Tuesday, May 17, 2005

வீணாகப் போன ஒரு மாலைப் பொழுது

ரொம்ப நாட்களுக்கு அப்பறம் எனக்கே எனக்குன்னு ஒரு சனிக்கிழமை மாலை நேரம் கிடைத்தது. போன சனிக்கிழமை மாலை என் கணவர் அவருடைய நண்பர் வீட்டில் நடந்த ஒரு முக்கியமான சந்திப்புக்குச் சென்றுவிட்டார். இரவு உணவும் அங்கேயே முடித்துவிடுவதாக சொல்லியிருந்தார். எனக்கு சமையல் வேலையும் இல்லை. வெளியே ஷாப்பிங் போகலாம் என்றுதான் முதலில்நினைத்தேன். ஆனால் மழை பெய்துகொண்டிருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு சன் டிவியைப் போட்டேன். அப்போதுதான் ஒரு தமிழ் படம் தொடங்கியிருந்தது. மாலை நேரம்...வெளியே மழை...சூடான தேனீர்...பார்க்க ஒரு படம்...இதெல்லாம் எனக்கு மிகப் பிடித்த காம்பினேஷன்! போர்வை, தலையனை எல்லாத்தையும் முன்னறைக்குக் கொண்டுவந்து சோபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு படம் பார்க்கத் தொடங்கினேன். என்னுடைய சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை!


அந்தப் படம் 'ராஜ்ஜியம்' என்கிற விஜயகாந்த் படம். எனக்கு விஜயகாந்த் படங்கள் அறவே பிடிக்காது. அதுவும் இந்தப் படம் ரொம்பவே டார்ச்சராக இருந்தது. விஜயகாந்துக்கு கொடுக்கப்படும் build-up ரொம்பவே ஜாஸ்தி. கண்ணியாகுமரியில் தொடங்கி சென்னை வரை முக்கிய நகரங்களில் விஜயகாந்த் நடந்து வர, அவருக்குப் பின் மிகப் பெரிய மக்கள் திரள், அவர் வரும் பாதையில் பூக்கள், தோள்களில் ஆளுயர மாலை. இரண்டு பக்கமும் பெண்கள் நடனமாடுகிறார்கள். "தமிழன் தமிழன் இவன் தான் தமிழன்...தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்" என்று பாடல் வேறு. விஜயகாந்தின் பின் வரும் தொண்டர்கள் கூட்டம் குத்தியிருக்கும் சிவப்பு-மஞ்சள்-கருப்பு வண்ணக் கொடி அவருடைய கட்சிக் கொடி! ஆரம்பக் காட்சிகளில் இப்படியென்றால், பின் வரும் காட்சிகளில், போலீஸாரால் பிடிக்கமுடியாத நான்கு தீவிரவாதிகளை அவர் ஒரு ஆளாக பிடிக்கிறார்! தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் சாதாரணம் தான் என்றாலும், தாயாரிப்பாளரின் காசில் மக்களின் நாடித் துடிப்பை தெரிந்து கொள்ள விஜயகாந்த் முயன்றிருப்பதாகத் தோன்றியது. சென்னைக்கு வந்திறங்கும் ஒரு இளம்பெண்ணிடம், "உன் கற்புக்கு எந்தவித களங்கமும் வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்கிறார்! "கற்பு அப்படின்னா என்ன?" என்று கேட்குக் அந்தப் பெண்ணிடம், "கற்பு என்பது கண்ணகி சம்பந்தப்பட்ட விசயம், கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயம்" என்கிறார்! இதெல்லாம் மிகவும் பழமைவாய்ந்த பிற்போக்கான வசனங்கள். இப்போது 'கற்பு' என்கிற சொல்லே வழக்கத்தில் அவ்வளவாக இல்லை! மக்கள் செல்வாக்கு வேண்டும், கட்சி ஆரம்பித்து அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் சுனாமி வந்தபோது எங்கே போனார்? நன்கொடை கொடுத்தால் மட்டும் போதுமா? களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்து உதவி செய்திருக்கவேண்டாமா? அப்படி உதவி செய்த விவேக் ஓபராயைப் பற்றி "ஒரு கிராமத்தை தத்தெடுத்துக்கொள்வதில் என்ன பிரயோசனம்?" என்று விஜயகாந்த் விமர்சித்ததாகக் கேள்விப்பட்டேன். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் - இவர்களுக்கு மக்களிடையே இருந்த reach விஜயகாந்துக்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதற்குமேல் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை. டிவியை அனைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சில மணி நேரங்கள் தொலைபேசி, வீட்டு வேலை என்று நேரத்தைத் தள்ளிவிட்டு, இரவு 10 மணிக்கு மீண்டும் சன் டிவி போட்டேன். 'கலைஞரின் கண்ணம்மா' தொடங்கியது. அட! இந்தப் படமாவது வித்தியாசமா இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் போர்வை, தலையனை செட்டப்புடன் படம் பார்க்க அமர்ந்த எனக்கு, மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது!


கலைஞர் வசனம் எழுதிய படம் என்று சொல்லும் அளவுக்கு 'கண்ணம்மா' ஒரு சராசரி தமிழ்ப் படத்தைவிட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை. மாறாக, இயக்குனர் இப்பொழுதுதான் படம் எடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு அமெச்சூர் தனமான காட்சிகள். மீணா வாயிலிருந்து கலைஞரின் வசனங்கள்! பொறுத்தமாகவே இல்லை. படம் எடுக்கப்பட்ட கால கட்டத்தைப் பற்றி இயக்குனர் குழம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு காட்சியில் கலைஞர் வாஜ்பாயிடம் பணம் கொடுக்கிறார். மற்றொரு காட்சியில் மன்மோகன் சிங்கின் புகைப்படம் சுவற்றில் தெரிகிறது! கார்கில் போருக்காக கலஞர் உதவித்தொகை கொடுக்கும் காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது அலுப்பாக இருந்தது. கவர்ச்சி நடனம், டூயட் பாடல்கள் என்ற சராசரி மசாலா அயிட்டங்களுக்கு இந்தப் படத்திலும் பஞ்சம் இல்லை. கலைஞர் 1950 களில் பராசக்தி போன்ற படங்களுக்கு எழுதிய சூடு பறக்கும் வசனங்கள் எந்த காலத்திலும் அழியாதவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த காலத்து மக்களின் நாடித் துடிப்பிற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வசனங்களை எழுதி அவரது நேரத்தை வீணாக செலவழித்திருக்கிறார். இந்தப் படத்தையும் சிறிது நேரத்திற்கு மேல் பார்க்கமுடியாமல் நிறுத்திவிட்டேன்.

இப்படியாகத்தானே என்னுடைய சனிக்கிழமை மாலை சொதப்பலாகக் கழிந்தது!!! இரவு 12 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் என் கணவர். தன் நண்பர் வீட்டுச் சந்திப்பு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் கழிந்தது என்று சொன்னவர், "சரி, உனக்கு எப்படி பொழுது போனது?" என்று கேட்டார். "அந்தச் சோகத்தை கேட்காதீங்க. ரெண்டு நாள் கழித்து வலைப்பதிவில் போடறேன் படிச்சிக்கோங்க" என்று சொல்லிவிட்டேன்!

Friday, May 13, 2005

படிக்க, ரசிக்க சில புதுக் கவிதைகள்

இன்று என் தோழி இந்தப் புதுக்கவிதைகளை மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாள். அவளுக்கு வேறு யாரோ அனுப்பியிருந்தார்களாம். இவற்றை யார் எழுதியது என்று சரியாகத் தெரியவில்லை. சில கவிதைகள் பார்த்திபனின் கிறுக்கல்கள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்றாள். யார் எழுதினார்களோ, எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நீங்களும் படித்து ரசியுங்கள். எழுதியவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. தாடி, மீசையிடம் சொல்கிறது.
இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்...
ஆனால் நீ வீரத்திற்கு, நான் மட்டும் சோகத்திற்கா?

2. லேடீஸ் பஸ்

ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!

3. அரசியல்

பிறர் சொத்தை சூரையாடினான்...திருடா என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரா என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!

4. லஞ்சம்

வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!

5. இந்தியா ஒளிர்கிறது

ஏற்றுமதி ரக வாகனத்தில் ஏறி
ஆயிரத்திற்குப் பெற்ற இங்கிலாந்து உடையணிந்து
எளிதாய் கைக்குள் அடங்கும் கொரிய தொலைபேசியில்
ஏளனமாய் நகைத்து நண்பனிடம் கூறினேன்
ஏழ்மை ஒழியும் வரை இந்தியா ஒளிராது என்று!

6. சந்தன மரம் என்றார்கள் பல்லாண்டுகளாக...
பின்னர் சங்கர மடம் என்றார்கள்...
இப்போது சங்கட மனதுடன் நான்...
சந்ததம் இப்படியொரு சங்கதி கேட்டு!

7. ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது...
மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!

Thursday, May 12, 2005

ஒரு பெண், ஒரு கண்காட்சி!

நேற்று முன் தினம் காலை அலுவலகத்தில் வெலையில் ஆழ்ந்திருந்த போது, என்னுடைய மேலாளரிடம் இருந்து "ஒரு சுவையான செய்தியை சொல்லப்போகிறேன். என் அறைக்கு வாருங்கள்" என்று என் அணியினர் அனைவருக்கும் மின் அஞ்சல் வந்தது. அலுப்புடனும், எரிச்சலுடனும் நாங்கள் மேலாளரைப் பார்க்கச் சென்றோம். ஏன் இந்த அலுப்பும் எரிச்சலும் என்கிறீர்களா? என்னுடைய இந்த முந்தையப் பதிவைப் படித்தால் ஏனென்று புரியும். முகமெல்லாம் சிரிப்புடன் எங்களை வரவேற்ற மேலாளர், "சொன்னால் நம்ப மாட்டீர்கள், Corcoran ம்யூசியம் அருகில் ஒரு பெண் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறாள்" என்றார். வாசிங்டன் டிசி நகரம் முழுக்க நிறைய ம்யூசியம்கள் உள்ளன. Corcoran ம்யூசியம் என்பது அமெரிக்க கலை மற்றும் வரலாறு சம்பந்தப்பட்டது. எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கிறது. அங்கு ஒரு பெண் அரை நிர்வாணமாக நிற்கிறாள் என்று கேட்டவுடன் எங்களுக்கு வியப்பும், குழப்பமும் ஏற்பட்டது. மேலாளர் மேலும் கிண்டலுடன், "மதிய உணவு இடைவேளையில் போய் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று சொன்னார். 'கிழவனுக்கு இந்த லொள்ளு தேவையா' என்று நினைத்துக்கொண்டு என் இடத்திற்கு வந்த எனக்கு சற்று மண்டை குடைச்சலாக இருந்தது. நேற்று முன் தினம் வாசிங்டன் டிசியில் 80 டிகிரி வெப்ப நிலை. இந்த உச்சி வெயிலில் ஒரு பெண் எதற்காக அரை நிர்வாணமாக ஒரு பொது இடத்தில் நிற்கவேண்டும்? அமெரிக்கர்கள் மன அழுத்தம் அதிகமானால் சில சமையம் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வார்கள். ஒரு வேளை இது அப்படிப்பட்ட செயலாக இருக்ககுமோ? என்றெல்லாம் நினைத்துக்கொண்டு மீண்டும் வேலையில் மூழ்கினேன்.

மதிய உணவு இடைவேளையில், என் அலுவலக நண்பிகள், "அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நிற்கிறாளாம், என்ன தான் நடக்கிறதென்று பார்த்துவிட்டு வரலாம் வா" என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். ஒரு நிமிட நடைக்குப் பிறகு Corcoran ம்யூசியம் பார்வையில் தென்பட்டது. ம்யூசியத்தின் பக்கவாட்டில் உள்ள ஒரு மேடைக்கு முன் சிறு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. சற்று தூரத்தில் இருந்துபார்க்கும் போது மேடையின் மேல் ஒரு சிற்பம் இருப்பது தெரிந்தது. சற்று நெருங்குகையில், அந்த சிற்பம் அசைந்தது! அது சிற்பம் அல்ல! ஒரு பெண்! மேலாளர் சொன்ன அந்த அரை நிர்வாணப் பெண்!.



மெல்லிய தேகம், நல்ல உயரம், வெயிலில் தகதகத்த தங்க நிற சுருட்டைக் கூந்தல், மார்பைச் சுற்றி கட்டிய வெள்ளை நிற கச்சை, மெல்லிய வெள்ளை நிற காலுறை (Pant). ஒரு மாடல் போல் இருந்தாள். அவளுக்கருகில் சில ஜுஸ் பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. அவள் அவ்வப்போது ஒரு தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் குடித்துவிட்டு, மீதி உள்ள தண்ணீரைத் தன் முகத்தின் மீது ஊற்றிக்கொண்டிருந்தாள். எதற்காக இவள் இப்படி உட்கார்ந்திருக்கிறாள் என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அவள் அமர்ந்திருந்த மேடையின் கீழ் பகுதியில் ஒரு புத்தகம் தெரிந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக அந்தப் புத்தகத்தை போய் படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் என்னுடைய முறைக்காக காத்திருந்து அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சென்றேன். அது ஒரு புகைப்பட ஆல்பம் மற்றும் டையரி. அந்தப் பெண்ணினுடையது. அதைப் படிக்கப் படிக்க என் குழப்பங்களுக்கு விடைகள் கிடைத்தது.



இது ஒரு வித்தியாசமான கண்காட்சி! அந்தப் பெண்ணின் பெயர் மெல்லிசா. அவள் Corcoran கலைக் கல்லூரி மாணவி. இவளுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. தன்னிடம் இருப்பவற்றைப் பாராட்டுவதற்கு, எதையெல்லாம் இழக்க வேண்டும் ? என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள். அதாவது "How much would you have to loose, to appreciate what you have?" என்பதே இவளது இந்த முயற்சியின் கரு. இந்த முயற்சியை 'Performance Exhibition' என்கிறார்கள். இந்தக் கண்காட்சி ஜனவரி 1, 2005 இல் இருந்தே தொடங்கிவிட்டது. ஜனவரி மாதத்தில் இருந்து மெல்லிசா தான் உபயோகிக்கும் பொருட்கள், பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ளத் தொடங்கினாள். ஜனவரியில் மருந்துகள், காபி, தொலைக்காட்சி, சோடா இவற்றை விட்டொழித்தாள். பின் வந்த மாதங்களில் ஒப்பனைப் பொருட்கள்,சாக்லேட்டுகள், சினிமா, பத்திரிக்கைகள், இசை, செல் போன், மின் அஞ்சல், கார் ஓட்டுவது, உடல் உறவு, பேச்சு, புத்தகங்கள், குடுமபத்தினர்,நண்பர்கள், தயாரித்த உணவுகள் போன்றவற்றை துறந்தாள். தான் தங்கியிருந்த வீட்டைக் கூட விட்டுவிட்டு வெளியில் வந்து ஒரு டெண்ட்டில்(tent) தங்கியிருந்தாள்.

'Stripped' என்ற அர்த்தமுள்ள ஒரு தலைப்பைக்கொண்ட இந்தக் கண்காட்சியின் இறுதிக் கட்டமாக, மெல்லிசா Corcoran ம்யூசியத்தின் முன் 36 மணி நேரம் வெட்ட வெளியில் தண்ணீரும், பழரசமும் மட்டும் உண்டு காட்சிப் பொருளாக வீற்றிருந்தாள். இதைப் படித்தவுடன் மெல்லிசாவின் மன வலிமையையும், தன்னுடைய ஐந்து மாத வாழ்க்கையையே கண்காட்சியாக மக்களுக்குப் படைத்த அவளது வித்தியாசமான சிந்தனையும் என்னை வியக்க வைத்தது. இது ஒரு சாதனை என்று தோன்றினாலும், இதனால் என்ன பயன்? இந்த ஐந்து மாதங்களும் எல்லாவற்றையும் துறந்து மெல்லிசா வாழ்ந்தது போல் இன்று யாராவது வாழ்வது
நடைமுறைக்கு ஒத்துவருமா? நம் நாட்டில் புராண காலத்து துறவிகள் தான் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். புராண காலத்து துறவிகள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன், ஏனென்றால் இன்றைய துறவிகள் எதையும் விட்டுவைக்காமல் அனுபவித்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்திலேயே வாழ்கிறார்கள். இந்தக் கண்காட்சியின் முக்கிய செய்தி என்னவோ உண்மைதான். நம்மிடம் இருப்பவற்றைப் பாராட்ட அவற்றையெல்லாம் இழந்து பார்த்தால் தான் முடியும்!!!

விசயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் 'அரை நிர்வாணம்' என்று சொல்லி கொச்சைப் படுத்திய என் மேலாளரை நினைத்து வருத்தப்பட்டேன்.
மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பி நடக்கும் போதே நினைத்துக்கொண்டேன் இதை வலைப்பதிவில் போடவேண்டும் என்று. நான் பார்த்ததிலேயே ஒரு வித்தியாசமான கண்காட்சி இது!

Wednesday, May 04, 2005

சினிமா அம்மாக்கள்



மே 8 அன்று அன்னையர் தினம். அன்று அன்னையரைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதவேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதலுக்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எழுதலாமென்று தோன்றியது. எனவே இந்தப் பதிவு. மே 8 வரை காத்திருக்க முடியவில்லை :-)

அம்மாக்கள் கடந்த 70 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்து வருகிறார்கள். தாய்ச் சொல்லையும் அவளுடைய சபதங்களையும் நிறைவேற்றுவதே மகனான ஹீரோவின் ஒரே வேலையாக இருந்து வந்தது. மகன் தன் தாயைக் கொலை செய்தவர்களையோ, அவள் வாழ்க்கையை நாசம் செய்தவர்களையோ தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவதே பெரும்பாலான தமிழ்ச் சினிமாவின் கதையோட்டமாக இருந்து வந்தது. சற்று வேறுபட்டு அந்த மகன் தன் அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குவதாக இருந்தால் கூட அது அவனுடைய விதவைத் தாயின் வேண்டுகொளாகத் தான் இருக்கும். பெருமபாலான எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் அம்மாவை மையமாக கொண்டவை. படத்தின் பெயரிலேயே அம்மா செண்டிமெண்ட் தெரியும்(தாய் சொல்லை தட்டாதே, தாய்க்குப்பின் தாரம்). எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெரும்பாலான ரஜினி படங்களும் அப்படியே இருந்தன(தாய் வீடு, அன்னை ஓர் ஆலையம்). இந்த மாதிரி அம்மா பார்முலாக்கள் திரளாக தாய்க்குலங்களை கைக்குட்டையுடன் தியேட்டருக்கு கவர்ந்திழுத்தன.

அம்மாக்களை தியாகத்தின் சிகரங்களாக பிரதிபலித்த படங்களனைத்தும் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றன. கண்ணாம்பா, பண்டரிபாய், கே.ஆர். விஜயா, மனோரமா இவர்களெல்லாம் அம்மா கதாபாத்திரங்காளுக்காகவே பிறந்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர்களுக்குப் பிறகு சுஜாதா, ஸ்ரீ வித்யா, சுமித்ரா போன்றவர்கள் சற்று இளமையான அம்மா வேடங்களில் நடித்தார்கள். இப்பொழுது அம்பிகா,ராதிகா...இவர்கள் வரிசையில் 'மஜ்னு' என்ற படத்தில் ரத்தி அக்னிஹோத்ரியை அம்மா வேடத்தில் பார்த்தேன். ஜீரணித்துக்கொள்ளவேமுடியவில்லை. அதே போல் பாரதி ராஜாவின் 'ஈர நிலம்' படத்தில் சுஹாசினி அம்மாவாக! கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை.

அம்மாக்களில் ஒரு வித்தியாசமான அம்மாவை எந்த திரைப்படத்திலும் பார்க்கவே முடியாது. எப்பொழுதும் அவர்கள் தியாகத்தின், பாசத்தின்சின்னமாக, நேர்மையாக, கன்னியமாக இருப்பார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதெல்லாம் ஹீரோவின் அம்மாவுக்குத்தான் பொருந்தும். ஒரு படத்தில் பல அம்மாக்கள் இருந்தாலும், ஹீரோவின் அம்மாவுக்குத்தான் மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்! இன்னொரு கொடுமை என்னவென்றால், ஹீரோக்களுக்கு ஜோடியாக ஹீரோயின்களாக நடித்த நடிகைகளெல்லாம் சில வருடங்களில் அதே ஹீரோவுக்கு அம்மாவாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடிக்கிறார்கள்! அப்படியொரு மகிமை அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு!

பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரங்களுக்கான நெஞ்சை உருக்கும் காட்சிகளை அமைக்க போட்டிபோடுவார்கள். உதாரணமாக, இயக்குனர் P.வாசு, ஹீரோவின் அம்மாவை வில்லன்களின் கையில் கொடுத்து அவளை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவார். 'சின்னத் தம்பி' படத்தில்மனோரமாவை ஒரு தூணில் கட்டிவைத்து ஒரு பைத்தியக்காரனிடம் தாலியைக் கொடுத்து மனோரமாவுக்கு கட்டச்சொல்லுவார்கள். 'செந்தமிழ்ப்'பாட்டு படத்தில், சுஜாதாவின் கூந்தலை வில்லன் வெட்டிவிடுவார். கொஞ்சம் ஹைடெக் இயக்குனரான சங்கர் கூட இந்த அம்மா செண்டிமெண்ட்டை விட்டுவைக்கவில்லை. 'ஜென்டில்மேன்' படத்தில் மனோரமா தன் மகனுக்கு கல்லூரிப் படிப்பிற்காக பணம் கிடைப்பதற்காக, தன்னைத் தானே கெரோசின் ஊற்றி கொளுத்திக்கொள்வார்! இந்த அபத்தமான காட்சிகளெல்லாம் ஹீரோவுக்கு கோபம் வந்து பொங்கி எழுவதற்காக அமைக்கப்பட்டவை! இப்படி பலி ஆடுகள் போலத்தான் பல இயக்குனர்களால் அம்மாக்கள் கையாளப்பட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் பாலச்சந்தர் பெண்ணியம் என்கிற பெயரில் சில அபத்தங்களை அவருடைய படங்களில் செய்தாலும், சில பாராட்டக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். அவருடைய படங்களில் வந்த அம்மாக்களில், எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், 'அவர்கள்' படத்தில் ரஜினியின் அம்மா பாத்திரம். தன் மகன் கெட்டவன், ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டான் என்று தெரிந்ததும், அந்த பெண்ணின்(சுஜாதா) வீட்டிற்கே போய் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவாக வேலைக்குச் சேர்ந்து பாவத்தை கழுவிக்கொள்வது மட்டுமின்றி, சுஜாதாவை மறுமணம் செய்துகொள்ளவும் ஊக்குவிப்பார். எவ்வளவு அற்புதமான பாத்திரப் படைப்பு! அவரது மற்றொரு படமான 'அவள் ஒரு தொடர் கதை' யில் சுஜாதாவின் அலுவலகத் தோழி ஒருத்தியின் தாயாக ஒரு விதவை இருப்பார். அவர் தன் மகள் காதலிக்கும் ஒரு நபருடனேயே உறவு வைத்துக்கொள்வார். பின்பு மகளுக்கு விசயம் தெரிந்தவுடன் தற்கொலை செய்துகொள்வார். இதெல்லாம் கசப்பான உண்மைகளாகவே தாய்குலங்களால் கருதப்படுகிறதென்று நினைக்கிறேன்.

பாரதிராஜாவின் படங்களில் ரவிக்கை போடாமல் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு, கரையேறிய பற்களுடனும், ஓட்டை பெரிதாகி தொங்கும் காதுகளுடனும் பாக்கு இடித்துக்கொண்டு பேச்சுக்கு பேச்சு பழமொழிகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் கிராமத்து 'ஆத்தா' கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறார்கள். (வேதம் புதிது சரிதா, மண்வாசனை காந்திமதி)

மணிரத்ணம் படங்களில் வரும் அம்மாக்கள் ஓரளவு 'casual type' ஆக இருப்பார்கள். 'தளபதி' படத்தில் ரஜினியின் அம்மா ஸ்ரீ வித்யா சிறு வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தவர். பிறகு ஜெயசங்கரைத் திருமணம் செய்துகொண்டு இன்னொரு மகனுடன் வாழ்கிறார், ஆனால் தனது மூத்த மகனின் நினைவு அவருடைய மனதில் அழியாத வடுவாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு ஜெய்சங்கரும் அவருக்கு ஆறுதலாக இருப்பார். 'ரோஜா' படத்தில் மகனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஒரு நகரத்து அம்மா(அவருடைய பெயர் தெரியவில்லை). இந்த கதாபாத்திரங்கள் சற்று நம்புவதற்கு சுலபமாக இருக்கின்றன.

இதெல்லாம் ஒரு 10 வருடங்களுக்கு முன் வந்த படங்கள். சமீகாலத்தில் வரும் படங்களில் அம்மா செண்டிமெண்டுகள் வெகுவாக குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இழுத்திப் போர்த்திய புடவையும், பெரிய குங்குமப் பொட்டுமாக வீட்டில் பூஜை செய்துகொண்டிருக்கும் அம்மாக்களை இப்பொழுது வரும் படங்களில் பார்க்கமுடிவதில்லை. இப்பொழுது ஹீரோக்களின் கவனம் சமூக சீர்திருத்தங்களில் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது - அதாவது, சென்னையிலுள்ள அத்தனை ரெளடிகளையும் தூக்குவது, அரசியல் ஊழல்களைத் தட்டிக்கேட்பது, ஹீரோக்களே தாதாக்களாக இருந்து பொது மக்களுக்கு உதவுவது - இப்படி! எப்படியோ அம்மாக்கள் தப்பித்தார்கள். இது நல்ல முன்னெற்றம் தான்! இனிவரும் திரைப்படங்களில் இயல்பு வாழ்க்கை அம்மாக்கள் - அதாவது வேலைக்குப் போகும் அம்மா, correspondence course ல் படிக்கும் அம்மா - இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களைக் காட்டினால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த அன்னையார் தினத்தன்று நாம் நினைத்து சந்தோசப்பட வேண்டிய விசயம், தமிழ் சினிமாக்களில் அம்மா கதாபாத்திரங்கள் நல்ல மாற்றம் அடைந்திருப்பது!

Sunday, May 01, 2005

எழுதும் நேரம்


ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய சவால் - எழுதுவதற்கு ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது. முழு நேர எழுத்தாளர்களுக்கு இந்தக் கவலை இல்லை. இருக்கும் நேரம் அனைத்தும் அவர்கள் எழுதுவதற்கே. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுபவர்கள். நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு பிறகு குழந்தைகள், கார் பூல், வீட்டு வேலைகள், நண்பர்களுடன் சந்திப்பு இப்படி பறக்கும் வாழ்க்கையில் எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்குவது என்பது கடினமான விசயம் தான்.

ஒவ்வொரு எழுத்தாளரும் வித்தியாசமானவர். ஒருவருக்கு பொருந்தும் நேரம் மற்றவருக்குப் பொருந்தாது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான செயல் நிரலை(schedule) பின்பற்றுவார்கள். இதில் எழுதும்(டைப் அடிக்கும்!) நேரத்தை எப்படி பொறுத்திக் கொள்வது?

பெண்களுக்கு, முக்கியமாக தாய்மார்களுக்கு குழந்தைகள் உறங்கும் நேரம் தான் எழுதுவதற்கு மிக உகந்த நேரமாக இருக்குமென்று நினைக்கிறேன். இது குழந்தைகளின் வயதைப் பொறுத்தது. சற்று வளர்ந்த பிள்ளைகள் அம்மா ஏதோ எழுதுகிறார்கள், தொந்தரவு செய்யக்கூடாது என்று புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன?

அமைதியான சூழலில் நன்றாக சிந்தித்து, மனதை ஒருநிலைப்படுத்தி பொறுமையாக எழுத நினைப்பவர்களுக்கு பின்னிரவு நேரங்கள் உகந்ததாக இருக்கும். ஆனால் தூக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? நல்ல ஏலக்காய் டீ குடித்துவிட்டு எழுத வேண்டியதுதான். ஏலக்காய் தூக்கத்தை விரட்டிவிடும் என்று சொல்வார்கள்.

சில நாட்களில் அதிகாலை அலாரம் அடிப்பதற்கு முன்பே விழிப்பு வந்துவிடும். அப்போது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்காமல் அந்த சில கூடுதல் நிமிடங்களை எழுதுவதற்கு பயன்படுத்தலாம்.

சிறு இடைவெளிகளில் எழுதமுடியுமென்றால் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பழக்கம் உடையவர்கள் விளம்பர இடைவெளிகளில் கிடைக்கும் சில நிமிடங்களில் எழுதலாம். எந்தக் குறுக்கீடும் இல்லாமல் எழுதுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவர்களுக்கு இது சரிப்பட்டுவராது.

எழுதுவதற்கு என்று ஒரு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நல்லது என்றாலும், அந்த நேரத்தில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடாக இருப்பது பல நேரங்களில் சாத்தியமாக இருக்காது.

நான் எழுதுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன், அதனால் பெரும்பாலும் பின்னிரவு(11 மணியளவில்) நேரங்களிலேயே எழுதுகிறேன். சில(பல???) சமயம் அலுவலகத்தில் வேலைபளு குறைவாக இருக்கும் நாட்களில் பகலில் கொஞ்சம் எழுதமுடிகிறது.

நீங்கள் எப்பொழுது எழுதுகிறீர்கள்?