Thursday, January 24, 2008

கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6

முந்தையத் தொடர் பதிவு: மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5

ஒரு அதிகாலை வேளை, திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அம்மா அப்பாவுக்காக பிரத்தியேகமாக நானும் அக்காவும் சேர்ந்து திட்டமிட்ட பயணம் இது. "மாப்பிள்ளைகளும் வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்ன பெற்றோர்களிடம், "வேண்டுமானால் அவர்களுடன் நீங்கள் தனியாகப் போய்க்கொள்ளுங்கள்" என்றோம் நானும் அக்காவும்!

திருச்சியிலிருந்து மதுரை வரை நெடுஞ்சாலை மிக மோசமாக இருந்தது. ஒரு வழிச் சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் போலும். நெடுக வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு வருத்தம் என்னவென்றால், "Take Diversion", "Work In Progress", "Heavy Machine Crossing" போன்ற எச்சரிக்கை பலகைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆனால் அந்தப் பலகைகள் ஏதோ தனியார் நிறுவனத்துனுடையது என்று நினைக்கிறேன்.

மதுரை நோக்கிச் செல்லும் போது, பாறைகளினால் ஆன குன்றுகள் நிறையத் தெரிந்தன. சில குன்றுகள் வினோதமான வடிவில் இருந்தன. இந்தக் குன்றுகள் அமெரிக்காவில் இருந்திருந்தால், உடனே அதற்கு ஒரு பெயர் வைத்து, இணையதளம் ஒன்றை வடிவமைத்து, அந்தக் குன்றில் hiking trail அமைத்து அதை ஒரு சுற்றுலா தளமாக மாற்றியிருப்பார்கள்! :-)
மேலூர் தாண்டியபின் எங்குபார்த்தாலும் மு.க அழகிரியின் போஸ்ட்டர்கள். கிருஷ்ணாபுரத்தில் கணிமொழிக்கு வரவேற்பு வாசகங்கள் ஆங்காங்கு தென்பட்டன. கிருஷ்ணாபுரத்தில் அபூர்வ வடிவமைப்பில் பல சிலைகள் இருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட கணிமொழி அங்கே வந்ததாகவும் அப்பா சொன்னார்.

ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றைக் கடந்து சென்றோம். திருநல்வேலிக்கப்புறம் சாலையோரம் எங்கு பார்த்தாலும் வாழைத்தோப்புகளும் தென்னந்தோப்புகளும்! பச்சைப்பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. தூரத்தில் மேற்கு மலைத்தொடர் தெரிந்தது.

கன்னியாகுமரி வந்தாகிவிட்டது. விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, மதியம் நான்கு மணிக்கு, படகில் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லலாம் என்று ஆவலாகக் கடற்கரைக்குப் போனால், 3 மணிக்கே படகு சவாரி நிறுத்தப்பட்டுவிட்டது, மீண்டும் காலை 8 மணிக்குத்தான் என்றார்கள். "We missed the boat" என்று ஏமாற்றத்தைத் துடைத்துவிட்டு, கடற்கரையை நோட்டம் விட்டேன். விவேகானதர் மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் தெரிந்தன. விவேகானந்தர் மண்டபத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதனால் இப்போது என் முழு கவனமும் திருவள்ளுவர் சிலைமீது தான் இருந்தது. கடல் அலைகளுக்கு நடுவே வானுயர கம்பீரமாக எழுந்து நின்றது திருவள்ளுவர் சிலை. புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன்.

வரிசையாக பல வண்ணங்களில் படகுகள், மீண் வலைகள், பாரதிராஜா படத்தில் வருவது போல் கடற்கரையை ஒட்டிய ஒரு தேவாலயம், தென்னை மரங்கள் என்று கன்னியாகுமரி ஒரு எழில்மிகு ஊராகத் தெரிந்தது. சூரிய அஸ்தமத்தைப் பார்க்கலாமென்று காந்தி மண்டபம் சென்றோம். அங்கே ஒரு பெரிய மக்கள் கூட்டம் சூரிய அஸ்தமத்தைப் பார்க்க கிடைத்த இடத்திலெல்லாம் உட்கார்ந்திருந்தது. பெரும்பான்மையாக வட இந்தியர்கள், நிறைய வெளிநாட்டவர்கள் இருந்தார்கள். சிகப்புச் சூரியன் மெல்ல கீழே இறங்கிக்கொண்டிருந்தது. நானும் அக்காவும் ஒரு மதில் சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டோம். சூரியன் மெல்ல கீழே இறங்கி கடலுக்குள் சென்று மறைவதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகியது. நன்றாக திவ்யமாக அந்தக் காட்சியை கண்டுகளித்துவிட்டுத் திரும்பினால் இந்தப் பக்கம் நிலா வெளியே தலை நீட்டி வந்துகொண்டிருந்தது. ஆகா! எவ்வளவு அழகு இந்த இயற்கையில்! காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்!

அடுத்து கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழியிலெல்லாம் சிறு கடைகள். நிறைய சோழிகளாலான கைவினைப் பொருட்கள் இருந்தன. கோவிலை நெருங்குகையில் "கலைமகளே வருக" என்ற இனிமையானப் பாட்டு வரவேற்றது. உள்ளே போனால், அப்போது தான் அம்மனுக்கு சந்தியா காலத்துப் பூஜை மேள தாளத்துடன் செய்துகொண்டிருந்தார்கள். மற்றுமொரு கண்கொள்ளாக் காட்சி காணக் கிடைத்தது.
கோவிலுக்குப் பின்புறம் ஒரு பூங்கா இருந்தது. அங்கு சென்றபோது, மணி மாலை 7:30 இருக்கும். இருட்டிவிட்டிருந்தது. கோவிலுக்குப் பின்புறம் சென்ற நானும் அக்காவும் வாய் பிளந்து நின்றோம் கண்ணெதிரே தெரிந்ததைப் பார்த்து!!! Breath taking view என்பார்களே, அது இதுதான்! கன்னியா குமரி வந்ததன் "hight light" இந்தக் காட்சி தான் என்று சொல்லலாம். இருட்டில், நிலவொளியில் கடல் பளபளத்துக்கொண்டிருக்க, விவேகானந்தர் மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் அவற்றைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் மெல்லிய ஒளி விளக்கில் ஒளிர்ந்து, உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. கன்னியாகுமரி செல்லும் அனைவரும், இரவு இந்தக் காட்சியை கட்டாயம் பாருங்கள். It is really worth it. கோவிலுக்குப் பின்னால் இருக்கும் பூங்காவில் உள்ள மண்டபத்திலும், படிகட்டுகளிலும், மதில் சுவர்களிலும் மக்கள் உட்கார்ந்து இந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். கடல் காற்று வேறு அள்ளிக் கொண்டு போனது. எட்டு மணியளவில் விவேகாந்தர் மண்டபத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால் திருவள்ளுவர் மட்டும் தொடர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலை முதல் படகு சவாரியைப் பிடித்து திருவள்ளுவர் சிலை சென்றோம். மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்லும்போது காற்று பலமாக வீசியது. உள்ளிருக்கும் சுவர்களில் திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் எழுதியிருந்தால் வெளிநட்டவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமே?! மூன்று அடுக்குகள் ஏறிச் சென்றோம். முதல் தவிர மற்ற இரண்டு தளங்களிலும் சுவர்கள் வெறுமையாக இருந்தன. அவற்றியில் ஏதாவது படங்கள் அல்லது திருக்குறள் சம்மந்தப்பட்ட செய்திகள் ஆகியவற்றை பதிக்கலாம். திருவள்ளுவரின் பாதம் அழகாக இருந்தது. தொட்டு வணங்கினேன். இங்கேயும் நிறைய வட இந்தியர்கள் கும்பல் கும்பலாக வந்தார்கள். திருவள்ளுவரின் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். எனக்கு ஆச்சரியம். இவர்களுக்கு உண்மையிலேயே திருவள்ளுவரைப் பற்றித் தெரியுமா? அல்லது ஏதோ ஒரு சாமி சிலை என்று நினைத்து வணங்கிவிட்டுப் போகிறார்களா? சிலர் திருவள்ளுவரின் பாதத்தில் காதை வைத்து ஏதோ கேட்க முயற்சி செய்தார்கள். ஏதோ அங்கே ஓசை கேட்கும் என்று யாரோ சொன்னார்களாம். எனக்கு எதுவும் கேட்கவில்லை.

கன்னியாகுமரி உண்மையிலேயே ஒரு மிக அழகிய சுற்றுலா தளம். மூன்று கடல்கள் கலக்கும் இடம், இந்தியாவின் கடை கோடி, காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை - இப்படி பல சிறப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதென்றால் அது பெரிய விஷயம் தானே? இன்னும் கொஞ்சம் சுற்றுலாத் துறை சிரத்தை எடுத்து கன்னியா குமரியைப் பராமரித்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து கோவளம் கடற்கரை நோக்கிப் பயணம்...

தொடரும்...

3 comments:

துளசி கோபால் said...

அருமை தாரா.

நான் கன்னியாகுமரி போய்ப் பலவருசங்களாச்சு. அப்ப விவேகானந்தர் நினைவாலயம் எல்லாம் இல்லை.

உங்கள் பதிவு அங்கே மீண்டும் ஒருமுறை போய்வரும் ஆவலைத் தூண்டுகின்றது.

kabeer said...

Hi Thara..,

Basically i am from Nagercoil but i migrated to DUBAI since 1994 .,, i missed my home town a lot., Your blog remind my nostalgia.., Thanx

Agathiyan John Benedict said...

நல்ல பதிவுக்கு நன்றி.
திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு நேரடி இரயில் சேவை இருக்கும்போது, ஏன் பேருந்தில் சென்றீர்களோ தெரியவில்லை. இப்படி நேரடி இரயில் சேவை இருப்பதால், இந்தியா செல்லும் ஒவ்வொரு முறையும் கன்னியாகுமரி செல்வதென இருக்கிறேன்.