Saturday, February 19, 2005

பனியில் உறைந்த கார்கள் - ஒரு புகைப் படம்

உங்க ஊரில் கடும் பனியினால் அவதிப் படுகிறீர்களா? இந்தப் படத்தில் உள்ள கார்களின் சொந்தக்காரர்களைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஒரு நண்பர் படத்தை அனுப்பியிருந்தார்.

Thursday, February 17, 2005

Golden Birthday என்றால் என்ன?

Golden Birthday அப்படின்னா உங்களுக்கு என்ன தெரியுமா?

50 ஆவது பிறந்த நாள் அப்படின்னு தானே நினைக்கத் தோனுது? அது தான் இல்லை.

உங்களுடைய வயதும் பிறந்த தேதியும் ஒன்றாக வந்தால் அந்தப் பிறந்த நாள், உங்களுடைய தங்கப் பிறந்த நாள்.

குழம்புதா?

உங்களுடைய பிறந்த தேதி மார்ச் 30 என்று வைத்துக் கொள்வோம். தற்போது உங்களுக்கு வயது 29 என்று வைத்துக் கொள்வோம். வருகிற மார்ச் 30 உங்களுடைய தங்கப் பிறந்த நாள். ஏனென்றால் உங்களுடைய
வயது(30) = உங்களுடைய பிறந்த தேதி(30).

இப்ப புரியுதா?

இது போல் வாழ் நாளில் ஒரு முறை தான் வருமாம்.

ஏற்கனவே பலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் எனக்கு இப்போது தான் தெரிய வந்தது. சரி முடிந்தவரை இதை பரப்புவோமே என்று வலைப் பதிவில் போடுகிறேன்.

விஷயம் தெரியாமல் தங்கப் பிறந்த நாளைக் கோட்டை விட்டவர்கள், உங்களுடைய குழந்தைகளுடையதையாவது மறக்காமல் கொண்டாடுங்கள்.

Wednesday, February 16, 2005

விளம்பரங்களில் பெண்கள்

ஊடகங்களில் பெண்களின் நிலைப்பாடு(Media Representation of Women) எப்படி இருக்கிறது என்பதில் சமீப காலமாக எனக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக சில இணைய தளங்களையும் புத்தகங்களையும் படித்த போது பல ஆக்க பூர்வமான விசயங்கள் தெரிய வந்தன. ஊடகம் என்பது சினிமா, தொலைக் காட்சி, பத்திரிக்கைகள் என்று பரந்து விரிந்த ஒரு தலைப்பு. அதனால் அதை சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது எழுதலாமென்று இருக்கிறேன்.

இந்தப் பதிவில், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் எப்படி பெண்களை பிரதிபலிக்கின்றன என்பதை கொஞ்சம் அலசுவோம்.
என்னுடையப் பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் தொலைக்காட்சியில் சினிமா, தொடர்கள் இவற்றைவிட விளம்பரங்களைத் தான் நான் மிகவும் விரும்பிப் பார்ப்பேன். காரணம், தேவதைகள் போல் அழகழகானப் பெண்கள், கண்களை ஈர்க்கும் வண்ண உடைகள், ஜொலிக்கும் நகைகள், ஒரு முறை உபயோகித்தவுடனேயே மாய வேலைகள் செய்யும் சோப்புகள், பவுடர்கள் இவற்றால் மனம் ஈர்க்கப்படுவது அந்த வயதில் இயல்பான ஒன்று தானே? அந்த கால கட்டத்தைத் தாண்டி வந்த பிறகு தான் விளம்பரங்களில் பெண்கள் எவ்வளவு சுய நலமாக யதார்த்தத்துக்குச் சம்பந்தமேயில்லாத வகையில் கையாளப் படுகிறார்கள் என்ற வருத்தமான உண்மை தெரிய வருகிறது.

திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப் படும் பாடம் எப்படி நம் அறிவில் பதிகிறதோ, அதே போல் தான் தினந்தோரும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரக் காட்சிகள் பெண்களைப் பற்றிய ஒரு தவறான கருத்துருவத்தை நம் மனதில் வலுவாகப் பதிக்கிறது. ஆனால் இந்தக் கருத்துருவங்கள் சமுதாயத்தின் பெரும்பான்மையான பகுதியை பிரதிபலிப்பது கிடையாது. பெண்களின் யதார்த்த வடிவத்தில் ஒரு சிறிய சதவிகிதத்தைக் கூட பிரதிபலிப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஒரு பெண் என்றால் அவள் அழகாக, சிவப்பாக, உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற தவறான கருத்தையே அத்தனை விளம்பரங்களும் வலியுறுத்துகின்றன.


உதாரணமாக தொலைக்காட்சியில் வரும் ஒர் ஜீன்ஸ்(jeans) விளம்பரத்தை ஒரு இளம் பெண் பார்க்கிறாள். அவளுடைய வாய் அந்த விளம்பரப் பாடலை முனு முனுக்கிறது. அவள் மனம் அந்த ஜீன்ஸை அனிந்தால் தான் எப்படி இருப்போம் என்று கற்பனை செய்துப் பார்க்கிறது. அவளது தோழிகளிடம் அந்த ஜீன்ஸைப் பற்றிச் சொல்கிறாள். பிறகு தானே அதை வாங்குகிறாள். அந்த விளம்பரதாரர் எதை எதிர்பார்த்து அந்த விளம்பரத்தை செய்கிறாரோ, அது நடக்கிறது. இது வரை நடந்ததெல்லாம் இயல்பாக நடந்தவை. ஆனால் இந்தப் பெண் எதனால் உந்தப்பட்டாள் என்று சற்று யோசித்தோமென்றால், விளம்பரங்கள் எப்படி மெல்ல மெல்ல பெண்கள் தங்களைப் பற்றி அவர்கள் வைத்திருக்கும் கருத்தையே மாற்றி வடிவமைக்கின்றன என்பது புரிய வரும். அதே ஜீன்ஸை ஒரு குள்ளமான, சற்றுக் கருப்பாக இருக்கும் பெண் அனிந்து விளம்பரத்தில் தோன்றியிருந்தால் அந்த இளம் பெண் உந்தப் பட்டிருப்பாளா? இங்கே அந்த விளம்பரதாரர் தன்னுடைய ஜீன்ஸின் தரத்தை விட ஒரு பெண்ணின் அழகை நம்பியே அதை மார்க்கெட் செய்கிறார் இல்லையா? சென்னை சில்க்ஸ், ப்போதீஸ், ப்ரின்ஸ் ஜுவல்லர்ஸ் விளம்பரங்களில் வரும் பெண்களை கவனியுங்கள்... அந்தப் பெண்கள் கூட்டத்தில் சற்று கருத்த நிறம் கொண்டப் பெண்களோ, சற்று குள்ளமானப் பெண்களோ இருக்க மாட்டார்கள்.

இந்தியப் பெண்களிடம் color complex என்பதை உண்டாக்கியது விளம்பரங்களே. வெள்ளைத் தோலுக்கு அப்படி ஒரு மகிமையை உண்டாக்கியிருக்கிறார்கள்! என்னுடைய தோழி ஒருத்தி சொன்னாள் நம் இந்திய சினிமாவில் சரிதா, கஜோல் போன்ற கருப்பு நடிகைகள் இன்னும் நிறைய பேர் இருந்தால் இந்த color complex குறையும் என்று. நல்ல கருத்து தான். ஆனால் மீண்டும் சினிமா என்றொரு மீடியம் தான் பெண்களின் சிந்தனையை கையாள்கிறது என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.


ஒரு fairness cream விளம்பரம் (Ponds என்று நினைக்கிறேன்) - ஒரு கல்லூரி மாணவிக்கு ஒரு மாணவன் கைரேகைப் பார்த்து "நீ Accounts பரீட்சையில் கோட்டை விட்டுவிடுவாய்" என்கிறான். "No tension" என்கிறாள் அந்தப் பெண். அடுத்து அவன், "உன் சருமத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும்" என்கிறான். உடனே அவள் பயந்து போய் "ஐயோ! என் சருமத்திற்கு என்ன ஆகும்?" என்கிறாள். இங்கே ஒரு பெண்ணுக்கு படிப்பை விட அழகுதான் முக்கியம் என்கிற செய்தி வலியுறுத்தப் படுவதை உங்களால் உணர முடிகிறதா? ஹமாம் சோப்பு அல்லாத வேறு சோப்பை உபயோகித்துவிட்டால் தன் பெண்ணுக்குத் திருமணமே நடக்காதே என்று பயப்படும் தாய்.Fairness cream உபயோகித்து விமானப் பணிப் பெண்ணாகவெண்டும் என்ற தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பெண் - இப்படி எதற்கெடுத்தாலும் அழகு...அழகு...அழகுதானா? ஒரு பெண்ணிடமிருந்து எதிர்ப்பார்க்க வேறு எதுவுமே இல்லையா?

ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மீடியா ஏற்படுத்தியிருக்கும் ஒரு நிலையான உருப் படிவத்தினுள்ளே(standard model) ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பொருத்திக் கொள்ள முயற்சி செய்கிறாள். அதன் விளைவாக தனக்கு இல்லாத அழகை செயற்கை முறையில் வரவழைத்துக் கொள்ள முனைகிறாள். மார்பகங்கள், உதடு, மூக்கு, கண்கள் எல்லாவற்றையும் நவீன மருத்துவத்தின் மூலம் மாற்றி அமைத்துக் கொள்கிறாள். முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் தனது மார்பகங்களை மாற்றியமைத்துக் கொண்டவர் என்று ஒரு செய்தியில் படித்தேன். அதற்குப் பிறகு உலக அழகிகளின் மேல் எனக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது.
பெண்களை கவர்ச்சிப் பொருட்களாகக் காட்டி வேறு வகையாக இழிவுப் படுத்தும் விளம்பரங்களும் இருக்கின்றன.

Mint-O-Fresh விளம்பரம் - சிரிப்பே அரியாத ஒரு வயதான சிடுமூஞ்சிக்கு வாழ்க்கைப் பட்டு வாழ்க்கையை வெறுத்துப் போய் இருக்கிறாள் ஒரு அழகான இளம் பெண். Minto-O-Fresh ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு அந்தப் பக்கம் வரும் ஒரு இளைஞ்சனைப் பார்த்து அவனுடன் ஓடிப் போய்விடுகிறாள். கேவலம் ஒரு Minto-O-Fresh க்காக ஒருவனுடன் ஓடிப் போகும் அளவு பெண்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்களா?
ஷேவிங் க்ரீம் விளம்பரம் - ஒரு அழகான இளம் பெண் ஒரு அழகான இளைஞ்சனுடன் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவனுடைய தாடை சரியாக ஷேவ் செய்யப் படாமல் சொர சொரப்பாக இருப்பதை கவனித்தவுடன் அவள் முகம் வாடுகிறது. அந்த சமயத்தில் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டு மழ மழப்பான தாடையுடன் ஒரு இளைஞ்சன் அந்த அறையில் நுழைகிறான். அந்த இளம் பெண் உடனே சொர சொர இளைஞ்சனைப் புறக்கனித்துவிட்டு மழ மழ இளைஞ்சனுடன் நடனமாடப் போய்விடுகிறாள்! கெவலம் ஒரு ஷேவிங் க்ரீமுக்காக???


இப்படியே பெண்களைத் தேவதைகளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் காட்டுவதன் விளைவு பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் பாதிக்கிறது. ஒரு பெண் தினம் தினம் தொலைக் காட்சியில் தோன்றும் அழகான மாடல்களைப் பார்க்கும் போது அவளுக்குத் தனது தோற்றத்தின் மீதும் தனது கவர்ச்சியின் மீதும் அதிருப்தி ஏற்படுகிறது. ஆண்களும் இந்த விளமபரங்களின் சக்திக்கு அடிமையாகி ஐந்தரை அடி உயரமும் ஒல்லியான தேகமும் கொண்டப் பெண்களையே அவர்கள் மனம் நாடுகிறது. இந்த நாட்டம், எதிர்ப்பார்ப்புகள் எல்லாமே யதார்த்தமற்ற, பெரும்பாலும் நிறைவேறாத ஆசைகளாகவே போய்விடுகின்றன. வாழ்க்கையில் பாதிப் பிரச்சினை ஆசைகள் நிறைவேறாமல் போவதால் தானே ஏற்படுகின்றது?

சரி. இப்போது சற்று கீழே இறங்கி வந்து உஜாலா, ஹார்லிக்ஸ், சக்தி மசாலா போன்ற விளம்பரங்களை அலசுவோம். இதில் வரும் பெண்கள் சற்றுக் குடும்பப் பாங்கான பெண்கள். புடவை அல்லது சுரிதார் அணிந்திருப்பார்கள். ஆனால் இங்கேயும் யதார்த்தம் விலகியே இருக்கிறது. இந்த விளம்பரங்களில் வரும் பெண்கள் பாத் ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்தாலும் சரி, சமைத்துக் கொண்டிருந்தாலும் சரி, துணி துவைத்துக்கொண்டிருந்தாலும் சரி, முழுமையாக மேக் அப் அனிந்து, கசங்காத உடைகளில் பளிச்சென்றே காணப்படுகிறார்கள். மறுபடியும் விளம்பரங்கள் அழகையும் கவர்ச்சியையும் உயரமாக, ஒல்லியாக, அப்பழுக்கற்ற வெள்ளைத் தோலுடன் தான் தொடர்புப் படுத்துகிறது.

Misrepresentation of women in advertisements என்பதற்கு என்ன தீர்வு? அமெரிக்காவில் Jean Kilbourne என்று ஒரு பெண் media activist இருக்கிறார். விளம்பரங்களில் பெண்களின் நிலைப் பற்றிய தேர்ந்த ஆராய்ச்சியாளர். பெண்களுக்கென்று ஒரு தனித்தன்மை - ஒரு யதார்த்தமான பர்சனாலிடி இருக்கிறது. ஆனால் விளம்பரங்கள் இந்த பர்சனாலிடியை மாற்றி அமைத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும் தன்மை வாய்ந்தது. எனவே விளம்பரங்கள் பெண்களுக்கு ஆரோக்கியமானவை அல்ல என்று இவர் சொல்கிறார். பெரும்பாலும் உயர் நிலைப் பள்ளிப் பருவப் பெண்களே விளம்பரங்களினால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்த இவருடைய தலையாய வேலையே, ஒவ்வொரு உயர் நிலைப் பள்ளிக் கூடங்களுக்கும் சென்று தான் தயாரித்த வீடியோக்களையும், ஸ்லைடுகளையும் மாணவிகளுக்குக் காண்பித்து விளமபரங்களின் வீரியத்தை அவர்களுடைய வாழ்க்கை பாதிக்காத வகையில் சரியான முறையில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதே. தமிழ் நாட்டில் media activists என்று யாராவது இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைப் போலவே தமிழ் நாட்டிலும் இளம் பெண்களுக்கு விளம்பரங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த சில முயற்சிகள் செய்தால் பல பெண்கள் இதனால் பயன் பெருவார்கள் என்று நம்புகிறேன்.

பெண்களைக் குறி வைத்து வியாபாரம் செய்து பணத்தைக் குவிக்கும் விளம்பரதாரர்கள் அதற்காக பெண்களுக்கு என்ன நன்றிக் கடன் சேய்யப் போகிறார்கள்? குறைந்த பட்சம் அழகுக்கு தவறான அர்த்தம் கற்பிக்காமல் இருக்கலாம் இல்லையா?

Friday, February 11, 2005

4A சிதம்பரசாமி கோவில் தெரு



உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னால் மறக்க முடியாத முகவரி இது. 23 வயது வரை சிதம்பரத்தில் அம்மா அப்பாவின் நிழலிலேயே வாழ்ந்துவிட்ட எனக்கு, யதார்த்த வாழ்க்கை¨யின் அத்தனை முகங்களையும் காட்டிய முகவரி இது. அமெரிக்கா வருவதற்கு முன் சென்னையில் தங்கி ஒரு நிறுவனத்தில் சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். என் குணத்திற்கு சென்னை வாழ்க்கை சரிவராது என்றும், சென்னைக்கு போன வேகத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் என்றும் என் பெற்றோர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அதற்கு மாறாக சென்னை வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த சுறுசுறுப்பான மனிதர்கள், பல்லவன் பேருந்தில் ஓடிச் சென்று ஏறும் லாவகம், மவுண்ட் ரோடின் பிரம்மாண்டம் எல்லாமே என்னை வெகுவாக ஈர்த்தது. முதலில் ஹாஸ்டலில் தங்கியிருந்த நான், நல்ல தோழிகள் கிடைத்தவுடன், அவர்களுடன் மைலாப்பூரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். அந்த வீட்டின் முகவரி தான் 4A, சிதம்பரசாமி கொவில் தெரு, மைலாப்பூர், சென்னை.

அது ஒரு மிகக் குறுகிய சந்து. கார்கள் நுழைவது கடினம். அங்கிருக்கும் வீடுகள் எல்லாம் பழைய காலத்து வீடுகள். ஒரு மிகச் சிறிய முன் அறை, ஒருவர் மட்டுமே நிற்கும் அளவு ஒரு சமையல் அறை, ஒரு சிறிய குளியல் அறை. இதுதான் நாங்கள் தங்கியிருந்த வீடு. படுக்கை அறை என்று தனியே எதுவும் கிடையாது. அந்த முன் அறையில் தான் தூங்குவது, படிப்பது, சாப்பிடுவது எல்லாம். மாலை நேரங்களில் சிதம்பரசாமி கொவில் தெரு களை கட்டியிருக்கும். எல்லா குழந்தைகளும் தெருவில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதிர் வீட்டுச் குட்டிப் பையன் தமீமை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவனை எப்பவுமே நிர்வாணமாக தான் தெருவில் விளையாட விட்டிருப்பார்கள். கொழுக் மொழுக்கென்று அழகாக இருப்பான். பெண்கள் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் சைக்கிளையோ, மோட்டார் பைக்கையோ துடைத்துக் கொண்டு, அல்லது பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். ஆகமொத்தம் ஒட்டுமொத்த மக்களும் தெருவில் தான் இருப்பார்கள். எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தத் தெருவில் இருக்கும் "liveliness" நான் வேறு எங்கேயும் பார்த்ததில்லை. தெரு முனையில் ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை இருந்தது. அந்தக் கடையில் கிடைக்காத பொருட்களே இல்லை. கிட்டத் தட்ட ஒரு குட்டி Walmart என்று சொல்லலாம். அந்த பெட்டிக் கடைக்காரர், அந்தத் தெருவின் மற்றொரு முனையில் இருந்த டெலிபோன் பூத்காரர், பக்கத்துத் தெருவில் இருந்த எண்ணைக் கடைக்காரர், அரிசி கடைகாரர் என்று எல்லாருமே எங்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில், அதுவும் குளிர் காலங்களில் வெறிச்சோடியிருக்கும் தெருக்களையும், மூடிய கதவுகளையும் பார்க்கும் போது எனக்கு சிதம்பரசாமி கோவில் தெருவின் நினைவு வரும். அந்த நினைவுத் துளிகளில் சிலவற்றை இங்கே சிந்துகின்றேன்...போர் அடித்தால் மன்னிக்கவும்.
********************
வீட்டுச் சொந்தக்காரர் மாடியில் குடியிருந்தார். அவருடைய மனைவி சரஸ்வதி ஆண்ட்டி எங்களிடம் ரொம்பப் அன்பாக இருப்பார். அவ்வப்போது குழம்பு,
பொரியல், பலகாரங்கள் என்று ஏதாவது எங்களுக்குக் கொண்டுவந்து கொடுப்பார். அங்கிள் ஒரு 'ஜொல்லு பார்ட்டி'. ஆண்ட்டி எங்களைப் பார்க்க
வரும்போதெல்லாம் கூடவே அவரும் வந்து எங்களிடம் சம்பந்தமே இல்லாமல் எதையோ எதையோ பேசுவார். ஆண்ட்டி கடுப்பாகி "உன்னை யாரு இங்க வரச் சொன்னா? முதல்ல நீ கிளம்பு" என்று விரட்டி விடுவார். அவ்வப்போது இரவு நேரங்களில் அங்கிள் உரத்த குரலில் கத்துவதும், ஆண்ட்டி அழுவதும்
காதில் கேட்கும். ஒரு நாள் திடீரென்று ஆண்ட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகக் கேள்விப்பட்டு நாங்கள் ஓடிப் போய் பார்த்தோம். அங்கிள் எங்களிடம் "திடீர்ன்னு மயக்கமாகி விழுந்துட்டா. எதுவும் சாப்பிடாம இருந்தா போலருக்கு" என்று சொன்னார். ஏனோ அதை நம்பத் தோன்றவில்லை. பின்னர் ஒரு நாள் அங்கிளுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்றும், அதைத் தெரிந்துகொண்ட போது தான் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டதாகவும் சொல்லி ஆண்ட்டி அழுதார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்த முதல் துரோகம் இது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே சென்னையில் என் பயிற்சி முடிந்துவிட்டதால், நான் ஊருக்குச் சென்றுவிட்டேன். பிறகு சில மாதங்களில் அமெரிக்காவும் வந்துவிட்டேன். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளிக்கு தவறாமல் வாழ்த்து அட்டையும் கடிதமும் ஆண்ட்டியிடம் இருந்து வரும். சென்ற வருடம் எழுதியிருந்த கடிதத்தில் அங்கிள் அந்தப் பெண்ணுடனேயே சென்று தங்கியிருப்பதாகவும் தான் யாருமற்ற அனாதையாகிவிட்டதாகவும் எழுதியிருந்தார். அவரை தேற்ற திராணியற்று இன்னும் பதில் எழுதாமல் இருக்கிறேன்.
********************
ஒரு நாள் என் தோழியின் பெற்றோர்கள் எங்கள் சிதம்பரசாமி கொவில் தெரு வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்ற நான் அங்கே சர்க்கரை டப்பா காலியாக இருந்ததைப் பார்த்து திகைத்தேன். பிறகு ஒரு யோசனைத் தோன்றவே, நைஸாக மாடிக்குச் சென்று ஆண்ட்டியிடம் தயங்கி தயங்கி கொஞ்சம் சர்க்கரை கடனாகத் தர முடியுமா என்று கேட்டேன். அவர் உடனே கொஞ்சம் சர்க்கரையை பொட்டலம் கட்டிக் கொடுத்தார். வாங்க என் கை கூசியது, ஆனால் வேறு வழி இருக்கவில்லை. நான் வாங்கிய முதல் கடன் அது. புதிதாக நாங்கள் சர்க்கரை வாங்கியவுடன், முதல் வேலையாக கொஞ்சம் பொட்டலம் கட்டி ஆண்ட்டியிடம் கொடுத்தப் பிறகுதான் மனம் நிம்மதியாக இருந்தது. இனிமேல் வாழ்க்கையில் கடனே வாங்கக் கூடாது என்று அன்று நினைத்தேன். ஆனால் இந்தக் கொடுத்தலும் வாங்குதலும் பிறகும் தொடர்ந்தது..சர்க்கரை, காபிப் பொடி, பால், எண்ணை என்று தொடங்கியது... இன்றும் தொடர்கிறது...கார் கடன், வீட்டுக் கடன், க்ரெடிட் கார்ட் கடன் என்று.
********************
மாதா மாதம் அப்பா அனுப்பும் பணம் போதியதாக இருந்தாலும், சில சமயம் சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுவிட்டால், மாதக் கடைசியில் கையில் பணம் இருக்காது. ஒரு முறை என்னுடன் தங்கியிருந்த தோழிக்கு திடீரென்று தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டு அவளை அருகில் உள்ள இஸபெல் மருத்துவமனையில் சேர்த்தோம். உடனே ஸ்கேன், எக்ஸ் ரே என்று எங்கள் கையிலிருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. அந்த நேரம் பார்த்து என்னுடைய பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்ததால் அவர்களிடம் பணம் கேட்க முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு பணம் இல்லாமல் கையைக் கட்டி, வாயைக் கட்டி நாட்களைத் தள்ளியது நான் அனுபவித்த முதல் ஏழ்மை.
********************
அந்தக் குறுகியத் தெருவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். தெரு முனையில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. மார்கழி மாதத்தில் அந்தக் கோவிலில் ஒலிபெருக்கியை வைத்து சத்தமாகப் பாட்டு போட்டு விடுவார்கள். வீட்டுக் கதவையும் ஜன்னலையும் எப்படி மூடினாலும், அந்தச் சத்தம் பிடிவாதமாக உள்ளே நுழைந்து எங்கள் நிம்மதியைக் கெடுக்கும். அவ்வப்போது அந்தக் கோவிலில் ஏதோ பூஜைகள் நடக்கும். அப்போது கொழியை அறுத்து சாமிக்கு பலி கொடுப்பார்கள். அந்தக் கோழி இரத்தம் அப்படியே தெருவில் சிதறிக் கிடக்கும். அதை யாரும் சுத்தம் செய்ய மாட்டார்கள். மூக்கை மூடிக் கொண்டு, குமட்டும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பல முறை அந்த இடத்தைத் தாண்டிப் போயிருக்கிறேன். இப்போது பண்பட்ட என் மனம் நினைக்கிறது 'ஒரு வாலி தண்ணீர் ஊற்றி அந்த இரத்தம் சிதறிய இடத்தை நானே சுத்தம் செய்திருக்கலாமே' என்று. அந்தத் தெருவில் இரவு 10 மணிக்கு மேல் சாமி ஊர்வலம் வரும். மேல தாளத்துடன் வரும் சாமியை பார்க்க தெருவே வெளியில் பயபகிதியுடன் குழுமியிருக்கும். ஒரு மாறு பட்ட ஊர்வலத்தையும் நான் பார்த்திருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஒரு தேர்தல் நாளில் ஒரு திறந்த ஜீப்பில் தொண்டர்கள் சூழ கூப்பிய கரங்களுடனும் முகத்தில் ஒட்டப் பட்ட புன்னகையுடனும் ஓட்டுக் கேட்டு ஊர்வலம் வந்தார்.
********************
நான் சமைக்கக் கற்றுக் கொண்டதும் இந்த வீட்டில் தான். ஒரு முறை ரசம் வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது உள்ளே வந்த மாடி வீட்டு ஆண்ட்டி, "வாசனை மூக்கைத் துளைக்கிறதே, என்ன சமைக்கிற?" என்று கேட்டார். "ரசம் வைக்கிறேன் ஆண்ட்டி" என்று பெருமையாகச் சொன்னேன். "இப்படி ஒரு வாசனையான ரசத்தை நான் சாப்பிட்டதே இல்லையே!" என்று சொல்லி சிறிது ரசத்தை கரண்டியில் எடுத்து சுவைத்தவர், அடுத்த கணம் முகம் மாறினார். பிறகு தான் தெரிய வந்தது நான் ரசப் பொடிக்கு பதில் கரம் மசாலா பொடியை உபயோகித்திருக்கிறேன் என்று. அந்த வாசனைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று தோழிகள் கிண்டலடித்தார்கள். இந்த சொதப்பல் வேறு வகையிலும் தொடர்ந்தது - துவரம் பருப்புக்கு பதில் கடலைப் பருப்பு, சீரகத்திற்கு பதில் சோம்பு என்று!
********************

இப்படி பல அனுபவங்களைக் கொடுத்த அந்த வீட்டிற்கு என் மனதில் என்றுமே தனி இடம் உண்டு. என்னுடன் தங்கியிருந்த தோழிகளும் அப்படியே. ஒருத்தி இப்போது நியூ ஜெர்சியில் இருக்கிறாள். இன்னொருத்தி அட்லாண்டாவில். இன்னொருத்தி சென்னையில். இன்றும் நாங்கள் தொலைபேசியில் பேசும்போது, சிதம்பரசாமி கோவில் தெரு வீட்டைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டோம். எங்களுடைய கணவன்மார்கள், நாங்கள் "4A..." என்று பேச ஆரம்பித்தாலே "ஐய்யோ...ஆரம்பிச்சிட்டாங்கடா" என்று ஓடிவிடுவார்கள். 'Learning the hard way' என்று சொல்வார்களே, அப்படித்தான் நான் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொண்டேன் 4A சிதம்பரசாமி கோவில் தெருவில்.

Wednesday, February 09, 2005

கொஞ்சம் புலம்பிக் கொள்கிறேன்...

என்னுடைய அமெரிக்க மேலாளரால் ஒரு போதும் இந்த வலைப் பதிவைப் படிக்க முடியாது என்ற தைரியத்தில் இதை எழுதுகிறேன். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை எங்கள் மேலாளருடன்(பெயர் குறிப்பிட விரும்பவில்லை, 55 வயதிருக்கும்) ஒரு மணி நேரக் கூட்டம் நடக்கும். யார் யார் என்னென்ன வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன போன்ற தகவல்களை மேலாளருடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கூட்டதின் நோக்கம். உரையாடல்கள் இயல்பாகவே இருக்கும். மேலாளார் தன்னுடைய சொந்தக் கதைகளை நிறைய பேசுவார். ஆரம்பத்தில் 5, 6 நிமிடங்கள் மட்டுமே சொந்தக் கதையை பேசியவர், போகப் போக நிறைய நேரம் அதற்கு எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். இப்போது கிட்டத் தட்ட கூட்டத்தின் முதல் பாதி முழுவதும் தன்னுடைய ஜப்பானிய மனைவி, டீன் ஏஜ் பிள்ளைகள், தன் சொந்த ஊரான போர்ட் லாண்டில் தன்னுடைய மீன் பிடிப்பு அனுபவம், தன்னுடைய லாப்ஸ்டர் வியாபாரம்...இதைப் பற்றியெல்லாம் பேசி போட்டுத் தள்ளுகிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர்களின் முகங்களை நான் கவனிப்பதுண்டு. சிலர் நொந்து நூடுல்ஸ் ஆகி உட்கார்ந்திருப்பார்கள்.. சிலர் போலியான ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு "Oh! How interesting!" என்று அவருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பார்கள். கூட்டம் முடிந்தவுடன் விட்டால் போதும் என்று எல்லாரும் அடித்துப் பறந்து கொண்டு ஓடி விடுவோம். வாரம் ஒரு முறை தான் இந்த டார்ச்சர் என்றும் சொல்ல முடியாது. ஒரு முறை மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்த போது, மேலாளர் அவசரமாக எல்லாரையும் தன் அறைக்கு அழைக்கிறார் என்று செய்தி வந்தது. என்னவோ ஏதொ என்று போனால், அவருடைய பள்ளிப் பருவ தோழர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம். அந்த சோகமான செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அழைத்தாராம்! மற்றொரு முறை திடீரென்று எங்களை அழைத்து, அவருடைய மனைவியின் தோழிக்கு மார்பகத்தில் புற்று நோய் என்றும் மருத்துவர்கள் ஒரு மார்பகத்தை அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டதாகவும், அனால் அந்தப் பெண்மணியோ "நான் இந்த உலகத்துக்கு இரண்டு மார்பகங்களுடன் வந்தேன். இந்த உலகத்தை விட்டுப் போகும் போதும் இரண்டு மார்பகங்களுடன் தான் போக விரும்புகிறேன்" என்று சொல்லி அறுவை சிகிச்சைக்கு மறுத்து விட்டதாகவும் சொன்னார். மற்றொரு முறையும் இதே போல் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டியவர், மருத்துவரான அவருடைய அண்ணன், வயாகரா போலவே, அதைவிடவும் 5 மடங்கு சக்தியுள்ள ஒரு மருந்தை கண்டுபடித்து அதை சோதனையும் செய்து பார்த்த அனுபவத்தைப் பற்றிப் பேசினார். நர நரவென்று பற்களைக் கடித்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன். இதையெல்லாம் அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அமெரிக்கர்கள் எந்த விசயத்தையும் வெளிப்படையாக எந்தவித சங்கோஜமும் இல்லாமல் பேசும் குணம் உடையவர்கள். ஆனால் அதற்கென்று ஒரு நேரங்காலம் வேண்டாமா? இப்படி வேலை நேரத்தில் கூப்பிட்டு கூப்பிட்டு மற்றவர்களைத் தொந்தரவு செய்வது மிகவும் தவறு என்பது என் கருத்து. அவரிடம் நேரில் யாரும் தங்களுடைய ஆட்சேபணையைத் தெரிவிக்கவில்லையே தவிர, பலர் மறைமுகமாகப் புலம்புவதை நான் கேட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை. சில சமையம் workplace harrassment என்று சொல்லி அவர் மேல் புகார் செய்யலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் ஏன் வீண் வம்பு? இந்த மாதத்தில் இருந்து மேலாளருக்கு அவருடைய மேலிடத்திலிருந்து அதிகப்படியான பொறுப்புகளைக் கொடுத்து விட்டதால், அந்த வாராந்திரக் கூட்டம் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் என்று அறிவிப்பு வந்தது. அந்த மேலிடத்து புண்ணியவானின் கால்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன் தொட்டு வணங்குவதற்காக. டார்ச்சர் இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சி!.

Thursday, February 03, 2005

சந்தித்ததில் சிந்திக்க வைத்தவர்கள் - II


Image Hosted by ImageShack.us
கடந்த ஆண்டு பால்டிமோரில் நடந்த FeTNA விழாவில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின்(சாகித்தய அகாடமி விருது பெற்றவர்) எழுத்துப் பட்டறை நடந்தது. எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட நான், இந்தப் பட்டறைக்குச் செல்ல வேண்டுமென்று மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் விழா ஒருங்கிணைப்பு வேலைகளினால் என் ஆசை நிறைவேறவில்லை. விழா முடிந்த பின் அடுத்த சில நாட்களில், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வாசிங்டன் டிசி பகுதி தமிழ்க் குடும்பங்கள் தங்கள் வீட்டில் தங்க வைத்து கவனித்துக் கொண்டார்கள். சந்தடி சாக்கில் பிரபஞ்சன் அவர்களை எங்கள் வீட்டுக்கு இரவு விருந்துக்குத் தள்ளிக் கொண்டு வந்தார் என் கணவர். எனக்குத் தலை கால் புரியவில்லை. எங்கள் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்த பிரபஞ்சன், "அப்பாடா, இதுதான் நம்ம ஊர் வீடு மாதிரி சின்னதா அழகா இருக்கு. அமெரிக்காவில் இருக்கிற பெரிய வீடுகளைப் பார்த்தாலே பயமா இருக்கு. ஒரு அறையில் இருந்து இன்னோரு அறைக்கு போவதற்குள்ளயே நடுவில் தொலைந்து போய்விடுகிறோம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார். "உங்களுடைய எழுத்துப் பட்டறையை தவற விட்டது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது" என்று நான்
சொன்னவுடன், "அது என்ன பிரமாதம்? இப்பவே இங்கேயே உங்களுக்கு ஒரு எழுத்துப் பட்டறை வைத்துவிடலாமா?" என்றார். ஆஹா! என் வீட்டு வரவேற்ப்பறையில் எனக்கே எனக்கென்று பிரபஞ்சனின் எழுத்துப் பட்டறை! இது நான் செய்த பாக்கியம் அல்லவா?

உச்சி குளிர்ந்த நான், ஆர்வத்துடன் பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். "என்னால் கட்டுரைகள் சரளமாக எழுத முடிகிறது. ஒரு நிகழ்வை விவரித்து எழுத முடிகிறது, ஆனால் சிறு கதை எழுதுவது மட்டும் சிக்கலாக இருக்கிறது. அதற்கு வேறு வகையில் சிந்திக்க வேண்டுமா? கதையின் ப்ளாட்டை எப்படி தேர்வு செய்வது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "சிறு கதை எழுவது
ரொம்ப சுலபம். அதற்கு மூன்று விதிகளை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 1) கதையின் முக்கிய கதாபாத்திரத்திற்கு(protagonist) ஒரு சூழ்நிலை அல்லது ஒரு சிக்கலை உருவாக்க வேண்டும். இதுதான் கதையின் ப்ளாட். 2) அதனால் ஏற்படும் பிரச்சினைகளை விவரிக்க வேண்டும். 3) அந்த கதாபாத்திரம் எப்படி அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கான்கிறது என்று முடிக்க வேண்டும். எல்லா கதைகளுக்கு இந்த infrastructure பொருந்தும்" என்றார். "எந்த மாதிரியான ப்ளாட்டை உருவாக்குவது என்று தான் குழப்பமாக இருக்கிறது" என்றேன். அதற்கு அவர், "எதை வேண்டுமானாலும்
ப்ளாட்டாக வைத்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது?" என்று கேட்டார். "இப்போது எங்க வீட்டுக்கு நீங்க வந்திருக்கிங்க. உங்களுக்கு விருந்தளித்து,
நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது." என்றேன். "சரி. இதையே ப்ளாட்டாக வைத்துக் கொள்ளலாமே! நீங்க தான் Protagonist. உங்களுடைய சூழ் நிலை - உங்கள் வீட்டுக்கு ஒருவர் விருந்துக்கு வருகிறார். பிரச்சினை - அவருக்கு நீங்க விருந்து சமைக்க வேண்டும். முடிவு - உங்களுடைய விருந்தோம்பல் எப்படி அமைந்தது என்பது. இந்த ப்ளாட்டை வைத்து ஒரு கதை எழுதி எனக்கு அனுப்புங்கள்" என்றார். ஓ! கதை எழுதுவது இவ்வளவு சுலபமோ என்று தோன்றியது.

மேலும் அவர், "சிறு கதை என்பதால் கதா பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் கதைக்கு முக்கியமானவர்களாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பொருளை விவரித்தாலும் அதற்கு கதையோடு ஒட்டிய முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஒரு அறையின் சுவரில் ஒரு துப்பாக்கி மாட்டியிருந்தது என்று கதையில் சொல்லியிருந்தால், அந்தக் கதை முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடிக்க வேண்டும் என்று ஒரு பிரபல ரஷ்ய எழுத்தாளர் கூறியிருப்பதாகச் சொன்னார். கேட்கக் கேட்க எனக்கு ஆர்வம் பெருகியது. நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த இரண்டு சிறு கதைகளை அவரிடம் காட்டினேன். படித்து விட்டு ஒன்றை நன்றாக இருக்கிறதென்று பாராட்டினார். மற்றொன்றை சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், அதை தான் எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். "எழுதுவது ஒரு சுகமான அனுபவம். தொடர்ந்து எழுதுங்கள்." என்று சொல்லி விடை பெற்றார்.

போகுமும் அவர் எழுதிய 'பெண்மை வெல்க' புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசாக அளித்தார். அவர் சென்ற பல நாட்களுக்குப் பிறகும் அந்தப் பிரமிப்பிலேயே இருந்த நான், ஒரு வார இறுதியில் 'பெண்மை வெல்க' படிக்கத் தொடங்கினேன். இதிகாசங்கள் பெண்களை பத்தினித் தெய்வங்களாகப் பதிவு செய்திருந்தாலும், அவர்களுக்கென்று ஒரு மனமும், அதற்கு ஒரு மறு பக்கமும் இருக்கிறது என்று என் கண்ணத்தில் அறைந்து புரிய வைத்த புத்தகம் அது. அதை படித்த சூட்டுடன் சில சிறு கதைகள் எழுத முயற்சி செய்தேன். பிரபஞ்சன் எனக்குச் சொல்லிக் கொடுத்த அந்த விதி முறைகளைப் பயன் படுத்திப் பார்த்தேன். ஏனோ என்னால் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்க முடியவில்லை. நான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் என்னுடைய குணாதிசயங்களைக் கொண்டு என் உணர்வுகளைப் பிரதிபலிப்பவைகளாகவே இருந்தனவே தவிர, முற்றிலும் என்னில் இருந்து வேறு பட்ட ஒரு மூன்றாவது நபரை கற்பனை செய்து அந்த நபராக இருந்து யோசித்து ஒரு கதையை எழுத முடியவில்லை. அப்பறம் தான் புரிந்தது எனக்கும் fiction என்பதற்கும் ரொம்ப தூரம் என்று. நான் உணர்ந்து அனுபவித்த விடயங்களைப் பற்றி மட்டுமே இப்போதைக்கு எழுத முடிவு செய்துள்ளேன். ஆனால் என்றாவது ஒரு நல்ல கதையை எழுதி பிரபஞ்சனின் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.