Sunday, February 26, 2006

உங்கள் ஆதரவு தேவை

பெண்கள் இன்று பல துறைகளில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளுக்கு, அந்தந்த துறைகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களாலோ அல்லது பெண் தலைவர்களாலோ தீர்வு காண முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பல பெண்கள் அவ்வாறு முயற்சிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சில உதாரணங்களைப் பார்க்கும் போது எனது நம்பிக்கை நலிவுற்றுப் போகிறது. இன்று மற்ற எல்லாத் துறைகளையும் விட பெண்களுக்கு பாதகமாக இருப்பது ஊடகங்களே. குறிப்பாக தொலைக்காட்சி. அதிலும் குறிப்பாக தொலைக்காட்சித் தொடர்கள். முகூர்த்தம், மலர்கள், மனைவி, செல்வி, கோலங்கள், கணவருக்காக, தீர்க்கசுமங்கலி போன்ற சன் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைப் பார்த்தாலே புரியும் பெண்களைக் குறிவைத்துத்தான் சன் தொலைகாட்சியின் பெரும்பான்மையான வியாபாரம் இருக்கிறது என்று. இந்தத் தொடர்களில் ஒன்றிரண்டை அவ்வபோது நான் பார்ப்பதுண்டு. இவை எல்லாவற்றிலும் 'செல்வி' என்றத் தொடர் தான் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்தத் தொடரின் தயாரிப்பாளர் ராதிகா. ராதிகா ஒரு புகழ் பெற்ற நடிகை என்பது தெரிந்த விசயமே. அவருடைய தந்தை எம்.ஆர். ராதா பெரியாரின் கொள்கைகளைத் தழுவியவர். அந்த வளர்ப்பில் வந்தவர் ராதிகா. மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி பொருளாதார ரீதியாக வெற்றிபெற்றவர். மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய இவர், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையில் ஒரு தொடரை தொலைக்காட்சியில் செய்வது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. 'செல்வி' தொடரில் செல்வியாக வரும் இவர், மருந்துக்குக் கூட புன்னகை செய்யமாட்டார். குடும்பப் பாரத்தை தாங்கும் சுமைதாங்கி! சதா சோகமயாமாக வலையவரும் இவர் தன் நெருங்கியத் தோழியின் கணவரையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்கிறார் மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி. உலகம் முழுவதும் இந்தத் திருமணம் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் ராதிகாவின் தோழிக்கு மட்டும் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதாம்! இப்படிக்கூட ஒரு பெண்ணை முட்டாளாக்க முடியுமா? மாயா என்ற மற்றொரு பெண் செல்வியின் கணவரை அபகரிக்கத் திட்டம் போடுகிறாள். ஆக இந்தத் தொடரில், படித்த நல்ல குடுமபத்திலிருந்து வந்த மூன்று பெண்களுக்கு ஒரு ஆணைச் சுற்றி வருவதே முழு நேர வேலை! பார்க்கவே சகிக்கவில்லை. நான் பார்த்து வேதனையடைந்த மற்றோரு காட்சி - ராதிகாவின் தங்கையின் கணவன் இறந்துவிடுகிறான். இரண்டு கைக்குழந்தைகளுக்கு தாயான அந்தத் தங்கைக்கு விலாவரியாக சடங்கு வைத்து அவள் பொட்டையும் பூவையும் அழிக்கிறார்கள் சுற்றியிருக்கும் பெண்கள்!

ஒன்று சுய மரியாதை அற்றவர்களாக பெண்கள் இந்தத் தொடர்களில் சித்தரிக்கப்படுகிறார்கள், அல்லது NASA Engineer ரீதிக்கு மூலையில் ஒளி வட்டம் உள்ள பெண்களாக - உதாரணத்திற்கு 'ஆனந்தம்' தொடர் கதாநாயகி சுகண்யா போல் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொடரில் சுகண்யா கடவுள் போல் கொண்டாடப்படுகிறார். குடும்பத்திலும் தொழிலிலும் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை காண்கிறார். இவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கிறது.

இந்தத் தொடர்களில் பெண்கள் பேசும் வசனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! உதாரணத்திற்கு சில;

"ஒரு சுமங்கலி விதவையாகலாம், ஆனால் ஒரு விதவை சுமங்கலியாவது பெரும் பாவம்"

"இந்தத் தாலியும் பூவும் பொட்டும் என் கணவர் போட்ட பிச்சை"

"இந்த வீட்டிலே ஒரு மூலையில் நான் வேலைக்காரி போல் இருந்துவிடுகிறேன்"

பெண்களைப் பெண்களாக எப்போது சித்தரிக்கப்போகிறார்கள்? அன்றாட யதார்த்த வாழ்க்கையில் வரும் பெண்களை ஏன் தொலைக்காட்சித் தொடர்களில் காணமுடியவில்லை? காரணம் தொலைகாட்சி நிறுவனங்களில் சுயநலம். பெண்களைப் பெண்களாக சித்தரித்தால் வியாபாரம் ஆகாது. ஒன்று அவள் பிழியப் பிழிய அழவேண்டும், அல்லது தீய சக்தியாக உருக்கொண்டு மற்றவர்களை அழிக்கவேண்டும் அல்லது உலகத்தில் உள்ள அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆபத்பாந்தவளாக இருக்கவேண்டும். அப்போதுதான் வியாபாரம் நடக்கும். தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக சேவை செய்வோம் என்று எந்த வாக்கும் அளிக்கவில்லை என்றாலும், ஒரு குறைந்தபட்ச சமூகப் பொறுப்பாவது அவர்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. நடிகை குஷ்பூ தமிழ்க் கலாசாரத்தைப் பற்றி ஒரு நாள் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டார் என்று தமிழ்நாடே கொந்தளித்ததே, தமிழ்த் தொலைகாட்சிகளில் நாள் தோறும் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழ்க் கலாசாரத்தைக் கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறார்களே, அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? எதிர்ப்புகளை நம்மால் முடிந்தபோது, முடிந்த வடிவத்தில் தெரிவித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வாசிங்டன் பகுதியில், WAR(Women's Alliance for Rationality) என்கிற அமைப்பினர், தமிழ்த் தொலைகாட்சியில் பெண்களை சித்தரிக்கும் முறையை எதிர்த்து ஒரு இணைய விண்ணப்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் சுட்டியை இங்கே இடுகிறேன் - http://www.petitiononline.com/TVWAR001/petition.html இதில் கையெழுத்திட்டு உங்களது ஆதரவைத் தெரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சுட்டியை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பிவையுங்கள். மதி கந்தசாமியும் தன் வலைபதிவில் இதைப்பற்றி எழுதியுருக்கிறார் - http://mathy.kandasamy.net/musings/2006/02/26/324

2 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I do not watch any of the Tamil TV channels.It would be better to express the protest by boycotting them, i.e. by telling your cable operator or channel provider that you do not want these channels.If you pay for them separately cut that service.I wonder whether a petition, in the absence of consumer boycott or resistance in some form or other ,will be effective.

தாரா said...

Ravi,

Thanks for you comment. You have a point. Consumer boycott is a much stronger protest, but the practicality of this will be very difficult. Tamil people living in USA think that Sun TV is the only way of staying closer to Tamilnadu. Some people also think that their kids speak Tamil only because of Sun TV. So it is difficult to get people here to give up Sun TV.