Wednesday, July 30, 2008

சிலம்பும் நர்த்தகியும்

மீண்டும் நர்த்தகி!

Image Hosted by ImageShack.us


திருநங்கை நர்த்தகி நடராஜனைப் பற்றி 3 வருடங்களுக்கு முன் இந்தப் பதிவை எழுதினேன். இந்த வருடம் ஆர்லாண்டோவில் நடைபெற்ற தமிழ் விழாவில் மீண்டும் அவருடைய நடனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

மேலும் அழகு கூடியவராய், மேலும் தமிழ் நெஞ்சங்களுக்கு நெருக்கமானவராய் ஆனார், 'சிலம்பும் தமிழும்' என்கிற தலைப்பில் அவர் ஆடிய சிலப்பதிகார நடனத்தின் மூலம்!
சூரிய ஒளியையும், நேரம் தவறாமல் வரும் மழையினையும் போற்றும் புகழ் பெற்ற சிலப்பதிகாரப் பாடலான "திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும்" பாடலுக்கான நடனத்தைத் தொடர்ந்து, கண்ணகியின் ஆடம்பரமான திருமண வைபோகம். ஊரே வியக்கும் வண்ணம் நடந்த அந்தத் திருமணத்தின் நுணுக்கமான விசயங்களையும், அதனைத் தொடர்ந்து நிகழும் ஒரு காவியத்தையும், ஒரே ஒருவர் தன் கண்களாலும், கைகளாலும், உடல் அசைவுகளாலும் ஒரு பெரும் கூட்டத்திற்கு புரியவைத்திவிட முடியும் என்பது பிரமிக்க வைக்கும் உண்மை தான்! நான் சிலப்பதிகாரத்தைப் படித்ததில்லை. ஆனால் நர்த்தகியின் நடனம் முழு சிலப்பதிகாரத்தையும் அதன் இலக்கிய நயத்தையும் எனக்குப் புகட்டியது.

கண்ணகி-கோவலனின் திருமணம் முடிந்த கையோடு, வரம்பு மீறாத அந்த முதலிரவு காட்சிகள் அருமை! கோவலன் கண்ணாடியில் தன்னைப் பார்த்து சரி செய்துகொண்டு, தன் மேல் வாசனை திரவியம் தடவிக்கொண்டு முதலிரவுக்குச் செல்லும் காட்சி புன்னகையை வரவழைத்தது. ஒரு நொடியில் அச்சமும் நானமும் ஆட்கொண்ட கண்ணகியாகவும், அடுத்த நொடியில் கண்ணகியில் அழகில் மயங்கி மருகும் கோவலனாகவும் மாறி மாறி உணர்ச்சிகளை உதிர்த்து அசர வைத்தார் நர்த்தகி. கூட்டம் கட்டுண்டு கிடந்தது அவருடைய அபிநயத்தில்...

கோவலன் மாதவியைப் பார்த்தபின் அடையும் மனப்போராட்டங்களை நர்ததகி ஆடியது மற்றொரு உணர்ச்சிக் குவியல்! மாதவியின் பின்னால் கோவலன் போகும் போது, வீட்டில் கண்ணகி தனக்காகக் காத்திருப்பதை நினைத்து ஒரு நிமிடம் தயங்குகிறான், ஆனால் மாதவி "என்னுடன் வா" என்று தன் விழிகளால் அழைத்ததும், மறுபேச்சு பேசாமல் அவள் பின்னே செல்லும் காட்சி பார்க்கச் சுவை சொட்டியது.
பின்னால் கண்ணகி கோவலனுடன் மதுரைக்கு வருவதும், கோவலன் சூழ்ச்சியால் கொல்லப்படுவதும், கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்பதும், சிலம்பைத் தூக்கியடித்து தன் கணவன் நிரபராதி என்று நிரூபிப்பதும், தொடர்ந்து மதுரை எறிவதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதி அற்புத நடன வெளிப்பாடுகள்!

இறுதியாக 'இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க கைகோர்ப்போம்!' என்கிற தமிழ் விழாவின் சூளுரையில் அவர் நடனத்தை முடித்தபோது அரங்கம் எழுந்து நின்று வெகுநேரம் ஓயாது கைதட்டி மகிழ்ந்தது.

எனக்கு உண்மையில் உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. நான் பொதுவாக அதிகம் உணர்ச்சிகளை வெளிகாட்டாதவள். உலகமே அழியப்போகும் நேரத்தில் கூட, "அப்படியா?" என்று மெதுவாகக் கேட்பேன் என்று என் கணவர் என்னைக் கிண்டல் செய்வார். ஆனால், நர்த்தகியின் நடனம் முடிந்தவுடன், செலுத்தப்பட்டவள் போல் நெராக மேடையின் பின் புறம் சென்றேன். அதற்குள் அங்கே நர்த்தகியை ஒரு சிறு கூட்டம் சூழ்ந்திருந்தது. பொறுமையாக் காத்திருந்து என் முறை வந்ததும், அவரே எதிர்பார்க்காத வண்ணம் அவரைக் கட்டி அணைத்து என் பாராட்டைத் தெரிவித்தேன்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியபோது அதில் பின்னிப் பூட்டிவைத்த அழகான, சோகமான, வீரமான, கோபமான உணர்வுகளை எல்லாம் நர்த்தகி அன்று ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்து மேடையில் தவழவிட்டார்! நர்த்தகியின் நடனத்திற்கு பலம் சேர்த்தார் சிலப்பதிகாரப் பாடல்களை கணீரென்று பாடிய பேராசிரியர் பாலசுப்ரமணியம். இந்த 'சிலம்பும் தமிழும்' நடனத்தை நர்த்தகி இந்தத் தமிழ் விழாவில் தான் முதன் முதலாக அரங்கேற்றினார் என்பது மற்றொரு சிறப்புச் செய்தி.

Tuesday, April 22, 2008

பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்

சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.

சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா வயதினர்களும் அந்தக் கும்பலில் இருப்பார்கள். ஒரு ரயில் வந்து நின்றதும், ரயிலுக்கருகில் ஓடி வந்து பாசி-மணி-ஊசி விற்பார்கள். சிலர் பாட்டுபாடிக்கொண்டு நடனமாடுவார்கள். ரயில் மீண்டும் புறப்படும் போது ஜன்னல் வழியே தூக்கி எறியப்படும் சில்லரைகளைப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் அந்த மரத்தடிக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை நான் மறந்து போய் பல வருடங்கள் ஆகிறது.

அதேபோல், அவ்வப்போது அதிகாலைகளில் வீட்டின் முன் குடுகுடுப்பை சத்தமும் "நல்ல காலம் பொறக்குது" என்ற குரலும், அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு தலையாட்டிக்கொண்டுநிற்கும் பூம் பூம் மாடும் என் நினைவில் இருந்து மறைந்து பல வருடங்கள் ஆகிறது.

ஆனால் சில நல்ல உள்ளங்கள் அவர்களை மறக்கவில்லை. அந்த பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும் எத்தனை காலம் தான் இவர்களுக்கு சோறு போடும்? இவர்களின் பிள்ளைகள் படித்து தலையெடுக்கவே முடியாதா? 'அடிப்படை கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை' என்று ஐ.நா சபை கூறுகிறது. தமிழகத்தில் இருக்கும் எண்ணிலடங்கா ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையில் இந்த நரிக்குறவர்களையும் பூம் பூம் மாட்டுக்காரர்களையும் படிக்கவைக்கவேண்டுமென்று நினைக்கும் சிலரும் இருக்கிறார்கள்.

பாசிமணி ஊசியும் பூம்பூம் மாடும் கைகொடுக்காததால் நாகப்பட்டிணம் போன்ற கடலோரப் பகுதிகளில் குடியேறி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்களின் எஞ்சியிருந்த வாழ்க்கையையையும் அடித்துப் பறித்துக்கொண்டு போய்விட்டது நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்த சுனாமி! நிர்கதியாய் நின்றவர்களை 'வானவில்' என்றொரு தொண்டு நிறுவனம் அரவணைத்துக்கொண்டது. தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த குழந்தைகளை வகுப்பறைக்குக் கொண்டு வந்தது. முதலில் இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வானவில் முயற்சித்தபோது, "இவர்கள் திருடுபவர்கள், நாற்றமடிப்பவர்கள்..." என்றெல்லாம் சொல்லி பிறரால் ஒதுக்கப்பட்டார்கள். எனவே வானவில் நிறுவனமே இவர்களுக்கென்று விடுதி வசதியுடன் ஒரு பள்ளியைத் தொடங்கியது. தம் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று தம் நாடோடி வாழ்க்கையை பெற்றோர்கள் தொடர, தற்போது 103 நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் வானவில் பள்ளியில் படிக்கிறார்கள்.

வானவில் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. தர்மத்திற்கு சோதனை வராமல் இருக்குமா? ஆரம்பத்தில் நண்பர்கள், தெரிந்தவர்களின் நன்கொடைகளின் உதவியால் பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. இந்த வருடம் ஒரு நிதி நிறுவனத்தில் வானவில் விண்ணப்பம் செய்தது. முதலில் ஒத்துக்கொண்ட அந்த நிதி நிறுவனம், கடைசி நேரத்தில் சில உட்பூசல்களினால் கையை விரித்துவிட, இன்று அந்த 103 குழந்தைகளும் மீண்டும் தெருவுக்கு வந்துவிடுவார்களோ என்கிற நிலமை ஏற்பட்டிருக்கிறது!

வானவில் மீண்டும் தன் நண்பர்களிடம் உதவிக்காக கரம் நீட்டியிருக்கிறது. வானவில் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான ரேவதி எனக்குப் பரிட்சயமானவர். இவர் ஒரு social activist. நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் பேசியிருக்கிறார். சில திரைப்படங்களில் உதவி இயக்குனாராக பணிபுரிந்திருக்கிறார். சமுதாய நோக்குள்ள குறும்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இவரிடமிருந்து வானவில் பள்ளிக்காக உதவி கேட்டு வந்த மின்னஞ்சலை தான் இந்த பதிவில் முதல் வரியில் குறிப்பிட்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை கொண்டுசெல்கிறேன் என்று ரேவதியிடம் சொல்லியிருந்தேன். ஆதலால் இந்தப் பதிவு.

வருங்காலத்தில், மரத்தடிகளில், தெருக்களில் நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் குழந்தைகளைக் காணவில்லையென்றால், அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைபட்டுக்கொள்வோம்.

சில வானவில் புகைப்படங்கள் இங்கே: http://picasaweb.google.com/revathi.work/VanavilPietrasik உங்களால் முடிந்த நிதி உதவியை இந்தப் பள்ளிக்குச் செய்யுங்கள். காசோலைகள் அனுப்பவேண்டிய முகவரி:
Vanavil Trust
9, Second Cross Street
Marai Malai Nagar
Nagapattinam
Tamilnadu 611001
India.

தொலை பேசி எண்: 914365-249411

Tuesday, March 18, 2008

பூமியின் நட்சத்திரங்கள்



அமீர் கானின் 'Taare Zameen Par' (Like Stars on the Earth) திரைப்படம் பார்த்தேன்...அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. டிசம்பர் 2007 ல் வெளிவந்த இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்குக் கிடைத்த அரிய பரிசு! பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல பாடம்!
'கயாமத் சே கயாமதக்' என்கிற இந்தி படத்தில் கலக்கலாக அறிமுகமாகிய அமீர் கான், காதல் நாயனாக, மசாலா ஹீரோவாக, வில்லனாக, தாதாவாக, எல்லாமுமாக நடித்தார். ஒரு கட்டத்தில் இது போதுமென்று நிறுத்திக்கொண்டு, சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்ததால், இன்று நடிகர்,ஹீரோ என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமுள்ள மனிதராகத் உயர்ந்து நிற்கிறார்.
படிப்பு, வீட்டுப் பாடம், முதல் ரேங்க், கல்லூரி அட்மிஷன், என்று போட்டிகள் நிறைந்த உலகத்தில் குழந்தைகளிடம் இயற்கையாக இருக்கும் ரசனை, கற்பனா சக்தி, கலைத் திறன்கள் ஆகியவை எப்படி ஒடுக்கப்பட்டு அவர்கள் ஆட்டு மந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது 'Taare Zameen Par' திரைப்படத்தின் மையக் கருத்து.

குழந்தைகளுக்குப் பிடிக்கும் விசயங்களெல்லாம் பல சமையம் பெரியவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது. ஈஷான் என்கிற 8 வயது சிறுவனின் கற்பனை உலகம் மிக அழகானது. வண்ணங்கள், மீன்கள், நாய்குட்டிகள், பட்டங்கள், ஓவியம் தீட்டுவது - இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தவை. பள்ளிக்குப் போய் மணிக்கணக்காக பாடம் பயில்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. காரணம், அவனுக்கு 'dyslexia' என்கிற ஒருவித வினோதமான பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு எண்களும் எழுத்துக்களும் சரியாக படிக்க முடியாது. இந்தக் குறையை சரியான பயிற்சியின் மூலம் சரிசெய்துவிடலாம். ஆனால் ஈஷானின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவன் சரியாகப் படிக்கவில்லை என்று அவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்களே தவிர, அவனுடைய பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள அக்கறை காட்டவில்லை. தன் மகன் தேரமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட தந்தை, ஈஷானை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புகிறார். தன் இயலாமையுடன், பெற்றோர்களையும் வீட்டையும் பிரிந்த சோகமும் ஈஷானைத் தொற்றிக்கொள்ள, அவன் மனம் வெறுத்துப்போய் நடமாடிக்கொண்டிருக்கிறான். அந்தப் பள்ளிக்கு தற்காலிக ஆசிரியாராக வரும் அமீர்கான், தன் சுலபமான கலகலப்பான பாடம் நடத்தும் முறைகளினால் குழந்தைகளைக் கவர்கிறார். ஈஷானின் நடவடிக்கைகளைக் கவனித்து அவன் மேல் அக்கறை கொண்டு, அவனுடைய குறை என்ன என்று கண்டுபிடிக்கிறார். ஈஷானின் பெற்றோர்களிடமும், பள்ளித் தலைவரிடமும் பேசி, ஈஷானுக்கு சற்று கூடுதல் பயிற்சியும் கால அவகாசமும் தேவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறார். பிறகு ஈஷானுக்கு தனிப்பட்ட முறையில் படிக்கவும் எழுதவும் பயிற்சி அளித்து அவனது தன்னம்பிக்கையையும் தனித் திறன்களையும் மீட்டெடுக்கிறார். இது தான் கதை.

ஆனால் இந்தக் கதையை திரைப்படமாக இயக்கியிருப்பது அமீர்கானுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். முதலில் ஈஷான் காதாபாத்திரத்திற்கு தர்ஷீல் சபாரி என்கிறச் சிறுவனை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அந்தப் பெரிய கண்கள், அழகான தெற்றுபற்கள், 'மக்கு' என்று எல்லாரும் திட்டும் போது சுருங்கும் முகம்...தன்னை சுற்றிய அழகான உலகத்தில் தனக்குப் பிடித்தவைகளை பார்க்கும் போது மலர்ந்து பளிச்சிடும் முகம், தன் பெற்றோர்களை பிரிந்து சோகத்தில் வாடும் முகம்...என்று எத்தனை விதமான முகபாவங்கள்?! அபாரமான நடிப்பு!

'மேரி மா' (என் அம்மா) என்கிற சங்கர் மகாதேவன் பாடிய பாடல்...கேட்கும் போதெல்லாம் மனம் கரைகிறது. ஒரு சிறுவன் தன் மனதில் உள்ள பயங்களை எல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமான தன் அம்மாவிடம் சொல்கிறான் இந்தப் பாடல் மூலம். "என்னை ஏன் இவ்வளவு தொலை தூரம் அனுப்புகிறாய் அம்மா? நான் அவ்வளவு மோசமானவனா?" என்கிற வரிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

அதே போல் 'தாரே சமீன் பர்' (பூமியின் நட்சத்திரங்களைப் போல) என்கிற பாடல் - இதுவும் சங்கர் மகாதேவன் பாடியது. பூமியில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்றவர்கள் குழந்தைகள். இவர்களை நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அர்த்தத்தில் அமைந்த பாடல் வரிகள் மிகவும் அருமை.

திரைப்படம் முழுவதுமே மனதைத் தொடும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கின்றன, ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் இவை.

* வீட்டுப்பாடம் செய்யாததால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படும் ஈஷான், சுதந்திரமாக கால் போன போக்கில் நடந்து திரிந்து வெளியுலக நடப்புகளை அனுபவித்து ரசிக்கிறான். உதாரணத்திற்கு, வழியில் ஒருவர் தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை அப்படியே மொடக் மொடக்கென்று லாவகமாக குடிப்பதை வியப்பாகப் பார்க்கும் ஈஷான், தானும் அப்படி செய்ய முயன்று, தன் முகம் முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக்கொள்கிறான் :-)

* ஈஷானுக்கு 'dyslexia' இருப்பதைப் புரிந்துகொள்ளும் அமீர்கான், அதனைப் பற்றி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு விளக்கும் போது, அந்தப் பிரச்சினை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், தாமஸ் எடிசன் போன்றவர்களில் தொடங்கி அபிஷேக் பச்சன் உள்பட பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் அதனை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்று சொல்கிறார். அதனைக் கேட்டவுடன் ஈஷானின் தலை லேசாக நிமிரும். அவனுள் நம்பிக்கை துளிர் விடத் தொடங்குகிறது என்பதை விளக்கும்காட்சி.

* அதே 'dyslexia' பற்றி ஈஷானின் பெற்றோர்களிடம் அமீர்கான் விளக்கும் போது, ஈஷானின் தந்தை அதை நம்பாமல், "இல்லை! அவன் வேண்டுமென்றே தான் படிக்க மறுக்கிறான். அவன் திமிர் பிடித்தவன்" என்கிறார். உடனே அமீர்கான், ஜப்பானிய(சீன?) மொழியில் சில வார்த்தைகளைக் காட்டி "இதை படியுங்கள்" என்கிறார். தந்தை "இதை எப்படி என்னால் படிக்க முடியும்?" என்கிறார். "முடியும். படியுங்கள்" என்று மீண்டும் சொல்கிறார் அமீர்கான். "என்னால் படிக்க முடியாது" என்று கோபமாகச் சொல்கிறார் தந்தை. "இல்லை நீங்க படித்துத்தான் ஆகவேண்டும்" என்று மிரட்டுகிறார் அமீர்கான். அந்த கணத்தில் தந்தை தன் மகனின் நிலைமையை சட்டென்று புரிந்துகொள்கிறார். ஈஷான் வேண்டுமென்றே படிக்க மறுக்கவில்லை, அவனால் உண்மையிலேயே எழுத்துக்களையும் எண்களையும் எவ்வளவு வற்புறுத்தினாலும் படிக்க முடியாது என்பதை அழகாய் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கிறார் அமீர்கான்.

* அமீர்கான் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தும் அந்த ஓவியப் போட்டிதான் திரைப்படத்தின் highlight! ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து ஓவியம் வரைகையில் அவர்களிடையே இருந்த இடைவெளியும் வித்தியாசங்களும் குறைகின்றன. ஈஷானின் ஓவியத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்படும் போது கூச்சத்துடன் முன்னே வரும் ஈஷான், தன் ஆசிரியர் அமீர்கான் ஈஷானையே ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்து உதடுகள் துடிக்க உணர்ச்சி வசப்படுகிறான். அத்தனைப் பெரிய கூட்டத்தில் அவன் பாராட்டப்படும்போது, நொருங்கிப்போயிருந்த அவனுடைய தன்னம்பிக்கை மீண்டும் துளிர்விட, ஓடிச் சென்று அமீர்கானை கட்டி அணைத்துக்கொள்கிறான். நெஞ்சை உருக்கும் காட்சி.

* இறுதிக் காட்சி சித்திரமாக நம் மனதில் பதிகிறது. சதா தன் மகனைத் திட்டிக்கொண்டிருந்த தந்தை, அமீர்கானின் அன்பாலும் பயிற்சியாலும் ஒரு நல்ல மாணவனாக உருவாகியிருக்கும் ஈஷானைப் பார்த்து தன் தவறை உணர்ந்து அமீர்கானின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுகிறார். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈஷான் விடுமுறைக்கு பெற்றோர்களுடன் தன் வீட்டுக்குச் செல்கிறான். காரில் சென்று ஏறும் முன், ஓடி வந்து அமீர்கானை கட்டி அணைத்து செய்கையினால் தன் நன்றியைத் தெரிவிக்கிறான்.

நமது தமிழ்ப்பட நாயகர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். அறிவாளுடன் ஓடுவது, தெருச்சண்டை போடுவது, துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடிப்பது, கவர்ச்சிக் கன்னிகளுடன் குத்தாட்டம் போடுவது போன்றவைகளிலேயே மூலை தேங்கிக் கிடக்கும் இவர்களுக்கு எங்கே ஒரு 8 வயதுச் சிறுவனின் நுன்னிய உலகத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்? விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னனி நாயகர்கள், முதல் காட்சியிலேயே தங்கள் வீரத்தை எப்படி அதிரடியாக பறைசாற்றலாம், அறிவாளுடனா அல்லது துப்பாக்கியுடனா என்று திட்டமிடுகையில், அமீர்கான் இந்தப் படத்தில் பாதிக்குமேல் தான் அறிமுகமாகிறார். எனக்கும் விஜய்யின் நடனம் பிடிக்கும், ரஜினி ஸ்டைல் பிடிக்கும். இப்போது நரேனின் (சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே) பரம விசிறி நான். வார இறுதிகளில் நண்பர்களுடன் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் 'Taare Zameen Par' போன்ற ஒரு படத்தை தமிழில் யாருமே எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

அமீர்கான் மட்டுமல்ல, 'சக் தே இந்தியா' (Chak De India) என்கிற திரைப்படத்தில் நடித்த ஷாரூக்கானும் மிகுந்த பாராட்டுக்குறியவர். ஹாக்கி அணித் தலைவராக வரும் ஷாரூக், முதல் காட்சியிலேயே 'துரோகி' பட்டத்துடன் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். சில வருடங்கள் சென்ற பின், பெண்கள் தானே? என்று அலட்சியப்படுத்தப்பட்ட தேசிய பெண்கள் ஹாக்கி அணியை தன் கடுமையான பயிற்சியினால் உலகக் கோப்பையை வெல்ல வழி நடத்துகிறார். 'Provoked' என்கிற ஆங்கிலத் திரைப்படமொன்றில் கணவனால் கொடுமை படுத்தப்பட்ட, இரு குழந்தைகளின் தாயான பஞ்சாபி பெண்ணாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். இதே ஐஸ்வர்யா ராய், doom2 படத்தில் என்னமாய் நடனமாடி அசத்தியிருக்கிறார்? இப்படி இரண்டு முற்றிலும் சம்பந்தமேயில்லாத கதாபாத்திரத்திரங்களில் நடித்து இரண்டிலும் வரவேற்பை பெறுவதற்கு உண்மையிலேயே திறமை இருந்தால் தான் முடியும். தன் நடிப்புத் திறமையில் நம்பிக்கையற்றவர்கள்தான் 'பஞ்ச்' டயலாக்கிலும், வெட்டி பந்தாவிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள். இதை தமிழ் பட ஹீரோக்கள் உணர்வார்களா?