Thursday, July 12, 2012

FeTNA 2012 வெள்ளி விழா: உள்ளே - வெளியே

வெள்ளி விழா முடிந்து பால்டிமோரில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகின்றன.  ஆனால் மனமும் நினைவும் மட்டும் இன்னும் பால்டிமோரிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது.   மூன்று நாட்களாக எங்கு திரும்பினாலும் தமிழ் நண்பர்கள், உறவுகள், கலைஞர்கள், அறிஞர்கள் என்று இருந்துவிட்டு, இப்போது தனிமையாக உணர்கிறேன்.

வெள்ளி விழா நிகழ்ச்சிகளைப் பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்.  நான் எழுதப் போவது மேடையில் நிகழாத சில காட்சிகளைப் பற்றி மட்டுமே.  இந்தக் காட்சிகள் என் கண்களில் பட்டதற்கு காரணம், என் மகள் புகழ்மதி.  அவள் அரைமணி நேரத்திற்கு மேல் அரங்கில் உட்கார மறுத்ததால், நான் அவளை மேய்த்துக்கொண்டு பாதி நேரம் அரங்கின் வெளியில் தான் சுற்றிக்கொண்டிருந்தேன்.  அவ்வப்போது அரங்கினுள் எட்டிப் பார்த்து சில நிமிடங்கள் உள்ளே நடந்த நிகழ்ச்சிகளையும் காண முடிந்தது.

உள்ளே -  நடனங்கள், பாடல்கள், பட்டிமன்றம், விவாதம், உரை வீச்சு...

வெளியே - உழைப்பு, வியர்வை, பதட்டம், பொறுப்பு, கவனம், கண்டிப்பு...

அரங்கின் வாசலில் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் தகிக்கும் வெயிலில் வியர்வையை அவ்வப்போது துடைத்துக்கொண்டே ஒரு தன்னார்வலர் நின்று கொண்டிருந்தார்.  அரங்கிலிருந்து வெளியேறுபவர்களிடம் ஓடிச் சென்று "நீங்கள் விடுதிக்குச் செல்கிறீர்களா?" என்று கேட்டு அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் அவர்களை ஏற்றி அனுப்புவார்.  சில சமையம் விடுதியின் வாசலில் நின்று அங்கிருந்து அரங்கிற்கு வருபவர்களை பேருந்தில் ஏற்றி அனுப்பிக்கொண்டிருப்பார்.  ஆக இந்த மூன்று நாட்களுமே, பிற்பகல் 12 மணியாக இருந்தாலும் சரி, இரவு 12 மணியாக இருந்தாலும் சரி, இந்த போக்குவரத்துக் குழுவைச் சேர்ந்தவருக்கு வெள்ளி விழா என்பது அந்த வாசலிலேயே முடிந்துவிட்டது.

வந்திருக்கும் பிரபலங்களை கவனிப்பதற்காக அரக்கப் பரக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள் வரவேற்புக் குழுவினர்.  பிரபலங்கள் எங்கு போனாலும் அவர்கள் கூடவே போவது, காபி வாங்கிக்கொடுப்பது, சாப்பாடு தட்டில் போட்டு கொடுப்பது, அவர்கள் தொலைபேச விரும்பினால், தொலைபேசியில் எண்களைப் போட்டு அவர்கள் கையில் கொடுப்பது, அவர்களுக்குத் தேவைப்படக்கூடும் மருந்து மாத்திரைகளை தம் கைப்பைகளில் சுமந்து கொண்டு திரிந்தார்கள்.  .  அவர்களில் பலர் முனைவர்கள் மற்றும் பொறியாளர்கள்.  ஆனால் அந்த மூன்று நாட்களுமே சுய கெளரவம் பார்க்காமல் கிட்டத்தட்ட பணிப்பெண்களாக மாறியிருந்தார்கள்.  நான் இரவு 12 மணிக்கு விடுதி அறைக்கு தூங்கச் செல்லும்போது, பின்னிரவு விமானத்தில் வந்திறங்கிய சின்னத்திரை சிவகார்த்திகேயனை வரவேற்க, கையில் பூங்கொத்துடனும், தூக்கம் விரட்டிய கண்களுடனும் விடுதி வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள் இந்த வரவேற்புக் குழுவினர்.

சாரை சாரையாக விழாவிற்கு வந்திறங்கும் மக்கள் கூட்டம் நேராகச் சென்றது பதிவு மேசைக்குத்(Registration desk) தான்.  ஒவ்வொருவரின் பெயரையும், பதிவையும் கணிணியில் சரிபார்த்து அவர்களுக்குச் சேரவேண்டிய விழா மலர், அடையாள அட்டை மற்றும் இத்யாதிகளை அவர்களிடம் கொடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் பதிவுக் குழுவினர்.  இரண்டாம் நாள் பிற்பகல் வரை இந்த மக்கள் கூட்டம் குறையவேயில்லை.  மொத்தப் பதிவின் எண்ணிக்கை 2000, 2100, 2200 என்று கூடிக்கொண்டே வந்தது   பரபரப்பாகவும், உற்சாகமாகவும் இருந்தது.

சாப்பிடலாமென்று உணவுக்கொட்டகைக்குச் சென்றேன்.  மின் விசிறிகளையும் மீறி வெப்பம் முகத்தில் அறைந்தது.  அதிலும், பட்டுப்புடவைக்கும், பட்டு வேட்டி-சட்டைக்கும் மேல் "apron" கட்டி, கையுறை அணிந்த உணவுக் குழு பெண்களும் ஆண்களும் பதட்டத்துடன் காணப்பட்டார்கள்.  உணவு வர தாமதமாகிறது...வெளியே வரிசையில் பசியுடன் உணவுக்காக காத்த்துக்கொண்டிர்ந்தவர்கள் பொறுமையிழந்துகொண்டிருந்தார்கள்...அவர்களை சமாளிக்கவேண்டும், வந்திறங்கும் உணவுவகைகளை  ஆறு உணவு மேசைகளில் துரிதமாக அடுக்கி, உணவு பறிமாற வந்த தன்னார்வளர்களை வரிசையாக, தயாராக நிறுத்தி வைக்கவேண்டும்.  கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழையும் இரண்டாயிரம் பேரை ஒன்றரை மணி நேரத்திற்குள் சாப்பிட வைத்து அங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும்.  அபரிமிதமான உழைப்பு அங்கே தேவைப்பட்டது.  அங்கே நடந்த "team co-ordination" பார்த்து நான் அசந்து போனேன்.  ஒருவர் "சட்னி தீர்ந்துவிட்டது" என்று குரல் கொடுப்பார்.  உடனே மற்றொருவர் ஓடி வந்து சட்னி பாத்திரத்தை நிறைப்பார்.  ஒருவருக்கு வியர்வை ஊற்றினால் மற்றொருவர் துண்டை எடுத்து துடைத்துவிடுவார்.  எங்கிருந்தோ சில தன்னார்வத் தொண்டர்கள் வந்து "இங்கு யாராவது களைப்பாக இருந்தால் சொல்லுங்கள், உங்களிடத்தில் நாங்கள் பறிமாறுகிறோம்" என்பார்கள்.  வயதான பெண்மனி ஒருவர் இரண்டு நாட்களுமே அங்கே நின்று சாப்பிட வருபவர்களுக்கு தட்டு எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.  அவரிடம் நான் தட்டு வாங்கும் போது  கூனிக் குறுகிப் போனேன்.  என் வயதென்ன...அவர் வயதென்ன?  நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன்...அவர் கால் கடுக்க நின்று சேவை செய்துகொண்டிருக்கிறார்!  எனக்கு சாப்பாடு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.

சில குழுக்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என் கண்களுக்குத் அந்த இரண்டு நாட்களுமே தென்படவில்லை. ஆனால் அந்த பிரமாண்டமான அரங்க மேடையின் திரைச் சீலைக்குப் பின் ஒரு சிறு உலகமே இயங்கிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.  நிகழ்ச்சிக்குழு, மேடை நிர்வாகக் குழு, மற்றும் அரங்க குழுவைச் சேர்ந்தவர்கள் அங்கே நிகழ்ச்சிகள் சரியான நேரத்திற்கு தொடக்கி சரியான நேரத்திற்கு முடித்து வைக்க அயராது உழைத்துக்கொண்டிருந்தார்கள்.  உணவுக் கொட்டகைக்கு கடைசியாக களைப்பாக சாப்பிட வருபவர்கள் இவர்கள் தான்.  அடுத்த நிகழ்ச்சி தொடங்குமுன் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு பின் மீண்டும் அந்த திரைச் சீலைக்கு பின் சென்று மறைந்துவிடுவார்கள் இவர்கள்.

இன்னும் பல குழுக்கள் இரவு பகல் பாராது இந்த பேரவை வெள்ளி விழாவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள், ஆனால் என் கண்முன் தென்பட்ட காட்சிகளை மட்டுமே இங்கே என்னால் விவரிக்க முடிந்தது.  தமிழ் சங்கம், தமிழ்ச் சங்கப் பேரவை என்றாலே தமிழர்களெல்லாம் ஒன்று கூடி கும்மி அடிக்கும் இடம் என்று நெஞ்சில் ஈரம் இல்லாமல் குறை கூறுபவர்களையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டார்கள் இந்தச் தமிழ் சமூகத்தினர்.

உள்ளே நடந்த பல்சுவை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் "புறம்" என்றால், வெளியே நடந்த இந்த நெகிழ்வான நிகழ்ச்சிகள் பேரவையின் "அகம்" என்று சொல்லலாம்.

அடுத்த ஆண்டு விழா - வேறொரு நகரில், வேறொரு அரங்கில், வேறு பல தன்னார்வலர்களால் நடத்தப்படும்.  ஆனால் நான் இங்கே விவரித்த காட்சிகள் மட்டும் மாறாது.  அது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.

எந்த வேலையும் செய்யாமல், மகளின் பின் ஓடியே கால் வலித்து களைத்து போனேன் நான். ஆனால் ஒரு மிகப் பெரிய விழாவை நடத்தி முடித்துவிட்டு அமைதியாக அடுத்த நாள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் நம் தமிழ்க் குடும்பங்களை நினைத்தால் மிகப் பெருமையாக இருக்கிறது.

நான் பார்த்து இரசித்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.




Sunday, May 20, 2012

இறால் மொறுவல்


இறால் வறுவல் என்று தான் சொல்வார்கள்.  ஆனால் அது என்ன "மொறுவல்"?   நல்ல மொறு மொறுப்பான இறால் கறி வேண்டுமென்றால் இதைச் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
இறால் மொறுவல்

தேவையான பொருட்கள்:
1. தோலுரித்த இறால் - 1/2 கிலோ
2. ஒரு பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
3. இரண்டு சிறிய தக்காளிகள்(சிறிய துண்டுகளாக நறுக்கியது)
4. இரண்டு பச்சை மிளகாய் - நறுக்கியது
5. இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு மேசைக் கரண்டி
6. மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
7. கொத்தமல்லித் தூள் - மூன்று தேக்கரண்டி
8. கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
9. மஞ்சள் பொடி - இரண்டு தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு

செய்முறை:


மஞ்சல் தூள் கலந்து வதங்கும் இறால்
தண்ணீர் வற்ற வதங்கிய இறால்
இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள் கலந்து, எண்ணை விடாமல் வாணலியில் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.






தே.பொருட்களுடன் வதங்கும் இறால்
ஊறவைக்கப்பட்ட இறால்
வதங்கிய இறாலுடன்,  தேவையான பொருட்கள் அத்தனையையும்
 (2 to 10) கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணை விட்டு சூடானதும், இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். 


எல்லா பொருட்களும் நன்றாக வதங்கி சேர்ந்து வரும்.  சற்று மசாலா போல் வேண்டுமென்றால் அந்தப் பதத்தில் அடுப்பை நிறுத்திவிடலாம்.  நன்றாக மொறு மொறுப்பாக வேண்டுமென்றால், இன்னும் கூடுதலாக வதக்கினால் மொறு மொறு பதம் வந்துவிடும்!  இந்த இறால் வறுவலை, நேற்றைய பதிவில் செய்த சொதியுடன் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.




இறால் மொறுவல்


அவள் ஏன் சமூகவியலைத் தேர்ந்தெடுத்தாள்?

சமூக சேவை பலர் பல வகையில் செய்கிறார்கள்.  சிலர் தொண்டு நிறுவனங்களுக்கோ, தனிப்பட்ட நபருக்கோ பணம் அனுப்புவார்கள்.  சிலர் ஒரு தொண்டு நிறுவனத்தில்,  சில மணி நேரங்கள் வேலை செய்வார்கள்.  சிலர் ஒரு சம்பவத்தின் போது அந்த இடத்திற்கே நேரில் சென்று அங்கே வேண்டிய உதவிகள் செய்வார்கள்.  ஆனால், இந்தச் சமூகச் சேவையையே முறையாகப் பயின்று, பட்டம் பெற்று வாழ்நாள் முழுவதும் சமூகச் சேவை செய்வதென்று ஒருவர் முடிவெடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விசயம்.   உண்மையிலேயே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள் தான் இப்படி ஒரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அப்படி ஒரு தேர்வை, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த  என் அக்கா மகள் செய்தபோது, குடும்பத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.  மற்ற இரு பிள்ளைகளைப் போல் மருத்துவம் படிக்காமல் சமூகவியலை படித்து என்ன செய்யப் போகிறாள்?  காலம் பூராக குறைந்த சம்பளத்திற்குத் தானே வேலைக்குப் போகமுடியும்? என்றெல்லாம் குடும்பத்தினர் வருந்தினார்கள்.  ஆனால் அக்கா மகள் தன் முடிவில் திடமாக இருந்தாள்.  சமூகவியல் தான் தனக்குச் சரியான துறை என்று மனதிற்குத் தோன்றுகிறது என்றும்,  எனவே அந்தப் பாதையில் தான் செல்ல விரும்புகிறேன் என்றும் சொல்லிவிட்டாள்.  இப்போது சமூகவியலில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கவும் போகிறாள்.

எனக்கு அவளை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.  ஏன் அவள் காலம் பூராக சமூகப் பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்?  அவளிடமே கேட்டு அதனை ஒரு பதிவாகப் போடலாம் என்று தோன்றியது.

இதோ அவளிடம் ஒரு கேள்வி - பதில் அமர்வு.

கேள்வி: சிறு வயதிலிருந்தே இந்த சமூக சேவை உணர்வு உனக்கு இருந்ததா?

பதில்: இருந்தது என்று தான் நினைக்கிறேன். சிறு வயதிலேயே மற்றவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன்.  பள்ளியில் என் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்,  முதலில் என்னை நாடித் தான் வருவார்கள்.  அவர்கள் மனம் விட்டுப் பேசுவதை நான் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பேன்.  அவர்களின் சிக்கலான சூழ்நிலைகளில் அவர்களுக்குத் தோள் கொடுப்பதில் என் பங்கை நான் என்றுமே பெருமையாக நினைப்பதுண்டு.  என்னிடம்  நிறைய அன்பு இருக்கிறது.  அன்பிற்காக ஏங்கும்  மற்றவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: சமூகத்தில் எந்தப் பிரிவினருக்காக நீ உதவ நினைக்கிறாய்?

பதில்: எனது இளம் வயதில் என் மீது அன்பும் அக்கறையும் காட்ட எனக்கு ஒரு நல்ல குடும்பம் இருந்தது.   ஆனால் பெற்றோர்களின் வழிநடத்தல் இன்றி, எந்தவிதமான இலக்கும் இன்றி அந்த முக்கியமான ஆனால் ஆபத்தான பருவ வயதை தனியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் பல இளம் வயதினர்.  அவர்கள் மிகத் தனிமையாகவும், இந்தச் சமூகத்திற்கு வேண்டப்படாதவர்களாகவும் உணர்கிறார்கள்.  யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சிறு அக்கறை காட்டினாலே, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.   அவர்களை நல்லவழியில் நடத்திச் செல்ல, அவர்களுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை விளக்க, அவர்களுடைய இலக்குகளும் கனவுகளும் கூட தகுதியுடையவை என்பதைக் புரியவைக்க நம்பிக்கையான ஒருவர் தேவை. இந்த பலவீனமான இளம் பருவத்தினருக்கு நான் ஆலோசகராக(counselor) இருக்க விரும்புகிறேன்.

கேள்வி: சமூகப் பணியே உனது வாழ்க்கைத் தொழிலாக இருக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது எந்த அளவு சிரமமாக இருந்தது?

பதில்: அமெரிக்க இந்தியக் குடும்பங்களில் பிள்ளைகள் மருத்துவம் அல்லது பொறியியலையே மேற்படிப்பாக படிக்க வேண்டும் என்றே இன்னமும் எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த எதிர்பார்ப்புகளை மீறி நான் விரும்பியதைப் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது மிகக் கடினமாகத் தான் இருந்தது. பள்ளி இறுதி ஆண்டு மற்றும் இளங்கலை வருடங்களில், நான் மருத்துவக் கல்லூரிக்குத்தான் என்னை வலுகட்டாயமாக தயார் படுத்திக்கொண்டிருந்தேன்.  ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.  அறிவியலில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.  அறிவியல் கல்வியும் மக்களுக்குச் சேவை செய்ய உதவும் என்றாலும், நான் விரும்பியது நேரடியாக, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையே.   பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, என் மனதிற்குப் பிடித்ததை, எனக்கு சரி என்று பட்டதை செய்ய மிகுந்த மனோதிடமும் துணிவும் தேவைப்பட்டது.  நான் இந்த முடிவை எடுத்ததால் சிலர் மனதை புன்படுத்தியிருக்கலாம், ஆனால் பலர் வாழ்க்கையில் என் முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

கேள்வி: MSSW(Master of Science in Social Work) என்கிற பட்டம் வாங்கியவர்கள் எந்த மாதிரியான பணியில் ஈடுபடுவார்கள்?


பதில்: சமூகப் பணியாளர்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று, நேரடிச் சேவைகளில்(Direct Services) ஈடுபடுபவர்கள்.  இவர்கள் தமது வாடிக்கையாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளை சந்திக்க உதவுகிறார்கள்.  அதாவது வேலை தேட, அரசு உதவிக்கு விண்ணப்பிக்க, அவர்களது நிதி நிலமையை சரிசெய்ய போன்றவற்றிற்கு ஒரு திட்டம் வகுத்து தருகிறார்கள்.  பின்னர் அந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் சரியாக கடைபிடிப்பதற்கும் தொடர்ந்து உதவுகிறார்கள்.

மற்றொரு வகையான சமூகப் பணி, மருத்துவம் சார்ந்த சேவை(clinical services).  இந்தத் துறையில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்களுக்கு மனநலம் சம்மந்தப்பட்ட சிகிச்சை அளிக்கிறார்கள்.  இந்தச் சேவையை அவர்கள் ஒரு தனி நபருக்கோ, அல்லது ஒரு குடும்பத்திற்கோ செய்கிறார்கள்.  பலர் பள்ளிகளில் மனநல ஆலோசகர்களாகவும் பணிபுரிகிறார்கள்.

கேள்வி: குழந்தைகளின் நலனுக்காக எந்த வகையில் இந்தச் சமூகப் பணியாளர்கள் உதவ முடியும்?

பதில்: வீட்டிலேயே வன்முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளை பாதுகாக்கும் அரசு நிறுவனங்களில் நிறைய சமூகப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். சிக்கலான குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளை இவர்கள் கண்கானித்து அந்தக் குடும்பத்தில் சிக்கலை ஆசோசனை மூலம் போக்கிவிடலாமா அல்லது அந்த குடும்பத்திலிருந்து குழந்தையைப் பிரித்து பாதுகாப்பில் வைக்கவேண்டுமா என்று அந்த அரசு நிறுவனத்திற்கு சிபாரிசு செய்வார்கள்.  இப்படி குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர்களை(foster parents) அடையாளம் கண்டு, அந்தப் பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம் ஒரு சமூகப் பணியாளர் குழந்தைகளுக்கான மனநல ஆலோசகராக வேலை செய்வார்.

கேள்வி:  சமூகப் பணியாளர்கள் தம் பணியில் சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன? 

பதில்: சமூகப் பணிகளில் தேவைகள் மிக அதிகப்படியாக இருக்கும், ஆனால் அந்தப் பணிகளைச் செய்யும் ஆட்கள் குறைவாகத் தான் இருப்பார்கள்.  அதனால் பணி அழுத்தம் கூடுதலாக இருக்கும்.  மேலும், வாழ்க்கையில் பல வகையில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் வேலை செய்வதால், அது உணர்வு பூர்வமாகவும் ஒரு சவாலாக இருக்கும்.  தமது சொந்த வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, இந்த சமூகப் பணியில் ஈடுபடுவது ஒரு மிகப் பெரிய சவால்.  இந்தத் துறையில் பணியில் இருப்பவர்களுக்கு ஊதியம் குறைவாகவே இருக்கும்.  உண்மையிலேயே சமூகச் சேவை செய்வதில் முழு உடன்பாடும் ஆர்வமும் இருப்பவர்களால் மட்டுமே இந்தப் பணிகளில் ஈடுபட முடியும்.

கேள்வி: ஒரு முழு நேர சமுகப் பணியாளராக மாற நீ தயாரா?

பதில்: முழு மனதுடன் தயார்.  எப்படா படிப்பை முடித்துவிட்டு இந்தச் சமூகத்துடன் ஒன்றரக் கலக்கலாம் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தப் பூமியில் வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள்.  ஆனால் எல்லோரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்படவேண்டியவர்கள். என்னுடைய பொறுமை, திறந்த மனப்பான்மை, புரிந்துணர்வு, சமூக அக்கறை போன்ற குணங்களெல்லாம், என்னை ஒரு சிறந்த சமூகப் பணியாளராக உருவாக்கும் என்று நம்புகிறேன்.
                      --------------------------------------------------------------------------------

நான் பார்த்து வளர்ந்த என் அக்கா மகள், இவ்வளவு பொறுப்பாகப் பேசுவதைக் கேட்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.  அதிக ஊதியம் கிடைக்காது, விலை உயர்ந்த காரோ செல்பேசியோ வைத்துக்கொள்ள முடியாது, ஏசி அறையில் ஜம்மென்று அமர்ந்து வேலை செய்ய முடியாது...இதெல்லாம் தெரிந்தும், மக்களுக்கு சேவை செய்வதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவள், என் குடும்பத்தில் ஒருத்தி என்று சொல்லிக்கொள்ளவே எனக்குப் பெருமையாக இருக்கிறது.


Saturday, May 19, 2012

இருபது நிமிடத்தில் ஒரு குழம்பு - சொதி

அமெரிக்கத் தொலைகாட்சியில் Food Network நிகழ்ச்சிகள் பார்ப்பது என்னுடைய இன்னொரு பொழுதுபோக்கு.  Rachel Ray என்கிற சமையல் கலை நிபுணரின் "30 minute meals" என்கிற நிகழ்ச்சியில் 30 நிமிடத்திற்குள் விரைவாக செய்யக்கூடிய உணவு வகைகளை சுறுசுறுப்பாக அவர் செய்து காட்டுவது எனக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகமாக இருக்கும்.

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அன்று என்ன இரவு உணவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வருவேன்.  சமையலில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், வார நாட்களில் அதிக நேரம் சமையலறையிலேயே இருப்பது அலுப்பாக இருக்கும்.  விரைவில் சமைத்து முடித்துவிட்டால் பின் மகளுடனும் கணவருடன் நேரம் செலவழிக்கலாமே.  நம்ம ஊர் உணவு வகைகளில் விரைவாக செய்யக்கூடியவை என்று சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன்.

அப்படி விரைவாக, அதுவும் இருபது நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு குழம்பு வகை "சொதி".  இது இலங்கையில் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.  கேரளாவிலும் பிரபலம். அம்மா, அண்ணி இவர்களெல்லாம் இலங்கையில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டில் அடிக்கடி சொதி உண்டு!  இந்தப் பதிவை எழுதுவதற்காகவே நேற்று சொதி வீட்டில் செய்தேன்.  ஆனால் இந்தச் சொதியை நம்ம ஊரில் செய்வது போல் பாரம்பரிய முறையில் செய்தால் 20 நிமிடங்களில் முடிக்க முடியாது.  நான் சொல்வது போல் செய்தால் தான் விரைவில் செய்து முடிக்கலாம்.  இதோ புகைப்படங்களுடன் செய்முறை...

தேங்காய் பால் சொதி


தேவையான பொருட்கள்


1. பெரிய வெங்காயம் - ஒன்று (சற்றி பெரிய துண்டுகளாக நறுக்கியது)
ஊரில் சின்ன வெங்காயம் உபயோகிப்பார்கள்.  அதை உரிக்க சில கூடுதல் நிமிடங்கள் தேவைப்படும்.
2. தக்காளி சிறியது - இரண்டு
3. பச்சை மிளகாய் - ஐந்து
4. தேங்காய் பால் - ஒரு டப்பா (can)
ஊரில் தேங்காய் துருவி அரைத்து பால் எடுப்பார்கள்.  நமக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம்?  
5. கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
6. மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8 தாளிக்க வேண்டிய கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணை

செய்முறை


வானலியில் எண்ணை காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.  பின்னர் பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.  நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும்.  இப்போது ஒரு கேன் தேங்காய்ப் பாலுடன் அரை தம்ளர் தண்ணீர் கலந்து வாணலியில் ஊற்றவும்.  உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.  ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிடவும்.  சுவையான சொதி தயார்.  இதனை சாதம், இடியாப்பம் போன்றவற்றுடன் சாப்பிடலாம்.


                 

Friday, May 18, 2012

ஒரிகாமி - ஜப்பானிய காகிதக் கலை


மழை நாட்களில் காகிதக் கப்பல் செய்து சாலையோரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதக்க விடாத குழந்தைகளே இருக்க முடியாது.  சட்டென்று நோட்டு புத்தகத்தில் ஒரு காகிதத்தை கிழித்து நொடியில் ஒரு கப்பல் செய்துவிடுவார்கள்!  சிறுவர்களிடையே காகிதக் கப்பல் பிரபலம் என்பதைப் போல், கல்லூரியில் காகித "ராக்கெட்" மிகப் பிரபலம்!  கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவிகள் பக்கம் காகித ராக்கெட் செய்து வீசிக்கொண்டிருப்பார்கள்.  சிலவற்றில் ஏதாவது செய்திகள் கூட எழுதியிருக்கும்...சில சமையம் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் வாத்தியார் மீது கூட இந்த ராக்கெட்டுகள் வந்து பாயும்.

விளையாட்டாக நாம் செய்யும் இந்த காகித உருவங்களுப்பின் "ஒரிகாமி(Origami)" என்கிற முறையான கலை இருக்கிறது.  ஜப்பான் நாட்டில் தோன்றிய கலை இது.  ஜப்பானிய மொழியில் "ஒரி" என்றால் "மடிப்பு" என்றும் "காமி" என்றால் "காகிதம்" என்றும் பொருள்.  ஒரு சதுர வடிவமான காகிதத்தை பல விதமாக மடித்து ஒரு உருவம் செய்வதே இந்த கலையின் இலக்கு.  இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  காகிதங்களை கத்தரிக்கவோ, பசை கொண்டு ஒட்டவோ கூடாது!  திறமையான மடிப்புகளின் மூலமாகவே வேண்டிய உருவங்களை செய்துவிடலாம்.

இன்று நான் செய்த பூனை முகம்


இந்த ஒரிகாமிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?  மீண்டும் அப்பாவை இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது.   பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு முறை பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருந்தேன்.  அப்பா ஒரு நாள் "ஒரிகாமி" பற்றிய புத்தகம் ஒன்றை நூலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார்.  இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்தோம்.  காகிதத்தை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன் நான்.  பின்னர் பல நாட்கள் அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதில் கொடுத்திருந்த படங்கள், பாடங்கள் இவற்றைப் பார்த்து பார்த்து, பல நோட்டு புத்தக காகிதங்களை விரயம் செய்து சில உருவங்களைச் செய்யக் கற்றுக்கொண்டேன்.  சில காகித மடிப்புகள் மிகச் சிக்கலானவை.  படத்தைப் பார்த்து புரிந்துகொள்வது மிகக் கடினம்.  மண்டையை உடைத்துக்கொண்டு அதனை சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு உருவத்தை கொண்டு வருவதற்குள் பைத்தியமே பிடித்துவிடும்.  மாலை அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் நான் செய்த காகித உருவங்களை பெருமையாக அவரிடம் காட்டுவேன்.  நான் அந்த அளவு சிரத்தையாக ஒரிகாமி கலையைக் கற்றுகொள்வதில் மகிழ்ந்த அப்பா, எனக்கு ஒரிகாமி உருவங்கள் செய்வதற்கு வண்ணக் காகிதங்களை வாங்கித் தந்தார்.  வண்ணக் காகிதங்களில் நான் செய்த வீடு, தொப்பி, மீன், தவளை, பெட்டி, பூ போன்ற உருவங்கள் மேலும் அழகாக இருந்தன.  சில வருடங்கள் ஒரிகாமி எனது விருப்பக் கலையாக இருந்தது.

நான் செய்த யானை முகம்

ஆனால் எப்படி என் புத்தக வாசிப்பு, பென்சில் சேகரிப்பு இவற்றின் மீதான ஆர்வத்தை நான் பல வருடங்கள் கிடப்பில் போட்டிருந்தேனோ, அதே போல் தான் இந்த ஒரிகாமி கலையையும் பள்ளிப் படிப்பு முடிந்தது கிடப்பில் போட்டுவிட்டேன்.  நடுநடுவே வீட்டிற்கு வரும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்காக, காகிதத்தை எடுத்து ஏதாவது ஒரு உருவத்தை செய்து காட்டியதுண்டு.  அதற்குப் பிறகு, இந்தப் பதிவு எழுதும் இந்தச் சமையத்தில், ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்து பார்க்கலாம் என்று இணையத்தைப் பார்த்து இந்த உருவங்களைச் செய்தேன்.   பள்ளி நாட்களில் எனக்குக் இருந்த அதே ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் மீண்டும் மீட்டெடுக்க முடிந்தது.

நான் செய்த வீடு


இப்பொழுது நிறைய இணையதளங்கள், யூ ட்யூப் வீடியோக்கள் எல்லாம் ஒரிகாமி பற்றி வந்துவிட்டன.  இந்தக் கலையை இப்பொழுது கற்றுக்கொள்வது மிகவும் எளிது.  குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க இது ஒரு நல்ல வழி.  படத்தில் இருக்கும் உருவங்கள் எல்லாம் மிக எளிதாகச் செய்யக்கூடியவை தான். ஆனால், இவற்றை விட பல நிலைகள் கடினமான உருவங்களெல்லாம் கூட செய்யமுடியும்.  

நான் ஏன் FeTNA வெள்ளி விழாவுக்குப் போகிறேன்? - "டாப் டென்" காரணங்கள்



2003 ஆம் ஆண்டில் இருந்து  FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்றுகொண்டிருந்தேன்.  கடந்த மூன்று வருடங்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை.  நிறைய நல்ல அனுபவங்களை இழந்துவிட்டேன்.  அந்த இழப்பை ஈடு கட்டும் வகையில், இந்த வருடம் எங்கள் ஊருக்கு அருகிலேயே பேரவை விழா நடக்கவிருக்கிறது.  அதுவும் வெள்ளி விழா!!!  மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

என் ஆர்வத்திற்கான "டாப் டென்" காரணங்கள்!

1. விழாவிற்கு நண்பர்கள் குடும்பங்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு, வழியில்  சாலையோர விரைவு உணவகங்களில் சாப்பிட்டுக்கொண்டு காரில் பயணிப்பதே ஒரு மகிழ்ச்சியான உல்லாசப் பயணம் தான்! அங்கே சென்ற பின்னரும் அந்த வரவேற்பு, நாதஸ்வரம், பட்டுப்புடவைகள், வேட்டி சட்டைகள், விருந்துச் சாப்பாடு, நலன் விசாரிப்பு என்று ஒரு உறவிணரின் திருமணத்திற்கு சென்றது போன்ற அந்த உணர்வு...அதுவும் வெள்ளி விழா என்றால் ஏற்பாடுகள் எல்லாம் இன்னும் பலமாக இருக்கும்.

2.  நமது வரலாற்றில் வீராங்கனை என்றால் "ஜான்சி ராணி" யைத் தான் தெரியும்.  அனால் "வேலு நாச்சியார்" என்று ஒரு தமிழ் வீராங்கனை இருந்தார் என்பதே இப்பத்தான் கேள்விபடுகிறேன்.  வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். 

3. எழுத்தாளர்களைச் சந்திக்க எனக்கு மிகவும் ஆர்வம்.  2004 ஆம் ஆண்டு பேரவை விழாவுக்கு பிரபஞ்சன் வந்திருந்தார்.  அவருடன் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது.  சிறுகதை எழுத நல்ல பல உத்திகளை எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.  அதற்கப்புறம் பிரபல எழுத்தாளர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை.  இந்த வருடம் வெள்ளி விழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் வருகிறார்.  அவரின் துணையெழுத்து புத்தகத்தின் மிகப் பெரிய விசிறி நான்.

4. தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு பண்முகப் பரிமாணம் கொண்டவராகத் தெரிகிறார்.   ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார், ஆனால் பண்டைய தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம் இரண்டிலுமே ஆர்முள்ளவராக இருக்கிறார்.  ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கத்தமிழர்களின் எழுத்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்,  பரதநாட்டிய கலைஞராக இருந்தவர், நாடக நடிகை, கவிஞர்....நிறைய சுவாரசியமான விசயங்களை விழாவில் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.  பார்க்கலாம்.

5. சிவகார்திகேயன் - இவருடைய கலகலப்பும், கலாய்ப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இவருக்கு நிறைய ரசிகர்கள், அதுவும் பெண் ரசிகர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  சிவகார்த்திகேயன் வருகிறாரா?  என்கிற கேள்வி ஆங்காங்கே எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.  சில நகைச்சுவையான மணித்துகளில் நனைய நான் தயார்! 

6. தமிழன்-தமிழச்சி மாபெரும் போட்டி - இது ஒரு புதிய போட்டி முயற்சி!  ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் தம் ஊரில் இளைஞர்களைக்கொண்டு ஒரு போட்டி நடத்தும்.  இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர். தமிழ் இலக்கியம், வரலாறு, கலாசாரம் போன்றவற்றில் இளஞர்களுக்கு எந்த அளவு பொது அறிவு இருக்கிறது என்பதை சோதிக்கவே இந்தப் போட்டி.  அந்தந்த ஊர் தமிழ்ச் சங்கத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்கள்,  பெட்னா வெள்ளி விழாவில் நடக்கும் இறுதிச் சுற்றில் கலந்துகொள்வார்கள்.  பெரிய பரிசெல்லாம் உண்டு!

7.  ஈழத்தை யார் மறந்திருந்தாலும், தவறாகப் புரிந்துகொண்டிருந்தாலும், அந்த உணர்வுகள் பேரவை விழாவில் புதுப்பிக்கப்படும், மாற்றிஅமைக்கப்படும்.  கடந்த வருடங்களில் ஜெகத் காஸ்பர் ராஜ், எலைன் சாண்டர்ஸ் போன்றவர்களின் பேச்சு பலரை புரட்டிப் போட்டிருக்கிறது.  இந்த முறையும் அப்படிப்பட்ட உரைவீச்சுக்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.

8. FeTNA என்றுமே நலிவுற்ற கலைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறியதில்லை.  தப்பாட்டம், பறை, சிலம்பம் போன்ற நடனங்களை நான் தமிழகத்தில் கூட பார்த்ததில்லை.  FeTNA விழாக்களில் தான் பார்த்திருக்கிறேன்.  இந்த வருடம் தெருக்கூத்து மற்றும் உடுக்கையடி பாடல்களைப் பற்றி ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்ட முனைவர் Brenda Beck என்கிற கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மனியை FeTNA அழைத்து கெளரிவிக்கிறது.  

9.  விழாவில் இறுதி நாள் இரவு நடக்கும் மாபெரும் திரை இசை நிகழ்ச்சி எப்போதுமே மிகப் பிரபலம். மொத்த அரங்கும் நிரம்பி இருக்கும் ஒரே நிகழ்ச்சி அதுவாகத் தான் இருக்கும்!  மூன்று மணிநேரங்கள் இசை மழையில் நனைந்து, நடனமாடி, ஒன்ஸ் மோர் கேட்டு எல்லாரும் குதூகலமாக இருக்கும் நேரம் அது.  பாடகி சித்ரா இந்த வருடம் வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

10. இது தவிர, முதல் நாள் நடக்கவிருக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், கவியரங்கம், குழந்தைகளுக்கான தமிழ்த் தேனி, மாவட்ட ஆட்சியர் சகாயம், மறைமலை இலக்குவனார் ஐயா இவர்களின் உரைகள், தமிழ் வலைப்பதிவர்கள் மன்றம் - இவை அனைத்திலும் சென்று தலைகாட்ட விருப்பம்.







Thursday, May 17, 2012

பென்சில் பெண்ணே நீயானால்...

எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான்.  ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை.  பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன்.   அப்பா தான் தேடித் தேடி எனக்காகச் சிரமமப்பட்டு சேர்த்தார்.  அதை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  புகழ்மதி வியக்கும்படி அவளே எதிர்பார்க்காத வண்ணம் அவளிடம் அந்தச் சொத்தை ஒப்படைக்கப் போகிறேன் சில வருடங்கள் கழித்து!

மீண்டும் தாய்மையின் சிறப்பைப் பற்றி தொடங்கிவிட்டீர்களா என்றும், ஏன் இந்த "பில்ட் அப்"?  அப்படி என்ன சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்றும் பலர் கேட்பது புரிகிறது.

என் பென்சில் சேகரிப்பில் ஒரு பகுதி
என் "பென்சில் சேகரிப்பு" பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன்!  மூன்று நாட்களாக தாய்மை, புத்தகங்கள், தொழிநுட்பம் என்று எழுதி சற்று அலுத்துவிட்டது.  ஒரு மாற்றத்திற்காக என்னுடைய பள்ளி கால "hobby" ஆன பென்சில் சேகரிப்பை பற்றி எழுதலாமென்று தோன்றியது. "Hobby" என்பதற்கு தமிழில் வார்த்தை தேடியபோது, "மகிழ் பணி", "விருப்பக் கலை" என்ற இரு வார்த்தைகள் கிடைத்தன.  இதில் "விருப்பக் கலை" எனக்குப் பிடித்திருக்கிறது.  அதே போல் பென்சில் என்பதற்கு "கரிக்கோல்" என்ற தமிழ் வார்த்தையையும் கண்டறிந்தேன்.

பொதுவாக அஞ்சல் தலைகள், நாணயங்கள் போன்ற சேகரிப்பே பிரபலமான விருப்பக் கலையாக இருந்தது.  நான் ஏன் பென்சில்களை சேகரித்தேன் என்பதற்கு என்னிடம் சரியான காரணம் இல்லை.
ஆறாவது, ஏழாவது படிக்கும்போதெல்லாம், அந்த மஞ்சல் நிற "நடராஜ்" பென்சில்களையே உபயோகித்து அலுத்துவிட்டது.  அப்பா நிறைய பயணங்கள் செல்வார்.  போகும் இடத்தில் எல்லாம் ஏதாவது வித்தியாசமான பென்சில்களைப் பார்த்தால் எனக்காக வாங்கி வருவார்.  அப்படியே சேகரிக்கத் தொடங்கினேன்.   சும்மா பென்சில்களை வாங்கி வாங்கி பெட்டியில் குவித்து வைத்திருந்த எனக்கு, அப்பா தான் அவற்றை எப்படி   பென்சில்களின் அளவு, பயன், வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி, பிரித்து அடுக்கி வைப்பது என்று கற்றுக்கொடுத்தார்.  எப்படி இதைச் செய்தோம் என்பதக் காட்டுவதற்கு சில புகைப்படங்களை இங்கே செருகியிருக்கிறேன்.

தடிமனான பென்சில்கள்
மெல்லிய பென்சில்கள்





வளையும் பென்சில்கள் 




வளையும் பென்சில்கள்


















வட்டம், முக்கோணம், சதுரம், ஆறுகோணம், முட்டை வடிவ பென்சில்கள் 


கல்வி சார்ந்த பென்சில்கள் - (மேலிருந்து கீழ் வரிசையாக) ABCD பென்சில், வாய்பாட்டு பென்சில், யோகா பென்சில், இராமாயணம் படக் கதை பென்சில், பன்னாட்டு தேசியக் கொடிகள் பென்சில்






















பயன்/உபயோகத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பென்சில்கள் - கணக்கர்கள் பயன்படுத்தும் பென்சில்,  சுறுக்கெழுத்து பென்சில்கள், வரை கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், ஸ்டெனோ பென்சில்கள்

 சில சமையம் நான் பள்ளிக்கு உபயோகிக்கும் பென்சில்கள் தொலைந்துவிட்டால் என் சேகரிப்பில் இருந்து ஒரு பென்சிலை எடுத்து சீவிக்கொண்டுச் செல்வேன்.  அதனால் அவ்வப்போது என் சேகரிப்பில் பென்சில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்தும் இருக்கிறது!  அக்கா திருமணமாகி அமெரிக்கா சென்றபின் என் பென்சில் சேகரிப்பு, பன்னாட்டுச் சேகரிப்பாக மாறியது.

சிறு வயதில் தொடங்கிய என் பென்சில் சேகரிப்பு, கல்லூரி இறுதி ஆண்டு வரை ஆர்வமாகத் தொடர்ந்தது.  அதன் பின் நான் சேகரித்த எல்லா பென்சில்களையும் ஒரு பெட்டியில் போட்டு அலமாரியில் வைத்துவிட்டேன்.  கடைசியாக எண்ணிய போது கிட்டத்தட்ட 300 பென்சில்கள் இருந்தன.

கல்லூரி இறுதுயாண்டிற்கு பின், மேற்படிப்பு, வேலை, திருமணம் என்று வாழ்க்கை ஓடியதால், பெட்டியில் போட்டு மூடிவைத்த பென்சில் சேகரிப்பு அப்படியே இருந்தது.  இப்பொழுது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்தப் பதிவை எழுதுவதற்காக அந்தப் பெட்டியை தூசி தட்டி திறந்தபோது, அப்பாவின் நினைவால் கண்கள் கசிந்தன... எத்தனை நாட்கள் அந்தப் பென்சில்களை வைத்துக்கொண்டு நானும் அப்பாவும் சுவாரசியமாகப் பொழுது போக்கியிருக்கிறோம்?!

விருப்பக் கலைக்கெல்லாம் நேரமில்லை என்று பலர் அதைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை.  ஆனால் விருப்பக் கலையில் ஈடுபடுவது  குடும்பத்துடன் தரமான நேரம் செலவிட ஒரு நல்ல வழி.  எனக்கும் அப்பாவுக்கு உள்ள பாசப் பிணைப்பிற்கு இந்த பென்சில் சேகரிப்புக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 

ஒரு முறை என் அலுவலகத்தில் ஒரு விருந்து கூட்டத்தின் போது எல்லோரும் தங்களைப் பற்றி யாருக்கும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசியமான செய்தியை பறிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டோம்.  நான் என்னுடைய முறை வந்த போது, "நான் பென்சில்கள் சேகரிக்கிறேன்" என்று சொன்னேன்.  சிலர் "அப்படியா" என்று ஆச்சரியப்பட்டார்கள். இது முடிந்து பல நாட்கள் சென்றுவிட்டது.  ஒரு நாள் காலை என் அலுவலக மேசையில் இரண்டு அழகான பென்சில்களும், அதனுடன் ஒரு சிறு குறிப்பில், "நீங்கள் பென்சில்கள் சேகரிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.  உங்கள் சேகரிப்பில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று எழுதியிருந்தது.  இன்று வரை அது யார் என்றே எனக்குத் தெரியாது!

நானும் அப்பாவும் உருவாக்கிய இந்த பென்சில் சேகரிப்பை மேலும் விரிவாக்கி, அதற்கு அடுத்த வாரிசாக புகழ்மதியை நியமிக்க வேண்டும்.  என் விருப்பக் கலையின் மீது நான் மறந்திருந்த ஆர்வத்தை மீட்டெடுக்க உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி!














Wednesday, May 16, 2012

வாசிப்பும் வசதியும்


"I have always imagined that paradise will be a kind of library" - Jorge Luis Borges

  சொர்க்கம்(Paradise/Heaven) என்பது இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அழகான மகிழ்ச்சிகரமான ஒரு பிரதேசம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. இவர் எந்த அளவு புத்தகங்களை நேசித்திருந்தால் அந்த மிக மகிழ்ச்சிகரமான பிரதேசம் ஒரு நூலகம் போல் இருக்கும் என்று கற்பனை செய்திருப்பார்?!  இதைப் படித்ததும் என் தலையில் நானே ஒரு குட்டுப் போட்டுக்கொண்டேன்!  இன்னமும் சிறுபிள்ளைத்தனமாக சொர்க்கம் என்றால் அழகிய சோலைவனம், நீர்வீழ்ச்சி, பறவைகள், தேவதைகள், அருசுவை உணவு - இவை தான் நினைவுக்கு வருகிறது!  ஒவ்வொருவருக்கும் எது அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்து தான் சொர்க்கத்தைப் பற்றியதான அவர்களுடைய கற்பனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என் கைகளுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பொருள் புத்தகம் என்பது போல் எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடனே திரிந்துகொண்டிருப்பேன். அம்மா போடும் சூடான பக்கோடாவை சுவைத்துக்கொண்டு புத்தகங்களை மேய்வது, இரவு படுக்கையில் படுத்துக்கொண்டே சில நிமிடங்கள் புத்தகம் படித்துவிட்டு அப்படியே தூங்கிப்போவது, இரயிலில் செல்லும்போது சன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு புத்தகம் படிப்பது, படித்து முடித்த புத்தகத்தை தோழிகளிடம் கொடுத்து அவர்களிடம் வேறு புத்தகம் வாங்கிப் படிப்பது என்று சுகமான புத்தக அனுபவங்கள் நிறைய இருந்தது. எங்கள் வீட்டில் அப்பாவின் அறையிலும், முன்னறையிலும் பெரிய அலமாரிகளில் நிறைய புத்தகங்கள் இருக்கும். ஆனால் கடந்த பல வருடங்களாக எனது புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்து விட்டது.

இப்பொழுதெல்லாம் எனக்கு வேண்டியதை இணையத்திலேயே படித்துவிடுகிறேன். பற்றாததற்கு, இப்போது மின் புத்தகங்கள், amazon kindle, Apple ipad போன்ற நவீன வாசிப்பு வசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சு புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது.  சமீபத்தில் ஒரு கிருத்துவத் திருமணத்தில், திருமணம் நடத்தி வைத்தப் பாதிரியாரின் கையில் பைபிளுக்குப் பதிலாக "ஐ பாட்" இருந்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்!  ஒரு புனித நூலுக்கே இப்படி ஒரு நிலமையிருக்கும் போது, எதிர்காலத்தில் அச்சு புத்தகங்களே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் தோன்றுகிறது.

என் இரண்டரை வயது மகள் புகழ்மதிக்கு புத்தகத்தின் கடைசி பக்கத்தைத் திருப்பினால் அது புத்தகத்தின் முடிவு என்று புரியவில்லை!  கடைசி பக்கத்தைத் திருப்பிய பிறகும் "அடுத்த பக்கம் திருப்பு" என்று அடம் பிடிக்கும் அவளிடம், இன்னும் சில வருடங்களில், புத்தகப் பக்கங்களைத் திருப்பும் இந்தப் பிரச்சினையே உனக்கு இருக்காது என்று எப்படிச் சொல்வேன்?!


புதிய தொழில் நுட்பங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கும் போது, அதனுடன் மல்லுக்கு நிற்க முடியவில்லை.  முன்பெல்லாம் எங்கேயாவது சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தால், ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது வழக்கம்.  இப்போது கைகள் தானாக ஐபேடை(ipad) தேடுகின்றது மின் அஞ்சல், முகப்புத்தகம் அல்லது மின் நூல்கள் படிக்க!  புத்தகப் பக்கங்களைத் திருப்பும் அந்த உணர்வை கூட இழக்கவேண்டியதில்லை ஐபேடில்! அந்த மின் புத்தகப் பக்கங்களின் முனையை விரலால் தள்ளி பக்கங்களைத் திருப்பும் உணர்வை பெற முடிகிறது, திருப்பும் போது "சரக்" என்ற அந்த காகிதச் சத்தம் கூட வருகிறது.  எப்படி இதற்கெல்லாம் அடிமை ஆகாமல் இருக்க முடியும்?!

நாம தான் இப்படி ஆகிவிட்டோமென்றால் குழந்தைகளின் நிலை என்ன?  சிறு வயதிலிருந்தே எனக்கும் புத்தகங்களுக்கும் இருந்த ஒரு பந்தம் என் மகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று ஒரு கேள்வி இருக்கிறது.  அப்படி என்ன அவள் புத்தகங்கள் இல்லையென்றால் இழந்துவிடப் போகிறாள்?  பெரிதாக ஒன்றும் இல்லை.  அவள் அறிவு எந்த விதத்திலும் குறைந்துபோய்விடப்போவதில்லை.  ஆனால் சில பாரம்பரியமான அனுபவங்களை இழப்பாள். அந்த ரோட்டோர பழைய புத்தகக் கடைகளை அவள் பார்க்கவே முடியாது...மடங்கிப் போன ஒரு காகிதத்தை நேர் படுத்த கணமான புத்தகங்களை அதன் மேல் வைத்து "வெயிட் போட" தெரியாது...புத்தகப் பக்கங்களின் நடுவே மயில் இறகையும், பூக்களையும் வைத்து மூடி வைக்கத் தெரியாது...அவள் வீட்டு முன்னறையை அலங்கரிக்க புத்தக அலமாரிகள் இருக்காது...ஒரு புத்தகத்தில் அவளுடைய கையெழுத்திட்டு பரிசு கொடுக்க முடியாது...

இங்கே அமெரிக்காவில் நான் பார்க்கும், படிக்கும் விசயங்கள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.  இங்கே வீட்டிலும் பள்ளியிலும், குழந்தைகளுக்கு அச்சு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் என்னேரமும் ஐ பாட், ஐ போன் சகிதம் திரிந்துகொண்டிருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு தினம் இரவு நேரங்களில் நல்ல கதை புத்தகங்கள் படிக்கிறார்கள். அந்த அச்சு புத்தகங்களை தம் குழந்தைகள் தொட்டு, பக்கங்களைத் திருப்பும் போது, ஒரு புது உலகத்தைத் தொடும் உணர்வு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் என்று நம்புகிறார்கள். வண்ணங்கள், வடிவங்கள், மிருங்கங்கள் போன்றவற்றை அச்சு புத்தகங்களை பார்த்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நான் படித்த ஒரு கட்டுரையில், "படங்கள் நிறைந்த ஒரு அச்சுப் புத்தகத்தை மின் வடிவமாக மாற்றுவதில் என்ன இழப்பு இருக்க முடியும்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த Junko Yokota என்கிற சிகாகோவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சொன்ன பதில் - "புத்தகத்தின் அளவும் வடிவமும் கூட அதனைப் படிக்கும் பொது உண்டாகும் உணர்வுபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான அனுபவத்தின் ஒரு பகுதியாகிறது. உதாரணத்திற்கு, அகலமான பக்கங்களை பரந்த நிலப் பரப்புகளை வர்ணிக்க பயன்படுத்தலாம். நீல வாக்கில் இருக்கும் பக்கங்களை உயரமான கட்டிடங்களைப் பற்றிய கதைகளுக்கு பயன்படுத்தலாம்.  எல்லாவற்றையும் சுருக்கி ஒரு மின் வடிவத்திற்குள் சட்டென்று அடைத்துவிட்டால் அது அர்த்தமற்றதாகப் போய்விடும்"




அச்சு புத்தகங்கள், மின் புத்தகங்கள் இரண்டுமே குழந்தைகளுக்கு முக்கியம் என்றும் பல நிபுணர்கள் கருதுகிறார்கள். "Raising a Reader" என்கிற நிறுவனத்தின் இயக்குனர் Gabrielle E.Miller என்கிற பெண்மணி, "ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சு புத்தகத்தை படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது.  உதாரணத்திற்கு, 15 அச்சு புத்தகங்களை ஒரு விடுமுறைக்கு செல்லும் போது பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் Kindle ஒன்றை எடுத்துச் செல்லலாம்.  அதே சமையம், தண்ணீர் தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் kindle ஐ தூக்கிக் கொடுக்க முடியாது.  ஆனால் வினைல்(vinyl) புத்தகத்தைக் கொடுக்கலாம். இப்படி இரண்டு புத்தக வடிவங்களுக்கும் பயன்பாடு இருக்கிறது" என்கிறார். 

புத்தகங்களை இழக்க மனம் இல்லை, அதே சமையம் நவீன வாசிப்பு வசதிகளையும் புறக்கணிக்க முடியாது. பொறுமையாக யோசித்துப் பார்க்கையில், இரு தரப்பு கருத்துக்களுமே சரி என்று எனக்குப் படுகிறது. மறைந்து வரும் அச்சு புத்தக வாசிப்பின் பக்கம் மனம் சாய்ந்தாலும், தொழில் நுட்ப ரீதியாக அதி வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் வாழ்ந்துகொண்டு, ஒரு நவீன வசதியை குழந்தைகளிடமிருந்து மறைப்பது சரியல்ல. குழந்தைகள் வாசிக்கிறார்கள் என்பதே முக்கியம்.  அச்சு புத்தகமா, மின் புத்தகமா என்று நாம் கட்சி பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை. கற்றலில் புதிய வழி முறைகள் இருப்பதும், அவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து பரிசோதனை செய்வதும்கூட ஒரு உற்சாகமான அனுபவம் தான்! மேலும், ஒரு புத்தகத்தின் உண்மையான மதிப்பு, அதன் உள்ளடக்கத்தில் இருக்கிறது.

மனம் சமாதானமாகிவிட்டாலும், எனக்கு ஒரே ஒரு வருத்தம் எஞ்சியிருக்கிறது.  இன்னும் 50 வருடங்கள் சென்ற பின்னர், Jorge Luis Borges போல சொர்க்கம் என்பது நூலகம் பொல் இருக்கும் என்று சொல்லும் அளவு  புத்தகங்களை நேசிப்பவர்கள் யாரேனும் இருப்பார்களா?! 



















Monday, May 14, 2012

தாய்மை என்னும் விசித்திரம்

அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?!



எனக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தே என் மகள் பிறந்தாள்.  "குழந்தை பிறந்தபின் உன் உலகமே மாறிவிடும்" என்று எல்லோரும் சொன்னார்கள்.  அது தெரிந்த விசயம் தானே? என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டேன். உலகம் மாறிவிடும் என்று அவர்கள் சொன்னதற்கு நான் செய்து கொண்ட அர்த்தம்...பல இரவுகள் தூக்கம் தொலைக்க நேரிடும், எனக்கென்று நேரம் இருக்காது, முன்பு போல் ஜாலியாக வெளியே சுற்ற முடியாது, எந்த நேரமும் குழந்தையைப் பற்றியே சிந்தனை இருக்கும்....போன்றவைதான்.  ஆனால் எவ்வளவு சுலபமாகத் தாய்மையை எடைபோட்டுவிட்டேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை...உலகம் மாறும் என்று சொன்னவர்கள், எப்படியெல்லாம் மாறும் என்பதைச் சொல்லவில்லை. என் மூலமாக உலகத்திற்கு வரும் ஒரு குழந்தை, என் உலகத்தை எப்படி மாற்றமுடியும் என்று பார்த்துவிடுகிறேன் என்று பிறக்காத குழந்தையிடம் சவால் விட்டேன்.



 ஆனால் பிரசவத்தின் போது அந்த மருத்துவமனை கட்டிலில் வேறு ஏதோ ஒரு மர்மம் ஒவ்வொரு தாய்க்கும் நடக்கிறது என்று நினைக்கிறேன்.   திருமணம் ஆனபின் கூட ஒரு பெண் வலுகட்டாயமாக தன்னை மாற்றிக்கொள்கிறாள் அந்த புதிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல.  ஆனால் தாயாகும் போது அவள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை! தன்னை அறியாமலேயே தானாக மாறிவிடுகிறாள்.  சில மாதங்கள் சென்றபின் தான் அந்த மாற்றத்தையே உணரமுடிகிறது.  நல்லவிதமான மாற்றங்களைப் பற்றி எழுத வேண்டியதில்லை.  அது எல்லா தாய்மார்களுக்கும் தெரிந்ததே.  ஆனால் நான் எதிர்பாராத  எதிர்மறையான மாற்றங்கள் சில என்னுள் ஏற்பட்டது.  எனக்கு பட்டியல் போடுவது மிகவும் பிடிக்கும்.

அப்படி நான் உணர்ந்த சில விசித்திர/எதிர்மறை மாற்றங்கள் இதோ:
  • முதலில் நான் உணர்ந்த மாற்றம் - எனது சிந்தனைகளில்.  தாய்மை என் சிந்தனைகளை முடமாக்கவில்லை, ஆனால் அதன் திசையை மாற்றிவிட்டது.  இப்பொழுதெல்லாம், குழந்தைகள், அவர்களின் சாப்பாடு, விளையாட்டுப் பொருட்கள் - இவற்றைப் பற்றியே நான் அதிகம் சிந்திக்கிறேன். இந்த வார நட்சத்திர பதிவுகளை எழுத உட்கார்ந்தபோது கூட, எனக்கு தாய்மை, குழந்தை வளர்ப்பு போன்ற தலைப்புகளில் எழுதுவதற்குத் தான் சரளமாக கருத்துக்கள் வந்து விழுந்தன.
  • என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் எங்கே ஓடிப் போய் ஒளிந்துகொண்டன என்றே தெரியவில்லை!  எனக்குப் பிடித்த உணவுவகைகள், என்னுடைய சுகமான எழுதும் அனுபவம், நிதானமாக காப்பி குடித்துக்கொண்டே இணையத்தில் மேயும் நேரம், என் அலங்கார கைப்பை...என்று இவை எல்லாமே பின் தள்ளப்பட்டுவிட்டன...என் இலக்குகளும், முன்னுரிமைகளும் என்னை கேட்காமலேயே தானாக மாற்றி  வரிசைபடுத்தப்பட்டன...ஆனால் என்ன ஆச்சரியம்...இதனால் எனக்கு துளி அளவும் வருத்தம் ஏற்படவில்லை! 
  • சற்று சுயநலக்காரியாகவும் மாறினேன்.  பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் சற்றே மறந்திருந்த உறவுகளின் பால் மீண்டும் கவனம் திரும்பியது.  என் மகளுக்கு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணன் என்று எல்லா உறவுகளின் அன்பும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அதிக நேரம் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேன்.
  •  என் மொழி உணர்வைத் தாண்டி மகள் "mommy" என்று என்னை அழைப்பதைக் கேட்டு இரசித்தேன்!   அவள் ஆசையாக அப்படி அழைக்கும் பொழுது, அம்மா என்று அழைக்கச் சொல்லி திருத்த மனம் வரவிட்டாலும், அதன் அவசியத்தை மறக்கவில்லை. 
  • என்னுள் இருந்த பெண்ணியமும் இறந்தது.  குழந்தைப் பிறப்பைப் போல் வேறு ஒரு அற்புதம் ஒரு பெண்ணிற்கு நிகழவே முடியாது என்று ஆழமாக நம்புகிறேன்.  தினம் மகளுக்காக பிசைந்த சாதத்தை ஒரு பருக்கை விடாமல் அவளுக்கு ஊட்டி முடிப்பதையும், அவளுடைய உடைகளை துவைத்து, மடித்து அழகாக வரிசைப் படுத்துவதையுமே எனது மிகப் பெரிய சாதனைகளாக நினைக்கிறேன்!
  • கூடுதலாக ஒரு தாய்-தந்தை அற்ற குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற என் பல வருடக் கொள்கை இடிந்தது.  என் மகளை நேசிப்பது போல மற்றொரு குழந்தையை என்னால் நேசிக்க முடியுமா என்கிற ஐயம் மனதில் வந்துவிட்டது.  இதை மிகுந்த குற்ற உணர்வோடுச் சொல்கிறேன்.
  •  சில தோல்விகள் என்னை பயமுறுத்துகின்றன...என் மகள் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது,  அவளை என் கணவரிடம் விட்டுவிட்டு நான் வெளியில் செல்லும் நேரங்களில், "அம்மா எங்கே?" என்று அவள் கேட்காதபோது, என் சொல் பேச்சை மதிக்காதபோது, ஒரு தாயாக நான் தோல்வியடைகிறேன்...
  • எப்பொழுதுமே அன்றைய தினத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நான், இப்பொழுது என் வயோதிகத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன்.  எனக்கு எழுபது வயதாகி , உடல் நொடிந்து போகும்போது, மகளுக்கு  அப்போது திருமணம் ஆகி, கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள் என்ற யதார்தத்தைத் தாண்டி, அவளை என்னால் பார்த்துக்கொள்ள முடியாதே என்று அர்த்தமற்று கவலைப்படுகிறேன்.  

எத்தனை தோல்விகள், பயங்கள், வருத்தங்கள் இருந்தால் என்ன?   முப்பது பேருக்கு மத்தியில், அவள் என்னைத் தேடி, ஒவ்வொருவராக அன்னாந்துப் பார்த்து, அது நான் இல்லை என்று தெரிந்ததும் முகம் வாடி, கடைசியாக என்னைப் பார்ததும் முகம் பளிச்சிட ஓடி வந்து கட்டிக்கொள்கையில், வாழ்க்கையில் அத்தனை வெற்றிகளும் எனக்குக் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்.

தாய்மை வெல்க!

பி.கு:

எனது பிரசவ அனுபவத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இதோ:
என் பிரசவ அறையில் - 1
என் பிரசவ அறையில் - 2















  











முகப்புத்தகத்தில் பெண்களின் "டாப் டென்" நடவடிக்கைகள்!



முகத்தைப் பார்த்துக்கொள்ளாமலேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகத்திற்கு "முகப்புத்தகம்"(facebook) என்று பெயரிட்டது சற்று விந்தையாக இருக்கிறது.  ஆனால் இந்த ஊடகம் எந்த அளவு நம்மிடையே பிரபலாமாகிவிட்டது!   முகப்புத்தகத்திற்கு எவ்வளவோ ஆக்கபூர்வமான பயன் கள் இருக்கின்றன.  வியாபாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கும் பலர் இந்த ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் நான் உட்பட, நம்ம ஊர் பெண்கள் முகப்புத்தகத்தை ஒரு பொழுது போக்குத் தளமாகவே பயன்படுத்துகிறோம். எனது முகப்புத்தகத்தில் இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயதினர்.  குடும்பத் தலைவிகள், அல்லது வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்.  இவர்களுடன் தினமும் முகப்புத்தகத்தில் தொடர்பில் இருப்பது ஒரு சுவையான அனுபவமாக இருக்கிறது.

வீட்டு வேலையெல்லாம் முடித்த பிறகு, குழந்தைகள் தூங்கிய பிறகு ஒரு ஐந்து நிமிடம் முகப்புத்தகத்தினுள் நுழைந்து,  யார் என்ன புதிதாக செய்தி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு "likes" போட்டுவிட்டு பின் தூங்கப் போவது பல பெண்களின் வழக்கமாக இருக்கிறது.  சிலர் காலை எழுந்தவுடன் சட்டென்று ஒரு எட்டு பார்த்துவிடுகிறார்கள்.  கொஞ்சம் "tech savvy" ஆன பெண்கள், வெளியில் இருக்கும்போதே, தன் செல்பேசி மூலமாகவே முகப்புத்தகத்தைப் பார்த்து செய்திகளையும் போட்டுவிடுகிறார்கள்.  நீண்ட நாட்கள் சந்திக்காதவர்கள் சந்தித்துக்கொண்டால் கூட முகப்புத்தகத்தில் அவர்கள் இட்ட செய்தியைக் குறிப்பிட்டு "நீங்க வீடு வாங்கிட்டதா முகப்புத்தகத்தில் போட்டிருந்தீங்க, வாழ்த்துக்கள்" என்கிற ரீதியில் அவர்களின் உரையாடலுக்கு உந்துகோலாக முகப்புத்தகம் இருக்கிறது.

இவர்கள்(நான் உட்பட) முகப் புத்தகத்தில் என்னதான் செய்கிறார்கள்?  இதோ ஒரு "டாப் டென்" பட்டியல்!
  1. நிறைய பெண்கள் தம் குழந்தைகளின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் இடுவதை விரும்புகிறார்கள்.  அடிக்கடி பார்த்துக்கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வளர்ச்சியை நாம் தெரிந்துகொள்வதற்கு இது வசதியாக இருக்கிறது.  
  2. 80 களிலும் 90 களிலும் வந்த திரைப்படப் பாடல்களின் யூ ட்யூப் வீடியோக்களைப் போட்டு பழைய கல்லூரி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறார்கள்.
  3. எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களைப் போட்டு, பல குடும்பங்களில் அடுத்த விடுமுறைக்கான கேள்வியையும், சச்சரவையும் உண்டாக்கிவிடுகிறார்கள்.
  4. பிறந்தநாட்கள், வருடப்பிறப்பு போன்ற விசேசங்களுக்கு முகப்புத்தகத்திலேயே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு தொலைபேசாமல் தப்பித்துக்கொள்கிறார்கள்.
  5. அன்று வீட்டில் செய்த ஒரு உணவு வகையை புகைப்படம் எடுத்துப் போட்டு,  வீட்டில் கணவர் பாராட்டாவிட்டாலும், முகப்புத்தக நண்பர்களெல்லாம் "ஆகா பார்க்கவே அருமையாக இருக்கிறதே" என்றும் "எச்சில் ஊறுகிறதே" என்றும் பின்னூட்டம் இடுகையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.  
  6. வீட்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால், அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்து,  நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளிலும், பிரார்த்தனைகளிலும் சற்று மனம் சமாதானமடைகிறார்கள். 
  7. மின் அஞ்சல்களை விட முகப்புத்தகத்தில் பிரைவெட் மெசேஜ் அனுப்புவதையே அதிகம் விரும்புகிறார்கள்.
  8. பழைய கல்லூரி நண்பர்களின் முதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து "ஐயோ இப்படி வயசாகி போய்விட்டதே" என்று மனதிற்குள் வருத்தப்படுகிறார்கள்.  நமது புகைப்படத்தைப் பார்த்து அந்த பக்கத்திலும் அப்படியே நினைப்பார்கள் என்பது மறந்து போயிருக்கும்.  
  9. ஒரு பாட்டுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் கலந்துகொண்ட சிறு சாதனைகளை பெருமிதத்துடன் அறிவித்து, நண்பர்களின் பாராட்டுக்களை சேகரித்து மகிழ்கிறார்கள்.
  10.  பள்ளியின் முதல் நாள்,  சைக்கிள் ஓட்டிய முதல் நாள், காது குத்திய நாள் என்று குழந்தைகள் கடந்த மைல்கற்களை பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள். 
இதில் எதையுமே செய்யாமல், முகப்புத்தக கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும் பெண்களும் உண்டு.  நான் இந்தப் பட்டியலில் இருப்பவற்றை ஒன்று விடாமல் செய்துகொண்டு தான் இருக்கிறேன்.  இந்த வாரம் எனது நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் கூட என் முகப்புத்தகத்திலும் இடுவதாகத் திட்டம்!  200 மில்லியன் நபர்கள் கொண்ட இந்த ஊடகத்தில் பிரபலமாக இருப்பது முக்கியம், இல்லையா?




Sunday, May 13, 2012

தாய்மை எனப்படுவது யாதெனில்...



நேற்று மே மாதம் 13 ஆம் தெதி...தாய்மையைக் கொண்டாடும் "அன்னையர் தினம்"! அனைத்து தாய்மார்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

என் மகள் புகழ்மதி பிறந்தபின், இரண்டு அன்னையர் தினங்களை நான் கடந்துவிட்டேன்.  பரிசு பொருட்கள், பூக்கள், வாழ்த்துக்கள், விருந்து என்று கொண்டாடியாகிவிட்டது.   தாய்மை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான் என்றாலும், மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.   நான் ஒரு சராசரித் தாய்...பெரிதாக சவால்கள் எதுவும் எனக்கு இல்லை.  தாய்மையின் அத்தனை சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் இரசித்து, அனுபவித்து வருகிறேன், எனக்கு நேரமும், வாய்ப்பும் இருப்பதனால். ஆனால்...

நான் புகழ்மதியை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லும் அதே நேரம், எங்கோ ஒரு தாய் தன் குழந்தைக்கு அடுத்த வேளை உணவு தேடி அலைகிறாள்.  நான் புகழ்மதியை அணைத்துக்கொண்டு பஞ்சு மெத்தையில் படுத்திருக்கையில், எங்கோ ஒரு தாய் ஒரு இடிந்த சுவற்றிற்குப் பின்னால் தன் குழந்தையை பாதுகாப்பாக ஒரு இரவேனும் தூங்கவைக்க முயல்கிறாள்.

துன்பகரமான சூழல்களில், ஆபத்தான சூழல்களில், கடும் ஏழ்மையில் கூட தம் குழந்தைகளுக்கு ஒரு விடியலைக் காட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்மார்களை இந்த அன்னையர் தினத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.

புகழ்மதி வயிற்றில் இருந்தபோது,  நான் இணையத்தில் படித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது.  CARE என்கிற ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த Melanie Brooks என்கிற பெண்மணி, 2009 வருடம் அன்னையர் தினத்தன்று, இலங்கையில் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த தாய்மார்களுடன் அன்று முழுக்க இருந்து பேசிக்கொண்டிருந்தாராம்.  அந்தத் தாய்மார்கள் பல மாதங்களாக கால் நடையாக குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக ஓடி ஒளிந்து தப்பித்து கடைசியில் அந்த அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தவர்கள்.  அவர்களுடைய இலக்கு ஒன்று தான்.  தம் குழந்தைகளுக்கு அடுத்த வேளை சாப்பாடும் பாதுகாப்பும்.  அந்த சுட்டெரிக்கும் வெயிலில், தன் 6 மாதக் குழந்தைக்கு விசிறிக்கொண்டிருந்த ஒரு தாய், கழுத்தளவு தண்ணீரில் அந்தக் குழந்தையை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, போர் வளாகத்தில் இருந்து தப்பி ஓடி வந்தவராம்! என்னால் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

அந்த ஈழத் தாய்மார்களை நான் நேரில் பார்த்ததில்லை.  அவர்களுடைய துயரத்தை நான் வேறு எதனுடனும் ஒப்பிட விரும்பவில்லை.  ஆனால் அமெரிக்காவில் கத்ரீனா என்கிற சூறாவளி ஒரு ஊரையே அழித்த போது, வீடு வாசல் இழந்தவர்களுக்கு உதவ, ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஒரு முகாமில் நான் சில வாரங்கள் வேலை செய்தேன்.  அப்போது அங்கே அந்த தொண்டு நிறுவனம் வழங்கும் உதவிக் காசோலையையும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு சுட்டெரிக்கும் வெயிலில் கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கால் கடுக்க நிற்கும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்.

இவர்கள் மட்டுமன்றி, உலகத்தில் வாழும் அத்தனை விதவைத் தாய்மார்கள், விவாகரத்தான "single mothers" என்று அழைக்கப்படும் ஒற்றைத் தாய்மார்கள், தம் வீட்டிலேயே வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள்...இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கை இருப்பதற்கே அவர்களின் குழந்தைகள் தான் காரணமாக இருப்பார்கள்.

ஓரு ஆங்கிலக் கவிதை என் மனதைப் பிழிந்து போட்டது...

“my mother, poor fish,
wanting to be happy, beaten two or three times a
week, telling me to be happy: "Henry, smile!
why don't you ever smile?"

and then she would smile, to show me how, and it was the
saddest smile I ever saw”

― Charles Bukowski



என்னுடன் பணி புரியும் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்னிடம் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த போது, தனது 10 ஆவது வயதில் ஒரு நாள் அவளுடைய தந்தை ஏதோ ஒரு விவாதத்தின் போது, கொதிக்கும் நீரை தன் தாய் மீது கொட்டியதாகச் சொன்னாள்.  அந்தத் தாய் அத்தனை வேதனையிலும், தன் மகள்களை அந்த மனிதாபிமானமற்ற மனிதரிடம் விட்டு செல்லக்கூடாதென்று, அவர்களையும் இழுத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடினாராம்! 

நான் அமெரிக்கா வந்த புதிதில் K-Mart என்கிற அங்காடியில் பகுதி நேர வேலை செய்தேன். அங்கே காலை 8 மணியிலிருந்து 4 மணி வரை வேலை செய்துவிட்டு, அதன் பின் இரவு 10 மணி வரை மற்றொரு உணவகத்தில் வேலை செய்த ஒரு பெண்மணியிடன், "ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்?" என்று கேட்டபோது, "என் மகனும் அவனது பள்ளித் தோழர்கள் போலவே $100 ஷூக்கள் எப்போது அணிவது?" என்று கேட்டார். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.  அதனால் அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது.  இப்பொழுது தான் புரிகிறது, அன்று தாய்மையை அதன் மிகச் சிறந்த வடிவில் நான் பார்த்திருக்கிறேன் என்று!

இந்தச் சூழலுக்கு மிகப் பொருத்தமான ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது...

கள்ளிக் காட்டில் பிறந்த தாயே
என்னக் கல்லுடைத்து வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைத்த தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே


சும்மாவா தூக்கி தேசிய விருது கொடுத்தார்கள் இந்த வரிகளை எழுதிய வைரமுத்துவுக்கு?!

சரி!  தாய்மையின் சிறப்பைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது.  இப்பொழுது ஒரு சிறிய போட்டி, இந்த வலைப்பதிவிற்கு வந்தவர்களுக்கு!

தாய்மை எனப்படுவது யாதெனில்...

என்கிற வாக்கியத்தை அழகான அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிறைவு செய்யவும்.  அதிகபட்சம் நான்கு வார்த்தைகள் உபயோகிக்கலாம்.  முயற்சி செய்து பாருங்கள்.  தாய்மை என்பது பற்றி மற்றவர்களின் வரையறை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்!