Tuesday, August 04, 2009

தமிழகப் பயணம் 2009 - 2

சென்ற பதிவில் என் அப்பாவின் உடல்நிலைக்காக வருந்தி பிரார்த்தனை செய்வதாக எழுதியிருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

இனி எமிரேட்ஸ் விமானத்தில்...பழைய நினைவுகளில் நான்...
அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்துவுடனேயே, அவருக்கு என்ன மாதிரி சிகிச்சை செய்யலாம் என்று நான், அக்கா மற்றும் அண்ணன்மார் கலந்து ஆலோசித்தோம். chemotherapy கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் தெளிவாகச் சொன்னேன். ஏனென்றால், அதன் பக்க விளைவுகள் கொடுமையானவை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் என் கணவரின் சித்தப்பா chemo வினால் மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு 60 வயது தான். அவராலேயே தாங்கமுடியவில்லையென்றால் 79 வயதான என் அப்பா அதனை எப்படித் தாங்குவார்? வாசிங்டனில் எனக்குத் தெரிந்த புற்று நோய் மருத்துவர்கள் இருவருடன் பேசினேன். அவர்கள் சொன்னது, chemo ஒரு நல்ல சிகிச்சைதான். 40 அல்லது 50 வயதான ஒரு நோயாளிக்கு அந்த சிகிச்சையினால் 5 வருடங்கள் வரை ஆயுள் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் அப்பாவுக்கு ஏற்கனவே 80 வயதாகிவிட்டதால் இன்னும் 6 மாதங்களோ ஒரு வருடமோதான் அவரால் இருக்க முடியும், அதுவும் chemo வின் பக்க விளைவுகளினால் அவரது 'quality of life' மிகவும் மலிவாகத் தான் இருக்கும் என்றார்கள். மற்றொரு மருத்துவர் மிக அழக்காகச் சொன்னார் "We try to treat the cancer, but not the patients" என்று. அதானல் chemo வேண்டவே வேண்டாம் என்பது என் தரப்பு வாதமாக இருந்தது.

ஆனால் அக்கா தனக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் பேசிப்பார்த்தாள். அதில் ஒருவர் இப்போது ஒரு புது விதமான மருந்தை chemo வில் உபயோகிக்கிறார்கள் என்றும், அதற்கு பக்க விளைவுகள் மிகவும் குறைவு, அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். அந்த மருந்தை கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் வெற்றிகரமாக உபயோகித்து வருகிறார்கள் என்றும், சென்னையில் மலர் மருத்துவமனையில் இதனை உபயோகிக்கிறார்கள் என்றும் சொல்லி, அந்த சென்னை மருத்துவரை சிபாரிசும் செய்தார். இந்த சிகிச்சை முறைக்கு folfox regimen combination chemo therapy என்று பெயராம். இதில் 'Avastin' என்கிற மருந்தை உபயோகிக்கிறார்கள். நான் ஏதோ பரீட்ச்சைக்குப் படிப்பது போல் இந்த சிகிச்சையைப் பற்றி இணையத்தில் மாங்கு மாங்கென்று படித்தேன்.

அக்கா முதலில் திருச்சி சென்றதும் சென்னையில் மலர் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்று அந்த மருத்துவரிடம் அலோசித்தாள். அவர் அப்பாவை பரிசோதனை செய்துவிட்டு, அவரது உடல்நிலை ஓரளவு தெம்பாகத்தான் இருக்கிறது. அதனால் இந்த சிகிச்சையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார். மறுநாள் மதியம் chemotherapy என்று முடிவும் ஆகிவிட்டது. அன்று இரவு கூட அக்காவிடம் மன்றாடினேன் chemo வேண்டாமென்று. ஆனால் அப்போது அப்பாவே ஒரு முடிவுடன் முயன்று பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

இந்த chemo சிகிச்சையை 2 வாரங்களுக்கு ஒரு முறை 6 மாதங்களுக்கு கொடுக்கவேண்டுமாம். ஒரு முறைக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். 'Avastin' என்கிற அந்த மருந்து மட்டும் 60,000 ரூபாயாம். கேட்டு முதலில் வாய் பிளந்து போனேன்! ஆனால் இதுபோல் அப்பாவுக்குச் சேவை சேய்யும் பாக்கியம்/சந்தர்ப்பம் எங்கள் நால்வருக்கும் இப்போதாவது கிடைத்ததே?!

முதல் chemo நடந்து முடிந்தது. நான் என்னென்னவோ பயங்கரமாக கற்பனை செய்திருந்தேன். ஆனால் ஒன்னுமே இல்லையாம். மூன்று மணி நேரம் ஒரு மருந்தை IV முலம் அப்பாவின் நரம்பில் ஏற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். இள வயது புற்று நோயாளிகள், காலையில் வந்து இந்த மருந்தை ஏற்றிக்கொண்டு மதியம் வேலைக்குச் சென்றுவிடுவார்களாம்!! சே இவ்வளவுதானா? என்று தோன்றியது.
இந்த முதல் chemo வின் போது நான் அமெரிக்காவில் தான் இருந்தேன். அக்காவும் அம்மாவும் அப்பாவுடன் இருந்தார்கள். நல்லவேளையாக அப்பாவுக்கு பக்கவிளைவுகள் எதுவுமே வரவில்லை. ஆனால் அது இரண்டாவது மூன்றாவது சிகிச்சைகளுக்கப்புறம் தான் தொடங்குமாம். இரண்டாவது சிகிச்சையின் போது நான் அப்பாவுடன் இருப்பேன். அடுத்து வரும் சிகிச்சைகளும் நல்லபடியாக முடிந்து அப்பா எங்களுடன் இன்னும் சில மாதங்கள் இருந்தால் மகிழ்ச்சியே...

எமிரேட்ஸ் சென்னை வந்திறங்கியது.

'Swine flu' சோதனை நடந்துகொண்டிருந்தது சென்னை விமான நிலையத்தில். விமானத்திலேயே ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதில் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குச் சமீபத்தில் சென்றிருக்கிறீர்களா என்கிற கேள்விக்கு "ஆமாம்" என்று எழுதியிருந்தேன். சரி மாட்டினோம். தனியாக அழைத்துச் சோதனை செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் சோதனை என்கிற பெயரில் முகமூடியுடன் உட்கார்ந்திருந்த நபர் (அவர் மருத்துவரா என்று தெரியவில்லை), என் முகத்தைக் கூட பார்க்காமல் அந்தப் படிவத்தில் சீல் குத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார். இது என்ன சொதனை என்று புரியவில்லை எனக்கு. அனால் சீக்கிரம் வெளியே விட்டதில் மகிழ்ச்சி :-)

அடுத்த ஆறு மணி நேர கார் பயணத்திற்குப் பிறகு ஒடிச்சென்று எங்கள் திருச்சி வீட்டின் கேட்டைத் திறந்த நான், வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்....

தொடரும்...

2 comments:

XIII said...

"ஆனால் இதுபோல் அப்பாவுக்குச் சேவை சேய்யும் பாக்கியம்/சந்தர்ப்பம் எங்கள் நால்வருக்கும் இப்போதாவது கிடைத்ததே?!"

- என் கண்களில் கண்ணீரை வரவைத்த வரிகள்.

உண்மை தான். சோதனையில் இவர்கள் விமான நிலையத்தில் காட்டும் கவனக்குறைவு எங்கு சென்று முடியப் போகிறதோ.

பத்மா அர்விந்த் said...

தாரா
உங்கள் தந்தைக்கு கீமோ தாங்கும் சக்தியை அளிக்க என் பிரார்த்தனைகள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

கீமோ ஒவ்வொரு வாரமும் தருகிறார்களா?