Monday, December 08, 2008

விருந்துக்கப்பறம் நடந்த திரைப்படச் சுற்று!

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் வயிறாற விருந்துச் சாப்பிட்டுவிட்டு, சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், "நம் மனதை பாதித்த பிடித்த திரைப்படம் ஒன்றைப் பற்றி ஒவ்வொருவரும் பேசலாம்" என்று ஒருவர் தொடக்கிவைக்க, சுவையாக இருந்தது இந்தச் திரைப்படச் சுற்று.

சமீபத்திய வருடங்களில் வந்த திரைப்படங்களைப் பற்றி யாருமே வாய்திறக்கவில்லை. ஏதாவது சொல்லும்படியாகவா இருக்கின்றன இப்போது வரும் படங்கள்??!

திரைப்படச் சுற்றில், கருத்தம்மா, முல்லும் மலரும், அவள் ஒரு தொடர்கதை, பாலைவனச் சோலை, முதல் மரியாதை, சிறை போன்ற சற்று 70, 80 களில் வந்தத் திரைப்படங்களையே தம் மனதை பாதித்தப் படங்களாக நிறைய பேர் சொன்னார்கள். சிலர், Life of Others, Life is Beautiful, Bridges of Madsion County போன்ற ஆங்கிலப் படங்களையும் குறிப்பிட்டார்கள்.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டது என்னவென்றால், 12, 13 வயது
சிறுமிகள் இருவர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி தனக்குப் பிடித்த படமாகச் சொன்னது "Kabul Express". மற்றொருத்தி சொன்னது "தாரே சமீன் பர்". 'Kabul Express' நான் இன்னும் பார்க்கவில்லை ஆனால் அது அமெரிக்கா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சம்மந்தப்பட்ட உலக அரசியல் பிண்ணனியைக் கொண்ட ஒரு படம். குறிப்பாக ஒரு தாலிபான் தீவிரவாதியைப் பற்றியது. 'தாரே சமீன் பர்' பற்றிச் சொல்லவே வேண்டாம். அதனைப் பற்றி ஒரு தனி பதிவு எழுதியிருக்கிறேன்.

நான் இவர்கள் வயதில், என் அக்கா என்ன படம் பார்க்கிறாளோ, அதைத்தான் நானும் பார்ப்பேன். அக்காவுக்கும் எனக்கும் 12 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தாலும், அவள் விரும்பிப் பார்த்த 'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', போன்ற படங்களைதான் நானும் பார்த்தேன். அப்போதெல்லாம் திரைப்படங்கள் பொழுது போக்கு அம்சங்களாக மட்டுமே இருந்தன. சமூக நோக்குள்ள படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் - 'வருமையின் நிறம் சிவப்பு', 'தண்ணீர் தண்ணீர்' etc. ஆனால் இந்தத் திரைப்படங்களில் உள்ள சமூக அக்கறையை கூட என்னால் அந்த வயதில் புரிந்துகொள்ளவோ பாராட்டவோ முடியவில்லை.

இப்போது மீண்டும் இது போன்ற படங்களை revisit செய்யும் போதுதான் அவற்றை பாராட்ட முடிகிறது. அந்த இரு சிறுமிகளும், 'penelope', 'high school musical', 'the incredible hulk' போன்ற படங்களை குறிப்பிட்டிருந்தாலும், அது அவர்கள் வயதிற்கு பொருத்தமாகவே இருந்திருக்கும், ஆனால் அவர்கள் Kabul Express மற்றும் தாரே சமீன் பர் போன்ற படங்களைக் குறிப்பிட்டது அவர்களுடைய அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவர்களை நான் அங்கே சபையில் பாராட்டவில்லை :-( அதனால் இந்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் :-)

நான் அந்தத் திரைப்படச் சுற்றில் என் மனதை பாதித்த ஆங்கிலப் படங்கள்(Time to Kill, Rainmaker) சிலவற்றைப் பற்றிச் சொன்னேன். தமிழ்ப் படங்கள் நான் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த தமிழ்ப் படங்கள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் ஆடல், பாடல், ஜிகினா சமாச்சாரம் இவை எதுவுமே இல்லாமல் நல்ல கருத்துக்களைச் சொன்ன ஆங்கில, மற்றும் பிற மொழிப் படங்களே என் மனதை பாதித்தது, சிதைத்தது, நெருப்பை மூட்டியது, திருப்பிப் போட்டது எல்லாமே. இப்போது பாலிவுட் படங்கள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக நல்ல கருத்துள்ள படங்களாக வெளிவருகின்றன. உதாரணமாக, 'Fashion', 'Wednesday' போன்ற படங்கள்.

என் அண்ணன் மகளுக்கு 7 வயதிருக்கும் போது(அப்போது அவர்கள் பாண்டிச்சேரியில் இருந்தார்கள்), அவள் அடம் செய்யும் போதெல்லாம், என் அண்ணி ஒரு தமிழ்ப் படத்தை வீடியோவில் போட்டுவிடுவார்கள். அவள் பாட்டுக்கு பார்த்துக்கொண்டிருப்பாள். ஏதாவது சண்டைக் காட்சியோ, பாடல் காட்சியோ வந்தால், சற்று fast forward செய்தால் உடனே அழுவாள். பிறகு சில வருடங்கள் கழித்து அமெரிக்கா வந்தாள். இங்கே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தாள். இப்போது கல்லூரிக்குச் செல்லுகிறாள். இப்போது சொல்லுகிறாள் - "lets play some Tamil movies, so that we can make fun of them" என்று!! என்ன ஒரு லொல்லு!!

ஆனால் அப்படிக் கேலிக்கூத்தாகத் தான் போய்விட்டது இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலமை!

Thursday, November 06, 2008

அமெரிக்காவின் புதிய கதாநாயகி - மிஷல் ஒபாமா


நேற்று முன் தினம் சிகாகோவில் ஒபாமா தனது வெற்றி உரையை நிகழ்த்த மேடை ஏறிய போது, உடன் அவருடைய மனைவி மிஷல் ஒபாமாவும், அவர்களது மகள்களும் வந்தார்கள். நான் சாதாரணமாக என் கணவரிடம், "மிஷல் ஒபாமா வேறு உடை அணிந்திருக்கலாம்" என்றேன். என்ன ஆச்சர்யம்! மறுநாள் பல இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் மிஷல் ஒபாமாவின் உடைத் தேர்வைப் பற்றிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சிலர் அவருடைய உடை ஒரு "first lady" அணிவது போல் இல்லையென்றும், சிலர் மிஷல் ஒரு மாறுபட்ட நவீன பார்வை உடையவர் என்றும், அவர் பிற first ladyக்களிடமிருந்து வேறுபட்டவர் என்றும் விவாதித்திருந்தனர்.
மிஷல் நேற்றிலிருந்து அடுத்த நான்கு ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதான கதாநாயகி!! இனி அவர் என்ன உடை அணிகிறார், என்ன சாப்பிடுகிறார், எங்கு போகிறார், என்ன பேசுகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் கண்காணிக்கத் தொடங்கிவிடும்.

நான் கடந்த ஆறு மாதங்களாக இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லரி க்ளிண்டன், சாரா பாலின், சிண்டி மெக்கெய்ன், மிஷல் ஒபாமா போன்ற பெண்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். இவர்களில் மிஷல் ஒபாமாவை தனித்து ஒரு கட்டம் கட்டி ஒதுக்கிவிடலாம்.

அமெரிக்காவின் first lady க்களை இரண்டு ரகங்களாகப் பிரிக்கலாம்.

முதல் ரகம்: செயற்கையான ஒட்டப்பட்ட புன்னகையுடன், கணவரின் பக்கத்தில் நின்று கையசைப்பவர்கள். கணவருடன் எல்லா இடங்களுக்கும் செல்லுவார்கள், ஆனால் அவரின் மேல் எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தாதவர்கள்(லாரா புஷ், பார்பரா புஷ்).

இரண்டாவது ரகம்: கணவரின் பின் இருந்தாலும், தமக்கென்று ஒரு தனித்திறமையும், ஆழ்ந்த பொது அறிவும், தமக்கென்ற ஒர் மனமும் கொண்டவர்கள் (எலினார் ரூசவல்ட், ஹில்லரி க்ளிண்டன்)

ஆனால், ஜாக்குலின் கென்னடி இந்த இரண்டு ரகங்களிலும் சேராத ஒரு அபூர்வ ரகம். ஒரு அழகிய நவ நாகரீக யவதியாக அவரை உலகம் பார்த்தது. கென்னடி அதிபராக இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, பல வருடங்களுக்கு ஜாக்கி கென்னடி fashion பத்திரிக்கைகளை அலங்கரித்தார்.
இந்த மூன்று ரகங்களின் கலவையாக மிஷல் ஒபாமா இருப்பார் என்று தோன்றுகிறது. கணவருக்கு ஆதரவாக எப்போதும் உடன் இருப்பதுடன், தனது தனித்துவத்தையும் நிலைநாட்டக்கூடியவர். அதே சமையம் வழக்கமாக இறுக்கமான 'formal suit' உடைகளில் தோன்றும் 'first lady' பிம்பத்தை உடைத்து ஒரு சராசரிப் பெண்னைப் போல உடைகள் அணிபவர். மிஷல் ப்ரத்யேகமான உடை டிசைனர்களை வைத்திருந்தாலும், பொது மக்கள் உடை வாங்கும் கடைகளான 'Gap', 'J Crew' போன்ற கடைகளிலும் நிறைய உடைகள் வாங்குவார் என்று படித்தேன். இவருடன் தம்மை தொடர்பு படுத்திக்கொள்வது பெண்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

பிற first ladyக்களைப் போல, கணவரின் பெயரிலும் புகழிலும் தொலைந்து போய்விடாமல், ஒரு சுய சிந்தனை உள்ள ஒரு பெண்ணாக மிஷல் தெரிகிறார். தனது பிரச்சார உரைகளைக் கூட அவரே தயாரித்துக்கொண்டார் என்றும், பலர் தவிர்க்க விரும்பும் பிரச்சினைக்குரிய விசயங்களை மேடைகளில் பேச எப்போதும் அவர் தயங்குவதில்லை என்றும் அறிந்தேன். மேலும் உலகின் மிகச் சக்தி வாய்ந்த பதவிக்கானப் போட்டிப் பாதையில் மக்களின் பேராதரவுடன் வெகுவேகமாக முன்னேறி வந்த தன் கணவரைப் பற்றி மிஷல் பெருமிதம் கொண்டிருந்தாலும், அவரின் சிறு சிறு தவறுகளையும் அன்பாகச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. மிஷலின் பல உரைகளில், "ஒபாமா எல்லா சிக்கல்களையும் களைய வந்த ஆபத்பாந்தவர் அல்ல. அவர் தடுமாறலாம், தவறுகள் செய்யலாம்" என்று சொன்னது பலருக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதுவே யதார்த்தம். ஒபாமாவின் மேல் மக்களுக்கு உள்ள அபரிமிதமான எதிர்பார்ப்புகளை சற்று குறைக்கவே மிஷல் அப்படி பேசியிருக்க வேண்டும். மேலும் மிஷல் தன் கணவரை குறை கூறுபவர்களின் மீது கண்மூடித்தனமாக கோபப்படாமல் அவர்களை தனது கவனத்திலிருந்து ஒதுக்கிவந்தார். மெக்கெய்ன் ஒரு முறை ஒபாமாவை "That one" என்று நாகரீகமில்லாமல் குறிப்பிட்டதைப் பற்றி மிஷலிடம் ஊடகங்கள் கேட்டபோது, "இதெல்லாம் அரசியலில் சர்வ சாதாரணம். நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று சொன்னார். இது அவரது மனமுதிர்ச்சியைக் காட்டுகின்றது.

கணவருக்கு வெறும் ஜால்ராவாக மட்டும் இல்லாமல் அவரை வழிநடத்தும் ஒரு நல்ல ஆசிரியராகவும் மிஷல் இருப்பார் என்று கருதுகிறேன். சிகாகோவில் திருமணத்திற்கு முன் இருவரும் ஒரே சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, தனக்குப் பின் அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒபாமாவிற்கு மிஷல் தான் 'mentor' ஆக நியமிக்கப்பட்டாராம்.

ஒரு நண்பர் முன்பு சொன்னார். "திருமண வாழ்க்கையில் கணவன் மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஆசிரியனாக இருப்பது என்பது அலுப்பைத் தரும். அறிவுப் போக்குவரத்து இருவழியிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் இருவரின் அறிவும் விசாலமடையும், மண வாழ்க்கையும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்று". நண்பர் சொன்னது உண்மையே என்று நானும் நினைக்கிறேன்.

மிஷல் ஒபாமாவும் பாரக் ஒபாமாவும் ஒரு 'intellectual' தம்பதிகளாகத் தெரிகிறார்கள். குறிப்பாக மிஷல் பெரும்பாலான அதிபரின் மனைவிகளை போல, ஒரு புன்னகையிலும் கை அசைப்பிலும் தனது பங்களிப்பை நிறுத்திக்கொள்ளாமல் தனது படிப்பறிவையும், சுய சிந்தனைகளையும் உலக நலனுக்காக உபயோகிப்பார் என்று நம்புகிறேன். "உங்கள் சாதனைகளின் உயரங்கள், கனவுகளின் விஸ்தரிப்பினால் நிர்னயிக்கப்படுகின்றன" என்று உரைத்த மிஷல், தான் 'first lady' ஆனால், பெண்கள் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அவற்றிற்காக உழைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இவர் கதாநாயகியா, அல்லது பழைய கதையை மாற்றும் நாயகியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, July 30, 2008

சிலம்பும் நர்த்தகியும்

மீண்டும் நர்த்தகி!

Image Hosted by ImageShack.us


திருநங்கை நர்த்தகி நடராஜனைப் பற்றி 3 வருடங்களுக்கு முன் இந்தப் பதிவை எழுதினேன். இந்த வருடம் ஆர்லாண்டோவில் நடைபெற்ற தமிழ் விழாவில் மீண்டும் அவருடைய நடனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

மேலும் அழகு கூடியவராய், மேலும் தமிழ் நெஞ்சங்களுக்கு நெருக்கமானவராய் ஆனார், 'சிலம்பும் தமிழும்' என்கிற தலைப்பில் அவர் ஆடிய சிலப்பதிகார நடனத்தின் மூலம்!
சூரிய ஒளியையும், நேரம் தவறாமல் வரும் மழையினையும் போற்றும் புகழ் பெற்ற சிலப்பதிகாரப் பாடலான "திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும்" பாடலுக்கான நடனத்தைத் தொடர்ந்து, கண்ணகியின் ஆடம்பரமான திருமண வைபோகம். ஊரே வியக்கும் வண்ணம் நடந்த அந்தத் திருமணத்தின் நுணுக்கமான விசயங்களையும், அதனைத் தொடர்ந்து நிகழும் ஒரு காவியத்தையும், ஒரே ஒருவர் தன் கண்களாலும், கைகளாலும், உடல் அசைவுகளாலும் ஒரு பெரும் கூட்டத்திற்கு புரியவைத்திவிட முடியும் என்பது பிரமிக்க வைக்கும் உண்மை தான்! நான் சிலப்பதிகாரத்தைப் படித்ததில்லை. ஆனால் நர்த்தகியின் நடனம் முழு சிலப்பதிகாரத்தையும் அதன் இலக்கிய நயத்தையும் எனக்குப் புகட்டியது.

கண்ணகி-கோவலனின் திருமணம் முடிந்த கையோடு, வரம்பு மீறாத அந்த முதலிரவு காட்சிகள் அருமை! கோவலன் கண்ணாடியில் தன்னைப் பார்த்து சரி செய்துகொண்டு, தன் மேல் வாசனை திரவியம் தடவிக்கொண்டு முதலிரவுக்குச் செல்லும் காட்சி புன்னகையை வரவழைத்தது. ஒரு நொடியில் அச்சமும் நானமும் ஆட்கொண்ட கண்ணகியாகவும், அடுத்த நொடியில் கண்ணகியில் அழகில் மயங்கி மருகும் கோவலனாகவும் மாறி மாறி உணர்ச்சிகளை உதிர்த்து அசர வைத்தார் நர்த்தகி. கூட்டம் கட்டுண்டு கிடந்தது அவருடைய அபிநயத்தில்...

கோவலன் மாதவியைப் பார்த்தபின் அடையும் மனப்போராட்டங்களை நர்ததகி ஆடியது மற்றொரு உணர்ச்சிக் குவியல்! மாதவியின் பின்னால் கோவலன் போகும் போது, வீட்டில் கண்ணகி தனக்காகக் காத்திருப்பதை நினைத்து ஒரு நிமிடம் தயங்குகிறான், ஆனால் மாதவி "என்னுடன் வா" என்று தன் விழிகளால் அழைத்ததும், மறுபேச்சு பேசாமல் அவள் பின்னே செல்லும் காட்சி பார்க்கச் சுவை சொட்டியது.
பின்னால் கண்ணகி கோவலனுடன் மதுரைக்கு வருவதும், கோவலன் சூழ்ச்சியால் கொல்லப்படுவதும், கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்பதும், சிலம்பைத் தூக்கியடித்து தன் கணவன் நிரபராதி என்று நிரூபிப்பதும், தொடர்ந்து மதுரை எறிவதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதி அற்புத நடன வெளிப்பாடுகள்!

இறுதியாக 'இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க கைகோர்ப்போம்!' என்கிற தமிழ் விழாவின் சூளுரையில் அவர் நடனத்தை முடித்தபோது அரங்கம் எழுந்து நின்று வெகுநேரம் ஓயாது கைதட்டி மகிழ்ந்தது.

எனக்கு உண்மையில் உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. நான் பொதுவாக அதிகம் உணர்ச்சிகளை வெளிகாட்டாதவள். உலகமே அழியப்போகும் நேரத்தில் கூட, "அப்படியா?" என்று மெதுவாகக் கேட்பேன் என்று என் கணவர் என்னைக் கிண்டல் செய்வார். ஆனால், நர்த்தகியின் நடனம் முடிந்தவுடன், செலுத்தப்பட்டவள் போல் நெராக மேடையின் பின் புறம் சென்றேன். அதற்குள் அங்கே நர்த்தகியை ஒரு சிறு கூட்டம் சூழ்ந்திருந்தது. பொறுமையாக் காத்திருந்து என் முறை வந்ததும், அவரே எதிர்பார்க்காத வண்ணம் அவரைக் கட்டி அணைத்து என் பாராட்டைத் தெரிவித்தேன்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியபோது அதில் பின்னிப் பூட்டிவைத்த அழகான, சோகமான, வீரமான, கோபமான உணர்வுகளை எல்லாம் நர்த்தகி அன்று ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்து மேடையில் தவழவிட்டார்! நர்த்தகியின் நடனத்திற்கு பலம் சேர்த்தார் சிலப்பதிகாரப் பாடல்களை கணீரென்று பாடிய பேராசிரியர் பாலசுப்ரமணியம். இந்த 'சிலம்பும் தமிழும்' நடனத்தை நர்த்தகி இந்தத் தமிழ் விழாவில் தான் முதன் முதலாக அரங்கேற்றினார் என்பது மற்றொரு சிறப்புச் செய்தி.

Tuesday, April 22, 2008

பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்

சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.

சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா வயதினர்களும் அந்தக் கும்பலில் இருப்பார்கள். ஒரு ரயில் வந்து நின்றதும், ரயிலுக்கருகில் ஓடி வந்து பாசி-மணி-ஊசி விற்பார்கள். சிலர் பாட்டுபாடிக்கொண்டு நடனமாடுவார்கள். ரயில் மீண்டும் புறப்படும் போது ஜன்னல் வழியே தூக்கி எறியப்படும் சில்லரைகளைப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் அந்த மரத்தடிக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை நான் மறந்து போய் பல வருடங்கள் ஆகிறது.

அதேபோல், அவ்வப்போது அதிகாலைகளில் வீட்டின் முன் குடுகுடுப்பை சத்தமும் "நல்ல காலம் பொறக்குது" என்ற குரலும், அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு தலையாட்டிக்கொண்டுநிற்கும் பூம் பூம் மாடும் என் நினைவில் இருந்து மறைந்து பல வருடங்கள் ஆகிறது.

ஆனால் சில நல்ல உள்ளங்கள் அவர்களை மறக்கவில்லை. அந்த பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும் எத்தனை காலம் தான் இவர்களுக்கு சோறு போடும்? இவர்களின் பிள்ளைகள் படித்து தலையெடுக்கவே முடியாதா? 'அடிப்படை கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை' என்று ஐ.நா சபை கூறுகிறது. தமிழகத்தில் இருக்கும் எண்ணிலடங்கா ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையில் இந்த நரிக்குறவர்களையும் பூம் பூம் மாட்டுக்காரர்களையும் படிக்கவைக்கவேண்டுமென்று நினைக்கும் சிலரும் இருக்கிறார்கள்.

பாசிமணி ஊசியும் பூம்பூம் மாடும் கைகொடுக்காததால் நாகப்பட்டிணம் போன்ற கடலோரப் பகுதிகளில் குடியேறி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்களின் எஞ்சியிருந்த வாழ்க்கையையையும் அடித்துப் பறித்துக்கொண்டு போய்விட்டது நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்த சுனாமி! நிர்கதியாய் நின்றவர்களை 'வானவில்' என்றொரு தொண்டு நிறுவனம் அரவணைத்துக்கொண்டது. தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த குழந்தைகளை வகுப்பறைக்குக் கொண்டு வந்தது. முதலில் இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வானவில் முயற்சித்தபோது, "இவர்கள் திருடுபவர்கள், நாற்றமடிப்பவர்கள்..." என்றெல்லாம் சொல்லி பிறரால் ஒதுக்கப்பட்டார்கள். எனவே வானவில் நிறுவனமே இவர்களுக்கென்று விடுதி வசதியுடன் ஒரு பள்ளியைத் தொடங்கியது. தம் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று தம் நாடோடி வாழ்க்கையை பெற்றோர்கள் தொடர, தற்போது 103 நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் வானவில் பள்ளியில் படிக்கிறார்கள்.

வானவில் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. தர்மத்திற்கு சோதனை வராமல் இருக்குமா? ஆரம்பத்தில் நண்பர்கள், தெரிந்தவர்களின் நன்கொடைகளின் உதவியால் பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. இந்த வருடம் ஒரு நிதி நிறுவனத்தில் வானவில் விண்ணப்பம் செய்தது. முதலில் ஒத்துக்கொண்ட அந்த நிதி நிறுவனம், கடைசி நேரத்தில் சில உட்பூசல்களினால் கையை விரித்துவிட, இன்று அந்த 103 குழந்தைகளும் மீண்டும் தெருவுக்கு வந்துவிடுவார்களோ என்கிற நிலமை ஏற்பட்டிருக்கிறது!

வானவில் மீண்டும் தன் நண்பர்களிடம் உதவிக்காக கரம் நீட்டியிருக்கிறது. வானவில் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான ரேவதி எனக்குப் பரிட்சயமானவர். இவர் ஒரு social activist. நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் பேசியிருக்கிறார். சில திரைப்படங்களில் உதவி இயக்குனாராக பணிபுரிந்திருக்கிறார். சமுதாய நோக்குள்ள குறும்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இவரிடமிருந்து வானவில் பள்ளிக்காக உதவி கேட்டு வந்த மின்னஞ்சலை தான் இந்த பதிவில் முதல் வரியில் குறிப்பிட்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை கொண்டுசெல்கிறேன் என்று ரேவதியிடம் சொல்லியிருந்தேன். ஆதலால் இந்தப் பதிவு.

வருங்காலத்தில், மரத்தடிகளில், தெருக்களில் நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் குழந்தைகளைக் காணவில்லையென்றால், அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைபட்டுக்கொள்வோம்.

சில வானவில் புகைப்படங்கள் இங்கே: http://picasaweb.google.com/revathi.work/VanavilPietrasik உங்களால் முடிந்த நிதி உதவியை இந்தப் பள்ளிக்குச் செய்யுங்கள். காசோலைகள் அனுப்பவேண்டிய முகவரி:
Vanavil Trust
9, Second Cross Street
Marai Malai Nagar
Nagapattinam
Tamilnadu 611001
India.

தொலை பேசி எண்: 914365-249411

Tuesday, March 18, 2008

பூமியின் நட்சத்திரங்கள்



அமீர் கானின் 'Taare Zameen Par' (Like Stars on the Earth) திரைப்படம் பார்த்தேன்...அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. டிசம்பர் 2007 ல் வெளிவந்த இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்குக் கிடைத்த அரிய பரிசு! பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல பாடம்!
'கயாமத் சே கயாமதக்' என்கிற இந்தி படத்தில் கலக்கலாக அறிமுகமாகிய அமீர் கான், காதல் நாயனாக, மசாலா ஹீரோவாக, வில்லனாக, தாதாவாக, எல்லாமுமாக நடித்தார். ஒரு கட்டத்தில் இது போதுமென்று நிறுத்திக்கொண்டு, சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்ததால், இன்று நடிகர்,ஹீரோ என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமுள்ள மனிதராகத் உயர்ந்து நிற்கிறார்.
படிப்பு, வீட்டுப் பாடம், முதல் ரேங்க், கல்லூரி அட்மிஷன், என்று போட்டிகள் நிறைந்த உலகத்தில் குழந்தைகளிடம் இயற்கையாக இருக்கும் ரசனை, கற்பனா சக்தி, கலைத் திறன்கள் ஆகியவை எப்படி ஒடுக்கப்பட்டு அவர்கள் ஆட்டு மந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது 'Taare Zameen Par' திரைப்படத்தின் மையக் கருத்து.

குழந்தைகளுக்குப் பிடிக்கும் விசயங்களெல்லாம் பல சமையம் பெரியவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது. ஈஷான் என்கிற 8 வயது சிறுவனின் கற்பனை உலகம் மிக அழகானது. வண்ணங்கள், மீன்கள், நாய்குட்டிகள், பட்டங்கள், ஓவியம் தீட்டுவது - இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தவை. பள்ளிக்குப் போய் மணிக்கணக்காக பாடம் பயில்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. காரணம், அவனுக்கு 'dyslexia' என்கிற ஒருவித வினோதமான பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு எண்களும் எழுத்துக்களும் சரியாக படிக்க முடியாது. இந்தக் குறையை சரியான பயிற்சியின் மூலம் சரிசெய்துவிடலாம். ஆனால் ஈஷானின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவன் சரியாகப் படிக்கவில்லை என்று அவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்களே தவிர, அவனுடைய பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள அக்கறை காட்டவில்லை. தன் மகன் தேரமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட தந்தை, ஈஷானை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புகிறார். தன் இயலாமையுடன், பெற்றோர்களையும் வீட்டையும் பிரிந்த சோகமும் ஈஷானைத் தொற்றிக்கொள்ள, அவன் மனம் வெறுத்துப்போய் நடமாடிக்கொண்டிருக்கிறான். அந்தப் பள்ளிக்கு தற்காலிக ஆசிரியாராக வரும் அமீர்கான், தன் சுலபமான கலகலப்பான பாடம் நடத்தும் முறைகளினால் குழந்தைகளைக் கவர்கிறார். ஈஷானின் நடவடிக்கைகளைக் கவனித்து அவன் மேல் அக்கறை கொண்டு, அவனுடைய குறை என்ன என்று கண்டுபிடிக்கிறார். ஈஷானின் பெற்றோர்களிடமும், பள்ளித் தலைவரிடமும் பேசி, ஈஷானுக்கு சற்று கூடுதல் பயிற்சியும் கால அவகாசமும் தேவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறார். பிறகு ஈஷானுக்கு தனிப்பட்ட முறையில் படிக்கவும் எழுதவும் பயிற்சி அளித்து அவனது தன்னம்பிக்கையையும் தனித் திறன்களையும் மீட்டெடுக்கிறார். இது தான் கதை.

ஆனால் இந்தக் கதையை திரைப்படமாக இயக்கியிருப்பது அமீர்கானுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். முதலில் ஈஷான் காதாபாத்திரத்திற்கு தர்ஷீல் சபாரி என்கிறச் சிறுவனை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அந்தப் பெரிய கண்கள், அழகான தெற்றுபற்கள், 'மக்கு' என்று எல்லாரும் திட்டும் போது சுருங்கும் முகம்...தன்னை சுற்றிய அழகான உலகத்தில் தனக்குப் பிடித்தவைகளை பார்க்கும் போது மலர்ந்து பளிச்சிடும் முகம், தன் பெற்றோர்களை பிரிந்து சோகத்தில் வாடும் முகம்...என்று எத்தனை விதமான முகபாவங்கள்?! அபாரமான நடிப்பு!

'மேரி மா' (என் அம்மா) என்கிற சங்கர் மகாதேவன் பாடிய பாடல்...கேட்கும் போதெல்லாம் மனம் கரைகிறது. ஒரு சிறுவன் தன் மனதில் உள்ள பயங்களை எல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமான தன் அம்மாவிடம் சொல்கிறான் இந்தப் பாடல் மூலம். "என்னை ஏன் இவ்வளவு தொலை தூரம் அனுப்புகிறாய் அம்மா? நான் அவ்வளவு மோசமானவனா?" என்கிற வரிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

அதே போல் 'தாரே சமீன் பர்' (பூமியின் நட்சத்திரங்களைப் போல) என்கிற பாடல் - இதுவும் சங்கர் மகாதேவன் பாடியது. பூமியில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்றவர்கள் குழந்தைகள். இவர்களை நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அர்த்தத்தில் அமைந்த பாடல் வரிகள் மிகவும் அருமை.

திரைப்படம் முழுவதுமே மனதைத் தொடும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கின்றன, ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் இவை.

* வீட்டுப்பாடம் செய்யாததால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படும் ஈஷான், சுதந்திரமாக கால் போன போக்கில் நடந்து திரிந்து வெளியுலக நடப்புகளை அனுபவித்து ரசிக்கிறான். உதாரணத்திற்கு, வழியில் ஒருவர் தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை அப்படியே மொடக் மொடக்கென்று லாவகமாக குடிப்பதை வியப்பாகப் பார்க்கும் ஈஷான், தானும் அப்படி செய்ய முயன்று, தன் முகம் முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக்கொள்கிறான் :-)

* ஈஷானுக்கு 'dyslexia' இருப்பதைப் புரிந்துகொள்ளும் அமீர்கான், அதனைப் பற்றி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு விளக்கும் போது, அந்தப் பிரச்சினை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், தாமஸ் எடிசன் போன்றவர்களில் தொடங்கி அபிஷேக் பச்சன் உள்பட பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் அதனை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்று சொல்கிறார். அதனைக் கேட்டவுடன் ஈஷானின் தலை லேசாக நிமிரும். அவனுள் நம்பிக்கை துளிர் விடத் தொடங்குகிறது என்பதை விளக்கும்காட்சி.

* அதே 'dyslexia' பற்றி ஈஷானின் பெற்றோர்களிடம் அமீர்கான் விளக்கும் போது, ஈஷானின் தந்தை அதை நம்பாமல், "இல்லை! அவன் வேண்டுமென்றே தான் படிக்க மறுக்கிறான். அவன் திமிர் பிடித்தவன்" என்கிறார். உடனே அமீர்கான், ஜப்பானிய(சீன?) மொழியில் சில வார்த்தைகளைக் காட்டி "இதை படியுங்கள்" என்கிறார். தந்தை "இதை எப்படி என்னால் படிக்க முடியும்?" என்கிறார். "முடியும். படியுங்கள்" என்று மீண்டும் சொல்கிறார் அமீர்கான். "என்னால் படிக்க முடியாது" என்று கோபமாகச் சொல்கிறார் தந்தை. "இல்லை நீங்க படித்துத்தான் ஆகவேண்டும்" என்று மிரட்டுகிறார் அமீர்கான். அந்த கணத்தில் தந்தை தன் மகனின் நிலைமையை சட்டென்று புரிந்துகொள்கிறார். ஈஷான் வேண்டுமென்றே படிக்க மறுக்கவில்லை, அவனால் உண்மையிலேயே எழுத்துக்களையும் எண்களையும் எவ்வளவு வற்புறுத்தினாலும் படிக்க முடியாது என்பதை அழகாய் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கிறார் அமீர்கான்.

* அமீர்கான் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தும் அந்த ஓவியப் போட்டிதான் திரைப்படத்தின் highlight! ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து ஓவியம் வரைகையில் அவர்களிடையே இருந்த இடைவெளியும் வித்தியாசங்களும் குறைகின்றன. ஈஷானின் ஓவியத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்படும் போது கூச்சத்துடன் முன்னே வரும் ஈஷான், தன் ஆசிரியர் அமீர்கான் ஈஷானையே ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்து உதடுகள் துடிக்க உணர்ச்சி வசப்படுகிறான். அத்தனைப் பெரிய கூட்டத்தில் அவன் பாராட்டப்படும்போது, நொருங்கிப்போயிருந்த அவனுடைய தன்னம்பிக்கை மீண்டும் துளிர்விட, ஓடிச் சென்று அமீர்கானை கட்டி அணைத்துக்கொள்கிறான். நெஞ்சை உருக்கும் காட்சி.

* இறுதிக் காட்சி சித்திரமாக நம் மனதில் பதிகிறது. சதா தன் மகனைத் திட்டிக்கொண்டிருந்த தந்தை, அமீர்கானின் அன்பாலும் பயிற்சியாலும் ஒரு நல்ல மாணவனாக உருவாகியிருக்கும் ஈஷானைப் பார்த்து தன் தவறை உணர்ந்து அமீர்கானின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுகிறார். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈஷான் விடுமுறைக்கு பெற்றோர்களுடன் தன் வீட்டுக்குச் செல்கிறான். காரில் சென்று ஏறும் முன், ஓடி வந்து அமீர்கானை கட்டி அணைத்து செய்கையினால் தன் நன்றியைத் தெரிவிக்கிறான்.

நமது தமிழ்ப்பட நாயகர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். அறிவாளுடன் ஓடுவது, தெருச்சண்டை போடுவது, துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடிப்பது, கவர்ச்சிக் கன்னிகளுடன் குத்தாட்டம் போடுவது போன்றவைகளிலேயே மூலை தேங்கிக் கிடக்கும் இவர்களுக்கு எங்கே ஒரு 8 வயதுச் சிறுவனின் நுன்னிய உலகத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்? விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னனி நாயகர்கள், முதல் காட்சியிலேயே தங்கள் வீரத்தை எப்படி அதிரடியாக பறைசாற்றலாம், அறிவாளுடனா அல்லது துப்பாக்கியுடனா என்று திட்டமிடுகையில், அமீர்கான் இந்தப் படத்தில் பாதிக்குமேல் தான் அறிமுகமாகிறார். எனக்கும் விஜய்யின் நடனம் பிடிக்கும், ரஜினி ஸ்டைல் பிடிக்கும். இப்போது நரேனின் (சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே) பரம விசிறி நான். வார இறுதிகளில் நண்பர்களுடன் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் 'Taare Zameen Par' போன்ற ஒரு படத்தை தமிழில் யாருமே எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

அமீர்கான் மட்டுமல்ல, 'சக் தே இந்தியா' (Chak De India) என்கிற திரைப்படத்தில் நடித்த ஷாரூக்கானும் மிகுந்த பாராட்டுக்குறியவர். ஹாக்கி அணித் தலைவராக வரும் ஷாரூக், முதல் காட்சியிலேயே 'துரோகி' பட்டத்துடன் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். சில வருடங்கள் சென்ற பின், பெண்கள் தானே? என்று அலட்சியப்படுத்தப்பட்ட தேசிய பெண்கள் ஹாக்கி அணியை தன் கடுமையான பயிற்சியினால் உலகக் கோப்பையை வெல்ல வழி நடத்துகிறார். 'Provoked' என்கிற ஆங்கிலத் திரைப்படமொன்றில் கணவனால் கொடுமை படுத்தப்பட்ட, இரு குழந்தைகளின் தாயான பஞ்சாபி பெண்ணாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். இதே ஐஸ்வர்யா ராய், doom2 படத்தில் என்னமாய் நடனமாடி அசத்தியிருக்கிறார்? இப்படி இரண்டு முற்றிலும் சம்பந்தமேயில்லாத கதாபாத்திரத்திரங்களில் நடித்து இரண்டிலும் வரவேற்பை பெறுவதற்கு உண்மையிலேயே திறமை இருந்தால் தான் முடியும். தன் நடிப்புத் திறமையில் நம்பிக்கையற்றவர்கள்தான் 'பஞ்ச்' டயலாக்கிலும், வெட்டி பந்தாவிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள். இதை தமிழ் பட ஹீரோக்கள் உணர்வார்களா?

Wednesday, February 06, 2008

வாசிங்டன் டிசியிலிருந்து தாரா - 8

முந்தைய தொடர் பதிவுகள்: சென்னையிலிருந்து தாரா - 1, சென்னையிலிருந்து தாரா - 2, திருச்சியிலிருந்து தாரா - 3, மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4, மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5, கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6, கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7

நான் விமானம் ஏறும் நாள் வந்தது. என்னைவிட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான் பதட்டம் அதிகமாக இருந்தது. எனக்குப் பிடித்த உணவு வகைகளில் விட்டுப்போன சிலவற்றை பரபரப்பாக சமைத்துக்கொண்டிருந்தார் அம்மா. நான் எடுத்துச் செல்லவேண்டிய பொடி, வடகம் வகைகளை கவலை தோய்ந்த முகத்துடன் 'பாக்' செய்துகொண்டிருந்தார் அப்பா. அவர்களை நிமிர்ந்துப் பார்ப்பதையே தவிர்த்து, என் பெட்டிகளில் துணிகளையும் பொருட்களையும் அடுக்கிக்கொண்டிருந்தேன் நான்.

விமான நிலையத்திற்கு அம்மா, அப்பா, மாமனார், சித்தியின் பிள்ளைகள், கணவரின் நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது. அவர்களுக்கெல்லாம் கையசைத்துவிட்டு, திரும்பிப்பார்க்காமல் கூட்டத்தில் சென்று மறைந்தேன். இதயம் கனத்தது.

அதே லுப்தான்சா விமானம். ஆனால் அதன் மீது வரும்போது இருந்த வெறுப்பு இப்போது இல்லை. திரும்பிச் செல்கையில் எத்தனை கனத்த இதயங்களை தாங்கிக்கொண்டு பறக்கிறது?!

அமெரிக்க வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டாலும், அது என்னுள் புகுத்திவிட்டிருந்த ஒரு 'கையாலாகாத்தனம்' வருத்ததை தந்தது. தூசி, சத்தம், அசுத்தம் ஆகியவற்றின் மீதான சகிப்புத்தன்மையை அமெரிக்க வாழ்க்கை என்னிடமிருந்து பிடுங்கி, என் நாட்டிற்கும் எனக்கும் ஒரு சிறு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்னுள் குற்ற உணர்ச்சியாக உறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த இடைவெளியை உடைத்தெறிய வேண்டுமானால், அடிக்கடி தமிழகம் போய்வந்துகொண்டிருக்க வேண்டும். அடுத்த ஜனவரியில் மீண்டும் போவதென்று முடிவு செய்தேன்.

தூக்கக் கலக்கமும் அயர்ச்சியுமாக வாசிங்டன் டிசி விமான நிலையத்தில் வந்திறங்கிய என்னையும் கணவரையும், ஒரு நண்பர் வந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சுடச் சுட சாப்பாடு போட்டார். வீட்டுக்கு வந்தபின் குளிர் சாதனப் பெட்டியைத் திறந்தால், அங்கே நாங்கள் வீட்டுச் சாவி கொடுத்திருந்த இன்னொரு நண்பர் பால், பழங்கள், தோசை மாவு, சாம்பார் எல்லாம் வைத்திருந்தார். மற்ற நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து "நல்லபடியா வந்துவிட்டீர்களா? நம்ம ஊர் எப்படி இருக்கிறது?" என்று நலன் விசாரித்தார்கள். மனம் நெகிழ்ந்தது. இங்கே மட்டும் அன்புக்கு என்ன குறைச்சல்?

நினைத்தாலே இனிக்கும் அடுத்த ஜனவரி தமிழகப் பயணத்தின் கனவில் குளிர்காய்ந்துகொண்டே, அமெரிக்க வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கினேன்...ஒபாமாவா? ஹில்லரி க்ளிண்ட்டனா? என்று அமெரிக்க அரசியலைப் பற்றிய கவலையும் ஆர்வமும் தொடங்கிவிட்டது...

இந்தப் பயணத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அவற்றை தமிழகத்திலிருந்து வலையேற்ற முடியவில்லை. நீண்ட நேரம் எடுத்தது. அடுத்து வரும் பதிவுகளில் புகைப்படங்களைப் போடுகிறேன்.

தொடரும்...

Wednesday, January 30, 2008

கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப் பழமையான கேரளத்து ஓட்டு வீடு பாணியில் இருக்கிறது. ஆனால் மிகப் பெரிஈஈஈஈஈஈஈஈயது!. அதன் பழமையை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். அந்த அரண்மணையினுள் சென்றால், வெளியே வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. விருந்தாளிகள் அறை, நவராத்திரி மண்டபம், சமையல் அறை, சாப்பாட்டு அறை, மகாராணியின் ஒப்பனை அறை, அந்தபுரம் என்று ஏகப்பட்ட அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒரு பலகையில் அந்த அறையினைப் பற்றிய விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்கிறது. மலையாளத்திலும் இருந்ததென்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. ஒவ்வொரு அறையிலும் ஒரு ஊழியரும் நின்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். சுற்றுலாத் துறை இங்கே தன் வேலையை நன்றாகச் செய்திருக்கிறது. நுனுக்கமான மர வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. ஒரே பலா மரத்தில் செய்யப்பட்ட அழகான தூண், 64 மூலிகை மரங்களினால் செய்யப்பட்ட கட்டில், இன்றும் சரியான நேரம் காட்டிக்கொண்டிருக்கும் 300 வருட பழமையான கடிகாரம், மிக அரிய ஓவியங்கள் என்று இந்த அரண்மணையில் சுவாரசியமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. மர வேலைப்பாடுகள், வித விதமான விளக்குகள் என்று கேரளாவின் பாரம்பரியம் மொத்தமும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது.
பழமையைப் பாதுகாக்கிறோம் என்று, ஒரு விளக்கு, ஒரு மின் விசிறி கூட போடாமல் விட்டுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் வியர்த்து விறுவிறுத்து, எப்படா வெளியே போவோம் என்றாகிவிட்டது! ஒரு சின்ன அறிவுரை. காலை 9 மணிக்குத் திறக்கிறார்கள். அப்போதே சென்று பார்த்துவிடுங்கள். உச்சி வெயில் நேரத்தில் சென்றீர்கள் என்றால் சிரமப்படுவீர்கள்.

அடுத்து கோவளம் கடற்கரை. அங்கே விடுதியில் சற்று ஓய்வுக்குப் பின் கடற்கரை சென்றோம். 'கோவளம்' என்றாலே தென்னை மரத் தோட்டம் என்று அர்த்தமாம்! பாறைகளில் மோதும் கடல் அலைகள்...தென்னை மரங்கள், தூரத்திலிருந்த ஒரு ஐயப்பன் கோவிலில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த கதகளி சத்தம் என்று கேரளா மணம் வீசினாலும், அங்கே பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தான் திரிந்துகொண்டிருந்தார்கள். கடற்கரையை ஒட்டி ஒரு நீண்ட கடை வீதி இருக்கிறது. கடற்காற்றை வாங்கிக்கொண்டே அங்கே மெதுவாக நடைபோட்டால் நன்றாகப் பொழுது போகிறது. கடைகள் வைத்திருப்பதெல்லாம் வடநாட்டவர்கள். கடைகளில் இருப்பவையெல்லாம் ஸ்பென்சர் ப்ளாசாவில் கிடைக்கும் அதே யானைகள், சிலைகள், சால்வைகள், கம்பளிகள்! தேங்காயில் செய்யப்படும் பாரம்பரிய கேரள கைவினைப் பொருட்கள் அங்கே தென்படவில்லை. கரையை ஒட்டி நிறைய உணவகங்கள் இருந்தன. பாரம்பரிய கேரள உணவான மலபார் செம்மீன் கறி, மீன் மொய்லி,
மீன் பொளிச்சது(மீனை வாழை இலையில் சுற்றி மெல்லிய தீயில் சமைத்தது!) - இதையெல்லாம் ஒரு கை பார்த்தோம்!

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற் கரை என்றப் பெருமையைக் கொண்டிருக்கும் மெரீனா கடற் கரையை விட கோவளம் கடற் கரை பல மடங்கு சுத்தமாக இருந்தது. ஹம்ம்...ஒரு வேளை கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் இப்படித் தெரிகிறதோ? :-)

அவ்வளவுதான்...ஊர் சுத்துவதை இத்துடன் முடித்துக்கொண்டேன். அமெரிக்கா திரும்பிச் செல்ல இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. நாட்கள் ஓடியது தெரியவேயில்லை. ஒரு மென் சோகம் தொற்றிக்கொண்டது. ஒரு கடினமான பிரிவுக்கு ஆயத்தமானேன்...

இருங்க இருங்க...என் பயணங்கள் முடிந்தாலும், சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.

எனவே, தொடர்வேன்...

Thursday, January 24, 2008

கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6

முந்தையத் தொடர் பதிவு: மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5

ஒரு அதிகாலை வேளை, திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அம்மா அப்பாவுக்காக பிரத்தியேகமாக நானும் அக்காவும் சேர்ந்து திட்டமிட்ட பயணம் இது. "மாப்பிள்ளைகளும் வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்ன பெற்றோர்களிடம், "வேண்டுமானால் அவர்களுடன் நீங்கள் தனியாகப் போய்க்கொள்ளுங்கள்" என்றோம் நானும் அக்காவும்!

திருச்சியிலிருந்து மதுரை வரை நெடுஞ்சாலை மிக மோசமாக இருந்தது. ஒரு வழிச் சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் போலும். நெடுக வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு வருத்தம் என்னவென்றால், "Take Diversion", "Work In Progress", "Heavy Machine Crossing" போன்ற எச்சரிக்கை பலகைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆனால் அந்தப் பலகைகள் ஏதோ தனியார் நிறுவனத்துனுடையது என்று நினைக்கிறேன்.

மதுரை நோக்கிச் செல்லும் போது, பாறைகளினால் ஆன குன்றுகள் நிறையத் தெரிந்தன. சில குன்றுகள் வினோதமான வடிவில் இருந்தன. இந்தக் குன்றுகள் அமெரிக்காவில் இருந்திருந்தால், உடனே அதற்கு ஒரு பெயர் வைத்து, இணையதளம் ஒன்றை வடிவமைத்து, அந்தக் குன்றில் hiking trail அமைத்து அதை ஒரு சுற்றுலா தளமாக மாற்றியிருப்பார்கள்! :-)
மேலூர் தாண்டியபின் எங்குபார்த்தாலும் மு.க அழகிரியின் போஸ்ட்டர்கள். கிருஷ்ணாபுரத்தில் கணிமொழிக்கு வரவேற்பு வாசகங்கள் ஆங்காங்கு தென்பட்டன. கிருஷ்ணாபுரத்தில் அபூர்வ வடிவமைப்பில் பல சிலைகள் இருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட கணிமொழி அங்கே வந்ததாகவும் அப்பா சொன்னார்.

ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றைக் கடந்து சென்றோம். திருநல்வேலிக்கப்புறம் சாலையோரம் எங்கு பார்த்தாலும் வாழைத்தோப்புகளும் தென்னந்தோப்புகளும்! பச்சைப்பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. தூரத்தில் மேற்கு மலைத்தொடர் தெரிந்தது.

கன்னியாகுமரி வந்தாகிவிட்டது. விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, மதியம் நான்கு மணிக்கு, படகில் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லலாம் என்று ஆவலாகக் கடற்கரைக்குப் போனால், 3 மணிக்கே படகு சவாரி நிறுத்தப்பட்டுவிட்டது, மீண்டும் காலை 8 மணிக்குத்தான் என்றார்கள். "We missed the boat" என்று ஏமாற்றத்தைத் துடைத்துவிட்டு, கடற்கரையை நோட்டம் விட்டேன். விவேகானதர் மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் தெரிந்தன. விவேகானந்தர் மண்டபத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதனால் இப்போது என் முழு கவனமும் திருவள்ளுவர் சிலைமீது தான் இருந்தது. கடல் அலைகளுக்கு நடுவே வானுயர கம்பீரமாக எழுந்து நின்றது திருவள்ளுவர் சிலை. புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன்.

வரிசையாக பல வண்ணங்களில் படகுகள், மீண் வலைகள், பாரதிராஜா படத்தில் வருவது போல் கடற்கரையை ஒட்டிய ஒரு தேவாலயம், தென்னை மரங்கள் என்று கன்னியாகுமரி ஒரு எழில்மிகு ஊராகத் தெரிந்தது. சூரிய அஸ்தமத்தைப் பார்க்கலாமென்று காந்தி மண்டபம் சென்றோம். அங்கே ஒரு பெரிய மக்கள் கூட்டம் சூரிய அஸ்தமத்தைப் பார்க்க கிடைத்த இடத்திலெல்லாம் உட்கார்ந்திருந்தது. பெரும்பான்மையாக வட இந்தியர்கள், நிறைய வெளிநாட்டவர்கள் இருந்தார்கள். சிகப்புச் சூரியன் மெல்ல கீழே இறங்கிக்கொண்டிருந்தது. நானும் அக்காவும் ஒரு மதில் சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டோம். சூரியன் மெல்ல கீழே இறங்கி கடலுக்குள் சென்று மறைவதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகியது. நன்றாக திவ்யமாக அந்தக் காட்சியை கண்டுகளித்துவிட்டுத் திரும்பினால் இந்தப் பக்கம் நிலா வெளியே தலை நீட்டி வந்துகொண்டிருந்தது. ஆகா! எவ்வளவு அழகு இந்த இயற்கையில்! காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்!

அடுத்து கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழியிலெல்லாம் சிறு கடைகள். நிறைய சோழிகளாலான கைவினைப் பொருட்கள் இருந்தன. கோவிலை நெருங்குகையில் "கலைமகளே வருக" என்ற இனிமையானப் பாட்டு வரவேற்றது. உள்ளே போனால், அப்போது தான் அம்மனுக்கு சந்தியா காலத்துப் பூஜை மேள தாளத்துடன் செய்துகொண்டிருந்தார்கள். மற்றுமொரு கண்கொள்ளாக் காட்சி காணக் கிடைத்தது.
கோவிலுக்குப் பின்புறம் ஒரு பூங்கா இருந்தது. அங்கு சென்றபோது, மணி மாலை 7:30 இருக்கும். இருட்டிவிட்டிருந்தது. கோவிலுக்குப் பின்புறம் சென்ற நானும் அக்காவும் வாய் பிளந்து நின்றோம் கண்ணெதிரே தெரிந்ததைப் பார்த்து!!! Breath taking view என்பார்களே, அது இதுதான்! கன்னியா குமரி வந்ததன் "hight light" இந்தக் காட்சி தான் என்று சொல்லலாம். இருட்டில், நிலவொளியில் கடல் பளபளத்துக்கொண்டிருக்க, விவேகானந்தர் மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் அவற்றைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் மெல்லிய ஒளி விளக்கில் ஒளிர்ந்து, உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. கன்னியாகுமரி செல்லும் அனைவரும், இரவு இந்தக் காட்சியை கட்டாயம் பாருங்கள். It is really worth it. கோவிலுக்குப் பின்னால் இருக்கும் பூங்காவில் உள்ள மண்டபத்திலும், படிகட்டுகளிலும், மதில் சுவர்களிலும் மக்கள் உட்கார்ந்து இந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். கடல் காற்று வேறு அள்ளிக் கொண்டு போனது. எட்டு மணியளவில் விவேகாந்தர் மண்டபத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால் திருவள்ளுவர் மட்டும் தொடர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலை முதல் படகு சவாரியைப் பிடித்து திருவள்ளுவர் சிலை சென்றோம். மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்லும்போது காற்று பலமாக வீசியது. உள்ளிருக்கும் சுவர்களில் திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் எழுதியிருந்தால் வெளிநட்டவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமே?! மூன்று அடுக்குகள் ஏறிச் சென்றோம். முதல் தவிர மற்ற இரண்டு தளங்களிலும் சுவர்கள் வெறுமையாக இருந்தன. அவற்றியில் ஏதாவது படங்கள் அல்லது திருக்குறள் சம்மந்தப்பட்ட செய்திகள் ஆகியவற்றை பதிக்கலாம். திருவள்ளுவரின் பாதம் அழகாக இருந்தது. தொட்டு வணங்கினேன். இங்கேயும் நிறைய வட இந்தியர்கள் கும்பல் கும்பலாக வந்தார்கள். திருவள்ளுவரின் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். எனக்கு ஆச்சரியம். இவர்களுக்கு உண்மையிலேயே திருவள்ளுவரைப் பற்றித் தெரியுமா? அல்லது ஏதோ ஒரு சாமி சிலை என்று நினைத்து வணங்கிவிட்டுப் போகிறார்களா? சிலர் திருவள்ளுவரின் பாதத்தில் காதை வைத்து ஏதோ கேட்க முயற்சி செய்தார்கள். ஏதோ அங்கே ஓசை கேட்கும் என்று யாரோ சொன்னார்களாம். எனக்கு எதுவும் கேட்கவில்லை.

கன்னியாகுமரி உண்மையிலேயே ஒரு மிக அழகிய சுற்றுலா தளம். மூன்று கடல்கள் கலக்கும் இடம், இந்தியாவின் கடை கோடி, காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை - இப்படி பல சிறப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதென்றால் அது பெரிய விஷயம் தானே? இன்னும் கொஞ்சம் சுற்றுலாத் துறை சிரத்தை எடுத்து கன்னியா குமரியைப் பராமரித்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து கோவளம் கடற்கரை நோக்கிப் பயணம்...

தொடரும்...

Saturday, January 19, 2008

மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5

முந்தைய தொடர் பதிவு: மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4

பொங்கலுக்கு மயிலாடுதுறை வருகிறேனென்று மாமியாரிடம் முன்னமே சொல்லியிருந்தேன். பொங்கலுக்கு முன் தினம் மாலை மயிலாடுதுறை வந்துவிட்டேன். என் கணவர் பிறந்து வளர்ந்த ஊர் அது. எல்லாருக்குமே தம் பூர்வீக மண்ணின் மீது பற்று இருக்கத்தான் செய்யும். ஆனால் என் கணவர் ஒரு படி மேலே போய், மயிலாடுதுறை தான் உலகத்திலேயே சிறந்த இடம் என்பார்!

வாசிங்டன் டிசியில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை, வாசிங்டன் நகருக்கு ஒரு 'மினி' சுற்றுலா அழைத்துச் செல்வது கணவரின் வழக்கம். அதுபோல், என்னை மயிலாடுதுறையில் மினி சுற்றுலா அழைத்துச் சென்றார். மயிலாடுதுறை மேம்பாலம், மணிக்கூண்டு, கடைத்தெரு என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். தான் ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக பரோட்டா வாங்கிச் சாப்பிட்ட 'ஜெய்' பரோட்டா கடையைக் காட்டினார். அப்போது ஒரு பரோட்டா 35 பைசாவம்!

கடைத்தெருவின் நடுவே நின்று, "இது தான் என் ராஜாங்கம்! இங்கே உனக்கு என்ன வேண்டும், கேள்" என்றார். "எனக்கு சூடா பட்டாணியும் வறுத்த கடலையும் வேண்டும்" என்றேன். உடனே ஒரு கடைக்குச் சென்று வாங்கி வந்தார். கடையின் பெயர் மறந்துவிட்டது, ஆனால் அது அங்கே பிரபலமான கடையாம். நிறைய நகைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. 'சீமாட்டி' துணிக்கடையில் சென்னைக்கு இணையாகத் துணிகள் அருமையாகக் கிடைக்கின்றன.
கணவரின் பாட்டி, சித்தி, மாமா என்று எல்லாருமே 5 நிமிட நடையில் இருந்தார்கள். எல்லோரையும் பார்த்து பொங்கலன்று ஆசீர்வாதம் வாங்கியதில், நிறைய 'கலெக்ஷன்' கிடைத்தது. அடுத்த கட்ட ஷாப்பிங் செய்ய உதவியாக இருக்குமென்று பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன் :-)

வாசிங்டன் டிசியில் என்னுடைய சமையல் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலம். என் சமையல் திறனை மாமியாருக்கு எப்படி நிரூபிக்கலாம் என்று யோசித்தேன். சரி, ஏதாவது சிறப்பு உணவு செய்து அசத்தலாம் என்று சமையலறைக்குச் சென்று நோட்டமிட்டேன். முதலில் அங்கே கத்தி இல்லை. அரிவாள் மனை தான் இருந்தது. எனக்கு அதில் காய்கறி வெட்டி பழக்கம் இல்லை. மேலும், அரிசி எங்கே இருக்கு, பருப்பு எங்கே இருக்கு, உப்பு எங்கே இருக்கு என்று ஒவ்வொன்றாக மாமியாரை கேட்டு கேட்டு நான் சமைப்பதற்குள் அவரே வெறுத்துப் போய்விடுவார் என்பதால், "உங்களுக்கு சமைத்துப் போடனும்னு ஆசைதான், ஆனால் உங்கள் சமையல் முன் என் சமையல் கால் தூசி. உங்க கையால் இப்படி பிரமாதமான உணவைச் சாப்பிட எனக்கு இதைவிட்டால் அப்பறம் எப்ப வாய்ப்பு கிடைக்கும்?" என்று மாமியாரின் தலையில் இரு கூடை ஐஸ்சை கொட்டிவிட்டு சமையலறையிலிருந்து நழுவினேன்! அடுத்த இரண்டு நாட்களில் 'அவனுக்குப் அது பிடிக்கும் அவனுக்குப் இது பிடிக்கும். இதெல்லாம் அமெரிக்காவில் சாப்பிட முடியாது, பாவம்' என்று மாமியார் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை வரிசையாகச் செய்து போட்டார். நான் மனதிற்குள் குமைந்தேன்...எனக்குக் கூடத் தான் இதெல்லாம் நன்றாகச் செய்யத் தெரியும். யாராவது என் மாமியாரிடம் சொல்லுங்களேன்?! :-)

மயிலாடுதுறை வாழ்க்கை நன்றாகத் தானிருந்தது. சின்ன, அமைதியான ஊர். எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கடைத்தெரு கலகலப்பாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக புடவைக் கட்டி, மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் பெரியவர்கள் ஆசீர்வதித்து இட்டுவிட்ட விபூதி குங்குமத்துடன் நடமாடுகையில் எனக்கே என்னைப் பார்த்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் அது பிடித்திருந்தது.

சென்னை, திருச்சி, மயிலாடுதுறை என்று இதுவரை உள்ளூரிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நான், நாளை கன்னியா குமரி மற்றும் கேரளா செல்கிறேன். சென்று வந்தபின் அந்தப் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.

தொடரும்...

Friday, January 18, 2008

மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4

முந்தைய தொடர் பதிவுகள்:

சென்னையிலிருந்து தாரா - 1

சென்னையிலிருந்து தாரா - 2

திருச்சியிலிருந்து தாரா - 3

திருச்சியில் சில நாட்கள் ஒய்வுக்குப் பின், பந்தடித்தது போல் மீண்டும் சென்னையில்! என்ன செய்வது??? சென்னையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தாலும், செய்ய வேண்டிய வேலைகளும், பார்க்க வேண்டியவர்களும், வாங்க வேண்டியவைகளும் சென்னையில் தானே இருக்கின்றன?

'சிங்காரச் சென்னை', 'மெடிக்கல் மெக்கா' போன்ற பட்டங்களுக்கு சென்னை பொருந்தாவிட்டாலும், 'shopper's paradise' என்கிற பட்டத்திற்கு 100% பொருந்தும்! எத்தனை துணிக்கடைகள்? எத்தனை நகைக்கடைகள்? எத்தனை வகைகள்?! டி.நகரில் 'போத்தீஸ்' துணிக்கடைக்குச் சென்று எனக்கு மயக்கமே வந்துவிட்டது. 'துணிக்கடல்' என்று தான் சொல்லவேண்டும். மனிதர்களும் அங்கே கடல் அலை போல் வந்து மோதுகிறார்கள். பனகல் பார்க் வட்டாரம் மிகவும் ஜன நெருக்கடியாக இருக்கிறது. காரணம், சரவணா ஸ்டோர்ஸ், குமரன், நல்லி, சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி என்று பிரபலமான துணிக்கடைகள் அத்தனையும் அங்கே தான் இருக்கிறது. எல்லா துணிக்கடைக்காரர்களும் அங்கே தான் போட்டிப் போட்டுக்கொண்டு கடைத் தொடங்குகிறார்கள். சற்று அமைதியாக, குளுமையாக ஷாப்பிங் செய்யவேண்டுமானால் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்லலாம். 'சிட்டி சென்டர்', 'மாயா ஜால்' போன்ற இடங்களுக்கு இன்னும் போகவில்லை நான். 'பாஷ்மினா' வகை சால்வைகளை மக்கள் இப்போது அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் மெல்லிய வகை சால்வைகள் அவை. பல வண்ணங்களிலும், டிசைன்களிலும் இவற்றைக் கடைகளில் பார்க்கலாம். 200 ரூபாயிலிருந்து 5000 ருபாய் வரைக்கும் பல ரகங்கள் இருக்கின்றன. ஸ்பென்சரில் பேரம் பேசினால் 100 அல்லது 200 ருபாய் வரை குறைத்து வாங்கலாம்.

டிசைனர் புடவைகள் சமீப காலமாக மிகவும் பிரபலம். ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு எதிர்தார்ப்போல் 'மோக்க்ஷா' என்று ஒரு துணிக்கடையில் அழகான டிசைனர் புடவைகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல் அண்ணா நகரில் 'திவா' என்கிற கடையும் இருக்கிறது. வீட்டுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கவேண்டுமென்றால், 'கல்பத்ருமா', 'தார்' போன்ற கடைகள் இருக்கின்றன. 'பூம்புகார்', 'விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்' கடைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ''fashion jewellery' வாங்க, பாண்டி பஜாரில் 'ஜில் மில்' கடை! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!

ஒரு சூறாவளி ஷாப்பிங் செய்துவிட்டு, சென்னை சங்கமம் பார்க்கவேண்டுமென்று அடித்துப்பிடித்துக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு ஓடினேன். மாலை 5 மணி இருக்கும். பூங்காவின் வாசலில் ஒரு சில வாகனங்கள்...சிறு சலசலப்பு. பூங்காவினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் பாட்டுச் சத்தம் கேட்டது. இனிமையான தமிழ்ப் பாடல்கள்...திருக்குறள் காதில் விழுந்தது. பூங்காவின் மையத்தில் மேடை போட்டிருந்தது. மேடைக்கு முன் தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் சிலரும், மரத்தடிகளில் சிலரும் அமர்ந்திருந்தார்கள். மணி 5:10...சலசலப்பு அதிகரித்தது. கூட்டம் கூடத் தொடங்கியது. திடிரென்றுப் பார்த்தால் நிற்கக் கூட இடம் இல்லாத அளவு அவ்வளவு கூட்டம். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டுப் புறக் கலைகளைப் பார்க்க இவ்வளவு பேர் ஆர்வமாக வந்திருக்கிறார்களே என்று.



நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நையாண்டி மேளமும் உறுமி மேளமும். அதிரும் மேள இசையைக் கூட்டம் தலையசைத்து, தாளம்போட்டுக் கேட்டு ரசித்தது. அடுத்து கணீரென்ற குரலில் 'வந்தனம்' பாடினார் ஒரு பெரியவர். அப்பறம் கரகம். சுழன்று சுழன்று கரகம் ஆடியப் பெண்மணியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அப்பறம் 71 வயது பெரியவர் காவடி ஆடினார். காவடியில் இத்தனை சாகசங்கள் இருக்கிறதாவென்று ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் பறை!!! சூப்பர்!!! அடி தூள் கிளப்பிவிட்டார்கள்! இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் எனக்கே ஆட்டம் வந்திருக்கும். நரம்பெல்லாம் புடைக்கவைக்கும்படி இருந்தது பறை அடியும் ஆட்டமும். சென்னை சங்கமத்தில் ஒரு நிகழ்ச்சியையாவது பார்க்க முடிந்ததே என்கிற மன திருப்தியுடன் அங்கிருந்து அகன்றேன்.


அடுத்த நாள் புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட வேண்டுமென்று பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியை நோக்கி விரைந்தேன். கண்காட்சி 10 மணிக்கு என்று நினைத்து அங்கே சென்றால், 11 மணிக்கு தொடங்குகிறது என்றார்கள். ஒரு மணி நேரம் அங்கே காத்திருக்க அவகாசம் இல்லை எனக்கு என்பதால், சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு நடையைக் கட்டினேன். அங்கே என்னைக் கவர்ந்த ஒரு போஸ்டர் "இந்தியாவின் முதல் ம்யூசிகல் ATM". பணத்தை செலுத்திவிட்டு வேண்டிய இசையை குறுந்தட்டில் இறக்கிக் கொள்ளலாம்! இது சுவாரசியமான வசதியாகப் பட்டது எனக்கு.

தங்கியிருந்த இடத்திற்கு திரும்பச் செல்கையில், முதலமைச்சர் எங்கோ 3 மணிக்கு செல்கிறாராம். அதனால் போக்குவரத்தை கண்டபடி அங்கேயும் இங்கேயும் மாற்றிவிட்டதால், திக்கித் திணறி ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டி வருவதற்குள் உடம்பிலுள்ள தெம்பெல்லாம் வற்றிவிட்டது!!! திரும்பி என்கிட்டயா வந்தாய்? உனக்கு நல்லா வேண்டும் என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தது சென்னை!!!

அடுத்து நான் தஞ்சம் புகுந்தது மயிலாடுதுறையில் மாமியார் வீட்டில்!

தொடரும்...

Tuesday, January 01, 2008

திருச்சியிலிருந்து தாரா - 3

முந்தைய பதிவுகள்:

சென்னையிலிருந்து தாரா - 1
சென்னையிலிருந்து தாரா - 2

சென்னையிலிருந்து தப்பி திருச்சி வந்ததும் அக்கடா என்றிருந்தது. சென்னையைப் போல் திருச்சி பரபரப்பாக இல்லை. நிறைய இடங்களில் புதிய சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அமைச்சர் கே.என் நேரு திருச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக அப்பா சொன்னார். எப்போது திருச்சி வந்தாலும் மலைக்கோட்டை கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வது வழக்கம். அந்தி சாயும் நேரத்தில் அந்த விபூதி குங்கும வாசனை, 'டிங் டிங்' என்ற கோவில் மணியோசை, புடைவையைப் படபடக்க வைக்கும் தென்றல் காற்று, மேலிருந்து கீழே பார்க்கும் போது மினுமினுக்கும் திருச்சி மாநகரம் - இதெல்லாம் ஒரு ரம்மியமாக சூழ்நிலையாக இருக்கும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பே மலைக்கோட்டை ஏறும் போது தஸ்புஸ் என்று மூச்சு வாங்கியது. இந்த முறை கட்டாயம் ஏற முடியாதென்று முடிவு செய்து, மலைக்கொட்டையை ஒரு ஏக்கப் பார்வை பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டேன். தெப்பக்குளம் அருகில் உள்ள கடைத்தெரு எப்போதும் போல் ஜகஜோதியாக இருந்தது. 'சாரதாஸ்' கடையை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு தெரு முழுவதுமே சாரதாஸ் கடை தான்! திருச்சியில் புகழ்பெற்ற மங்கள் & மங்கள் பாத்திரக்கடைக்குப் போட்டியாக சென்னை ரத்தினா ஸ்டோர்ஸை அங்கே தொடங்கியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் திருச்சியும் சென்னைபோல் கூட்டமுன் நெரிசலுமாக மாறப்போவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன!

இரண்டு நாட்கள் அம்மா அப்பாவுடன் அமைதியாகப் பொழுதை ஓட்டினேன். அதற்கப் பிறகு சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்று மனம் உறுத்த, ஒரு சிறிய அறிவுப்பூர்வமான பயணம் சென்று வந்தேன். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்று ஒரு இடம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு இளங்குமரனார் என்று ஒரு தமிழ் அறிஞர் பெட்னா விழாவுக்கு வந்திருந்தார். 80 வயதாகும் இவர், தமிழில், முக்கியமாக திருக்குறளில் பல ஆராய்ச்சிகள் செய்து சாதனைகள் புரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு கையினால் விருது வாங்கியிருக்கிறார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால், அல்லூர் தாண்டி இடது புறம் இருக்கிறது அவர் தோற்றுவித்து நடத்தும் இந்தத் திருவள்ளுவர் தவச்சாலை. அது ஒரு பழைய மாடிவீடு. உள்ளே நுழைந்தபோது, தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் ஐயா இளங்குமரனார். அந்த வீட்டில் ஒரு அராய்ச்சியகம், நூலகம், ஆலயம் என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. நூலகத்தில் கிட்டத்தட்ட 17,000 அரிய தமிழ்ப் புத்தகங்கள் - சங்க இலக்கியங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உட்பட இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் ஐயா பார்த்துப் பார்த்து இந்த நூல்களைச் சேகரித்திருக்கிறார். தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இங்கே வந்து இந்தப் புத்தகங்களை அங்கேயே படித்துவிட்டு குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். மாடியில் ஆராய்ச்சிக்கூடம். அங்கே இருப்பவற்றைப் பார்த்து வாய்பிளந்தேன் நான். ஒரு பெரிய அறையின் இடது புறமும் வலது புறமும் ஐயா வாங்கிய விருதுகளும், கேடயங்களும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அறையின் நீள வாக்கில் போடப்பட்டிருந்த நீண்ட மேஜைகளில் தமிழ் அறிஞ்சர்களின் புகைப்படங்கள், திருக்குறளை மொழிபெயர்த்தவர்களின் புகைப்படங்கள் அழகாக ஒட்டப்பட்டிருந்தன. பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்றவர்களின் கையெழுத்திப் பிரதிகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எப்பேற்பட்ட சேமிப்புகள் இவை!!! கோடி ரூபாய் கொடுத்தாலும் இவை வெளியே எங்கேயும் கிடைக்காது. ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியேறி கீழே வந்தால், வீட்டின் பக்கவாட்டில் ஒரு சிறிய ஆலயம். உள்ளே திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலை. காவிரி ஓடும் பூமியில் திருவள்ளுவருக்கு இப்படியொரு தவச்சாலையை அமைத்து சுயநலமில்லாத தமிழ்ச் சேவை செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் ஐயாவை என்னவென்று சொல்வது? விவரிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்!

இந்தச் தவச்சாலை ஒரு பொக்கிஷம்! என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழக அரசு அல்லது சுற்றுலாத் துறை இந்த தவச்சாலையைத் தத்தெடுத்துக்கொண்டு, அதனை செம்மைப்படுத்த வேண்டும். திருச்சியில் உள்ள சுற்றுலா தளங்களின் பட்டியலில் இந்தச் தவச்சாலையும் இடம்பெறவேண்டும். தற்போது அங்கே இருக்கும் அரிய புத்தகங்களெல்லாம் பழுப்பு நிற அட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பல நவீன புத்தக பாதுகாப்பு முறைகள் வந்துவிட்டன. அந்த உதவிகள் அங்கே வழங்கப்படவேண்டும். இந்தப் புத்தகங்களைப் போலவே ஐயா இளங்குமரனாரும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இவருக்குப் பின் இந்தத் தவச்சாலையும் பொக்கிஷங்களும் யாருடையப் பொறுப்பில் விடப்படும் என்று அவரிடம் கேட்க நினைத்துக் கேட்காமல் வந்துவிட்டேன்.

சென்னையிலிருந்து தாரா - 2

வெள்ளி, டிசம்பர் 28, சென்னை மெரீனா கடற்கரை, காலை 7 மணி

ரம்மியமான காலைப்பொழுது...தங்க நிறத்தில் சூரிய ஒளியில் கடல் தகதகத்துக்கொண்டிருந்தது. தூரத்தில் மீன் பிடிக்கும் படகுகள் ஓவியம் போல் தெரிந்தன. கடற்கரை சாலையில் நிறைய கார்கள், ரெண்டு சக்கர வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. உற்சாகமாக பலர் நடைபயில்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். புடவை கட்டி டென்னிஸ் ஷ¥ அனிந்து வாக்கிங் செல்லும் பெண்களைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. தண்ணீருக்கு அருகே போகலாம் என்று உடன் வந்த தம்பிகளிடம் சொன்னேன். வேண்டாம் இங்கேயே நடக்கலாம் என்றார்கள். நான் அவர்களிடமிருந்து விலகி, கடலை நோக்கி நடந்தேன். சூரியனின் ஒளியில் படகுகளின் அழகை ரசித்துக்கொண்டே நடந்து போய் கடல் நீரில் காலை நனைத்தேன். சிலீரென்று சுகமாக இருந்தது. கடலோரத்திலேயே தண்ணீரில் காலை நனைத்தபடியே நடந்தேன். இடது புறம் கடல். வலது பக்கம் ஆங்காங்கே மனிதக் கழிவுகள். இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் நான் கலர் கண்ணாடி போட்டிருக்கிறேன் என்பார்கள். நீங்க வந்து கழிப்பறை கட்டிக்கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். சென்னை வாசிகள் சுகாதாரமான காற்றை சுவாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ மெரீனா கடற்கரைக்கு வராமல் இருப்பது நல்லது. எனக்கு மனம் கனத்தது. நான் நேசித்த சென்னையா இது?!

மெரீனாவிலிருந்து அருகே உள்ள சரவணபவன் உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டோம். அந்த மாதிரி ஒரு மெது வடையை நான் என் வாழ்நாளில் சுவைத்ததே கிடையாது!!! அவ்வளவு சுவையாக மொறுமொறுவென்று இருந்தது. சரவணபவன் பற்றி தம்பிகள் நிறைய நல்ல விசயங்கள் சொன்னார்கள். அங்கே பறிமாறுபவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றவர்களாம். 'டிப்ஸ்' கொடுத்தால் வாங்கமாட்டார்களாம். தண்ணீரைக் கொட்டுவது, சாம்பாரைச் சிந்துவது போன்ற எந்த தவறும் அங்கே நடக்காதாம். உயர் தர AC உணவகங்களுக்கு மட்டுமே நாடிப் போகும் வி.ஐ.பி க்கள் விரும்பிச் செல்லும் ஒரே நடுத்தர உணவகம் சரவணபவன் தானாம்! கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஒரு குறை. கீழே இருக்கும் படம் சரவணபவனில் மேசையில் வைக்கும் பேப்பர். அதில் எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதையும், மருந்துக்குக்கூட தமிழில் எதுவும் இல்லை என்பதையும் பார்க்கலாம். மெனு அட்டையை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அதில் தமிழில் இருந்திருக்கலாம்.

சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில்பாதைகளை ஒரு வழிப் (one way) பாதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கு போனாலும் போக்குவரத்து நெரிசல். இன்று வைக்கோவுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது போலும். சாலைகலெங்கும் வைக்கோவின் போஸ்டர்கள். சேது சமுத்திர நாயகன், தமிழர்களின் முகவரி, வாலிபப் பெரியார், நாளைய தமிழகம், மறுமலர்ச்சி நாயகன் என்று வைக்கொவின் புகழ் பாடும் வாசகங்கள் எங்கே பார்த்தாலும்! புடவைக் கடைகள், நகைகடைகளின் பானர்கள் பிரம்மாண்டமாக நகரத்தின் எல்லா முக்கிய இடங்களிலும் காணப்படுகின்றன.

புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஒன்றிரண்டு பானர்கள் பார்த்தேன். சென்னை சங்கமத்தைப் பற்றிய எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

சனி, டிசம்பர் 29, விழுப்புரம்

விழுப்புரம் அருகில் உள்ள சித்தனங்கூருக்கு இன்று பயணம். அமெரிக்காவில் பிலடெல்பியா(philadelphia) நகரில் Phil Mock என்று ஒரு அமெரிக்கர், ஒரு சேவை அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் கல்விப் பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கும் ஒரு sponsor இருப்பார்கள். வருடம் இரண்டு முறை தமிழகம் வரும் Phil, இந்தக் குழந்தைகளுக்காக முகாம்கள் நடத்துகிறார். இந்த முறை சித்தனங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் முகாம் நடந்துகொண்டிருந்தது. அந்த முகாமுக்கு நானும் என் கணவரும் சென்றிருந்தோம்.

சென்னையை விட்டு வெளியேரி கார் NH 45 நெடுஞ்சாலையை எடுத்ததும் 'அப்பாடா' என்றிருந்தது. அருமையாக இருக்கிறது இந்த நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள். வழியில் காரை நிறுத்தி இளநீர் குடித்தொம். வழியில் நடிகர் விஜயகாந்தின் பொறியியல் கல்லூரியைக் கணவர் காட்டினார். மேல்மருவத்தூரைக் கடக்கையில் எங்கெங்கும் சிவப்பு வண்ணம், வேப்ப இலை கட்டிய பேருந்துகள்.

சித்தனங்கூரில் உள்ள பள்ளியில் நுழைந்தோம். தென்னந்தோப்புக்குள் இருந்தது அந்தப் பள்ளி. உள்ளே ஒரு அறையில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சாம்பார் சாதத்தைக் கையில் பிசைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார் Phil. எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மதிய உணவு நேரம் என்பதால் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். Phil தாத்தா என்றும், Phil மாமா என்று அவரை அன்புடன் அழைக்கும் அந்தக் குழந்தைகளில் பலர் தலித் குழந்தைகள். அவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, உற்சாகமாக அந்த முகாமில் நடக்கும் வகுப்புகளைப் பற்றியும் பயிற்சிகளைப் பற்றியும் எங்களுக்குச் சொன்னார்கள். அவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து "ஒரு நல்ல கிராமம் எப்படி இருக்க வேண்டும்?" "ஒரு நல்ல தாய் எப்படி இருக்க வேண்டும்?" போன்ற தலைப்புகளைக் கொடுத்து ஒரு குழுவாகக் குழந்தைகளை கலந்தாலோசிக்கச் செய்து பின்னர் அவர்களது எண்ணங்களை கேட்டறிகிறார்கள். அவர்களுக்கு இசை பயிற்சியும் உண்டு.தனக்குத் தமிழ் தெரியாததை ஒரு ஊனமாகக் கருதி, தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார் Phil. 'இலை' க்கும் 'இல்லை' க்குமான உச்சரிப்பைத் தன்னால் பிரித்துப்பார்கவே முடியவில்லையென்றும், தமிழ் பேசுவதற்காக தன் நாக்கினால் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியே நடத்தவேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். அவருக்கும் 60 வயதிருக்கும். அவர் நினைத்திருந்தால் வயதான காலத்தில் அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் ஒய்வு ஊதியத்தில் நிம்மதியாக வசதியாக இருக்கலாம். ஆனால், ஏழைக் குழந்தைகளுக்கு, அதுவும் தமிழ்நாட்டில் வந்து அவர் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது? ராயப்பன் என்கிற தலித் இளைஞனை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் Phil. நாங்கள் Phil இடம் விடைபெற்று சென்னை திரும்புகையில் விழுப்புரம் வரை அந்த இளைஞனும் எங்களுடன் காரில் வந்தார். ரொம்பத் துடிப்பான இளைஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் இசை படித்தவர். வீணை இசையில் கில்லாடி. சொந்தமாக வீணை வாங்கக் கூட வசதியில்லாத இவருக்கு Phil தான் வீணை வாங்கிக்கொடுத்தாராம். அவரை பாடச்சொல்லிக் கேட்டபோது, 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்கிறப் பாடலைப் பாடினார். அப்படி ஒரு கணீரென்ற குரல். இசையில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் தெரிந்தது. சாதிக்கவேண்டுமென்றால் சென்னையில் போய் உட்காரவேண்டும், ஆனால் அங்கே போய் எங்கே தங்குவதென்று தெரியவில்லை. இப்போது அங்கங்கே பாட்டு வகுப்பு நடத்தி சம்பாதித்து பெற்றோர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். பொழப்பை விட்டுவிட்டு சென்னை போகவும் முடியாது. வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பில்லாத சூழ்நிலைக்கைதியாக இருக்கிறேன் என்று அவர் சொன்னபோது தொண்டையில் ஏதொ அடைத்தது. தூர்தர்ஷனில் விண்ணப்பம் செய்திருப்பதாகச் சொன்னார். "கற்றது தமிழ்" படத்தில் இளையராஜா பாடிய பாட்டு பாடுங்கள் என்றபோது, அந்தப் பாட்டு கேட்டதில்லை, என்னிடம் காசெட் ப்ளேயர் இல்லை என்றார். வடலூரில் இருக்கும் அவருடைய வீட்டு முகவரியை எழுதி வாங்கிக்கொண்டேன். ஒரு நல்ல காசெட் ப்ளேயர் வாங்கி அவருக்கு அனுப்பவேண்டும்.

சென்னைக்குள் தாம்பரத்தில் நுழைந்தபோது மாலை மணி ஐந்து. வேளச்சேரியில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றடைந்தபோது மணி எட்டு!!!. கத்திப்பாறைக்கருகில் பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசல்! மெதுவாக கணவரிடம், "நாளைக்கு நான் திருச்சி போய்விடட்டுமா? எனக்குச் சென்னை சரிப்பட்டு வரலை" என்றேன்.

தொடரும்...

சென்னையிலிருந்து தாரா - 1

ஐந்து வருடங்கள் கழித்து தமிழகம் வந்திருக்கிறேன். வந்து ஒரு வாரம் ஆகிறது. என் அனுபவங்களை தினம் ஒரு வலைப்பதிவாக எழுதவேண்டுமென்று விருப்பம். ஆனால் நேரமோ இணையத் தொடர்போ அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. என் வெளிப்பாட்டில் மகிழ்ச்சியும் இருக்கலாம், வருத்தமும் இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கிறோம் என்கிற திமிரோ அலட்டலோ கட்டாயம் இல்லை. நான் 26 வருடங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவள். இது போன்ற பயணங்கள் எனக்குத் தாய்நாட்டுடனான பந்தத்தினை வலுவாக்குமே தவிர, என்னை விலகிச் செல்லத் தூண்டாது என்று ஆழமாக நம்புகிறேன்.

செவ்வாய் டிசம்பர் 25 அமெரிக்க நேரம் இரவு மணி 10:00

லுப்தான்ஸா விமானம் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்துகொண்டிருக்கிறது. இந்தத் தொலை தூர விமானப் பயணத்தில் நேரத்தை கொல்வதற்காகவே ஒரு போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரை கொண்டுவந்திருந்தேன். அதில் எனக்குப் பிடித்த ஒரு திரைப்பட குறுந்தட்டைப் போட்டு ஆவலுடன் காதில் ஹெட் போனைப் பொருத்திக்கொண்டேன். ஆனால் விமானத்தின் இரைச்சலில், காதில் ஒன்றும் சரியாக விழவில்லை. சரி, வலைப்பதிவு எழுதலாமென்று, தலைக்கு மேலே உள்ள விளக்கை போட்டுக்கொண்டு, மடிக்கணிணியில் தட்டச்சு செய்யத் தொடங்குகிறேன்.

சென்னையின்பால் எனக்கு ஒரு அபரிமிதமான பிரியம் உண்டு. காரணம், அங்கே நல்ல நினைவுகளை நான் விட்டுச் சென்றேன். அவற்றை மீட்டெடுக்க மீண்டும் அங்கே செல்கிறேன்! "எப்போது திருச்சி வருவாய்?" என்று கேட்ட பெற்றோர்களிடமும், "நேராக மாயவரம் வந்துவிடு" என்று சொன்ன மாமியாரிடமும், "நான் ஒரு வாரம் சென்னையில் தான் இருக்கப்போகிறேன். நீங்களெல்லாம் சென்னை வந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டேன். சென்னையில் அங்கே போகனும் இங்கே போகனும், அதை வாங்கனும் இதை வாங்கனும் என்று அடுக்கிக்கொண்டே போன என்னிடம், "நீ ரொம்ப ஓவராக சென்னையைப் பற்றி கற்பனை செய்யாதே. ஏமாற்றமடைவாய்" என்று சொன்னார் கணவர். அதையும் மீறி மனம் கொள்ளா அவலுடன் சென்னை வந்திறங்கினேன்!

புதன் டிசம்பர் 26 இந்திய நேரம் பின்னிரவு மணி 12:30

சென்னை விமான நிலையம்...முதல் அதிர்ச்சி கழிப்பறைகள். எத்தனை வெளிநாட்டவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்கள்?! அவர்கள் நம்ம ஊரைப்பற்றி என்ன நினைப்பார்கள்?! ஹலோ!!! தமிழக அரசாங்கமே! தமிழகச் சுற்றுலா துறையே! கொஞ்சம் முழிச்சிக்கோங்க! வெளிநாட்டவர்களை விடுங்கள். கழிப்பறைகள் சுத்தமாக இருக்கவேண்டுமென்பது ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு தானே? அடுத்து நம்மை வரவேற்கிறது இமிகிரேஷன் அதிகாரிகளின் இறுகிய முகங்கள். களைத்து வரும் பயணிகளுக்காக ஒரு புன்னகை, ஒரு "குட் மார்னிங்", ஒரு "Have a nice stay"...எதுவும் கிடையாது. இதற்காக ஒன்றும் பணம் செலவழிக்கவேண்டியதில்லையே?! நான் ஏதோ அமெரிக்கா போய்விட்டு வந்து அலட்டுகிறேன் என்று என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். என்னுடைய தமிழகம் எல்லாருக்கும் இனிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் எழுதுகிறேன். இதெல்லாம் புதிதல்ல. அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இருந்தாலும் பகிர்ந்துகொள்ள, பதியவைக்க ஆசை.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், சூடான சென்னைக் காற்றும் அன்பான உறவுகளும் வந்து அனைத்துக்கொண்டன...குளிரிலும் பனியிலும் உறைந்திருந்திருந்த வாசிங்டன் டிசி கண்களிருந்தும், நினைவிலிருந்தும் மறைந்தது. ஆஹா! இனி நான்கு வாரங்கள் அமெரிக்கா பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாதென்று குதுகலித்தது மனசு.

வியாழன் டிசம்பர் 27 சென்னை

இன்று ஒரு முக்கியமான வேலை இருந்தது. என் கணவருக்கு ஒரு மாதத்திற்கு முன் வலது கையில் மணிகட்டுக்கும் முழங்கைக்கும் மத்தியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, cast என்று சொல்லப்படும் கட்டு போட்டிருந்தார். அந்தக் கட்டைப் பிரித்துவிட்டு எலும்பு சேர்ந்திருக்கிறதா என்று பரிசோதனைச் செய்யவேண்டும். ஏற்கனவே இதற்கு நேரம் ஒதுக்கியிருந்த எலும்பு முறிவு மருத்துவரைப் பார்க்க அடையார் சென்றோம். அந்த மருத்துவர், x-ray எடுப்பதற்காக அங்கிருந்து வேறொரு லேபுக்கு அனுப்பினார். அங்கிருந்து x-ray எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம். x-ray பார்த்துவிட்டு எலும்பு இன்னும் முழுமையாகச் சேரவில்லையென்றும், இன்னும் 3 வாரங்களுக்கு fore arm splint என்று சொல்லப்படும் ஒரு வகை கட்டு கையில் போடவேண்டும் என்றார். சரி போட்டு விடுங்கள் என்றால், அந்த வகை கட்டு தன்னிடம் இல்லையென்றும், மலர் மருத்துவமனை அல்லது தேவகி மருத்துவமனை சென்று கேட்டுப்பாருங்கள் என்றார். மலர் மருத்துவமனை சென்றோம். அங்கே அந்த splint இல்லை என்றார்கள். ஒரு தொலைபேசி எண்ணைக்கொடுத்து, அவருடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர் விட்டுக்கு வந்து உங்கள் கையை அளவெடுத்துவிட்டு இரண்டு நாட்களில் அந்த அளவில் splint செய்து தருவார் என்றார்கள். இரண்டு நாட்கள் கையை இப்படி கட்டு போடாமல் வைத்திருக்கலாமா என்று கேட்டால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று சொன்னார்கள்!!!

அடுத்து தேவகி மருத்துவமனைக்குச் சென்றோம். splint எல்லாம் இங்கே இல்லை சார். இங்கே இருக்கும்னு யார் சொன்னாங்க? என்றார்கள். Physio Therapy, Pharmacy, Lift போன்ற அறிவிப்பு பலகைகளெல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. மிகுந்த மன வேதனையுடன் இதனைச் சொல்கிறேன்...அங்கே ஒரு சுகாதாரமான சூழ்நிலையே இல்லை. தேவகி மருத்துவமனைக்கு என்னவாயிற்று? தேவகி மருத்துவமனையின் மகப்பேரு மருத்துவர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்?!!!

பல இடங்களில் ஏறி இறங்கியும் splint கிடைக்காததால் மலர் மருத்துவமனை சிபாரிசு செய்தவரைத் தொடர்பு கொண்டோம். அவர் வீட்டுக்கு வந்து, நல்ல வேளை கணவரின் கை அளவிலேயே அவரிடம் ஒரு splint இருந்தது. அதை கணவருக்குப் போட்டுவிட்டார். ஆக, காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த splint அலைச்சல், மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இது நடந்தது Medical Mecca அல்லது Indian Mecca of Health Care என்று அழைக்கப்படும் சென்னையில்!!!

சற்று அசுவாசத்திற்குப் பிறகு, டி.நகரில் உள்ள ஆர்.எம்.கே.வி, குமரன் சில்க்ஸ் போன்ற துணிக்கடைகளுக்குச் சென்றேன். சிரித்த முகத்துடன் வரவேற்பு! எந்த மாதிரி உங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் விசாரித்து வழி காட்டுகிறார்கள். பொறுமையாக துணிகளை எடுத்துக்காட்டுகிறார்கள். பாராட்டப்படவேண்டிய விசயம்.

இரவு உணவு உறவிணர்களுடன் 'காரைக்குடி' உணவகத்தில்!. இந்த உணவகம் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். இது ஒரு உயர் தர அசைவ மற்றும் சைவ உணவகம். சுத்தமான செட்டினாட்டு உணவு. செட்டி நாட்டுப் பாரம்பரியத்தின் படி, எவர்சில்வர் தட்டில் வாழை இலை வைத்துப் பறிமாறுகிறார்கள். தண்ணீர் 'லோட்டா' வில். பித்தளைப் பாத்திரங்கள். செட்டினாட்டு பாணியில் மரத் தூண்கள். எனக்கு அங்கே மிகவும் பிடித்தது சுவர்களை அலங்கரித்த பெரிய படங்கள் - ஜல்லிக் கட்டு காட்சி, பெரிய பாத்திரங்கள் வைத்து சமைக்கும் காட்சி போன்ற படங்கள். இந்த மாதிரிப் படங்கள் வெளியே கிடைக்குமாவென்றுத் தெரியவில்லை. தேடிப்பிடித்து என் வீட்டுச் சமையல் அறையில் மாட்ட வேண்டும். உணவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். "சுவை" என்பதன் உண்மையான அர்த்தம் இந்த உணவகத்திலே தெரியும்!!! அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரியங்களைக் காப்பாற்ற இது போன்ற உணவகங்களும் கருவிகளாக இருக்கின்றன!

இன்றைய பொழுது முடிந்தது. நாளை காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்குச் சென்று காலார நடந்து வரலாம் என்று சித்தியின் பிள்ளைகள் சொல்ல, குதூகலத்துடன் சரியென்று சொல்லி தூங்கச் சென்றேன்.

மறு நாள் காலை கடற்கரையில்?!

தொடரும்...