Monday, March 06, 2006

ஈவ் டீசிங் - என் அனுபவங்கள்

Eve Teasing Blog-a-thon பற்றிய சுட்டியை மதி அனுப்பியிருந்தார். என்னுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

'Eve teasing' என்கிற வார்த்தை வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே அதன் அனுபவங்களால் பல முறை வேதனை அடைந்திருக்கிறேன் தமிழ் நாட்டில் இருந்தபோது. கல்லூரி நாட்களில் என் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இடையே உள்ள ஆண்கள் விடுதியைத் தாண்டித்தான் ஒவ்வொரு நாளும் செல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் நானும், என்னைப் போல் பல மாணவிகளும் ஆண்கள் விடுதியைத் தாண்டிப் போகும்போது மாணவர்கள் எங்கள் பெயர்களைச் சொல்லி கூக்குரலிடுவார்கள், விசில் அடிப்பார்கள். அந்த இடத்தைக் கடந்து செல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். மாணவிகளெல்லாம் செர்ந்து வார இறுதிகளில் எப்போதாவது சினிமாவுக்கோ, உணவகங்களுக்கு செல்வோம். அங்கேயும் இதே கூக்குரல்களும், கேலிப்பேச்சும், கோணல் பார்வைகளும் பின்தொடரும். பெண்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், சுதந்திரமாக கல்லூரி வளாகங்களில் வளையவரும் சூழ்நிலை அவ்வளவாக அப்போது இருக்கவில்லை.

பின்னர் நான் சென்னையில் கணிணிப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்தபோது நடந்த சில சம்பவங்கள் இன்னும் என் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. தினசரி மைலாப்பூரிலிருந்து டி நகருக்கு பல்லவன் பேருந்தில் பயணம் செய்யவேண்டும். கூட்டம் நிரம்பி வழியும் அந்தப் பேருந்துகளில் ஆண்களுக்கு மத்தியில் முட்டிக்கொண்டும் இடித்துக்கொண்டும் பயணம் செய்வதென்னவோ பழகிவிட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் ஒரு ஆள் வரம்பு மீறி என்னிடம் நடந்துகொண்டான். சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தும் அளவு அன்று எனக்குத் தைரியம் இல்லை. கோபமும் அழுகையும், அருவெறுப்பும், இயலாமையுமாக அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் உடனே இறங்கி அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதேன்.

மற்றுமொரு நாளில், அதே சென்னையில் ஒரு நாள் பயிற்சி முடிய இரவு 9 மணியாகிவிட்டது. டி நகரிலிருந்து மைலாப்பூர் செல்வதற்கு தவறானப் பேருந்தில் தெரியாமல் ஏறிவிட, அது எழும்பூருக்குச் சென்றுவிட்டது. தவறை உணர்ந்து எழும்பூரில் ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். அது எந்த இடம் என்று கூட சரியாகத் தெரியவில்லை. சற்றுத் தள்ளி இருந்த சில பெட்டிக்கடைகளைத் தவிர வேறு ஆள் நடமாட்டம் இல்லை. அடுத்து அங்கே வரும் பேருந்தில் ஏறிவிடலாம் என்று காத்திருந்தேன். அப்போது பைக்கில் ஒரு இளைஞன் வந்தான். பைக்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்து "ஹலோ, நீங்க எங்கே போகனும்?" என்றான். நான் "மைலப்பூர்" என்றேன். "நானும் அங்கதான் போறேன், வாங்க உங்களை அங்கே ட்ராப் பன்னிவிடுகிறேன்" என்றான். எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது. "பரவாயில்லை, நானே போய்க்கொள்கிறேன்" என்றேன். மறுபடியும் அவன் "நீங்க என்னைத் தவறாக நினைக்கறீங்கன்னு நினைக்கிறேன். நான் டீசன்டான ஆள்தான். உங்களுக்கு உதவனும்கிற எண்ணத்தோடதான் கேட்டேன், பயப்படாம வாங்க" என்றான். நான் பேச மறுத்து பயத்தில் உறைந்துபோய் நிற்க, அவனும் விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தான். நல்ல வெளையாக ஒரு பேருந்து வந்து நின்றது. அது எங்கே போகிறது என்று கூடப் பார்க்காமல், அந்த இடத்திலிருந்து அகன்றால் போது என்று ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன். வீட்டிற்குச் சென்று தோழிகளிடம் நடந்ததைச் சொல்லி வழக்கம்போல் அழுதேன்!

ஒரு முறை சினிமா கொட்டகையில் குடித்துவிட்டு என்னருகில் வந்தமர்ந்த ஒருவன், கேள்வி மேல் கேள்விகேட்டு என்னை வம்பில் இழுக்க, பாதி சினிமாவில் எழுந்து வெளியே சென்றுவிட்ட அனுபவமும் உண்டு.

சரிகா ஷா போன்ற உயிர் துறந்த பெண்களைப் பார்க்கும்போது என்னுடைய அனுபவங்கள் மிகச் சாதாரணமானவையே. ஆனால் அன்று என் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் குலைத்தவை. இந்த ஈவ் டீசிங் இந்தியாவில் மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது என்றாலும், மற்ற நாடுகளில் "sexual harrassment" என்று வேறு விதமாக அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றிய சில சுற்றுலா பதிப்புகளில் ஈவ் டீசிங் பற்றி எச்சரிக்கைக் கூட இருக்கிறதாம்! எவ்வளவு பெரிய மானக்கேடு!

சட்டம், மாறுவேட போலீஸ் போன்றவற்றால் ஈவ் டீசிங் தொல்லைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன, இருந்தாலும் சினிமாக்களில் ஈவ் டீசிங் காட்சிகளை படம் போட்டு வண்ணமயமாகக் காட்டாமல் இருந்தால் இன்னும் குறையும் என்று நம்புகிறேன்.

1 comment:

krishjapan said...

Whenever I read an article on eve teasing I feel ashamed of being a man. Sorry madam...