Friday, December 14, 2007

ஒரு சமூக சீர்திருத்தவாதியின் முயற்சிகள் - பெரியார்

இந்தப் பதிவில் எழுதியிருப்பவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. நியூஜெர்சியில் வசிக்கும் என் உறவிணர் மின் அஞ்சல் மூலம் என்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை. அவர் வலைப்பதிவர் அல்ல. தன் கருத்துக்களுக்கு எதிர்வினைகளை அவர் அறிந்துகொள்ள விரும்பியதால் அவருடைய ஆங்கில மின் அஞ்சலை மொழிபெயர்த்து(சிரமப்பட்டு :-)) என் பதிவில் தந்திருக்கிறேன். இனி தொடர்ந்து படியுங்கள்...

ஒரு சமூக சீர்திருத்தவாதியின் வெற்றி, சமூகத்தின் மீதான அவருடைய தாக்கத்தைக் கொண்டும், சமூகம் எந்த அளவு அந்த சீர்திருத்தவாதியின் கனவுகளைப் பிரதிபலிக்கின்றது என்பதன் அடிப்படையிலும் மதிப்பிடப்படுகின்றது. தமிழ் சமுதாயத்தை, பெரியாரின் முயற்சிகளும் கொள்கைளும் எவ்வாறு சீர்திருத்தியிருக்கின்றன என்பதைப் பற்றி சற்று அலசிப்பார்போம்.

மதமும், மூடநம்பிக்கையும்

மற்ற எல்லாவற்றையும் விட மதக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையுமே பெரியார் அதிகமாக எதிர்த்தார். ஆனால், இன்று பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளை ஒரு பார்வை பார்த்தாலே போதும், மூட நம்பிக்கைகள் இன்னும் உயிருடன் தலைவிரித்து ஆடுகின்றன என்று. ஜாதகம், வாஸ்து, விரதம், மதச் சடங்குகள் இவற்றைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இருக்க முடியாது. தமிழர் வீட்டில் திருமணமாக இருந்தாலும் சரி, சாவாக இருந்தாலும் சரி, அந்தந்த சாதி மதச் சடங்குகளோடு கோலாகலமாக நடந்தேறுகிறது.

தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு பெரியாரே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அவரது அரசியல் வாரிசுகளான அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர், கடவுளை மறுத்தார்கள், ஆனால் தாமே கடவுளாக உருவெடுத்தார்கள். இந்த அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்களால் கடவுளாகப் போற்றப்பட்டு பூஜிக்கப்படும்போது, அதுவே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு முரணாக அமைகிறதே?! இந்தத் தலைவர்களைத் தட்டிக் கேட்பவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அரசியல் தலைவர்களுக்காக தீக்குளிப்பது, தற்கொலை செய்துகொள்வது போன்ற வெட்கக்கேடு தமிழ்நாட்டில் தான் அதிகம் நடக்கிறது.

வெற்றுப் புகழ்ச்சி & தனிமனித வழிபாடு (Sycophancy & Personality Cult)

தமிழ் நாட்டில் மட்டும் தான் அரசியல் தலைவர்கள் "புரட்சித் தலைவர்", "கலைஞர்", "பேராசிரியர்", "நாவலர்", "மக்கள் கலைஞர்" போன்ற அலங்காரப் பட்டங்களால் அழைக்கப்படுகிறார்கள். பெரியார் சுயமரியாதை அனைவருக்கும் முக்கியம் என்று எவ்வளவோ வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசியல் உலகத்தில் சுயமரியாதை என்பதனைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. உயர் காவல் அதிகாரிகள், கமிஷனர், DGP போன்றவர்கள் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சித் தொண்டர்களுடன் வரிசையில் நிற்கிறார்கள். ஜனநாயக முறைகள் பின் தள்ளப்பட்டு, தலைவர்களின் குடும்பத்தார் கட்சிப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். கட்சித் தொண்டர்களே இத்தகைய முடிவுகளை ஊக்குவிக்கிறார்கள். கணிமொழி என்றுமே கட்சித் தொண்டராக இருந்ததில்லை. ஆனால் அவரை விட தகுதியானவர்களையும், பத்து வருடங்களாக கட்சியில் தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களையும் புறக்கனித்துவிட்டு, அவருக்கு எம்.பி பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் பங்கு மிக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் தனக்கு எல்லையே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நாளைய முதலமைச்சர் தாம் தான் என்ற நினைப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, பெரியாரின் பகுத்தறிவு/சுயமரியாதைக் கொள்கைகளுக்கு என்னவாயிற்று? அவை எங்கேயாவது ஒரு இடத்திலாவது வேறூன்றியிருக்கிறதா? அப்படி வேறூன்றியிருந்தாலும், எப்படி அவ்வளவு எளிதாக பிடுங்கியெறியப்பட்டது? அதுவும் அவருடைய சீடர்களாலேயே?!

பிராமண எதிர்ப்பு, தீண்டாமை, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம்

தீண்டாமையை நிலைநிறுத்துவதிலும், தலித் அடக்குமுறையிலும் பிராமணர்களின் பங்கும் மனு சாஸ்திரத்தின் பங்கும் மறுக்கமுடியாதது. இதில் முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்துகள் மட்டுமே சாதிப் பிரிவுகளின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மற்ற பிராமணர் அல்லாதவர்கள் தம் சாதியின் சமூக நிலையினால் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றனர். தலித் விடுதலை, தீண்டாமை ஒழித்தல் இவற்றின் வெற்றியை காந்தி, நேரு, அம்பேத்கார் போன்றோறின் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாகவே நாம் பார்க்கவேண்டும். தீண்டாமை முற்றிலும் வேர் அறுக்கப்படவில்லை என்றாலும், அந்த மனிதாபிமானமற்ற செயலைத் தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் எடுத்ததற்கு நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும், முக்கியமாக மஹாத்மாவுக்கு.

ஆனால், அரசியல் தளத்தில், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல் என்பதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றும் தலித்துகள், OBC/MBC என்ற சமூகப் பிரிவினரால் ஒடுக்கப்படுகின்றனர். OBC பிரிவினைச் சேர்ந்த யாதவர்களையும், பட்டேல்களையும் தலித்துகளை அதிகமாக ஒடுக்குபவர்களாக அடையாளம் கண்டு புரட்சி செய்திருக்கிறார் மாயாவதி. இன்றும் தலித்துகள் பல கிராமங்களில் தேர்தலில் போட்டியிட முடியாது, ஏன்? தம்ளர்களில் தண்ணீர் குடிக்கக் கூட முடியாது. இந்தக் கிராமங்களில் OBC/MBC பிரிவினரின் ஆதிக்கமே இருந்து வருகிறது.

பெரியாரின் பிராமண எதிர்ப்பை, ஜெர்மானியர்கள் யூதர்களின் மீது காட்டிய எதிர்ப்பிற்கு (anti-semitic) ஒப்பிடலாம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் தம் சாதியை போற்றிப் பாதுகாக்கவும், தம் சாதிப் பெருமைகளை வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்வதிலும் ஈடுபடும் போது, தன் இனத்தை பாதுகாத்துக்கொள்வதில் பிராமணர்கள் மட்டுமே குறிப்பாக பரிகாசமும், கண்டனமும் செய்யப்படுகிறார்கள். பிற உயர் சாதியினர் தம் எண்ணிக்கையின் அடிப்படையில் சலுகைகள் கேட்கின்றார்கள். சமயச் சார்பற்று செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகளும், மந்திரிகளும் தம் சாதிச் சான்றிதழைக் காட்டி பறைசாற்றுகிறார்கள். ராதிகா செல்வி போன்றவர்கள் சாதியின் அடிப்படையில் காபினெட் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். யாரால்? சாதிப் பிரிவினைக்கு எதிராகப் போராடிய பெரியாரின் சீடர்களால்!

இன்று தமிழ்நாட்டு அரசியலில் சாதிக் கட்சிகள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. தமிழனின் வாழ்க்கையில் எல்லா அம்சத்திலும் சாதி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. திருமணத்திற்கு வரன் கேட்டு வரும் விளம்பரங்களில் நன்கு படித்தவர்கள் கூட, தம் சாதியிலேயே மனமகன்/மனமகள் கேட்கிறார்கள். சில விளம்பரங்களில், சாதி உட்பிரிவு கூட வலியுறுத்தப்படுகிறது.

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், முதலில் பார்ப்பானை அடி" என்று பெரியார் சொல்லியது இன வெறுப்பை உமிழும் சொற்கள். அமெரிக்காவில் இத்தகைய பேச்சுக்கு வெறுப்பைத் தூண்டிவிட்டதற்காக சட்ட ரீதியான கண்டனம் உண்டு. இந்திய சட்டம் இன்னும் கடுமையானது. இப்படி பேசும் ஒரு நபரை "சமூக ஒற்றுமையக் குலைக்கும்" குற்றத்திற்காக கைது செய்யலாம். சிறு சிறு முன்னேற்றங்களுக்கும், சாதிப் பாகுபாடு பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்ச்சிக்கும் பெரியாரைப் பாராட்டலாமே தவிர, அவர் வெற்றி கண்டார் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் தவறு. தமிழ்ச் சமுதாயம் கடந்த கால கட்டங்களை விட இன்று பல மடங்கு சாதிப் பிரிவினால் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இந்த நிலைக்குக் காரணமே, தம்மை பெரியாரின் வழி வந்தவர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளால் தான்.

கலப்புத் திருமணங்கள் இன்றும் கிராமங்களில் அரியதாகத்தான் இருக்கின்றன. அப்படியே கலப்புத் திருமணங்கள் நடந்தாலும், அவற்றால் மிகப் பெரிய சாதி சண்டைகள் ஏற்படுகின்றன. OBC/MBC பிரிவினரைச் சார்ந்த எத்தனைப் பேர் தலித்துகளுடன் கலப்புத் திருமணங்களுக்கு தயாராக இருக்கின்றனர்? தலித்துகளை ஒடுக்கியதற்காக பிராமணர்கள் கொடுங்கோலர்களாக நீண்ட காலமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் 60 ஆண்டுகள் சுதந்திரத்திற்கு பிறகும், தலித் வரலாற்றில் பிராமணர்கள் மட்டும் தான் வில்லன்களா? Outlook பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் பிராமணர் மக்கள் தொகை 1% தான். மீதம் இருக்கும் 99% பேரும், எல்லா பிரச்சினைகளுக்கும் அந்த 1% தான் காரணம் என்று சொன்னால் எப்படி?

பெண் விடுதலை

இதில் வெற்றியும் தோல்வியும் கலந்திருக்கிறது. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு போன்றவைகளைத் தவிர பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த சாதனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இன்றும் இந்தியப் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. மெகா தொடர்கள் பெண்களை மிகத் தவறாக சித்தரிக்கின்றன. இந்த மெகா தொடர்களில், பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் தொலைகாட்சியில்! பெண்கள் அழுமூஞ்சிகளாகவும் வில்லிகளாகவுமே அதிகம் இந்தத் தொடர்களில் தோன்றுகிறார்கள். ஒரு தொடரில், குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு மனைவி தானே பெண் பார்த்து தன் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறாள். இத்தகைய கதைகள் தான் "குடும்ப" தொடர்களாகக் கருதப்படுகின்றன.

"தாலி" அடிமைத்தனத்தின் சின்னம் என்பதற்காக தி.க வினர் செய்துகொள்ளும் தாலி கட்டாத திருமணங்கள் மற்றொரு பொலித்தனம். சிலப்பதிகாரத்தில் இந்தத் தாலியைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தை மட்டும் தமிழின் தலை சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்று போற்றப்படுகிறதே? ஏன் இந்த முரண்பாடு?

ஆண்கள், முக்கியமாக கணவன்மார்கள், பெண்களை அடித்துத் துன்புறுத்துவது இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பெண்களைப் பற்றிய முற்போக்கு முயற்சிகளுக்கோ, ஏன் பெச்சுக்களுக்குக் கூட மதிப்பு கிடையாது. நடிகை குஷ்பூ, திருமணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக்கொண்டால், தகுந்த பாதுகாப்பு முறையைக் கையாள வேண்டும் என்று சொன்னதற்கு எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூறவேன்டும். மு.கருனாநிதியின் மகள் கணிமொழி குஷ்பூவின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்துப் பேசியபோது, பெரியாரின் கொள்கைகளை பெரிதும் மதிக்கும் மு.கருனாநிதி, "எண்ணம் என்பவது ஏப்பம் அல்ல, வெளியிடுவதற்கு" என்று கிண்டல் செய்தார். மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்துகொள்வது சட்டதிற்கு எதிரானது. ஆனால் மு.கருனாநிதி பகிரங்கமாகவே இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். இதுதான் பெரியாரின் வழி வந்தப் பெருமையா?

கவர்ச்சியாக உடையனிந்து தங்களை தவறு செய்யத் தூண்டுவதற்காக தமிழ் சினிமா கதாநாயகர்கள், வழக்கமாக கதாநாயகிகளைத் தான் சாடும் அதே சமையத்தில் காமிரா, அந்த கதாநாயகியின் உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கும்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பெரியார் சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர் திருத்த பெரும் முயற்சிகளை எடுத்தார். சிலவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால் அவருடைய நம்பிக்கைகள் பலவற்றை அவருடைய தொண்டர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் என்றால் அது மிகை அல்ல.

Monday, December 10, 2007

Rain Coat - பொய்களால் பின்னப்பட்ட ஒரு காதல் கதை

அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். சராசரி சினிமாவைத் தாண்டி கதையையும் கருத்தையும் தேடுபவர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பாராட்டுவார்கள். என் மனதைப் பிழிந்த திரைப்படங்களில் இதும் ஒன்று. பல திரைப்படங்கள் மூன்று மணி நேரங்கள் ஓடிய பிறகும் மனதில் பதியாது...ஆனால் இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே நம்மைக் கட்டிப்போடுகிறது...அந்த அடாது பெய்யும் கல்கத்தாவின் மழை, அஜய் தேவ்கனின் வேதனை தோய்ந்த முகம், அந்த ரயில் பயணம், "மதுரா நகரத்து ராஜாவே, நீ ஏன் கோகுலத்துக்குத்தை விட்டுப் போகிறாய்?" என்கிற பாட்டு...இது எல்லாமே அஜய் தேவ்கனின் அந்தப் பயணத்தின் முடிவைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது. பொய்களினூடே ஆங்காங்கே பொதிந்திருக்கும் உண்மைகளைப் பொருக்கி எடுத்து நீங்களே கதையப் புரிந்துகொள்ளுங்கள் என்று நமக்கு ஒரு சுவையான சவாலை அளித்திருக்கிறார் இயக்குனர் ரித்துபர்னோ கோஷ்.

ஆறு வருடங்களுக்கு முன் உயிருக்குயிராக நேசித்து, திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரிந்த இரு காதலர்கள் ஒரு மாலை நேரத்தில் சந்திக்கிக்கும் போது அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் முழு திரைப்படமும்! படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் ஒரே வீட்டின் முன்னறையில் தான் நடக்கின்றன. இரண்டு பேர் ஒரே அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை எப்படி இரண்டு மணி நேரம் பார்ப்பது என்று யோசித்தேன்...ஆனால் அந்த ஒரு அறையில் பேசப்படும் வார்த்தைகளிலிருந்து தான் கதாநாயகன், கதாநாயகி இருவரின் வாழ்க்கை சரித்திரத்தையே நாம் தெரிந்துகொள்கிறோம். உலக அழகி ஐஸ்வர்யாவைத் எப்படித் தேடினாலும் இந்தப் படத்தில் கண்டுபிடிக்கமுடியாது! அவருடைய கவர்ச்சி அத்தனையும் மறைத்து "நீரு" என்கிற கதாப்பாத்திரத்தில் ஒரு புதிய அவதாரமாகத் தெரிகிறார் ஐஸ்வர்யா ராய். தான் வசதியான வாழ்க்கை வாழ்கிறேன் என்று தன் பழைய காதலனை கற்பனைக் கதைகள் சொல்லி நம்பவைக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்புத் திறமை அபாரம்.

மனோஜ் என்கிற வேலையில்லா இளைஞன்(அஜய் தெவ்கன்), நண்பர்களிடம் பண உதவி நாடி தன் கிராமத்திலிருந்து கல்கத்தா வருகிறான். ஒரு மழைகொட்டும் மதிய வேளையில் தன் நண்பனின் ரெயின் கோட்டை அனிந்துகொண்டு, கல்கத்தாவில் கணவனுடன் வசிக்கும் தன் பழைய காதலி நீரூவைப் (ஐஸ்வர்யா ராய்) பார்க்க அவள் வீட்டிற்குச் செல்கிறான். ஆறு வருடங்களுக்கு முன் அவனை மனதாரக் காதலித்து, பின் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை ஒதுக்கிவிட்டு, வசதியான ஒருவனைத் திருமணம் செய்துகொண்டவள் நீரு என்கிற நீரஜா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நீருவும் மனோஜும் மணிக்கனக்காகப் பேசுகிறார்கள். இருவருமே தத்தம் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்காமல், தம் வாழ்க்கையின் சோகமான நிஜங்களை மறைத்து எதுவுமே நடவாதது போல தாம் வசதியாக வாழ்கிறோம் என்பதைக் கான்பிக்க ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். படத்தின் முடிவில், இருவரின் நடிப்பும் ஒரு திடுக்கிடும் முடிவுக்கு வந்து உண்மை வெளிப்படுகிறது. காலம் மாறினாலும் மாறாத அவர்களின் ஆழ்ந்த அன்பும் அழகாய் வெளிப்படும்.

நீரு, தன் கணவன் பெரிய வேலையில் இருக்கிறான், தினமும் ஜப்பான் ஜெர்மனி என்று ஊர் சுற்றிக்கொண்டே இருப்பான், வீட்டில் இரண்டு வேலைகாரர்கள் இருக்கிறார்கள். எனக்கு எந்த வேலையும் இல்லை. நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் என்கிறாள். "நீரு நீ ஏன் நம் கிராமத்துப் பக்கம் வருவதேயில்லை? ஒரு முறை வந்துபோயேன்?" என்று கேட்கும் மனோஜிடம், "அய்யோ நான் எப்படி அங்கே வருவேன்? AC இல்லை, சுத்தமான attached பாத்ரூம் இல்லை, TV கூட இல்லை" என்கிறாள். நடுநடுவே மனோஜின் வேலையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் நீரு கேட்கிறாள். அவனும் தன் பங்கிற்கு, தான் வேலையில்லாமல் சிரமப்படுவதை மறைத்து, தொலைக்காட்சித் தொடர், மற்றும் விளம்பரங்கள் தயாரிக்கும் தொழிலில் இருப்பதாகவும், சொந்த நிறுவனம் வைத்திருப்பதாகவும், வசதியாக இருப்பதாகவும், தன் திருமணத்திற்கும் பெண் பார்த்துவிட்டதாகவும் அவளிடம் சொல்கிறான்.

நீரு மனோஜிற்கு சாப்பாடு வாங்குவதற்காக அவனுடைய ரெயின் கொட்டை அனிந்துகொண்டு வெளியே செல்கிறாள். மழை நிற்கிறது. மனோஜ் நீருவின் வீட்டு ஜன்னல்களைத் திறக்கிறான். இருட்டு வெளியேருகிறது. ஆனால் அதுவரை மறைந்திருந்த உண்மைகள் உள்ளே வருகின்றது! வீட்டின் வெளியே காத்திருக்கும் ஒருவர், "அவசரமாக கழிப்பறையை உபயோகிக்கவேண்டும் எனக்கு. ஒரு நிமிடம் என்னை உள்ளே அனுமதியுங்களேன்" என்று கெஞ்சுகிறார். மனோஜும் அவர் மேல் பரிதாபப்பட்டு வாசல் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கிறான். கழிப்பறையை உபயோகித்தபின் அவர் வெளியே சென்றுவிடுவார் என்று நினைத்த மனோஜ், அவர் நிதானமாக நாற்காலியில் உட்கார்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்து திகைத்து "உங்கள் வேலை தான் முடிந்து விட்டதே? வெளியே செல்லுங்கள்" என்கிறான். "நான் எதற்கு வெளியே செல்ல வேண்டும்? நான் தான் இந்த வீட்டின் சொந்தக்காரன்" என்கிறார் அவர். மனோஜ் அதிர்ச்சி அடைகிறான். படிப்படியாக பல உண்மைகள் கட்டவிழ்கின்றன. நீருவின் கணவன் ஒரு ஏமாற்றுக்காரன். பல பேரிடம் கடன் வாங்கி திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறான். அந்த வீட்டுக்காரருக்கு பல மாதங்களாக வாடகையும் தரவில்லை. அவனுக்கு உத்தியோகமும் கிடையாது. கடன்காரர்களுக்குப் பயந்து இரவில் மட்டுமே அவன் வீட்டுக்கு வருகிறான். அதனாலேயே நீரு விட்டுக்கதவையும் ஜன்னலையும் அடைத்துக்கொண்டு வீட்டினுள்ளேயே தன் நாட்களைக் கழிக்கிறாள். அதுவரை அந்த வீட்டின் முன் அறையிலே உட்கார்ந்திருந்த மனோஜ் எழுந்து வீட்டின் உள் அறைகளை திறந்து பார்க்கிறான். பாழடந்த அறைகள், பழைய பொருட்கள்...சுத்தமான attached பாத்ரூம் இல்லாததால் தன் சொந்த ஊருக்கே போகத் தயங்குவதாகச் சொன்ன நீருவின் பாத்ரூம், சிறியதாக, பழுதடைந்ததாக பார்க்கவே சகிக்காமல் இருக்கிறது! நீரு எதுவுமே தன்னிடம் சொல்லவில்லையே என்று கலங்கும் மனோஜிடம், "அவள் எப்படிச் சொல்லுவாள்? சொந்த ஊரில் இருந்து அவளை பார்க்க வந்திருக்கும் உன் முன்னே தன் அவமானமான வாழ்க்கையை எப்படி காட்டிக்கொள்வாள்?" என்று சொல்கிறார் வீட்டுக்காரர். தான் நீருவின் கணவன் மேல் கேஸ் போட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு தினங்களில் கோர்ட் வலுக்கட்டாயமாக இந்த வீட்டிலிருந்து அவர்களை வெளியேற்றிவிடும் என்றும் சொல்கிறார் அவர். மனோஜ் சட்டென்று தான் அன்று காலை நண்பர்களிடமிருந்து தான் தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்கிய பணத்திலிருந்து நான்கு மாதத்திற்கான வாடகைப் பணத்தை வீட்டுக்காரரிடம் கொடுத்து, நான்கு மாதத்திற்கு அவர்களை இந்த வீட்டில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறான். வீட்டுக்காரரும் சம்மதித்து வெளியே செல்கிறார். மனோஜ் நீருவுக்கு ஒரு கடிதம் எழுதி, நான்கு மாத வாடகை கட்டியதற்கான ரசீதையும் சேர்த்து படுக்கைக்குக் கீழே வைக்கிறான்.

கடைக்குச் சென்ற நீரு வீட்டுக்குத் திரும்புகிறாள். மனோஜ் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் விடைபெறுகிறான். இரவு ஒரு நண்பனின் வீட்டில் தங்கியிருக்கிறான். மனோஜின் ரெயின் கோட்டை வாங்கிக்கொண்டு போகும் நண்பனின் மனைவி, திரும்பவும் வந்து "ரெயின் கோட் பாக்கெட்டில் இந்தப் பொட்டலம் இருந்தது" என்று அவனிடம் அந்தப் பொட்டலத்தை கொடுக்கிறாள். பொட்டலத்தைப் பிரிக்கிறான் மனோஜ். அதில் சில நகைகளும், ஒரு கடிதமும் இருக்கிறது. நீரு எழுதிய அந்தக் கடிதத்தில், "மனோஜ், இன்று நீ மட்டும் இந்த ரெயின் கோட்டை அனிந்து கொண்டு வரவில்லையென்றால், உன் நண்பர்களிடம் கடன் கேட்டு நீ எழுதியிருந்த அந்தக் கடிதத்தை நான் படித்திருக்கமாட்டேன். உன் உண்மையான நிலைமை எனக்குத் தெரிந்திருக்காது. என் கணவர் ஊரில் இருந்திருந்தால், அவரே உன் தொழிலுக்கு வேண்டிய மொத்தப் பணத்தையும் கொடுத்திருப்பார். என்னுடைய பணப்பெட்டியின் சாவியையும் அவர் தவறுதலாக எடுத்துச்சென்றுவிட்டார். அதனால் என்னுடைய நகைகள் சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். உன் தொழில் தொடங்குவதற்காக அவற்றை உபயோகித்துக்கொள். உன் தொழிலிலாவது உன்னுடைய கூட்டாளியாக நான் இருக்கிறேனே" என்று எழுதியிருக்கிறாள்! திரைப்படம் இத்துடன் முடிகிறது.