Thursday, March 23, 2006

உதவியா உபத்திரவமா?

எங்க ஊரில் நடக்கவிருக்கும் ஒரு பட்டிமன்றத்திற்காக தலைப்பு தேடிக்கொண்டிருந்தபோது, இந்தத் தலைப்பு கிடைத்தது - "சமையலறையில் மனைவிக்குக் கணவன் உதவியா? உபத்திரவமா?"

என்னை நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேன். என் கணவர் சமையலறையில் எனக்கு உதவியா அல்லது உபத்திரவமா?

சமையலறையில் மனைவிக்கு முழுமூச்சாக உதவி செய்யும் கணவன்மார் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். காய்கறி வெட்டிக்கொடுப்பது, பூரி மாவு தேய்த்துத் தருவது போன்ற உதவிகளை செய்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக சேர்ந்து சமைப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கும் என் கணவருக்கும் சண்டையும் விவாதமும் வருவதே சமைலறையில் தான். We just don't synch in the kitchen!

ஒருவருக்கு ஒருவர் சமையலில் உதவி என்கிற பேச்சே எங்கள் வீட்டில் இல்லை. ஏனென்றால் நாங்கள் இருவருமே நன்றாகச் சமைப்போம். அதனால் சமையலறையில் 'ego clash' அடிக்கடி வரும்! தன் அம்மாவின் கைப்பக்குவம் என்கிற மூக்கனாங்கயிற்றைத் தாண்டி மற்ற வகை உணவுகளை சுவைக்கத் தயங்கும் கணவன்மார்களில் என் கணவர் எந்த விதிவிலக்கும் அல்ல. தனியாகச் சமைத்தால் பிரமாதமாகச் சமைப்பார்! குறிப்பாக அசைவ உணவு வகைகளை மிகவும் ரசித்துச் சுவையாகத் தயாரிப்பார். ஆனால் செய்முறையை(recipe) மட்டும் அவரிடம் கேட்டுவிடக்கூடாது. கேட்டீர்களென்றால் லேசாக வயிற்றைக் கலக்கும்! செய்வதை நேரில் பார்த்தால் லேசாகத் தலையே சுற்றும்! சப்பிட்டால்??? உங்கள் ஆயுளில் சில மாதங்கள் குறையலாம்!!! ஆனால் சுவை??? சூப்பரோ சூப்பர்!!! அவர் செய்யும் அனைத்து உணவு வகைகளிலும் இந்த மூன்று ஐட்டங்கள் தவறாமல் இருக்கும்.

1. MTR கரம் மலாசா (MTR ரின் பரம ரசிகர் என் கணவர்)2. MSG - Mono Sodium Glutamate (இது உடம்புக்குக் கெடுதல் என்று தெரிந்தும் அதன் சுவையில் ஒரு "kick" இருக்கிறது என்று விவாதிக்கிறார்)3. பாளம் பாளமாக வெண்ணை அல்லது வண்டி வண்டியாக எண்ணை(oil-bath ஆச்சா என்று நண்பர்கள் கிண்டலடிப்பது வழக்கம்)

மற்றபடி கையில் கிடைத்த பொடி, மசாலா எல்லாவற்றையும் போடுவார். உண்மையிலேயே அவர் செய்யும் உணவு வகையின் செய்முறையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் அவர் சமைக்கும் போது கூடவே இருந்தால் தான் முடியும்! எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கவேண்டும் அவருக்கு. அவர் சமைக்கும் அனைத்து ஐட்டங்களுக்கும் "spicy" என்கிற வார்த்தையை சேர்த்துக்கொள்வார். உதாரணத்திற்கு, "spicy சிக்கன் குழம்பு", "spicy கத்தரி வறுவல்", "spicy பிரியாணி". சமைத்து முடித்தவுடனும் அவர் செய்யும் அலம்பலும் அலட்டலும் தாங்கமுடியாது. சப்பிடுபவர்களைத் "சாப்பாடு எப்படி? உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சேன். எப்படி இருக்கு?" என்று கேட்டு துளைத்து எடுத்துவிடுவார். ஒரு வாரம் சென்ற பிறகு கூட "போன வாரம் நான் வைத்த குழம்பு அட்டகாசம் இல்ல?" என்று கேட்டுக்கொண்டிருப்பார். அவர் சமைத்ததன் பின் விளைவுகள் பாத்திரங்களைக் கழுவும் பொழுது தெரியும். நான் ஆசை ஆசையாக வாங்கி பார்த்துப் பார்த்து உபயோகித்துக்கொண்டிருந்த non-stick பாத்திரங்களில் கீறல் விழுந்திருக்கும். அவரைக் கூப்பிட்டுக் காட்டி, என்ன செய்தீர்கள் என்று கேட்டால், அதில் கொத்துப் பரோட்டா செய்தேன் என்பார். நம்ம ஊரில் ரோட்டோரக் கடைகளில் பரோட்டாவைக் கொத்தும் போது நம்ம ஊரில் 'டங் டங்' என்று ஒரு சத்தம் வருமில்லையா? அந்த மாதிரி sound effect வரவேண்டுமென்று இரண்டு கரண்டிகளை வைத்துக் கொத்தியதால் பாத்திரத்தில் கீறல் விழுந்துவிட்டது என்பார்!.

நான் சமைக்கும்போது அவர் கூட இருந்தாலும் சண்டை தான் வரும்! இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்தச் சொல்லுவர். நான் சற்று அசந்தால், எனக்குத் தெரியாமல் குழம்பில் மிளகாய்ப்பொடியை கூடுதலாகப் போடுவார்!
மனைவி ஊருக்குப் போய்விட்டால் கணவன்மார்கள் வெளியிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ சாப்பிடுவார்கள். ஆனல் எங்கள் வீட்டில் தலைகீழ்! நான் வீட்டில் இல்லையென்றால் என் கணவர் நண்பர்களை அழைத்து எங்கள் வீட்டில் சாப்பாடு போடுவார். ஆனால் நானும் அவரும் சேர்ந்து சமைப்பதோ, நான் அவருக்கு சமையலில் உதவி செய்வதோ, அவர் எனக்கு உதவி செய்வதோ எங்கள் வீட்டில் நடக்காத காரியம்.

அவர் நன்றாகச் சமைப்பதனால் அவர் செய்யும் உபத்திரவங்களை பொறுத்துக்கொள்வதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அதனால், அவர் எனக்கு சமையலறையில் "நிறைய உதவி, கொஞ்சம் உபத்திரவம்" என்று பட்டிமன்றத் தீர்ப்பு சொல்லலாம். உங்கள் வீட்டில் எப்படி?

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

எங்க வீட்லயும் எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையில் இந்தப் ப்ரச்சினைகள் உண்டு.. அம்மா கடைசியில், அப்பாவைக் காய் நறுக்கச் சொல்லி வெளியே அனுப்பி விடுவார்கள்.. நீங்க கூட முயற்சி பண்ணுங்களேன்.

ரவியா said...

// We just don't synch in the kitchen!//

இங்கேயும் அதேதான்..
:))