Friday, January 18, 2008

மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4

முந்தைய தொடர் பதிவுகள்:

சென்னையிலிருந்து தாரா - 1

சென்னையிலிருந்து தாரா - 2

திருச்சியிலிருந்து தாரா - 3

திருச்சியில் சில நாட்கள் ஒய்வுக்குப் பின், பந்தடித்தது போல் மீண்டும் சென்னையில்! என்ன செய்வது??? சென்னையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தாலும், செய்ய வேண்டிய வேலைகளும், பார்க்க வேண்டியவர்களும், வாங்க வேண்டியவைகளும் சென்னையில் தானே இருக்கின்றன?

'சிங்காரச் சென்னை', 'மெடிக்கல் மெக்கா' போன்ற பட்டங்களுக்கு சென்னை பொருந்தாவிட்டாலும், 'shopper's paradise' என்கிற பட்டத்திற்கு 100% பொருந்தும்! எத்தனை துணிக்கடைகள்? எத்தனை நகைக்கடைகள்? எத்தனை வகைகள்?! டி.நகரில் 'போத்தீஸ்' துணிக்கடைக்குச் சென்று எனக்கு மயக்கமே வந்துவிட்டது. 'துணிக்கடல்' என்று தான் சொல்லவேண்டும். மனிதர்களும் அங்கே கடல் அலை போல் வந்து மோதுகிறார்கள். பனகல் பார்க் வட்டாரம் மிகவும் ஜன நெருக்கடியாக இருக்கிறது. காரணம், சரவணா ஸ்டோர்ஸ், குமரன், நல்லி, சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி என்று பிரபலமான துணிக்கடைகள் அத்தனையும் அங்கே தான் இருக்கிறது. எல்லா துணிக்கடைக்காரர்களும் அங்கே தான் போட்டிப் போட்டுக்கொண்டு கடைத் தொடங்குகிறார்கள். சற்று அமைதியாக, குளுமையாக ஷாப்பிங் செய்யவேண்டுமானால் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்லலாம். 'சிட்டி சென்டர்', 'மாயா ஜால்' போன்ற இடங்களுக்கு இன்னும் போகவில்லை நான். 'பாஷ்மினா' வகை சால்வைகளை மக்கள் இப்போது அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் மெல்லிய வகை சால்வைகள் அவை. பல வண்ணங்களிலும், டிசைன்களிலும் இவற்றைக் கடைகளில் பார்க்கலாம். 200 ரூபாயிலிருந்து 5000 ருபாய் வரைக்கும் பல ரகங்கள் இருக்கின்றன. ஸ்பென்சரில் பேரம் பேசினால் 100 அல்லது 200 ருபாய் வரை குறைத்து வாங்கலாம்.

டிசைனர் புடவைகள் சமீப காலமாக மிகவும் பிரபலம். ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு எதிர்தார்ப்போல் 'மோக்க்ஷா' என்று ஒரு துணிக்கடையில் அழகான டிசைனர் புடவைகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல் அண்ணா நகரில் 'திவா' என்கிற கடையும் இருக்கிறது. வீட்டுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கவேண்டுமென்றால், 'கல்பத்ருமா', 'தார்' போன்ற கடைகள் இருக்கின்றன. 'பூம்புகார்', 'விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்' கடைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ''fashion jewellery' வாங்க, பாண்டி பஜாரில் 'ஜில் மில்' கடை! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!

ஒரு சூறாவளி ஷாப்பிங் செய்துவிட்டு, சென்னை சங்கமம் பார்க்கவேண்டுமென்று அடித்துப்பிடித்துக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு ஓடினேன். மாலை 5 மணி இருக்கும். பூங்காவின் வாசலில் ஒரு சில வாகனங்கள்...சிறு சலசலப்பு. பூங்காவினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் பாட்டுச் சத்தம் கேட்டது. இனிமையான தமிழ்ப் பாடல்கள்...திருக்குறள் காதில் விழுந்தது. பூங்காவின் மையத்தில் மேடை போட்டிருந்தது. மேடைக்கு முன் தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் சிலரும், மரத்தடிகளில் சிலரும் அமர்ந்திருந்தார்கள். மணி 5:10...சலசலப்பு அதிகரித்தது. கூட்டம் கூடத் தொடங்கியது. திடிரென்றுப் பார்த்தால் நிற்கக் கூட இடம் இல்லாத அளவு அவ்வளவு கூட்டம். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டுப் புறக் கலைகளைப் பார்க்க இவ்வளவு பேர் ஆர்வமாக வந்திருக்கிறார்களே என்று.



நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நையாண்டி மேளமும் உறுமி மேளமும். அதிரும் மேள இசையைக் கூட்டம் தலையசைத்து, தாளம்போட்டுக் கேட்டு ரசித்தது. அடுத்து கணீரென்ற குரலில் 'வந்தனம்' பாடினார் ஒரு பெரியவர். அப்பறம் கரகம். சுழன்று சுழன்று கரகம் ஆடியப் பெண்மணியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அப்பறம் 71 வயது பெரியவர் காவடி ஆடினார். காவடியில் இத்தனை சாகசங்கள் இருக்கிறதாவென்று ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் பறை!!! சூப்பர்!!! அடி தூள் கிளப்பிவிட்டார்கள்! இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் எனக்கே ஆட்டம் வந்திருக்கும். நரம்பெல்லாம் புடைக்கவைக்கும்படி இருந்தது பறை அடியும் ஆட்டமும். சென்னை சங்கமத்தில் ஒரு நிகழ்ச்சியையாவது பார்க்க முடிந்ததே என்கிற மன திருப்தியுடன் அங்கிருந்து அகன்றேன்.


அடுத்த நாள் புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட வேண்டுமென்று பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியை நோக்கி விரைந்தேன். கண்காட்சி 10 மணிக்கு என்று நினைத்து அங்கே சென்றால், 11 மணிக்கு தொடங்குகிறது என்றார்கள். ஒரு மணி நேரம் அங்கே காத்திருக்க அவகாசம் இல்லை எனக்கு என்பதால், சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு நடையைக் கட்டினேன். அங்கே என்னைக் கவர்ந்த ஒரு போஸ்டர் "இந்தியாவின் முதல் ம்யூசிகல் ATM". பணத்தை செலுத்திவிட்டு வேண்டிய இசையை குறுந்தட்டில் இறக்கிக் கொள்ளலாம்! இது சுவாரசியமான வசதியாகப் பட்டது எனக்கு.

தங்கியிருந்த இடத்திற்கு திரும்பச் செல்கையில், முதலமைச்சர் எங்கோ 3 மணிக்கு செல்கிறாராம். அதனால் போக்குவரத்தை கண்டபடி அங்கேயும் இங்கேயும் மாற்றிவிட்டதால், திக்கித் திணறி ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டி வருவதற்குள் உடம்பிலுள்ள தெம்பெல்லாம் வற்றிவிட்டது!!! திரும்பி என்கிட்டயா வந்தாய்? உனக்கு நல்லா வேண்டும் என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தது சென்னை!!!

அடுத்து நான் தஞ்சம் புகுந்தது மயிலாடுதுறையில் மாமியார் வீட்டில்!

தொடரும்...

4 comments:

துளசி கோபால் said...

//பாண்டி பஜாரில் 'ஜில் மில்' கடை! //

அட! ஜில்லு.

ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் அருமையான பெட் ஸ்ப்ரெட் கிடைக்குது.

வடக்கத்திக் கடைகள்

ILA (a) இளா said...

நல்ல பயணக்குறிப்புங்க. வேகமா போவுது

Anonymous said...

Hello Madam, I am an NRI and at present my wife is in Madras and she needs to buy some clothes (Chudithar, Fashion sarees, winter clothes, fashin jewellery and kids dresses). Could you please suggest me the best shops in Madras from your experience?

cheena (சீனா) said...

சென்னைலே அதிக ஆண்டுகள் வசித்திருக்கிறேன். இவ்வளவி செய்திகள் எனக்குத் தெரிய வில்லையே - சூறாவளி போன்று சுழன்று சுழன்று செய்தி சேகரித்து - சென்னையில் உள்ள அத்தனி கடைகளையும் ஒரு விண்டோ ஷாப்பிங்க் செய்து விட்டீர்களே !! வாழ்த்துகள்.