Tuesday, May 22, 2007

அசின், விஜய் - இவர்களுக்கு பிடித்த சாப்பாடு

சமீபத்தில் வாசிங்டனில் 'பெரியார்' திரைப்படம் வெளியிடப்பட்டது. நான் வெளியூர் சென்றிருந்ததால் பார்க்கமுடியவில்லை. பார்த்தவர்களிடம் பேசியதிலிருந்து படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது என்று தெரியவருகிறது. பெரியாரின் சுயமரியாதை மற்றும் பெண் முன்னெற்றக் கருத்துக்களை பெருமளவு மதிக்கிறேன் நான். இந்த நவீன காலத்தில் கூட பெண்களைப் பற்றி ஒரு முற்போக்கான கருத்தைச் சொல்லிவிட்டால் அது சர்ச்சையிலும், சண்டையிலும், துடப்பக்கட்டைத் தூக்குவதிலும் கொண்டு போய் நிறுத்துகிறது! ஆனால் கிட்டத் தட்ட 100 வருடங்களுக்கு முன்பே பெண் முன்னேற்றத்தைப் பற்றி அதிரடியான முற்போக்கான கருத்துக்களை துணிவுடன் சொல்லியவர் பெரியார். அவருடைய கருத்துக்கள் சரியான முறையில் நம் சமூதாயத்தில் சென்றடைந்திருந்தால், இன்று பெண்களின் சுயமரியாதைக்கும் சமூக முன்னேற்றதிற்கும் பஞ்சமே இருந்திருக்காது. எத்தனைப் பெரியார் வந்தால் என்ன? எத்தனை பெரியார் திரைப்படம் வந்தால் என்ன? நாங்கள் மாறமாட்டோம் என்று பல பெண்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இன்று.

தமிழ்ச் சினிமா உலகம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் அசின், விஜய் இவர்களின் பேட்டியைப் பார்த்தேன். சினிமா என்பது ஒரு தனி உலகம். நடிப்பு என்பது ஒரு பெரும் கலை. இதனைப் பற்றியெல்லாம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருக்க, அசினிடம், விஜய்க்கு பிடித்த சாப்பாடு என்ன? அவருக்குப் பிடித்த நடிகர் யார்? விஜய்யுடைய தாயார் சமைக்கும் உணவுகளில் என்ன நன்றாக இருக்கும் - இப்படிப்பட்டக் கேள்விகள் கேட்கப்பட்டது. அதே போல் விஜய்யிடம், அசினுக்குப் பிடித்த விசயங்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், அசின் விஜய்யிற்குப் பிடித்த ஐட்டங்களை, பிரியாணியில் தொடங்கி டாண் டாண் என்று குஷியாக பதில் சொன்னார். விஜய் அசினுக்குப் பிடித்த ஐட்டங்களைச் சொல்லும் போது ஏதோ ஒன்றும் தெரியாத மாதிரி யோசித்து, தயங்கி....அடா அடா என்ன ஒரு நடிப்பு! சட்டென்று சொல்லிவிட்டால் 'ஹீரோ இமேஜ்' குறைந்துவிடுமே?!

மற்றொரு முறை 'நான் அவனில்லை' திரைப்படத்தைப் பற்றிய ஒரு பேட்டியில், அப்படத்தின் கதாநாயகிகள் சினேகா, நமிதா, மாளவிகா மூவரும் மாறி மாறி கதாநாயன் ஜீவாவைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் கதாநாயகிகளைப் பற்றி ஜீவன் எதுவுமே சொல்லவில்லை. சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதுதான் உண்மையோ?

பத்மப்ரியா என்ற ஒரு நடிகையிடம் "நீங்கள் ஏன் General Electrics வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "சினிமா, நடிப்பு ஆகியவற்றின் மேல் எனக்குள்ள ஆர்வம் காரணமாக நான் நடிப்புத் துறைக்கு வந்தேன்" என்று சொன்னார். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த துறையில் இருக்கவேண்டுமென்பது தான் என் விருப்பமும் கூட, அனால் பத்மப்ரியா போன்ற இளம் பெண்களுக்கு எத்தனை நாள் சினிமா சோறு போடும்? இளமையும் அழகும் இருக்கும் வரை தானே? பெண்களுக்கு ஒரு நிலையான வேலை அவசியம் தேவை. General Electrics போன்ற ஒரு நிறுவன வேலையை உதறித்தள்ளிவிட்டு ஒரு பெண் சினிமாத் துறையை நாடுவது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதா என்று தெரியவில்லை. அப்படி சினிமாத் துறைக்கு ஆர்வத்துடன் வந்தவர், அங்கே என்ன செய்தார்? 'தவமாய் தவமிருந்து' படத்தில் நன்றாக நடித்திருந்தார். ஆனால் 'பட்டியல்' படத்தில் அவர் ஆடிய ஒரு ஆட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன் நான். அப்படி ஆடுவதற்காகவா ஒரு நிலையான வேலையை விட்டு வந்தார்? வருத்தமாக இருக்கிறது.

பல நடிகைகள், ரஜினி சார் இப்படி, ரஜினி சார் அப்படி, கமல் சார் ஒரு legend, கமல் சாரோடு நடிப்பது என் வாழ்க்கையில் லட்சியம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ, கமலோ எந்த ஒரு நடிகையப் பற்றியாவது உயர்வாகப் பேசியிருக்கிறார்களா? அந்த நடிகையோடு நடிப்பது தன் வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்லியிருக்கிறார்களா? ரஜினி, கமல் மேல் எந்தத் தவறும் இல்லை. அப்படி சொல்லும் அளவு நம் நடிகைகள் இன்று இல்லை என்பது தான் உண்மை.

மற்றொரு நடிகை - எனக்குப் பெயர் ஞாபகம் இல்லை. "நான் தூங்கும் போது என்னுடைய teddy bear ஐ கட்டிப்பிடித்துக்கொண்டு தான் தூங்குவேன்" என்று சொன்னார். தன் கரடி பொம்மையைத் தாண்டி, சுற்றி நடக்கும் துயரங்களை, அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை இந்த நடிகை என்றைக்காவது பார்க்க நேருமா?

ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் தம்மீது விழும் அளவு ஒரு சக்திவாய்ந்த துறையில் இருக்கும் பெண்கள், எப்படியெல்லாம் தம்மை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம்?! அதைவிட்டுவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் குடி, போதை மருந்து போன்ற கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வது என்று தம்மைத் தாமே அழித்துக்கொள்கிறார்கள்.

தொடக்கத்திற்கே மீண்டும் போகிறேன். அசின் - விஜய் பேட்டியின் நோக்கம் தான் என்ன? அசின் விஜய்யைப் பற்றியோ, விஜய் அசினைப் பற்றியோ விபரங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?. இல்லை, அவர்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்துகொண்டு நாம் தான் என்ன செய்யப் போகிறோம்? பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினத்தன்று பண்டிகைகளின் வரலாற்றைவிட, நடிகர் நடிகைகளின் வரலாறுகள் தான் நமக்கு அதிகம் புகட்டப்படுகிறது. இவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள் நாம் நம் பொன்னான நேரத்தை செலவு செய்து பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் தினமும் இவர்களைப்பற்றியே படித்தும், பார்த்தும் கொண்டிருக்க?

Robert Frost இன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

சினிமாவும் தொலைக்காட்சியும் கொடுக்கும் புகழிலும், பணத்திலும் பெண்கள் மூழ்கி தாம் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களுடைய சுயமரியாதை, promises, miles எல்லாமே அடிபட்டுபோய்விடுகிறது.

Monday, May 21, 2007

அன்னையர் தினத்தன்று என்னை அசத்திய ஒரு அன்னை

மே மாதம் 11 ஆம் தேதி நான், கணவர் மற்றும் ஒரு நண்பர் குடும்பம் Tennessee யில் உள்ள Smoky Mountains சென்றிருந்தோம். மே 13 ஞாயிறு அன்று காலை நல்ல இளம் வெயில், வெளியில் உலாவ அருமையான நாள். Laurel Falls என்கிற நீர்வீழ்ச்சியைச் சென்று பார்க்க திட்டமிட்டோம். நீர்வீழ்ச்சிக்கு அருகே கார் செல்லாது என்றும், காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு 1.3 மைல்கள் நடந்து மலை மேல் ஏறிச்செல்ல வேண்டும் என்று அறிந்தோம். கணவரும் நண்பர்களும் "ஆஹா! hiking போல் ஜாலியாக போகலாம்" என்று குதூகலத்துடன் டென்னிள் ஷூ அனிந்துகொண்டு
கிளம்பினார்கள். நானோ, போக 1.3 மைல்கள் வர 1.3 மைல்கள் - மொத்தம் 2.6 மைல்கள் நடக்கவேண்டுமா என்று தயக்கத்துடன் பின் வாங்கினேன். "நான் காரில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் போய்வாருங்கள்" என்று சொன்னேன். அவர்கள் விடவில்லை. "மெதுவாக நடக்கலாம், வாங்க" என்று வற்புறுத்தி அழைத்துத் சென்றார்கள்.

மலை ஏறத் தொடங்கினோம். மக்கள் நடந்து செல்வதற்காகவே அந்த ஒற்றை அடிப் பாதையை அமைத்திருந்தார்கள். மிகவும் செங்குத்தாக இல்லாமல், லேசான மேடாக பாதை மேலே சென்றதால் நடப்பதற்கு சுலபமாக இருந்தது. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள், நடுவே ஒடும் அருவி...இயற்கை வளம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அவ்வப்போது வழியில் இருந்த பாறைகளில் அமர்ந்து சற்று இளைபாறிவிட்டு தொடர்ந்து நடந்தோம். அமெரிக்காவில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் வசிக்கும் வெள்ளைகாரர்ளுக்கு தோழமை உணர்வு அதிகம்.
நடைபாதை வழியில் எதிரே தென்பட்டவர்களெல்லாம் முகம் மலர சிரித்து "Hi" சொல்லிச் சென்றார்கள். சிலர் "You are not very far from the falls. It's very pretty up there" என்று சொல்லி எங்கள் ஆர்வத்தை அதிகரித்துவிட்டுச் சென்றனர்.
மேலே செல்லச் செல்ல, அருவியின் சப்தத்தையும் சாரலையும் உணரமுடிந்தது. பாதையும் கரடு முரடாக மாறியது. வழியில் ஒரு பெண்மணி தென்பட்டார். வெள்ளைக்காரர். 40 வயதிருக்கும். ஒரு சக்கர நாற்காலியைப் பிடித்துக்கொண்டு பாதையின் ஓரத்தில் நின்றிருந்தார். சக்கர நாற்காலியில் ஒரு சிறுமி - 8 வயதிருக்கும். அழுதுகொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அருகில் சென்று ஏதாவது உதவி தேவையா என்று கேட்போது அந்தப் பெண்மணி நிலவரத்தைச் சொன்னார். அன்று அன்னையர் தினம் என்பதால் தன் நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு Laurel நீர்வீழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார். தன் இரண்டாவது குழைந்தையான அந்தச் சிறுமிக்கு கால் ஊனம். சக்கர நாற்காலியில் அவளை வைத்து தள்ளிக்கொண்டு அவ்வளவு தூரம் வந்துவிட்டார். அனால் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் பாதை கரடு முரடாக மாறிவிட்டதால் சக்கர நாற்காலியை அவரால் தள்ள முடியவில்லை. அந்தச் சக்கர நாற்காலியின் எடை 350 பவுண்டுகளாம்!!! அடேயப்பா!! வாயடைத்துப் போனேன். தனி ஆளாக இவ்வளவு தூரம் எப்படி தள்ளிக்கொண்டு வந்தார்? கூட ஆண் துணை யாரும் இல்லை. கணவர் வரவில்லையா, விவாகரத்தாகிவிட்டதா, இறந்துவிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒரு ஆண் துணை அந்த நேரத்தில் இல்லை என்பது எந்த வகையிலும் அந்தப் பெண்மணியை பாதித்தாகத் தெரியவில்லை.

என் கணவரும் நண்பரும் சக்கர நாற்காலியைத் தள்ள முற்பட, பாறைகளின் இடுக்கில் சக்கரம் சிக்கி நகர மறுத்தது. அருவிக்கு இன்னும் 5 நிமிட நடைதான் பாக்கி இருந்தது. என் கணவர், "நான் வேண்டுமானால் குழந்தையை தூக்கிக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டார். அந்தப் பெண்மணியும் மகளிடம், "Do you want this uncle to give you a piggy back?" என்று கேட்டார். அந்தச் சிறுமி என் கணவரைப் பார்த்து மிரண்டு :-) "No" என்று மறுத்துவிட்டாள். அவ்வளவு தூரம் நீர்வீழ்ச்சியைப் பார்க்கவேண்டுமென்று அயாராது ஆவலுடன் வந்திருக்கும் அம்மாவுக்கும் மகளுக்கும் எப்படியாவது உதவவேண்டுமே என்று நாங்கள் தவிக்க, அந்தப் பெண்மணியோ புன்னைகையுடன், "எங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம். என்னுடைய மற்ற மூன்று குழந்தைகளும் நீர்வீழ்ச்சிக்கருகே இருப்பார்கள், அவர்களிடன் இந்தக் காமிராவைக் கொடுத்து நிறைய புகைப்படங்கள் எடுக்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி காமிராவைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு நாங்கள் மேலே நடந்தோம். சில அடிகள் நடந்தபின் நான் திரும்பிப் பார்த்தேன். வெயிலின் சூடு தாங்கமுடியாமல் வியர்த்து ஊத்தும் மகளுக்கு தன்னையே குடையாக்கி நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அருவிக்கு வந்தோம். அங்கிருந்த சிறு கூட்டத்தில் அந்தப் பெண்மணியின் மூன்று குழந்தகளையும் கண்டுபிடித்தோம். மகனுக்கு 10 வயதிருக்கும். அவனுடைய தங்கைகள் இரட்டையர்கள். 6 வயதிருக்கும். தேவதைகள் போல் இருந்தார்கள். அவர்களிடம் காமிராவைக்கொடுத்து அம்மா சொன்ன செய்தியைச் சொன்னோம். சற்று நேரம் நீரில் விளையாடிவிட்டு அவர்கள் தன் அம்மாவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நீர்வீழ்ச்சிக்கு எதிரே இருந்த பாறையில் அமர்ந்தேன். சக்கர நாற்காலியுடன் பாதையின் ஓரத்தில் காத்திருக்கும் அந்த பாசமான அன்னை என் மனதை நிறைத்தாள். நான்கு சிறு குழந்தைகளை, அதிலும் ஒரு ஊனமான குழந்தையை அழைத்துக்கொண்டு, கணமான ஒரு சக்கர நாற்காலியையும் தள்ளிக்கொண்டு அன்னையர் தினத்தன்று ஒரு நீர்வீழ்ச்சியை தன் குழந்தைகளுக்குக் காட்டவேண்டுமென்று வந்திருக்கும் அந்தப் பெண்மணிக்கு எவ்வளவு மன உறுதி இருக்கவேண்டும்?! அவரைப் பார்த்து வளரும் அந்தக் குழந்தைகளும் அதே மன உறுதியைக் கற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அருவி கொட்டிக்கொண்டிருந்தது. ஏதேதோ கவிதைகள் ஞாபகம் வந்தது.

இயற்கை அன்னை!
சந்திரனும் சூரியனும் அவளின் கண்கள்
காற்று அவளின் சுவாசம்
வானவில் அவளின் புன்னகை
இடியும் மின்னலும் அவளின் கோபம்
பூக்கள் அவளின் அழகு
மேகங்கள் அவளின் கணவு


இதில் இரண்டு வரிகளைச் சேர்க்கத் தோன்றியது...

பாறை அவளின் மன உறுதி!
அருவி அவளின் அன்பு!


புகைப்படமேல்லாம் எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் கார் நிறுத்திய இடத்திற்கு நடையைக்கட்டினோம். வழியில் அந்தப் பெண்மணியைக் காணவில்லை. கீழே இறங்கிச்சென்றிருப்பார்கள் போலும். எங்களுடன் வந்த நண்பரின் மனைவி "பாத்தீங்களா? இன்று அன்னையர் தினம் என்று தெரியாமல் போய்விட்டது! இந்தக் கணவன்மார்களும் தெரியாதது போல் நடித்துவிட்டார்கள். ஒரு பரிசு, ஒரு வாழ்த்து ஒன்னும் காணோமே?" என்று குறைப்பட்டுக்கொண்டார். எனக்கு எந்தக் குறையும் மனதில் ஏற்படவில்லை. நடப்பதற்கு பயந்துகொண்டு காரில் புத்தகம் படித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க நினைத்த நான் எங்கே? மேலே அருவி அருகே நான் பார்த்த அந்தப் பெண்மணி எங்கே? அன்னையர் தின வாழ்த்துக்கும், பரிசுக்கும் அவருக்குத்தான் தகுதி உண்டு!.

Wednesday, May 02, 2007

ஷில்பா & ரிச்சர்ட்

நான் ரிச்சர்ட் கியரின் பரம விசிறி. 57 வயதிலும் என்ன ஒரு வசீகரம்! என்ன ஒரு ஸ்டைல்! ஆனால், நாடு விட்டு நாடு வந்திருக்கும் போது மேடையில் சற்று கவனமாக நடந்திருக்கலாம். இந்தியாவிற்கு பல முறை வந்துபோகும் அவருக்கு, அமெரிக்கா போல் இந்தியாவில் ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பதெல்லாம் ஒத்துக்கொள்ளப்படாத ஒன்று என்று தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக விடுமுறைக்கு ஒரு ஊருக்குப் போனாலே அந்த ஊரைப் பற்றி படித்து, ஆராய்ந்தோ, கேட்டோ தெரிந்துகொண்டு போவது அமெரிக்கர்களின் வழக்கம். இதுவே துபாய், குவைத் போன்ற நாடுகளாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. நம்ம ஆட்களும், ஒரு கண்டனம் தெரிவித்துவிட்டு அத்தோடு இதற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம், ஆனால் அதற்காக போராட்டம் நடத்தி, கைது செய்யும் அளவிற்குப் போவதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை ஷில்பா ஷெட்டி ரிச்சர்ட் கியரை அறைந்திருந்தால் அவரைக் கைது செய்வதற்கு பதில் கொண்டாடி இருப்பார்களோ?

'Indian Law Made Easy' என்ற இணையதளத்தில் இப்படி படித்தேன்:
WHAT ARE OBCENE ACTS AND SONGS AN OFFENCE
The obscene act or song must cause annoyance. Though annoyance is an important ingredient of this offence, it being associated with mental condition has often to be inferred from proved facts. The essential elements are:
1) Does any obscene act in any public place,
2) Sings, recites or utters any obscene song ballads or words, in or near public place.
PUNISHMENT
Whoever causes annoyance to others shall be punished with an imprisonment, which may extend to three months, or with fine, or both.

இதில் இரண்டாவதாக பட்டியலிட்டிருக்கும் விசயத்தைக் கவனியுங்கள். சினிமா தியேட்டரும் ஒரு பொது இடம் தானே? தமிழ், இந்தி சினிமாக்களில் வராத அருவருப்பான பாடல் காட்சிகளா, அல்லது பாடல் வரிகளா? இதே ஷில்பா ஷெட்டி எத்தனை சினிமாக்களில் அருவருப்பான பாடல் காட்சிகளில் நடித்திருப்பார்? எத்தனை லட்சம் பேர் அதைப் பார்த்திருப்பார்கள்? அதில் அடிபடாத கலாசாரமும், கெளரவமும் அந்த ஐந்து நிமிட மேடை நிகழ்வில் தான் அடிபட்டுவிட்டதா? ஷில்பாவும் ரிச்சர்ட்டும் நடத்திய அந்த நிகழ்ச்சி, லாரி ஓட்டுனர்களுக்கான AIDS விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொடர்ந்து பல நாட்களாக சாலைகளிலேயே நேரத்தைச் செலவழிக்கும் லாரி ஓட்டுனர்கள் வழியில் உள்ள கிராமங்களில் இதற்காகவே தொழில் செய்யும் பெண்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்ளலாம், ஆனால் காண்டோம் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லும் அளவு வளர்ந்து விட்ட கலாசாரத்தை, விளையாட்டாக ஒரு நடிகர் ஒரு நடிகையைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அவமானப்படுத்திவிட முடியுமா?

மேலைநாட்டுக் கலாசாரம், உடைகள், மொழி, உணவு என்று எல்லாமே ஊடுருவிக்கொண்டிருக்கும் இந்தியாவில், இந்தியக் கலாசாரம் என்று இன்னமும் என்ன மிச்சமிருக்கிறது? உண்மையில் "கலாசாரம்" என்பதை எப்படி விவரிப்பது என்றோ எப்படி புரிந்துகொள்வதென்றோ எனக்குத் தெரியவில்லை.