Friday, November 30, 2007

வேண்டும் ஒரு கலாசார அமைச்சர்!!

அமைச்சர் அன்புமணியின் கோரிக்கைக்கு இணங்கி நடிகர் விஜய் "நான் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்" என்று உறுதியளித்திருக்கிறார்! நல்ல விசயம் தான்.

சில நாட்களுக்கு முன் அமைச்சர் அன்புமணியின் இந்த கோரிக்கையை சன் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன். அமைச்சர் பேசுகையில் "விஜய்ன்னு ஒருத்தர் இருக்கார்...அவர் என்ன நினைச்சிகிட்டு இருக்கார்ன்னு தெரியலை..." என்று சற்று நக்கலாகத் தொடங்கினார். நான் கூட என் கணவரிடம் சொன்னேன், இப்படியெல்லாம் நக்கலாகப் பேசினால் எந்த நடிகரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அலட்சியாகப்படுத்திவிடுவார்கள் என்று. ஆனால் என்ன ஆச்சரியம், விஜய் இதனை நல்ல விதத்தில் எடுத்துக்கொண்டு கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறார். ரஜினியும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முன்பே உறுதியளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னால் நடிகை த்ரிஷா கூட, சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் குழந்தைகள் வேலை செய்வதால், தான் இனி தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போவதில்லை என்று சொன்னார். முன்பு முன்னனி நடிகையாக இருந்த அமலா தன்னை Blue Cross Blue Shield அமைப்பில் இனைத்துக்கொண்டிருக்கிறார். இளைய தலைமுறையினரிடத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா நடிகர் நடிகைகளெல்லாம் தாமே முன் வந்து சமூக நலனுக்காக சிந்திப்பது உண்மையிலேயெ மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு ஒரு ஆசை. சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைச்சர் அன்புமணி முன்னனி நடிகர்களுக்கு கோரிக்கைகள் வைக்கிறார். கலாசாரத்தைப் பாதுகாக்க எந்த அமைச்சராவது ஆபாசக் காட்சிகளில் நடிக்கக்கூடாதென்று நடிகைகளுக்கு கோரிக்கை வைப்பார்களா?! "கலாசாரத்தைப் பாதுகாப்பது" எந்த அமைச்சகத்தின் பொறுப்பு? :-)

Wednesday, November 28, 2007

திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம்

சமீபத்தில் போர்/யுத்தம் சம்பந்தப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அருமையான திரைப்படங்கள் அவை. ஆங்கிலத்தில் நிறைய போர் திரைப்படங்கள் இருக்கின்றன. உலகப்போரில் இருந்துத் தொடங்கி, பின் வியட்னாம் போர் வரை ஏராளமானப் படங்கள்! இப்போதும் ஈராக்கில் நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் பற்றி சமீபத்தில் தான் திரைப்படங்கள் வரத்தொடங்கியுள்ளது. போரினை பின் புலமாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக ஏராளமான கதை அமைப்புகள் குவிந்து கிடக்கின்றன. போரின் பயங்கரம், துயரம், தியாகம், போர் முகாம்களில் நடக்கும் நிகழ்வுகள், எதிரிகளிடமிருந்து தப்பித்தல், சமூகத்தில் போரின் தாக்கம், வீர தீர செயல்கள் - இப்படி சொல்லிகொண்டே போகலாம். காதலும் நகைச்சுவையும் கூட ஆங்காங்கே சில திரைப்படங்களில் கலந்திருக்கும். சில போர்த் திரைப்படங்கள் மக்களிடையே தேசபக்தியைப் பரப்புவதற்காகவே எடுக்கப்பட்டதுபோல் இருக்கும். ஹாலிவுட்டுக்கும்(hollywood) பெண்டகனுக்கும்(pentagon) இது ஒரு ரகசிய உடன்பாடாக இருக்குமோ என்றுகூட ஒரு நண்பர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார்!

இந்தியாவில் கூட இந்தியா-பாகிஸ்தான் போர், கார்கில் போர் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இதையெல்லாம் வைத்து தமிழ் திரைப்படம் எடுக்க யாருக்கும் தோன்றவில்லையே? சிவாஜி, எம்.ஜி.யார் காலத்தில் சரித்திரப் போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலும் பார்த்தீர்களென்றால் கதாநாயகன் ஒருவனே ஒரு நாட்டைக் காப்பாற்றுவது, இளவரசியைக் கைப்பிடிப்பது போன்ற மையக்கருத்துக்கள் தான் இருக்கும். நிகழ்காலத்தில், நாம் வாழும் காலத்தில் நடக்கும் போர் நிகழ்வுகளைப் பற்றி தமிழில் திரைப்படம் வந்ததில்லை.

காதல், ஹீரோயிசம், ஆபாசம் இவையெல்லாம் சற்றும் இல்லாத கலப்படமில்லாத அக்மார்க் போர் திரைப்படம் ஒன்று பார்க்கவேண்டுமென்றால், "Tora Tora Tora" என்ற ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்க்கலாம். "Tora" என்றால் ஜப்பானிய மொழியில் "தாக்கு"(attack) என்று அர்த்தம். பேர்ல் ஹார்பரில்(Pearl Harbor) உள்ள அமெரிக்கக் கடற்படையின் மீது எதிர்பாராதவிதமாக ஜப்பானியர்கள் விமானத் தாக்குதல் நடத்தி, தூங்கிக்கொண்டிருந்த ஒரு மிருகத்தை உசுப்பி விட்டு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவை தள்ளிவிட்ட அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை மிகத் திறமையாக காட்சியமைத்திருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படமா என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஜப்பானிய விமானங்கள் பறந்து பறந்து குண்டு போடும் காட்கள் அதி அற்புதம்! இந்தப் படம் வெளிவந்த காலத்தில், கணிணியைக் கொண்டு கிராபிக்ஸ் சாகசங்கள் செய்யும் வசதிகள் எல்லாம் கிடையாது. படத்தில் வரும் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் எல்லாமே நிஜமானவை! இந்தத் தாக்குதலின் போது அமெரிக்கர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறுகளை மூடி மறைக்காமல் காட்டியது பாராட்டுக்குறியது. ஒரு போர் சூழலின் மத்தியிலேயே நம்மை கொண்டு செல்லும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் இது.

"Home of the Brave" என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். "Home of the Brave" என்கிற வார்த்தைகள் அமெரிக்க தேசிய கீதத்தில் இடம் பெறுகின்ற வார்த்தைகள் என்று ஒர் நண்பர் சொல்லி தெரிந்துகொண்டேன். இது ஒரு முழுமையான போர்த் திரைப்படம் அல்ல, ஆனால் ஈராக்கில் சில காலம் இருந்துவிட்டு ஊர் திரும்பும் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலரின் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. போரில் நண்பர்களை, உடல் உறுப்புகளை, மன நிம்மதியை இழந்த இவர்களுக்கு, யதார்த்த குடும்ப வாழ்க்கையில் தங்களைப் பொறுத்திக்கொள்வது சிரமமாய் இருக்கிறது. குண்டு வெடிப்பில் ஒரு கையை இழந்த ஒரு இளம் விராங்கணைக்கு, எந்தக் கவலையுமில்லாமல் SUV வாகனங்களை ஓட்டிக்கொண்டு வந்து StarBucks கடையில் காப்பி குடிக்கும் பொறுப்பற்றவர்களை கண்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஈராக் ராணுவ முகாமில் மருத்துவராக இருந்த ஒருவர், தன்னால் காப்பாற்ற முடியாமல் இறந்து போனவர்களை மறக்கமுடியாமல் குடிக்கத் தொடங்கிவிடுகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவருடைய மனைவி, ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து "போராடியது நீ மட்டும் தானா? நீ இங்கே இல்லாத போது குழந்தைகளை வளர்க்க, வீட்டைப் பார்த்துக்கொள்ள, பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்று தினம் தினம் நானும் தான் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால் உன்னைப் போல் குடிக்காமல், நீ உயிருடன் திரும்பி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்" என்று சீறுவது அருமை! தன் கண்ணெதிரே எதிரியின் துப்பாக்கிக்கு பலியான தன் உயிர் நண்பனின் நினைவிலிருந்து மீள முடியாத மற்றொரு ராணுவ வீரன், எங்கெங்கோ வேலைத் தேடி, கடைசியில் தன்னை எங்குமே பொறுத்திக்கொள்ள இயலமால் ராணுவத்திற்கே திரும்பிவிடுகிறான். மிகவும் உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.

நாடுகளுக்கிடையே நடக்கும் யுத்தம் மட்டுமன்றி, இரு இனங்களுக்கிடையேயும் யுத்தங்கள் நடக்கின்றன. "Hotel Rwanda" என்கிறத் திரைப்படம் ரவாண்டாவில் உள்ள டுட்சி இனத்தினருக்கும் ஹுட்டு இனத்தினருக்கும் இடையே நடக்கும் இனக்கலவரத்தைப் பற்றியது. அதே போல் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையேயான இனக்கலவரத்தைப் பற்றி பல நல்ல திரைப்படங்கள் இருக்கின்றன - "Missisippi Burning", "In The Heat Of The Night". இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைப் பற்றியும் ஆங்கிலத் திரைப்படங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. "ஆணிவேர்"(குண்டு வெடித்தவுடன், எல்லாரும் அந்த இடத்தைவிட்டுத் தப்பித்து வேறு திசையில் ஓடும் போது, அந்த இளைஞன் மட்டும் குண்டு வெடித்த அந்த திசையை நோக்கி ஓடுகிறான் - அங்கே காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக! என்ன ஒரு உணர்வுபூர்வமான சித்தரிப்பு!), "காற்றுக்கென்ன வேலி" போன்ற தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த இனக்கலவரத்தை ஆங்கில இயக்குனர்கள் திரைப்படமாக்கினால் சர்வதேச அளவில் வெளிச்சம் கிடைக்குமென்று தோன்றுகிறது.

ஆனால் ஈராக் கலவரம் பற்றிய திரைப்படங்களை பெரும்பாலான அமெரிக்க மக்கள் விரும்பிப் பார்ப்பதில்லை என்றொரு கருத்து இருக்கிறது. உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் பற்றிய திரைப்படங்கள் வெகுவாக வரவேற்கப்பட்டன, ஏனென்றால் அந்தத் திரைப்படங்களெல்லாம் போர் முடிந்து பல ஆண்டுகள் சென்றபின் எடுக்கப்பட்டன. ஆனால் ஈராக் பற்றிய திரைப்படங்கள் தற்போது தினம் செய்திகளில் படிக்கும், பார்க்கும் பயங்கரங்களை காட்சிகளாகக் கொண்டிருப்பதால், மக்கள் அவற்றைப் பார்க்கத் தயங்குவது புரிந்துகொள்ள முடிகிறது.

"A Bridge Too Far", "Behind Enemy Lines", "Rules of Engagement", "Black Hawk Down", "Courage Under Fire" - இவையெல்லாம் நான் பார்த்து ரசித்த அருமையான போர் திரைப்படங்கள்.

ஹூம்ம்ம்ம்...இப்படிப்பட்ட நல்லத் திரைப்படங்கள் தமிழில் எப்போது வரும்? 'பஞ்ச்' வசனங்கள், காதல் லீலைகள், அறுவாள் சண்டை...இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமா வரமாட்டேங்குதே?!

Tuesday, November 13, 2007

ஒரு பொம்மையின் கதை

Image Hosting by Picoodle.com

பார்பி(Barbie) என்கிற பொம்மையைப் பற்றி எல்லாரும் கேள்விபட்டிருப்பீர்கள். சாதாரண பொம்மைகளுக்கும் பார்பிக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. பொதுவாக சிறுமிகள் வைத்து விளையாடும் பொம்மைகள் ஒரு சிறு குழந்தை வடிவத்தில் இருக்கும். அதனை தூக்கிவைத்து, அரவணைத்து, குளிக்க வைத்து, சோறூட்டி அம்மா விளையாட்டு விளையாடுவார்கள் சிறுமிகள். ஆனால் 'பார்பி' என்கிற பொம்மை ஒரு அழகிய பதின்ம வயது இளம் பெண். தங்க நிறக் கூந்தல், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்கள், வாழைத்தண்டு போன்ற கால்கள், கவர்ச்சியான மெல்லிய உடல் - ஒரு இளம் அமெரிக்கப் பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவாளோ அப்படியே இருக்கும் ஒரு பொம்மை. அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பா, ரஷ்யா, இந்தியா போன்ற பல நாடுகளில் அந்தந்த கலாசாரத்திற்கேற்ப மாறுபட்ட உடையலங்காரங்களுடன் வலம் வந்தாள் இந்த பார்பி! இந்தியாவில் புடவையும் சுரிதாரும் அனிந்த பார்பியை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அழகான பொம்மையை யாராவது வெறுக்கமுடியுமா?

முடியும். பெண்களை ஒரு அழகு பிம்பமாக விளம்பரப்படுத்தும் ஒரு கலாசாரத்தின் பிரதிநிதியான பார்பி பொம்மையை பெண்ணியவாதிகள் வெறுத்தார்கள். மேலும், 'அழகு' என்பதற்கு தவறான அர்தத்தை தம் குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்பாத தாய்மார்கள் பார்பியை வெறுத்தார்கள். பார்பியுடன் வரும் அவளுடைய கார், வீடு, அலங்காரப் பொருள்கள் எல்லாமே ஒரு சொகுசு வாழ்க்கையையும் பணக்காரத் தன்மையையும் மட்டுமே வெளிப்படுத்தின. பார்பி நினைத்தபடியெல்லாம் வாழ்ந்தாள். மருத்துவராக, விமானப் பனிப்பெண்ணாக, முதலாளியாக, நடிகையாக, வழக்கறிஞ்சராக, இளவரசியாக! அவளுக்கு என்றுமே வயதாகாது, தலை நரைக்காது, முகத்தில் சுறுக்கம் விழாது, உடல் பருக்காது! இப்படிபட்ட பார்பியைப் பார்த்து வளரும் குழந்தைகளின் மனதில் தவறான ஆசைகளும் ஏக்கங்களும் விதைக்கப்படுவது இயற்கைதானே? யதார்த்த வாழ்க்கையில் அன்றாடம் போராட்டங்களிடையே வாழ்பவர்களுக்கு, பார்பியின் சொகுசு தோற்றமும் வாழ்க்கை முறையும் எட்டிப்பிடிக்க முடியாத ஒரு கனவாக இருந்தது. எந்த ஒரு கொள்கையும், சமூக நல நோக்கும் இல்லாத, பொறுப்பற்ற ஒரு தவறான எடுத்துக்காட்டாக விளங்கிய பார்பி பொம்மையை தம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க மறுத்தார்கள் பல பெற்றோர்கள்.

எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்த பார்பி, அதிகப்படியான எதிர்ப்பை சந்தித்தது மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில். ஈரானில் பார்பி பிரவேசித்தபோது, அது ஈரானிய கலாசாரத்திற்கு எதிரே பெண்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் என்று அஞ்சினார்கள் பலர். அமெரிக்க ஏவுகணைகளை விட பார்பி பொம்மைகள் ஆபத்தானவை என்று அங்கே பேசப்பட்டது!!!

Image Hosting by Picoodle.com

இந்தியாவிலும் பார்பிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புதான்! 'தீவாளி பார்பி' என்று சென்ற வருடம் வெளிவந்த பார்பி, புடவை, நகை, பொட்டு அணிந்து இந்தியப் பெண்ணாக காட்சியளித்தாலும், இந்தியப் பெற்றோர்கள் தயங்கினார்கள். "உயரமான, ஒல்லியான, இந்தியப் பெண்களின் நிறத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத வெள்ளைத் தோல் உடைய, மேற்கத்திய சொகுசு வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு பெண் பொம்மையின் பின்னால் எங்கள் குழந்தைகள் ஓடவேண்டுமென்றால், நாங்கள் அவர்களுக்கு உலக அழகி ஐஷ்வர்யா ராயையே காட்டுவோமே?! அவராவது உருப்படியான காரியங்கள் சிலவற்றைச் செய்கிறார்!" என்று அங்கலாய்க்கிறார்கள் இந்தியப் பெண்ணியவாதிகள்! மேலும், பார்பியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அவளுடைய ஆண் தோழன் 'கென்'(Ken) என்கிற ஆண் பொம்மை இந்தியாவில் விற்பனை ஆகவேயில்லை!

இன்றும் பார்பி பொம்மைகள் விற்பனையில் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் சில வருடங்களுக்கு முன் இருந்த பார்பி ஜூரம் என்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு சாதாரண பொம்மைக்குப் பின் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. இன்று விற்பனையில் இருக்கும் எந்த ஒரு பொம்மையும் எல்லாவித குடும்ப மற்றும் கலாசார அம்சங்களையும் அரவணைக்கமுடியாது என்பது உண்மையாக இருந்தாலும், அறிவுபூர்வமாகச் சிந்திக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் பொம்மைகளே உலக மார்கெட்டில் விற்கப்படவேண்டும் என்று ஒரு விதி முறையோ சட்டமோ இருந்தால் நன்றாக இருக்கும்.

Thursday, November 08, 2007

பட்டாசு இல்லாத தீபாவளி சாத்தியமா?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி கொண்டாடுவதை கைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அமெரிக்காவுக்கு வந்த புதிதில் தீபாவளி கொண்டாட்டத்தை விட்டுவிடக்கூடாதென்று மல்லு கட்டிக்கொண்டு ஒரு இனிப்பும் ஒரு காரமுமாவது செய்து, நண்பர்களையெல்லாம் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்ததுண்டு. சில வருடங்களுக்குப் பின் இது அலுத்துவிட்டது. நல்ல சாப்பாடு, நண்பர்களைச் சந்தித்தல் - இதைத் தான் பல முறை பல வார இறுதிகளில் செய்கிறோமே? தீபாவளி அன்றும் இதையே செய்வது அர்த்தமற்றதாகத் தெரிந்தது. எனவே தீபாவளிக் கொண்டாட்டம், வாழ்த்துத் தெரிவிப்பதுடன் நின்றுபோய்விட்டது.

ஆனால், அம்மா அப்பாவோடு சிதம்பரத்தில் இருந்த காலங்களில் பழைய தீபாவளி கொண்டாட்டங்கள் நினைவில் அழியாமல் இருக்கின்றன. சிறு வயதிலிருந்தே, தீபாவளி ஒரு பயம் கலந்த திகிலான பண்டிகையாகத் தான் இருந்தது எனக்கு. பாட்டாசு வெடிச் சத்தம் கேட்டால் தூக்கிவாரிப்போடும். காதைப் பொத்தியபடி தான் தீபாவளியன்று முழுவதும் இருப்பேன். வெங்காய வெடி, டேப் வெடி போன்ற சிறிய வெடிகளை ஓரளவு பயமில்லாமல் வெடிப்பேன். லஷ்மி வெடி, யாணை வெடி என்று பெரிய பெரிய பட்டாசுகளை வெடிக்கும் என் அண்ணன் பிள்ளைகள் என்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்!!! மத்தாப்புக் கொளுத்தினால் கூட, எங்கே அது கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்து பாதி எரியும் போதே தூக்கிப் போட்டுவிடுவேன். எங்கள் வீட்டில் அப்போது ஒரு பொமரேனியன் நாய் வளர்த்தோம். அதுக்கும் வெடிச் சத்தம் ஆகாது. தீபாவளியன்று கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கினால், இரண்டு நாட்கள் சென்று தான் அது வெளியே வரும். கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் காதைப் பொத்திக்கொண்டு வீட்டினுள் எங்காவது உட்கார்ந்திருப்பேன். தீபாவளியின் போது மழைக் காலம் என்பதால், பட்டாசுகள் நமத்துப் போய்விடும். அதைத் தவிர்ப்பதற்காக, எல்லா பட்டாசுகளையும் சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவேண்டுமென்று, அவைகளை அடுப்பின் அருகில் அடுக்கி வைத்திருப்பான் அண்ணன் மகன். எங்கே அவை சூடாகி வெடித்துவிடுமோ என்று வேற பயமாக இருக்கும்!

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே அண்ணன்கள் குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு வந்துவிடுவார்கள். அக்கா அவளுடைய திருமணத்திற்குப் பிறகு எந்த தீபாவளிக்கும் எங்களுடன் இருந்ததாக நினைவில்லை. நான் எப்போது புது உடை வாங்கினாலும், அதை உடனே போட்டுப் பார்த்துவிடுவேன். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், என் தீபாவளி புத்தாடையை மட்டும் உடனே போடவே முடியாது. சின்ன அண்ணி அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் தீபாவளி அன்று காலையில் அந்த உடைகளை சாமியிடம் வைத்து கும்பிட்டு, அதில் குங்குமம் தடவிய பின் தான் அணியவேண்டும் என்பார். அதுவரை ஆசையுடன் காத்திருப்பேன் நான்!

சமையலறையில் நீண்ட நேரம் அம்மாவால் நிற்கமுடியாது என்பதால், தீபாவளிக்கு முதல் நாள் ஸ்டவ் அடுப்பை எடுத்து வெளி வெராண்டாவில் கீழே வைத்துக்கொண்டு, தரையில் ஒரு பலகையில் உட்கார்ந்து பலகாரம் செய்யத் தொடங்குவார்கள். அதிரசம், பாதுஷா, லட்டு, அச்சு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, கார சோமாசி என்று விடிய விடிய பலகாரம் உருவாகிக்கொண்டே இருக்கும். நாங்களெல்லாம் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்துக்கொண்டு பலகாரத்தை ருசி பார்த்துக்கொண்டும் அரைட்டையடித்துக்கொண்டும் இருப்போம். அப்பறம் ஒவ்வொரு பலகாரத்திலும் இரண்டு இரண்டாக எடுத்து பாக்கெட் போட்டு அடுக்கி வைப்போம். வீட்டில் வேலை செய்பவர்கள், அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் என்று ஒவ்வொருவராக வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் பலகாரப் பாக்கெட்டும் பணமும் வைத்துக்கொடுப்பார் அப்பா. எலக்ட்ரீஷியன், டெக்னீஷியன், போஸ்ட் மேன் என்று நாங்கள் மாதக்கணக்கில் பார்க்காதவர்கள் கூட வந்து நிற்பார்கள். அப்பா புகைப்படப் பிரியர். புத்தாடையில் எல்லாரையும் பல இடங்களில் வைத்து புகைப்படம் நிறைய எடுப்பார். இதெல்லாம் நடக்கும் போது பிண்ணனியில் பட்டாசுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

பட்டாசுச் சத்தங்கள் சற்று ஓய்ந்த மாலை நேரம் தான் எனக்குப் பிடித்த நேரம். அப்போது தான் தீபாவளி 'மூட்' வரும் எனக்கு. பலகாரப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அக்கம்பக்கத்திலிருக்கும் வீடுகளுக்குப் போய் எங்கள் வீட்டுப் பலகாரங்களை அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் வீட்டுப் பலகாரங்களை எங்களுக்குக் கொடுப்பார்கள். தெருவில் நடந்து போகும் போது, மற்ற வீடுகளின் வாசலில் பட்டாசு வெடித்துக்கொண்டிருப்ப்பார்கள். எங்கே என் மேல் வெடி விழுந்துவிடுமோ என்று கவனமாக ஒதுங்கி ஒதுங்கி நடந்துச் செல்வேன். "பண்டமாற்றம்" முடிந்து வீடு வருகையில் இருட்டிவிட்டிருக்கும். இரவு உணவிற்குப் பிறகு எல்லாரும் வீட்டு வாசலில் வந்து அமர்வோம். அண்ணன்களும், பிள்ளைகளும் மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் என்று கொளுத்தித் தள்ளுவார்கள். பார்க்க ஒரே ஒளிமயமாக ஜகஜோதியாக இருக்கும். தீபாவளி முடிந்து இரண்டொரு நாட்களில் அண்ணன்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். வீடு வெறிச்சென்று இருக்கும். மீண்டும் பொங்கலுக்கு அவர்கள் வருவார்கள் என்று ஆசையாகக் காத்திருப்போம்.

இன்று அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்கள், பிள்ளைகள், அம்மா செய்யும் பலகாரங்கள், புது உடைகள் - இவற்றையெல்லாம் ரொம்ப மிஸ் பன்னுகிறேன். ஆனால், பட்டாசுகளும் மத்தாப்புகளும் என்றுமே எனக்கு அபிமானமாக இருந்தது இல்லை. ஒரு சின்ன பட்டாசுச் சத்தத்திற்கே பயந்தவள் நான். ஆனால் உலகத்தில் போர் நடக்கும் எத்தனை நாடுகளில் வெடிச் சத்தத்தினூடே மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்?! மத்தாப்பு என் கையைச் சுட்டு விடுமோ என்று பயந்திருக்கிறேன், ஆனால் எத்தனை வீடுகள், எத்தனை உயிர்கள் தீயில் எரிந்து சாம்பலாகின்றன? இலங்கையில், ஈராக்கில்...ஏன் அமெரிக்காவில் கூட சமீபத்தில் தென் கலிபோர்னியா தீ விபத்தில் எத்தனைப் பேர் வீடு இழந்திருக்கிறார்கள்? கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத இழப்புகள் அவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் பிள்ளைகளுக்கு "வெடி", "கொளுத்து", "பாம்(bomb)", "ராக்கெட்" போன்ற வார்த்தைகளை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டுமா? தீபாவளியில் நல்ல விசயங்களான, தீபங்கள் வைத்து அலங்கரித்தல், இனிப்புகளைப் பகிரிந்துகொள்ளுதல், புத்தாடை அணிதல் போன்றவற்றை மட்டும் பின்பற்றி, இந்த வெடி வெடிக்கும் விசயத்தை மட்டும் விட்டுவிட்டால் தான் என்ன?

Tuesday, November 06, 2007

பென்சில்வேனியா பயணக் குறிப்பு

சென்ற மாதம் என் அக்காவின் மகளைப் பார்க்க அவள் படிக்கும் U Penn (University of Pennsylvania) என்று அழைக்கப்படும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த நான், திரும்பி வரும்போது பல சுவையான சிறப்புச் செய்திகளை சேகரித்து வந்தேன்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகமும், Harvard, Yale, Columbia, Cornel போன்ற பல்கலைக்கழகங்களைப் போலவே பெருமைமிக்க Ivy League அமைப்பைச் சேர்ந்தது. இங்கே அக்காவின் மகளுக்கு இடம் கிடைத்தபோது மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம்! பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப்பார்த்தேன். எல்லாமே புராண காலத்து கட்டிடங்கள். அக்கா மகள் படிக்கும் Moore School of Engineering கட்டிடம் பாடாவாதியாக இருந்தது. என்னடா இது, Ivy League என்று சொல்லுகிறார்கள், ஆனால் நம்ம அண்ணாமலைப் பல்கலைக்கழகமே இதைவிட பிரமாதமா இருக்குமே என்று யோசித்துக்கொண்டே மேலும் அங்கே உலாத்தியபோது...

அந்த வரலாற்றுப் பெட்டகத்தைப் பார்த்தேன்!

இன்று நம்மால் செல் பேசி, காமிரா, கணிணி போன்ற மின் சாதனங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. இப்படிப்பட்ட சொகுசான வாழ்க்கைக்கு மூல காரணமான ஒரு 'தெய்வம்' பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் Moore பொறியியல் கல்லூரி கட்டிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது! அது தான் ENIAC என்று அழைக்கப்படும், இந்த உலகத்தை நவீன மின் யுகத்திற்கு அறிமுகப்படுத்திய முதல் கணிணி!
Image Hosting by Picoodle.com
ஒரு கண்ணாடி அறையில் காட்சிப் பொருளாக வைத்திருந்த இந்த 60 வயது கணிணியைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்று போட்டேன்! அதன் தோற்றத்தைப் பார்த்துக் குழம்பிப்போனேன்...கணிணி என்கிறார்கள், ஆனால் மானிட்டர் இல்லை, கீ போர்ட் இல்லை, மெளஸ் இல்லை! மாறாக, நூற்றுக் கணக்கான பொத்தான்களுடனும், பல்புகளுடனும், ஒரு ராட்சத switch board போல இருந்தது. அமெரிக்க ராணுவத்திற்காக 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் உபயோகப்படுத்துவதற்காக பென்சில்வேனியா Electrical Engineering துறையைச் சேர்ந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்டதாம் இந்த ENIAC. அங்கே இருந்தது ENIAC இன் சில பகுதிகள் தானாம்! மற்றப் பகுதிகள், வாசிங்டன், கலிபோர்னியா போன்ற பிற இடங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறதாம்.

அமெரிக்காவில் கணிணித்துறையில் குப்பைக்கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு, ENIAC சோறு போடும் தெய்வமாகத் தெரிந்தது!!!

அதே பிரமிப்புடன் Moore கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது எதிரே இருந்த பூங்காவில் ஒரு பெரிய உருவச் சிலை தென்பட்டது.
Image Hosting by Picoodle.com
அது யாருடைய சிலை என்று கேட்டபோது, "அது Benjamin Franklin அவர்களுடைய சிலை. அவர் தான் இந்தப் பென்சில்வேனியா பல்கலைக்கழத்தை நிறுவியவர்" என்றார்கள். என்னது?! மின்சாரம் சம்பந்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளின் தந்தையான அந்த Benjamin Franklinஆ?! என்று வியந்தபோது, அவரேதான் என்று பதில் கிடைத்தது. இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் 'மின்சாரக் கண்ணா' என்று பட்டமளித்திருக்கலாம் என்ற அசட்டு எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை :-)

மின்னல் என்பது மின்சாரம் என்று கண்டறிந்த பென்ஜமினின் சிலைக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, இந்தச் செய்தி காதில் விழுந்தது...

பல ஆண்டுகளுக்கு முன் இதே கல்லூரியில் படித்து இப்போது அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் கிருஷ்ணா சிங் என்ற இந்தியர், இந்தக் கல்லூரியில் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைப்பதற்காக 20 மில்லியன் டாலர்கள் நன்கொடையாகக் இந்த வருடம் கொடுத்திருக்கிறாராம். $20 மில்லியன்!!! வாயடைத்துப் போனேன்!

அடுத்து இன்னொரு சிறப்பு அதே தெருவில்!
Image Hosting by Picoodle.com
இதே பல்கலைக் கழகத்தில் தான் உலகப் புகழ் பெற்ற Wharton School of Business இருக்கிறது! இங்கே படித்தால் 5 வருடங்களில் மில்லியனர் ஆகிவிடலாம் என்று சொல்லுகிறார்கள்! இந்தக் கல்லூரியினுள்ளும் நுழைந்து நோட்டம் விட்டபோது, மாணவர்கள் அமைதியாக ஆங்காங்கே உட்கார்ந்து மடிக்கணிணியில் மூழ்கியிருந்தார்க்ள். இவர்களுக்கெல்லாம் எவ்வளவு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

இதெல்லாம் பத்தாதென்று, இங்கே இருக்கும் மருத்துவக் கல்லூரி அமெரிக்காவிலேயே முதல் மருத்துவக் கல்லூரியாம்! இங்கே இருக்கும் நர்ஸிங் கல்லூரி அமெரிக்காவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்...இப்படி அடுக்கடுக்காக சிறப்புச் செய்திகள் வந்துகொண்டே இருக்க, எனக்குத் திகட்டியது! அப்பப்பா...இதுக்குமேல் தாக்குபிடிக்கமுடியவில்லை. இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்க நீ கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்று அக்கா மகளை வாழ்த்திவிட்டு ஊர் திரும்பினேன். பல கோவில்களையும் பல தெய்வங்களையும் பார்த்த ஒரு புண்ணிய யாத்திரை போல் இருந்தது இந்தப் பென்சில்வேனியா பயணம்.