Thursday, April 28, 2005

அட! அமெரிக்காவிலும் பால்நிலை பாகுபாடு! (gender discrimination)



என்னுடைய மேலாலளர் நேற்று நடந்த கூட்டத்தில் "நம்முடைய அணிக்கு ஒரு புது பொறியாளரை நாளை தொலைபேசி மூலம் தேர்வு செய்ய இருக்கிறேன்" என்றார். உடன் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவர் "அவர் ஆணா, பெண்ணா?" என்று கேட்டார். மேலாளர் சிரித்துகொண்டே "எனக்குத் தெரியாது, இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பதும் சரியல்ல. அவர் ஆணா பெண்ணா, கருப்பரா, வெள்ளையரா, இந்தியரா, சீனரா என்பதைப் பார்த்து நாங்கள் தேர்வு செய்வதில்லை. We follow Equal Employment Opportunity policy" என்றார். உண்மைதான், ஒரு அமெரிக்கர் அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தால், பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இந்திய மற்றும் சீனப் பெயர்களை வைத்து அதைக் கண்டுபிடிப்பது கடினம். அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும்போதோ அல்லது அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போதோ தான் தெரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் உள்ள விண்ணப்ப தாள்களிலும், Sex, Race போன்றவற்றை 'Optional Information' என்கிற பகுதியில் தான் கேட்கிறார்கள். விருப்பபட்டால் இந்தத் தகவல்களை பூர்த்தி செய்யலாம். கட்டாயம் எதுவும் கிடையாது. இது பாராட்டப்பட வேண்டிய விசயம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இதெல்லாம் சும்மா கண் துடைப்பு என்கிறார் மேலாளரிடன் கேள்வி கேட்ட இந்தியர். "ஏனிப்படி சொல்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "வேலைக்கு ஆள் எடுக்கும் போது பாகுபாடின்றி எடுக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் வேலையில் இருப்பவர்களை எந்தவித பாகுபாடின்றி நடத்துகிறார்களா என்று யோசித்துப் பாருங்கள்" என்றார். நான் யோசித்துப் பார்த்ததில், எங்கள் அலுவலகத்தில் அப்படி ஒன்றும் பிரச்சினை இருப்பதாகத் தோன்றவில்லை. அதை அவரிடம் சொன்னபோது, "இந்த அலுவலகத்தை விடுங்கள். நீங்கள் கூகிளில் போய் 'gender discrimination law suits' என்று தேடிப் பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள்" என்றார். மதிய உணவு இடைவேளையில் தேடியபோது, கூகிள் துப்பிய செய்திகளைப் படித்து ஆச்சரியப்பட்டுத் தான் போனேன்.

Walmart - உலகத்திலேயே மிகப் பெரிய Retail நிறுவனம் மற்றும் அமெரிக்கவிலேயே மிக அதிகமான பணியாளர்களைக் கொண்ட நிறுவனம். 2004 ஆம் ஆண்டில் Walmart இல் வேலை செய்யும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் தாம் பால் நிலை பாகுபாட்டுக்கு(gender discrimination) உட்படுத்தப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தனர். அதே வேலையைச் செய்யும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது என்றும், பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக இருந்தபோதும், பதவி உயர்வுகள் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், மேலிடத்துப் பணியாளர்களில் 14 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்பதும் இவர்களது வாதம். பெண்கள் பொதுவாக பதவி உயர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும், சில வேலைகளுக்கு பெண்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதும் Walmart இன் எதிர் வாதம்.

Boeing - மேலே சொல்லியிருக்கும் அதே போன்ற ஒரு வழக்கை சமரசம் செய்வதற்கு Boeing நிறுவனம், 29,000 பெண் பணியாளர்களுக்கு $72 மில்லியன் நஷ்ட ஈடாக வழங்கியிருக்கிறது.

Morgan-Stanely - Wall Street நிறுவனமான Morgan Stanley இல் வழக்கமான பதவி உயர்வு, குறைந்த சம்பள குற்றச்சாட்டுக்களுடன், குழந்தைப் பேறு விடுமுறை (Maternity Leave) எடுக்கும் பெண்களுக்கு சம்பள உயர்வும், முக்கியப் பொறுப்புகளும் மறுக்கப்படுகின்றன என்றும், ஆண்கள் குழுவாக வெளியில் செல்லும் போது அந்தக் குழுவில் பெண்களை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

Yale, United Airlines என்று இந்தப் பிரபல நிறுவனங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

வல்லரசான அமெரிக்காவிலேயே பெண்களுக்கு இந்த நிலையா என்று வியப்பாக இருந்தது. ஆனால் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு இவையெல்லாம் பெண்களுக்கு அடிப்படைப் பிரச்சினைகள் கிடையாது. அடுத்தக்கட்ட பிரச்சினைகள் தான். அமெரிக்காவில் வாழும் பெண்கள் அடிப்படை பிரச்சினைகளை எப்போதோ தாண்டி வந்து அடுத்தக்கட்டத்து பிரச்சினைகளுக்காக போராடி வருகிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்கள் அடிப்படை பிரச்சினைகளான கல்வி, வேலைவாய்ப்பின்மை இவற்றிற்கே இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.நகரங்களில் வீட்டுக்கு வீடு பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்கிறநிலை இருக்கும்போது, அடுத்த கட்டமான பதவி உயர்வு, பால்நிலை பாகுபாடு பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பார்களா என்றுதெரியவில்லை. இந்தப் பெண்கள் பால்நிலை பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பும் பதவி உயர்வும் பொறுப்புகளும் மறுக்கப்படும் போது, எத்தனை ஆற்றல், எத்தனை சக்தி வீணாகப் போகிறது?

ஆனால் சும்மா சும்மா தமிழ் நாட்டில் பெண்களுக்கு அது இல்லை இது இல்லை என்று சொல்வதற்கு அலுப்பாக இருக்கிறது. பெண்களுக்குத் தேவையான சட்ட திட்டங்கள், பாதுகாப்புகள், உதவி அமைப்புகள் எல்லாமே இருக்கின்றன. இல்லாதது விழிப்புணர்ச்சி மட்டும் தான். பால்நிலை சமத்துவம்(gender equality) ஒரு சமூக நீதியாகவும் ஒரு நாட்டின் பலமாகவும் மாற தேவையானதெல்லாம் விழிப்புணர்ச்சி! விழிப்புணர்ச்சி! விழிப்புணர்ச்சி!

Thursday, April 21, 2005

சில கவிதை வரிகளில் ஒரு சிறிய பாடம்...

எண்ணக் குமிழ்கள் வலைப் பதிவை இன்று பார்த்தபோதுதான் இது 'கவிதை மாதம்' என்று தெரிய வந்தது. இது தெரியாமலேயே, சில நாட்களுக்கு முன் ஒரு கவிதையை எழுதி கையை சுட்டுக் கொண்டேன் தெரியுமா? Shirley Chrisholm இன் quotation ஒன்றை படிக்க நேர்ந்த போது, அதை அப்படியே தமிழில் ஒரு புதுக் கவிதை மாதிரி எழுதினால் என்ன என்று தோன்றவே, கட கடவென்று சில வரிகள் எழுதினேன். எழுதும்போதே தெரிந்தது கவிதை சரியில்லை என்று. சரி பிறகு சில மாற்றங்கள் செய்து சீர் படுத்தலாம் என்று நினைத்துக்கொண்டு அதை என் கணவருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அவர் சும்மா இருக்க முடியாமல் இன்னொரு நண்பருக்கு அனுப்பி அவருடைய கருத்தைக் கேட்க, அந்த நண்பர் "கேணத்தனமான, அர்த்தமற்ற கவிதை" என்று பின்னூட்டம் கொடுக்க, எனக்கு முகத்தைக் கொண்டுபோய் எங்கே வைத்துக்கொள்வதென்றே தெரியவில்லை! சரி இனி கவிதை எல்லாம் எழுதி risk எடுக்கக் கூடாது என்று அன்றே முடிவுசெய்துவிட்டேன். இந்த சம்பவம் கவிதை மாதத்தில்நடந்தது தற்செயலான ஒன்று!

Charles Buckowski எழுதிய 'So you want to be a writer' கவிதைக்கான சுட்டியை சுந்தரமூர்த்தி வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றிகள் பல. படிப்பதற்கு ஒரு கவிதை போல் இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையில் சில வரிகள் எனக்காகவே எழுதப்பட்டவை போல் இருக்கிறது. ஒரு சிறிய பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.

//if it doesn't come bursting out of you
in spite of everything,
don't do it.
unless it comes unasked out of your
heart and your mind and your mouth
and your gut,
don't do it.
if you have to sit for hours
staring at your computer screen
or hunched over your
typewriter
searching for words,
don't do it.//

ஆரமபத்தில் வாரம் ஒரு வலைப்பதிவாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை. என்ன எழுதுவது, எதைப் பற்றி எழுதுவதென்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது எழுதவேண்டும் என்கிற தவிப்பும், தொடர்ந்து எழுதாவிட்டால் வலைப்பூ உலகம் என்னை மறந்துவிடுமே என்கிற பயமும் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் கணிணியின் முன் அமர்ந்து ஏதாவது இன்று எழுதியே ஆகவேண்டும் என்று என் சிந்தனையை விரட்டியிருக்கிறேன். ம்ஹ¥ம்! கதை பெயரவில்லை. Charles Buckowski சொல்வதைப் பார்த்தால், மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் தானாகவே ஏதாவது எழுதத் தோன்றும் வரை, வலைப்பதிவுகளில் கொட்டிக் கிடக்கும் பல நல்ல சுவையான, சூடான விசயங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டு அமைதியாக காத்திருப்பது நல்லதென்று புரிகிறது.