Monday, February 15, 2016

பாலாவின் தாரை தப்பட்டை - ஒரு பார்வை


பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் போன்ற திரைப்படங்களைப் பார்த்தபின் அடுத்து வரும் பாலாவின் திரைப்படம் எப்படி இருக்கும் என்று எல்லோராலும் எளிதாக  ஊகித்துவிட முடியும்.   அது விளிம்பு விலை மனிதர்களின் அவலமான வாழ்கை பற்றியதாக இருக்கும்.  முடிவு மிகக் கொடூரமானதாக இருக்கும்.   அடுத்தடுத்து அவரின் ஒரே மாதிரியான திரைப்படங்கள் அலுப்பாக இருந்தாலும், அவரின் லாப நோக்கற்ற, விடாப்பிடியான சமூக அக்கறை என்னை வியக்க வைக்கிறது.  நலிவுற்ற கீழ்த்தட்டு மனிதர்களைப் பற்றி யாராவது நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.  இல்லையென்றால் அவர்களை நாம் மறந்துவிடக்கூடும்.  அதற்கு பாலாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில்?

பாலாவின் திரைப்படங்களை நான் ஒரு பாடம் படிப்பது போல் தான் பார்க்கிறேன்.  பிச்சைக்கார்களைப் பார்திருக்கிறேன்.  அவர்கள் ஏந்திய தட்டில் காசு போட்டிருக்கிறேன்.  அவர்கள் வாழ்கைக்கு அருகே நான் வந்த அந்த அதிகபட்ச நெருக்கம் அது மட்டுமே.  பாலாவின் "நான் கடவுள்"பார்த்தபின் தான் அந்த ஏந்திய தகடுகளுக்கும், அதில் சிதறிக் கிடக்கும் சில்லரைகளுக்கும் அப்பால் அவர்களின் உலகம் எப்படி இருக்குமென்று ​ தெரிந்து கொண்டேன். கரகாட்டக்காரர்களை கோவில் திருவிழாக்களில் பார்த்திருக்கிறேன்.  அந்த இசையோ நடனமோ என்னை
​ வெகுவாக ஈர்க்கவில்லை.  தாரை தப்பட்டை பார்த்தபின் தான் தெரிகிறது, அந்தக் குட்டைப் பாவடைக்குப் பின் உள்ள நீளமான ​சோகம்...
  

"அனைவரும் பார்க்கவேண்டிய படம்" என்று நிறைய படங்களை நண்பர்களுக்குப் பரிந்துரைத்திருக்கிறேன்.  ஆனால் பாலாவின் படங்களை அப்படி பரிந்துரைக்க எனக்கு தயக்கம் உண்டு.  அவர் படங்களைப் பார்க்க ஒரு துணிவு வேண்டும்.  தீவிர மன பாதிப்புக்கும், சில தூக்கமற்ற இரவுகளுக்கும் நம்மை நாமே காவு கொடுக்கவேண்டும். பாலாவின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு அல்ல...அது ஒரு 
வலி! 

இனி தாரை தப்பட்டை பற்றி...

பாலாவையே தூக்கியடித்து புறந்தள்ளிய "சூராவளி" யாக வரலட்சுமி!!   
​ணிரத்தினமோ, கவுதம் மேனனோ தம் கனவிலும் கற்பனை செய்திருக்க முடியாத அப்படி ஒரு கதாபாத்திரம்!  குடிகாரி, குட்டைப் பாவாடை கட்டிய கெட்ட ஆட்டக்காரி...ஆனால் நல்ல மனசுக்காரி.   தன் மாமனின் மேல் யார் கைவைத்தாலும் அவரை அடித்து துவம்சம் செய்வாள், ஆனால் அதே மாமன் தன்னை ​வேறு ஒருவனை திருமணம் செய்துகொள்ளச் சொல்லும் போது, அவனை தானே காலால் உதைத்து ஆற்றில் தள்ளி விடுவாள்.  முதல் பாதி முழுவதும் தன் அபாரமான நடிப்புத் திறமையால் வரலட்சுமியே நிறைந்து நிற்கிறார்.  வெளி நாட்டில் "பாலே" நடனம் பயின்ற ஒரு பெண் எப்படி தாரைக்கும் தப்பட்டைக்கும் இப்படி அதிரடியாக ஆடமுடியும் என்று வியக்க வைக்கிறார்.  முதல் பாதி கதையின் கருவுடன் ஒட்டி விறுவிறுப்பாக நகர்கிறது.  பாலாவின் முந்தைய படங்கள் தந்த பயத்தால், அந்த கரகாட்டக் குழு அந்தமான் செல்ல கப்பல் ஏறும் போது பகீரென்று அடிவயிறு கலங்கியது...எங்கே அவர்கள் அந்தமானில் மாட்டிகொண்டு அடிமைகளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படப்போகிறார்களோ என்று!  

​ஆனால் நல்ல வேளை...சில பிரச்சினைகளுக்குப் பிறகு நல்லபடியாக ஊர் திரும்பிவிடுகிறார்கள்.  

இடைவேளைக்குப் பிறகு படம் மையக் கருத்திலிருந்து தடம் மாறி பாலாவின் வழக்கமான கொடூரங்களால்  நிரப்பப்பட்டுள்ளது.  ஒரு அருமையான திரைப்படமாக இருந்திருக்க வேண்டிய தாரை தப்பட்டையில், தேவையற்ற வன்முறைக் காட்சிகளை பொதித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் பாலா.  பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடிவாங்குகிறார்கள்,  அவர்களின் கூந்தல் மழிக்கப்படுகிறது, வாடகைத் தாயாக விற்கப்படுகிறார்கள்...இத்தனை வன்முறைகளைக் காட்டித்தான் ஆகவேண்டுமா பாலா? 

முதல் பாதியில் கரகாட்டக்காரர்களின் உடை, உடல்மொழி, நடன அசைவுகள் மற்றும் உரையாடலில் உள்ள கொச்சைத்தனம் சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்ததாகத் தோன்றியது எனக்கு.  ஆபாசத்திற்காக  தன் படங்களில் சமரசம் செய்யக்கூடியவர் அல்ல பாலா.  ஒரு வேளை படிப்பறிவில்லதவர்கள், கரகாட்டத்தைத் தவிர வேறு எதையும் சிறு வயதிலிருந்தே அறிந்திறாதவர்கள் அப்படித்தான் கொச்சையாகப் பேசுவார்கள் என்று பாலா சொல்கிறார் போல.  நானும் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் பார்த்திருக்கிறேன்.  கலைஞர்கள் இந்த அளவு குறைந்த உடைகள் ​ணிந்ததாக, எனக்கு நினைவில்லை.    மனதில் பல கேள்விகள் எழுகிறது.  ஒரு காலத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து இரசிக்கப்பட்ட கரகாட்டம் அல்லது தெருக்கூத்து இதுதானா? இல்லையென்றால் பாலா கண்பித்த இந்த கரகாட்டம் எந்த விதம்? 

இளையராஜாவின் இசைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.   அந்தமான் கோவில் திருவிழாவில் கரகாட்டக் குழு ஆடும் "வதன வதன வடிவேலா" பாடலி​ல்​ அடி தூள் கிளப்பிவிட்டார்.  அதே போல் "பாருருவாயா" பாடலில் நெஞ்சம் நெகிழவும் வைத்துவிட்டார்.  கதையின் களத்தோடு பின்னிப்
பி​ணை​ந்த இசை.  

ஆக மொத்தத்தில் இது அனைவரும் பார்க்கவேண்டிய படம் அல்ல.  ஆனால் பார்த்தீர்களென்றால், சமுதாயத்தின் பிந்தங்கிய கலையின் மீதும் கலைஞர்களின் மீதும் ஒரு கனிவு பிறக்கும்...வசந்தபாலனின் "அங்காடித் தெரு" பார்த்தபின் துணிக்கடை தொழிலாளர்களின் மீது கனிவு ஏற்பட்டதைப் போல!   .