Friday, December 14, 2007

ஒரு சமூக சீர்திருத்தவாதியின் முயற்சிகள் - பெரியார்

இந்தப் பதிவில் எழுதியிருப்பவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. நியூஜெர்சியில் வசிக்கும் என் உறவிணர் மின் அஞ்சல் மூலம் என்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை. அவர் வலைப்பதிவர் அல்ல. தன் கருத்துக்களுக்கு எதிர்வினைகளை அவர் அறிந்துகொள்ள விரும்பியதால் அவருடைய ஆங்கில மின் அஞ்சலை மொழிபெயர்த்து(சிரமப்பட்டு :-)) என் பதிவில் தந்திருக்கிறேன். இனி தொடர்ந்து படியுங்கள்...

ஒரு சமூக சீர்திருத்தவாதியின் வெற்றி, சமூகத்தின் மீதான அவருடைய தாக்கத்தைக் கொண்டும், சமூகம் எந்த அளவு அந்த சீர்திருத்தவாதியின் கனவுகளைப் பிரதிபலிக்கின்றது என்பதன் அடிப்படையிலும் மதிப்பிடப்படுகின்றது. தமிழ் சமுதாயத்தை, பெரியாரின் முயற்சிகளும் கொள்கைளும் எவ்வாறு சீர்திருத்தியிருக்கின்றன என்பதைப் பற்றி சற்று அலசிப்பார்போம்.

மதமும், மூடநம்பிக்கையும்

மற்ற எல்லாவற்றையும் விட மதக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையுமே பெரியார் அதிகமாக எதிர்த்தார். ஆனால், இன்று பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளை ஒரு பார்வை பார்த்தாலே போதும், மூட நம்பிக்கைகள் இன்னும் உயிருடன் தலைவிரித்து ஆடுகின்றன என்று. ஜாதகம், வாஸ்து, விரதம், மதச் சடங்குகள் இவற்றைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இருக்க முடியாது. தமிழர் வீட்டில் திருமணமாக இருந்தாலும் சரி, சாவாக இருந்தாலும் சரி, அந்தந்த சாதி மதச் சடங்குகளோடு கோலாகலமாக நடந்தேறுகிறது.

தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு பெரியாரே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அவரது அரசியல் வாரிசுகளான அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர், கடவுளை மறுத்தார்கள், ஆனால் தாமே கடவுளாக உருவெடுத்தார்கள். இந்த அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்களால் கடவுளாகப் போற்றப்பட்டு பூஜிக்கப்படும்போது, அதுவே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு முரணாக அமைகிறதே?! இந்தத் தலைவர்களைத் தட்டிக் கேட்பவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அரசியல் தலைவர்களுக்காக தீக்குளிப்பது, தற்கொலை செய்துகொள்வது போன்ற வெட்கக்கேடு தமிழ்நாட்டில் தான் அதிகம் நடக்கிறது.

வெற்றுப் புகழ்ச்சி & தனிமனித வழிபாடு (Sycophancy & Personality Cult)

தமிழ் நாட்டில் மட்டும் தான் அரசியல் தலைவர்கள் "புரட்சித் தலைவர்", "கலைஞர்", "பேராசிரியர்", "நாவலர்", "மக்கள் கலைஞர்" போன்ற அலங்காரப் பட்டங்களால் அழைக்கப்படுகிறார்கள். பெரியார் சுயமரியாதை அனைவருக்கும் முக்கியம் என்று எவ்வளவோ வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசியல் உலகத்தில் சுயமரியாதை என்பதனைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. உயர் காவல் அதிகாரிகள், கமிஷனர், DGP போன்றவர்கள் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சித் தொண்டர்களுடன் வரிசையில் நிற்கிறார்கள். ஜனநாயக முறைகள் பின் தள்ளப்பட்டு, தலைவர்களின் குடும்பத்தார் கட்சிப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். கட்சித் தொண்டர்களே இத்தகைய முடிவுகளை ஊக்குவிக்கிறார்கள். கணிமொழி என்றுமே கட்சித் தொண்டராக இருந்ததில்லை. ஆனால் அவரை விட தகுதியானவர்களையும், பத்து வருடங்களாக கட்சியில் தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களையும் புறக்கனித்துவிட்டு, அவருக்கு எம்.பி பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் பங்கு மிக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் தனக்கு எல்லையே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நாளைய முதலமைச்சர் தாம் தான் என்ற நினைப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, பெரியாரின் பகுத்தறிவு/சுயமரியாதைக் கொள்கைகளுக்கு என்னவாயிற்று? அவை எங்கேயாவது ஒரு இடத்திலாவது வேறூன்றியிருக்கிறதா? அப்படி வேறூன்றியிருந்தாலும், எப்படி அவ்வளவு எளிதாக பிடுங்கியெறியப்பட்டது? அதுவும் அவருடைய சீடர்களாலேயே?!

பிராமண எதிர்ப்பு, தீண்டாமை, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம்

தீண்டாமையை நிலைநிறுத்துவதிலும், தலித் அடக்குமுறையிலும் பிராமணர்களின் பங்கும் மனு சாஸ்திரத்தின் பங்கும் மறுக்கமுடியாதது. இதில் முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்துகள் மட்டுமே சாதிப் பிரிவுகளின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மற்ற பிராமணர் அல்லாதவர்கள் தம் சாதியின் சமூக நிலையினால் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றனர். தலித் விடுதலை, தீண்டாமை ஒழித்தல் இவற்றின் வெற்றியை காந்தி, நேரு, அம்பேத்கார் போன்றோறின் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாகவே நாம் பார்க்கவேண்டும். தீண்டாமை முற்றிலும் வேர் அறுக்கப்படவில்லை என்றாலும், அந்த மனிதாபிமானமற்ற செயலைத் தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் எடுத்ததற்கு நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும், முக்கியமாக மஹாத்மாவுக்கு.

ஆனால், அரசியல் தளத்தில், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல் என்பதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றும் தலித்துகள், OBC/MBC என்ற சமூகப் பிரிவினரால் ஒடுக்கப்படுகின்றனர். OBC பிரிவினைச் சேர்ந்த யாதவர்களையும், பட்டேல்களையும் தலித்துகளை அதிகமாக ஒடுக்குபவர்களாக அடையாளம் கண்டு புரட்சி செய்திருக்கிறார் மாயாவதி. இன்றும் தலித்துகள் பல கிராமங்களில் தேர்தலில் போட்டியிட முடியாது, ஏன்? தம்ளர்களில் தண்ணீர் குடிக்கக் கூட முடியாது. இந்தக் கிராமங்களில் OBC/MBC பிரிவினரின் ஆதிக்கமே இருந்து வருகிறது.

பெரியாரின் பிராமண எதிர்ப்பை, ஜெர்மானியர்கள் யூதர்களின் மீது காட்டிய எதிர்ப்பிற்கு (anti-semitic) ஒப்பிடலாம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் தம் சாதியை போற்றிப் பாதுகாக்கவும், தம் சாதிப் பெருமைகளை வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்வதிலும் ஈடுபடும் போது, தன் இனத்தை பாதுகாத்துக்கொள்வதில் பிராமணர்கள் மட்டுமே குறிப்பாக பரிகாசமும், கண்டனமும் செய்யப்படுகிறார்கள். பிற உயர் சாதியினர் தம் எண்ணிக்கையின் அடிப்படையில் சலுகைகள் கேட்கின்றார்கள். சமயச் சார்பற்று செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகளும், மந்திரிகளும் தம் சாதிச் சான்றிதழைக் காட்டி பறைசாற்றுகிறார்கள். ராதிகா செல்வி போன்றவர்கள் சாதியின் அடிப்படையில் காபினெட் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். யாரால்? சாதிப் பிரிவினைக்கு எதிராகப் போராடிய பெரியாரின் சீடர்களால்!

இன்று தமிழ்நாட்டு அரசியலில் சாதிக் கட்சிகள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. தமிழனின் வாழ்க்கையில் எல்லா அம்சத்திலும் சாதி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. திருமணத்திற்கு வரன் கேட்டு வரும் விளம்பரங்களில் நன்கு படித்தவர்கள் கூட, தம் சாதியிலேயே மனமகன்/மனமகள் கேட்கிறார்கள். சில விளம்பரங்களில், சாதி உட்பிரிவு கூட வலியுறுத்தப்படுகிறது.

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், முதலில் பார்ப்பானை அடி" என்று பெரியார் சொல்லியது இன வெறுப்பை உமிழும் சொற்கள். அமெரிக்காவில் இத்தகைய பேச்சுக்கு வெறுப்பைத் தூண்டிவிட்டதற்காக சட்ட ரீதியான கண்டனம் உண்டு. இந்திய சட்டம் இன்னும் கடுமையானது. இப்படி பேசும் ஒரு நபரை "சமூக ஒற்றுமையக் குலைக்கும்" குற்றத்திற்காக கைது செய்யலாம். சிறு சிறு முன்னேற்றங்களுக்கும், சாதிப் பாகுபாடு பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்ச்சிக்கும் பெரியாரைப் பாராட்டலாமே தவிர, அவர் வெற்றி கண்டார் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் தவறு. தமிழ்ச் சமுதாயம் கடந்த கால கட்டங்களை விட இன்று பல மடங்கு சாதிப் பிரிவினால் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இந்த நிலைக்குக் காரணமே, தம்மை பெரியாரின் வழி வந்தவர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளால் தான்.

கலப்புத் திருமணங்கள் இன்றும் கிராமங்களில் அரியதாகத்தான் இருக்கின்றன. அப்படியே கலப்புத் திருமணங்கள் நடந்தாலும், அவற்றால் மிகப் பெரிய சாதி சண்டைகள் ஏற்படுகின்றன. OBC/MBC பிரிவினரைச் சார்ந்த எத்தனைப் பேர் தலித்துகளுடன் கலப்புத் திருமணங்களுக்கு தயாராக இருக்கின்றனர்? தலித்துகளை ஒடுக்கியதற்காக பிராமணர்கள் கொடுங்கோலர்களாக நீண்ட காலமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் 60 ஆண்டுகள் சுதந்திரத்திற்கு பிறகும், தலித் வரலாற்றில் பிராமணர்கள் மட்டும் தான் வில்லன்களா? Outlook பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் பிராமணர் மக்கள் தொகை 1% தான். மீதம் இருக்கும் 99% பேரும், எல்லா பிரச்சினைகளுக்கும் அந்த 1% தான் காரணம் என்று சொன்னால் எப்படி?

பெண் விடுதலை

இதில் வெற்றியும் தோல்வியும் கலந்திருக்கிறது. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு போன்றவைகளைத் தவிர பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த சாதனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இன்றும் இந்தியப் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. மெகா தொடர்கள் பெண்களை மிகத் தவறாக சித்தரிக்கின்றன. இந்த மெகா தொடர்களில், பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் தொலைகாட்சியில்! பெண்கள் அழுமூஞ்சிகளாகவும் வில்லிகளாகவுமே அதிகம் இந்தத் தொடர்களில் தோன்றுகிறார்கள். ஒரு தொடரில், குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு மனைவி தானே பெண் பார்த்து தன் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறாள். இத்தகைய கதைகள் தான் "குடும்ப" தொடர்களாகக் கருதப்படுகின்றன.

"தாலி" அடிமைத்தனத்தின் சின்னம் என்பதற்காக தி.க வினர் செய்துகொள்ளும் தாலி கட்டாத திருமணங்கள் மற்றொரு பொலித்தனம். சிலப்பதிகாரத்தில் இந்தத் தாலியைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தை மட்டும் தமிழின் தலை சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்று போற்றப்படுகிறதே? ஏன் இந்த முரண்பாடு?

ஆண்கள், முக்கியமாக கணவன்மார்கள், பெண்களை அடித்துத் துன்புறுத்துவது இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பெண்களைப் பற்றிய முற்போக்கு முயற்சிகளுக்கோ, ஏன் பெச்சுக்களுக்குக் கூட மதிப்பு கிடையாது. நடிகை குஷ்பூ, திருமணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக்கொண்டால், தகுந்த பாதுகாப்பு முறையைக் கையாள வேண்டும் என்று சொன்னதற்கு எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூறவேன்டும். மு.கருனாநிதியின் மகள் கணிமொழி குஷ்பூவின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்துப் பேசியபோது, பெரியாரின் கொள்கைகளை பெரிதும் மதிக்கும் மு.கருனாநிதி, "எண்ணம் என்பவது ஏப்பம் அல்ல, வெளியிடுவதற்கு" என்று கிண்டல் செய்தார். மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்துகொள்வது சட்டதிற்கு எதிரானது. ஆனால் மு.கருனாநிதி பகிரங்கமாகவே இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். இதுதான் பெரியாரின் வழி வந்தப் பெருமையா?

கவர்ச்சியாக உடையனிந்து தங்களை தவறு செய்யத் தூண்டுவதற்காக தமிழ் சினிமா கதாநாயகர்கள், வழக்கமாக கதாநாயகிகளைத் தான் சாடும் அதே சமையத்தில் காமிரா, அந்த கதாநாயகியின் உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கும்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பெரியார் சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர் திருத்த பெரும் முயற்சிகளை எடுத்தார். சிலவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால் அவருடைய நம்பிக்கைகள் பலவற்றை அவருடைய தொண்டர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் என்றால் அது மிகை அல்ல.

Monday, December 10, 2007

Rain Coat - பொய்களால் பின்னப்பட்ட ஒரு காதல் கதை

அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். சராசரி சினிமாவைத் தாண்டி கதையையும் கருத்தையும் தேடுபவர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பாராட்டுவார்கள். என் மனதைப் பிழிந்த திரைப்படங்களில் இதும் ஒன்று. பல திரைப்படங்கள் மூன்று மணி நேரங்கள் ஓடிய பிறகும் மனதில் பதியாது...ஆனால் இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே நம்மைக் கட்டிப்போடுகிறது...அந்த அடாது பெய்யும் கல்கத்தாவின் மழை, அஜய் தேவ்கனின் வேதனை தோய்ந்த முகம், அந்த ரயில் பயணம், "மதுரா நகரத்து ராஜாவே, நீ ஏன் கோகுலத்துக்குத்தை விட்டுப் போகிறாய்?" என்கிற பாட்டு...இது எல்லாமே அஜய் தேவ்கனின் அந்தப் பயணத்தின் முடிவைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது. பொய்களினூடே ஆங்காங்கே பொதிந்திருக்கும் உண்மைகளைப் பொருக்கி எடுத்து நீங்களே கதையப் புரிந்துகொள்ளுங்கள் என்று நமக்கு ஒரு சுவையான சவாலை அளித்திருக்கிறார் இயக்குனர் ரித்துபர்னோ கோஷ்.

ஆறு வருடங்களுக்கு முன் உயிருக்குயிராக நேசித்து, திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரிந்த இரு காதலர்கள் ஒரு மாலை நேரத்தில் சந்திக்கிக்கும் போது அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் முழு திரைப்படமும்! படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் ஒரே வீட்டின் முன்னறையில் தான் நடக்கின்றன. இரண்டு பேர் ஒரே அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை எப்படி இரண்டு மணி நேரம் பார்ப்பது என்று யோசித்தேன்...ஆனால் அந்த ஒரு அறையில் பேசப்படும் வார்த்தைகளிலிருந்து தான் கதாநாயகன், கதாநாயகி இருவரின் வாழ்க்கை சரித்திரத்தையே நாம் தெரிந்துகொள்கிறோம். உலக அழகி ஐஸ்வர்யாவைத் எப்படித் தேடினாலும் இந்தப் படத்தில் கண்டுபிடிக்கமுடியாது! அவருடைய கவர்ச்சி அத்தனையும் மறைத்து "நீரு" என்கிற கதாப்பாத்திரத்தில் ஒரு புதிய அவதாரமாகத் தெரிகிறார் ஐஸ்வர்யா ராய். தான் வசதியான வாழ்க்கை வாழ்கிறேன் என்று தன் பழைய காதலனை கற்பனைக் கதைகள் சொல்லி நம்பவைக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்புத் திறமை அபாரம்.

மனோஜ் என்கிற வேலையில்லா இளைஞன்(அஜய் தெவ்கன்), நண்பர்களிடம் பண உதவி நாடி தன் கிராமத்திலிருந்து கல்கத்தா வருகிறான். ஒரு மழைகொட்டும் மதிய வேளையில் தன் நண்பனின் ரெயின் கோட்டை அனிந்துகொண்டு, கல்கத்தாவில் கணவனுடன் வசிக்கும் தன் பழைய காதலி நீரூவைப் (ஐஸ்வர்யா ராய்) பார்க்க அவள் வீட்டிற்குச் செல்கிறான். ஆறு வருடங்களுக்கு முன் அவனை மனதாரக் காதலித்து, பின் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை ஒதுக்கிவிட்டு, வசதியான ஒருவனைத் திருமணம் செய்துகொண்டவள் நீரு என்கிற நீரஜா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நீருவும் மனோஜும் மணிக்கனக்காகப் பேசுகிறார்கள். இருவருமே தத்தம் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்காமல், தம் வாழ்க்கையின் சோகமான நிஜங்களை மறைத்து எதுவுமே நடவாதது போல தாம் வசதியாக வாழ்கிறோம் என்பதைக் கான்பிக்க ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். படத்தின் முடிவில், இருவரின் நடிப்பும் ஒரு திடுக்கிடும் முடிவுக்கு வந்து உண்மை வெளிப்படுகிறது. காலம் மாறினாலும் மாறாத அவர்களின் ஆழ்ந்த அன்பும் அழகாய் வெளிப்படும்.

நீரு, தன் கணவன் பெரிய வேலையில் இருக்கிறான், தினமும் ஜப்பான் ஜெர்மனி என்று ஊர் சுற்றிக்கொண்டே இருப்பான், வீட்டில் இரண்டு வேலைகாரர்கள் இருக்கிறார்கள். எனக்கு எந்த வேலையும் இல்லை. நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் என்கிறாள். "நீரு நீ ஏன் நம் கிராமத்துப் பக்கம் வருவதேயில்லை? ஒரு முறை வந்துபோயேன்?" என்று கேட்கும் மனோஜிடம், "அய்யோ நான் எப்படி அங்கே வருவேன்? AC இல்லை, சுத்தமான attached பாத்ரூம் இல்லை, TV கூட இல்லை" என்கிறாள். நடுநடுவே மனோஜின் வேலையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் நீரு கேட்கிறாள். அவனும் தன் பங்கிற்கு, தான் வேலையில்லாமல் சிரமப்படுவதை மறைத்து, தொலைக்காட்சித் தொடர், மற்றும் விளம்பரங்கள் தயாரிக்கும் தொழிலில் இருப்பதாகவும், சொந்த நிறுவனம் வைத்திருப்பதாகவும், வசதியாக இருப்பதாகவும், தன் திருமணத்திற்கும் பெண் பார்த்துவிட்டதாகவும் அவளிடம் சொல்கிறான்.

நீரு மனோஜிற்கு சாப்பாடு வாங்குவதற்காக அவனுடைய ரெயின் கொட்டை அனிந்துகொண்டு வெளியே செல்கிறாள். மழை நிற்கிறது. மனோஜ் நீருவின் வீட்டு ஜன்னல்களைத் திறக்கிறான். இருட்டு வெளியேருகிறது. ஆனால் அதுவரை மறைந்திருந்த உண்மைகள் உள்ளே வருகின்றது! வீட்டின் வெளியே காத்திருக்கும் ஒருவர், "அவசரமாக கழிப்பறையை உபயோகிக்கவேண்டும் எனக்கு. ஒரு நிமிடம் என்னை உள்ளே அனுமதியுங்களேன்" என்று கெஞ்சுகிறார். மனோஜும் அவர் மேல் பரிதாபப்பட்டு வாசல் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கிறான். கழிப்பறையை உபயோகித்தபின் அவர் வெளியே சென்றுவிடுவார் என்று நினைத்த மனோஜ், அவர் நிதானமாக நாற்காலியில் உட்கார்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்து திகைத்து "உங்கள் வேலை தான் முடிந்து விட்டதே? வெளியே செல்லுங்கள்" என்கிறான். "நான் எதற்கு வெளியே செல்ல வேண்டும்? நான் தான் இந்த வீட்டின் சொந்தக்காரன்" என்கிறார் அவர். மனோஜ் அதிர்ச்சி அடைகிறான். படிப்படியாக பல உண்மைகள் கட்டவிழ்கின்றன. நீருவின் கணவன் ஒரு ஏமாற்றுக்காரன். பல பேரிடம் கடன் வாங்கி திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறான். அந்த வீட்டுக்காரருக்கு பல மாதங்களாக வாடகையும் தரவில்லை. அவனுக்கு உத்தியோகமும் கிடையாது. கடன்காரர்களுக்குப் பயந்து இரவில் மட்டுமே அவன் வீட்டுக்கு வருகிறான். அதனாலேயே நீரு விட்டுக்கதவையும் ஜன்னலையும் அடைத்துக்கொண்டு வீட்டினுள்ளேயே தன் நாட்களைக் கழிக்கிறாள். அதுவரை அந்த வீட்டின் முன் அறையிலே உட்கார்ந்திருந்த மனோஜ் எழுந்து வீட்டின் உள் அறைகளை திறந்து பார்க்கிறான். பாழடந்த அறைகள், பழைய பொருட்கள்...சுத்தமான attached பாத்ரூம் இல்லாததால் தன் சொந்த ஊருக்கே போகத் தயங்குவதாகச் சொன்ன நீருவின் பாத்ரூம், சிறியதாக, பழுதடைந்ததாக பார்க்கவே சகிக்காமல் இருக்கிறது! நீரு எதுவுமே தன்னிடம் சொல்லவில்லையே என்று கலங்கும் மனோஜிடம், "அவள் எப்படிச் சொல்லுவாள்? சொந்த ஊரில் இருந்து அவளை பார்க்க வந்திருக்கும் உன் முன்னே தன் அவமானமான வாழ்க்கையை எப்படி காட்டிக்கொள்வாள்?" என்று சொல்கிறார் வீட்டுக்காரர். தான் நீருவின் கணவன் மேல் கேஸ் போட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு தினங்களில் கோர்ட் வலுக்கட்டாயமாக இந்த வீட்டிலிருந்து அவர்களை வெளியேற்றிவிடும் என்றும் சொல்கிறார் அவர். மனோஜ் சட்டென்று தான் அன்று காலை நண்பர்களிடமிருந்து தான் தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்கிய பணத்திலிருந்து நான்கு மாதத்திற்கான வாடகைப் பணத்தை வீட்டுக்காரரிடம் கொடுத்து, நான்கு மாதத்திற்கு அவர்களை இந்த வீட்டில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறான். வீட்டுக்காரரும் சம்மதித்து வெளியே செல்கிறார். மனோஜ் நீருவுக்கு ஒரு கடிதம் எழுதி, நான்கு மாத வாடகை கட்டியதற்கான ரசீதையும் சேர்த்து படுக்கைக்குக் கீழே வைக்கிறான்.

கடைக்குச் சென்ற நீரு வீட்டுக்குத் திரும்புகிறாள். மனோஜ் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் விடைபெறுகிறான். இரவு ஒரு நண்பனின் வீட்டில் தங்கியிருக்கிறான். மனோஜின் ரெயின் கோட்டை வாங்கிக்கொண்டு போகும் நண்பனின் மனைவி, திரும்பவும் வந்து "ரெயின் கோட் பாக்கெட்டில் இந்தப் பொட்டலம் இருந்தது" என்று அவனிடம் அந்தப் பொட்டலத்தை கொடுக்கிறாள். பொட்டலத்தைப் பிரிக்கிறான் மனோஜ். அதில் சில நகைகளும், ஒரு கடிதமும் இருக்கிறது. நீரு எழுதிய அந்தக் கடிதத்தில், "மனோஜ், இன்று நீ மட்டும் இந்த ரெயின் கோட்டை அனிந்து கொண்டு வரவில்லையென்றால், உன் நண்பர்களிடம் கடன் கேட்டு நீ எழுதியிருந்த அந்தக் கடிதத்தை நான் படித்திருக்கமாட்டேன். உன் உண்மையான நிலைமை எனக்குத் தெரிந்திருக்காது. என் கணவர் ஊரில் இருந்திருந்தால், அவரே உன் தொழிலுக்கு வேண்டிய மொத்தப் பணத்தையும் கொடுத்திருப்பார். என்னுடைய பணப்பெட்டியின் சாவியையும் அவர் தவறுதலாக எடுத்துச்சென்றுவிட்டார். அதனால் என்னுடைய நகைகள் சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். உன் தொழில் தொடங்குவதற்காக அவற்றை உபயோகித்துக்கொள். உன் தொழிலிலாவது உன்னுடைய கூட்டாளியாக நான் இருக்கிறேனே" என்று எழுதியிருக்கிறாள்! திரைப்படம் இத்துடன் முடிகிறது.

Friday, November 30, 2007

வேண்டும் ஒரு கலாசார அமைச்சர்!!

அமைச்சர் அன்புமணியின் கோரிக்கைக்கு இணங்கி நடிகர் விஜய் "நான் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்" என்று உறுதியளித்திருக்கிறார்! நல்ல விசயம் தான்.

சில நாட்களுக்கு முன் அமைச்சர் அன்புமணியின் இந்த கோரிக்கையை சன் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன். அமைச்சர் பேசுகையில் "விஜய்ன்னு ஒருத்தர் இருக்கார்...அவர் என்ன நினைச்சிகிட்டு இருக்கார்ன்னு தெரியலை..." என்று சற்று நக்கலாகத் தொடங்கினார். நான் கூட என் கணவரிடம் சொன்னேன், இப்படியெல்லாம் நக்கலாகப் பேசினால் எந்த நடிகரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அலட்சியாகப்படுத்திவிடுவார்கள் என்று. ஆனால் என்ன ஆச்சரியம், விஜய் இதனை நல்ல விதத்தில் எடுத்துக்கொண்டு கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறார். ரஜினியும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முன்பே உறுதியளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னால் நடிகை த்ரிஷா கூட, சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் குழந்தைகள் வேலை செய்வதால், தான் இனி தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போவதில்லை என்று சொன்னார். முன்பு முன்னனி நடிகையாக இருந்த அமலா தன்னை Blue Cross Blue Shield அமைப்பில் இனைத்துக்கொண்டிருக்கிறார். இளைய தலைமுறையினரிடத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா நடிகர் நடிகைகளெல்லாம் தாமே முன் வந்து சமூக நலனுக்காக சிந்திப்பது உண்மையிலேயெ மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு ஒரு ஆசை. சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைச்சர் அன்புமணி முன்னனி நடிகர்களுக்கு கோரிக்கைகள் வைக்கிறார். கலாசாரத்தைப் பாதுகாக்க எந்த அமைச்சராவது ஆபாசக் காட்சிகளில் நடிக்கக்கூடாதென்று நடிகைகளுக்கு கோரிக்கை வைப்பார்களா?! "கலாசாரத்தைப் பாதுகாப்பது" எந்த அமைச்சகத்தின் பொறுப்பு? :-)

Wednesday, November 28, 2007

திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம்

சமீபத்தில் போர்/யுத்தம் சம்பந்தப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அருமையான திரைப்படங்கள் அவை. ஆங்கிலத்தில் நிறைய போர் திரைப்படங்கள் இருக்கின்றன. உலகப்போரில் இருந்துத் தொடங்கி, பின் வியட்னாம் போர் வரை ஏராளமானப் படங்கள்! இப்போதும் ஈராக்கில் நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் பற்றி சமீபத்தில் தான் திரைப்படங்கள் வரத்தொடங்கியுள்ளது. போரினை பின் புலமாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக ஏராளமான கதை அமைப்புகள் குவிந்து கிடக்கின்றன. போரின் பயங்கரம், துயரம், தியாகம், போர் முகாம்களில் நடக்கும் நிகழ்வுகள், எதிரிகளிடமிருந்து தப்பித்தல், சமூகத்தில் போரின் தாக்கம், வீர தீர செயல்கள் - இப்படி சொல்லிகொண்டே போகலாம். காதலும் நகைச்சுவையும் கூட ஆங்காங்கே சில திரைப்படங்களில் கலந்திருக்கும். சில போர்த் திரைப்படங்கள் மக்களிடையே தேசபக்தியைப் பரப்புவதற்காகவே எடுக்கப்பட்டதுபோல் இருக்கும். ஹாலிவுட்டுக்கும்(hollywood) பெண்டகனுக்கும்(pentagon) இது ஒரு ரகசிய உடன்பாடாக இருக்குமோ என்றுகூட ஒரு நண்பர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார்!

இந்தியாவில் கூட இந்தியா-பாகிஸ்தான் போர், கார்கில் போர் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இதையெல்லாம் வைத்து தமிழ் திரைப்படம் எடுக்க யாருக்கும் தோன்றவில்லையே? சிவாஜி, எம்.ஜி.யார் காலத்தில் சரித்திரப் போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலும் பார்த்தீர்களென்றால் கதாநாயகன் ஒருவனே ஒரு நாட்டைக் காப்பாற்றுவது, இளவரசியைக் கைப்பிடிப்பது போன்ற மையக்கருத்துக்கள் தான் இருக்கும். நிகழ்காலத்தில், நாம் வாழும் காலத்தில் நடக்கும் போர் நிகழ்வுகளைப் பற்றி தமிழில் திரைப்படம் வந்ததில்லை.

காதல், ஹீரோயிசம், ஆபாசம் இவையெல்லாம் சற்றும் இல்லாத கலப்படமில்லாத அக்மார்க் போர் திரைப்படம் ஒன்று பார்க்கவேண்டுமென்றால், "Tora Tora Tora" என்ற ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்க்கலாம். "Tora" என்றால் ஜப்பானிய மொழியில் "தாக்கு"(attack) என்று அர்த்தம். பேர்ல் ஹார்பரில்(Pearl Harbor) உள்ள அமெரிக்கக் கடற்படையின் மீது எதிர்பாராதவிதமாக ஜப்பானியர்கள் விமானத் தாக்குதல் நடத்தி, தூங்கிக்கொண்டிருந்த ஒரு மிருகத்தை உசுப்பி விட்டு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவை தள்ளிவிட்ட அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை மிகத் திறமையாக காட்சியமைத்திருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படமா என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஜப்பானிய விமானங்கள் பறந்து பறந்து குண்டு போடும் காட்கள் அதி அற்புதம்! இந்தப் படம் வெளிவந்த காலத்தில், கணிணியைக் கொண்டு கிராபிக்ஸ் சாகசங்கள் செய்யும் வசதிகள் எல்லாம் கிடையாது. படத்தில் வரும் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் எல்லாமே நிஜமானவை! இந்தத் தாக்குதலின் போது அமெரிக்கர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறுகளை மூடி மறைக்காமல் காட்டியது பாராட்டுக்குறியது. ஒரு போர் சூழலின் மத்தியிலேயே நம்மை கொண்டு செல்லும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் இது.

"Home of the Brave" என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். "Home of the Brave" என்கிற வார்த்தைகள் அமெரிக்க தேசிய கீதத்தில் இடம் பெறுகின்ற வார்த்தைகள் என்று ஒர் நண்பர் சொல்லி தெரிந்துகொண்டேன். இது ஒரு முழுமையான போர்த் திரைப்படம் அல்ல, ஆனால் ஈராக்கில் சில காலம் இருந்துவிட்டு ஊர் திரும்பும் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலரின் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. போரில் நண்பர்களை, உடல் உறுப்புகளை, மன நிம்மதியை இழந்த இவர்களுக்கு, யதார்த்த குடும்ப வாழ்க்கையில் தங்களைப் பொறுத்திக்கொள்வது சிரமமாய் இருக்கிறது. குண்டு வெடிப்பில் ஒரு கையை இழந்த ஒரு இளம் விராங்கணைக்கு, எந்தக் கவலையுமில்லாமல் SUV வாகனங்களை ஓட்டிக்கொண்டு வந்து StarBucks கடையில் காப்பி குடிக்கும் பொறுப்பற்றவர்களை கண்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஈராக் ராணுவ முகாமில் மருத்துவராக இருந்த ஒருவர், தன்னால் காப்பாற்ற முடியாமல் இறந்து போனவர்களை மறக்கமுடியாமல் குடிக்கத் தொடங்கிவிடுகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவருடைய மனைவி, ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து "போராடியது நீ மட்டும் தானா? நீ இங்கே இல்லாத போது குழந்தைகளை வளர்க்க, வீட்டைப் பார்த்துக்கொள்ள, பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்று தினம் தினம் நானும் தான் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால் உன்னைப் போல் குடிக்காமல், நீ உயிருடன் திரும்பி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்" என்று சீறுவது அருமை! தன் கண்ணெதிரே எதிரியின் துப்பாக்கிக்கு பலியான தன் உயிர் நண்பனின் நினைவிலிருந்து மீள முடியாத மற்றொரு ராணுவ வீரன், எங்கெங்கோ வேலைத் தேடி, கடைசியில் தன்னை எங்குமே பொறுத்திக்கொள்ள இயலமால் ராணுவத்திற்கே திரும்பிவிடுகிறான். மிகவும் உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.

நாடுகளுக்கிடையே நடக்கும் யுத்தம் மட்டுமன்றி, இரு இனங்களுக்கிடையேயும் யுத்தங்கள் நடக்கின்றன. "Hotel Rwanda" என்கிறத் திரைப்படம் ரவாண்டாவில் உள்ள டுட்சி இனத்தினருக்கும் ஹுட்டு இனத்தினருக்கும் இடையே நடக்கும் இனக்கலவரத்தைப் பற்றியது. அதே போல் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையேயான இனக்கலவரத்தைப் பற்றி பல நல்ல திரைப்படங்கள் இருக்கின்றன - "Missisippi Burning", "In The Heat Of The Night". இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைப் பற்றியும் ஆங்கிலத் திரைப்படங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. "ஆணிவேர்"(குண்டு வெடித்தவுடன், எல்லாரும் அந்த இடத்தைவிட்டுத் தப்பித்து வேறு திசையில் ஓடும் போது, அந்த இளைஞன் மட்டும் குண்டு வெடித்த அந்த திசையை நோக்கி ஓடுகிறான் - அங்கே காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக! என்ன ஒரு உணர்வுபூர்வமான சித்தரிப்பு!), "காற்றுக்கென்ன வேலி" போன்ற தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த இனக்கலவரத்தை ஆங்கில இயக்குனர்கள் திரைப்படமாக்கினால் சர்வதேச அளவில் வெளிச்சம் கிடைக்குமென்று தோன்றுகிறது.

ஆனால் ஈராக் கலவரம் பற்றிய திரைப்படங்களை பெரும்பாலான அமெரிக்க மக்கள் விரும்பிப் பார்ப்பதில்லை என்றொரு கருத்து இருக்கிறது. உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் பற்றிய திரைப்படங்கள் வெகுவாக வரவேற்கப்பட்டன, ஏனென்றால் அந்தத் திரைப்படங்களெல்லாம் போர் முடிந்து பல ஆண்டுகள் சென்றபின் எடுக்கப்பட்டன. ஆனால் ஈராக் பற்றிய திரைப்படங்கள் தற்போது தினம் செய்திகளில் படிக்கும், பார்க்கும் பயங்கரங்களை காட்சிகளாகக் கொண்டிருப்பதால், மக்கள் அவற்றைப் பார்க்கத் தயங்குவது புரிந்துகொள்ள முடிகிறது.

"A Bridge Too Far", "Behind Enemy Lines", "Rules of Engagement", "Black Hawk Down", "Courage Under Fire" - இவையெல்லாம் நான் பார்த்து ரசித்த அருமையான போர் திரைப்படங்கள்.

ஹூம்ம்ம்ம்...இப்படிப்பட்ட நல்லத் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்? 'பஞ்ச்' வசனங்கள், காதல் லீலைகள், அறுவாள் சண்டை...இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமா வரமாட்டேங்குதே?!

Tuesday, November 13, 2007

ஒரு பொம்மையின் கதை

Image Hosting by Picoodle.com

பார்பி(Barbie) என்கிற பொம்மையைப் பற்றி எல்லாரும் கேள்விபட்டிருப்பீர்கள். சாதாரண பொம்மைகளுக்கும் பார்பிக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. பொதுவாக சிறுமிகள் வைத்து விளையாடும் பொம்மைகள் ஒரு சிறு குழந்தை வடிவத்தில் இருக்கும். அதனை தூக்கிவைத்து, அரவணைத்து, குளிக்க வைத்து, சோறூட்டி அம்மா விளையாட்டு விளையாடுவார்கள் சிறுமிகள். ஆனால் 'பார்பி' என்கிற பொம்மை ஒரு அழகிய பதின்ம வயது இளம் பெண். தங்க நிறக் கூந்தல், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்கள், வாழைத்தண்டு போன்ற கால்கள், கவர்ச்சியான மெல்லிய உடல் - ஒரு இளம் அமெரிக்கப் பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவாளோ அப்படியே இருக்கும் ஒரு பொம்மை. அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பா, ரஷ்யா, இந்தியா போன்ற பல நாடுகளில் அந்தந்த கலாசாரத்திற்கேற்ப மாறுபட்ட உடையலங்காரங்களுடன் வலம் வந்தாள் இந்த பார்பி! இந்தியாவில் புடவையும் சுரிதாரும் அனிந்த பார்பியை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அழகான பொம்மையை யாராவது வெறுக்கமுடியுமா?

முடியும். பெண்களை ஒரு அழகு பிம்பமாக விளம்பரப்படுத்தும் ஒரு கலாசாரத்தின் பிரதிநிதியான பார்பி பொம்மையை பெண்ணியவாதிகள் வெறுத்தார்கள். மேலும், 'அழகு' என்பதற்கு தவறான அர்தத்தை தம் குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்பாத தாய்மார்கள் பார்பியை வெறுத்தார்கள். பார்பியுடன் வரும் அவளுடைய கார், வீடு, அலங்காரப் பொருள்கள் எல்லாமே ஒரு சொகுசு வாழ்க்கையையும் பணக்காரத் தன்மையையும் மட்டுமே வெளிப்படுத்தின. பார்பி நினைத்தபடியெல்லாம் வாழ்ந்தாள். மருத்துவராக, விமானப் பனிப்பெண்ணாக, முதலாளியாக, நடிகையாக, வழக்கறிஞ்சராக, இளவரசியாக! அவளுக்கு என்றுமே வயதாகாது, தலை நரைக்காது, முகத்தில் சுறுக்கம் விழாது, உடல் பருக்காது! இப்படிபட்ட பார்பியைப் பார்த்து வளரும் குழந்தைகளின் மனதில் தவறான ஆசைகளும் ஏக்கங்களும் விதைக்கப்படுவது இயற்கைதானே? யதார்த்த வாழ்க்கையில் அன்றாடம் போராட்டங்களிடையே வாழ்பவர்களுக்கு, பார்பியின் சொகுசு தோற்றமும் வாழ்க்கை முறையும் எட்டிப்பிடிக்க முடியாத ஒரு கனவாக இருந்தது. எந்த ஒரு கொள்கையும், சமூக நல நோக்கும் இல்லாத, பொறுப்பற்ற ஒரு தவறான எடுத்துக்காட்டாக விளங்கிய பார்பி பொம்மையை தம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க மறுத்தார்கள் பல பெற்றோர்கள்.

எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்த பார்பி, அதிகப்படியான எதிர்ப்பை சந்தித்தது மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில். ஈரானில் பார்பி பிரவேசித்தபோது, அது ஈரானிய கலாசாரத்திற்கு எதிரே பெண்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் என்று அஞ்சினார்கள் பலர். அமெரிக்க ஏவுகணைகளை விட பார்பி பொம்மைகள் ஆபத்தானவை என்று அங்கே பேசப்பட்டது!!!

Image Hosting by Picoodle.com

இந்தியாவிலும் பார்பிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புதான்! 'தீவாளி பார்பி' என்று சென்ற வருடம் வெளிவந்த பார்பி, புடவை, நகை, பொட்டு அணிந்து இந்தியப் பெண்ணாக காட்சியளித்தாலும், இந்தியப் பெற்றோர்கள் தயங்கினார்கள். "உயரமான, ஒல்லியான, இந்தியப் பெண்களின் நிறத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத வெள்ளைத் தோல் உடைய, மேற்கத்திய சொகுசு வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு பெண் பொம்மையின் பின்னால் எங்கள் குழந்தைகள் ஓடவேண்டுமென்றால், நாங்கள் அவர்களுக்கு உலக அழகி ஐஷ்வர்யா ராயையே காட்டுவோமே?! அவராவது உருப்படியான காரியங்கள் சிலவற்றைச் செய்கிறார்!" என்று அங்கலாய்க்கிறார்கள் இந்தியப் பெண்ணியவாதிகள்! மேலும், பார்பியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அவளுடைய ஆண் தோழன் 'கென்'(Ken) என்கிற ஆண் பொம்மை இந்தியாவில் விற்பனை ஆகவேயில்லை!

இன்றும் பார்பி பொம்மைகள் விற்பனையில் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் சில வருடங்களுக்கு முன் இருந்த பார்பி ஜூரம் என்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு சாதாரண பொம்மைக்குப் பின் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. இன்று விற்பனையில் இருக்கும் எந்த ஒரு பொம்மையும் எல்லாவித குடும்ப மற்றும் கலாசார அம்சங்களையும் அரவணைக்கமுடியாது என்பது உண்மையாக இருந்தாலும், அறிவுபூர்வமாகச் சிந்திக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் பொம்மைகளே உலக மார்கெட்டில் விற்கப்படவேண்டும் என்று ஒரு விதி முறையோ சட்டமோ இருந்தால் நன்றாக இருக்கும்.

Thursday, November 08, 2007

பட்டாசு இல்லாத தீபாவளி சாத்தியமா?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி கொண்டாடுவதை கைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அமெரிக்காவுக்கு வந்த புதிதில் தீபாவளி கொண்டாட்டத்தை விட்டுவிடக்கூடாதென்று மல்லு கட்டிக்கொண்டு ஒரு இனிப்பும் ஒரு காரமுமாவது செய்து, நண்பர்களையெல்லாம் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்ததுண்டு. சில வருடங்களுக்குப் பின் இது அலுத்துவிட்டது. நல்ல சாப்பாடு, நண்பர்களைச் சந்தித்தல் - இதைத் தான் பல முறை பல வார இறுதிகளில் செய்கிறோமே? தீபாவளி அன்றும் இதையே செய்வது அர்த்தமற்றதாகத் தெரிந்தது. எனவே தீபாவளிக் கொண்டாட்டம், வாழ்த்துத் தெரிவிப்பதுடன் நின்றுபோய்விட்டது.

ஆனால், அம்மா அப்பாவோடு சிதம்பரத்தில் இருந்த காலங்களில் பழைய தீபாவளி கொண்டாட்டங்கள் நினைவில் அழியாமல் இருக்கின்றன. சிறு வயதிலிருந்தே, தீபாவளி ஒரு பயம் கலந்த திகிலான பண்டிகையாகத் தான் இருந்தது எனக்கு. பாட்டாசு வெடிச் சத்தம் கேட்டால் தூக்கிவாரிப்போடும். காதைப் பொத்தியபடி தான் தீபாவளியன்று முழுவதும் இருப்பேன். வெங்காய வெடி, டேப் வெடி போன்ற சிறிய வெடிகளை ஓரளவு பயமில்லாமல் வெடிப்பேன். லஷ்மி வெடி, யாணை வெடி என்று பெரிய பெரிய பட்டாசுகளை வெடிக்கும் என் அண்ணன் பிள்ளைகள் என்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்!!! மத்தாப்புக் கொளுத்தினால் கூட, எங்கே அது கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்து பாதி எரியும் போதே தூக்கிப் போட்டுவிடுவேன். எங்கள் வீட்டில் அப்போது ஒரு பொமரேனியன் நாய் வளர்த்தோம். அதுக்கும் வெடிச் சத்தம் ஆகாது. தீபாவளியன்று கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கினால், இரண்டு நாட்கள் சென்று தான் அது வெளியே வரும். கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் காதைப் பொத்திக்கொண்டு வீட்டினுள் எங்காவது உட்கார்ந்திருப்பேன். தீபாவளியின் போது மழைக் காலம் என்பதால், பட்டாசுகள் நமத்துப் போய்விடும். அதைத் தவிர்ப்பதற்காக, எல்லா பட்டாசுகளையும் சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவேண்டுமென்று, அவைகளை அடுப்பின் அருகில் அடுக்கி வைத்திருப்பான் அண்ணன் மகன். எங்கே அவை சூடாகி வெடித்துவிடுமோ என்று வேற பயமாக இருக்கும்!

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே அண்ணன்கள் குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு வந்துவிடுவார்கள். அக்கா அவளுடைய திருமணத்திற்குப் பிறகு எந்த தீபாவளிக்கும் எங்களுடன் இருந்ததாக நினைவில்லை. நான் எப்போது புது உடை வாங்கினாலும், அதை உடனே போட்டுப் பார்த்துவிடுவேன். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், என் தீபாவளி புத்தாடையை மட்டும் உடனே போடவே முடியாது. சின்ன அண்ணி அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் தீபாவளி அன்று காலையில் அந்த உடைகளை சாமியிடம் வைத்து கும்பிட்டு, அதில் குங்குமம் தடவிய பின் தான் அணியவேண்டும் என்பார். அதுவரை ஆசையுடன் காத்திருப்பேன் நான்!

சமையலறையில் நீண்ட நேரம் அம்மாவால் நிற்கமுடியாது என்பதால், தீபாவளிக்கு முதல் நாள் ஸ்டவ் அடுப்பை எடுத்து வெளி வெராண்டாவில் கீழே வைத்துக்கொண்டு, தரையில் ஒரு பலகையில் உட்கார்ந்து பலகாரம் செய்யத் தொடங்குவார்கள். அதிரசம், பாதுஷா, லட்டு, அச்சு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, கார சோமாசி என்று விடிய விடிய பலகாரம் உருவாகிக்கொண்டே இருக்கும். நாங்களெல்லாம் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்துக்கொண்டு பலகாரத்தை ருசி பார்த்துக்கொண்டும் அரைட்டையடித்துக்கொண்டும் இருப்போம். அப்பறம் ஒவ்வொரு பலகாரத்திலும் இரண்டு இரண்டாக எடுத்து பாக்கெட் போட்டு அடுக்கி வைப்போம். வீட்டில் வேலை செய்பவர்கள், அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் என்று ஒவ்வொருவராக வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் பலகாரப் பாக்கெட்டும் பணமும் வைத்துக்கொடுப்பார் அப்பா. எலக்ட்ரீஷியன், டெக்னீஷியன், போஸ்ட் மேன் என்று நாங்கள் மாதக்கணக்கில் பார்க்காதவர்கள் கூட வந்து நிற்பார்கள். அப்பா புகைப்படப் பிரியர். புத்தாடையில் எல்லாரையும் பல இடங்களில் வைத்து புகைப்படம் நிறைய எடுப்பார். இதெல்லாம் நடக்கும் போது பிண்ணனியில் பட்டாசுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

பட்டாசுச் சத்தங்கள் சற்று ஓய்ந்த மாலை நேரம் தான் எனக்குப் பிடித்த நேரம். அப்போது தான் தீபாவளி 'மூட்' வரும் எனக்கு. பலகாரப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அக்கம்பக்கத்திலிருக்கும் வீடுகளுக்குப் போய் எங்கள் வீட்டுப் பலகாரங்களை அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் வீட்டுப் பலகாரங்களை எங்களுக்குக் கொடுப்பார்கள். தெருவில் நடந்து போகும் போது, மற்ற வீடுகளின் வாசலில் பட்டாசு வெடித்துக்கொண்டிருப்ப்பார்கள். எங்கே என் மேல் வெடி விழுந்துவிடுமோ என்று கவனமாக ஒதுங்கி ஒதுங்கி நடந்துச் செல்வேன். "பண்டமாற்றம்" முடிந்து வீடு வருகையில் இருட்டிவிட்டிருக்கும். இரவு உணவிற்குப் பிறகு எல்லாரும் வீட்டு வாசலில் வந்து அமர்வோம். அண்ணன்களும், பிள்ளைகளும் மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் என்று கொளுத்தித் தள்ளுவார்கள். பார்க்க ஒரே ஒளிமயமாக ஜகஜோதியாக இருக்கும். தீபாவளி முடிந்து இரண்டொரு நாட்களில் அண்ணன்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். வீடு வெறிச்சென்று இருக்கும். மீண்டும் பொங்கலுக்கு அவர்கள் வருவார்கள் என்று ஆசையாகக் காத்திருப்போம்.

இன்று அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்கள், பிள்ளைகள், அம்மா செய்யும் பலகாரங்கள், புது உடைகள் - இவற்றையெல்லாம் ரொம்ப மிஸ் பன்னுகிறேன். ஆனால், பட்டாசுகளும் மத்தாப்புகளும் என்றுமே எனக்கு அபிமானமாக இருந்தது இல்லை. ஒரு சின்ன பட்டாசுச் சத்தத்திற்கே பயந்தவள் நான். ஆனால் உலகத்தில் போர் நடக்கும் எத்தனை நாடுகளில் வெடிச் சத்தத்தினூடே மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்?! மத்தாப்பு என் கையைச் சுட்டு விடுமோ என்று பயந்திருக்கிறேன், ஆனால் எத்தனை வீடுகள், எத்தனை உயிர்கள் தீயில் எரிந்து சாம்பலாகின்றன? இலங்கையில், ஈராக்கில்...ஏன் அமெரிக்காவில் கூட சமீபத்தில் தென் கலிபோர்னியா தீ விபத்தில் எத்தனைப் பேர் வீடு இழந்திருக்கிறார்கள்? கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத இழப்புகள் அவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் பிள்ளைகளுக்கு "வெடி", "கொளுத்து", "பாம்(bomb)", "ராக்கெட்" போன்ற வார்த்தைகளை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டுமா? தீபாவளியில் நல்ல விசயங்களான, தீபங்கள் வைத்து அலங்கரித்தல், இனிப்புகளைப் பகிரிந்துகொள்ளுதல், புத்தாடை அணிதல் போன்றவற்றை மட்டும் பின்பற்றி, இந்த வெடி வெடிக்கும் விசயத்தை மட்டும் விட்டுவிட்டால் தான் என்ன?

Tuesday, November 06, 2007

பென்சில்வேனியா பயணக் குறிப்பு

சென்ற மாதம் என் அக்காவின் மகளைப் பார்க்க அவள் படிக்கும் U Penn (University of Pennsylvania) என்று அழைக்கப்படும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த நான், திரும்பி வரும்போது பல சுவையான சிறப்புச் செய்திகளை சேகரித்து வந்தேன்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகமும், Harvard, Yale, Columbia, Cornel போன்ற பல்கலைக்கழகங்களைப் போலவே பெருமைமிக்க Ivy League அமைப்பைச் சேர்ந்தது. இங்கே அக்காவின் மகளுக்கு இடம் கிடைத்தபோது மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம்! பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப்பார்த்தேன். எல்லாமே புராண காலத்து கட்டிடங்கள். அக்கா மகள் படிக்கும் Moore School of Engineering கட்டிடம் பாடாவாதியாக இருந்தது. என்னடா இது, Ivy League என்று சொல்லுகிறார்கள், ஆனால் நம்ம அண்ணாமலைப் பல்கலைக்கழகமே இதைவிட பிரமாதமா இருக்குமே என்று யோசித்துக்கொண்டே மேலும் அங்கே உலாத்தியபோது...

அந்த வரலாற்றுப் பெட்டகத்தைப் பார்த்தேன்!

இன்று நம்மால் செல் பேசி, காமிரா, கணிணி போன்ற மின் சாதனங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. இப்படிப்பட்ட சொகுசான வாழ்க்கைக்கு மூல காரணமான ஒரு 'தெய்வம்' பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் Moore பொறியியல் கல்லூரி கட்டிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது! அது தான் ENIAC என்று அழைக்கப்படும், இந்த உலகத்தை நவீன மின் யுகத்திற்கு அறிமுகப்படுத்திய முதல் கணிணி!
Image Hosting by Picoodle.com
ஒரு கண்ணாடி அறையில் காட்சிப் பொருளாக வைத்திருந்த இந்த 60 வயது கணிணியைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்று போட்டேன்! அதன் தோற்றத்தைப் பார்த்துக் குழம்பிப்போனேன்...கணிணி என்கிறார்கள், ஆனால் மானிட்டர் இல்லை, கீ போர்ட் இல்லை, மெளஸ் இல்லை! மாறாக, நூற்றுக் கணக்கான பொத்தான்களுடனும், பல்புகளுடனும், ஒரு ராட்சத switch board போல இருந்தது. அமெரிக்க ராணுவத்திற்காக 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் உபயோகப்படுத்துவதற்காக பென்சில்வேனியா Electrical Engineering துறையைச் சேர்ந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்டதாம் இந்த ENIAC. அங்கே இருந்தது ENIAC இன் சில பகுதிகள் தானாம்! மற்றப் பகுதிகள், வாசிங்டன், கலிபோர்னியா போன்ற பிற இடங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறதாம்.

அமெரிக்காவில் கணிணித்துறையில் குப்பைக்கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு, ENIAC சோறு போடும் தெய்வமாகத் தெரிந்தது!!!

அதே பிரமிப்புடன் Moore கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது எதிரே இருந்த பூங்காவில் ஒரு பெரிய உருவச் சிலை தென்பட்டது.
Image Hosting by Picoodle.com
அது யாருடைய சிலை என்று கேட்டபோது, "அது Benjamin Franklin அவர்களுடைய சிலை. அவர் தான் இந்தப் பென்சில்வேனியா பல்கலைக்கழத்தை நிறுவியவர்" என்றார்கள். என்னது?! மின்சாரம் சம்பந்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளின் தந்தையான அந்த Benjamin Franklinஆ?! என்று வியந்தபோது, அவரேதான் என்று பதில் கிடைத்தது. இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் 'மின்சாரக் கண்ணா' என்று பட்டமளித்திருக்கலாம் என்ற அசட்டு எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை :-)

மின்னல் என்பது மின்சாரம் என்று கண்டறிந்த பென்ஜமினின் சிலைக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, இந்தச் செய்தி காதில் விழுந்தது...

பல ஆண்டுகளுக்கு முன் இதே கல்லூரியில் படித்து இப்போது அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் கிருஷ்ணா சிங் என்ற இந்தியர், இந்தக் கல்லூரியில் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைப்பதற்காக 20 மில்லியன் டாலர்கள் நன்கொடையாகக் இந்த வருடம் கொடுத்திருக்கிறாராம். $20 மில்லியன்!!! வாயடைத்துப் போனேன்!

அடுத்து இன்னொரு சிறப்பு அதே தெருவில்!
Image Hosting by Picoodle.com
இதே பல்கலைக் கழகத்தில் தான் உலகப் புகழ் பெற்ற Wharton School of Business இருக்கிறது! இங்கே படித்தால் 5 வருடங்களில் மில்லியனர் ஆகிவிடலாம் என்று சொல்லுகிறார்கள்! இந்தக் கல்லூரியினுள்ளும் நுழைந்து நோட்டம் விட்டபோது, மாணவர்கள் அமைதியாக ஆங்காங்கே உட்கார்ந்து மடிக்கணிணியில் மூழ்கியிருந்தார்க்ள். இவர்களுக்கெல்லாம் எவ்வளவு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

இதெல்லாம் பத்தாதென்று, இங்கே இருக்கும் மருத்துவக் கல்லூரி அமெரிக்காவிலேயே முதல் மருத்துவக் கல்லூரியாம்! இங்கே இருக்கும் நர்ஸிங் கல்லூரி அமெரிக்காவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்...இப்படி அடுக்கடுக்காக சிறப்புச் செய்திகள் வந்துகொண்டே இருக்க, எனக்குத் திகட்டியது! அப்பப்பா...இதுக்குமேல் தாக்குபிடிக்கமுடியவில்லை. இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்க நீ கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்று அக்கா மகளை வாழ்த்திவிட்டு ஊர் திரும்பினேன். பல கோவில்களையும் பல தெய்வங்களையும் பார்த்த ஒரு புண்ணிய யாத்திரை போல் இருந்தது இந்தப் பென்சில்வேனியா பயணம்.

Monday, July 16, 2007

பெட்னா(FeTNA)வும் சில விளக்கங்களும்

பெட்னா விழாக்களைப் பற்றியும், பெட்னா நிர்வாகத்தைப் பற்றியும் சிலர் என்னுடைய முந்தைய பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருந்தனர். வாசன் என்கிற பதிவரைப் பாராட்டுகிறேன். பெட்னா பற்றிய தனது வருத்தங்களை மிகவும் நாகரீகமாக எழுதியிருந்தார். ஆனால் சில அனாமதேய, அநாகரீகமான பின்னூட்டங்கள் படிப்பதற்கு வேதனையாக இருந்தது. தொடர்ந்து 4 வருடங்களாக பெட்னா விழாக்களுக்குப் போய்வருவதாலும், 2004 ஆம் ஆண்டு பால்டிமோரில் நடந்த பெட்னா விழாவில் வேலை செய்ததாலும், ஓரளவு இந்த விழா ஏற்பாடுகள் எப்படி ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை நான் அறிவேன். அந்த சிறு அனுபவத்தின் அடிப்படையில் சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, எனக்குத் தெரிந்த சில உண்மைகளை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். .

முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பெட்னா நிர்வாகிகளும், விழா ஏற்பாடுகளில் உதவுபவர்களும், நம்மைப் போலவே அமெரிக்காவில் முழு நேர வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கும் குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன. ஒரு முழு நேர "Event Co-ordinator" ஆக இருப்பவரிடன் உள்ள செயலாற்றும் திறமையை இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. அலுவல், குடும்பம் இவற்றுக்கப்புறம் எஞ்சியிருக்கும் நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைக்கும் விழாவில் குறைகளே இருக்கக்கூடாது என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

குற்றச்சாட்டு 1: தமிழ்நாட்டிலிருந்து விழாவுக்கு வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பிரமுகர்களில், பாதி பேர் விழாவுக்கு வருவதில்லை.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விழாவிற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் பிரமுகர்களுக்கு பெட்னா அழைப்பு அனுப்பும் போது, எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். பெட்னாவும் தன் அறிவிப்புகளிலும், இணையதளத்திலும் இவர்களின் பெயர்களை அறிவிக்கும். இடையில் அந்த மூன்று மாதக் காலத்தில் என்னென்னவோ நடக்கும். உதாரணத்திற்கு, இந்த வருடம் இறையன்பு வருவதாக இருந்தார். ஆனால் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன் அவர் காரில் செல்லும்போது விபத்து நடந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. லக்ஷ்மன் ஸ்ருதி வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் குழுவிற்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று விழா. புதன் இரவு தான் இந்த விசா மறுக்கப்பட்ட விசயம் நிர்வாகிகளுக்குத் தெரிகிறது. அதற்குப் பிறகு முட்டி மோதி நியூஜெர்சியில் உள்ள "ஜெர்ஸி ரிதம்ஸ்" என்கிற இசைக்குழுவை ஏற்பாடு செய்தார்கள். அந்த இசைக்குழுவில் இருப்பவர்களெல்லாம் படிக்கும், வேலைக்குப் போகும் தமிழ் இளைஞர்கள். இரண்டே நாட்களில் இரவு பகல் பாராமல் பயிற்சி செய்து அரங்கத்தில் அசத்தினார்கள். இப்படி கடைசி நேரச் சறுக்கல்களும் சமாளிப்புகளும் ஒவ்வொரு விழாவிலும் வழக்கமாக நடந்துவருகிறது. இதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நிர்வாகிகள் வராதவர்களின் பெயர்களை இணையதளத்திலிருந்து எடுத்துவிடவேண்டும். இந்த வருடம், லியோனி, சேரன், திலகவதி ஆகியோரின் படங்கள்/பெயர்களை அகற்றியவர்கள், லக்ஷ்மன் ஸ்ருதி மற்றும் இறையன்புவின் படங்கள்/பெயர்களை அகற்றத் தவறிவிட்டார்கள். TANA இணையதளத்தைப் பார்த்தீர்களென்றால், அங்கே "Important Announcement" என்று கொட்டை எழுத்தில் போட்டு, அதில் ஒரு நடிகர் விழாவுக்கு வரமுடியாது போனதை தெரிவித்திருந்தார்கள். இது போல் பெட்னா செய்திருக்கவேண்டும். இது கட்டாயம் தவறுதான்.

குற்றச்சாட்டு 2: சினிமாக்காரர்களை பெட்னா எதற்காக அழைக்கவேண்டும்?
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சினிமா நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்த ஒன்று. சினிமா இல்லாத தமிழ்ச் சமுதாயம் இருக்க முடியாது. எந்த ஒரு அமைப்பிலும், அனைத்துச் சாராரையும் திருப்திப் படுத்தும் வகையில் தான் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். புதியவர்களையும், இளைஞர்களையும் எப்படி பெட்னாவுக்கு வரவழைப்பது? சினிமா நடிகர்/நடிகைகள் வந்தால், நிறைய பேர் விழாவுக்கு வருவார்கள் என்கிற ஒரு நப்பாசையில் தான் ஒவ்வொரு வருடமும் சினிமாத்துறையிலிருந்து நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ அழைக்கப்படுகிறார்கள். 2004 பால்டிமோர் விழாவிற்கு வந்திருந்த நடிகர் விவேக்கை பார்ப்பதற்காகவே அவருடைய நிகழ்ச்சி இருக்கும் நாளன்று மட்டும் ஒரு நாள் டிக்கட் வாங்கிக்கொண்டு விழாவுக்கு நிறைய பேர் வந்தார்கள். வந்தவர்கள் மற்ற சில நிழ்ச்சிகளையும் இருந்து பார்த்துவிட்டுத் தான் போனார்கள். அதனால், மக்களை வரவைப்பதற்கும், அப்படியே மற்ற நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கவேண்டுமென்பதற்காகவும் தான் சினிமா நடிக/நடிகையரை பெட்னா அழைத்து வருகிறது. பெட்னா மட்டுமல்ல TANA என்கிற தெலுங்கு அமைப்பு(இந்த வருடம் இலியானாவை அழைத்திருக்கிறார்கள்!), மலையாளம், கன்னட அமைப்புகள் கூட மக்களை ஈர்ப்பதற்கு இந்த உத்தியைத்தான் கையாள்கின்றன. இதில் தவறு ஒன்றும் இல்லையென்பது என் கருத்து.

என் பதிவில் அனானி குறிப்பிட்டது போல் S.J சூரியா போன்றவர்களுக்கு காசு செலவழித்து அழைத்து வருவது வருத்தப்படவேண்டிய விசயம். நான் கேள்விப்பட்டது என்னவென்றால், S.J சூர்யா விழாவுக்கு வருவதைத் தடுத்து நிறுத்த பல தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக முயற்சி எடுத்தார்கள், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. என்னிடம் கூட ஒருவர், நீங்கள் பெண்களின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனக்கு அன்று அந்தத் துணிவு இல்லை. என்னைப் போல பயந்துகொண்டு, ஏன் வம்பு என்று கேள்வி கேட்காமல் பலர் இருந்துவிடுவதால் தான் தமிழ் அமைப்புகள் வளர முடியாது இருக்கின்றன. S.J சூர்யா மேடையில் ஏறியபோது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். அதனால் சினிமா நடிகர்/நடிகைகளை அழைக்கும் விசயத்தில் பெட்னா மேலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டு 3: பெட்னாவின் முன்னாள் இயக்குனரை எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போய்விட்டது.
எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போனதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இந்த அடிப்படை புரிந்துணர்வு கூட நம்மவர்களிடம் இல்லையென்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்ற விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்றே அனுமானித்துக் கொள்ள வேண்டும் என்கிற நெறி அமெரிக்க சட்டங்களில் வற்புறுத்தப்படுகிறது. முன்னாள் பெட்னா நிர்வாகி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதற்காக பெட்னாவை பழி சொல்வது எந்த வகையில் நியாயம்? "Guilty By Association" என்று கேளிவிப்பட்டிருக்கிறீர்களா? அதற்கு, விக்கியிலிருந்து சில உதாரணங்களை இங்கே கொடுக்கிறேன்.

1. பில் க்ளிண்டன் டெமாக்ரடிக் அணியைச் சேர்ந்தவர். பில் கிளிண்டன் தன் மனைவிக்குத் துரோகம் செய்தவர். அதனால் டெமாக்ரடிக் அணியைச் சேர்ந்த அனைவரும் மனைவிக்குத் துரோகம் செய்தவர்கள் என்று சொல்ல முடியுமா?

2. ஹிட்லர் சைவ உணவு சாப்பிடுபவர். ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். அதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களெல்லாம் கொடுங்கோலர்கள் என்று சொல்ல முடியுமா?

3. நீங்கள் XYZ என்கிற நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போய்விட்டது. அதனால் அந்த நிறுவனமே தவறானதாகிவிடுமா? அந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் உடனே ரஜினாமா செய்துவிடுவீர்களா?

அதே போல,பெட்னாவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் இருக்கிறார். அவர் அமெரிக்க அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அதனால் பெட்னா என்கிற அமைப்பே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? யோசித்துப்பாருங்கள்!.

இங்கே வாசிங்டனில் எங்களிடையே வாழ்ந்த, அனைவரும் நன்கு அறிந்த ஒரு தமிழர், NASA வில் வேலைப்பார்த்த இன்ஜினியர்! சில மாதங்களுக்கு முன் எப்.பி.ஐ யினால் கைது செய்யப்பட்டார். காரணம், 16 வயதிற்கு குறைவாக இருந்த ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இணையத்தில் அளவளாவியது, மற்றும் கள்ளத்தனமாக அந்தப் பெண்ணை சந்தித்தது. அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அவருக்கு மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர் குற்றவாளி என்பதற்காக, எங்க ஊர் தமிழர்கள் அவருடைய குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிடவில்லை, அவர் வேலைப் பார்த்த NASA வை பழி சொல்லவும் இல்லை!.

ஒருவர் குற்றவாளி என்பதற்காக அவரைச் சுற்றி இருப்பவர்களும் குற்றவாளிகள் என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மையை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

குற்றச்சாட்டு 4: TNF/fetna இரண்டு அமைப்புகளும் தனித்தனியாக விழா நடத்துகின்றன
பெட்னாவின் குறிக்கோள் என்னவென்று முன்பு எனக்குப் புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பெட்னா விழாவிற்கு கிட்டத்தட்ட 200,000 டாலர்கள் செலவழிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு நியூயார்க்கில் நடந்த விழாவுக்கு கிட்டத்தட்ட 400,000 செலவானது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு பணத்தையும் ஒரு ஆடம்பரமான விழாவில் வாரி இறைத்து ஏன் கரியாக்கவேண்டும்? இவ்வளவு பணத்தையும் கொண்டு தமிழ்நாட்டில் எத்தனை ஏழைகளுக்கு உதவலாம் என்று என் கணவரிடம் பலமுறை விவாதித்திருக்கிறேன். அவரும், மற்ற சில நண்பர்களும் எனக்களித்த விளக்கம் - பெட்னா தொண்டு நிறுவனம் அல்ல. அதன் குறிக்கோள் தமிழ்க் கலையையும் இலக்கியத்தையும் வளர்ப்பது மட்டுமே. இங்கிருந்தபடி தமிழ்நாட்டில் தொண்டு செய்வதற்கு TNF போன்ற வேறு சில அமைப்புகள் இருக்கின்றன. பெட்னாவிற்கு நன்கொடை கொடுக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலர் TNF க்கும் நன்கொடை கொடுக்கின்றார்கள்.

TNF தமிழ்நாட்டுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு அமைப்பு. ஆனால் பெட்னாவின் குறிக்கொள் விசாலமானது. தமிழ்நாடு மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் கலையையும் இலக்கியத்தையும் வளர்க்கும் அமைப்பு. இப்படி முற்றிலும் வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்ட இரு அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து விழா எடுப்பது சரியா அல்லது தனித்தனியாக விழா எடுப்பது சரியா என்று எனக்குத் தெரியாது. தமிழர்களின் ஒற்றுமையில், அனானிகளுக்கு இருக்கும் அக்கறை இந்த இரு பெரும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு இருக்காது என்று நினைக்கிறீர்களா? அவர்கள் தனித்தனியாக விழா எடுக்க முடிவெடுத்ததற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்களப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர்கள் சுயமாகச் சிந்திப்பவர்கள். பெற்றோர்கள் எந்த முடிவையும் அவர்கள் மேல் தினித்துவிட முடியாது.
NTYO - National Tamil Youth Organization அமைப்பைச் சேர்ந்த அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள், 2004 ஆண்டில் இருந்து பெட்னா விழாக்களுக்கே போவது என்று முடிவு செய்தது ஏன் என்று, அந்த அமைப்பின் தலைவர், NTYO இணையதளத்தில் எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். "The biggest event that TNF, FeTNA, and NTYO have is our annual July 4th conference that brings all Tamils, young and old, from all parts of America together for three days of exciting activities and captivating seminars. However, this year many of you might be aware that TNF and FeTNA are planning to have TWO SEPARATE conferences, one in Chicago , IL and the other in the Washington DC Area on the same July 4th weekend. This actions succeeds in only splitting the already small Tamil community. NTYO considers both TNF and FeTNA as parent organizations. Last year, the situation was similar and there were also two separate conventions. We decided to go with FeTNA, having the understanding that we would alternate between TNF and FeTNA in the years to come if there were going to be dual conferenes. However, this year, we reversed our decision from last year and have decided to also stick with FeTNA, and we feel that you, our members, deserve an explanation. We were unable to go with TNF this year for several reasons. First, we just recently had our convention in Chicago in 2002 and having it there again would not attract such a large crowd. Secondly, we feel that TNF is centered towards only a Tamil Nadu population, whereas FeTNA is more explicit in their objective to attract all Tamils. Finally, FeTNA is a larger organization and would lead to a better turnout, a necessity for the survival of NTYO. Whether we will ever go with TNF remains to be seen. We are continuously hopeful for a joint conference to once again take place. When that happens all of us are the winners. But for now we have to pick our best possible option."

குற்றச்சாட்டு 5: பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு
பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு போன்றவற்றை கடந்த மூன்று ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் நான் உணராவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் அனானிகளின் கிசுகிசுப்புகளில் அறிகிறேன். கொஞ்சம் தெளிவான ஆதாரங்களுடன் எழுதினால், அது அனானிகளின் கூற்று என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். நந்தன் கதை நாடகத்தையும், ஈழத்தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளையும் இப்படி ஒரு பார்வையில் பார்க்கமாட்டீர்களென்று நம்புகிறேன்.

6. பொறுக்கிகளுக்காக பொறுக்கிகளால் நடத்தப்படும் அமைப்பு பெட்னா என்று சொன்ன அனானிக்கு:
பெட்னாவில் கிட்டத்தட்ட 30 தமிழ்ச் சங்கங்கள்/தமிழ் அமைப்புகள் உறுப்பினாராக இருக்கின்றன. இந்தச் சங்கங்கள்/அமைப்புகளைச் சேர்ந்த அனைத்துத் தமிழர்களும் உங்களைப் பொறுத்தவரை பொறுக்கிகள், குற்றவாளிகள். அப்படித்தானே? புரியாமல் கேட்கிறேன்...ஆயிரக்கணக்கான பொறுக்கிகளுக்கு பணமும் நேரமும் இருந்தால் என்ன செய்வார்கள்? சும்மா குடித்துவிட்டு கூத்தடிக்காமல், சிரமப்பட்டு தமிழையா வளர்த்துக்கொண்டிருப்பார்கள்? நீங்கள் சொல்லும் இந்தப் பொறுக்கிகளின் அமைப்பை புனித ஆத்மாக்களின் அமைப்பாக மாற்ற உங்கள் பங்களிப்பு என்ன? சும்மா அவதூரான பின்னூட்டங்கள் எழுதுவது மட்டுமே என்றால், மன்னிக்கவும்...இங்கே யார் பொறுக்கி? நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டுமென்றால் ஏதாவது உறுப்படியாகச் செய்யுங்கள். ஏன்?! நீங்களெல்லாம் சேர்ந்து "அனானிகள் சங்கம்" அல்லது "பெட்னா எதிர்ப்புச் சங்கம்" என்று ஒரு அமைப்பைத் தொடங்கினால் கூட, உங்களுக்கு வரும் பிரச்சினைகளையும், உங்களைப் போல் உண்மையை உணராமல் வெளியில் உள்ளவர்கள் அவதூறு பேசுவதையும் உங்களால் தடுக்க முடியாது.

Tuesday, July 10, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)விழா 2007 - ஒரு கண்ணோட்டம்

இது ஒரு நீண்ட பதிவு. எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியாததால், வள வளவென்று எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்!

வருடா வருடம் இந்த பெட்னா (FeTNA)விழா எங்கள் நாட்குறிப்பில் இடம் பெருவது வழக்கமாகிவிட்டது. அமெரிக்காவில் தமிழர்கள் அதிகமாக ஒன்று கூடக்கூடிய ஒரே விழா இது என்பதால் ஆர்வமாகப் போய் பங்கு பெறத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டும் பெட்னா விழாவைப் பற்றி நான் பதிவு எழுதியிருந்தேன். அந்த விழாவில் நிர்வாகிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட சில தவறுகளைச் சுட்டிக்காட்டி, "இந்த விழாவில் பல பாடங்களைக் கற்ற பெட்னா நிர்வாகிகள், அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று எழுதியிருந்தேன். அதற்கு "சூப்பர் ஜோக்" என்று நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி பின்னூட்டம் இட்டிருந்தார். நான் இதை அவருக்காகச் சொல்லவில்லை, ஆனால் என் நம்பிக்கை வீண் போகவில்லை! என்னுடைய பார்வையில், கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த விழாவை விட பல மடங்கு இந்த வருட விழா சிறப்பாக இருந்தது. எந்த விதமான குழப்பமோ, பதட்டமோ, சலனமோ இல்லாமல் அமைதியாக, ஆனால் சுவாரசியமாக மூன்று நாட்களும் சென்றன. ஒரு குறிப்பிடத்தக்க விசயம், கடந்த ஆண்டு பெட்னா விழாக்கள், சிகாகோ, பால்டிமோர், டாலஸ், நியூஜெர்சி, நியூயார்க் போன்ற தமிழர்கள் ஏராளமாக இருக்கக்கூடிய பெரிய, பிரபலமான நகரங்களிலேயே நடைபற்றது. இந்த நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், வட கரோலினாவில் உள்ள ராலே(Raleigh, NC) ஒரு சிறிய நகரமே. அங்கே சுற்று வட்டாரத்தில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருக்கவேண்டும். அதிலும் தமிழ்ச் சங்கம், பேரவை போன்றவற்றில் ஆர்வமிருப்பவர்கள் குறைவே. ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு பிரம்மாண்டமான விழாவை எடுப்பது என்றால் அது சாதாரண காரியம் அல்ல! ஆனால், தமிழால் இனைந்து தமிழராய் வென்றிருக்கிறார்கள் நமது வட கரோலினா நண்பர்கள்!!! "தமிழால் இணைவோம், தமிழராய் வெல்வோம்" என்பதே இவ்வாண்டு விழாவின் மையக் கருத்து. இன்னொரு பாராட்டப்படவேண்டிய விசயம், இந்த விழாவில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கான கால அளவு, நேரம் - சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குப் பயந்தே, எல்லாக் கலைஞர்களும் அறிஞர்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தம் உரையையும், நிகழ்ச்சியையும் முடித்துக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :-)

வெள்ளிக்கிழமை(ஜூலை 6)

மாலை சுமார் 5 மணியளவில் நண்பர்கள் பட்டாளத்துடன் ராலேயில்(Raleigh, NC) downtown பகுதியில் இருக்கும் ஷெரட்டன் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியிலிருந்து 5 நிமிட நடையில் இருந்தது விழா நடக்கும் அரங்கம். சீவி சிங்காரித்துக்கொண்டு 7 மணியளவில் அரங்கத்திற்குச் சென்றோம். வாசலிலேயே ஒரு கூடாரம் அமைத்து, இரவு உணவு பறிமாறப்பட்டது. சாப்பிட்டுக்கொண்டே மற்ற ஊர்களிலிருந்து வந்திருந்த நண்பர்களைச் சந்தித்து சற்று நேரம் அலவலாவி விட்டு, அரங்கத்தினுள் நுழைந்தபோது, நடிகர் சிவக்குமார் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு திறமையான ஓவியக் கலைஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய சில ஓவியங்களும், அவர் நடித்த திரைப்படங்களிலிருந்து சில காட்சிகளும் திரையில் காண்பிக்கப்பட்டது. பிறகு தன் திரைப்பட அனுபவங்களைப் பற்றி சில நிமிடங்கள் சிவக்குமார் பேசினார். பார்வையாளர் ஒருவர் சிவக்குமாரிடம் ஒரு கேள்விக் கேட்டார். "நீங்கள் ஒரு நல்ல ஓவியர், மற்றும் திரைப்பட நடிகர். உங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருவது ஓவியம் வரைவதா? நடிப்பதா?". இதற்கு சிவக்குமாரின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. "நான் ஒரு ஓவியம் வரையும் போது அது முழுக்க முழுக்க என்னுடைய உழைப்பு, படைப்பு. என்னைத் தவிர வேறு யாரும் அதில் சம்பந்தப்படவில்லை. நானே அங்கே ராஜா. ஆனால், நான் ஒரு நல்ல நடிகனாக இருக்க, ஒரு பாலச்சந்தர் தேவைப்படுகிறார். ஒரு இளையராஜா தேவைப்படுகிறார். பாலசந்தரும் இளையராஜாவும் இல்லையென்றால் சிந்துபைரவி சிவக்குமார் இல்லை. ஆனால் நான் நடிகனாக இல்லாது ஒரு சாதாரண ஓவியனாக இருந்திருந்தால் இன்று பெட்னா மேடையில் நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அதனால் மன நிறைவைத் தருவது ஓவியம் வரைவது. புற நிறைவைத் தருவது நடிப்பு" என்றார்.

சிவக்குமாரின் மகன் "பருத்தி வீரன்" கார்த்தி அப்பாவைப் போலவே எளிமை, அமைதி. அவர் பேசும் போது, "நான்கு வருடங்கள் அமெரிக்காவில் படித்துவிட்டு பின் ஊருக்கு நடிப்பதற்காகச் சென்றேன். அமெரிக்காவில் மரியாதையாக, தன்னடக்கமாகப் பேசிப் பழகிய நான், முதல் படத்திலேயே(பருத்தி வீரன்) காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஏய், டேய் என்று பேசியது வேடிக்கையாக இருந்தது" என்றார். அடுத்து வந்த இரண்டு நாட்களிலும், கார்த்தி இரண்டொரு நிமிடங்கள் மேடையில் சுருக்கமாகப் பேசினார். மற்றபடி எதுவும் சிறப்பு நிகழ்ச்சியோ, கலந்துரையாடலோ அவரை வைத்துச் செய்யவில்லை. அவரை விழாவுக்கு அழைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. தனிப்பட்ட முறையில் நான் கார்த்தியின் ரசிகையாக இருப்பது வேறு விசயம். ஆனால், சும்மா ஒரு நடிகரின் சில நிமிட மேடைத் தோற்றத்தில் மயங்கிவிடுகிற கூட்டம் அல்ல பெட்னாவுக்கு வரும் கூட்டம்.

விழாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரமுகர்கள் - மருத்துவர் N.சேதுராமன், நீதியரசர் சன்முகம், தமிழறிஞர் இளங்குமரனார், பட்டிமன்றம் புகழ் முல்லை நடவரசு, கலைமாமனி நித்யஸ்ரீ மஹாதேவன் இவர்களெல்லாம் 5 நிமிடங்கள் தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்கள்.

N.சேதுராமன், சன்முகம் ஆகியோரின் உரைகளை நான் சரிவரக் கேட்கவில்லை.

இளங்குமரனார் - எழுபத்தியெட்டு வயதிலும் தமிழை தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இவரது தமிழ்ப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருக்கு விழாவின் கடைசி நாளன்று, பெட்னா வாழ் நாள் சாதனையாளர் விருதளிக்கப்பட்டது.

முல்லை நடவரசு - திண்டுக்கல் லியோனி விழாவுக்கு வராத குறையை இவர் நிறைவு செய்தார். கணீரென்ற குரல், எழுச்சிமிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடி கூட்டத்தை நன்றாக மகிழ்வித்தார்.

நித்யஸ்ரீ மஹாதேவன் - இவர் பேசுவதே பாடுவது போல் அவ்வளவு இனிமையான குரல். என்ன ஒரு தன்னடக்கம்!

வெள்ளி இரவு நிகழ்ச்சிகள் முடிகையில் அரங்கத்தை நோட்டமிட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஓரளவு நல்ல கூட்டம், அதுவும் வெள்ளி இரவுக்கு! பொதுவாக சனி காலை தான் வெளியூரிலிருப்பவர்கள் வருவார்கள்.

சனிக்கிழமை(ஜூலை 7)

காலை 10 மணியளவில் அரங்கத்தை நோக்கி நடக்கையில், ஏதோ ஒன்று missing போல் தெரிகிறதே, என்ன என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். ஆம்! வழக்கமாக நம்மை வரவேற்கும் மங்களகரமான நாதஸ்வர இசை missing! நாதஸ்வரக் கலைஞர்களை அழைத்து வர முடியாவிட்டாலும், ஒலிநாடாவிலாவது நாதஸ்வர இசையைப் போட்டிருக்கலாம்.

சனிக்கிழமை பகல் முழுவதும் நிறைய பயனுள்ள உரைகள் - "சமூக நீதியும் தனி மனித சுதந்திரமும்", "பாரதியும் பாரதிதாசனும்", "தமிழகப் பள்ளியில் அமெரிக்க மாணவரின் பங்கு", "கணினியில் தமிழ்" போன்ற தலைப்புகளில். நடு நடுவே நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள். நியூயார்க் விழாவில் அதிகப்படியாக திகட்டும்படி தினிக்கப்பட்டிருந்த பரதநாட்டியங்கள் குறைக்கப்பட்டு, அனைத்து வித நடனங்களும் அளவாகப் புகுத்தப்பட்டிருந்தன. இளங்குமரனார் தலைமையில் நடந்த கவியரங்கத்திற்கு அருமையான தலைப்பு "நிலமென்னும் நல்லாள்". பேசவந்தவர்களெல்லாம், தமிழ் இலக்கியத்தில் பிய்த்து உதறுபவர்கள். ஆனால் நான் கவியரங்கம் நடக்கும் போது "எஸ்கேப்". ஏனென்றால், ஒரு கவியரங்கத்தை பார்த்து பாராட்டும் அளவு எனக்கு தமிழ் கவிதையிலோ, இலக்கியத்திலோ ஞானம் கிடையாது.

மதியம் சற்று இளைபாறிவிட்டு வரலாம் என்று விடுதிக்குச் சென்று வந்த இடைவெளியில், NTYO(National Tamil Youth Organization) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அளித்த சிறப்புரையையும் நடன நிகழ்ச்சியையும் தவறவிட்டேன். அற்புதமாக இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். மாலை நிகழ்ச்சிகள் அனைத்துமே கூட்டத்தை இருக்கையில் கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டன.

முல்லை நடவரசுவின் "இசை இன்பத் தேனையும் வெல்லும்" என்கிற உரை, பல மறக்கப்பட்ட நல்ல தமிழ்ப் பாடல்களை நம் நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது. இவருக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரம் முடிந்தபோது, கூட்டம் "இன்னும் பேசுங்கள்" என்று ஆர்ப்பரித்தது.

கரோலினா தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறப்புக் கலை நிகழ்ச்சிதான் இந்த வருட பேரவை விழாவிற்கே மகுடம் சூட்டி, அனைவரையும் வியப்பிலும், குதூகலத்திலும் ஆழ்த்திய நிகழ்ச்சி என்று சொல்லலாம்! காவடியாட்டம், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், குறத்தி நடனம், புலியாட்டம் என்று ஒன்றன் பின் ஒன்று ஆடி கலக்கு கலக்கென்று கலக்கி, அரங்கத்தை கரகோஷத்தில் அதிர வைத்தனர் கரோலினா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த "சென்னை சங்கமம்" நிகழ்ச்சியைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனால் இன்று இங்கே பேரவை விழா மேடையில் ஒரு தமிழ்த் திருவிழாவையே நடத்தி சென்னை சங்கமத்தின் அமெரிக்க வார்ப்பினை படைத்துவிட்டார்கள்! இதில் பங்குபெற்றவர்களில் பலர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்! விழா வேலையையும் செய்துகொண்டு, நடனத்திற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டு...அப்பப்பா இவர்களது கடின உழைப்பைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை!

அடுத்து நடிகர் சிவக்குமார் "தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்" என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவருடைய குரல், தமிழ் உச்சரிப்பு, தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஞானம் என்னை அசரவைத்தது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த புகழ்பெற்ற வசனங்கள், பாடல்கள் - உதாரணத்திற்கு, திருவிளையாடலில் சிவனுக்கும் நக்கீரணுக்கும் இடையே நடக்கும் உரையாடல், ஆறுபடை வீடு கண்ட திருமுருகா என்கிற பாடல், போன்றவற்றைப் பற்றிப் சொன்னார். ஆனால் அதிகம் முருகன் - சிவன் பற்றிய பாடல்/வசனங்களையே பேசியதால் சற்று அலுப்பாக இருந்தது. பல சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களிலெள்ளாம் சமூகக் கருத்துள்ள பிரமாதமான வசனங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றிலும் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம்.

பிரபலமாகிவரும் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றியும், இன்று ஆயிரக்கணக்கில் இணையத்தில் எழுதப்படும் தமிழ்ப் பதிவுகளைத் திரட்டிவரும் தமிழ்மணத்தைப் பற்றியும், அதனை நடத்திவரும் TMI நிறுவனத்தினர் ஒரு அருமையான பவர் பாயிண்ட் ப்ரசன்டேஷனை வழங்கினார்கள். மேலும், அடுத்த நாள் ஷெரட்டன் விடுதியில் உள்ள கான்பரன்ஸ் அறையில் வலைப்பதிவர்கள் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்தினார்கள். கிட்டத்தட்ட 20 பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஒரு வலைப்பதிவை எப்படி தொடங்கவேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்வத்தோடு கேள்வி கேட்டதையும், குறிப்பு எடுத்துக்கொண்டதையும் பார்க்கும் போது, கூடிய சீக்கிரம் தமிழ்மணத்தில் சேரும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரிக்கப் போகிறது!

இரவு 9 மணிக்கு அனைவரும் விரும்பி எதிர்பார்த்துக்கொண்டிருந்த நித்யஸ்ரீ மஹாதேவனின் கச்சேரி ஆரம்பமானது. மிருந்தங்கம் வாசித்தவர் நித்யஸ்ரீயின் தந்தை திரு சிவக்குமார். ஒரு வயலின் வித்வான். மூவர் மட்டுமே கொண்ட எளிமையான கச்சேரி அணி. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கினார். அவரது இனிமையானக் குரலில் மயங்கிக் கட்டுண்டது அரங்கம். நான்கு பாடல்கள் கேட்டு ரசித்த பிறகு களைப்பு மிகுதியால் விடுதிக்குச் செல்லவேண்டியதாகிவிட்டது. ஆனால் அதற்குப் பின்னர் தான் கச்சேரி களைகட்டி, குறவஞ்சி, சிலப்பதிகாரம் பாடல்கள் பாடினார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். கர்நாடக இசைக் கச்சேரி என்றால் அறவே பிடிக்காத ஒரு நண்பர் கூட கச்சேரி முடியும் வரை இருந்து எல்லாப் பாடல்களையும் கேட்டுவிட்டு வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8)

ஞாயிறு காலை கண்விழித்தபோது சற்று படபடப்பாக இருந்தது எனக்கு. காரணம் நான் பங்குபெறும் ஒரு இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி அன்று மதியம் ஒரு மணிக்கு இருந்தது. நிகழ்ச்சியை நடத்துபவரிடம், கடந்த பல நாட்களாக "என்னை விட்டுவிடுங்கள், மேடை என்றாலே எனக்கு கால்கள் பின்னிக்கொள்ளும், பேசவும் குரல் வராது, இலக்கியத்திலும் நான் பூஜ்ஜியம்" என்றெல்லாம் மன்றாடிப் பார்த்தேன். அவர் செவி சாய்க்கவில்லை. சரி எப்படியும் மேடையில் மானம் போகப் போகிறது, முடிந்தவரை படிப்போம் என்று, ஞாயிறு காலை விடுதி அறையில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு Tamil Virtual University போன்ற சில வலைதளங்களில் சென்று இலக்கியக் கேள்வி பதில்கள் சிலவற்றைத் தேடிப் படித்தேன். அரங்கத்திற்கு போனபின்பு என் அணியில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் மண்டையை உடைத்துக்கொண்டு, சரி இதற்கப்பறம் ஆனது ஆகட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, நிகழ்ச்சிகளை பார்க்க அரங்கத்தினுள் நுழைந்தேன்.

மீண்டும் மேடையில் நடிகர் சிவக்குமார்! "பெண்களுக்கு மார்புப் பகுதி, தலை எந்த அளவு உடலிலிருந்து நீண்டு இருக்கிறதோ, அந்த நீளத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும். சில பெண்களுக்கு பிருஷ்டம் குறைவாக இருக்கும். மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருக்கும்" என்று அவரிடம் இருந்து வந்த வார்த்தைளைக் கேட்டு புரியாமல் குழம்பினேன்! அப்புறம் தான் புரிந்தது, அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "அழகு". ஒரு ஓவியன் ஒரு பெண்ணையோ ஆணையோ வரையும் போது, உறுப்புக்களின் அமைப்பு, அளவு போன்ற நுணுக்கங்கள் மிகவும் முக்கியம். அந்தக் கண்ணோட்டத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பெண்களிலேயே எல்லா உறுப்புக்களின் அளவும் அமைப்பும் கணக் கச்சிதமாக அமையப் பெற்றப் பெண் நடிகை வைஜெயந்திமாலா என்றார்!

மதிய உணவுக்குப் பின் எங்கள் வினாடி வினா நிகழ்ச்சி! உணவு சரியாக இறங்கவில்லை. சரியாக ஒரு மணிக்கு மேடையில் போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தோம். எங்கள் அணியின் பெயர் "தொல்காப்பியர்". எதிர் அணியின் பெயர் "ஒளவையார்". அரங்கத்தில் கூட்டமே இல்லை. மானம் போவதைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று சற்று ஆறுதலாக இருந்தாலும், உற்சாகப்படுத்துவதற்கும் யாரும் இல்லை என்று வருத்தமாக இருந்தது. தூரத்தில் உட்கார்ந்து "நான் இருக்கிறேன்" என்று கையாட்டிய என் கணவரைப் பார்த்ததும் சற்று நிம்மதியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது! எங்கள் அணி வெற்றி பெற்றது!!! நம்பவே முடியலை!!! இப்பொழுது எனக்கு இலக்கியங்களைப் பற்றி நிறைய படிக்கனும் என்கிற ஆர்வம் எழுந்திருக்கிறது.

இன்றும் பல நல்ல பயனுள்ள உரைகள் - "வள்ளுவம் காட்டும் வாழ்க்கை", "தமிழ்நாட்டில் கல்வி வழி மேம்பாடு", "தாய்த் தமிழ் பள்ளி" போன்ற தலைப்புகளில்.

மாலை முல்லை நடவரசு தலைமையில் பட்டிமன்றம். தலைப்பு "புலம் பெயர்ந்த தமிழர்கள் கான்பது இன்னலா? இன்பமா?". பாட்டுக்கும், கிண்டலுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமேயில்லை! சாப்பாடு, சுத்தம், வசதிகள் போன்ற விசயங்களைப் பற்றியே இரு அணிகளும் விவாதித்துக்கொண்டிருக்க, "இன்பம்" அணியில் பேச வந்த இளம் ஈழத்துப் பெண், "இலங்கையில் அடிப்படை தேவகளான உணவு, உடை, தங்கும் இடம் கூட இல்லாமல், சுதந்திரமும் பறிக்கப்பட்டு, பல வித கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு, துரத்தப்பட்டு புலம் பெயரும் தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளில் உணவு, உடை, பாதுகாப்பு என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திர வாழ்க்கை வாழமுடிவது இன்பமே" என்று சொன்னார். அந்தப் பெண் அப்படிச் சொன்ன பிறகு, அதை மறுத்து எப்படிப் பேசுவது? என்னத்தைப் பேசுவது? அந்த ஒரு உண்மைக்கு முன் எல்லா விவாதங்களும் தோற்றுவிடுமே? என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில், எதிர் அணியிலிருந்து பேச வந்தவர் "ஈழத்தில் இன்று நடப்பது துன்பம் என்று நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்" என்றார். பல புருவங்கள் உயர்ந்தன... கூட்டத்தில் சல சலப்பு...அவர் தொடர்ந்து "அது ஒரு தவம்! அதைத் துன்பம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்" என்றார். "தவம்" என்கிற இந்த அழகான விவரிப்பைக் கூட்டம் கரகோஷம் செய்து ஆமோதித்தது. புலம் பெயர்ந்தவர்கள் அனுபவிப்பது இன்னலே என்கிற அணியின் தலைவர் தம் அணியின் கருத்துக்களைத் தொகுத்தளிக்கும் போதும், "என்னதான் ஈழத் தமிழர்கள் இங்கே சுதந்திரமாக, இன்பமாக இருந்தாலும், தாயகத்தில் அவர்களுடைய உறவினர்கள் துன்பப்படுதும், அவர்களை விட்டு தாம் பிரிந்திருக்க நேர்கிறதே என்கிற நினைப்பும் அவர்களுக்கு இன்னல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த ஈழத்துப் பெண்ணின் சோகத்தில் துவைத்தெடுத்த தீர்க்கமான கருத்துக்கள்அவளுடைய அணியை வெற்றியடையச் செய்தது.

இரவு 9 மணிக்கு பரத்வாஜின் இன்னிசை நிகழ்ச்சி! முதல் பாடல் "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே". கூட்டம் ரசித்துக் கேட்டது. தொடர்ந்து அவர் இசையமைத்த பிரபலமான பாடல்களான "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" மற்றும் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்". பின்னர் பாடகர் ஸ்ரீநிவாஸ் "மின்சாரக் கண்ணா", "ஆப்பிள் பெண்ணே", "வெள்ளி வெள்ளி நிலவே" போன்ற பாடல்களைப் பாடினார். பாப் இசைப் பாடகி ஷாலினி "ஊ லா லா லா", "ரண்டக்க ரண்டக்க" பாடல்கள் பாடியபோது, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை நிறைய பேர் எழுந்து நடனமாடினார்கள். சிவாஜி படத்திலிருந்து பாடல் வேண்டும் என்று ரசிகர்கள் கேடுக்கொண்டதற்கிணங்கி, "தீ தீ" பாடல் பாடப்பட்டது. கடைசி பாடலான "வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும்" பாட்டுக்கு பாதி கூட்டம் இருக்கையிலேயே இல்லை! அப்படி ஒரு குதூகலத்துடன் அனுபவித்து நடனமாடினார்கள்.

நேற்று தான் ராலே வந்தது போல் இருந்தது...அதற்குள் விழா முடிந்து விட்டது. திங்கள் காலை இலக்கியக் கூட்டம் இருந்தது. ஆனால் சில வேலைகள் காரணமாக திங்கள் அதிகாலையில் நானும் கணவரும் வாசிங்டன் டிசி திரும்பவேண்டியதாகிவிட்டது. இலக்கியக் கூட்டத்திற்கும் நல்ல வரவேற்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.

அலட்டலில்லை...ஆர்பாட்டமில்லை...பெரிதாக எந்த ஏமாற்றமும் இல்லை...யார் மீதும் வருத்தம் ஏற்படவில்லை...மொத்தத்தில் இது ஒரு அமைதியான, அருமையான தமிழர் விழா!

அடுத்த ஆண்டு விழா ஆர்லாண்டோவில்!!! இப்பொழுதே திட்டமிடத் தொடங்கிவிட்டொம்!!!

Wednesday, June 20, 2007

உலக அகதிகளுக்காக - A New Home, A New Life.

இன்று உலக அகதிகள் தினம்! அவர்களைப் பற்றி நினைக்காமல் இருப்பது நியாயமில்லை.

ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியூர் சென்றாலே, எப்படா வீட்டுக்குத் திரும்பிப் போகலாம் என்று தோன்றும். திரும்பி வந்து வீட்டுக் கதவைத் திறந்ததும், "அப்பாடா! Home Sweet Home!" என்று மனம் புளகாங்கிதம் அடையும். உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், திரும்பி வர ஒரு இடம் இருக்கிறது என்பது எவ்வளவு நிம்மதியான, பாதுகாப்பான உணர்வு? ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீட்டையும், நாட்டையும் விட்டுச் செல்கிறார்கள். வேறு நாடுகளில் குடியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு ஒரு இடமும், அவர்கள் திரும்பி வரும்போது வரவேற்க சொந்த பந்தங்களும் காத்திருக்கும்.

ஆனால் அகதிகள்? தம் சொந்த வீட்டில், நாட்டில் இருக்கலாமா வேண்டாமா என்பதை தெரிவு செய்யும் உரிமையே இல்லாமல் பாதுகாப்பைத் தேடி சொந்த வீட்டை விட்டு வெளியேறுவது கொடுமை! திரும்பி வருவதற்கு இடம் இல்லாமல், திரும்பிப் பார்ப்பதற்கும் எதுவும் இல்லாமல், கடந்த காலம் சிதைக்கப்பட்டு, எதிர்காலம் பிடுங்கப்பட்டு....சொந்த பந்தங்களைப் பிரிந்து...எத்தனை துயரத்தை தாங்கிக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?! சொந்த மண்ணில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட இவர்கள், வேற்று மண்ணில் கால் ஊன்றி, தம் பழைய வாழ்க்கையை சற்றேனும் ஒத்திருக்கும் ஒரு புதிய வாழ்க்கையை படிப்படியாக அமைக்க முற்படுகிறார்கள். தமக்கும் தம் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்கிற நம்பிக்கையையும் வலுக்கட்டாயமாக வளர்த்துக்கொள்கிறார்கள். தம் சொந்த நாட்டிற்கே எப்படியேனும் திரும்பிப் போய்விடவேண்டும் என்று பிடிவாதமாக அகதிகள் முகாம்களிலேயே இன்னும் இருப்பவர்களும் உண்டு. தொலைத்த வீட்டையும் நாட்டையும் மீட்டெடுக்கமுடியாவிட்டாலும், தொலைந்து போன பாதுகாப்பு உணர்வை இவர்களுக்கு மீட்டுக் கொடுப்பது அரசாங்கங்களால் தான் முடியும்.

எனக்கு 12 வயதிருக்கும் போது என் சித்தப்பா குடும்பத்தினர் கொழும்புவிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள். சித்தி அப்போது 6 மாத கர்ப்பிணி. 10 வயதில் ஒரு பெண். சித்தப்பா இந்தியாவிலிருந்து பல வருடங்களுக்கு முன் இலங்கைச் சென்றவர். இலங்கையில் சித்தப்பாவின் வீடு தீ வைத்து எறிக்கப்பட்டது என்றும், குடும்பத்துடன் சுவர் ஏறிக் குதித்து தப்பி வந்தார்கள் என்றும் பின்னர் தெரியவந்தது. சில மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது என் சித்தி பெண் செய்யும் குறும்புகளுக்கும், தவறுகளுக்கும், அப்பா என்னைத்தான் கண்டிப்பார். "ஏன் என்னையே திட்டறீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்?" என்று அழும் என்னை, "அவங்க இலங்கைல எவ்வவளவோ கஷட்டத்தை அனுபவிச்சு, சொந்த வீடு, பணம் எல்லாத்தையும் இழந்துட்டு வந்திருக்காங்க. நாம தான் அவங்களுக்கு அனுசரனையா இருக்கனும். அவள் உன் தங்கைதானே? அவள் எது செய்தாலும், நீ பொறுத்துப் போகனும்" என்று விளக்கினார். சில மாதங்கள் எங்கள் சிதம்பரம் வீட்டில் தங்கியிருந்த சித்தப்பா, பின் திருச்சியில் ஒரு வியாபாரம் தொடங்கி படிப்படியாக காலூன்றி, இன்று ஓரளவு நல்ல நிலமையில் இருக்கிறார்.

என் அண்ணி(முதல் அண்ணனின் மனைவி) ஒரு இலங்கைத் தமிழர். சாகவச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். அண்ணியுடைய பெற்றோர்கள், தம் மகள்கள் மூன்று பேரையும் பாதுகாப்பு கருதி, 18 வயதிருக்கும் போது இந்தியாவிற்கு படிக்க அனுப்பிவிட்டார்கள். என் அண்ணி அந்த வயதிலிருந்தே ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். என் அண்ணன் அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். என்னதான் திருமணமாகி எங்கள் குடும்பத்துடன் அவர் பாதுகாப்பாக ஐக்கியமாகிவிட்டாலும், பெற்றோர்களைப் பார்க்கமுடியாமல், சொந்த ஊருக்குப் போகமுடியாமல் அவர் பல முறை தவித்ததை நான் உணர்ந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தினர் பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளின் போது குதூகலமாக இருக்கையில், அண்ணியின் முகத்தில் ஒரு சோகம் தெரியும். தன் அப்பா சாகவச்சேரியில் இறந்தபோதும், தன் செல்லத் தம்பி சாகவச்சேரியில் திடீரென்று காணாமல் போனபோதும் (இன்று வரை அவருக்கு என்ன ஆனது என்றுத் தெரியாது) அண்ணி கதறி அழுததும் எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் போர் கலகங்கள் சற்று அடங்கியிருந்த இடைவெளிகளில் இலங்கை போய் தன் அம்மாவைப் பார்த்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன் அண்ணிக்கு 'brain hemorrhage' ஏற்பட்டு அமெரிக்காவில் உயிர் துறந்தார். அவர் வாழும் போதும் சரி, சாவும் போதும் சரி, சொந்த மண்ணில் இருக்கும் பாக்கியம் கிட்டவில்லை!

இவை என் குடும்பத்தில் நடந்த இரு சம்பவங்கள் தான். இது போல் உலகம் பூராவும் சிதறிக்கிடக்கும் அகதிகளின் சோகங்களை என்னவென்றுச் சொல்வது? ஐ.நா சபை சொல்லும் செய்திப்படி உலக அகதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது உண்மையானால் மகிழ்ச்சியே. இந்த வருட உலக அகதிகள் தினத்திற்கு ஐ.நா வின் கருத்து "A New Home, A New Life". உலகத்தில் வாழும் அத்தனை அகதிகளுக்கும் ஒரு புதிய வாழ்வு கிடைக்கவேண்டுமென்பது என் பிரார்த்தனை.

Monday, June 18, 2007

நானும் 'சிவாஜி' பார்த்தேன்

போதும் போதுமென்கிற அளவு சிவாஜி திரைப்படத்தைப் பற்றி மக்கள் எழுதிவிட்டார்கள். நானும் என் பங்கை ஓரமாகத் தினித்துவிடுகிறேன்.

1. சனிக்கிழமை 7 மணி காட்சிக்கு காத்திருந்தபோது, 4 மணி காட்சி முடிந்து வெளியே வந்த நண்பர்கள் 10 பேரில் 7 பேர் "லாஜிக், கதை இதெல்லாம் மறந்துட்டு பார்த்தா படம் நன்றாக இருக்கிறது" என்றார்கள். 3 பேர் "ரொம்ப சுமாரா தான் இருக்கு" என்றார்கள்.

2. எதிர்பார்ப்பை மிகக் குறைத்துக்கொண்டே திரையரங்கில் சென்று அமர்ந்தேன்.

3. நான் தீவிர ரஜினி ரசிகை இல்லையென்றாலும், 'ரஜினி ஸ்டைல்' என்னைக் கவரத்தான் செய்தது.

4. ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் காட்சியில் பழைய இளமையான ரஜினியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஒப்பனைக் கலைஞரின் திறமை தெரிகிறது.

5. படத்தின் முதல் பாகத்தில் விவேக்கின் நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.
6. படம் முழுக்க வண்டி வண்டியாக நம் காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.

7. கதாநாயகி ஷ்ரேயா மற்றுமொரு நடிக்கத் தெரியாத அழகு பொம்மை. நடனத்தில் ஒளிர்கிறார்.

8. ரஜினி நடனமா ஆடுகிறார்? என்ன செய்கிறார் என்றே புரியவில்லை.

9. பாடல்களில் ஏ.ஆர்.ஆர் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்.

10. எல்லாரும் ரஜினி துதி பாடுவது ரொம்ப டூமச்சாக இருக்கு. சாலமன் பாப்பையா கூட "இவர் ஸ்டைலைப் பாருங்கய்யா...இவர் பேச்சை பாருங்கய்யா...இவரைப் பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் யாராவது இருக்க முடியுமா?" என்று ஒழுகுவதும், "எங்க வீட்டுக்கு வாங்க...எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க" என்று அடிக்கடி சொல்லுவதும், ரஜினியுடன் சேர்ந்து 'ரண்டக்க ரண்டக்க' பாட்டுக்கு ஆடுவதும் பார்க்க வேதனையாக இருந்தது. ஒரு தமிழ் அறிஞருக்கு இது தேவையா?

11. கடைசியில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் 'மொட்டை ரஜினி' கலக்கல்!. அங்கிலத் திரைப்பட நடிகர் Samuel.L.Jackson ஐ காப்பியடித்திருக்கிறார் என்று நினைகிறேன்.

12. க்ளைமாக்ஸ் காட்சிகளில் உட்காரவே முடியவில்லை. செமை அறுவை.

13. ரஜினி ஒரு திறமையான நடிகர். அவரை வைத்து பாலசந்தர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் நல்லத் தரமான திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். சங்கருக்கு அந்த ஆசை இல்லையோ?

14. திரையரங்கில் இடம் கிடைக்காததால் நானும் என் கணவரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தோம். இடைவெளையின் போது என்னிடம் வந்து "படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டார். "பரவாயில்லை. இதுவரை நல்லா போச்சு" என்றேன். "என்னது? நல்லா போச்சா?!" என்று அதிர்ச்சியடைந்தவர், "உன்னை புரிஞ்சிக்கவே முடியவில்லை" என்று முனகிக்கொண்டே தன் இருக்கைக்குச் சென்றார்.

15. திரையரங்கில் இருந்து வெளியே வந்ததும் கூட வந்த நண்பர், "படம் எப்படி?" என்று கேட்டார். நான் ஒரு நிமிடம் யோசித்தேன். 3 மணி நேரத்தில், 2 மணி நேரம் எனக்கு நன்றாகவே பொழுது போயிற்று. இதைச் சொன்னபோது நண்பர் என்னை நம்பமுடியாமல் பார்த்தார் "நீங்களா இப்படிச் சொல்றீங்க" என்கிற மாதிரி. அவருக்கு சுத்தமாக படம் புடிக்கலையாம்.

நான் குழம்பிப் போய் என் மேலேயே எனக்கு சந்தேகம் வந்தது...சரி! ஏதோ தெரியாத்தனமா இந்தப் படத்தைக் "கொஞ்சம்" ரசிச்சுத் தொலைத்துவிட்டேன்! விடுங்களேன்!

Tuesday, June 12, 2007

'நான் அவனில்லை' - அன்றும் இன்றும்

Image Hosting

'நான் அவனில்லை' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கி, ஜெமினி கனேசன் நடித்த பழைய 'நான் அவனில்லை' திரைப்படத்தையும் கிட்டத் தட்ட 15 வருடங்களுக்கு முன் பார்த்தேன். இன்னமும் அதில் ஜெமினியின் நடிப்பும், பல காட்சிகளும், சில பாடல்களும் நினைவில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அந்தப் படத்தின் தரம்! இந்த நவீன 'நான் அவனில்லை' க்கும் பாலசந்தரின் 'நான் அவனில்லை' க்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

புதிய படத்தின் கதாநாயகன் ஜீவன், "நான் ஜெமினி இல்லை" என்றும், இயக்குனர் செல்வா, "நான் பாலசந்தர் இல்லை" என்றும் படம் பூரா சொல்லியிருக்கிறார்கள்! ஒரிஜினல் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் புதுப் படம் கட்டாயம் பிடித்திருக்கும். படம் சலிப்புத் தட்டாமல் வேகமாகக் கதை நகர்கிறது. அதுமட்டிலும் பாராட்டலாம். பாடல்களில், 'ஏனெனக்கு மயக்கம்' மற்றும் 'ராதா காதல் வராதா' (பழைய பாடலின் re-mix) இரண்டும் மிகவும் இனிமை.

இந்த காலத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். நவீன தொழிற் நுட்பங்கள், காட்சி அமைப்புகள், ஒலி - ஒளிப் பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாவற்றிலும் புதுமையை கையாண்டவர்கள், பெண்களின் அறிவை மட்டும் 50 வருடங்கள் பின்னால் rewind செய்திருக்கிறார்கள். ரொம்பவும் கேவலமாகவும், சுலபமாகவும் பெண்களை கதாநாயகன் ஏமாற்றுகிறார். ஒரிஜினல் படத்திலும், ஐந்து பெண்கள் கதாநாயகன் ஜெமினியிடம் ஏமாந்து போகிறார்கள். ஆனால் அந்த ஏமாற்றங்கள் முட்டாள்தனமாக இல்லாமல், ஒவ்வொன்றிலும் ஒரு வலுவான காரணத்தை அமைத்திருப்பார் பாலசந்தர். ஒவ்வொரு பெண்ணையும் பேச்சிலும் செய்கையிலும் மடக்கி, மயக்கி ஏமாற்றும் ஜெமினியின் நடிப்பு அபாரமாக இருக்கும். பெண்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தைவிட, அவர் அதை செய்யும் புத்திசாலித்தனம் ரசிக்கும்படி இருக்கும். புதிய படத்தில் ஜீவன் அந்தப் பெண்களை ஏமாற்ற எடுக்கும் முயற்சிகள் அபத்தமாக இருக்கின்றது. ஒரே காட்சியில் அந்தப் பெண்கள் ஜீவனை திருமணம் செய்துகொள்ள சம்மதித்து விடுகிறார்கள். அதுவும், ஆசிரமத் தலைவியின் மகளை மடக்குவதற்கு கிருஷ்ண பகவான் பேசுவது போல், கிருஷ்ணர் சிலைக்குப் பின் ஒலிபெருக்கி வைப்பது நம்பும்படியாக இல்லை. மேலும், சினேகாவின் கதாபாத்திரத்தில் பழைய படத்தில் லட்சுமி நடித்திருப்பார் - ஜெமினியின் உருது கவிதைத் திறனால் ஈர்க்கப்பட்டு பின் ஏமாந்த பெண்ணாக. இருந்தாலும், ஜெமினியின் புத்திசாலித்தனத்தினால் ஈர்க்கப்பட்டு, நீதி மன்ற நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவாள். தீர்ப்பை பற்றி லஷ்மியும், நீதிபதியான அவருடைய தந்தையும் விவாதித்துக் கொள்வதெல்லாம் சற்று அறிவுபூர்வமாக இருக்கும். புதிய படத்தில் சினேகா ஏன் வருகிறார் என்றே தெரியவிலலை!

புதிய 'நான் இவனில்லை' நன்றாக இல்லை என்று சொல்லமுடியாது. இரண்டரை மணி நேரம் பொழுது போனது தெரியவில்லை, இருந்தாலும் கே.பி யின் 'நான் அவனில்லை' போல் இது இல்லை.

'ராதா காதல் வராதா' பாடலை உண்மையிலேயே நன்றாக re-mix செய்திருக்கிறார்கள். அனால், கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் தான் இசையின் இனிமையை உணரமுடியும்!...நவனீத காதல் போதை தராதா...ராஜ லீலை தொடராதா...ராதா ராதா காதல் வராதா என்று கடைசியா குரலை ஒரு தூக்கு தூக்குவாரே, சூப்பர்! பழைய பாடலை பாலமுரளிக் கிருஷ்ணா பாடினார் என்று சிலர் சொல்கிறார்கள், சிலர் எஸ்.பி.பி என்கிறார்கள். எது உண்மை? புதிய பாடலை பாடியவர் யார்?. தெரிந்தால் சொல்லுங்கள்.

Friday, June 08, 2007

நியூயார்க் தோசை வண்டி

நான் ஓய்வு நேரங்களில் Food Network தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதுண்டு. இதில், வெறும் சமையல் மட்டுமன்றி, உணவு சம்பந்தப்பட்ட போட்டிகள், நிகழ்வுகள், ஆராய்ச்சிகள் என்று பல வைகயான, வித்தியாசமான நிகழ்ச்சிகள் உண்டு. எல்லாவற்றையும் விட, எனக்குப் மிகவும் பிடித்தது 'Unwrapped' என்கிற நிகழ்ச்சி. உணவுக்குப் பின் ஒரு அறிவியலும் சரித்திரமும் இருக்கிறது என்று எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. ஏதாவது ஒரு பிரபலமான உணவு வகை, உதாரணத்திற்கு Hot Dogs, பெரிய தொழிற்சாலைகளில் எப்படி செய்யப்படுகிறது என்று காட்டுகிறார்கள். ராட்சத இயந்திரங்களினால் மாமிசம் வெட்டப்பட்டு, சீராகக் கலக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கன்வேயர் பெல்ட்டுகளில் வரிசையாக, ஒரே அளவில் காகிதங்களால் சுற்றப்பட்டு பின் பெட்டிகளில் அடைத்து கடைகளுக்கு அனுப்பப் படும் வரை ஒரு திரைப்படம் போல பார்க்க முடிகிறது. Hot Dogs என்கிற பெயர் எப்படி வந்தது, அதை யார் தொடங்கினார்கள் போன்ற வரலாற்று செய்திகளும் நமக்குத் தெரியவருகிறது.

சில நாட்களுக்கு முன் Unwrapped நிகழ்ச்சியில், நியூயார்க்கில் சாலையோர வண்டி உணவகங்களுக்கான(street vendors) விருது நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். முதலில் இவர்களுக்குக் கூட விருதா? என்று ஆச்சரியமாக இருந்தது. பிறகு அந்த விருதின் பின் உள்ள நல்லெண்ணம் மனதை நெகிழ வைத்தது. நியூயார்க் நகரின் பன்னாட்டு உணவு கலாசாரத்தில் இந்த சாலையோர வண்டி உணவகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட சாலையோர உணவகங்கள் நடத்தும் தொழிலாளிகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், தொழில் தொடங்க பண உதவி அளிப்பதற்கும் ஒரு அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பு வருடா வருடம் "Vendy Awards" என்கிற விருது நிகழ்ச்சியை நடத்துகிறது.

முதலில் நியூயார்க்கில் உள்ள அனைத்து சாலையோர வண்டி உணவகங்களில் இருந்து நான்கு சிறந்த உணவகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பிறகு, அந்த நான்கில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை நடத்துபவருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த கடைசி நான்கில் வருவதே பெரிய விசயம் தான். கடந்த 2006 ஆண்டு நடந்த தேர்வில், அந்த நான்கில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் "The Dosa Man" என்று அழைக்கப்படும் குமார் என்ற இலங்கைத் தமிழர்!!!
Image Hosting

மன்ஹாட்டனில் உள்ள வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் இவர் நடத்தும் இந்த சாலையோர வண்டி உணவகத்தில் இவர் தயாரிக்கும் சுவையான, சூடான, மொறு மொறுப்பான மசாலா தோசைகளுக்கும், சாம்பார், சட்னி வகைகளுக்கும் 45 நிமிடங்கள் கூட வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறார்கள் நியூயார்க் மக்கள்! இதில் பெரும்பாலானோர் அருகில் இருக்கும் நியூயார்க் பல்கலைக் கழக மாணவர்களாம்!
Image Hosting

12 வருடங்களுக்கு முன் யாழ்பாணத்திலிருந்து நியூயார்க் நகருக்கு வந்த குமார், முதலில் ஒரு தென்னிந்திய உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றினார். பின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பி, சாலையோரத்தில் தானே ஒரு சிறு வண்டியில் உணவகம் தொடங்கினார். தோசையின் பூர்வீக சுவையை தக்கவைப்பதற்கு தோசை மாவை கல் உரலிலேயே அரைக்கிறார்! ஒவ்வொருவருக்கும் வேண்டியபடி, கண்களுக்கு எதிரே சுடச் சுட தயாரிக்கப்பட்டு பறிமாறிக்கப்படும் இந்த தோசைகள், நியூயார்க் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தோசை மட்டுமன்றி, இட்லி, மெது வடை, சமோசா பொன்றவையும் குமாரின் கடையில் கிடைக்கிறது.

அடித்துக்கொள்ள முடியாதது சுவையா விலையா என்று பிரமிக்கும் அளவு, தோசைகளின் விலையும் இருக்கிறது! ஒரு சாதா தோசை $3, ரவா தோசை $4, பாண்டிச்சேரி தோசை $5! இதில் மிகவும் பிரபலம், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி போட்டு செய்த காரமான மசாலைவை உள்ளே வைத்துப் பறிமாறப்படும் பாண்டிச்சேரி தோசையாம்! இதோ அந்தத் தோசையின் புகைப்படம்...

Image Hosting

அடுத்த முறை நியூயார்க் செல்லும் போது, நெராக இந்தத் தோசை வண்டியைத் தேடித்தான் போவதென்று முடிவு செய்திருக்கிறேன்!

Monday, June 04, 2007

தூது செல்ல ஒரு தோழி இல்லை

Image Hosting

பொதுவாக சனிக்கிழமை காலை வேளைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வேலைக்குச் செல்லும் பதட்டமில்லாமல் தாமதமாக எழுந்து, தேநீர் கோப்பையுடன் உலாத்துவது வழக்கம். ஆனால் அப்படிப்பட்ட சனிக் கிழமையைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது வெளியூர் பயணம், ஏதாவது விழா, கூட்டம் என்று போனதில் என்னுடைய அபிமான சனிக் கிழமைகளைத் தொலைத்திருந்தேன். கடந்த சனிக்கிழமை காலை கண்விழித்தபோது அமைதியாக இருந்தது. எந்த பயணமும் இல்லை, எந்தத் திட்டமும் இல்லை. ஆஹா! இதற்குத் தானே ஆசைப்பட்டேன்!


என் தோழிகளிடம் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது...இன்று நிதானமாகப் பேசலாம் என்று தொலைபேசியை எடுத்தேன். சட்டென்று ஒரு உண்மை உரைத்தது! அவர்கள் தான் இந்தியா போய்விட்டார்களே?!!! விடுமுறைக்கு இல்லைங்க! நிரந்தரமாக!. ஆமாம்...கடந்த ஒரு வருடமாகவே என்னுடைய மூன்று நெருங்கியத் தோழிகள் குடும்பத்தோடு இந்தியா சென்று குடியேறப்போகிறோம் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். திடீரென்று நிஜமாக போய்விட்டார்கள். ஒரு தோழி சென்ற வருடமே போய்விட்டார். மற்ற இருவரும் சென்ற மாதம் தான் போனார்கள். எல்லாருக்கும் குதூகலமாக 'farewell party" எல்லாம் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தபோது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு அமைதியான சனிக்கிழமை காலையில் அவர்களின் பிரிவு என்னைத் தாக்கியது.


சரி, அவர்களுடன் பேசியே ஆகவேண்டும் என்று ஒவ்வொருவராக தொலைபேசியில் அழைத்தேன். ஒருவர் பெங்களூரில் குழந்தைகளுடன் "Spider Man" படத்திற்கு நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார். மற்றொருவர் சென்னையில் குடும்பத்துடன் "Pizza Corner" சென்றுகொண்டிருந்தார். என்ன வேடிக்கை?! நாம் இங்கே தமிழ்த் திரைப்படங்களையும், "சரவணபவா" உணவகங்களையும் நாடிச் செல்கிறோம். அங்கே அவர்கள் ஆங்கிலப் படங்கள், மேற்கத்திய உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது எவ்வளவு உண்மை!


திரும்பிச் சென்ற என் தோழிகள், ஒரு தவறைச் செய்துவிட்டார்கள்! தம் குழந்தைகளை மட்டும் தான் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கணவன்மார்களை இங்கேயே இருந்துச் சம்பாரித்து அனுப்புங்கள் என்று விட்டுச் சென்றுவிட்டார்கள்! விளைவு??? என் கணவரின் தொழர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை! எனக்குத்தான் தோழிகள் பஞ்சம் இப்போது. பச்சை விளக்கு(?) திரைப்படத்தில் வரும் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்ற பாடல் என் சூழ்நிலைக்கு பொறுத்தமாக இருக்கிறது :-)

Tuesday, May 22, 2007

அசின், விஜய் - இவர்களுக்கு பிடித்த சாப்பாடு

சமீபத்தில் வாசிங்டனில் 'பெரியார்' திரைப்படம் வெளியிடப்பட்டது. நான் வெளியூர் சென்றிருந்ததால் பார்க்கமுடியவில்லை. பார்த்தவர்களிடம் பேசியதிலிருந்து படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது என்று தெரியவருகிறது. பெரியாரின் சுயமரியாதை மற்றும் பெண் முன்னெற்றக் கருத்துக்களை பெருமளவு மதிக்கிறேன் நான். இந்த நவீன காலத்தில் கூட பெண்களைப் பற்றி ஒரு முற்போக்கான கருத்தைச் சொல்லிவிட்டால் அது சர்ச்சையிலும், சண்டையிலும், துடப்பக்கட்டைத் தூக்குவதிலும் கொண்டு போய் நிறுத்துகிறது! ஆனால் கிட்டத் தட்ட 100 வருடங்களுக்கு முன்பே பெண் முன்னேற்றத்தைப் பற்றி அதிரடியான முற்போக்கான கருத்துக்களை துணிவுடன் சொல்லியவர் பெரியார். அவருடைய கருத்துக்கள் சரியான முறையில் நம் சமூதாயத்தில் சென்றடைந்திருந்தால், இன்று பெண்களின் சுயமரியாதைக்கும் சமூக முன்னேற்றதிற்கும் பஞ்சமே இருந்திருக்காது. எத்தனைப் பெரியார் வந்தால் என்ன? எத்தனை பெரியார் திரைப்படம் வந்தால் என்ன? நாங்கள் மாறமாட்டோம் என்று பல பெண்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இன்று.

தமிழ்ச் சினிமா உலகம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் அசின், விஜய் இவர்களின் பேட்டியைப் பார்த்தேன். சினிமா என்பது ஒரு தனி உலகம். நடிப்பு என்பது ஒரு பெரும் கலை. இதனைப் பற்றியெல்லாம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருக்க, அசினிடம், விஜய்க்கு பிடித்த சாப்பாடு என்ன? அவருக்குப் பிடித்த நடிகர் யார்? விஜய்யுடைய தாயார் சமைக்கும் உணவுகளில் என்ன நன்றாக இருக்கும் - இப்படிப்பட்டக் கேள்விகள் கேட்கப்பட்டது. அதே போல் விஜய்யிடம், அசினுக்குப் பிடித்த விசயங்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், அசின் விஜய்யிற்குப் பிடித்த ஐட்டங்களை, பிரியாணியில் தொடங்கி டாண் டாண் என்று குஷியாக பதில் சொன்னார். விஜய் அசினுக்குப் பிடித்த ஐட்டங்களைச் சொல்லும் போது ஏதோ ஒன்றும் தெரியாத மாதிரி யோசித்து, தயங்கி....அடா அடா என்ன ஒரு நடிப்பு! சட்டென்று சொல்லிவிட்டால் 'ஹீரோ இமேஜ்' குறைந்துவிடுமே?!

மற்றொரு முறை 'நான் அவனில்லை' திரைப்படத்தைப் பற்றிய ஒரு பேட்டியில், அப்படத்தின் கதாநாயகிகள் சினேகா, நமிதா, மாளவிகா மூவரும் மாறி மாறி கதாநாயன் ஜீவாவைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் கதாநாயகிகளைப் பற்றி ஜீவன் எதுவுமே சொல்லவில்லை. சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதுதான் உண்மையோ?

பத்மப்ரியா என்ற ஒரு நடிகையிடம் "நீங்கள் ஏன் General Electrics வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "சினிமா, நடிப்பு ஆகியவற்றின் மேல் எனக்குள்ள ஆர்வம் காரணமாக நான் நடிப்புத் துறைக்கு வந்தேன்" என்று சொன்னார். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த துறையில் இருக்கவேண்டுமென்பது தான் என் விருப்பமும் கூட, அனால் பத்மப்ரியா போன்ற இளம் பெண்களுக்கு எத்தனை நாள் சினிமா சோறு போடும்? இளமையும் அழகும் இருக்கும் வரை தானே? பெண்களுக்கு ஒரு நிலையான வேலை அவசியம் தேவை. General Electrics போன்ற ஒரு நிறுவன வேலையை உதறித்தள்ளிவிட்டு ஒரு பெண் சினிமாத் துறையை நாடுவது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதா என்று தெரியவில்லை. அப்படி சினிமாத் துறைக்கு ஆர்வத்துடன் வந்தவர், அங்கே என்ன செய்தார்? 'தவமாய் தவமிருந்து' படத்தில் நன்றாக நடித்திருந்தார். ஆனால் 'பட்டியல்' படத்தில் அவர் ஆடிய ஒரு ஆட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன் நான். அப்படி ஆடுவதற்காகவா ஒரு நிலையான வேலையை விட்டு வந்தார்? வருத்தமாக இருக்கிறது.

பல நடிகைகள், ரஜினி சார் இப்படி, ரஜினி சார் அப்படி, கமல் சார் ஒரு legend, கமல் சாரோடு நடிப்பது என் வாழ்க்கையில் லட்சியம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ, கமலோ எந்த ஒரு நடிகையப் பற்றியாவது உயர்வாகப் பேசியிருக்கிறார்களா? அந்த நடிகையோடு நடிப்பது தன் வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்லியிருக்கிறார்களா? ரஜினி, கமல் மேல் எந்தத் தவறும் இல்லை. அப்படி சொல்லும் அளவு நம் நடிகைகள் இன்று இல்லை என்பது தான் உண்மை.

மற்றொரு நடிகை - எனக்குப் பெயர் ஞாபகம் இல்லை. "நான் தூங்கும் போது என்னுடைய teddy bear ஐ கட்டிப்பிடித்துக்கொண்டு தான் தூங்குவேன்" என்று சொன்னார். தன் கரடி பொம்மையைத் தாண்டி, சுற்றி நடக்கும் துயரங்களை, அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை இந்த நடிகை என்றைக்காவது பார்க்க நேருமா?

ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் தம்மீது விழும் அளவு ஒரு சக்திவாய்ந்த துறையில் இருக்கும் பெண்கள், எப்படியெல்லாம் தம்மை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம்?! அதைவிட்டுவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் குடி, போதை மருந்து போன்ற கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வது என்று தம்மைத் தாமே அழித்துக்கொள்கிறார்கள்.

தொடக்கத்திற்கே மீண்டும் போகிறேன். அசின் - விஜய் பேட்டியின் நோக்கம் தான் என்ன? அசின் விஜய்யைப் பற்றியோ, விஜய் அசினைப் பற்றியோ விபரங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?. இல்லை, அவர்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்துகொண்டு நாம் தான் என்ன செய்யப் போகிறோம்? பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினத்தன்று பண்டிகைகளின் வரலாற்றைவிட, நடிகர் நடிகைகளின் வரலாறுகள் தான் நமக்கு அதிகம் புகட்டப்படுகிறது. இவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள் நாம் நம் பொன்னான நேரத்தை செலவு செய்து பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் தினமும் இவர்களைப்பற்றியே படித்தும், பார்த்தும் கொண்டிருக்க?

Robert Frost இன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

சினிமாவும் தொலைக்காட்சியும் கொடுக்கும் புகழிலும், பணத்திலும் பெண்கள் மூழ்கி தாம் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களுடைய சுயமரியாதை, promises, miles எல்லாமே அடிபட்டுபோய்விடுகிறது.

Monday, May 21, 2007

அன்னையர் தினத்தன்று என்னை அசத்திய ஒரு அன்னை

மே மாதம் 11 ஆம் தேதி நான், கணவர் மற்றும் ஒரு நண்பர் குடும்பம் Tennessee யில் உள்ள Smoky Mountains சென்றிருந்தோம். மே 13 ஞாயிறு அன்று காலை நல்ல இளம் வெயில், வெளியில் உலாவ அருமையான நாள். Laurel Falls என்கிற நீர்வீழ்ச்சியைச் சென்று பார்க்க திட்டமிட்டோம். நீர்வீழ்ச்சிக்கு அருகே கார் செல்லாது என்றும், காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு 1.3 மைல்கள் நடந்து மலை மேல் ஏறிச்செல்ல வேண்டும் என்று அறிந்தோம். கணவரும் நண்பர்களும் "ஆஹா! hiking போல் ஜாலியாக போகலாம்" என்று குதூகலத்துடன் டென்னிள் ஷூ அனிந்துகொண்டு
கிளம்பினார்கள். நானோ, போக 1.3 மைல்கள் வர 1.3 மைல்கள் - மொத்தம் 2.6 மைல்கள் நடக்கவேண்டுமா என்று தயக்கத்துடன் பின் வாங்கினேன். "நான் காரில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் போய்வாருங்கள்" என்று சொன்னேன். அவர்கள் விடவில்லை. "மெதுவாக நடக்கலாம், வாங்க" என்று வற்புறுத்தி அழைத்துத் சென்றார்கள்.

மலை ஏறத் தொடங்கினோம். மக்கள் நடந்து செல்வதற்காகவே அந்த ஒற்றை அடிப் பாதையை அமைத்திருந்தார்கள். மிகவும் செங்குத்தாக இல்லாமல், லேசான மேடாக பாதை மேலே சென்றதால் நடப்பதற்கு சுலபமாக இருந்தது. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள், நடுவே ஒடும் அருவி...இயற்கை வளம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அவ்வப்போது வழியில் இருந்த பாறைகளில் அமர்ந்து சற்று இளைபாறிவிட்டு தொடர்ந்து நடந்தோம். அமெரிக்காவில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் வசிக்கும் வெள்ளைகாரர்ளுக்கு தோழமை உணர்வு அதிகம்.
நடைபாதை வழியில் எதிரே தென்பட்டவர்களெல்லாம் முகம் மலர சிரித்து "Hi" சொல்லிச் சென்றார்கள். சிலர் "You are not very far from the falls. It's very pretty up there" என்று சொல்லி எங்கள் ஆர்வத்தை அதிகரித்துவிட்டுச் சென்றனர்.
மேலே செல்லச் செல்ல, அருவியின் சப்தத்தையும் சாரலையும் உணரமுடிந்தது. பாதையும் கரடு முரடாக மாறியது. வழியில் ஒரு பெண்மணி தென்பட்டார். வெள்ளைக்காரர். 40 வயதிருக்கும். ஒரு சக்கர நாற்காலியைப் பிடித்துக்கொண்டு பாதையின் ஓரத்தில் நின்றிருந்தார். சக்கர நாற்காலியில் ஒரு சிறுமி - 8 வயதிருக்கும். அழுதுகொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அருகில் சென்று ஏதாவது உதவி தேவையா என்று கேட்போது அந்தப் பெண்மணி நிலவரத்தைச் சொன்னார். அன்று அன்னையர் தினம் என்பதால் தன் நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு Laurel நீர்வீழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார். தன் இரண்டாவது குழைந்தையான அந்தச் சிறுமிக்கு கால் ஊனம். சக்கர நாற்காலியில் அவளை வைத்து தள்ளிக்கொண்டு அவ்வளவு தூரம் வந்துவிட்டார். அனால் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் பாதை கரடு முரடாக மாறிவிட்டதால் சக்கர நாற்காலியை அவரால் தள்ள முடியவில்லை. அந்தச் சக்கர நாற்காலியின் எடை 350 பவுண்டுகளாம்!!! அடேயப்பா!! வாயடைத்துப் போனேன். தனி ஆளாக இவ்வளவு தூரம் எப்படி தள்ளிக்கொண்டு வந்தார்? கூட ஆண் துணை யாரும் இல்லை. கணவர் வரவில்லையா, விவாகரத்தாகிவிட்டதா, இறந்துவிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒரு ஆண் துணை அந்த நேரத்தில் இல்லை என்பது எந்த வகையிலும் அந்தப் பெண்மணியை பாதித்தாகத் தெரியவில்லை.

என் கணவரும் நண்பரும் சக்கர நாற்காலியைத் தள்ள முற்பட, பாறைகளின் இடுக்கில் சக்கரம் சிக்கி நகர மறுத்தது. அருவிக்கு இன்னும் 5 நிமிட நடைதான் பாக்கி இருந்தது. என் கணவர், "நான் வேண்டுமானால் குழந்தையை தூக்கிக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டார். அந்தப் பெண்மணியும் மகளிடம், "Do you want this uncle to give you a piggy back?" என்று கேட்டார். அந்தச் சிறுமி என் கணவரைப் பார்த்து மிரண்டு :-) "No" என்று மறுத்துவிட்டாள். அவ்வளவு தூரம் நீர்வீழ்ச்சியைப் பார்க்கவேண்டுமென்று அயாராது ஆவலுடன் வந்திருக்கும் அம்மாவுக்கும் மகளுக்கும் எப்படியாவது உதவவேண்டுமே என்று நாங்கள் தவிக்க, அந்தப் பெண்மணியோ புன்னைகையுடன், "எங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம். என்னுடைய மற்ற மூன்று குழந்தைகளும் நீர்வீழ்ச்சிக்கருகே இருப்பார்கள், அவர்களிடன் இந்தக் காமிராவைக் கொடுத்து நிறைய புகைப்படங்கள் எடுக்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி காமிராவைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு நாங்கள் மேலே நடந்தோம். சில அடிகள் நடந்தபின் நான் திரும்பிப் பார்த்தேன். வெயிலின் சூடு தாங்கமுடியாமல் வியர்த்து ஊத்தும் மகளுக்கு தன்னையே குடையாக்கி நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அருவிக்கு வந்தோம். அங்கிருந்த சிறு கூட்டத்தில் அந்தப் பெண்மணியின் மூன்று குழந்தகளையும் கண்டுபிடித்தோம். மகனுக்கு 10 வயதிருக்கும். அவனுடைய தங்கைகள் இரட்டையர்கள். 6 வயதிருக்கும். தேவதைகள் போல் இருந்தார்கள். அவர்களிடம் காமிராவைக்கொடுத்து அம்மா சொன்ன செய்தியைச் சொன்னோம். சற்று நேரம் நீரில் விளையாடிவிட்டு அவர்கள் தன் அம்மாவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நீர்வீழ்ச்சிக்கு எதிரே இருந்த பாறையில் அமர்ந்தேன். சக்கர நாற்காலியுடன் பாதையின் ஓரத்தில் காத்திருக்கும் அந்த பாசமான அன்னை என் மனதை நிறைத்தாள். நான்கு சிறு குழந்தைகளை, அதிலும் ஒரு ஊனமான குழந்தையை அழைத்துக்கொண்டு, கணமான ஒரு சக்கர நாற்காலியையும் தள்ளிக்கொண்டு அன்னையர் தினத்தன்று ஒரு நீர்வீழ்ச்சியை தன் குழந்தைகளுக்குக் காட்டவேண்டுமென்று வந்திருக்கும் அந்தப் பெண்மணிக்கு எவ்வளவு மன உறுதி இருக்கவேண்டும்?! அவரைப் பார்த்து வளரும் அந்தக் குழந்தைகளும் அதே மன உறுதியைக் கற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அருவி கொட்டிக்கொண்டிருந்தது. ஏதேதோ கவிதைகள் ஞாபகம் வந்தது.

இயற்கை அன்னை!
சந்திரனும் சூரியனும் அவளின் கண்கள்
காற்று அவளின் சுவாசம்
வானவில் அவளின் புன்னகை
இடியும் மின்னலும் அவளின் கோபம்
பூக்கள் அவளின் அழகு
மேகங்கள் அவளின் கணவு


இதில் இரண்டு வரிகளைச் சேர்க்கத் தோன்றியது...

பாறை அவளின் மன உறுதி!
அருவி அவளின் அன்பு!


புகைப்படமேல்லாம் எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் கார் நிறுத்திய இடத்திற்கு நடையைக்கட்டினோம். வழியில் அந்தப் பெண்மணியைக் காணவில்லை. கீழே இறங்கிச்சென்றிருப்பார்கள் போலும். எங்களுடன் வந்த நண்பரின் மனைவி "பாத்தீங்களா? இன்று அன்னையர் தினம் என்று தெரியாமல் போய்விட்டது! இந்தக் கணவன்மார்களும் தெரியாதது போல் நடித்துவிட்டார்கள். ஒரு பரிசு, ஒரு வாழ்த்து ஒன்னும் காணோமே?" என்று குறைப்பட்டுக்கொண்டார். எனக்கு எந்தக் குறையும் மனதில் ஏற்படவில்லை. நடப்பதற்கு பயந்துகொண்டு காரில் புத்தகம் படித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க நினைத்த நான் எங்கே? மேலே அருவி அருகே நான் பார்த்த அந்தப் பெண்மணி எங்கே? அன்னையர் தின வாழ்த்துக்கும், பரிசுக்கும் அவருக்குத்தான் தகுதி உண்டு!.

Wednesday, May 02, 2007

ஷில்பா & ரிச்சர்ட்

நான் ரிச்சர்ட் கியரின் பரம விசிறி. 57 வயதிலும் என்ன ஒரு வசீகரம்! என்ன ஒரு ஸ்டைல்! ஆனால், நாடு விட்டு நாடு வந்திருக்கும் போது மேடையில் சற்று கவனமாக நடந்திருக்கலாம். இந்தியாவிற்கு பல முறை வந்துபோகும் அவருக்கு, அமெரிக்கா போல் இந்தியாவில் ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பதெல்லாம் ஒத்துக்கொள்ளப்படாத ஒன்று என்று தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக விடுமுறைக்கு ஒரு ஊருக்குப் போனாலே அந்த ஊரைப் பற்றி படித்து, ஆராய்ந்தோ, கேட்டோ தெரிந்துகொண்டு போவது அமெரிக்கர்களின் வழக்கம். இதுவே துபாய், குவைத் போன்ற நாடுகளாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. நம்ம ஆட்களும், ஒரு கண்டனம் தெரிவித்துவிட்டு அத்தோடு இதற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம், ஆனால் அதற்காக போராட்டம் நடத்தி, கைது செய்யும் அளவிற்குப் போவதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை ஷில்பா ஷெட்டி ரிச்சர்ட் கியரை அறைந்திருந்தால் அவரைக் கைது செய்வதற்கு பதில் கொண்டாடி இருப்பார்களோ?

'Indian Law Made Easy' என்ற இணையதளத்தில் இப்படி படித்தேன்:
WHAT ARE OBCENE ACTS AND SONGS AN OFFENCE
The obscene act or song must cause annoyance. Though annoyance is an important ingredient of this offence, it being associated with mental condition has often to be inferred from proved facts. The essential elements are:
1) Does any obscene act in any public place,
2) Sings, recites or utters any obscene song ballads or words, in or near public place.
PUNISHMENT
Whoever causes annoyance to others shall be punished with an imprisonment, which may extend to three months, or with fine, or both.

இதில் இரண்டாவதாக பட்டியலிட்டிருக்கும் விசயத்தைக் கவனியுங்கள். சினிமா தியேட்டரும் ஒரு பொது இடம் தானே? தமிழ், இந்தி சினிமாக்களில் வராத அருவருப்பான பாடல் காட்சிகளா, அல்லது பாடல் வரிகளா? இதே ஷில்பா ஷெட்டி எத்தனை சினிமாக்களில் அருவருப்பான பாடல் காட்சிகளில் நடித்திருப்பார்? எத்தனை லட்சம் பேர் அதைப் பார்த்திருப்பார்கள்? அதில் அடிபடாத கலாசாரமும், கெளரவமும் அந்த ஐந்து நிமிட மேடை நிகழ்வில் தான் அடிபட்டுவிட்டதா? ஷில்பாவும் ரிச்சர்ட்டும் நடத்திய அந்த நிகழ்ச்சி, லாரி ஓட்டுனர்களுக்கான AIDS விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொடர்ந்து பல நாட்களாக சாலைகளிலேயே நேரத்தைச் செலவழிக்கும் லாரி ஓட்டுனர்கள் வழியில் உள்ள கிராமங்களில் இதற்காகவே தொழில் செய்யும் பெண்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்ளலாம், ஆனால் காண்டோம் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லும் அளவு வளர்ந்து விட்ட கலாசாரத்தை, விளையாட்டாக ஒரு நடிகர் ஒரு நடிகையைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அவமானப்படுத்திவிட முடியுமா?

மேலைநாட்டுக் கலாசாரம், உடைகள், மொழி, உணவு என்று எல்லாமே ஊடுருவிக்கொண்டிருக்கும் இந்தியாவில், இந்தியக் கலாசாரம் என்று இன்னமும் என்ன மிச்சமிருக்கிறது? உண்மையில் "கலாசாரம்" என்பதை எப்படி விவரிப்பது என்றோ எப்படி புரிந்துகொள்வதென்றோ எனக்குத் தெரியவில்லை.