Tuesday, December 27, 2005

விமானம் எந்தன் அபிமானம்



எனக்கு இன்றும் விமானங்கள் என்றால் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதுவும் தரை இறங்கும் விமானங்களைப் பார்த்து ரசிப்பது என்றால், எனக்கு மிகவும் பிடித்த விசயம்.

நான் பிறந்து வளர்ந்த சிதம்பரத்திற்கும் விமானங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. எப்போதாவது அந்த வழியாகப் பறந்து செல்லும் ஹெலிகாப்டர்களின் சப்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து அதை அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தது நினைவில் இருக்கிறது. காலப்போக்கில் எனக்கும் விமானங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்துகொண்டே வந்தது.

நான் பத்தாவது படிக்கும் போது அக்கா திருமணம் ஆகி அமெரிக்கா செல்லும்போது அவளை வழியனுப்ப குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையம் சென்றோம். அப்போது தான் நான் முதன்முதலில் ஒரு விமான நிலையத்தைப் பார்த்தேன். அக்கா நம்மை விட்டு பிரியப்போகிறாளே என்று அம்மா, அப்பா, அண்ணன்களெள்ளாம் பிழியப் பிழிய அழுதுகொண்டிருக்க, நான் மட்டும் கண்ணாடிச் சுவற்றிற்கு வெளியே தரை இறங்கும் விமானங்களை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கா ஒவ்வொரு முறை வரும்போதும் போகும்போது மீனம்பாக்கத்துக்கு குதூகலத்துடன் செல்வேன். "ஏண்டி, நீ நான் வரும்போது சந்தோஷமா இருக்க, போகும்போதும் சந்தோஷமா இருக்கியே, எப்படி?" என்று அக்கா பல முறை கேட்டிருக்கிறாள்.

பின்னர் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்கா செல்ல விசாவுக்குக் காத்திருந்த நாட்களில், மைலாப்பூரில் தங்கியிருந்த வீட்டிற்கு மேலே அடிக்கடிப் பறக்கும் விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம், "நானும் இதேமாதிரி ஒரு விமானத்தில் சீக்கிரம் பறக்கப் போகிறேன்" என்று சொல்லி என் தோழிகளை வெறியேற்றியிருக்கிறேன்.

அமெரிக்கா வந்த பிறகு விமானங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. உள்ளூர் விமானங்களில் போவதும் வருவதுமாக இருந்தாலும், அதன் மேலுள்ள ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவில்லை. வாசிங்டன் டிசிக்கு வந்தபிறகு, என்னுடைய இந்த ரசிப்புத்தன்மைக்காகவே வடிவமைத்தது போல் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன்! ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் மிக அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கே நின்று கொண்டு பார்த்தால் ரன்வேயிலிருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்களை மிக அருகில் பார்க்கலாம். நாம் நின்று கொண்டிருக்கையில், தலைக்கு மேலே உருமும் சப்தத்துடன் தரையிறங்கும் விமானங்களைப் பார்க்க ரொம்ப த்ரில்லிங்காக இருக்கும். குழந்தைகள் சற்று பயப்படுவார்கள். இதைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டமாக இங்கே வருவார்கள். நான் நிற்கும் போது, எனக்குப் பின்னால் விமானம் தாழ்வாக பறப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ முயன்றும் என் கணவரால் முடியவில்லை! காமிராவை க்ளிக்குவதற்குள் விமானம் விரைவாகக் கடந்து சென்றுவிடுகிறது!

இதெல்லாம் பத்தாதென்று, இப்போது வாசிங்டன் டிசி வட்டாரத்தில் உள்ள மற்றொரு சர்வதேச விமான நிலையத்தின் அருகில் குடி வந்தாகிவிட்டது! இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இப்போது விமானங்கள் என் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டன. தினம் அலுவலகத்திற்கு நானும் என் கணவரும் விமான நிலையத்தை ஒட்டிய சாலையில் காரில் செல்வோம். எங்கள் கூடவே விமானங்களும் பயணிக்கும். காருக்கு எதிரே மிகத் தாழ்வாகப் பறந்து தரையிறங்கும். பார்க்கவே ரம்மியமான காட்சியாக இருக்கும். இந்த விமானங்களினால் மற்றுமொரு நன்மையும் உண்டு எங்களுக்கு. முன்பெல்லாம் இந்தக் கார் பயணத்தின் போது குடும்ப விசயமாக எனக்கும் என் கணவருக்கும் காரசாரமாக விவாதம் நடக்கும். இப்பொழுதெல்லாம் "அதோ பார் US Airways போகிறது" என்று கணவர் சொல்ல, "உங்களுக்கென்ன கண் தெரியலையா? அது American Airlines" என்று நான் சொல்ல, விவாதம் சற்று வேறுவிதமாக நடக்கிறது!!! இது நன்மை. நன்மை இல்லாத ஒன்றும் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தனியாக நான் கார் ஓட்டிக்கொண்டு அலுவலகம் செல்கையில், காருக்கு மேலே தரையிறங்கிக்கொண்டிருந்த ஒரு விமானத்தை பாராக்கு பார்த்துக்கொண்டே, சாலையில் சிவப்பு விளக்கைக் கவனிக்காமல் விளக்குக் கம்பத்தைக் கடந்து சென்றுவிட்டேன்.நல்ல வேளையாக குறுக்கே யாரும் வரவில்லை!. ஆனால் சிவப்பு விளக்கைக் கடந்து சென்றதற்காக என் காரை படம் பிடித்து, புகைப்படத்துடன் அபராதம் கட்டச்சொல்லி வீட்டுக்கு நோட்டீஸ் வந்துவிட்டது!

ஹம்ம்ம்ம்...எது எப்படியிருந்தாலும் தரையிறங்கும் விமானங்களின் அழகே தனி தான்!

பி.கு: நான் இவ்வளவு ரசிக்கும் விமானங்களில், பயணிக்க எனக்கு அறவே பிடிக்காது. சரியான போர்!

2 comments:

பத்மா அர்விந்த் said...

அழகாக எழுதி இருக்கிறீர்கள். தரை இறங்கும் விமானம், ஜிவ்வென்று உயர கிளம்பும் விமானம் இரண்டுமே அழகானது என்றாலும் எனக்கு பிடித்தது இந்திய புகைவண்டிகள் பயணம்தான்.

முகமூடி said...

நல்ல கூத்து போங்க. அதுக்காக ப.கா. மி.க பார்த்த மாதிரி ரெட் சிக்னல எல்லாமா க்ராஸ் பண்ணுவாங்க?

கொசுறு தகவல்: எனக்கும் வைகோவுக்கும் பிடித்தது நடைப்பயணம்தான்.