Thursday, August 13, 2009

தமிழகப் பயணம் 2009 - 4

திருச்சி நகர் புறத்திலிருந்து ஸ்ரீரங்கம் போகும் வழியில் உள்ள காவிரி பாலம் தாண்டியவுடன் வலது புறத்தில் நிறைய அடுக்கு மாடி குடியிறுப்புக் கட்டிடங்கள் உருவாகி வருவதைப் பார்க்கலாம். அதில் ஒரு கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் உருவாகிக்கொண்டிருக்கிறது எங்கள் அப்பார்ட்மெண்ட். அக்கா அந்த இன்ஜினியரிடம் அப்பாவின் நிலமையை விளக்கி, நாங்கள் இன்னும் 10 நாட்கள் தான் திருச்சியில் இருப்போம் என்றும், அதற்குள் ஒரு இரண்டு நாட்களாவது அந்த வீட்டில் தங்குவதற்கு தேவையானவற்றை மட்டும் முடித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாள். அவரும், "சில பொருட்களை நீங்கள் உடனடியாக வாங்கிக் கொடுத்துட்டிங்கன்னா ஒரு வாரத்தில் எல்லா வேலையும் முடித்துவிடுகிறோம் மெடம்" என்றார். ஆகா! இவ்வளவு சுலபமாக ஒத்துக்கொண்டாரே என்று மகிழ்ச்சியுடன் பொருட்கள் பட்டியலை அவரிடம் வாங்கிக்கொண்டோம்.


முக்கியமாக வாங்கவேண்டியவை பெயிண்ட், லைட் வகைகள் மற்றும் வாஷ் பேசின் போன்றவை. எனக்கும் அக்காவுக்கும் திருச்சியில் அவ்வளவாக இடங்கள் தெரியாது என்பதால் எங்கள் சித்தி மகளை உடன் அழைத்துக்கொண்டோம். அவளுக்கு திருச்சியில் எல்லாமே அத்துபடி. அந்த சாலையின் பெயர் நினைவில்லை, ஆனால் அங்கே சென்றால் அங்கேயே வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கலாம் என்று அங்கே அழைத்துச் சென்றாள். உண்மைதான், அந்தத் தெரு முழுக்க பெயிண்ட் கடைகள், லைட் கடைகள், பர்னிச்சர் கடைகள் என்று வரிசையாக இருந்தன. அடுத்தடுத்து ஒவ்வொரு கடையாகச் செல்ல வசதியாக இருந்தது. கல்யாணி கவரிங் கடை அந்தத் தெருவில் தான் இருக்கிறது.


முதலில் பெயிண்ட் கடைக்குச் சென்று 'Asian Paints' வகையில் பிடித்த நிறத்தை தேர்ந்தெடுத்து, அதனை எங்கே டெலிவர் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தோம். மறுநாளே டெலிவர் செய்துவிடுகிறோம் என்றார்கள். பின்னர் வாஷ் பேசின் பார்க்கச் சென்றோம். அக்கா என்னென்னவோ நவீன பேசின்களைப் பார்த்தாள். பேசினுக்கு அடியில் pedestal வேண்டுமென்றாள். ஆனால் அந்த இன்ஜினியரோ pedestal போட்டால் அதில் கரப்பான் பூச்சி வந்துவிடும் என்று சொல்லியிருந்தார். அரை மணி நேர அலசலுக்குப் பின் சாதாரண வாஷ் பேசின்களை ஆர்டர் செய்தோம். பிறகு லைட் கடை. மதுரை ரோடில் உள்ள 'Noble Traders' என்கிற இந்தக் கடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்ற கடைகள் போலில்லாமல் இங்கு வேலை செய்பவர்கள் சற்று விசயம் தெரிந்தவர்களாக இருந்தார்கள். கிட்டத்தட்ட 100 வகை விளக்குகளை அங்கே பார்வைக்கு வைத்திருந்தார்கள். அத்தனை விளக்குகளுக்கும் மின்சார இணைப்பு இருந்தது. எந்த விளக்கை நாம் போடச் சொன்னாலும் போட்டுக்காட்டுகிறார்கள். நானும் அக்காவும் பார்த்துப் பார்த்து வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை எல்லாவற்றிற்கும் விளக்குககளை தேர்வு செய்தோம். அந்த விளக்குகளுக்கு பொருத்தமான 'பல்ப்' வகைகளையும் அங்கேயே தேர்வு செய்தோம். பில் போடுவதற்கு முன் அத்தனை விளக்குகளையும் அட்டைப்பெட்டிகளிலிருந்து பிரித்துக் காட்டி சரி பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள் கடைக்காரர்கள். ஒரு படி மேலே போய், வாங்கிய அத்தனை பல்புகளையும் ஒரு switch board ல் சொருகி, நன்றாக எரிகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்! ஆகா! திருச்சியில் இப்படியொரு நேர்மையான கடையா என்று பெருமையாக இருந்தது. திருச்சியில் விளக்குகள் வாங்கவேண்டுமென்றால் இந்த Noble Traders கடையில் கட்டாயம் வாங்குமாறு சிபாரிசு செய்கிறேன். சோபா, கட்டில், சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள் போன்ற பர்னிச்சர் வாங்குவதற்கு 'நாகப்பா ட்ரேடர்ஸ்' என்கிற கடை நன்றாக இருக்கிறது.


குளியல் அறைக்கு 'டைல்ஸ்' போட்டது ஒரு சுவாரசியமான கதை. அந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து வீட்டு குளியல் அறைகளுக்குமே ஊதா நிறத்தில் பூக்கள் போட்ட 'டைல்ஸ்' போடுவதாக கட்டிடத் திட்டத்தில் இருந்தது. அப்படி போடப்பட்ட வீட்டைப் பார்த்த அக்கா முகம் சுளித்தாள். கண்ணைப் பறிக்கும் ஒரு ஊதா நிறம் அது. மேலும் வீட்டுச் சுவர் நிறத்திற்கும் இந்த ஊதா நிறத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை. வேறு மாதிரி டைல்ஸ் வாங்கிக்கொடுத்தால் போடுவீர்களா என்று இன்ஜினியரிடம் கேட்டபோது, அவர் போட்டுத்தருகிறோம் என்றார். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அக்கா அன்று முழுவது டைல்ஸ் வேட்டையில் இறங்கி ஒரு அழகிய நிறத்தில் டைல்ஸ் தேர்வும் செய்து அடுத்த நாள் புது வீட்டுக்கு ஒடினாள். அங்கே சென்ற அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஊதா நிற டைல்ஸ் எங்கள் வீட்டு குளியல் அறையில் நேர்த்தியாகப் போடப்பட்டு அக்காவைப் பார்த்துச் சிரித்தது!! என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்று கேட்டபோது இன்ஜினியர் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினார். தவறு நடந்துவிட்டது, மன்னியுங்கள் என்றார். 'எனக்கு இந்த டைல்ஸ் வேண்டாம். நான் தேர்வு செய்த டைல்ஸ் தான் வேண்டும், என்ன செய்வீர்களோ தெரியாது' என்று அக்கா திட்டவட்டமாகச் சொல்ல, அடுத்த நாள் அந்த ஊதா நிற டைல்ஸ் உடைத்து எடுக்கப்பட்டு அக்காவுக்குப் பிடித்த டைல்ஸ் போடப்பட்டது.


பெயிண்ட் வாங்கிக்கொடுத்துவிட்டால் இரண்டு நாட்களில் அடித்து முடித்துவிடுவோம் என்று இன்ஜினியர் சொல்லியிருந்ததால், இரண்டு நாட்கள் பொறுமையாகக் காத்திருந்து நானும் அக்காவும் ஆர்வத்துடன் புது விட்டிற்குச் சென்றோம். மீண்டும் அதிர்ச்சி! சுவர்கள் வெறுமையாக இருந்தன! மீண்டும் இன்ஜினிரின் சிண்டு எங்கள் கையில்! பெயிண்ட் எங்களுக்கு வந்து சேரவில்லையே மேடம் என்றார் அவர். பெயிண்ட் கடைக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ஆர்டர் செய்த மறுநாளே அங்கே டெலிவர் செய்துவிட்டொம் என்றார்கள். குழம்பிப் போய் நின்றபோது, தலையைச் சொறிந்து கொண்டே வந்த கட்டிட வாட்ச் மேன், சாரி மேடம் பெய்ண்ட் நேத்து காலைல டெலிவரி செஞ்சிட்டாங்க. நான் தான் வாங்கி வெச்சேன். சார் கிட்ட சொல்ல மறந்திட்டேன், என்றார். சரியா போச்சு! என்ன செய்ய முடியும் இவர்களை நம்மால்??!! சரி சீக்கிரம் அடித்து முடித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றோம்.


இப்படி ஒவ்வொன்றும் போராட்டமாக இருந்தது. நாங்கள் அமெரிக்கா திரும்புமுன் அந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்க முடியும் என்கிற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தோம். நாங்கள் அமெரிக்கா திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடைசியாக புது வீட்டைப் பார்க்க அப்பா அம்மாவையும் அழைத்துச் சென்றோம். ஒரே ஒரு அறைக்கு மட்டும் வண்ணம் பூசியிருந்தார்கள். மற்றபடி வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. சே! இனி எப்போது இந்த வீட்டில் அப்பா அம்மாவுடன் இருப்பது? என்று வருத்தமாக இருந்த அக்காவையும் என்னையும், 'கவலைப்படாதீங்க, இன்னும் ஒரு மாசத்தில் எல்லா வேலையும் முடிந்துவிடும். அப்பறம் ஜாம் ஜாமென்று நாங்க இங்க குடி புகுந்துவிடுகிறோம்' என்று சொல்லி சமாதானப்படுத்தினார் அப்பா. வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு வெளியில் வருகையில், எதிர் அப்பார்ட்மெண்ட்டின் அமைப்பு சற்று வித்தியாசமாகப் பட்டது. படுக்கை அறையிலிருந்து வீட்டுக்கு வெளியில் வர ஒரு வாயில் கதவு வைக்கப்பட்டிருந்தது. ஏன் அப்படி என்று அங்கே ஒரு ஆசாரியிடம் விசாரித்தோம். அவர் சொன்னதைக் கேட்டு வியந்து போனோம்! அந்த வீட்டு மருமகளுக்கு குடும்பத்தோடு ஒத்து போகாதாம். அதனால் தன் அறைக்குத் தனியே வாசல் கதவு வைத்துக் கட்டுகிறாராம்!!! என் கணவரிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, அந்தப் புரட்சிப் பெண்ணுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றார் :-)


நாளை சென்னை பயணம். 'சென்னை' என்றாலே வயிற்றில் சற்று புலியைக் கரைக்கத்தான் செய்கிறது.
தொடரும்...

Thursday, August 06, 2009

தமிழகப் பயணம் 2009 - 3

வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது! புற்று நோய் பரவிய தேகம் சுருங்கி...எலும்பும் தோலுமாக, பலவீனமாக, இடுப்பில் சதை இல்லாததால், மார்பு வரை தூக்கிக் கட்டிய லுங்கியுடன்...என் நெஞ்சில் ரத்தம் வழிந்தது. ஜம்மென்று டிப் டாப்பாக உடை அணிந்து தனது ஸ்கூட்டரில் தான் நேசித்த பல்கலைக்கழகத்திற்கு ஆர்வத்துடன் தினம் சென்ற அப்பாவா இது?? அதை விட பரிதாபமாக இருந்தது அப்பாவிற்கு நர்ஸ் வேலை பார்த்துப் பார்த்து சோர்ந்து போயிருந்த அம்மாவைப் பார்த்தால்! ஒரு கணம் யோசித்தேன், இங்கிருந்தபடியே எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இவர்களுடனேயே இருந்துவிடலாமா என்று. முடியவில்லையே?! இப்படி திண்டாடும் பல சூழ்நிலைக் கைதிகளில் நானும் ஒருத்தி :-(

நிலமையின் இறுக்கத்தை மாற்ற, "அப்படியே கல்லாப்பெட்டி சிங்காரம் மாதிரியே இருக்கிறீர்கள்" என்றேன் அப்பாவிடம். அடுத்து வந்த நாட்களிலும், முடிந்த வரை இயல்பாக, கலகலப்பாக இருக்க எல்லாருமே முயற்சி செய்தோம்.

திருச்சியில் வெயில் அனலாகத் தகித்தது. காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்சார நிறுத்தம் வேறு! ஆனால் அந்த 2 மணி நேரம் நான், அப்பா, அம்மா, அக்கா நால்வரும் வாசலில் அமர்ந்து விசிறிக்கொண்டே எதாவது குடும்பக் கதை பேசிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து எங்கள் அத்தை இறங்கினார். கையில் நிறைய பைகள். "வாங்க எல்லாரும் காலை சிற்றுண்டி சாப்பிடலாம்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். பையில் இருந்த உணவு பாக்கெட்டுகளை பிரித்து அடுக்கினார். இட்லி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி என்று வகையாக வகையாக வாங்கிவந்து அசத்திவிட்டார். திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் உணவகத்தில் வாங்கினாராம். ஆகா, என்ன அருமையான சுவை! நன்றாக வளைத்துக் கட்டினோம்.

நம்ம ஊரில் சமையல், சாப்பாடு என்பது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. வேண்டும் என்கிற போதெல்லாம் பார்சல் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் 'ரெடிமேட் மிக்ஸ்' இருக்கிறது - பஜ்ஜி மிக்ஸ், பக்கோடா மிக்ஸ், வடை மிக்ஸ் இதெல்லாம் 'சக்தி', 'ஜானகிராம்' போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அதேபோல் இனிப்பு, கார பதார்த்தங்கள் எதுவாக இருந்தாலும் சுவை குன்றாமல் கடைகளிலேயே கிடைக்கின்றன. சென்னையில் அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸில், "abroad package" செய்து தாருங்கள் என்று சொன்னால் அருமையாக, நேர்த்தியாக சிந்தாமல் சிதறாமல் பாக் செய்து தருகிறார்கள்!! ஆனால் எது எப்படி இருந்தாலும், இங்கே அமெரிக்காவில் வந்திறங்கும் போது, "Do you have any food items?" என்று அதிகாரிகள் கேட்கும் போது 'பக்' கென்று தான் இருக்கிறது.

அத்தை கொண்டு வந்த அருமையான காலை உணவைப் பற்றி சிலாகித்து முடிக்கு முன்பே, மற்றுமொரு பம்பர் பரிசு அடித்தது! எனக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்ததால், ஐந்தாவது மாதம் செய்யும் 'கட்டு சாதம்' நிகழ்வை முறைப்படி செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கு நாளும் குறித்தார் அத்தை. அன்றைக்கும் வீட்டிற்கு வந்திறங்கியது வரிசையாக சாத வகைகள். கல்கண்டு சாதம்(அக்கார வடிசல்), மாங்காய் சாதம், சாம்பார் சாதம், கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் சிப்ஸ் - இவற்றை உறவினர்கள் செய்து எடுத்து வந்திருந்தார்கள். அம்மாவின் பங்கிற்கு தயிர் சாதம், வடை, பாயசம் செய்திருந்தார். நான் எத்தனையோ 'pot luck' களை அமெரிக்காவில் பார்த்திருந்தாலும், எனக்கே எனக்கென்று அன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த pot luck என் மனதை நெகிழ வைத்தது. இந்த கவனிப்பு கொடுத்த மிதப்பில் இருந்த நான், சற்று அப்பாவை மறந்திருந்தேன். அப்பாவும், இந்த கலகலப்பான சூழ்நிலையால் தன் வலிகளையும் கவலைகளையும் மறந்திருந்தார். ஒரு நாள் தனக்கு இரண்டே ஆசைகள் தான் எஞ்சி இருக்கின்றன என்றார். ஒன்று, எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்த்துவிட வேண்டும். இரண்டாவது, அக்கா திருச்சியில் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் சில நாட்களாவது குடியிருக்கவேண்டும் என்பதே அவருடையா இரண்டு ஆசைகள். திசம்பர் மாதம் பிறக்கப்போகும் என் குழந்தையை அப்பா பார்த்துவிவிட வேண்டுமென்று என்னல் பிரார்த்தனை தான் செய்ய முடியும். குழந்தைப் பிறப்பதை துரிதப்படுத்த முடியாது. ஆனால் அந்த புது வீடு கட்டும் வேலையை துரிதப்படுத்தாலாம் என்று முடிவு செய்து அக்கா களத்தில் இறங்கினாள். நானும் அக்காவுடன் இணைந்தேன்.

திருச்சியில் யாராவது வீடு கட்டவேண்டுமா? எங்களிடம் ஆலோசனைக் கேளுங்கள் என்று சொல்லுமளவு நானும் அக்காவும் அதில் அவ்வளவு அனுபவங்களைப் பெற்றோம்.

அடுத்தப் பதிவில் அந்த அனுபவங்கள்...

Tuesday, August 04, 2009

தமிழகப் பயணம் 2009 - 2

சென்ற பதிவில் என் அப்பாவின் உடல்நிலைக்காக வருந்தி பிரார்த்தனை செய்வதாக எழுதியிருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

இனி எமிரேட்ஸ் விமானத்தில்...பழைய நினைவுகளில் நான்...
அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்துவுடனேயே, அவருக்கு என்ன மாதிரி சிகிச்சை செய்யலாம் என்று நான், அக்கா மற்றும் அண்ணன்மார் கலந்து ஆலோசித்தோம். chemotherapy கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் தெளிவாகச் சொன்னேன். ஏனென்றால், அதன் பக்க விளைவுகள் கொடுமையானவை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் என் கணவரின் சித்தப்பா chemo வினால் மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு 60 வயது தான். அவராலேயே தாங்கமுடியவில்லையென்றால் 79 வயதான என் அப்பா அதனை எப்படித் தாங்குவார்? வாசிங்டனில் எனக்குத் தெரிந்த புற்று நோய் மருத்துவர்கள் இருவருடன் பேசினேன். அவர்கள் சொன்னது, chemo ஒரு நல்ல சிகிச்சைதான். 40 அல்லது 50 வயதான ஒரு நோயாளிக்கு அந்த சிகிச்சையினால் 5 வருடங்கள் வரை ஆயுள் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் அப்பாவுக்கு ஏற்கனவே 80 வயதாகிவிட்டதால் இன்னும் 6 மாதங்களோ ஒரு வருடமோதான் அவரால் இருக்க முடியும், அதுவும் chemo வின் பக்க விளைவுகளினால் அவரது 'quality of life' மிகவும் மலிவாகத் தான் இருக்கும் என்றார்கள். மற்றொரு மருத்துவர் மிக அழக்காகச் சொன்னார் "We try to treat the cancer, but not the patients" என்று. அதானல் chemo வேண்டவே வேண்டாம் என்பது என் தரப்பு வாதமாக இருந்தது.

ஆனால் அக்கா தனக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் பேசிப்பார்த்தாள். அதில் ஒருவர் இப்போது ஒரு புது விதமான மருந்தை chemo வில் உபயோகிக்கிறார்கள் என்றும், அதற்கு பக்க விளைவுகள் மிகவும் குறைவு, அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். அந்த மருந்தை கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் வெற்றிகரமாக உபயோகித்து வருகிறார்கள் என்றும், சென்னையில் மலர் மருத்துவமனையில் இதனை உபயோகிக்கிறார்கள் என்றும் சொல்லி, அந்த சென்னை மருத்துவரை சிபாரிசும் செய்தார். இந்த சிகிச்சை முறைக்கு folfox regimen combination chemo therapy என்று பெயராம். இதில் 'Avastin' என்கிற மருந்தை உபயோகிக்கிறார்கள். நான் ஏதோ பரீட்ச்சைக்குப் படிப்பது போல் இந்த சிகிச்சையைப் பற்றி இணையத்தில் மாங்கு மாங்கென்று படித்தேன்.

அக்கா முதலில் திருச்சி சென்றதும் சென்னையில் மலர் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்று அந்த மருத்துவரிடம் அலோசித்தாள். அவர் அப்பாவை பரிசோதனை செய்துவிட்டு, அவரது உடல்நிலை ஓரளவு தெம்பாகத்தான் இருக்கிறது. அதனால் இந்த சிகிச்சையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார். மறுநாள் மதியம் chemotherapy என்று முடிவும் ஆகிவிட்டது. அன்று இரவு கூட அக்காவிடம் மன்றாடினேன் chemo வேண்டாமென்று. ஆனால் அப்போது அப்பாவே ஒரு முடிவுடன் முயன்று பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

இந்த chemo சிகிச்சையை 2 வாரங்களுக்கு ஒரு முறை 6 மாதங்களுக்கு கொடுக்கவேண்டுமாம். ஒரு முறைக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். 'Avastin' என்கிற அந்த மருந்து மட்டும் 60,000 ரூபாயாம். கேட்டு முதலில் வாய் பிளந்து போனேன்! ஆனால் இதுபோல் அப்பாவுக்குச் சேவை சேய்யும் பாக்கியம்/சந்தர்ப்பம் எங்கள் நால்வருக்கும் இப்போதாவது கிடைத்ததே?!

முதல் chemo நடந்து முடிந்தது. நான் என்னென்னவோ பயங்கரமாக கற்பனை செய்திருந்தேன். ஆனால் ஒன்னுமே இல்லையாம். மூன்று மணி நேரம் ஒரு மருந்தை IV முலம் அப்பாவின் நரம்பில் ஏற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். இள வயது புற்று நோயாளிகள், காலையில் வந்து இந்த மருந்தை ஏற்றிக்கொண்டு மதியம் வேலைக்குச் சென்றுவிடுவார்களாம்!! சே இவ்வளவுதானா? என்று தோன்றியது.
இந்த முதல் chemo வின் போது நான் அமெரிக்காவில் தான் இருந்தேன். அக்காவும் அம்மாவும் அப்பாவுடன் இருந்தார்கள். நல்லவேளையாக அப்பாவுக்கு பக்கவிளைவுகள் எதுவுமே வரவில்லை. ஆனால் அது இரண்டாவது மூன்றாவது சிகிச்சைகளுக்கப்புறம் தான் தொடங்குமாம். இரண்டாவது சிகிச்சையின் போது நான் அப்பாவுடன் இருப்பேன். அடுத்து வரும் சிகிச்சைகளும் நல்லபடியாக முடிந்து அப்பா எங்களுடன் இன்னும் சில மாதங்கள் இருந்தால் மகிழ்ச்சியே...

எமிரேட்ஸ் சென்னை வந்திறங்கியது.

'Swine flu' சோதனை நடந்துகொண்டிருந்தது சென்னை விமான நிலையத்தில். விமானத்திலேயே ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதில் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குச் சமீபத்தில் சென்றிருக்கிறீர்களா என்கிற கேள்விக்கு "ஆமாம்" என்று எழுதியிருந்தேன். சரி மாட்டினோம். தனியாக அழைத்துச் சோதனை செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் சோதனை என்கிற பெயரில் முகமூடியுடன் உட்கார்ந்திருந்த நபர் (அவர் மருத்துவரா என்று தெரியவில்லை), என் முகத்தைக் கூட பார்க்காமல் அந்தப் படிவத்தில் சீல் குத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார். இது என்ன சொதனை என்று புரியவில்லை எனக்கு. அனால் சீக்கிரம் வெளியே விட்டதில் மகிழ்ச்சி :-)

அடுத்த ஆறு மணி நேர கார் பயணத்திற்குப் பிறகு ஒடிச்சென்று எங்கள் திருச்சி வீட்டின் கேட்டைத் திறந்த நான், வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்....

தொடரும்...