Wednesday, August 24, 2005

K-mart! நல்ல K-mart!

Image Hosted by Your Image Link
கல்லூரிப் படிபெல்லாம் முடிந்து பச்சை அட்டை கிடைத்து, ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தபோது(அப்போது எனக்குத் திருமணம் ஆகவில்லை), மேலே படிப்பதா வேலைக்குப் போவதா என்று குழப்பமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வரும் வரை அக்கா வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்க வேண்டாமென்று பகுதி நேர வேலைக்கு, McDonalds, Pizza Hut, Walmart, K-mart போன்ற இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஒரே வாரத்தில் K-mart இல் வேலை கிடைத்தது. எனக்கு ஒரே சந்தோஷம். எனக்குக் கிடைத்த முதல் வேலை அது! சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $5.25!!! அக்காவும் மாமாவும் "இந்த வேலை உனக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கினால் தான் பிற்காலத்தில் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும்" என்றுச் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

முதல் நாள் சாமி கும்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினேன். அப்போது என்னிடம் கார் இல்லாததால், அக்கா தான் என்னை K-mart அழைத்துச் சென்றாள். நான் அமெரிக்கா வந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்ததால், இன்னும் அமெரிக்கர்களின் பேச்சு வழக்கு சரிவர புரியாத நிலையில் தான் அப்போது இருந்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் மானேஜர், ஒரு சிகப்பு நிற மேலங்கியை எனக்குக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார். அந்தச் சட்டையில் இருந்த ஒரு அடையாள அட்டையில் என்னுடைய பெயரும், "Dedicated to Customer Service" என்ற வாக்கியமும் இருந்தது. 'Sporting Goods' என்ற பகுதியில் எனக்கு வேலை என்று சொல்லி அங்கே கூட்டிக் கொண்டு போனார் மானேஜர். "இந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத் தேவையான உதவியை நீ செய்ய வேண்டும்" என்றார். அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களைப் பார்த்தேன். மீன் பிடிப்பதற்காக உபயோகப் படுத்தும் பொருட்கள், camping பொருட்கள், உடற் பயிற்சி சாதனங்கள் - இவற்றில் பெரும்பான்மையானவற்றை நான் முன்பு பார்த்தது கூட இல்லை! குழம்பிப்போய் நின்ற என்னைப் பார்த்துப் ஆறுதலாகப் புன்னகைத்த மானேஜர், "கவலைப்படாதே, உனக்குப் பயிற்சி அளிப்பது எங்கள் கடமை" என்று சொல்லிவிட்டு, அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களின் பட்டியலை என்னிடம் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகே எனக்கு உயிர் வந்தது. பல அமெரிக்க வழக்கவார்த்தைகள் எனக்கு முதலில் புரியவே இல்லை. உதாரணத்திற்கு ஒரு முறை மானேஜர், "Can you bring a buggy?" என்றார். "buggy" என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அங்கே வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டபோதுதான் தெரிய வந்தது அது தள்ளு வண்டி(shopping cart) என்று! இப்படி தட்டுத் தடுமாறி வேலைகளையும் பேச்சு வழக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். K-mart மூடும் நேரம் இரவு 10 மணி. 9:45 மணிக்கு கடை மூட இன்னும் 15 நிமிடங்களே இருக்கிறதென்று ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும். ஒரு முறை என்னை அறிவிக்கச் சொன்னார்கள். நான் ஒலிபெருக்கியிலெல்லாம் பேசியதே இல்லை! எனக்கு பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது!! அறிவிப்பை ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு, பல முறை பேசிப்பார்த்துகொண்டு ஒரு வழியாக ஒலிபெருக்கியில் அறிவிப்பைச் செய்தேன்! "Your Attention K-mart shoppers! K-mart will be closed in about 15 minutes. Please bring your final purchases to the cash register. Thankyou for shopping at K-mart" - இதுதான் நான் முதல் முதலில் ஒலிபெருக்கியில் பெசியது. நான் பேசி முடித்த அடுத்த நிமிடம் மானேஜர் அங்கு வந்து என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

எனக்குப் பிடிக்காத வேலை காஷ் ரெஜிஸ்டர்(Cash Register). நீண்ட வரிசையாக நிற்கும் கஸ்டமர்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். எல்லாரும் அவசரத்தில் இருப்பார்கள். அப்போது விலை போடுவதில் ஏதாவது பிழை செய்துவிட்டால் அவ்வளவுதான்...தோலைந்தேன்! பிலு பிலு என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். கிருஸ்துமஸ், தாங்ஸ் கிவிங் போன்ற விடுமுறை காலங்களில் அலைமோதும் கூட்டங்களைப் பார்த்தாலே எனக்கு மூச்சு முட்டும். நல்ல வேலையாக என் பயத்தை புரிந்துகொண்ட மானேஜர், பெரும்பாலும் என்னை காஷ் ரெஜிஸ்டருக்கு அழைப்பதில்லை. ஷெல்பில் இருக்கும் பொருட்களை ஒழுங்குப் படுத்துவது, கஸ்டமர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக்கொடுப்பது, தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்பவர்களுக்கு விளக்கம் தருவது போன்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். ஒரே ஒரு சிரமம் என்னவென்றால், எப்பொழுதும் நின்று கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும்.நடுவில் 10 நிமிடங்கள் இடைவேளை இருக்கும். அப்போதுதான் சிறிது நேரம் உட்காரமுடியும். இரவு 10 மணிக்கு K-mart மூடியவுடன் களைப்பாக வெளியே வரும்போது அக்காவும் அம்மாவும் காரில் காத்துக்கொண்டிருப்பார்கள். நான் பசியுடன் இருப்பேனென்று சாப்பாடும் கொண்டுவந்திருப்பார்கள்! நானாவது பரவாயில்லை பகுதி நேரமாக 5 மணி நேரங்கள் தான் வேலை செய்தேன். சிலர் முழு நேரமாக 10 மணி நேரங்கள் வேலை செய்தார்கள். ஒரு பெண்மனி காலை 5 மணி நேரம் K-mart இல் வேலை செய்துவிட்டு, அடுத்து 5 மணி நேரங்கள் ஒரு உணவகத்தில் வேலை செய்தார். ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டபோது, "என்னுடைய குழந்தைகளும் அவர்களுடைய பள்ளித் தோழர்களைப் போல நூறு டாலர் ஷ¥க்கள் அணிய வேண்டும். அதனால்தான் இந்த சிரமமெல்லாம்" என்று சொன்னார். இப்படி நலிவுற்றவர்கள், பொழுது போவதற்காக வேலைக்கு வரும் வசதியானவர்கள், பள்ளி, கல்லூரி விடுமுறைகளின் போது அடுத்த செமெஸ்டருக்கு பணம் சேமிக்கும் இளைஞர்கள் - இப்படி பலதரப்பட்டவர்கள் அங்கே வேலை செய்தார்கள். எந்தவித வேலையையும் தரம் தாழ்த்திப் பார்க்காத அமெரிக்கர்களின் நோக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம்ம ஊரில் தான் எத்தனை பாகுபாடு! ஒரு முறை கடையில் ஒரு குழந்தை ஏதோ ஒரு கண்ணாடிப் பொருளை உடைத்துவிட, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளைக் நான் கூட்டி அள்ளிக்கொண்டிருந்ததை என் அம்மா பார்த்துவிட்டார். அவ்வளவுதான்! 'நான் என் பொண்ணை எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்படி தரையைக் கூட்டி அள்ளுவதைப் பார்க்கவா?' என்று புலம்பித் தள்ளிவிட்டார்கள்! மற்றோரு உறவினர், 'இன்ஜினீரிங்கெல்லாம் படிச்சிட்டு இங்க போய் எதுக்கு வெலை செய்யற?' என்று இளக்காரமாகக் கேட்டார். உண்மையிலேயே அங்கே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வேலை செய்துகொண்டிருந்தேன் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பிருக்கவில்லை.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சம்பள நாள்! என்னுடைய முதல் வாரச் சம்பளம் $115.00!!! அந்தக் காசோலையைக் கையில் வாங்கியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அந்தக் காசொலையின் நகலை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு ஆசை ஆசையாக அடைகாத்து வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியப் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்தபோது ரொமபப் பெருமையாக இருந்தது. இரண்டு மாதங்கள் K-mart இல் வேலை செய்தேன். பிறகு ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலைக்கிடைத்ததால் K-mart வேலையை விட்டுவிட்டேன். அந்த மென்பொருள் கம்பெனியின் நேர்முகத்தேர்வின் போது, ஒரு மானேஜர் என்னை "கஸ்டமர் சர்வீசில் உங்களின் அனுபவத்தை எப்படி மதிப்பிடுவீர்கள் 1 to 10 என்ற அளவு கோளில்?" என்று கேட்டார். நான் சற்று யோசித்து "7" என்றேன். "எப்படிப்பட்ட அனுபவம் அது?" என்று மறுபடியும் அவர் கேட்டபோது, "நான் K-mart இல் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். பல கஸ்டமர்களுடன் பழகும் வாய்ப்பும் அனுபவமும் கிடைத்தது. கஸ்டமர்களின் எதிர்பார்ப்புகள், நாம் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவைகளை நன்றாகக் கற்றுக்கொண்டேன். நான் அணிந்திருந்த மேலங்கியில் உள்ள பாட்ஜில் 'Dedicated to Customer Service' என்று எழுதியிருந்தது. அதற்கு உண்மையாக நடந்துகொண்டேன்" என்று சொல்ல, அந்த மானேஜர் "K-mart இல் வேலை செய்தீர்களா? அப்படியென்றால் பத்துக்கு பத்து மதிப்பெண்களே கொடுக்கலாமே!" என்று சொன்னார். தினமும் கஸ்டமர்களிடம் பேசி அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதன்படி மென்பொருள் உருவாக்கும் அந்தக் கம்பெனியில் எனக்கு வேலைக் கிடைத்ததற்கு என்னுடைய K-mart அனுபவம் ஒரு முக்கிய காரணம் என்று நான் வலுவாக நம்புகிறேன். அதன் பிறகு மென்பொருள் பொறியியல் என் career ஆனது.

2001, 2002 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் தடாலடியாக கீழிறங்கியபோது, ஆறு மாதங்கள் நானும் என் கணவரும் வேலையில்லாமல் இருந்தோம். முதல் மூன்று மாதங்கள் நம்பிக்கையுடன் வேலைத்தேடினேன். கிடைக்கவேயில்லை. பிறகு சேமிப்பில் இருந்த பணமெல்லாம் வெகு விரைவாகக் கரையத் தொடங்கியதும், மறுபடியும் K-mart, Walmart, McDonalds போன்றவற்றில் விண்ணப்பிக்கலாம் என்றால் ஏனோ அப்போது மனம் கேட்கவில்லை. நம்ம ஊர் ரத்தம் நண்பர்களெல்லாம் இளக்காரமாக நினைப்பார்களோ என்று யோசிக்க வைத்தது. அப்போது என்னுடைய மாமா "உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை உலுக்கி நிமிர்ந்து உட்காரவைத்தன. இனி எதற்கும் கவலைப்படக்கூடாதென்று விண்ணப்பங்களை தயார் செய்துகொண்டிருக்கையில் மீண்டும் ஒரு மென்பொருள் கம்பெனியிலேயே வேலைக்கிடைத்தது.

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த K-mart அலபாமாவில் உள்ளது. சென்ற மாதம் அலபாமா சென்றிருந்தபோது, வலைப்பதிவில் போட புகைப்படம் எடுக்கலாம் என்று K-mart பக்கம் கிளம்பியபோதுதான் அக்கா சொன்னாள், அந்த K-mart மூடப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று! வருத்தமாக இருந்தது.

33 comments:

-/பெயரிலி. said...

சரளமான நடையிலே விபரமான பதிவு.

SnackDragon said...

நல்ல அனுபவத்தைச் சொல்லும் பதிவு தாரா. முதல் வேலை அனுபவங்கள் மறக்கமுடியாதனதான் .படித்தவுடன் நான் கூட முதல் வேலை பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்.

Boston Bala said...

சமீப காலங்களில் இவ்வளவு அருமையான பதிவை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ரொம்பப் பயனுள்ள குறிப்பு.

SnackDragon said...

//அப்போது என்னுடைய மாமா "உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார்.//

மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார்.

தாரா said...

பெயரிலி, கார்த்திக், பாலா - மிக்க நன்றி!

தாரா.

Anonymous said...

அமெரிக்காவில் உங்களது அனுபவம் நன்றாக ஆரம்பித்து உள்ளது.
நமக்கு இது வெளிநாடு நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
வாழ்த்துகள்!!!

துளசி கோபால் said...

நல்ல பதிவு தாரா.

ம்ம்ம்ம்ம்ம் வாழ்க்கை முழுதும் கற்றல்தானே?

என்றும் அன்புடன்,
துளசி.

Arun Vaidyanathan said...

Super post...An eye opener thru experiences!

Suresh said...

நல்ல பதிவு தாரா.

பத்மா அர்விந்த் said...

தாரா
நல்ல பதிவு. இங்கே வரும் மாணவர்கள் முன்பு உணவகங்கள், gas stations முதலியவற்றில் வேலை பார்த்திருக்கிறார்கள். இது போன்றவை பலதரப்பட்ட மனிதர்களையும் அறீமுகப்படுத்துவதோடு, நல்ல பொறுமையையும் தரும். அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Anonymous said...

Oru chinna santegam....Thappa nenaichukatheenga..oru curiosity than..

America varathukku munnadiye eppadi neenga Green card vangineenga...

Ram

Anonymous said...

//America varathukku munnadiye eppadi neenga Green card vangineenga...//

romba mukiyam

Anonymous said...

//romba mukiyam
EarthLink காரரே உங்களுக்கு என்ன இதில் கஷ்டம் ?

Ramya Nageswaran said...

நன்றாக எழுதியிருக்கீங்க, தாரா..அமெரிக்காவில் நான் முதலில் பார்த்த வேலை ஞாபகம் வந்தது.

தாரா said...

சரி...எனக்கு க்ரீன் கார்ட் கிடைத்த கதையை எழுதிடவேண்டியதுதான்!

என்னோட அக்கா இங்கே அமெரிக்க குடியுரிமை வாங்கியிருந்த ஒரு தமிழரை திருமணம் செய்துகொண்டாள். பிறகு அவள் குடியுரிமை வாங்கியபிறகு, என்னுடைய பெற்றோர்களுக்கு க்ரீன் கார்ட் வின்னப்பித்தாள். அவர்களுக்கு க்ரீன் கார்ட் வந்தபிறகு எனக்கு வின்னப்பித்தார்கள். அப்போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி முடித்து இரண்டாண்டுகள் கழித்து எனக்கு இமிக்ரேஷன் விசா கிடைத்தது - இது கிட்டத்தட்ட ஒரு unofficial க்ரீன் கார்ட் மாதிரி தானே? விசா கிடைத்தவுடன் நான் அமெரிக்கா வந்தேன். விமான நிலையத்திலேயே என் பாஸ்போர்ட்டில் "Permanent Resident" என்று குத்தி தான் உள்ளே விட்டார்கள். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து க்ரீன் கார்ட் தபாலில் வந்தது.

தாரா

Anonymous said...

ஒரு குஜராத்தி/பஞ்ஞாபி குடும்ப கதையைக் கேட்டது போலிருந்தது.

;}

-/சுடலை மாடன்/- said...

தாரா,

நல்ல பதிவு, அருமையான விவரிப்பு.

நன்றி - சொ. சங்கரபாண்டி

தாரா said...

துளசியக்கா, பாண்டி, அருண், சுரேஷ் செல்வா,பத்மா, ராம், ரம்யா, டி ராஜ், சங்கரபாண்டி - மிக்க நன்றி!

தாரா.

Ganesh Gopalasubramanian said...

தாரா !!! நல்ல பதிவு...

// 'இன்ஜினீரிங்கெல்லாம் படிச்சிட்டு இங்க போய் எதுக்கு வெலை செய்யற?' என்று இளக்காரமாகக் கேட்டார். //
இது நம்மவருக்கே உண்டான பெருமிதம். அதை ஒன்றும் செய்ய முடியாது

// ஒவ்வொரு வியாழக்கிழமையும் சம்பள நாள்! என்னுடைய முதல் வாரச் சம்பளம் $115.00!!! அந்தக் காசோலையைக் கையில் வாங்கியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! //
என் முதல் மாத சம்பளம் ரூ2330/- அதை கையில் வாங்கியவுடன் கை நடுங்கியது. அதைப் பார்த்த அக்கவுண்டண்ட் என் கையைப் பற்றி வெகு ஜாக்கிரதையாக என்னிடம் பணத்தை புன்னகையுடன் ஒப்படைத்தார். இன்று கிட்டதட்ட அதை விட பத்து மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறேன் என்றைக்குமே அந்த நடுக்கம் வந்ததில்லை இனியும் வரப் போவதுமில்லை.

// உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார். //
மாமாவுக்கு என் சார்பில ஒரு 'ஓ' போடுங்க

" அந்த K-mart மூடப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று! "
ஒரு வேளை நீங்க வேலை செய்யலைன்னு மூடிட்டாங்க போல :-(

எம்.கே.குமார் said...

முதல் வேலை, முதல் சம்பளம், முதல் சந்தேகம் என்று பல ஆட்டோகிராஃப்கள்.

நன்றி உங்களது பதிவிற்கு.

எம்.கே.

rv said...

தாரா அவர்களே,
ரொம்ப நல்ல பதிவு..

உங்கள் மாமா சொன்னது ரொம்ப சரி. நம் ஊரில் இருக்கும் இந்த வேற்றுமையினால்தான் பலரும் வேலையில்லைன்னு சொல்லிகொண்டு திரிகிறார்கள்.

ஒரு வேலையில் சேர்ந்தவுடனேயே பலவாயிரம் ரூபாய் சம்பளம், கார், வீடு வேண்டும் என்றால் எல்லாருக்கும் நடக்கிற காரியமா, என்ன?

kirukan said...

K-mart S-mart

Anonymous said...

Excellent article.Keep it up.

Anonymous said...

Excellent Narration of your Experience. Keep it up!!!
GS

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்ல பதிவு.

//அப்போது என்னுடைய மாமா "உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார்.//

Well said.

இளங்கோ-டிசே said...

தாரா, அனுபவங்களினூடு நல்லதொரு பதிவு.

தாரா said...

கோ.கணேஷ், எம்.கே. குமார், ராமனாதன், கிறுக்கன், ஷ்ரேயா, டி சே தமிழன், காயத்ரி மற்றும் அன்னானிமஸ் எல்லாருக்கும் மிக்க நன்றி!

தாரா.

Anonymous said...

அற்புதமான பதிவு. மிகவும் ரசித்தேன்.

Mey said...

Inspiring and thought provoking post

Unknown said...

Good post

குமரன் (Kumaran) said...

Good Posting....

Vassan said...

கிடைக்கும் சொற்ப நேரத்திலும் தமிழ்பதிவுகளை படிக்க ஆலாய் பறப்பதிற்கு அர்த்தத்தை கொடுக்கின்றன, இது போன்ற பதிவுகள். மிக்க நன்றி.

இளக்காரமாய் பார்ப்பது பல தெற்காசியர்களுக்கு இயல்பானது. p-up truck கும் ஓட்டும் என்னை, தவிர்க்க பார்த்த தெற்காசியர்கள் உண்டு ;)

Unknown said...

Man there is alot of comment spam I have noticed. Is there any way to remove it from the blogs?