாமல் சுருளி ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான்.

ஏன் அந்த மூன்று அண்ணன்களும் மைனாவை கொலை செய்கிறார்கள் என்பதை வெள்ளித் திரையில் காண்க!  இன்னேரம் கண்டிருப்பீர்கள் :-)

 சுருளி வாழும் அந்த மலைக் கிராமத்திற்குச் சென்று சிறை அதிகாரிகள் பாஸ்கரும் ராமைய்யாவும் சுருளியை பிடித்துக்கொண்டு வரும்போது, மைனாவும் அவனுடன் வருகிறாள்.  அவர்கள் நால்வரும் தேணிக்கு திரும்பி வரும் பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் அழகான திரைக் கதையாக விரிகிறது.  மைனாவும் சுருளியும் ஒரு ஆப்பக் கடை வைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக முன்னேறிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.  அந்தச் சிறை அதிகாரிகளோ, தீபாவளி அன்று தம் குடுமபத்தாருடன் இருக்க முடியவில்லையே என்று அவர்கள்  மீது கடுப்பாக இருக்கிறார்கள்.  ஊருக்குப் போனவுடன் அவனை கஞ்சா வழக்கில் வெளியே வரமுடியாதபடி சிறையில் தள்ள திட்டமிடுகிறார்கள்.   இப்படி, அடுத்த என்ன நேரப் போகிறதோ, என்று நம் மனமும் அவர்களை படபடப்புடன் பின் தொடர்கிறது.  இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

இன்னும் இறந்து போன மைனாவை நினைத்தால் மனசு கஷ்டமா இருக்கு.  அதுவும், அவளை துன்புறுத்திக் கொல்லும் போது, அவள் அந்த அண்ணன்களின் காலைப் பிடித்து ஏதோ சொல்லத் துடிப்பாளே, அய்யோ....என்ன கொடுமை?!  வழக்கமாக சுருளி தானே அந்த வில்லன்களைப் பழிவாங்க வேண்டும்?  ஆனால் அவன் தற்கொலை செய்துகொள்ள, சிறை அதிகாரி பாஸ்க ரே தன் மச்சான்களையும் மனைவியையும் வெட்டிச் சாய்க்கிறார்.  நன்றாக வேண்டும் என்று என் மனமும் குரூரமாகச் சந்தோசப்பட்டது!!!




Monday, January 24, 2011

ஒரு கல கல கோலப் போட்டி!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்து வந்து போகிறது.  யார் வீட்டிலாவது போய் விருந்து சாப்பிட்டுவிட்டு  அரட்டை அடித்து விட்டு வருவதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகச் செய்வதில்லையே என்று என் மனதில் எபோதும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு.  சிறு வயதில் "பொங்கலுக்கு ஊருக்குப் போகிறோம்" என்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வாய் ஓயாமல் சொல்லி மகிழ்ந்து, பள்ளி விடுமுறை விட்டதும் தாத்தா, அம்மாயி இருந்த கிராமத்திற்கு எல்லாரும் சென்றுவிடுவோம்.  அடுத்த நான்கு நாட்களும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாகச் செல்லும்.  அடுப்பாங்கரையில், அப்போதுதான் பொங்கி வைத்த வெண்பொங்கலையும் சக்கரைப்பொங்கலையும் சுவைப்பதும் பின் வாசலுக்கு ஓடிச்சென்று அக்கம்பக்கத்துப் பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடும் கோலங்களைப் பார்ப்பதுமாக குதூகலமாக ஓடிக்கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.  அடுத்த நாளோ பரபரப்பிற்கு கேட்கவே வேண்டாம்.  வாசலில் போய் நின்றாலே போதும்.  மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் பூசி, கழுத்தில் மாலை போட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து தெருக்களில் ஓட்டிக்கொண்டு வருவார்கள்.  அரிசி இடிக்கும் உருளையை குறுக்கே போட்டுத் தாண்டச் சொல்லுவார்கள்.  பின்னே ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஏரிக்கரையில் ஜல்லிகட்டு நடக்கும்.  ஆனால் மாடு என்னை வந்து முட்டிவிடும் என்கிற பயத்தில் நான் ஜல்லிகட்டு பக்கம் சென்றதே இல்லை.

ஆனால் இப்போது?  நான் மேலே சொன்ன அத்தனையும் ஒரு சினிமா நட்சத்திரம் செய்கிறார்.  நாம் அதை தொலைக்காட்சியில் பார்க்கிறோம்!  ஆம்!  இந்த வருடம் பொங்கல் நிகழ்சிகள் பற்றி ஒரு மாதமாகவே விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள்.  வடிவேலு தன் ஊரில் பொங்கல் கொண்டாடுவது,  சின்னத் திரை கலைஞர்கள் ஒரு கிரமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடுவது, தனுஷ் கொண்டாடுவது....என்று அடுத்தவர்கள் கொண்டாடுவதையே ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு எப்படித்தான் மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்பது?!

இங்கே அமெரிக்காவில் நாங்கள் தொலைக்காட்சி அவ்வளவாகப் பார்ப்பதில்லை.  யார் வீட்டிலாவது விருந்துக்கு கூப்பிடுவார்கள்.  போய்வருவோம்.  தெரிந்தவர்களை எல்லாம் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சாப்பிடுவதையும் அரட்டை அடிப்பதையுமே செய்துவிட்டு வருவோம்.

இந்த வருடமும் பொங்கலுக்கு ஒரு நண்பர் வீட்டிலிருந்து விருந்துக்கு அழைப்பு வந்தது.  இந்த முறை ஏதாவது உருப்படியாக செய்தே ஆகவேண்டும் என்று யோசித்தேன். சிறு வயதில் வாசலில்  தெருவெல்லாம் அடைத்து அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் போட்ட கோலங்கள் ஞாபகம் வர, ஒரு கோலப் போட்டி வைக்கலாமே என்று தோன்றியது.  உடனே தோழிகளுக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பினேன்.  காகிதத்தில் அனைவரும் ஒரு கோலம் வரைய வேண்டும் என்றும், மிக அழகிய கோலத்திற்கு பரிசு உண்டு என்றும், விருந்துக்கு அழைத்தவரே இந்தப் போட்டிக்கு நடுவராக இருப்பார் என்றும் மின்னஞ்சலில் எழுதியிருந்தேன்.  விருந்துக்கு நான்கு நாட்களே இருந்தது.  எல்லாருமே வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்.  இந்த நான்கு நாட்களுக்குள் ஒரு கோலத்தைக் கற்றுக்கொண்டு வருவார்களா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.  நானும் விருந்துக்கு முதல் நாளன்று தான் இணையத்தில் 'கூகிள்' ஆண்டவரிடம் சென்று 'கோலம்' என்று கேட்டேன்.  ஒரு அருமையான இணையதளம் கிடைத்தது.  அதில் உள்ள ஒரு பொங்கல் பானை கோலத்தை ஆராய்ந்து ஓரளவு வரையக் கற்றுக்கொண்டேன்.  போட்டிக்குத் தயாரானேன்!!  இதுதான் நான் போட்டியில் வரைந்த கோலம்.



சரியாக பொங்கலன்றே(சனவரி 15) அந்த விருந்து அமைந்திருந்தது.  தோழிகளெல்லாம் என்னைப் பார்த்தவுடன் கோலப்போட்டியைப் பற்றி ஆர்வமாக கேட்பார்கள் என்று நினத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது!  எல்லாரும் அலவலாவிக்கொண்டும் பொறுமையாக உணவு அருந்திக்கொண்டும் இருந்தார்கள்.  நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த தருவாயில், ஒரு தோழி "கோலப் போட்டியைப் பற்றிய உங்கள் மின் அஞ்சல் கிடைத்தது, ஆனால் எனக்கு நேரமே இருக்கவில்லை ஒரு கோலத்தை கற்றுக்கொண்டுவர" என்றார்.  ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நான் யோசிக்கையில் மற்றொரு தோழி, "என்ன கோலப் போட்டி?  எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லையே?" என்று சொன்னார்.  சுத்தம்!  பேசாமல் சக்கரைப் பொங்கலை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகவேண்டியது தான் என்று முடிவு செய்தேன்.

சாப்பிட்டுவிட்டு கை கழுவுகையில், "என்ன, கோலப் போட்டியைத் தொடங்கலாமா?" என்று ஒரு தோழி கேட்டார்.  நான் சந்தேகமாக, "நீங்கள் தயாராக வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.  அதற்கு அவர், "என்ன இப்படி கேட்டுட்டீங்க?  நான் இதுக்காக எங்க ஊரில் உறவிணர்களை  skype மூலம் தொடர்பு கொண்டேன்.  அவர்கள் எனக்கு காகிதத்தில் கோலம் வரைந்து காமிராவில் காட்டினார்கள்" என்றார்.  எனக்குப் புல்லரித்து!  இப்படிப்பட்ட சின்சியர் சிகாமணிக்களும் இருக்கிறார்களே என்று.  மற்றொரு தோழி, "நானெல்லாம் கற்றுக்கொள்ளவே தேவையில்லை.  எத்தனை புள்ளி கோலம் வேண்டுமானாலும் வரைவேன்" என்றார்.  மற்றொருவர் கலர் பென்சில்கள் சகிதம் "நான் ரெடி" என்றார்.  ஆண்கள் பக்கத்திலிருந்து "ஏன் நாங்களெல்லாம் கோலம் வரையமாட்டோமா?"  என்று ஒரு குரல் எழுந்தது.  "கோலம் போடத்தெரியும் என்றால் நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்" என்றேன் நான்.  அதற்கு அவர் "ஆண்களை குறைவாக எடை போடாதீர்கள்.  சிறு வயதில் என் அக்கா எனக்கு கோலம் போடக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.  10 புள்ளி, 20 புள்ளி, 50 புள்ளி, ஏன் 100 புள்ளி கூட நான் வைப்பேன்" என்றார்.  "அப்படியா?" என்று நான் ஆச்சரியப்பட, அவர் சற்று குரலை தாழ்த்திக்கொண்டு, "ஆனால் அந்தப் புள்ளிகளை சேர்க்கத்தான் தெரியாது" என்று சொல்ல, அவரது தைரியத்தைப் பாராட்டி அவரை போட்டியில் சேர்த்துக்கொள்ள பெண்கள் முடிவு சேய்தார்கள்.

விருந்துக்கு எங்களை அழைத்த, நான் அன்பாக ஆண்ட்டி என்று அழைக்கும் பெண்மணி  தான் போட்டியின் நடுவர் என்று முன்பே முடிவெடுக்கப்பட்டிருந்தது.  பாவம் அவர்.  அன்று முழுவதும் எங்களுக்கு விருந்து சமைத்து ஏற்கனவே களைத்து காணப்பட்டார்.  சாப்பாட்டுக் கடை முடியவே இரவு 10 மணி ஆகிவிட்டது.  இதற்கப்பறம் கோலப் போட்டியா என்று மனதிற்குள் இருந்திருக்கும் அயர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக கோலப் போட்டியை தொடங்கி வைக்க "டைமர்" சகிதம் வந்தார்.  கிட்டத் தட்ட 15 பெண்கள் இருந்தார்கள்.  முன் அறையில் உள்ள ஒரு நீளமான மேஜையில் எங்களையெல்லாம் உட்காரச் சொன்னார்.  அனைவருக்கும் கோலம் வரைய வெள்ளை காகிதம் மற்றும் பென்சில்கள் கொடுத்தார்.  உற்சாக மிகுதியால் ஆளுக்கொரு விதி முறையை ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  "15 நிமிடங்கள் தான் போட்டிக்கான நேரம்" என்று ஒருவர் சொல்ல, "அய்யோ!  நான் புள்ளி வைத்து முடிக்கவே 15 நிமிடம் ஆகிவிடுமே" என்று ஒருவர் பதைபதைக்க, "கொடுத்த நேரத்தில் எத்தனைக் கோலங்கள் வேண்டுமானாலும் போடலாம்" என்று ஒருவர் குழப்ப, "கோலத்தை அழித்து திருத்துவதெல்லாம் கூடாது" என்று ஒருவர் கண்டிக்க...கோலாகலமாக கோலப் போட்டி தொடங்கியது.  புள்ளி வைக்கத் தொடங்கியபோது, சல சலவென்று பின்னால் ஒரே சத்தம்!  பளிச் பளிச் என்று காமிரா ப்ளாஷ் வெளிச்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.  கணவன்மார்கள் அனைவரும் பின்னால் நின்று தம் அருமை மனைவிகளின் கைத்திறனை பதிவு செய்துகொண்டிருந்தார்கள்!!  கூடவே ரன்னிங் கமெண்ட்ரி வேறு!  "வெகு வேகமாக மாலதி 20 புள்ளி 9 வரிசை கோலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்" என்கிற கமெண்ட்ரியை கேட்டதும் எனக்கு பகீரென்றது.  நான் அப்போது தான் புள்ளிகள் வைத்து முடித்திருந்தேன்.  நான் பயின்ற கோலத்தில் நான்கு பொங்கல் பானைகள் இருந்தன.  அதில் மூன்று பானைகளை சரியாகப் போட்டுவிட்டேன்.  நான்காவது பானை போடும்போது ஒரு தவறான கோட்டை இழுத்துவிட்டேன்.  அதான் கோடுகளை அழித்து திருத்தக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே?!  அதனால் எனது கோலம் சற்று சொதப்பலாகி விட்டது.

சரியாக 15 நிமிடங்கள் ஆனதும் டைமர் ஒலிக்க, அனைவரும் கோலம் வரைந்த காகிதத்தில் தத்தம் பெயர்களை எழுதி நடுவரிடம் கொடுத்தார்கள்.  "யாராவது கோலம் சரியா போடலைன்னா வேறு யாருடைய பெயரையாவது எழுதிக் கொடுத்துவிடுங்கள்" என்று ஆண்கள் பக்கத்திலிருந்து அற்வுபூர்வமான யோசனை வந்தது!  நடுவர் ஒவ்வொரு கோலமாக எடுத்து எல்லோருக்கும் காட்டினார்.  ஒரு சிலர் கோலத்தில் புலிகள் போல.  பெரிய சிக்கல் கோலமெல்லாம் போட்டிருந்தார்கள்.  சிலர் சின்ன சின்னதாக நிறைய கோலங்கள் போட்டிருந்தார்கள்.  என்னைப் போலவே சிலர் முடிக்க முடியாமல் பாதியில் விட்டிருந்தார்கள்.  சிலர் புள்ளி வைத்து போடத்தெரியாமல் படமாக வரைந்திருந்தார்கள்.  யாருக்கு பரிசு கிடைக்கப்போகிறது என்று நாங்களெல்லாம் ஆர்வமாக காத்திருந்தோம்.  நடுவர் பங்குபெற்ற அத்தனைப் பெண்களுக்கும் பரிசு கொடுத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

போட்டி முடிந்த பின்னரும் அதைப் பற்றிய குதூகலப் பேச்சும், கிண்டல்களும் தொடர...நான் கண்கள் மூடி அந்த சத்தங்களை உள்வாங்கினேன். சல்லென்று விமானத்தில் நேராக என் அம்மாயி வீட்டுக்குச் சென்று இறங்கி, அடுப்பாங்கரைக்கு ஓடிப்போய் அவர் செய்த சக்கரை பொங்கலைச் சாப்பிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.  கோலம் போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், கோலம் போட்டதே இல்லை என்றும் சொன்ன பெண்களை சுற்றி உட்கார வைத்து கோலம் போட வைத்தது இந்தப் பொங்கல் திருநாளின் சிறப்பாக அமைந்தது.  அதற்காக ஆர்வமாக பங்கெடுத்த அனைத்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும், விருந்து பரிசும் அளித்த எங்கள் அன்பு ஆண்ட்டிக்கும் நன்றிகள் பல!  எல்லாருக்கும் மேல் ஒருவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இத்தனை கூச்சலுக்கும் கலாட்டாவுக்கும் இடையே முழித்துக்கொள்ளாமல் சமர்த்தாகத் தூங்கிக்கொண்டிருந்த எனது ஒரு வயது மகளுக்கு ஒரு பெரிய நன்றி.  அவள் மட்டும் நடுவில் முழித்துவிட்டிருந்தால், ஒரு பொங்கல் பானையுடன் எனது கோலம் நின்றிருக்கும்!!

இந்த வருடப் பொங்கல் தின கொண்டாட்டம் கொடுத்த ஊக்கத்தில், அடுத்த பொங்கல் தினத்திற்கான போட்டியையும் இப்போதே முடிவு செய்துவிட்டேன்.  "Painting the Pongal Pot" என்பதே அந்தப் போட்டியின் பெயர்.  பெயரிலிருந்தே அந்த போட்டி விபரங்கள் ஓரளவு புரியும்படி இருக்கிறதென்று நினைக்கிறேன்.