Monday, October 17, 2011

வாசிங்டன் நகரில் செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகம் - பாகம் ஒன்று

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதற்கு ஒரு உருப்படியான விசயம் கிடைத்தது.

வாசிங்டன் மாநகரம் என்பது  அருங்காட்சியகங்களின் குவியல் என்று அனைவரும் அறிந்ததே.   பல வருடங்களாக வாசிங்டன் டிசி பகுதியில் நான் வசித்தாலும்,  ஒரு அருங்காட்சியகத்தைக்கூட முழுமையாகப் பார்க்கவில்லை.  ஒரு மணி நேரத்திற்குப் பின் சலிப்புத் தட்டி விடுகிறது.  ஆனால் ஒரு நாள் முழுவதும் இருந்தும் நேரமே பற்றவில்லை ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும்.  2007 ஆம் ஆண்டு "Newseum" என்றொரு அருங்காட்சியகம் தொட ங்ககப்பட்டது.  அதாவது ஊடகச் செய்திகளுக்கான பிரத்தியேகமான ஒரு அருங்காட்சியகம்.  இத்தனை ஆண்டுகளாக அதனைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், போய் பார்க்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் தான் கிடைத்தது.  கட்டிட அமைப்பு, காட்சிப் பொருட்களின் வடிவமைப்பு, விவரங்கள், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சித் திரைகளில் சிறப்புப் பேட்டிகள், குறும்படங்கள், என்று பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது இந்த அருங்காட்சியக அனுபவம்.

குறைந்தது 5 மணி நேரங்கள் ஆகும் சாவகாசமாக 6 தளங்களையும் பார்த்து முடிக்க.  பத்திரிக்கை/ஊடகம் போன்ற துறை களில் ஈடுபாடு உடையவர்கள் அங்கேயே இரவு ஓரமாகத் தூங்கிவிடலாம். அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள.  அதில் சிலவற்றை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.

நேரில் காணக் கிடைக்காத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அரிய காட்சிப் பொருட்களை அங்கே கண்டேன்.

1. பெர்லின் சுவற்றின்(Berlin Wall) சில பகுதிகள்:

ஆம்! உண்மையான இடிக்கப்பட்ட பெர்லின் சுவற்றிலிருந்து  சில பகுதிகளைக் கொண்டு வந்து இங்கே காட்சியாக வைத்திருக்கிறார்கள்.  காரணம், செய்தி ஊடகங்களுக்கு பெர்லின் சுவர் கட்டப்பட்ட காலகட்டம் மிக முக்கியமான ஒன்று.  கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் ஊடகங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.  அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நிருபர்கள் பத்திரிகைகளில் எழுத முடிந்தது.  ஜனநாயக மேற்கு ஜெர்மனியில் ஊடகங்களுக்குக் சுதந்திரம் இருந்தது.  யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாத இந்த கொடிய சுவற்றைத் தாண்டி தகவல்கள் கடந்து சென்றதில் செய்தி ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது.  பெர்லினுக்குச் சென்று இந்தச் சுவற்றைப் பார்க்கவா முடியும்?  ஒரு நாட்டை இரண்டு கருத்தியல்கள் கொண்ட இரு பகுதிகளாக 28 வருடங்களாகப் பிரித்து வைத்திருந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவற்றை இப்படி  தொட்டு விடும் தூரத்தில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

2. நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தின் உச்சியில் இருந்த "antena" வின் உடைந்த பகுதி: 


செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் உலக வர்த்தக கோபுரங்களின் மீதான பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதலின் போது உடைந்து விழுந்த இந்த antenna வினால் பல தொலைகாட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புகள் தடைபட்டன.  செய்தித் துறையைச் சேர்ந்த பல நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பயங்கரவாத நிகழ்வைப் பதிவு செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.  மேலும் கோபுரங்களிம் மீது மோதிய ஒரு விமானத்தில் உள்ள சில கருவிகள், பயணிகளின் செல் தொலைபேசிகள் போன்றவற்றையும் காட்சிப் பொருளாகப் பார்த்தபோது மனதிற்குச் சங்கடமாக இருந்தது.  9-11 நிகழ்வைப் பற்றிய ஒரு குறும்படம் ஒரு சின்ன அறையில் ஓடிக்கொண்டிருந்தது.  கோபுரங்கள் இடிந்து விழுவது, பொது மக்கள் பயந்து ஓடுவது, இறந்தவர்களின் உறவிணர் பேட்டி போன்றவை திரையில் ஓடிக்கொண்டிருன்தது.  பார்வையாளர்கள் பக்கமிருந்து ஒன்றிரண்டு விசும்பல் சத்தம் காதில் கேட்டது.

3.  ஒரு குற்றவாளியின் மிரட்டல் கடிதம்:

FBI க்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கிறது.  FBI நிறுவனம் கொடுத்து வைத்த ஒன்று.  அமெரிக்கச் செய்தி ஊடகங்களின் மொத்த ஆதரவும் அதற்கு இருந்தது.  தேசத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க வந்த காவல் தெய்வங்களாக FBI அதிகாரிகளை ஊடகங்கள் கொண்டாடின.  ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பு கோட் சூட், கறுப்புக் கண்ணாடி சகிதம் கம்பீரமாக வந்து, மிகச் சாதுர்யமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் இந்த FBI  அதிகாரிகளின் மீது எனக்கும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  FBI  கையாண்ட பல முக்கியமான வழக்குகளின் செய்திக் குறிப்புகள் இங்கே உள்ளன.  என்னை மிகவும் கவர்ந்த ஒரு காட்சிப்பொருள், ஒரு குற்றவாளி பணம் கேட்டு மிரட்டி எழுதிய ஒரு கடிதம்!!!  கதைகளிலும் திரைப்படங்களிலுமே இதுவரை நான் இப்படிப்பட்ட கடிதங்களை பார்த்திருக்கிறேன்.  ஒரு குற்றவாளி பெண்ணைக் கடத்தி வைத்துக்கொண்டு, தன் சகாக்களை சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லையேன்றால் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவேன் என்று தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு உடல் சில்லிட்டது!!!

அடுத்து நான் பார்த்தது புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்கள் பகுதி.  Eddie Adams என்ற புலிட்சர் விருது பெற்ற ஒரு பத்திரிக்கையாளர், "If it makes you laugh, if it makes you cry, if it rips out your heart , that's a good picture" என்று சொல்லியிருக்கிறார்.  உண்மைதான்!  அங்கிருக்கும் சில புகைப்படங்கள் என் மனதைக் குத்திக் கிழித்தன.  அந்தப் புகப்படங்கள் பற்றி அடுத்தப் பதிவில்.

தொடரும்...