Wednesday, February 15, 2006

உயிர் வாழும் தந்திரமாம்!

விகடனின் 2005 ஆம் ஆண்டு தீபாவளி மலரில் கதை ஒன்றை நேற்றுப் படித்தேன்.

திருமணம் ஆகாத ஒரு இளைஞன் இருக்கிறான். திருமணம், பிள்ளைக்குட்டிகள், ஸ்கூல் அட்மிஷன் போன்ற தொல்லைகளில் ஈடுபட அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் தனிமையான இரவுகள் அவனுக்கு போர் அடிக்கின்றன. ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறான். அன்றிரவு அவனுடைய வீட்டில் தங்குகிறாள். இரவு மகிழ்ச்சியாகக் கழிகிறது. மறுநாள் காலை அவள் போய்விடுவாள் என்று நினைக்கிறான். அனால் மறுநாள் மாலை அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது அவள் இன்னும் அங்கேயே இருக்கிறாள். அன்றிரவும் மகிழ்ச்சியாகப் போகிறது. அடுத்த நாளாவது அவள் போய்விடுவாள் என்று நினக்கிறான். ஆனால் அவளோ போக மறுக்கிறாள். வீட்டைத் தலைகீழாக மாற்றுகிறாள். அவனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு, அவன் வீட்டில் இல்லை என்றும், அவனால் எங்கும் வரமுடியாது என்றும் பதிலளிக்கிறாள். செய்வதறியாது முழிக்கிறான் அவன். அவளிடம் நல்லவிதமாகப் பேசி வீட்டை விட்டு அனுப்ப முயல்கிறான். ஆனால் அவள் விடுவதாக இல்லை. போலீஸில் புகார் செய்கிறான், அவளுக்கு விஷம் கொடுக்க முயல்கிறான். அவள் எல்லாவற்றையும் திறமையாக சமாளிக்கிறாள். கடைசியில் மனம் வெறுத்துப் போய், வீட்டுச் சாவியை அவளிடம் தூக்கியெறிந்து, "இனி நீயே இந்த வீட்டில் இரு. நான் போகிறேன்" என்று வெளியேறிவிடுகிறான். உடனே அவள் தொலைபேசியில் ஒருவரை அழைத்து "வினோத், இன்னொரு வீடு கிடைத்துவிட்டது! நல்ல ஏரியா! உடனே விற்பதற்கு ஏற்பாடு செய்!" என்று சொல்லுகிறாள்.

இத்தோடு கதை முடிகிறது. பரவாயில்லை, இது ஒரு நல்ல knot உள்ள ஒரு கதை என்று தோன்றியது. இந்தக் கதைக்கான முடிவுரை இப்படியிருந்தது - "இந்த நவீன உலகத்தில் உயிர் வாழக் கற்றுக்கொள்ளும் பல தந்திரங்களில் ஒன்றைத்தான் இந்தக் கதாநாயகி கடைபிடிக்கிறாள். சிலருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி தரலாம். ஆனால் இதுதான் இன்றைய தினங்களின் யதார்த்தம்!"

முடிவுரை கொஞ்சம் இடித்தது! இந்தக் கதாநாயகி செய்தது உயிர் வாழ கற்றுக்கொள்ளும் தந்திரம் அல்ல. வசதியாக வாழக் கற்றுக்கொள்ளும் தந்திரம் இது! உயிர் வாழ்வதற்கு மூன்று வேளை சாப்பாடும் தங்க ஒரு இடமும் இருந்தால் போதுமே? இவள் செய்வதைப் பார்த்தால் பல வீடுகளை இந்த மாதிரி ஏமாற்றி வளைத்துப் போட்டிருப்பாள் போலிருக்கிறதே. சரி, இது ஒரு கதைதான் என்று விட்டுவிடலாமென்றால், "இதுதான் இன்றைய தினங்களின் யதார்த்தம்" என்று முடிவுரையில் இருக்கிறது. இந்த மாதிரிப் பெண்கள் சிலர் இருக்கலாம், ஆனால் அப்படி இருப்பது தான் இன்றைய யதார்த்தம் என்றெல்லாம் சொல்லுவது டூ மச்!!! யார் இப்படியெல்லாம் எழுதியிருப்பது என்று முன் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், எழுதியது சுஜாதா!!! என்னவாயிற்று இவருக்கு???

3 comments:

Ravindran Ganapathi said...

Yathartham ungalukku puriavillaiyo,

thara avargale, intha penin seitha seyalukkum, neengal vellaiyanin veedana Velinatil sendru, avanukku thevaiyanathai seithu pilaikku seyalukku ethu similarites therikiratha

தாரா said...

ரவிந்திர கணபதி அவர்களே,

என்ன ஒரு அருமையான ஒப்புமை! நான் இங்கே வெளிநாட்டில் வரி கட்டாமல், வெள்ளையனை ஏமாற்றி, அவனை அவன் வீடான வெளிநாட்டிலிருந்து விரட்டி விட்டிருந்தால் உங்களது ஒப்புமை 100% பொருத்தமாக இருந்திருக்கும் :-)

தாரா.

தாரா said...

Sivaji,

There was some confusion with my posting. It did not get through to thamizmanam. So I deleted it and re-posted it again yesterday. Your comments also got deleted. I am so sorry about it.

Thara.