Thursday, April 21, 2005

சில கவிதை வரிகளில் ஒரு சிறிய பாடம்...

எண்ணக் குமிழ்கள் வலைப் பதிவை இன்று பார்த்தபோதுதான் இது 'கவிதை மாதம்' என்று தெரிய வந்தது. இது தெரியாமலேயே, சில நாட்களுக்கு முன் ஒரு கவிதையை எழுதி கையை சுட்டுக் கொண்டேன் தெரியுமா? Shirley Chrisholm இன் quotation ஒன்றை படிக்க நேர்ந்த போது, அதை அப்படியே தமிழில் ஒரு புதுக் கவிதை மாதிரி எழுதினால் என்ன என்று தோன்றவே, கட கடவென்று சில வரிகள் எழுதினேன். எழுதும்போதே தெரிந்தது கவிதை சரியில்லை என்று. சரி பிறகு சில மாற்றங்கள் செய்து சீர் படுத்தலாம் என்று நினைத்துக்கொண்டு அதை என் கணவருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அவர் சும்மா இருக்க முடியாமல் இன்னொரு நண்பருக்கு அனுப்பி அவருடைய கருத்தைக் கேட்க, அந்த நண்பர் "கேணத்தனமான, அர்த்தமற்ற கவிதை" என்று பின்னூட்டம் கொடுக்க, எனக்கு முகத்தைக் கொண்டுபோய் எங்கே வைத்துக்கொள்வதென்றே தெரியவில்லை! சரி இனி கவிதை எல்லாம் எழுதி risk எடுக்கக் கூடாது என்று அன்றே முடிவுசெய்துவிட்டேன். இந்த சம்பவம் கவிதை மாதத்தில்நடந்தது தற்செயலான ஒன்று!

Charles Buckowski எழுதிய 'So you want to be a writer' கவிதைக்கான சுட்டியை சுந்தரமூர்த்தி வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றிகள் பல. படிப்பதற்கு ஒரு கவிதை போல் இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையில் சில வரிகள் எனக்காகவே எழுதப்பட்டவை போல் இருக்கிறது. ஒரு சிறிய பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.

//if it doesn't come bursting out of you
in spite of everything,
don't do it.
unless it comes unasked out of your
heart and your mind and your mouth
and your gut,
don't do it.
if you have to sit for hours
staring at your computer screen
or hunched over your
typewriter
searching for words,
don't do it.//

ஆரமபத்தில் வாரம் ஒரு வலைப்பதிவாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை. என்ன எழுதுவது, எதைப் பற்றி எழுதுவதென்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது எழுதவேண்டும் என்கிற தவிப்பும், தொடர்ந்து எழுதாவிட்டால் வலைப்பூ உலகம் என்னை மறந்துவிடுமே என்கிற பயமும் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் கணிணியின் முன் அமர்ந்து ஏதாவது இன்று எழுதியே ஆகவேண்டும் என்று என் சிந்தனையை விரட்டியிருக்கிறேன். ம்ஹ¥ம்! கதை பெயரவில்லை. Charles Buckowski சொல்வதைப் பார்த்தால், மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் தானாகவே ஏதாவது எழுதத் தோன்றும் வரை, வலைப்பதிவுகளில் கொட்டிக் கிடக்கும் பல நல்ல சுவையான, சூடான விசயங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டு அமைதியாக காத்திருப்பது நல்லதென்று புரிகிறது.

No comments: