Monday, December 08, 2008

விருந்துக்கப்பறம் நடந்த திரைப்படச் சுற்று!

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் வயிறாற விருந்துச் சாப்பிட்டுவிட்டு, சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், "நம் மனதை பாதித்த பிடித்த திரைப்படம் ஒன்றைப் பற்றி ஒவ்வொருவரும் பேசலாம்" என்று ஒருவர் தொடக்கிவைக்க, சுவையாக இருந்தது இந்தச் திரைப்படச் சுற்று.

சமீபத்திய வருடங்களில் வந்த திரைப்படங்களைப் பற்றி யாருமே வாய்திறக்கவில்லை. ஏதாவது சொல்லும்படியாகவா இருக்கின்றன இப்போது வரும் படங்கள்??!

திரைப்படச் சுற்றில், கருத்தம்மா, முல்லும் மலரும், அவள் ஒரு தொடர்கதை, பாலைவனச் சோலை, முதல் மரியாதை, சிறை போன்ற சற்று 70, 80 களில் வந்தத் திரைப்படங்களையே தம் மனதை பாதித்தப் படங்களாக நிறைய பேர் சொன்னார்கள். சிலர், Life of Others, Life is Beautiful, Bridges of Madsion County போன்ற ஆங்கிலப் படங்களையும் குறிப்பிட்டார்கள்.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டது என்னவென்றால், 12, 13 வயது
சிறுமிகள் இருவர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி தனக்குப் பிடித்த படமாகச் சொன்னது "Kabul Express". மற்றொருத்தி சொன்னது "தாரே சமீன் பர்". 'Kabul Express' நான் இன்னும் பார்க்கவில்லை ஆனால் அது அமெரிக்கா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சம்மந்தப்பட்ட உலக அரசியல் பிண்ணனியைக் கொண்ட ஒரு படம். குறிப்பாக ஒரு தாலிபான் தீவிரவாதியைப் பற்றியது. 'தாரே சமீன் பர்' பற்றிச் சொல்லவே வேண்டாம். அதனைப் பற்றி ஒரு தனி பதிவு எழுதியிருக்கிறேன்.

நான் இவர்கள் வயதில், என் அக்கா என்ன படம் பார்க்கிறாளோ, அதைத்தான் நானும் பார்ப்பேன். அக்காவுக்கும் எனக்கும் 12 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தாலும், அவள் விரும்பிப் பார்த்த 'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', போன்ற படங்களைதான் நானும் பார்த்தேன். அப்போதெல்லாம் திரைப்படங்கள் பொழுது போக்கு அம்சங்களாக மட்டுமே இருந்தன. சமூக நோக்குள்ள படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் - 'வருமையின் நிறம் சிவப்பு', 'தண்ணீர் தண்ணீர்' etc. ஆனால் இந்தத் திரைப்படங்களில் உள்ள சமூக அக்கறையை கூட என்னால் அந்த வயதில் புரிந்துகொள்ளவோ பாராட்டவோ முடியவில்லை.

இப்போது மீண்டும் இது போன்ற படங்களை revisit செய்யும் போதுதான் அவற்றை பாராட்ட முடிகிறது. அந்த இரு சிறுமிகளும், 'penelope', 'high school musical', 'the incredible hulk' போன்ற படங்களை குறிப்பிட்டிருந்தாலும், அது அவர்கள் வயதிற்கு பொருத்தமாகவே இருந்திருக்கும், ஆனால் அவர்கள் Kabul Express மற்றும் தாரே சமீன் பர் போன்ற படங்களைக் குறிப்பிட்டது அவர்களுடைய அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவர்களை நான் அங்கே சபையில் பாராட்டவில்லை :-( அதனால் இந்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் :-)

நான் அந்தத் திரைப்படச் சுற்றில் என் மனதை பாதித்த ஆங்கிலப் படங்கள்(Time to Kill, Rainmaker) சிலவற்றைப் பற்றிச் சொன்னேன். தமிழ்ப் படங்கள் நான் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த தமிழ்ப் படங்கள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் ஆடல், பாடல், ஜிகினா சமாச்சாரம் இவை எதுவுமே இல்லாமல் நல்ல கருத்துக்களைச் சொன்ன ஆங்கில, மற்றும் பிற மொழிப் படங்களே என் மனதை பாதித்தது, சிதைத்தது, நெருப்பை மூட்டியது, திருப்பிப் போட்டது எல்லாமே. இப்போது பாலிவுட் படங்கள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக நல்ல கருத்துள்ள படங்களாக வெளிவருகின்றன. உதாரணமாக, 'Fashion', 'Wednesday' போன்ற படங்கள்.

என் அண்ணன் மகளுக்கு 7 வயதிருக்கும் போது(அப்போது அவர்கள் பாண்டிச்சேரியில் இருந்தார்கள்), அவள் அடம் செய்யும் போதெல்லாம், என் அண்ணி ஒரு தமிழ்ப் படத்தை வீடியோவில் போட்டுவிடுவார்கள். அவள் பாட்டுக்கு பார்த்துக்கொண்டிருப்பாள். ஏதாவது சண்டைக் காட்சியோ, பாடல் காட்சியோ வந்தால், சற்று fast forward செய்தால் உடனே அழுவாள். பிறகு சில வருடங்கள் கழித்து அமெரிக்கா வந்தாள். இங்கே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தாள். இப்போது கல்லூரிக்குச் செல்லுகிறாள். இப்போது சொல்லுகிறாள் - "lets play some Tamil movies, so that we can make fun of them" என்று!! என்ன ஒரு லொல்லு!!

ஆனால் அப்படிக் கேலிக்கூத்தாகத் தான் போய்விட்டது இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலமை!