Wednesday, January 30, 2008

கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப் பழமையான கேரளத்து ஓட்டு வீடு பாணியில் இருக்கிறது. ஆனால் மிகப் பெரிஈஈஈஈஈஈஈஈயது!. அதன் பழமையை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். அந்த அரண்மணையினுள் சென்றால், வெளியே வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. விருந்தாளிகள் அறை, நவராத்திரி மண்டபம், சமையல் அறை, சாப்பாட்டு அறை, மகாராணியின் ஒப்பனை அறை, அந்தபுரம் என்று ஏகப்பட்ட அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒரு பலகையில் அந்த அறையினைப் பற்றிய விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்கிறது. மலையாளத்திலும் இருந்ததென்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. ஒவ்வொரு அறையிலும் ஒரு ஊழியரும் நின்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். சுற்றுலாத் துறை இங்கே தன் வேலையை நன்றாகச் செய்திருக்கிறது. நுனுக்கமான மர வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. ஒரே பலா மரத்தில் செய்யப்பட்ட அழகான தூண், 64 மூலிகை மரங்களினால் செய்யப்பட்ட கட்டில், இன்றும் சரியான நேரம் காட்டிக்கொண்டிருக்கும் 300 வருட பழமையான கடிகாரம், மிக அரிய ஓவியங்கள் என்று இந்த அரண்மணையில் சுவாரசியமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. மர வேலைப்பாடுகள், வித விதமான விளக்குகள் என்று கேரளாவின் பாரம்பரியம் மொத்தமும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது.
பழமையைப் பாதுகாக்கிறோம் என்று, ஒரு விளக்கு, ஒரு மின் விசிறி கூட போடாமல் விட்டுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் வியர்த்து விறுவிறுத்து, எப்படா வெளியே போவோம் என்றாகிவிட்டது! ஒரு சின்ன அறிவுரை. காலை 9 மணிக்குத் திறக்கிறார்கள். அப்போதே சென்று பார்த்துவிடுங்கள். உச்சி வெயில் நேரத்தில் சென்றீர்கள் என்றால் சிரமப்படுவீர்கள்.

அடுத்து கோவளம் கடற்கரை. அங்கே விடுதியில் சற்று ஓய்வுக்குப் பின் கடற்கரை சென்றோம். 'கோவளம்' என்றாலே தென்னை மரத் தோட்டம் என்று அர்த்தமாம்! பாறைகளில் மோதும் கடல் அலைகள்...தென்னை மரங்கள், தூரத்திலிருந்த ஒரு ஐயப்பன் கோவிலில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த கதகளி சத்தம் என்று கேரளா மணம் வீசினாலும், அங்கே பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தான் திரிந்துகொண்டிருந்தார்கள். கடற்கரையை ஒட்டி ஒரு நீண்ட கடை வீதி இருக்கிறது. கடற்காற்றை வாங்கிக்கொண்டே அங்கே மெதுவாக நடைபோட்டால் நன்றாகப் பொழுது போகிறது. கடைகள் வைத்திருப்பதெல்லாம் வடநாட்டவர்கள். கடைகளில் இருப்பவையெல்லாம் ஸ்பென்சர் ப்ளாசாவில் கிடைக்கும் அதே யானைகள், சிலைகள், சால்வைகள், கம்பளிகள்! தேங்காயில் செய்யப்படும் பாரம்பரிய கேரள கைவினைப் பொருட்கள் அங்கே தென்படவில்லை. கரையை ஒட்டி நிறைய உணவகங்கள் இருந்தன. பாரம்பரிய கேரள உணவான மலபார் செம்மீன் கறி, மீன் மொய்லி,
மீன் பொளிச்சது(மீனை வாழை இலையில் சுற்றி மெல்லிய தீயில் சமைத்தது!) - இதையெல்லாம் ஒரு கை பார்த்தோம்!

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற் கரை என்றப் பெருமையைக் கொண்டிருக்கும் மெரீனா கடற் கரையை விட கோவளம் கடற் கரை பல மடங்கு சுத்தமாக இருந்தது. ஹம்ம்...ஒரு வேளை கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் இப்படித் தெரிகிறதோ? :-)

அவ்வளவுதான்...ஊர் சுத்துவதை இத்துடன் முடித்துக்கொண்டேன். அமெரிக்கா திரும்பிச் செல்ல இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. நாட்கள் ஓடியது தெரியவேயில்லை. ஒரு மென் சோகம் தொற்றிக்கொண்டது. ஒரு கடினமான பிரிவுக்கு ஆயத்தமானேன்...

இருங்க இருங்க...என் பயணங்கள் முடிந்தாலும், சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.

எனவே, தொடர்வேன்...

2 comments:

காட்டாறு said...

தாரா உங்க பதிவை இப்போ தான் வாசிக்கிறேன். ஒரு டூர் போன உணர்வு வந்தது உண்மை. எழுதுங்க!

குறளோவியம் said...

திற்பரப்பு அருவி அருமையான இடம்.
நீங்கள் பார்த்தீர்களா? எதற்கு கவலை. தமிழ் உடனிருக்கையில்.
பயணக்கட்டுரைக்கு நன்றி.