Friday, September 08, 2006

சென்ற வாரச் சிந்தனைகள் - 1

பர்தா பெண்

சென்ற வாரம் நான் வழக்கமாக புருவம் திருத்திக்கொள்ளச் செல்லும் அழகு நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருக்கும் பெரிய கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த போது, எனக்குப் பின்னால் ஒரு பெண் நின்றிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது. மிக அழகாக இருந்தாள். இந்தி நடிகை ப்ரீதி ஜிந்தாவின் சாயல் தெரிந்தது. பளபளப்பான கரிய கூந்தலில் லேசான சிவப்புச் சாயம். கூந்தல் சீராக அழகாக வெட்டப்பட்டிருந்தது. ஜீன்ஸ் மற்றும் டாங்க் டாப் அணிந்திருந்தாள். எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று பொறாமைப்பட்டுக் கொண்டே புருவங்களை திருத்திக்கொள்ள கண்களை மூடிக்கொண்டேன். சில நிமிடங்கள் சென்றபின் கண்களைத் திறந்து மீண்டும் கண்ணாடி வழியே பார்த்தபோது அந்த அழகான பெண் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். முதலில் ஒரு கருப்புத் துணியை எடுத்து தன் கூந்தலில் போர்த்தி, மூடி, கழுத்தின் கீழ் இழுத்து பொத்தான் அணிந்துகொண்டாள். பின் ஒரு நீளமான கருப்பு அங்கியை உடம்பின் மேல் அனிந்து கழுத்திலிருந்து உள்ளங்கால் வரை பொத்தானிட்டுக்கொண்டாள்! அவளுடைய பளபளப்பான கரிய கூந்தலும், அழகிய தேகமும் ஒரு நிமித்திற்குள் பர்தாவினுள் ஒளிந்து கொண்டன! பர்தா வழக்கத்தைப் பற்றி பலர் பேசியும், எழுதியும் ஆகிவிட்டது. புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் மனம் வருத்தப்பட்டது. பெண்கள் பர்தா அணிந்துகொள்வதன் உண்மையான காரணம், பெண்களை அடிமையாக்கவோ, இழிவுபடுத்தவோ அல்ல, மாறாக அவர்களின் புற அழகைத் தாண்டி அவர்களின் அறிவையும் மனதையும் ஆண்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே என்று பல விளக்கங்கள் கூறுகின்றன. அப்ப ஆண்களின் மேல் நம்பிக்கை இல்லையென்று ஆகாதா? ஒரு அழகானப் பெண் பர்தாவினுள் ஒளிந்திருக்கையில் அவளை கண்ணியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்க்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் அவள் பர்தா போடாவிட்டாலும் அவளை கண்ணியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்ப்பது தானே ஆண்களுக்கு உண்மையான பெருமை?

தமிழ்த் தொலைகாட்சித் தொடர்களில் ஆண்கள்

தமிழ் ஊடகங்களில், முக்கியமாக தொலைக்காட்சித் தொடர்களில் பெண்கள் எப்படி தவறாக, தரம் தாழ்ந்து சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி நிறைய படித்தும், எழுதியும், கேட்டும், விவாதித்தும் சலித்து விட்டது. அப்பாவிடம் சென்ற வாரம் ஒரு நாள் மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களின் சித்தரிப்பு பற்றி நான் மீண்டும் கோபப்படுகையில், அப்பா சொன்னது:

பெண்கள் மட்டும் தான் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்களா? ஆண்களும் தான் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு அப்பாவின் கோணத்திலிருந்து இந்தத் தொடர்களைப் அலசிப் பார். உதாரணமாக, 'செல்வி' தொடரில் எல்லா அப்பா கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற தெண்டமான அப்பாக்களாக இருக்கிறார்கள். செல்வியின் அப்பா - குடிகாரர், குடும்பத்தை காப்பாற்ற முடியாத கையாலாகாதவர். ஜி ஜேவின் அப்பா - சதா கோவில், குளம் என்று செல்லும், குடும்பத்தில் எந்த வித ஆளுமையும் இல்லாதவர். 'மலர்கள்' தொடரில் சண்முகத்தின் அப்பா - மனைவி செய்யும் அநியாயங்களை எதிர்த்துக் கேட்ட திராணியற்றவர். கற்பகத்தின் அப்பா - தன்மானம் இல்லாதவர், பணத்துக்காக எதையும் செய்பவர்.

அப்பாக்கள் மட்டுமா? கணவன்மார்களை எடுத்துக்கொள். ஒன்றிரண்டு கணவன் கதாபாத்திரங்களைத் தவிர, மற்றவரெல்லாம் இரண்டு கல்யாணம் செய்துகொள்வது, கள்ளக் காதல் வைத்துக்கொள்வது, குடிப்பது, மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்று சித்தரிக்கப்படுகிறார்கள்.

உண்மைதான்! நான் பெண்களின் பார்வையிலேயே பார்த்துக்கொண்டிருந்ததால் மற்ற கதாபாத்திரங்களை அவ்வளவாக கவனிக்கவில்லை! ஆனால் ஆனால் இப்படிப்பட்ட சித்தரிப்பிற்கு ஆண்கள் எந்த வகையிலாவது எப்போதாவது எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா?

No comments: