Monday, October 23, 2006

என் புத்தக உலகம் - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி

சிறு வயதில் எனக்கு தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. கல்லூரி நாட்களில் குமுதம், ஆனந்த விகடனில் வரும் தொடர்களை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். அடுத்த வாரம் பத்திரிக்கை வருவதற்குள் மண்டை வெடித்துவிடும் போல் இருக்கும். சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" எனக்கு மிகவும் பிடித்த கதை!

Image hosted by LetMeHost.com
முன் பாதி கதை திருநல்வேலியில், இரண்டாம் பாதி நியூயார்க்கில்! Irving Wallace, John Grisham, Sydney Sheldon போன்ற ஆங்கில நாவலாசிரியர்கள், அவர்கள் கதையில் சம்பவங்கள் எந்த ஊரில் நிகழ்கிறதோ, அங்கேயே சென்று தங்கி சுற்றுச் சூழலை நன்றாக ஆராய்ந்து கதையை எழுதுவார்கள். அதேபோல் சுஜாதா அந்த காலத்திலேயே நியூயார்க் நகர வாழ்க்கையை அருமையாக விவரித்திருப்பார். முக்கியமாக அப்பாவி தமிழ்நாட்டு கதாநாயகன் திருநல்வேலியிலிருந்து நியூயார்க் வந்து இறங்கி JFK விமான நிலையத்தில் செய்வதறியாமல் தடுமாறும் காட்சி ரொம்ப தத்ரூபமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். அமெரிக்கா வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் யதார்த்தமாக சொல்லியிருப்பார். மற்றபடி வேறு தமிழ் புத்தகங்கள் நான் அப்போது படிக்கவில்லை.

கல்லூரி முடித்தபின் சென்னையில் பயிற்சி, அமெரிக்கா பயணம், வேலை தேடுதல், திருமணம், குடும்பப் பொறுப்பு என்று நான்கைந்து ஆண்டுகள் பறந்தன. என் கணவர் தமிழ்ப் புத்தகங்கள் நிறைய படிப்பார். அவ்வப்போது வெளியிடப்படும் புத்தகங்களை பட்டியல் போட்டு தன் தம்பிக்கு அனுப்பி, சென்னையில் அவற்றை வாங்கி அனுப்பச்சொல்வார். ஆனால் ஒரு முறை கூட நான் அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்த்ததில்லை. ஒரு நாள் சன் தொலைகாட்சியில் வைரமுத்து எழுதிய "கள்ளிக் காட்டு இதிகாசம்" புத்தக வெளியீட்டு விழாவை பார்க்க நேரிட்டது. அதில் கலைஞர், பாரதிராஜா போன்ற பலர் அந்தப் புத்தகத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிப் பேசினார்கள். பாரதிராஜா பேசும்போது, "இப்படி ஒரு கதையை இவனால் மட்டும் தான் எழுதமுடியும்! என்னால் மட்டும் தான் திரைப்படம் எடுக்கமுடியும்! அவனால்(இளையராஜா) மட்டும் தான் இசையமைக்க முடியும்! என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். அட! இந்தக் கதை பாரதிராஜா திரைப்படம் பார்ப்பது போல் இருக்கும் போலிருக்கு! படிக்க வேண்டுமே?! என்கிற ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது.

கணவரின் தம்பி மூலம் "கள்ளிக் காட்டு இதிகாசம்" என் வீட்டிற்கு வந்திறங்கியது. ஒரு விடுமுறை நாளில் மதிய நேரத்தில் புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். எத்தனைப் பக்கங்கள் இருந்தன என்று நினைவில்லை. தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து ஒரு வாரத்தில் முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டு படிக்கத் தொடங்கினேன். புத்தகத்தை கீழே வைக்கும் போது பின்னிரவு ஒரு மணி! முழு கதையையும் அன்றே படித்து முடித்துவிட்டேன்! அப்படி நான் ஒரே மூச்சாகப் படித்து முடிப்பதற்கு அது ஒரு விறுவிறுப்பான காதல் கதையோ, திகிலான மர்ம நாவலோ அல்ல! அது ஒரு ஏழைக் குடியானவனின் சோகக் கதை! கதாநாயகன் - அறுபது வயது கிழவன்... கதையில் களம் - வறண்ட கள்ளிக் காடு! இவற்றை வைத்து ஒரு இதிகாசத்தைப் படைக்கமுடியுமா? முடியுமென்று நிரூபித்திருக்கிறார் வைரமுத்து!

Image hosted by LetMeHost.com

பேயத் தேவர் என்கிற கிழவன் மண்ணையே மருந்தாகவும் கடவுளாகவும் நினைத்து வாழும் ஒரு ஏழை விவசாயி. வைகை நதிக் கரையின் ஓரம் இருக்கிறது அவன் வாழும் கிராமம். திடீரென்று ஒரு நாள் சர்க்காரிடம் இருந்து ஆணை வருகிறது - இன்னும் சில நாட்களில் வைகை அணைக்கட்டு திறந்துவிடப்படும் என்றும், அருகில் இருக்கும் கிராம மக்கள் எல்லாம் இடைத்தைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குச் சென்றுவிடவேண்டுமென்றும். துடிதுடித்துப் போகிறார் பேயத்தேவர். சர்க்காரிடம் சென்று பேசுகிறார். மேலிடத்தில் முறையிடுகிறார். போராட்டம் நடத்துகிறார். அவருடைய அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. ஊரைக் காலி செய்யும் நாளும் நெருங்குகிறது. ஒவ்வொரு குடும்பமாக ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள். கடைசி நாள் வரை தான் நம்பிய மண் தன்னைக் கைவிடாது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். கடைசி நாளன்று அணைகட்டிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு நிலப்பகுதிகளை விழுங்கிக்கொண்டே வருகிறது! வேறு வழியின்றி பேயத்தேவர் குடும்பத்தாருடன் தானும் தன் மனைவியும் ஆசை ஆசையாகக் கட்டிய மண் வீட்டைக் காலி செய்துவிட்டுச் செல்கிறார். சற்றுத் தொலைவு சென்றதும், தன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்ட சில பூர்வீகப் பொருட்களின் நினைவு வர, அவற்றை எடுத்து வருவதற்காக மீண்டும் வீட்டிற்குச் செல்கிறார். வெள்ள நீர் நிலை அதிகமாகிவிட, அவர் வீட்டின் உள்ளேயே நீரில் மூழ்கி இறந்துவிடுகிறார். அவர் நம்பிய மண்ணே அவரை உள்ளே இழுத்துக்கொள்கிறது!

கதையைப் படித்து முடித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது! சிட்னி ஷெல்டனின் கதாநாயகிக்காக கண்ணீர் விட்டது போலவே பேயத்தேவருக்காகவும் கண்ணீர் விட்டேன். தெய்வங்களை வைத்து இதிகாசம் எழுத அன்று எத்தனையோ பேர் இருந்தார்கள். மனிதர்களைப் பற்றிய இதிகாசம் எழுத எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? ஒரு விவசாய நாட்டில் ஒரு விவசாயியின் கதையை எத்தனைப் பள்ளிகளில் பாடமாகப் படிக்கிறார்கள்? இப்படி மனதில் பல கேள்விகள்!

இதுவரை நான் படித்த கதைப் புத்தகங்களெல்லாமே - புனைவு! யதார்த்த, நிஜ வாக்கையிலிருந்து மிகவும் விலகியிருந்த கதைகள் அவை. கற்பனை உலகிலேயே இருந்த என்னை, சுடும் நிஜத்திற்கு அருகில் கொண்டு சென்றது "கள்ளிக் காட்டு இதிகாசம்".

அடுத்து நான் படித்த மற்றொரு தமிழ்ப் புத்தகம் என்னை நிஜத்தையே தொட வைத்தது!

தொடரும்...

Monday, October 09, 2006

என் புத்தக உலகம் - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி

Mills & Boon படிக்கத் தொடங்குவதற்கு முன் மற்றொரு கதைபுத்தகத்தைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். "Phantom" கதைகள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

Photography Web Site Templates


"Phantom" என்கிற மர்ம மனிதன் காட்டில் வாழ்கிறான். நகரத்தினுள் நடக்கும் கொலை, கொள்ளை, அட்டூழியங்களைப் பற்றி தன் ஒற்றர்கள் மூலம் அறிகிறான். நகரத்தினுள் மாறுவேடத்தில் சென்று தவறு செய்பவர்களைப் பிடித்து தண்டிக்கிறான். அவனுடைய காட்டு வாழ்க்கை படிக்க சுவையாக இருக்கும். அப்பா கதை சொல்லுவதில் மிகவும் கெட்டிக்காரர். இந்த Phantom கதை புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு sound effects எல்லாம் கொடுத்து அவர் கதை சொல்லத் தொடங்கினார் என்றால், அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளெல்லாம் கதை கேட்க வந்துவிடுவார்கள். அப்பா சொல்லும் கதையை சுற்றி உட்கார்ந்து திகிலுடன் கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து தத்தம் பிள்ளைகளுக்கு அழைப்பு வரும் "வந்து சாப்பிட்டுவிட்டு போ" என்றும் "வந்து வீட்டுப்பாடத்தைச் செய்து முடி" என்றும். யாரும் அசைய மாட்டார்கள்!

சரி...இப்ப Mills & Boon காலக் கட்டத்திற்கு வருவோம். நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முதன் முதல் என் வகுப்புத் தோழி ஒரு M & B புத்தகத்தைக் கொடுத்தாள். அதை நான் படிப்பதைப் பார்த்த அப்பா, "அது நல்ல புத்தகம் இல்லை. நீ இனிமே அதை படிக்கவேண்டாம்" என்று கண்டித்தார். நான் அப்பாவுக்குத் தெரியாமல் மேலும் சில M & B கதைகளைப் படித்தேன்! எல்லாமே காதல் கதைகள்.

Photography Web Site Templates


ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டே முக்கியக் கதாபாத்திரங்களைச் சுற்றிதான் கதை. ஆண்கள் எப்போது உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களாக, உயரமான கம்பீரமாக, ஆளுமை மிக்கவர்களாக இருப்பார்கள். பெண் கதாபாத்திரங்கள் இத்தகைய ஆணுக்காக ஏங்கிப் பரிதவிப்பவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் ஒரு மோதலில் இவர்களின் சந்திப்பு நேரும். பிறகு காதலில் முடியும். அந்தக் காதலுக்கு சில சோதனைகள் வரும். அந்த ஆணுக்கு மற்றொரு காதலி இருப்பாள், அல்லது அந்தப் பெண்ணுக்கு ஒரு பழைய காதலன் இருப்பான். இறுதியில் மகிழ்ச்சியான முடிவாகத்தான் இருக்கும். எல்லா M & B கதைகளுமே இதே மாதிரிதான். 10 கதைகள் படித்த பிறகு சலித்துவிட்டது.

அதன் பிறகு அடுத்த கட்டமாக Sydney Sheldon, Irving Wallace போன்றவர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். மீண்டும் அப்பா எச்சரிக்கை விடுத்தார் "இவை உன் வயதிற்கு மீறிய புத்தகங்கள்" என்று! ஆனால் நானோ அப்பா இல்லாத நேரத்தில் அவருடைய புத்தக அலமாரியிலிருந்து நாவல்களை எடுத்துப் படித்தேன். இப்ப என்னுடைய இந்தப் பதிவை அப்பா படிக்கும்போது "அடப் பாவி மகளே! இப்படியெல்லாம் செய்தியா?!" என்று நினைத்துக்கொள்வார்! என் வயதிற்கு மீறிய புத்தகங்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அருமையான கதைகள் அவை. Sydney Sheldon னின் "The Rage of Angels" கதை படித்துவிட்டு கதாநாயகி ஜென்னிபருக்காக தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன்.

இதுவரை நான் படித்த கதைகளிலே என்னை பிரமிக்க வைத்தது Irving Wallace இன் "The Second Lady". அமெரிக்காவின் First Lady என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவியைப் போலவே தோற்றமுடைய ஒரு பெண் ரஷ்யாவில் இருக்கிறாள். அவளைக் கண்டெடுத்த ரஷ்ய KGB உளவாளிகள், அமெரிக்க அதிபரின் மனைவியைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு, இந்த ரஷ்யப் பெண்ணை தயார் செய்து வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறார்கள், அமெரிக்க ரகசியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள. யாருக்குமே இந்த ஆள் மாறாட்டம் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க அதிபர் மனைவி பற்றிய சுயசரிதை எழுதுவதற்காக அவருடனேயே பல மாதங்கள் பயனித்து வந்த ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கிறான். இறுதியில் அது போலி first lady என்று கண்டுபிடித்தும் விடுகிறான். அதை நிரூபிக்கும் முன், இரண்டு first ladyக்களில் ஒருவர் ஒரு விபத்தில் இறந்துவிட, எஞ்சி இருப்பவர் உண்மையான first ladyயா அல்லது போலியா என்று தெரியாமலேயே கதை முடிந்துவிடுகிறது. கதை படித்து முடித்து பல நாட்களாக எனக்கு மனம் ஆறவேயில்லை, கடைசி வரை எந்த first lady அது என்றுத் தெரியாமல் போய்விட்டதே என்று!
அப்பா மேல் ஒரு சின்ன வருத்தம். சிறு வயதில் எனக்கு நல்லத் தமிழ்ப் புத்தகங்களை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டார். நான் படித்தவை எல்லாமே ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் தான். ஆனால் அம்புலிமாமாவைத் தவிர அப்போதெல்லாம்சிறுவர்களுக்காக நல்லத் தமிழ்க் கதை புத்தகங்கள் இருந்ததா என்று தெரியவில்லை.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது புனைவுக்கதைகளில் உள்ள ஆர்வம் தேயத்தொடங்கி அறிவுத் தாகம் எடுத்தது. இந்தக் கதைப் புத்தகங்களினால் என் ஆங்கில அறிவு செம்மைப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் இந்தப் புத்தகங்களினால், நான் ஒரு அமைதியான சப்தமில்லாத உலகத்தில் மூழ்கி அடைபட்டுவிட்டேன்! என் வயதை ஒத்தசிறுமிகள் தெருவில் விளையாடுகையில் நான் ஓரமாக உட்கார்ந்து கதைப் படித்துக்கொண்டிருப்பேன். சுற்றி நடப்பது என்னவென்றே தெரியாமல் அந்த அமைதியான உலகத்தினுள் சென்றுவிடுவேன். சாப்பிடும் போதும் இடது கையில் கதைப் புத்தகம் இருக்கும். அம்மா அப்பாவுடன் வேறொருவர் வீட்டுக்குச் சென்றாலும், அங்கே ஏதாவது புத்தகங்கள்கிடைத்தால் அவ்வளவுதான். இதனால் நான் பேசும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. பின்னர் கல்லூரி நாட்களிலும், அமெரிக்கா வந்த புதிதிலும் இது எனக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. பிறகு பேசுவது ஒன்றையேவாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டேன்! ஒரு நண்பர் கூட சொன்னார், "நீங்கள் பேசுபவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை...பேச்சையே திருமணம் செய்கொண்டீர்கள்" என்று. என்னுடைய அமைதியான உலகம் உடைந்தது. சற்றே வெளியில் எட்டிப்பார்த்தேன்...

திருமணத்திற்குப் பிறகு என்னுடைய புத்தக வாசிப்பு வேறு திசையில் திரும்பியது.

தொடரும்...

Friday, October 06, 2006

என் புத்தக உலகம் - 1

பல மாதங்களுக்கு முன் வலைப்பதிவில் தொடர்ந்து பலர் தாம் படித்த புத்தகங்களைப் பற்றியும், தம் வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அப்பொழுது என்னால் எழுத முடியவில்லை, இப்ப எழுதப் போறேன்! நான் புத்தகங்களுடனேயே வளர்ந்தவள். புத்தகங்களின் மீது அதீத மதிப்பும் பாசமும் வைத்திருந்தவரால் வளர்க்கப்பட்டவள். அப்பா பல்கலைக் கழக நூலகராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் நல்ல கதை புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுவருவார். நானும் அதை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவேன். சில நாட்கள் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் நூலகத்திற்குச் செல்வேன். அங்கே வேலை செய்பவர்கள் என்னைப் பார்த்ததும் நான் அப்பாவைத்தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று நினைத்து, "அப்பா அவர் அறையில் தான் இருக்கிறார்" என்று சொல்லுவார்கள். நானோ, நேராக அப்பாவின் அறைக்கு பக்கத்து அறைக்குச் செல்வேன். அங்கே தான் சிறுவர் புத்தகங்களை குமிந்து கிடக்கும். அங்கேயே அமர்ந்து எனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து படித்துவிட்டு பின் வீட்டுக்கு வந்துவிடுவேன், அப்பாவைக்கூட பார்க்காமல்! நான் நூலகத்தில் தான் இருக்கிறேன் என்று தெரிந்தாலும், அப்பாவும் என்னை வந்து பார்க்கமாட்டார்! Like father, like daughter...

எழுத நிறைய விசயம் இருக்கிறது என்பதால் தொடர் பதிவாக எழுதுகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் முதன் முதலாக படிக்கத் தொடங்கியது 'Enid Blyton' கதைகளை. (புகழ் பெற்ற ப்ரிட்டிஷ் எழுத்தாளர், 700 கதை புத்தகங்கள், 40 மொழிகளில் வெளிவந்திருக்கின்றன)

image hosting by keepmyfile.com image hosting by keepmyfile.com

Enid Blyton கதைகள் என்றாலே சிறுவர்களைக் கவரும் வேடிக்கை, விறுவிறுப்பு, திகில் அம்சங்கள் நிறைந்தவை . இந்தக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது "Famous Five" என்கிற தொடர் கதைகள். 4 சிறுவர்கள், மற்றும் ஒரு நாய். இந்த ஐவரின் அனுபவங்களைப் பற்றிய கதைகள் இன்றும் என் நினைவில் அழியாமல் நிற்கின்றன! புத்தகம் படிப்பது, மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை ஆராய்ந்து கண்டறிதல் போன்ற மகிழ்ச்சியான அனுபவங்கள் குழந்தைகளுக்கு ஏற்படவேண்டும் என்கிற உந்துதலினாலேயே எனிட் ப்ளைட்டன் இந்த அற்புதமான கதைப் புத்தகங்களைப் படைத்தார். அவருடைய கதைகளைப் படிக்கும்போது குழந்தைகளின் கற்பனா சக்தி விழித்துக்கொள்ளும். கதையின் ஒரு அங்கமாகவே குழந்தைகள் மாறிவிடுவார்கள்.

கொஞ்சம் வளர்ந்து உயர்நிலைப்பள்ளி வந்ததும், மற்றுமொரு அருமையான கதைபுத்தகம் எனக்கு அறிமுகமாயிற்று. "TinTin" என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள்! இந்தக் கதைகளின் சிறப்பே அதன் சித்திரங்கள். கதையைப் படிக்கவே வேண்டாம். அந்தச் சித்திரங்களே பேசும்!

image hosting by keepmyfile.com image hosting by keepmyfile.com


அவ்வளவு நுணுக்கமான விவரங்களுடன் அந்தச் சித்திரங்களை தீட்டியவர் 'Herge' என்பவர். அவரே இந்தக் கதைகளின் கதாசிரியரும் கூட! பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். Tintin என்கிற இளைஞன் ஒரு பத்திரிக்கையாளன். அவனுடைய செல்ல நாய்க்குட்டி "Snowy". கதாசிரியர் Herge, தன் காலகட்டத்தில் நடந்த இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன் சென்றிறங்குதல், ரஷ்ய மறுமலர்ச்சி போன்ற நிகழ்வுகளை இந்தக் கதைகளில் புகுத்தியிருப்பார். அனைத்து Tintin கதைகளிலும் ஒரு மர்மம் இருக்கும். கதையின் முடிவில் அது கட்டவிழ்க்கப்படும். கதையினூடே நகைச்சுவை அங்கங்கே பொறுத்தமாகத் தூவப்பட்டிருக்கும். Tintin உடன் வரும் துணை கதாபாத்திரங்களும் சிறப்பும் தனித்துவமும் வாய்ந்தவை. மணிக்கணக்காக Tintin கதைகளைப் படித்துவிட்டு, பின்னர் அந்தக் கதைகளில் வரும் காட்சிகளை நினைத்து பைத்தியம் போல் சிரித்துக்கொண்டிருப்பேன். இந்தக் கதைகளைப் பற்றிய ஒரு குற்றச் சாட்டு உள்ளது. ஐரோப்பியர்களைத் தவிர மற்ற நாட்டவர்கள் வில்லன்களாகவோ, அப்பிராணிகளாகவோ தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் அந்த வயதில் எனக்குத் தெரியவில்லை. பின்னால் படித்துத் தெரிந்துகொண்டேன்.

Tintin கதைகளைப் படித்த நாட்களிலேயே, Asterix and Obelix என்ற கதைபுத்தகங்களையும் (33 கதைப்புத்தகங்கள், 100 மொழிகளில் வெளிவந்துள்ளன)நூலகத்தில் கண்டெடுத்தேன். Rene Goscinny இதன் கதாசிரியர். Albert Uderzo இதன் ஓவியர். இந்தக் கதைகளின் சித்திரங்களும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. Asterix என்கிற வீரனும் அவனது நன்பன் Obelix என்பவனும், ஒரு அமைதியான கிராமத்தில் வாழ்கிறார்கள்.
image hosting by keepmyfile.com

ஜூலியஸ் சீஸரால் கைப்பற்றமுடியாத ஒரே கிராமம் அதுதான்! காரணம், அந்த கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு மந்திரக் கூழை அருந்துகிறார்கள். அது அவர்களுக்கு பெரும் உடல் சக்தியை அளிக்கிறது. அந்தச் சக்தியை வைத்துக்கொண்டு அவ்வப்போது அவர்களின் கிராமத்தை கைப்பற்றுவதற்காக முயலும் ரோமானியர்களை பந்தாடுகிறார்கள். ரோமானியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை சச்சரவுகள் தான் கதையின் கரு. இந்தக் கதைகளில் சுவாரசியமான விசயம் என்னவென்றால், ஒவ்வொரு கதையின் முதல் காட்சியிலும், ஒரு ரம்மியமான காலைப்பொழுதில் அந்தக் கிராமம் விழித்தெழுவதைக் காணலாம். நடுவில் போர், சண்டை இதெல்லாம் வரும். கடைசி காட்சியில் எபோழுதும் அந்த கிராமத்தில் ஒரு பெரிய விருந்து நடக்கும். எல்லாரும் மாமிசத்தையும், மதுவையும் வெளுத்துவாங்கிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில் ஒரு மரத்தடியில் ஒருவனைக் கட்டிப்போட்டு, அவன் வாயில் துணியை அடைத்திருப்பார்கள். அவன் அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒரு இசைக் கலைஞன். எந்த ஒரு நிகழ்வின் போதும், "நான் இப்போது பாட்டு பாடுகிறேன்" என்று சத்தமாக அபஸ்வரமாகப் பாடத் தொடங்கிவிடுவான். அதைத் தடுப்பதற்கே அவனை அப்படி கட்டிப்போடுவார்கள் அந்த கடைசி விருந்து காட்சியில். எல்லா கதைகளிலும் இப்படித்தான்.

இந்தக் காமிக்ஸ் கதைகள் எல்லாம் படித்துச் சலித்தபோது எனக்கு 15 வயது. அடுத்து என்ன இருக்கிறது என்று நூலகத்தைக் குடைந்தபோது, Mills & Boon வெளியீடுகளான Romance கதைப் புத்தகங்கள் கண்ணில் பட்டன... பிடித்தது சனி!!!

தொடரும்...

Monday, October 02, 2006

எனக்குப் பிடித்த மாதிரி ஒரு அரங்கேற்றம்

அமெரிக்காவில் நடக்கும் பரதநாட்டிய அரங்கேற்றங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கத்தினை முன்பு அரங்கேற்ற அலம்பல் - 3 என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். சென்ற சனிக்கிழமை நான் பார்த்த ஒரு அரங்கேற்றம், என் ஆதங்கத்தினையும், மாற்றங்களும் புதுமைகளும் சீக்கிரம் நிகழவேண்டும் என்கிற என் அவசரத்தையும் ஆறுதல்படுத்தியது!

நடனமாடியப் பெண் ஒரு கிறிஸ்துவர் மற்றும் இலங்கைத் தமிழர்.

தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தின் போது சிவனையும் கிறிஸ்த்துவையும் வணங்கி நடனமாடினாள். சிலுவைக் குறியிட்டுக்கொண்டாள்! "Amen" என்றும் சொன்னாள்! இது எனக்குப் புதுமையாகப் பட்டது. பிற மதங்களுக்கும் பரதநாட்டியம் "customize" செய்யப்படலாம் என்பது ஒரு நல்ல முன்னேற்றம்!

பிறகு மணியான, ஆழமான கருத்துக்களைக்கொண்ட ஒன்பது திருக்குறள்களுக்கு அழகாக நடனமாடினாள்! பக்கவாட்டில் உள்ள ஒரு பெரிய திரையில் ஒவ்வொரு திருக்குறளும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடனும், அதன் பொருளை உணர்த்தும் சித்திரங்களுடனும் காட்டப்பட்டது!

அடுத்து வந்தது "சாற்றி வளர்த்திடுவாய் நம் சங்க இலக்கியப் பெருமையெல்லாம்" என்று சங்க இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நினைவுகூறும் ஒரு சிறப்பு நடனம். ஒளவையார், தொல்காப்பியர், பெரியாழ்வார், இளங்கோவடிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், கம்பர், திருவள்ளுவர் போன்ற சங்ககாலச் சான்றோர்களையெல்லாம் ஒரு விநாடி கண்முன் நிறுத்தினாள்.

அடுத்த நடனம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" என்ற பாரதிதாசனின் இனிமையான பாடலுக்கு. இது என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த பாடல்! சிறு வயதில் அவர் இந்தப் பாடலை அடிக்கடி பாடி நான் கேட்டிருப்பதால் எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அதிலும் "அன்பிலா நெஞ்சில் தமிழிற் பாடி நீ, அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே நீ, அல்லல் நீக்க மாட்டாயா?" என்கிற வரிகளில் இனிமைச் சொட்டும்!!! "ஓர் இரவு" என்கிற பழைய திரைப்படத்தில் பத்மினியின் சகோதரிகள் லலிதா, ராகினி இருவரில் யாரோ ஒருவர் இந்தப் பாடலுக்கு நடனமாடியிருப்பார். சரியாக ஞாபகம் இல்லை.

பாரதியாரையும் விட்டுவைக்கவில்லை இந்த அரங்கேற்றத்தில்! "என்று தனியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?" என்ற பாடலுக்கு இலங்கைத் தமிழர்களின் அடிமை வாழ்வையும் சுதந்திரத் தாகத்தையும் பிரதிபலிக்கும் நெஞ்சை உருக்கும் நடனம்!

அடுத்து சிலப்பதிகாரம் - கண்ணகியின் கதை! உணர்ச்சிப்புர்வமான நடனம். பாடலினூடே சிலப்பதிகாரத்தின் ஆங்கில சாராம்சம்!

பின்னர் "வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்" என்கிற குதூகலமானப் பாடலுக்குச் சுறுசுறுப்பான நடனம்!

இறுதியாக மங்களம் - "தமிழே வணக்கம்" என்கிற பாடல். தமிழுக்கு எவ்வளவு மரியாதை செய்யமுடியுமோ அவ்வளவு மரியாதையும் இந்த நிகழ்ச்சியில் செய்துவிட்டதாக எனக்குத் தோன்றியது!

தமிழை வணங்கினாள்! இறைவனைப் போற்றினாள்! திருக்குறளை ஆடினாள்!சங்க இலக்கியங்களை நினைவுக்கூர்ந்தாள்! பாரதியையும் பாரதிதாசனையும் மேடையேற்றினாள்! சுதந்திரத் தாகத்தை தன் அசைவுகளால் புரியவைத்தாள்!

தான் வாழும் சமுதாயத்தை, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தன்னுடைய உணர்வுகளை, தன் மதத்தை, தன் தாகங்களை பிரதிபலிக்க உதவாத ஒரு கலைவடிவம் ஒரு கலைஞனுக்கு எதற்கு? பரதநாட்டியம் என்கிற கலைவடிவத்தை அதன் அழகும் மரியாதையும் கொஞ்சமும் குறையாமல் அதன் கலாசார எல்லைக்குள் அதனை வளைத்து மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு சில கலைஞர்கள் உலகில் இருக்கிறார்கள், மேலும் இதுபோல் உருவாகி வருகிறார்கள் என்று நினைக்கையில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது!

பின்குறிப்பு: சில வருடங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி, "தமிழ் ஆர்வத்திலும் உணர்விலும், தமிழை வளர்க்கும் முயற்சியிலும் இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தான் முன்னனியில் இருக்கிறார்கள்" என்று சொன்னார். அப்போது சற்று கோபம் வந்தது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியைப் பார்த்தபிறகு, அவர் அன்று சொன்னது உண்மைதான் என்று அரை மனதுடன் ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது!