Friday, March 12, 2010

மற்றொரு பயணம், வேறொரு திருப்புமுனை 4 (பெயர் வைப்பதில் கலகம்)

நண்பர் 3 யிடம் கருத்து கேட்டபோது, "ஏன் நவீனமாகப் பெயர் வைக்கவேண்டும்? “முனியம்மா” அல்லது “முனி” என்று பெயர் வைத்தால் என்னவாம்?” என்று கேட்டார்.

இது சற்று இடக்காக இருந்தது எனக்கு.


நான்: ”முனியம்மா என்று பெயர் வைப்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் நவீனத்தை நோக்கி, தமிழை விட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் எப்படி இதனை எதிர்பார்ப்பது? அதற்காகத்தான் நவீனம் என்கிற பெயரில் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல் சில புதிய தமிழ்ப் பெயர்களை எடுத்துக் காட்டி அவர்களை திசை திருப்ப வேண்டும் என்கிறேன் நான். தமிழிலும் நவீனம் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். குறைந்தபட்சம் வடமொழிப் பெயர்களின் ஊடுருவலையாவது தடுக்கலாம்.”


நண்பர் 3:
முனியம்மா என்று நான் சொன்னது ஒரு கருத்துதான்.
1. நான் கண்டிப்பாக இதுமாதிரியான பெயர்களைத்தான் வைக்க வேண்டுமென்று வரையறுக்கப் பட்ட கொள்கையைக் கொண்டிருக்கவில்லை.
பெயரிடுவதில் என்னுடைய கொள்கையே வெறுமனே ஒருவகையான கலகம் அல்லது எதிர்ப்புரட்சியே. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய சொந்தப் பெயரை நான் விரும்பியபடி வைத்துப் புரட்சி செய்தால் பெருமை கொள்வேனே தவிர, என்னுடைய குழந்தையின் பெயரை வைத்தல்ல. குழந்தை பெரியவளா(னா)னதும் நம் அப்பன்/அம்மை நமக்கு இப்படியொரு பெயரை வைத்தார்கள் என்றெண்ணினால் எல்லாப் புரட்சியும் நில்லாது விழும்.
தமிழ்ப் பெயர் வைப்பதில் திருமாவளவன் ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டார். அதாவது, தலித்துகள் எத்தனையோ பேர், காந்தி, அண்ணா, கருணாநிதி, ஜீவா, காமராஜ், இந்திரா, அம்பேத்கார் என்று தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தலித்தல்லாத சாதியினர் அம்பேத்கார் மற்றும் தலித் தலைவர்கள் பெயர்களைத் தவிர்க்கிறார்கள் என்று அவர் சொன்ன உண்மை என்னை உரைத்தது. முனியம்மா என்ற பெயரை வைக்க வேண்டுமென்று நினைத்ததும் அந்த அடிப்படையில்தான். சமஸ்கிருதப் பெயரிலோ அல்லது ஆங்கிலப் பெயரிலோ கூட எனக்கு வெறுப்பெல்லாமில்லை. ஆனால் தமிழ்ப் பெயர்களை இழிவு படுத்துவது போல் சிறிதும் பகுத்தறிவின்றி சமஸ்கிருதப் பெயர்கள் அளவுக்கு அதிகமாகச் சூட்டப் படுவதையே விமர்சிக்கிறேன். பெரியார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றிக் கலகம் செய்திருக்கிறார். அக்கால கட்டத்தில் காசி, பழனி, வேளாங்கண்ணி என்று திருத்தலங்களைப் பெயர்களாக வைக்கும் மூடநம்பிக்கை இருந்தது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொல்வதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நீங்கள் பெற்றெடுக்கிற பிள்ளைக்குப் பெயர் வைக்க என்னை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டார். தொண்டர் ஒருவர் வற்புறுத்தவே இலண்டன் என்று பெயர் வைத்தாராம். தொண்டர் தயங்கியபோது பெரியார் சொன்னாராம் - காசி, வேளாங்கண்ணி என உள்ளூர்ப் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது செல்வம் கொழிக்கும் உலக மாநகராமான இலண்டன் என்ற பெயரை வைத்தால் இன்னும் மேன்மையல்லவா என்றாராம். பிடிக்க வில்லையென்றால் நீங்கள் பேரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றாராம். கருணாநிதி நல்ல தமிழை முன்னெடுக்கும் பொழுது அவர் மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயரை வைத்தபொழுது விமர்சித்தார்களாம். நான் அவரை பலமுறை மனதாரப் பாராட்டியிருக்கிறேன். கருணாநிதி தமிழை முன்வைத்தது தமிழ் வெறியினால் அல்ல. சமற்கிருதம் பெரிதும் உயர்வாகக் கருதப் பட்டு தமிழ் இழிவுபடுத்தப் பட்டதால்தான். அதற்காக ஸ்டாலின் என்ற ஒரு பெரும் தலைவனைப் பெருமையாகக் கருதுவதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாதென அவர் நினைத்ததால் ஸ்டாலின் என்றே வைத்தார். எனவே ஒரு பெயர் உண்மையிலேயே நாம் உயர்வாக மதிக்கும் ஒன்றைக் குறிப்பதானால் அந்தப் பெயர் சமஸ்கிருதமே என்றாலும் வைப்பதில் தடையில்லை. வரலாறும், சிந்தனையும் மழுங்கடிக்கப் பட்ட வணிகமய சமுதாயத்தில் இளைஞரைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால் அவர்கள் வழிக்குச் செல்ல வேண்டும்தான். அதனால் எளிமையாக்கப் பட்ட எழில் போன்ற *பழமையான* பெயர்களை விட சமஸ்கிருதம் போலவே பொருள் புரியாத தமிழ்ப் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதும் காலத்தின் அவசியமே, எனவே நான் எதிர்க்கவில்லை. ஆனால் சிந்திக்கத் தெரிந்த இளைஞர்களுக்கு அது தேவையில்லை, கலகம் செய்து பகுத்தறிவைத் தூண்டக் கூடிய பெயர்களை வைக்க வேண்டும்.
நான் திருமணமாகாமல், குடும்பமில்லாமல் இருந்து அமெரிக்கக் குடியுரிமை வாங்கக் கூடிய சந்தர்ப்பமிருந்திருப்பின் என்னுடைய கடைசிப் பெயரைப் 'பறையன்' என்றே வைக்கலாமென்று பலமுறை தோன்றியது. (எனக்கு வேண்டுமானால் கடைசிப் பெயரை பறையன் என்று இட்டுக் கொள்வது சரியெனப்படும், என் மனைவியும், குழந்தையும் பயன்படுத்தும் எங்கள் குடும்பப் பெயரை நானொருவன் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ள முடியாதுதானே.) ஆனால் பலபேர் இப்படிச் செய்யும் பொழுது அதன் பின்னாலுள்ள சமூக அரசியல் நொறுங்கிப் போய் விடும். எண்ணிப் பாருங்கள் தி.க./திமுக தோன்றும் முன்பெல்லாம் அன்பழகன், மதியழகன், கனிமொழி என்ற பெயர்களெல்லாம் வைக்கப் பட்டிருக்குமா? அன்று தலைவர்களே அவற்றை வைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அதனால் அப்பெயர்கள் பிரபலப்பட்டன. மற்றவர்களும் வைக்க ஆரம்பித்தனர். நூறு பேர் அமெரிக்காவில் பறையன் என்று கடைசிப் பெயரை வைத்துக் கொண்டால் பறையன் உயர்மரியாதைப் பெயராகி விடும்.
எனவே சிந்திக்கத் தெரியாத இளைஞர்களுக்காக மட்டுமே ஒரு புதிய பெயர்ப்பட்டியல் தேவை. ஆனால் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குத் தேவை கலகம் செய்யும் மனத்திடமே.


எல்லாருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டோம் நானும் கணவரும். ரொம்ப நவீனமாகவும் இல்லாமல், ரொம்ப முனியம்மா மாதிரியும் இல்லாமல் நடுத்தரமாக “புகழ்மதி” என்று குழைந்தைக்கு பெயர்சூட்டினோம். மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கர்களுக்கு “ழ்” உச்சரிக்க வராதே என்றார்கள் பலர். ஏன் நம்ம தமிழ் மக்களுக்கே பல பேருக்கு “ழ்” உச்சரிக்க வராதே! குழந்தையின் பெயருக்கான அர்த்தத்தை சில அமெரிக்கர்களுக்கு விளக்கியபோது, அவர்கள் “ஓ! இப்படிப்பட்ட அழகிய அர்த்தமுள்ள பெயர்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லையே” என்று சொன்னார்கள்.

ஒருவேளை எங்கள் மகள் பிற்காலத்தில் இந்தப் பெயர் பழமையாக இருக்கிறது என்று நினைத்தால் அவள் வேறு பெயர் மாற்றிக்கொள்ளட்டும். எங்களுக்குத் தடையேதும் இல்லை.

5 comments:

பழமைபேசி said...

ஆகா... செறிவான இடுகைக்கு காத்திருந்தது வீண்போகலை!

புகழ்மதிய நான் ஜாயிற்றுக் கிழமை பார்ப்பனே?! இஃகி!!

XIII said...

வாழ்த்துக்கள் நண்பரே. ஆனால் ஏன் தமிழ்ப்பெயர் வைக்க விரும்புகிறீர்கள்? தமிழ் வளர்க்காவா? அது நீங்கள் அவளுக்கு கற்றுக்கொடுக்கும் தமிழையும், அதை அவள் பயன்படுத்த ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதையும் பொறுத்து உள்ளது என்று நினைக்கிறேன்.

parameswary namebley said...

புகழ்மதி.. மிகவும் அழகான பெயர்..

தமிழ் said...

அருமையான இடுகை

இப்பொழுது தான் படிக்கிறேன்

வாழ்த்துகள்

அழகான பெயர்

Anonymous said...

Congrats for successfully finding a name for the new born.
Also for writing in Tamil.
I shall also learn to write in Tamil soon.
BHUPATHI